சிறுகதை

சோறு – விஜய்குமார் சிறுகதை

ராமு வீட்டிற்குள் வரும்போது தாமோதரன் எட்டாவது தோசையை முடித்துக்கொண்டிருந்தார். அவரை ஓரப் பார்வையில் முறைத்துக்கொண்டே சமயலறைக்கு சென்று “எத்தனை?” என்று கமலாம்மாவை கேட்டான். “எண்ணுலயே கண்ணு”. “சுகரு இவ்வளவு வெச்சுக்கிட்டு..” என்று ராமு சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஹாலில் இருந்து ஒரு ஒழுக்க பவ்யத்தோடு எல்லோருக்கும் கேட்கும்படியாக “கமலா அந்த மாத்திரை டப்பாவை எடுத்துவா” என்று தாமோதரன் கத்தினார். கமலாம்மா களுக் என்று சிரிக்க ராமு கோபத்தை உதட்டில் அடக்கிக்கொண்டு “என்ன பாத்தாதான் இவருக்கு மாத்திரை நினைப்பு வரும்… சோறு மட்டும்…” என்று ஏதோ சொல்லவர கமலாம்மா “டேய்…” என்று ராமுவை அதட்டி அடக்கினாள்.

ஃபிரிட்ஜ் மேலுள்ள டப்பாவை எடுத்து வந்து இரவுக்கான மாத்திரைகளை மட்டும் தனியாக பிரித்து டீப்பாயில் வைத்தான். சாப்பிட்ட தட்டிலேயே கைகழுவிவிட்டு மாத்திரைகள் சரியாக இருக்கிறதா என்று கூட பார்க்காமல் அதை லாவகமாக விழுங்கிவிட்டு டப்பாவையும் தட்டையும் அப்படியே விட்டுவிட்டு தன் படுக்கை அறைக்கு செல்ல எழுந்தார். அவரது அலட்சியம் ராமுவுக்கு மேலும் எரிச்சலூட்டியது. டப்பாவில் உள்ள தீர்ந்துபோன அட்டைகளை பார்த்துவிட்டு, “மாத்திரை தீர்ந்தால் யாரும் சொல்ல மாடீங்களா?” என்று கத்தினான். “வாங்கிக்கலாம் வாங்கிக்கலாம்..” என்று தாமோதரனின் குரல் படுக்கை அறை இருளில் தேய்ந்து மறைந்தது. ஓரிரு வினாடிகள் அவர் சென்ற திசையையே பார்த்துவிட்டு ராமு பல்லை கடித்துக்கொண்டு தன் அம்மாவிடம் சென்றான். இவன் வரும் வேகத்திலேயே கமலாம்மா, “ உங்க ரெண்டு பேரு பிரச்சினையில் என்னை இழுக்காதீங்க..அவர்தான் இன்னைக்கு மாத்திரை ஒழுங்கா சாப்பிட்டுட்டாரே. அவரைத்தான் கொஞ்சம் சும்மா விடேண்டா..”

“உங்க ரெண்டுபேருக்கும் நான் சொன்னா ஏறவேயேறாதா? மாத்திர மருந்துகூட ஒழுங்கா எடுக்க தெரியாதா? உங்களுக்காகத்தான நான் வெளியூர் போய் வேலை தேடாம இங்கயே கெடச்ச வேலைய பாத்துகிட்டு இருக்கேன்.”

கமலாம்மா எதுவும் பேசமுடியாமல் நின்றாள்.

“சுகரு இவ்வளவு வெச்சுகிட்டு.. டாக்டர் அளவா சாப்பிடச் சொல்லுறாரு. ஆனா நாம ஃபுல் கட்டு கட்டிக்கிட்டு இருக்கோம்.”

“காலையில இருந்து பில்டிங்குல கெடையா நிக்குற மனுசண்டா. கொஞ்சமா சோறு போட்டா வகுத்துக்கு பத்துலங்கிறாரு. மனசு கேக்கமாட்டீங்குது”

ராமு ஆத்திரமும் கோபமுமாக தலையில் கை வைத்துக்கொண்டு அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்தவாறே, “முருகா… எப்பப்பாரு சோறு சோறு… சுகரப்பத்தி கவலையே இல்ல. இந்த சோறே அவர சாகடிக்கப்போகுது பாருங்க..”

கமலாம்மா கண்ணைக்கசக்க அதைப்பார்த்த ராமுவும் உதடுகளை பிதுக்கியவாறே தன் அறைக்கு விரைந்தான்.

2

அடுத்து வந்த சில நாட்களுக்கு ஒப்பீட்டளவில் குக்கர் வாசம் கம்மியாகவே அடித்தது. ராமுவும் அவன் பங்கிற்கு பச்சை காய்கறிகளை வாங்கி ஃபிரிட்ஜில் அடுக்கி இருந்தான். அம்மாவும் சப்பாத்தியாக உருட்டி தள்ளிக் கொண்டிருந்தாள். வீட்டில் சாப்பாட்டு ஒழுங்கு பீடித்து நிகழ்ந்து கொண்டிருந்தாலும் ராமுவுக்கு அப்பாவின் மேல் சந்தேகம். அப்பாவின் பைக் அந்த முக்கு மெஸ்ஸில் அடிக்கடி நின்று வந்தது. பொதுவாக சப்பாத்தியை பார்த்தால் முகம் சுளிக்கும் தாமோதரன், எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் அதை விழுங்கும் போதே தெரிந்தது, அவர் கும்பிக்கான சோற்றுப்பதம் வேறு எங்கோ பூர்த்தி செய்து கொண்டிருக்கிறார் என்று.

பொங்கல் பிரியரான சுப்பிரமணி மாமாவுடன் அப்பாவை சேர்த்துவைத்து முக்கு மெஸ் பக்கமாக பார்க்கும்போதே ராமுக்கு தெரிந்தது அவன் சந்தேகப்படுவது உண்மைதான் என்று. ஒளிந்து சாப்பிடும் பழக்கம் இந்த குடியானவனுக்கு எங்கிருந்துதான் வந்ததோ. இது ஒன்றும் வேலைக்காகாது என்று ராமு கோவமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அவரை அங்கேயே கையும் களவுமாக பிடித்திருக்க வேண்டும். என்ன செய்வது; அப்பவாயிற்றே.

தன் ஆத்திர அலைகளை உருவேற்றி அப்பாவிற்க்காக காத்துக் கொண்டிருந்தான். சர்க்கரை அளவை காண்பிக்கும் கருவியை பக்கத்தில் வைத்துக்கொண்டான். “அவர் வந்ததும் நடு வீட்டிலேயே வைத்து சர்க்கரை அளவை சோதிக்க வேண்டும். எப்படியும் 350 தாண்டி இருக்கும். அங்கிருந்து பிரச்சனையும் சண்டையையும் மேல் எடுத்துச் செல்ல வேண்டும். இரண்டில் ஒன்று பார்த்துவிடவேண்டும். வாயைக் கட்டுப்படுத்தி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு உயிர் வாழ விரும்புகிறாரா அல்லது எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று தான் வீட்டை விட்டு வெளியேறுவதா? இப்படித்தான் இந்த சண்டையை கொண்டு போகவேண்டும். இது என்ன விளையாட்டா? சும்மா விடக்கூடாது.. ஆரோக்கிய விரயமும் ஊதாரித்தனம் தான்.”

தாமோதரன் வீடு வர நேரம் ஆகிக்கொண்டே போனது. ராமு தான் நடத்தவிருக்கும் குடும்ப அதகளத்தை தன் மனதில் நிகழ்த்தி பார்த்துக்கொண்டிருந்தான். அது தன் எண்ண திரையில் சினங்கொண்டு எழுவதாகவும்; முஷ்டியோங்கி அடிப்பதாகவும்; கண்ணீர்விட்டுக் கெஞ்சுவதாகவும்; உதாசீனஞ்செய்து வெளியேறுவதாகவும் ஓடிக்கொண்டிருந்தது. அப்பா என்று பாராமலும் சில கெட்ட வார்த்தைகள் வந்து விழுந்தது. “சோற்றுப் பண்டாரம்; எப்போதுமே சோத்துல தான் கண்ணு. கைய காலை முறிச்சு வீட்டுல போட்டாத்தான் கம்முனு கிடக்கும். என் வயசு பசங்க எல்லாம் அவனவன் வாழ்க்கையை பாத்துட்டு போறான், நான் இதுங்களுக்கு பின்னாடி திரிய வேண்டியதா இருக்கு. முருகா!… விட்டுட்டு போகவும் முடியல, சொன்னா கேட்கவும் மாட்டேங்குதுங்க.” ராமு தன் அகச் சண்டையில் களைத்துப் போயிருந்த சமயம் தாமோதரன் தன் முன் தள்ளிய வயிற்றின் மேல் வேட்டியை இறுக்கிக் கட்டியவாறு உள்ளே வந்தார். ராமுவைப் போலவே முக ஜாடை கை கால் வாக்கு. ஆனால் அவனைவிட குள்ளம், ஐந்து அடிக்கும் குறைவாகவே இருப்பார். சிறுங்கூட்டு உடம்பு. ராமுவோ கிட்டத்தட்ட ஆறு அடி உயரம். “எப்பப்பா வந்த?” என்று கேட்டவாறே தன் தோளில் சுமந்து வந்த பையை சுவரோரமாக வைத்துவிட்டு ஃபேன் ஸ்விட்சை போட்டுவிட்டு ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை இழுத்து அதனடியில் அப்பாடா என்று அமர்ந்தார். ராமு அவரது வலது கைவிரல்களை பார்த்தான் அது என்னை பிசுக்காக இருந்தது. “எங்க வெளியில சாப்பிட்டு வாராரோ?” ஏனோ அந்த களைத்த முகத்துடன் சண்டையிடும் திராணி சட்டென்று இவனுக்கு இல்லாமல் போனது. அம்மா உள்ளே இருந்து “சாப்பிடுறியாடா? எடுத்து வைக்கவா?” என்று கேட்டாள். “சாயந்திரம் தான் அந்த முக்கு மெஸ்ஸில சாப்பிட்டேன் மா” என்று சொல்லிவிட்டு எழுந்தான். தாமோதரன் திடுக்கிட்டு விழித்து அவனைப் பார்த்தார். ராமு அவரைப் பார்த்துக்கொண்டே தன் அறைக்குச் சென்றான்.

3

“பயப்பட ஒன்னும் இல்ல, மைல்டு அட்டாக் தான். அப்ஸர்வேஷன்ல இருக்காரு. சுகர் லெவல் வேற 400 இருக்கு. அத ஒரு ரெண்டு நாள்ல கண்ட்ரோலுக்கு கொண்டுவந்திட்டு அப்பறம் முடிவு எடுப்போம்” என்று டாகடர் சொன்னபோது அம்மா ராமுவைப் பார்த்தாள். அவன் கண்கள் ஈரப்பதம் ஏறியிருந்தது. அவன் உதடுகள் அழுகையால் பிதிங்கியுள்ளதா அல்லது கோவத்தால் வெறுவியுள்ளதா என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. டாக்டரின் தைரிய வார்த்தைகள் கமலாம்மாவிற்கு நம்பிக்கை தந்தபோதிலும் ராமுவின் இறுகிய அமைதி அவளை கலங்கடித்தது. இருவரும் ஐ சி யூ வார்டின் ஓரத்தில் வந்து அமர்ந்த போது ராமு களைத்திருந்தான். கமலாம்மா அழுது முடித்த அசுவாச உணர்விலிருந்தாலும் ராமு ஏதாவது சொல்வானா, அதற்க்கு நம் பதில் என்ன

என்ற யோசனை அவளை பீடித்திருந்தது. சிறிது நேரம் மெளனமாக நகர, ராமு ஒரு பெருமூச்சுடன் தலையில் கை வைத்தான். அவனது அங்க நகர்வுகளை கவனித்துக்கொண்டிருந்த கமலாம்மா அதையே அவனது சொற்களாக பாவித்து “அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது கண்ணு. அதான் சரியான நேரத்துக்கு ஹாஸ்பிடல் வந்திட்டமுல்ல. டாக்டர் தான் பயப்பட ஒன்னும் இல்லனு சொல்றாருல்ல.” என்று மறுமொழி உரைத்தாள்.

ராமு நிமிர்ந்து பார்த்தான். அவன் முகம் வீங்கியிருந்தது. பதிலேதும் கூறவிரும்பாமல், “நான் கொடுத்த பேக் எங்க? அதுக்குள்ள தான் இன்சூரன்ஸ் கார்டு, பணம் எல்லாம் இருக்கு”.

“இதோ இந்த கட்ட பைக்குள்ள தான் பத்திரமா வச்சிருக்கேன்”

ராமு அதை வாங்கி மடியில் வைத்துக்கொண்டு மறுதிசை நோக்கி முகம் திருப்பிக்கொண்டான்.

“ஏன்டா கண்ணு”

“ஏன்னா! என்னன்னு சொல்றது? நான் சொன்ன ரெண்டு பேர்ல யாரு கேக்குறீங்க?”

ராமு வெறுப்பாய் பேசியதே அவளிற்கு ஒரு திருப்த்தி தந்தது “நான் என்னடா பண்றது? உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல”.

“நான் சொன்ன மாதிரிதானே இப்போ நடந்தது. சோறு கமியா சாப்பிடுங்க, சீனி கமியா போட்டுக்கோங்க, வாக்கிங் போங்க. மாத்திரை மருந்து மறக்காதீங்க. படிச்சு படிச்சு சொன்னேன். யாருக்கும் அக்கறை இல்லை. சின்ன வயசுல கஷ்ட்டப்பட்டீங்க ரைட்டு, இன்னுமா படனும்? ஒடம்பைக்கூட கவனிக்காம? என் வயசுல நம்ம சொந்தபந்தத்தில இப்படி யாராச்சும் சீரழியிறாங்களா சொல்லுங்க?”என்று ராமு குரல் தாழ்த்தி தொண்டை நரம்புகள் புடைக்க கத்திக் கொண்டிருக்கும் போதே கமலாம்மா கண்ணீருடன் குறுக்கிட்டாள். “வேண்டாம்டா”.

“இப்படி கொஞ்சம் கொஞ்சமா போகுறதுக்கு, ஒரேயடியா போய்ட்டா இழுத்து எறிஞ்சுட்டு கம்முன்னு இருந்துக்கலாம்”

“டேய்!!……” என்று குரலை உயர்த்திய வேகத்திலேயே கண்ணீர் கசிந்தாள். “தப்பு தப்புன்னு சொல்லுடா”

அம்மாவின் அதிர்ந்த தெறிப்பு தம் முகத்தில் அறைய, ராமுவும் உடைந்து தேம்பினான். மனதிற்குள் “தப்பு தப்பு” என்று சொல்லிக்கொண்டான்.

4

பணம் கட்டிவிட்டு அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தபோது பசி வயிறு கிள்ளியது. அம்மாவின் வெறும் வயிற்று ஜீரணம் உறக்கவே பறையடித்தது. மீண்டும் எழுந்து சென்று காபி வாங்கி வந்து கொடுத்தான். அதை அம்மா மடக் மடக் என்று அருந்துவதைப் பார்த்து வயிற்றுக்காகவே வாழும் ஜீவன்கள் என்று மனதிற்குள் ஒரு ஒற்றை சிரிப்பு சிரித்துக்கொண்டான். அம்மா ஆசுவாசம் அடைந்தாள். சிறிது நேரம் சும்மா இருந்தனர்.

கமலாம்மா, “அந்த நர்ஸுகிட்ட உள்ள எப்போ போய் பாக்கலாம்னு கேட்டேன். கொஞ்ச நேரத்துல சொல்றேன்னு சொல்லிச்சு.”

“ஹ்ம்ம்”

“டெஸ்டு எல்லாம் எடுத்து எவ்ளோ நேரம் ஆகுது. வெறும் வயிறா இருப்பார். ஏதாச்சும் கொடுத்தாங்களோ இல்லையோ” என்றாள்

“ஐ சி யூல இருந்தாலும் சோறு மறக்காது” முக சலனமில்லாமல் ராமு சொன்னான்.

இம்முறை கமலாம்மாவிற்கு எரிச்சல் வந்தது. “இவன் ஒருத்தன்.. உனக்கு வேணுன்னா அது சாப்பாடா இருக்கலாம். எங்களுக்கெல்லாம் அது தாண்ட உசுரு. உனக்கெல்லாம் என்ன தெரியும். எத தொட்டாலும் சாப்பாட்ட வெச்சே திட்டுனா?” விழுந்தாள்.

ராமுவை மறுமொழியில்லாமல் ஆக்கியது. அதை உணர்ந்த அம்மா, தணிந்த குரலில் மீண்டும் ஆரம்பித்தாள். “முன்னமெல்லாம் இப்படி இல்லடா கண்ணு. அப்பெல்லாம் பஞ்சம். மூணு நாலு வருஷம் மலையில்லாம போய்டும். கெடச்சத சாப்பிட்டிக்கணும். எனக்கே நல்ல நியாபகம் இருக்கு. நான் சின்ன புள்ள. உங்க அப்பச்சி வெள்ளி காசையெல்லாம் வித்து இருக்காரு. விவசாயம் இல்லாதப்ப நானெல்லாம் நூல் கோக்க போயிருக்கேன். நாலு அனா தருவாங்க. உங்க அப்பா சின்ன வயசா இருக்கும்போது இன்னும் அதிக பஞ்சமாம். நானெல்லாம் அப்போ பொறக்கவே இல்ல. சொல்லுவாங்க. நானே கஷ்ட்டப் பட்டிருக்கேன். உங்க அப்பவெல்லாம் இன்னும் எவ்ளோ கஷ்ட்டப் பட்டரோ? உங்க அப்பாரு சின்ன வயசிலேயே செத்துபோய்ட்டாரு. உங்க ஆத்தாவும் அப்பாவும் தான் அப்போ. பாவம்டா!”

ராமு உம் கொட்டிக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தான்.

அவனது உடற் திசை தன்னை நோக்கி திரும்பி அமர்ந்ததையும் அவனது ஆர்வம் காட்டும் உடல்மொழியை சந்தேகமாக பார்த்துவிட்டு என்ன என்பது போல் தலையசைத்து கேட்டாள்.

“அப்புறம் என்ன ஆச்சு”

ராமுவின் புதிய ஆர்வம் கமலாம்மாவின் ஞாபகங்களை நெருட அவன் எதை கேட்கிறான் என்பதையே யோசிக்காமல் அவள் தனக்குத் தானே சொல்லிக்கொள்வது போல் ஆரம்பித்தாள். “அப்பாவுக்கு உன்னோட அப்பத்தா தான் சாமி. அவ உடம்ப உறிஞ்சிதான் அப்பா உயிர் வளர்த்ததா சொல்லுவாரு. நீ என்னமோ அரிசிச்சோறு இருக்க இப்படி சொல்ற. அப்பாவுக்கு அந்த காலத்துல சோளச்சோறோ கம்மஞ்சோறோ கூட கிடையாது. காக்கஞ்சி அரைக்கஞ்சிதான். அப்பத்தா காக்கஞ்சி சாப்பிட்டதான் அப்பாவுக்கு அறைக்கஞ்சி கிடைக்கும். அப்பெல்லாம் கிணறு வெட்ட குளம் வெட்ட வாய்க்கால் வெட்ட சனங்களை கூட்டம் கூட்டமாக கூட்டிகிட்டு போவாங்கலாம். அப்போ அப்பா குழந்தை பையன். அப்பத்தா அப்பாவை தூக்கிகிட்டு கிணறு வெட்ட போய்விடுமாம். எந்தக் கோயிலிலும் பூசை இருக்காது. வயிறு காஞ்சா சாமி ஏது. யாரும் மாடு கண்ணு கூட வச்சுக்கல. பாதி சனம் பஞ்சம் பிழைக்க வெளியூர் போயிட்டாங்க. மீதி சனம் அப்படியே…” சட்டென்று கமலாம்மா நிறுத்திக்கொண்டாள். முந்தானையால் மூக்கை சிந்திக்கொண்டு உள்ளங்கைகளால் தன் ஈரப்பதமான கண்களை நீவிக் கொடுத்தாள். மூக்கை உறிஞ்சிக்கொண்டு கொஞ்சம் அசமந்த சிரிப்புடன், “நம்ம ஊருக்கு உடும்பூர்ன்னு ஏன் பேரு வந்ததுன்னு தெரியுமா? அந்த காலத்துல நிறைய உடும்பு இருந்துதாம். பஞ்சத்தில எல்லா உடும்பையும் அடிச்சு சாப்பிட்டுட்டாங்கலாம். இப்ப ஏதோ கோயமுத்தூர்ல பில்டிங்கு கான்ட்ராக்ட்டு அது இதுன்னு வசதி வாய்ப்பா இருக்கோம், ஆனாலும் இன்னும் நாங்க அந்த பழைய உடும்பூர்க்காரங்கதான்டா.”என்று சொல்லி சிரித்தாள். “எல்லாம் பழைய கதை” என்று நிறுத்திக் கொண்டாள். ராமு மனசு அடைத்துப் போனான். சொல்லா சொற்கள் அவனைச்சுற்றி வட்டம் அடித்தது.

5

ஒரு சுபதினத்தில் அறுவை சிகிச்சை எனும் அபய நிகழ்வு ஏகபோகமாக நடந்து முடிந்தது. தாமோதரனும் கமலாம்மாவும் புதுப் பொலிவுடனும் தைரியத்துடனும் இருப்பதைப் பார்ப்பதற்கு ராமுவுக்கு ஒரு ஓரத்தில் நிம்மதியை தந்தது. எனினும் விசாரிக்க வந்தவர்களிடம் இவர்கள் இருவரும் ஏதோ குடும்ப நிகழ்வின் களிப்புடன் நடந்துகொள்வது ராமுவுக்கு எரிச்சலாகவும் இருந்தது. அனேகமாக தாமோதரனை பார்க்க வந்த அனைத்து ஆண்களும் நெஞ்சு பிளக்கப்பட்டவர்கள்தான். அவர்கள் தம் சட்டைப் பொத்தானை கழட்டி மார்பு தழும்புகளை காட்டும்போது நெஞ்சுரம் மிக்க முழு வீரர்களாகவும், பத்திய சாப்பாடு மற்றும் மருந்து உட்கொள்ளும் சூத்திரத்தைச் சொல்லும்போது அரை வைத்தியர்களாகவும் காட்சி அளித்தார்கள். அதுவும் பொங்கல் பிரியரான சுப்பிரமணி மாமா பார்க்க வந்தபோது தாமோதரனுக்கு குஷி தாங்கவில்லை.

“என்னடா தாமோதரா! கடைசியில் நீயும் எங்க கிளப்பில் சேர்ந்துட்டியா?” என்ற சுப்பிரமணியிடம், “நெஞ்சு அடைப்பு எடுத்தாச்சுல, இனி ஒரு ஏழு எட்டு வருஷத்துக்கு கவலை இல்லை. என்ன!, ஒரு கடப்பாறையை தூக்கி நெஞ்சில் வைத்த மாதிரி ஒரு வளி, அவ்வளவுதான்.” என்று தாமோதரன் சொல்லி மெல்ல சிரித்தார். தலையிலடித்துக் கொண்டு வெளியேறிய ராமுவை யாரும் கவனித்ததாக தெரியவில்லை.

டிஸ்சார்ஜ் ஆகும் முன்னே உணவு நிபுணரை சந்திக்க வேண்டியிருந்தது. இப்படி மருத்துவரை சந்திக்கப் போகும்போது தாமோதரன் ஒரு பள்ளி மாணவனுக்கு உண்டான பாவனையை முகத்தில் ஏந்துவார். எல்லை மீறிய ஆனால் ஒழுக்க வளையத்துக்குள் வர விரும்புகிற ஒரு அப்பாவி மாணவனை அவரிடம் தரிசித்து விடலாம்.

அவர்கள் முறை வந்ததும் ராமுவை முன் விட்டு பின் தொடர்ந்தார் தாமோதரன். உள்ளே உணவு நிபுணராக ஒரு இளம் வயது பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்த உடன் மாணவன் மறைந்து ஒரு கௌரவமான தகப்பன் தோன்றினார். இப்படியான ரூப மாற்ற பாவனை ராமுவுக்கு தெரிந்ததே என்பதால் அவன் பெரிதாக ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் உள்ளே சென்றதிலிருந்து பொத்தானை அழுத்திய தானியங்கி போல் பலநாட்கள் சொல்லித் தேய்த்த பிரசங்கத்தை நடத்தத் தொடங்கினார் அந்த இளம் வயது உணவு நிபுணர். தாமோதரன் ஆமோத்தித்தும் மறுத்தும் பிரசங்கத்தை உள்வாங்கி கொண்டிருந்தார். எப்படியோ நல்லது நடந்தால் சரியென்று அந்த நிகழ்வின் போக்கை கவனித்துக் கொண்டிருந்தான்.

“புருஞ்சுதுங்களா சார். அதாவது மாவு சத்து கமிய எடுத்துக்கணும். அதுதான் க்ளுகோஸ் லெவல் கமிய வெச்சுருக்கும். எண்ணைப் பலகாரம் கூடவே கூடாது. காய்கறி எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடலாம். சக்கரை மறந்தும் சாப்பிடக்கூடாது. அப்புறம் முக்கியமான விஷயம், மூணு வேளையும் ஃபுல்லா சாப்பிடாம பிரிச்சு பிரிச்சு சாப்பிடணும்.”

தாமோதரன், “சரியா போச்சு போங்க. நான் சாப்பிடறதே சோறு மட்டும்தான். அதையே வேண்டான எப்படீங்க மேடம். பிரிச்சு பிரிச்சுன்ன எப்படீங்க”

“கோட்டா வெச்சு சாப்பிடுங்க. மூணு வேளைக்கு பதிலா அஞ்சு வேளை ஆறு வேளைன்னு பிரிச்சுக்கணும். அதுக்குன்னு எல்லா வேளையும் ஃபுல் கட்டு கட்டக்கூடாது. எப்பயும் பாதி வயிறுதான். அப்போதான் க்ளுகோஸ் லெவல் கண்ட்ரோல்ல இருக்கும்.”

“அது சரி… கோட்டா வெச்சு….” என்று உடலை அசௌகரியமாக நெளித்து ஏமாற்றத்துடன் இழுத்து சொல்லும்போதே தெரிந்தது, ஏதோ சொல்லொக்கூடாத விஷயத்தை சொல்லிவிட்டார்கள் என்று.

“உங்க நல்லதுக்குதான் சார்.”

“ஆமா.. என் நல்லதுக்கு தான்”

ராமு, “அப்பா, உங்களை என்ன இப்போ சாப்பிடவே கூடாதுனா சொன்னாங்க.”

தாமோதரன் அமைதியானார்.

ராமு அந்த உணவு நிபுணரைப் பார்த்து தொடர்ந்தான். “இப்படித்தாங்க மேடம். எதுக்குமே சரி பட்டு வரமாட்டார். நாங்கெல்லாம் இவருக்கு பின்னாலயே சுத்தணும். கொஞ்சம் அசால்ட்டா விட்டாக்கூட ஏமாத்திருவாரு. சோறுன்னா அவ்ளோதான்.”

இவர்கள் பஞ்சாயத்திற்குள் வர பிரியம்மில்லாமல் அசௌகரியமாக தலையசைத்தது மேடம்.

தாமோதரனின் அமைதி பொறுக்காமல் ராமு மீண்டும். “அடுத்த மாசம் ஒரு ப்ராஜெக்ட் விஷயமா மூணு மாசம் நான் அமெரிக்கா போகணும். ஆனா இவரை நம்பி நான் எங்கயும் போக முடியல. நாங்க சொன்ன கேக்க மாட்டாரு மேடம். நீங்களே ஸ்ட்ரிட்ட சொல்லீருங்க.”

தாமோதரன் சரி என்பதுபோல் தலையசைத்தார். மேடம் மேலும் உணவு முறை சூதானத்தை தொடர்ந்தார். தாமோதரனுக்கு எல்லாம் கோட்டா கோட்டா என்றே காதில் விழுந்தது.

“அரை வயிறு கால் வயிறு காலமெல்லாம் முடிஞ்சுதுன்னு நெனெச்சேன். கோட்டா வெச்சுதான் மேடம் தூங்குனேன். கோட்டா வெச்சுதான் மேடம் வேலைக்குப் போனேன். கோட்டா வெச்சுதான் மேடம் கடன் அடைச்சது வீடு கட்டினது எல்லாம். கோட்டா வெச்சே சாப்பிட்டுக்கிறேன் இனிமேல்.” சிறிது இடைவேளை விட்டு மீண்டும் ஆரம்பித்தார். “ஆனா இவனுக்கு நான் எதையும் கோட்டா வெச்சு செஞ்சதில்ல, வேணுங்கிறத வாங்கிக் கொடுத்துடுவேன். சரி இந்த கோட்டவெல்லாம் என்னோட போகட்டும். என்ன பத்தி இனி கவலைப் படாம அமெரிக்கா போகச்சொல்லுங்க மேடம்.”

வீடு வரும் வரை கோட்டா கோட்டா என்றே முனகிக்கொண்டு வந்தார். தன்னை விசாரிக்க வருபர்களிடமும் கோட்டாவைப் பற்றியே பேசினார். சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வதால் எப்படியோ கோட்டாவுடன் சமரசம் செய்துகொண்டார் என்றே ராமுவிற்கு தோன்றியது. தவிர்த்தலைந்தது நிகழ்வேறி கடந்துசென்றதில் ஒருவித விடுதலையுணர்வை அடைந்தான். இதுநாள்வரை தன் முன் பாக்கெட்டில் ஒரு அரை செங்கல்லை சுமந்தலைந்தது போலிருந்தது. அது சட்டென்று இல்லாமலானதில் ஒரு உற்ச்சாகம். அதே உற்சாகத்தில் அமெரிக்கா செல்ல ஆயத்தமானான்.

6

“ஒழுங்கா மாத்திரை மருந்து சாப்பிடுங்க, டாக்டர்கிட்ட போங்க, கோட்டா வச்சு சாப்பிடுங்க” என்ற ராமுவின் வேண்டுதலிற்க்கு மறுமொழியாக “அப்பத்தா திதிக்கு ஊருக்கு திரும்பி வந்திடனும்” என்று கட்டளையிட்டு வழி அனுப்பிவைத்தனர்.

புதுப்பயணத்தின் பதட்டமோ குதூகலமோ இல்லாமலிருந்தது. விமானத்திற்குள்ளும் ஒரு புடிபடாத சோகமே தேங்கியிருந்தது. பயண நெடுகிலும் அப்பாவின் நினைவே. சிந்தனை முழுவதும் அவரது கோட்டா வைத்த வாழ்கையே ஆக்கிரமித்திருந்தது. தான் அவரை வைத சொற்கள் தனிச்சையாக ஒவ்வொன்றாக தன் எண்ணத்திரையில் நடந்தேறிக் கொண்டிருந்தது. “சோற்றுப்பண்டாரம், பஞ்சப்பராரி, காணாததைக் கண்ட நாய், காட்டு மனுசன்.” இதுவெல்லாம் தகப்பனை நோக்கி சொன்ன சொற்கள்தானா? ஆம், எல்லா வசைச்சொல்லிற்கும் அடியில் ஒரு மகனின் ஆன்மா. நீத்தார் சுமையை தந்தை சுமக்கிறார். தந்தையை மகன் சுமக்கிறான். கொஞ்சம் கனமாகத்தான் உள்ளது. “கோட்டா கோட்டா கோட்டா கோட்டா…..” அப்பாவின் சமீபத்திய உச்சாடனம் ராகமுவிற்கு கர்ம பலன் போல கடந்து வந்திருந்தது. ராமுவின் மனமும் அதன் போக்கில் உச்சாடனம் செய்துகொண்டிருந்தது. விமான பயணத்தின் இறுக்கமா அல்லது அலை அலையாய் அலைந்த மனம் சோர்ந்து தன்னையே நோக்கித் திரும்பிக்கொண்ட காரணமா அல்லது நீத்தார் விட்டுச்சென்ற வித்தா என்று தெரியவில்லை. ராமு “கோட்டா கோட்டா கோட்டா” என்றே உச்சரித்துக்கொண்டிருந்தான்.

“கோட்டா கோட்டா கோட்டா கோட்டா…”

இந்த உச்சாடனம் அந்தரவெளியில் அர்த்தம் பொதிந்ததாகவும், வாழ்வில் பொருத்திப் பார்க்கும்போது புடிபடாததாகவும் இருந்து ராமுவை ஆட்டுவித்துக்கொண்டிருந்தது. விமானம் தரை தொட்டதும் ஏன் என்று தெரியாமலேயே ராமு ஒரு சங்கற்பம் ஏற்றிருந்தான்.

வந்திறங்கி ஒரு வாரம் ஆகியிருந்தது. புதிய சங்கற்பத்திற்கு வலுசேர்த்தாற்போல் நாளொன்றுக்கு இருவேளை உணவுதான் அமைந்தது. புதிய நிலம் தந்த பரபரப்பும் அதன் அருகாமையற்ற சூழலும் அப்படி அமைத்து தந்தது.

தனக்கு முன் இரு பெரும் பணிகள் இருப்பதை உணர்ந்தே இருந்தான். ஒன்று திரளான வெள்ளையர்களுக்கு நிரல் கட்டுமான பயிற்சி அளிப்பது, மற்றொன்று தன் துருத்திய வயிற்றுக்கு ஒரு முடிவு கட்டுவது.

வந்ததிலிருந்து தன் வயிறு நெகிழ்ந்து கொஞ்சம் கரைந்திருந்தது. உணவில் திளைப்பது ஏனோ அதுவாகவே மட்டுப்பட்டிருந்தது. உணவை மேலும் கட்டுப்படுத்தினான். அதுவும் கட்டுக்குள் வந்தது. கட்டுக்குள் வந்ததாலேயே மேலும் அதை அடக்கினான்; ஆண்டான்; வருத்தினான்; வருந்தினான். எண்பது என்பது எழுபது ஆனது. அதனால் அது அவனிடம் தோற்று வந்தது. உடலின் பிரதேசத்தை மேலும் கைப்பற்ற அவன் மனக்கிடங்கில் புதிய ஆயுதங்கள் வைத்திருந்தான்.

பேலியோ டயட்.

எழுபது ஆனதும் உடலின் மேல் தனக்கு உள்ள அதிகாரத்தை ராமு உணர ஆரம்பித்திருந்தான் அதிகாரம் யாருக்குத்தான் பிடிக்காது.

பேலியோ டயட், இன்டர்மிட்டெண்ட் டயட் ஆக மாறியது. உணவுக்காக உடலைத் தனக்கு முன் மண்டியிட வைத்தான். தன் எல்லைக் கோடுகளை உள்ளிழுத்துக்கொண்ட உடல் முற்றிலும் பணிந்தது. அதிகாரம் மேலும் ஆக்ரோஷமாக செயல்பட்டது. இன்டர்மிட்டெண்ட் டயட் வாரியர் டயட் ஆக மாறியது.

உடல் அறுபதிஐந்தாக குறைந்திருந்தது. இப்போது அப்பனுக்கு புத்தி சொல்லும் யோக்கியதையை பெற்றிருந்தான். ஒல்லியாக அழகாக இருந்தான்.

ஒரு மேடு ஒரு பள்ளத்தை உருவாக்குவது போல, ஏனோ தன் மற்றொரு பணி பெரும் போராட்டமாகவே இருந்தது. அன்று குளிரூட்டப்பட்ட ஒரு அரங்கின் மேடையில் நின்று கொண்டு தன் முதுகுக்குப் பின்னால் உள்ள வெண்திரையில் படங்களையும் பாடங்களையும் காண்பித்து அந்த வெள்ளைத் திரளுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தான். இல்லையில்லை தன்னை விற்றுக் கொண்டிருந்தான். இலகுவாக வரும் கலை ஏனோ திக்கித் திணறியது. தன்னைத் தானே நொந்து கொண்டான். நொந்து கொள்ளும் தோறும் தொடைகள் நடுங்கின முகம் இறுகியது காது வெப்பமானது.

அந்த நாளின் முதல் பாதி முடிந்திருந்தபோதே ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை என்று உணர்ந்திருந்தான். எத்தனை திக்கல்கள், தடுமாற்றங்கள். இப்போது உணவு இடைவேளை தான். மீண்டும் மதிய வேளையில் இருந்து இந்த வெள்ளையர்களிடம் தன்னை நிகழ்த்திக் காட்ட வேண்டும். காலை அமர்விலேயே பல பேர்கள் நீர்யானை போல் வாயைத் திறந்து திறந்து மூடினர். ஒவ்வொரு முறையும் அவனுக்கும் அது தொற்றிக் கொண்டிருந்தது. மதிய அமர்வில் இன்னும்பல நீர்யானைகள் தோன்றும்.

மதிய உணவிற்கு டோக்கன் வாங்கும் வரிசை மிக நீண்டதாக இருந்தது. வெறுப்பாய் வந்து வரிசையில் நின்றான். வெள்ளையர்கள் ஸ்பானியர்கள் ஆசியர்கள் ஆப்பிரிக்கர்கள் என்று உலகத்தோர் அனைவரையும் ஆங்காங்கே கிள்ளி எடுத்து வரிசையில் போட்டதுபோல் பலதரப்பட்டவர்கள் நின்றிருந்தனர். ராமுவிற்கு தனது தடுமாற்றமே மனம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. அன்று ஏதோ உணவுத்திருவிழா போலும். அனைவரும் ஒருவித குதுகலத்துடன் இருந்தனர். தனக்குள் மூழ்கியிருந்த ராமு ஏதோ வாசனை பட்டு வெளி பிரக்ஞைக்கு வந்தான். வரிசையில் நின்றிருந்த ராமுவிற்கு எங்கிருந்தோ ஒரு நீத்தார் குரல் கேட்டு அடங்கியது. திடுமென முழு பிரக்ஞைக்கு வந்த ராமு சுற்றும் முற்றும் பார்த்தான். உணவுத் திருவிழா மிக கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது.

நீத்தார் மூத்தார் நெட்டி முறித்து எழுந்தனர்.

தாய், மெக்சிகன், சைனீஸ், கான்டினெண்டல், மெடிட்டரேனியன், இண்டியன், இங்கிலீஷ் என்று இன்னும் என்னென்னவோ பதாகைகள் ஆங்காங்கே காணப்பட்டது. பதாகை கீழே புஃவே நடந்து கொண்டிருந்தது.

ராமுவின் மேல்மனம் அந்த வரிசையில் இருந்து விலக எத்தனித்தாலும் அவனை விலக விடாமல் ஒரு நீத்தார் பிடித்து வைத்திருந்தார். ராமு, “என்ன உணவுத்
திருவிழாவாக இருந்தால் என்ன ஒரு சூப் மட்டும் ஆர்டர் செய்ய வேண்டியதுதான். இப்போது இருக்கும் என் உடல் வடிவு எனக்கு பிடித்துள்ளது. உடல் வெல்லக்கூடாது. போராடு, மேலும் போராடு, போரிடு” என்று மனதை உறுதிப்படுத்தினான்.

பாதி வரிசை முடிந்தவுடன் பல வாசனைகளுக்கு மத்தியில் அந்த ஒன்று மட்டும் வடிகட்டி அவனுக்கு வந்து சேர்ந்தது. முகர்ந்து நான்கு மாதமெனும் ஆகியிருக்கும்.

பிரியாணி வாசனை.

மூக்கில் நனைந்து, உள்ளிறங்கி, உடல் நிறைந்து, அடியிலிருந்த நீத்தார் அனைவரையும் முறுக்கேற்றி, அணுக்களின் அனைத்து காலி இடங்களையும் கூட்டி மெழுகி தயார் செய்தது.

வரிசை நகர்ந்து கொண்டே வந்தது. ராமு சூப் ஆர்டர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அரை எண்ணமாக வெட்டுப்பட்டது. “சூப்…. சூப்…. சூப்….” என்று போராடி போரிட்டு மனதைக் கட்டாயப்படுத்தினான். “உடலை வெல்ல வேண்டும்.” “சூப்…. சூப்…. சூப்…. சூப்…. கோட்டா.. சூப்….” “யாரது நடுவில் கோட்டா என்றது.”

அடியிலிருந்து, “கோட்டா வைத்து சாப்பிட்டால் என்ன?” என்ற ஒரு குரல் மேலெழுந்தது. ஒரு நீத்தார் கண்ணடித்து களவாணித்தனமாகக் கேட்டார். “இல்லையில்லை சூப்…. சூப்…. சூப்….” என்று ராமு ஒற்றை ஆளாக நெஞ்சிலிருந்து போர்தொடுத்து கீழே இறங்கினான். மூத்தார் நீத்தார் தெய்வங்கள் தங்கள் அனைத்து படை அணிகளுடன் “சோறு…. சோறு…. சோறு….” என்று அடிவயிற்றிலிருந்து மேலெழுந்து வந்தனர்.

வரிசை நகர்ந்து கொண்டே வர அடியிலிருந்து தெய்வங்களும் நெஞ்சிலிருந்து ராமுவும் யாருக்கும் தெரியாமல் நடு வயிற்றில் ஒரு போர் நடத்திக் கொண்டிருந்தனர். வெறும் வயிற்றுச் சத்தம் வெளியே கேட்டது. ராமு தன் எல்லைகளை குறுக்கிக்கொள்ள விரும்பவில்லை. தெய்வங்களும் விடுவதாயில்லை. வரிசை முடிந்துவிட்டது. கவுண்ட்டருக்கு முன்னால் இருந்தான். இப்போது போர் முடிந்தே தீரவேண்டும். முழு உடலும் தெய்வங்களின் பிடியில் சிக்கிக்கொண்டாலும், தலையும் வாயும் இன்னும் தம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. கடைசி ஆயத்தம். இயந்திரத்தனமாகவேணும் சூப் என்று சொல்லிவிடவேண்டும்.

காது அடைத்தது, தொண்டை கம்மியது, தலை வியர்த்தது, சூப் என்று சொல்லவந்த தொண்டையை பற்றி, மேலேறி, நாவை வளைத்து, துருத்தி, திருத்தி ஒட்டுமொத்த நீத்தார் மூத்தார் தெய்வங்களும் படையென மேலெழுந்து ‘பிரியாணி’ என்ற சொல்லாக வெளியே வந்து விழுந்தனர். பணமும் டோக்கனும் கைமாறியது. பரிவர்த்தனை முடிந்தது. பிரியாணி கைக்கு வந்தது.

“சரி, இந்த முறை மட்டும் கோட்டா வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.”

முதல் கவளம் வழுக்கிக்கொண்டு உள்ளே சென்று அடிவயிற்றில் தொப்பென்று விழுந்தது. அனைத்து செல்களிலும் ஒரு ஆனந்த அலை அடித்தது. உடலின் அனைத்து இடங்களும் இன்னுமின்னும் என்று வாரி விழுங்கியது. பண்படாத தூய ஜீவனென லபக் லபக் என்று வாயில் போட்டுக் கொண்டிருந்தான். உடலின் அனைத்து அங்கமும் பூரணித்தது. அன்னமயகோசம் ஆனந்த நிலையை எய்தியது. ஒருவழியாக பிரியாணி அவனை தின்று தீர்த்தது. ஆழ் உடல் முன்னோர்கள் சமரசம் அடைந்து அடங்கினர்.

இனி போராட்டமோ போர்க்களமோ இல்லை. உலகம் தெளிவுற்று நிகழ்ந்தது.

பித்ரு தேவோ பவ.

அந்நாளில் முடிக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். மதிய அமர்வு அவன் கைவசம் வந்தது. அமர்வின் ஆரம்பம் நகைச்சுவையாகவும் நடுவில் உச்சம் தொட்டும் முடிவில் கச்சிதம் செய்தும் ஒரு சங்கீதமென ஒழுகிச்சென்று முடித்தான். தன்னைத் திறம்பட விற்றான். தடுமாற்றமும் போராட்டமும் இல்லை.

சாமிக்கு படைத்த பின் சம்சாரிக்கு என்ன கவலை. அப்பாவையும் அப்பத்தாவையும் நினைத்துக்கொண்டான். அப்பத்தாவிற்கு அவள் நினைவு தினத்தன்று படையல் இடவேண்டும். அவள் திதியும் நெருங்கி வந்தது. ராமு ஊருக்குத் திரும்பும் நேரமும் நெருங்கி வந்தது.

அடுத்து வந்த நாட்களில் சங்கோஜமே இல்லாமல் சோற்றில் திளைத்தான். பின்பு தன்னை நெறிப்படுத்திக் கொண்டு மத்தியம பாதையை வகுத்துக் கொண்டான். கோட்டா வைத்து சோறு சாப்பிட்டான். விட்டுக்கொடுத்த எல்லைகளை உடல் சிரமம் ஏதும் இல்லாமல் மீண்டும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. கோட்டா வைத்து உண்ணும் மத்தியம பாதையில் உள்ளதால் இன்னும் அப்பனுக்கு புத்தி சொல்லும் அருகதை தன்னிடம் இருப்பதாக நினைத்துக்கொண்டு விமானம் ஏறினான்.

சந்தேகமே இல்லாமல் இப்பயணம் ஒரு யாத்திரை தான். ஆனால் நெஞ்சில் பலநூறு குழப்பங்கள் கேள்விகள். உடல் எப்படி வென்றது? உடலுக்கு என்று தனி மனம் உண்டா? அந்த மனம் என்பது நம் மூதாதையர் தானா? ஜெனிடிக்ஸ் தான் அவர்களா? அப்படி என்றால் உடல் என்பது என்னுடையதா அவர்களுடையதா? என்னுடையது என்றால் நான் ஏன் அதன் கட்டுப்பாட்டில்? பதில் அறியா கேள்விகளிடம் பணிவதைத் தவிர வேறு வழி என்ன.

முன்னோர்களிடமிருந்து ராமு திமிறி  எழுந்தான், விடுவித்து ஓடினான், சண்டையிட்டு தோற்றான், பணிந்து சரண் புகுந்தான். தன் பட்டினிப் பரம்பரையின் கடைசி கன்னியாக உருமாறினான். யாத்திரையின் முடிவில் தான் சிறுத்து சின்னவனாக உணர்ந்தான். இருப்பினும் அனைத்து கேள்விகளும் ஒற்றை கேள்வியாக உருண்டு நின்றது.

“புசித்த பின்னரும் பசி உயிர்ப்பதேன்”

மீண்டும் அந்தர வெளியில் அர்த்தம் பொதிந்ததாகவும் வாழ்வில் பொருத்திப் பார்க்கும்போது விளங்காததாகவும் இருந்தது. விமானம் தரை தொட்டது.

“எது எப்படியோ, அப்பாவிடம் பழைய கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கருணை காட்டினால் கட்டவிழ்த்து ஓடுவார். இடம் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பார். முன்னோர்களுக்கு பிரதிநிதியாக இருக்கும் முன்னவர். தந்தையர்களை தாங்கி நிற்கும் தந்தை தெய்வம்தான். இருந்தாலும்….”

“இன்று அப்பத்தாவிற்க்குப் படையல், ஆனால் விருந்து என்னவோ அவருக்குத்தான். பரவாயில்லை. கொஞ்சம் கண்டிப்பை நடித்துக்காட்ட வேண்டியதுதான். நாளையே இரத்தப்பரிசோதனை முதற்கொண்டு அனைத்தும் எடுத்து பார்த்துவிடவேண்டும்.” என்று பலவாறு நினைத்துக்கொண்டு வீட்டின் கேட்டை திறந்தான். அவனை வரவழைத்தது ஒரு வாசனை. ஆழ் உடல் முன்னோர்களை உலுக்கிய அதே வாசனை. சோற்று வாசனை. இப்போது மேல் நெஞ்சு ராமுவையும் உலுக்கியது. கோபம் வந்தது. மூச்சு சூடானது. சங்கிலித் தொடரின் கடைசி கன்னி மீண்டும் திமிறி  எழுந்தது. சுமந்து வந்த பையை வாசலிலேயே போட்டுவிட்டு விறுவிறுவென்று சென்று வீட்டின் கதவை படீரென்று திறந்தான்.

தாமோதரன் நடு ஹாலில் பெரிய வட்டலில் சோற்றை மலையென குவித்து வைத்து அதன் முன் யாகம் வளர்ப்பவர் போல அமர்ந்திருந்தார். அருகில் பெரிய திறந்த குக்கரில் சோறு ஆவி விட்டுக்கொண்டிருந்தது. ஓரமாக வைத்திருந்த அப்பத்தாவின் படத்திற்கு கீழ் வாழை இலையில் சோறு குவித்து படையல் வைத்திருந்தனர்.

தாமோதரன் சோறும் கையுமாக மாட்டிக்கொண்ட அதிர்ச்சியில் எழுந்து நின்றார்.

“எப்ப பாரு சோறு… சோறு… சோறு…” ராமு பல்லை வெருவி கத்தினான்.

ஏதோ சொல்ல வந்த தாமோதரன் வார்த்தை தடைபட்டு நின்றார்.

“பஞ்சத்துக்கு பொறந்த பரதேசி, இப்ப சோறு இல்லைன்னா செத்தா போவ?”

தந்தை அதிர்ந்தார். ஒரு பெரிய ஒற்றை மூச்சு வெளியே விட்டார். ஏந்தியிருந்த சோற்றுக் கையை கீழே போட்டார். சிறிதாக சிரித்து, “அந்தக் கோட்டா நம்ம குடும்பத்துக்கு ஏற்கனவே முடிஞ்சு போச்சு கண்ணு” என்று சொல்லிவிட்டு ராமுவை கடந்து வெளியே சென்றார்.

சுவர்களின்உலகம் – சங்கர் சிறுகதை

இரவு உணவை முடித்துவிட்டு மொட்டை மாடிக்கு வந்தேன். மணி எட்டரைதான் ஆகியிருந்தது. ஆனால் ஊரே அடங்கிக் கிடந்தது. கேட்ட ஒரே சத்தம் பக்கத்து வீட்டு தென்னமரக் கிளைகளில் காகங்கள் உட்கார்ந்து கரைந்த சத்தம் மட்டுமே. குடித்துவிட்டுச் சாலையோரம் விழுந்துக் கிடக்கும் குடிமகன்களைப் போல் சுய நினைவற்றுக் கிடந்தது வானம். சுற்றிலும் யார் வீட்டு மாடியிலும் யாரும் இல்லை என்பதைக் கவனித்தேன். இந்த ஊர் இதற்கு முன் இப்படி இல்லை. எப்போதும் எல்லார் வீட்டிலும் அடுத்தவீட்டுக் கதைதான் ஓடிக்கொண்டிருக்கும். தங்கள் வீட்டில் சாப்பிட்ட தட்டை எங்கு வைத்தோம் என்று தெரியாதவர்கள்கூட பக்கத்துவீட்டுப் பிரச்சனைகளைப் பற்றி முழுதாய் தெரிந்து வைத்திருப்பார்கள். சில நேரங்களில் அது தொந்திரவாக இருந்தாலும் பல நேரங்களில் பெரிதும் உதவியிருக்கிறது. ‘அது’ வந்த பின் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்து இப்போது முழுவதுமாக மாறிவிட்டிருக்கிறது.

பல நினைவுகள் வந்து அலைக்கழித்தன. பின் எப்போதோ தூக்கிப்போனேன்.

மறுநாள் காலை சீக்கிரமே குளித்து முடித்துவிட்டுக் கிளம்பினேன். ‘அங்கு’தான்.

“என்னம்மா சொல்ற… வெளிய வந்து சொல்லு… சமையக்கட்டுல இருந்து கத்தாதன்னு எத்தனவாட்டி சொல்றது”

அம்மா சரியாக வெளியே கிளம்பும்போதுதான் எதேனும் சொல்லுவாள். பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்க்கவில்லை. அப்படியென்றால் கோபமாக இல்லை. ஆனாலும் ஆளைக் காணோம். நானே சமையக்கட்டிற்குச் சென்றேன்.

“சொல்லுமா.. என்ன சொன்ன”

அடுப்பில் இருந்தப் பாத்திரத்தைக் கீழே எடுத்து வைத்துக்கொண்டே “பக்கத்து வீட்டு ரேவதிய ரெண்டு நாளா காணமாடா… கணேசன் அண்ணன் வந்து காலைலயே விடிஞ்சதும் விடியாததுமா விசாரிச்சிட்டுப் போனாரு.. நீ எந்திரிச்சதும் உன்ன வந்துப் பாக்க சொன்னாரு” என்றாள்.

ரேவதி அக்காவை காணவில்லை என்று அம்மா சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இல்லை. எனக்கு ஏன் அதிர்ச்சியாகவில்லை என்பதை நினைத்துதான் அதிர்ச்சியாக இருந்தது. ஒருவேளை இப்படி ஏதேனும் நடக்கும் என்று முன்னரே எதிர்பாத்தேனா. ச்ச.. நான் ஏன் அப்படி நினைக்கப்போகிறேன். எனக்கும் அவளுக்கும் என்ன பிரச்சனை. தெருவில் அதிகம் அவள் யாரிடமும் பேசிக் கூடப் பார்த்ததில்லை. நான் மட்டும் இல்லை, யாருமே அவளுக்கு தீங்கு நினைக்க மாட்டார்கள். ஆனால் பிறகு ஏன் அந்தச் செய்தியை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொண்டேன். என்னை நினைத்து எனக்கே பயமாக இருந்தது. அவர்கள் வீட்டுக்குப் போவதா வேண்டாமா என்று குழப்பத்தில் சிறிது நேரம் அங்கேயே நின்றேன். பின் ஒரு முடிவெடுத்தவனாய், “போய்ப் பார்க்கிறேன்” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பினேன்.

கணேசன் அண்ணனின் மனைவிதான் ரேவதி. ஓராண்டுக்கு முன் அவர்கள் திருமணம் நடந்தது. கணேசன் அண்ணனின் தூரத்து சொந்தம் என்று அம்மா சொன்னாள். ஊருக்கு வந்த புதிதில் மிகவும் அமைதியான பெண்ணாய் ஒருவருடனும் பேசாமல் எப்போதும் கையில் எதாவது புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருப்பாள். எப்போதும் “ஊர் வம்புக்கு நான் போக மாட்டேன்பா..” என்று பெருமைப் பேசும் அம்மாவே ஒரு நாள் “என்னடா இந்தப் பொண்ணு வீட்ட விட்டு வெளியவே வர மாட்டேங்குது..” எனக் கேட்டாள்.

“புதுசா வந்துருக்காங்கள்லம்மா.. அதுனால அப்படித்தான் இருப்பாங்க..போக போக சரி ஆகிடுவாங்க” இதைச் சொன்னபோது எனக்கே நம்பிக்கை இல்லை.

கணேசன் அண்ணன் திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே துபாய் சென்றுவிட்டார். வீட்டில் ரேவதி அக்கா, கணேசன் அண்ணனின் அண்ணன், அவரின் மனைவி மூன்றுபேர் மட்டுமே இருந்தனர்.

அண்ணன் துபாய் போவதற்கு முன் சில தடவைகள் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அப்போது கூட ஒரு தடவைதான் ரேவதி அக்காவை பார்க்க முடிந்தது. அதுவும் அந்த அண்ணன் காப்பி கொண்டு வரச் சொன்னதால்.

ஒரு வேளை பிடிக்காமல் நடந்த திருமணமோ என்றெல்லாம் சில சமயம் தோன்றும்.

நான் முதன் முதலாக ரேவதி அக்காவிடம் இங்குதான் பேசினேன். நண்பர் ஒருவர் ஒரு சுவரில் பதியப்பட்டிருந்தக் கவிதைகளைக் காண்பித்து இந்தக் கவிதைகள் யார் எழுதியது என்று கேட்டார். ‘நகுலன்’ என்றேன்.

“இல்ல இவங்கள நான் கொஞ்ச நாளா தொடர்ந்து பாலோ பண்ணிட்ருக்கேன்.. பேரு ரேவதி. கவிதைகள் நல்லா எழுதுறாங்க.. ஒரு வேள இவங்களே வேற பேர்ல எழுதுறாங்களோன்னு டவுட்டாகிருச்சு” அவர் பேசியதை நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. என் கவனம் முழுவதும் அந்தக் கவிதைகளின் மேல்தான் இருந்தன.

“எனக்கு

யாருமில்லை

நான்

கூட..”

“இருப்பதற்கென்று

வருகிறோம்

இல்லாமல்

போகிறோம்”

இதற்கு முன் பல தடவைகள் இந்தக் கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போதுபோல் எப்போதும் இவை இவ்வளவு அர்த்தம் பொதிந்தவையாக இருந்ததில்லை.

ரேவதி அக்கா!!

அந்தக் கவிதைகளின் கீழே பெயர் போடவில்லை என்பதால் நான் “நகுலன்!” என்று எழுதினேன்.

உடனேயே “ஆம்” என்று பதில் வந்தது. எங்கள் நட்பு நகுலனிடமிருந்து தொடங்கிற்று.

சில நாட்களிலேயே மிக நன்றாக பேசத்தொடங்கிவிட்டோம். எப்போது இங்கு வந்தாலும் அவரிடம் “ஒரு குட் மார்னிங்” அல்லது “குட் ஆப்டர்நூன்” அல்லது ஒரு “குட் ஈவ்னிங்” சொல்லிவிட்டுத்தான் மற்றவர்களைப் பார்க்கவே போவேன். ரேவதி அக்காவும் அப்படித்தான். எங்கள் பேச்சு முழுக்க முழுக்க தீவிர இலக்கியம் சார்ந்ததாகவே இருக்கும். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என எதைப் பற்றியும் விவாதிக்க கூடியவராக ரேவதி அக்கா இருந்தாள். ஒவ்வொருமுறையும் அவள் மீது எனக்கு மரியாதை கூடிக்கொண்டே போனது. என்னையும் “எழுது. எழுத எழுத தன்னால் எழுத்து பிடிபடும்” என ஊக்கப்படுத்தினாள்.

ஒன்றை நான் கவனிக்கத் தவறவில்லை. என்னதான் இங்கு நன்றாகப் பேசினாலும் அக்கா வீட்டிற்குப்போனால் முற்றிலுமாக மாறி, சரியாகச் சொன்னால் அதே பழையப் பெண்ணாகத்தான் இருந்தாள். எப்போதும் அவள் அறைக்குள்தான். ஒன்றிரண்டு தடவை வெளியே வந்தாலும் ஒரு ஹாய் ஹல்லோ மட்டும்தான்.

எனக்கு இந்த விசயம் ஆச்சர்யமாய் இருந்தது. ஒரே ஆள் இங்கு ஒரு மாதிரியும் வீட்டில் ஒரு மாதிரியும் ஏன் இருக்கவேண்டும். இத்தனைக்கும் கணேசன் அண்ணனின் குடும்பத்தில் எல்லோருமே நல்லவர்கள். கலகலப்பானவர்கள். கணேசன் அண்ணனின் அண்ணனுக்கும் அவருக்கும் பத்து பதினைந்து வயது வித்யாசம் இருக்கும். தம்பியைத் தன் பிள்ளையைப்போல் பார்த்துக்கொள்பவர் அவர். ரேவதி அக்காவை ஒரு சொல் கடுமையாகப் பேசிப் பார்த்ததில்லை. இருந்தும் அக்கா தன் கூண்டிற்குள்தான் எப்போதும் இருந்தாள்.

இங்கு எதிர்பார்த்த மாதிரியே எல்லா இடங்களிலும் ஒரே அமைதி. இன்றைக்கு முழுவதும் இதைப் பத்திதான் பேசுவார்கள். எல்லா சுவர்களிலும் #சேவ்ரேவதி என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தன. பெரிய பெரிய இலக்கியவாதிகள் எல்லாம் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்திருந்தனர்.

எனக்குப் புரிந்தது… நான் ஏன் அவள் காணாமல் போனது பற்றி அதிகம் கவலைக்கொள்ளவில்லை என.

நாங்கள் பேச ஆரம்பித்த புதிதில் ரேவதி அக்காவிற்கு அதிக நண்பர்கள் இங்கு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எண்ணிக்கைக் கூடத் தொடங்கியது.

ஒரு நாள் யாருமே எதிர்பார்க்காதவண்ணம் தன் படத்தை சுவரில் பகிர்ந்திருந்தாள். அன்று மட்டும் அவளுக்கு முன்னூறுக்கும்மேல் நட்பு அழைப்புகள் வந்தன. அனேகமாக ஊரில் இருந்த எல்லோருமே அந்த லிஸ்ட்டில் இருந்தனர். அதற்கு முன்பெல்லாம் ஒவ்வொரு முறையும் யாராவது புதிதாக நட்பாக வேண்டினால் என்னிடம்தான் முதலில் சொல்வாள். நான் அவரின் சுவர் பக்கம்போய் ஆராய்ச்சி செய்து அவரின் நட்பை ஏற்கலாமா வேண்டாமா என்று சொல்வேன். ஒரு முறை எனக்கும் அவளுக்கும் பெரிய சண்டையே வந்துவிட்டது. அம்முறை நட்பு அழைப்பு கொடுத்தவர் பக்கத்து தெருவில் இருக்கும் கீர்த்தி. பெண் என்பதாலும் அதுவும் பக்கத்து தெருவில் இருப்பவள்தானே என்பதாலும் ரேவதி அக்கா என்னைக் கேட்க்காமலேயே அவளின் நட்பை ஏற்றுக்கொண்டுவிட்டாள். எனக்குத் தெரிந்தபோது நான் அவளை நன்றாகத் திட்டினேன். ஏனென்றால் அந்த கீர்த்தியை பற்றி ஊரில் ஒருவர் கூட நல்லவிதமாக பேசவில்லை. வாராவாரம் அவள் வீட்டிற்கு புதிது புதிதாக பொருட்கள் எப்படி வருகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். அவள் அதை பெறுவதற்கு எந்த தப்பான விசயங்களையும் செய்வதில்லைதான். “எனக்கு இதெல்லாம் வேண்டும்.. ஏழையாய் பிறந்துவிட்டதால் இதற்கெல்லாம் ஆசைப்பட முடியுமா” என்பது மாதிரி ஏதாவதுதான் சொல்லுவாள் யாரேனும் ஒரு தர்மவான் வீட்டில் கொண்டுவந்து இறக்கிவிடுவான். வேடிக்கை என்னவென்றால் அதைப் பார்த்து கீர்த்தியையும், வாங்கிக்கொடுத்தவனையும் திட்டித் தீர்க்கும் புண்ணியவான் அடுத்த முறை முதலில் ஓடிப்போய் சீர்வரிசை செய்வான். கீர்த்திக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்ததால் யார் திட்டுவதைப் பற்றியும் கவலைப்படமாட்டாள். இப்படி வாங்கிக்கொடுப்பதினால் அவர்களுக்கு என்ன லாபம் என்றோ, வாங்கிக்கொள்வதில் கீர்த்திக்கு என்ன ஆசை என்றோ புரியவில்லை.

ரேவதி அக்காவிடம் இதைச் சொன்னபோது என்னை ஆணாதிக்கவாதி எனத் திட்டினாள். நானும் மற்ற ஆண்களைப்போல்தான்.. ஒரு பெண் பொது வெளியில் சகஜமாகப் பழகினாலே சந்தேகப்படும் மோசமான வக்கிர புத்திக்காரன் அது இது என என்னவெல்லாமோ சொல்லித் திட்டினாள். ஒரு கட்டத்திற்கு மேல் எப்படியோ போங்கள் என்று விட்டுவிட்டேன். ஒரே வாரத்தில் நீ சொன்னது சரிதான் என்று என்னிடம் வந்து சொன்னாள்.

புகைப்படத்தை ஏன் பகிரவேண்டும்.. உடனே அதை நீக்குங்கள் என்று அவரிடம் சொன்னேன். அதன் பிறகுதான் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது. நான் பொறாமையால் பேசுகிறேன் என்றும் என் எல்லையை மீறாமல் இருக்கவேண்டும் என்று பேச ஆரம்பித்தாள்.

இது ஒரு வினோத உலகம். வந்த சில நாட்களிலேயே உணர்ந்தாலும் விட்டு வெளியேறும் வழிதான் தெரியவில்லை. இது வந்த பின்னர் எல்லோருக்கும் மூன்று முகங்கள் ஆகி விட்டன. இங்கு காண்பிப்பது ஒரு முகம், வெளி உலகில் ஒரு முகம் மற்றும் மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த மூன்றாவது முகம்.

மேலும் சில சுவர்களில் சில போராட்ட அழைப்புகள் இருந்தன. உலகில் பல நாடுகளின் அரசியலை நிர்ணயிக்கும் சக்திகொண்டதாய் இவ்விடம் இருப்பதால் எல்லோரும் முடிந்தவரை இவ்விடத்தை பயன்படுத்திக்கொள்ள முனைகிறார்கள். வாரத்திற்கு ஒரு போராட்ட அறிவிப்பையேனும் பார்க்கலாம். நம்மில் சிலருக்கும் எல்லாவற்றைப் பற்றியும் கருத்து சொல்லும் பழக்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இவ்விடம் சொர்கபுரி.

இப்போது யோசித்தால் எனக்கு ரேவதி அக்காவைப் புரிந்துகொள்ள முடிகிறது. தன்னை யாரும் கண்காணிக்கவில்லை என்ற சூழ்நிலையில்தான் ஒரு மனிதன் தன்னை உண்மையாக வெளிப்படுத்திக்கொள்வான் என்று சொல்வார்கள். கட்டுப்பாடுகள் அற்ற, அதே சமயம் சிறிதளவு பாதுகாப்பாய் உணரும் இடத்தில் கூட ஒரு பெண் தன்னை முழுமையாய் வெளிப்படுத்திக்கொள்கிறாள். எனக்குப் புரிந்தது ஆனால் என்னைப்போல் பலரும் நட்பாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ரேவதி அக்காவின் சுவரை அடைந்தபோது கணேசன் அண்ணனின் அண்ணன் அங்கிருந்தார். “காணாமல்போனவளைத் தேடாமல் இங்கென்ன செய்துகொண்டிருக்கிறார்” இருந்தும் அவரைப் பார்த்தவுடன் எழுந்த குற்றவுணர்ச்சியை மறைக்க முடியவில்லை.

கடைசியாய் அவளுடன் சண்டைப் போட்டபின் இரண்டு நாட்கள் மனதில் வேறெதுவும் ஓடவில்லை. அவள் கேட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் அநியாயமானவை. அவளின் நல்லதிற்கு சொன்னதை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் அசிங்கப்படுத்திவிட்டாள். பதிலுக்கு திருப்பி திட்டியிருந்தால் ஒருவேளை மனம் சமாதானம் ஆகியிருக்கும். அதற்கு அவள் வாய்ப்பே குடுக்காததால் அவள் வீட்டிற்குப் போனேன். கணேசன் அண்ணனின் அண்ணந்தான் இருந்தார். சட்டென்று மனதில் ஒரு எண்ணம்.

“அண்ணா.. ரேவதி அக்கா இருக்காங்களா” அவள் அங்கு இல்லையென்பது தெரிந்தும் தெரியாத மாதிரி கேட்டேன்.

“இல்ல சிவா.. அவ அங்கதான் போயிருக்கா” என்றார்

ஒன்றும் பதில் சொல்லாமல் தலையை குனிந்து நின்றேன்.

“என்னாச்சுப்பா…? அவகிட்ட எதுனா கேக்கனுமா”

“வந்து..உங்ககிட்டதான் ஒன்னும் சொல்லனும்…” என்று இழுத்தேன்.

“சொல்லு.. என்ன சொல்லனும்” அதுவரை அசிரித்தையாக இருந்தவர் என் முகத்தைக் கவனமாகப் பார்த்தார்.

“நான் சொல்றத எப்படி எடுத்துக்குவீங்கன்னு தெரில.. ஆனா தப்பா எடுத்துக்காதீங்க.. ரேவதி அக்கா பத்தி ஒன்னு சொல்லனும்ன்னுதான் வந்தேன்.. தப்பா எதுவும் இல்ல..அக்கா நல்லவங்கதான்.. அதுனால அவங்க மேல் இருக்குற அக்கறைலதான் சொல்றேன். அக்காவ ‘அங்க’ அனுப்பாதீங்க அண்ணா அது கல் மனசுக்காரங்களுக்கான இடம்.. சரியாத்தான் சுவர்களால அந்த உலகத்த உருவாக்கிருக்காங்க.. அங்க பாதிபேரு மோசமானவங்களா இருக்காங்க.. இது அக்காவுக்கு சொன்னா புரிய மாட்டேங்குது.. அவங்க எல்லாரையும் நம்புறாங்க.. யாரு எப்படின்னு பாத்து பழக மாட்றாங்க.. நான் சொன்னாலும் என்னயத்தான் திட்றாங்க.. இந்த ஊர்ல இதுக்கு முன்னாடி எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும்.. நேத்து பொறந்த கொழந்தல இருந்து நாளைக்கு சாகப்போறவங்க வரைக்கும் எல்லாரையும் தெரிஞ்சு வச்சுருப்போம்.. ‘அது’ வந்ததுக்கு அப்றம் எல்லாரையும் புதுசா பாக்குற மாதிரி இருக்கு.. எது உண்மை எது பொய்ன்னு கண்டுபிடிக்க முடியல..எதுக்கு வம்பு பாருங்க.. அதான் உங்ககிட்ட ஒருவார்த்த சொல்லிரலாம்ன்னு வந்தேன்.. நான் சொன்னேன்னு எதுவும் அவங்கிட்ட சொல்லிடாதீங்க.. அதுக்கும் என்னதான் திட்டுவாங்க..நான் வர்றேன்” சொல்லிவிட்டு விறுவிறுவென்று அவ்விடத்தைவிட்டு வெளியேறினேன். கணேசன் அண்ணனின் அண்ணன் என்னைக் கூப்பிடவில்லை. அதிலிருந்து நான் சொன்னதை அவர் சீரியசாக எடுத்துக்கொண்டார் என்பது புரிந்தது. உள்ளுக்குள் ஒரு குரூர சந்தோசம்.

அடுத்த ஒரு வாரத்திற்குளெல்லாம்….

கணேசன் அண்ணனின் அண்ணனிடம், “சாரி அண்ணா.. என்றேன்” என்னைப் பார்த்தவர் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதார். “பாவி மக.. இந்தப் பாழாப்போன சொவத்துங்கப் பக்கம் வராத வராதன்னு சொன்னேன்.. என் பேச்சக் கேக்கலயே.. இவ்ளோ வீம்பா ஒரு பொம்பளைக்கு இருக்குறது.. எம் தம்பி வந்து கேட்டா நான் என்ன சொல்லுவேன்.. எங்க போனாளோ.. என்னாச்சோ தெரியலயே” அழுது தீர்த்தார்.

ஒரு சில நிமிடங்களுக்கு மேல் அங்கு நிற்க முடியாமல் அவரிடம் ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

“தம்பி பொண்டாட்டின்னு கூட பாக்காம புருசன் இல்லாதப்பா ஊர் மேயிரியான்னு கேட்ருக்கான் பாவி.. சொல்லு பொறுக்க மாட்டாம வீட்ட விட்டுப் போயிட்டா” வரும் வழியில் ஏதோ ஒரு சுவரோரம் இருவர் பேசிக்கொண்டார்கள்.

இங்கு காணாமல் போன எத்தனையோ பேர் திரும்பி வந்திருக்கின்றனர். திரும்பி வரவே மாட்டார்கள் என்று ஊர் உலகமே சொன்னவர்கள் எல்லோரும் மறுபிறவி கிடைத்து மீண்டிருக்கின்றனர். “உலகமே இங்கிருக்கிறது, இவ்வுலகில் கண்டுபிடிக்க முடியாதவர்களே இனி இருக்க மாட்டார்கள்” என்று என்னை இங்கு முதன் முதலில் அழைத்து வந்தபோது ஒருவர் சொன்னார். ரேவதி அக்காவும் திரும்பி வருவாள். அவள் வரவேண்டும். “#சேவ்_ரேவதி_அக்கா” என்று என் சுவரில் எழுதிவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினேன்.

“சுவர்களின் உலகத்திற்கு வந்தமைக்கு நன்றி. மீண்டும் வருக” என்ற செய்தி கண் முன் தோன்றி மறைந்தது.

மழைக்குப் பின் – கமலதேவி சிறுகதை

தொடர்ந்து விடாமல் பெருமழையாகவும் தூரலாகவும் நின்று நிதானித்து பெய்த மழையால் துறையூர் கலைத்துப்போடப்பட்டிருந்தது.ஈர அதிகாலையில் அந்தசிறுநகரில் நடைப்பயிற்சி செல்வதற்காக குடையுடன் தன்வீட்டு வாசலில் நின்ற வெங்கட்ராமன் தலையுயர்த்தி வானத்தைப் பார்த்தார்.அடைமழைநாள் எப்படியோ தன்குளிரோடு நசநசப்போடு அவனை கொண்டுவந்துவிடுகிறது.

துன்பம் இனியில்லை..சோர்வில்லை.துன்பம் இனியில்லை சோர்வில்லை…என்ற வரிகளை மந்திரம் என மனம் அனிச்சையாய் சொன்னது.விஸ்வாவின் இறுதி நாட்களில் இந்தவரிகளை பிடித்துக்கொண்டமனம் உள்ளேயே எந்தநேரமும் நிரப்பமுடியாத ஒன்றை நிரப்பிக்கொண்டிருந்தது.அவன் இறப்பை எதிர்ப்பார்த்து காத்திருந்த பத்துநாட்களில் இந்தவரிகளின்றி எதுவும் துணையிருந்திருக்க முடியாது.தயவுசெஞ்சி செத்துபோடா கண்ணா.. இவ்வளவு வலி வேண்டாம்..என்று நூறுமுறையாவது மனதால் சொல்லிய நாட்கள்.

குடையை மடக்கி கையில் பிடித்துக்கொண்டு நடந்தார்.நாய் ஒன்று அசதியில் தெருவிளக்கின் அடியில் படுத்திருந்தது.நடுவயதுடையது. செவலை நிறம்.மூச்சு ஏறிஇறங்கும் வயிற்றின் தசைகளில் இளமையின் பூரணம். சற்று நேரம் நின்றார். மணிவிழி திறந்து அவரைப்பார்த்து வாலையசைத்து கண்களை மூடிக்கொண்டது.

தெப்பக்குளத்தை சுற்றி நடந்தார்.பெரியஏரியிலிருந்து வரும் புதுநீர் நிரம்பித் தழும்பிக்கொண்டிருந்தது.நீரில் கலங்கல் அவர் கண்களுக்குத் தெரியவில்லை.ஆனால் நாசி கண்டுகொண்டது.ஒருபுலன் இல்லாவிட்டால் ஒருபுலன் உதவுவதை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டார்.இருபுலன் சேர்ந்து ஒருபுலனாய் பரிணாமம் வளர்ந்தால்!… அழகு என்பதும் நாம் அறிந்த உயிரியல் என்பதும் என்னவாகும்? என்று மனதில் தோன்றியது.

எப்பொழுதும் நடக்கும் வழியில் சாக்கடை சிறுபாலத்தில் உடைப்பு ஏற்பட்டு வழியெங்கும் நீர் கணுக்கால் வரை சென்றது.திரும்பிவிடலாம் என்ற எண்ணம் எழும் பொழுதே அதுமுடியாது என்பதை அவர்மனம் அறிந்திருந்தது.

பழையப்பாதையில் நடந்தார்.இந்தப்பாதையில் வந்து ஆண்டுகளாகின்றன.சிறுதயக்கத்துடன் வாயில்கதவைப்பிடித்து நின்று அந்தப்பள்ளிக்கட்டிடத்தைப் பார்த்தார்.இத்தனை ஆண்டுகளில் விரிந்து பரந்து உயர்ந்திருந்தது.அவர் கால்களுக்கடியில் சிறுகூச்சம் போல ஒருஉணர்வு.உயரமான இடத்தில் ஒட்டில் நிற்பதைப்போல.கால்களை மாற்றிமாற்றி தூக்கி பின்புறமாக மடித்து நீட்டினார்.

அலைபேசி ஒலித்துக்கலைத்தது.எடுத்ததும், “குட்மானிங் டாக்டர் .இன்னிக்கு நீங்க லீவான்னு கேட்டு கால் வந்துட்டேயிருக்கு.கெம்பியப்பட்டிக்காரர் நல்லாருக்கார்.வீட்டுக்கு அனுப்பலாமா டாக்டர்.இங்க எக்ஸ்ட்ரா பெட் போட்டும் சிரமமா இருக்கு டாக்டர்,”என்றது.

“நீ சர்ச்க்கு போகலையாம்மா..”

“பக்கத்திலதானே டாக்டர். போயிட்டு திரும்பிருவேன்.மது நைட் இருந்தா..”

“சரிம்மா.இந்தவாரத்துக்கு சன்டே இல்லன்னு எடுத்துக்க வேண்டியதுதான்..ஸார்ப்பா நைன்க்கு இருப்பேன்,”என்றப்பின் அலைபேசியை ட்ராக் பேண்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டு நிமிர்ந்தார்.பள்ளிவளாகம் அமைதியாக இருந்தது.மைதானத்தில் மழைபெய்து ஏற்படுத்திய சிறுசிறு பள்ளங்களில் நிறைந்தகண்கள் என நீர் தேங்கிக்கிடந்தது.

உள்ளுக்குள் ஏற்பட்ட ஒருசொடுக்கலால் அவர் உடல் ஆடியது. “டாடி..”என்று விஸ்வா ஓடிவருகிறான். பள்ளியை அடுத்திருந்த நந்திகேஸ்வரர் ஆலயத்தைப் பார்த்தபடி நடந்தார்.பள்ளிசுற்றுசுவர் ஓரங்களில் ஓங்கிவளர்ந்திருந்த அசோக, பன்னீர் மரங்களிலிருந்து மழைநீர் சொட்டிக்கொண்டிருந்தது.எதிரே இருந்த மணிக்கூண்டு பிள்ளையார் கோவிலின் மணியோசைக் கேட்கிறது.தேர்நிலையில் சற்று நின்றார்.

ஆலயத்தினுள்ளிருந்து சிறுவன் அம்மாவின் கையை உதறி ஓடிவந்து சாலைஓரத்தில் தயங்கி நின்றான். கோயில் குருக்களின் மகன்தான் என கண்டுகொண்டார்.அவர் இருபுறமும் வாகனங்கள் வருகிறதா என்று பார்த்தார்.கோரைமுடி நன்குபடிந்து திருநீற்றுக்கு மேல் நெற்றியில் ஒட்டியிருந்தது.நீளவாக்கு முகம்.வெள்ளை டீசர்ட்.அவன் எதையோ எதிர்பார்த்து வலப்புறம் ஓட அம்மாவின் கைகளில் சிக்கிக்கொண்டான்.

அம்மாவா! நாமளா முடிவுபண்ணிக்கலாமா? அம்மாதான் என்று அவர் உள்மனம் சொல்ல சாலையைப் பார்த்து நடந்தார்.இரும்புக்கடையின் முன் நிற்கும் குட்டிவேம்பை தொட்டுப்பார்த்து எப்படியோ வளரப்பிடாதுன்னு தோணிடுச்சு என்று அதன் கிளையை அசைத்துவிட்டு நடந்தார்

பாலக்கரையில் கடைகள் எதுவும் திறக்கப்படாமல் இருப்பதை பார்ப்பதற்கு சுட்டிநாய்க்குட்டி உறங்குவதைப்போல இருந்தது.விஸ்வா அந்த ஐஸ்பேக்டரி முன் நிற்கிறான்.வளையும் இளம்மூங்கில் என உயரமாக.பள்ளி சீருடையில் சற்று முதுகை குனித்துக்கொண்டு சிரிக்கிறான்.கையில் இளம்சிகப்புநிற குச்சிஐஸ்.கைகால்கள் நிலையில்லாமல் பதின்வயதிற்கே உரிய குதூகளிப்பில் அசைந்து கொண்டிருக்க எண்ணெய் மின்னும் முகத்தை திருப்புகிறான்.இவர் குடையை இறுக்கிப்பிடித்தபடி கனமான கால்களை எடுத்து வைத்து நடக்கத்தொடங்கினார்.பாதையெங்கும் ஈரம்.

பாலக்கரைக்கு இடதுபுறம் நடந்து சின்னஏரியின் பின்புறம் வந்திருந்தார்.நீர் நிரம்பி அலையடிக்க மினுமினுத்துக் கிடந்தது.கழிவுகள் சேர்ந்து நாற்றமடிக்க மூக்கைப்பொத்திக்கொண்டு வேகமாக நடந்தார்.பாதிக்கரையைக் கடந்ததும் நாற்றம் குறைந்தது.அந்த மருத்துவமனையின் பின்புறம் நின்று தலையுயர்த்திப் பார்த்தார்.அது ஐந்துதளமாக உயர்ந்திருந்தது.பல ஆண்டுகளுக்குமுன்பு இதுதான் வாழ்வின் இலக்காக இருந்தது.யாருடைய இலக்கோ யாரோலோ நிறைவேற்றப்படுகையில் அது யாருடையது? என்று நினைத்தபடி நடந்தார்.

“நம்ம ஹாஸ்பிட்டல கிருஷ்ணாக்கு குடுக்கப்போறீங்களா டாடி,”என்ற விஸ்வாவின் கம்மிய குரல் கேட்டது.அப்பொழுது அவன் சிகிச்சையிலிருந்தான்.நீண்டமுகத்தில் மென்தாடியிருந்த இடங்கள் வற்றத்தொடங்கியிருந்தன.

கல்லூரியில் மருத்துவிடுப்பெடுத்து வந்தவன் வேறொருவன்.தீவிரமான கண்கள்,நீண்டமுகத்தில் மினுமினுப்பும்,உயர்ந்த சதையில்லாத உடலும்,புன்னகையை ஔித்து வைத்திருக்கும் இதழ்களுமாக காண்பவர்களின் கண்களுக்குள் நிற்பவன்.

ஏரியைக்கடந்து முசிறி பிரிவுப்பாதையை வந்தடைந்ததும் திரும்பிவிடலாம் என்று நிமிர்ந்து பார்த்தார்.பெருமாள் மலைக்குப்பின்னாலிருந்து சூரியன் எழுந்துகொண்டிருந்தான்.சற்றுநேரம் நின்றுவிட்டு நடந்தார்.

எம்.ஆர்.ஐ ஸ்கேனிலேயே நம்பிக்கையிழக்கத் தொடங்கியிருந்தாலும் ஆவேசம் விடாமல் அமெரிக்கா வரை போகச்செய்தது.திரும்பி வரும்போது மகனை, மருத்துவமனையை, வீட்டை இழந்திருந்தார்.வீட்டிலேயே இருந்தார்.வீட்டை வாங்கியவர் ஒருநாள் தன் உடல்நலப்பிரச்சனையை சொல்லித்தீர்க்க வந்தார்.

அவர்,“இனிமே தனியா இங்கருக்க முடியாதுங்க டாக்டர்.பையனோடதான்.வீட்ட வாடகைக்கு விடலான்னு இருக்கேன்.கைமாறிப்போனாலும் உங்கவீடு.இருக்கனுன்னு நெனப்பிருந்தா இருந்துக்குங்க,”என்றார்.

விட்டுட்டு வந்தாச்சு இனிமேல் அந்த திண்ணைகளில் சாவகாசமாக அமரமுடியுமா? பரந்துகிடக்கும் உள்முற்றத்தில் தனியாக இரவுபடுத்தால் உறக்கம் வருமா? பின்கிணற்றின் நீர் சுவைக்குமா? என்ற எண்ணங்கள் அவரையும் துணைவியையும் வதைத்தன. வீட்டை வேண்டாம் என்று சொல்ல முடியாமல் அல்லாடிய மனங்களுக்கு வீட்டை மருத்துவமனையாக்கலாம் என்ற எண்ணம் இந்தஅடிவாரத்தில் வைத்துதான் தோன்றியது.

“நம்ம வீட்ட வாடகைக்கு எடுத்து ஹாஸ்பிட்டலா மாத்திண்டா என்ன?”என்றார்.

அந்த அம்மாள்,“நல்ல விஸ்தாரமான இடம்தான்..”என்றாள்.

இரண்டுநாட்கள் யோசனைக்குப்பிறகு கணேசனை, ஜான்சியை அழைத்தார்.அடுத்தப்பத்துநாட்களில் மருத்துவம் பார்த்துக்கொள்ள ஆட்கள் வரத்தொடங்கினார்கள்.அந்தவீட்டின் மகிமையோ என்னவோ சுற்றுவட்டார கிராமத்து ஆட்கள் வந்து கொண்டேயிருந்தார்கள்.நின்று நிதானித்து மருத்துவம் பார்த்தார்.தொடர்ந்து வந்தவர்களின் உடலை மனதை புரிந்துகொள்ள முயலும் சாகசம் அவருக்குப் பிடித்திருந்தது.

காலையுணவை முடித்து மருத்துவமனையின்முன் காரை நிறுத்தி இறங்கியவர் பெயர்ப்பலகையை பார்த்தார்.விஸ்வநாதன் மருத்துவமனை.அந்தப்பயலை இன்னும் சிலநாட்களுக்கு மனதிலிருந்து பிடுங்கி எறியமுடியாது என்று நினைத்துக் கொண்டு படிகளில் ஏறினார்.

திண்ணையை அடைத்து போடப்பட்ட கேட்டினுள் கிடந்த பெஞ்சுகளில் ஆட்கள் எழுந்து நின்றார்கள்.அவர் புன்னகைத்துக் கடந்தார்.அந்தத்திண்ணைகளில் விஸ்வா பெம்மைகளின் பின்னால் மண்டியிட்டுத் தவழ்ந்தான்.

முன்கட்டிலிருந்த மருந்தகத்திற்கு வந்தார்.கணேசனிடம் பேசியபடி நின்றார்.அங்கு விஸ்வா புத்தகத்துடன் அமர்ந்திருந்தான். உள்ளே விஸ்தாரமான பகுதியில் கிடந்த மேசைமுன் அமர்ந்தார்.பக்கவாட்டில் திரைகளால் பிரிக்கப்பட்டு படுக்கைகள்.அவருக்கு இடப்புறம் உள்முற்றத்தில் ஜான்சி மேசையில் அமர்ந்திருந்தாள்.பக்கத்திலிருந்த சீலாவை அழைத்தார்.

கழுத்தைப்பிடித்துக்கொண்டு தன்முன் அமர்ந்திருந்த பெண்ணிடம், “அவ சொல்லிக்கொடுக்கற பயிற்சிய தினமும் காலையிலயும் சாயறச்சையும் செய்யனும்.செல்போனை கொஞ்சமாச்சும் கையிலருந்து எறக்கனும்,”என்றார்.அடுத்ததாக பெஞ்சில் காத்திருந்த சிறுமி சிரித்தாள்.

“இங்கவா அம்மணி..உனக்கென்ன? ஸ்கூலுக்கு மட்டம் போடறதுக்காக இங்க வந்திருக்கியா?”என்று அவளை அழைத்தார்.அவள் அவர் பக்கத்தில் வந்து நின்றாள்.

“என்ன?”என்று ரகசியமாகக் கேட்டார்.

“அம்மாட்ட சொல்லக்கூடாது,”என்றாள்.

“ம்,”

அவர் நெற்றியிலிட்டிருந்த நாமத்தைக்காட்டி, “பீம் இந்தமாதிரி வரஞ்சிருந்தான்,”என்று வாய்மூடி சிரித்தாள்.

கும்பல் குறையாமல் வந்துகொண்டிருந்தது.பெரும்பாலும் வைரஸ் காய்ச்சல்.அவர்களிடம், “பாராசிட்டமால் போட்டு பாத்துட்டு வாங்கன்னு சொன்னா கேக்கறதில்ல,”என்று உரிமையோடு வேகமாக சொல்லிக்கொண்டிருந்தார்.வீடு மருந்துவமனையான இந்த பதினைந்து ஆண்டுகளில் இவர்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.

வலிப்பிரச்சனைகளுடன் வந்தவரிடன், “மருந்து சாப்பிடு.சீலா சொல்லிக்கொடுக்கற பயிற்சிகள செஞ்சா என்ன?அதுக்கு முன்னாடி உன்னோட மகளுக்கு வரன் பாரு.எல்லா வலியும் காணாப்போயிடும்,”என்று தோளில் தட்டினார்.

வெளியிலிருந்து, “டோக்கன் முடிஞ்சுது சார்,”என்ற குரல் கேட்டது. சாய்ந்தமர்ந்தார்.ஜான்ஸி சிற்றுண்டியுடன் வந்தாள்.படுக்கையிலிருப்பவர்களின் விவரங்களை சொன்னாள்.

“என்னாச்சு சார்..நீங்க இன்னிக்கி எங்கக்கூட சரியா பேசல,”

“அசதிம்மா..”

“டாக்டர் ஃபீஸ் இல்லன்னுதான் டக்குன்னு எதுன்னாலும் ஓடி வந்திடறாங்க.நீங்க கொஞ்சமாச்சும் சார்ஜ் பண்ணினா ரீசனபிலான கூட்டம் வரும் சார்,”

அவர் புன்னகைத்தபடி எதிரேயிருந்த விஸ்வாவின் படத்தைப் பார்த்தார்.ஜான்ஸி படுக்கையிலிருந்தவர்களிடம் சென்றாள். உண்ணாமல் எழுந்து பின்பக்கம் வந்தார்.கழிவறையிலிருந்து வெளியே வந்தவர் இவரைக்கண்டு முகம் மலர்ந்தார்.

“வீட்டம்மாவ நாளக்கி கூட்டிப்போலாம்.ரொம்ப வயக்காட்டுல போட்டு வறுக்காதய்யா,”என்றபடிநடந்து வந்து துளசி, திருநீற்றுப்பச்சை செடிகள் செழித்த மதிலருகே நின்றார்.இலைகளெல்லாம் மழைநீர் கழுவிய பசுமையிலிருந்தன.

விஸ்வா குளிக்க அடம் செய்து உள்ளாடையுடன் கிணற்றை சுற்றி ஓடிவந்து கொண்டிருந்தான்.அவன் பாட்டி பின்னால், “ஓடி விழுந்திறாத..” கெஞ்சிக்கொண்டிருந்தாள்.

தலையை மெதுவாக உலுக்கிக்கொண்டார்.அவருக்குத் தெரியும் இது எங்கு செல்லும் என.எத்தனையோ நாட்கள் இப்படியாகக்கிடந்து மீள்பவர்தான்.அந்த நேரங்களில் மருத்துவஅறிவு சுமையா என்ற கேள்வி தலைமேல் கனக்கும்.அந்த எண்ணம் தரும் சோர்வு மேலும் உறக்கத்தக்கெடுக்கும்.உறக்கம் கெட்ட வேளைகளில் அவன் அவரைச் சுற்றி வியாபிப்பான்.

மதிலின் சிறுவாயிலைத் திறந்தார்.சுமையேற்றிய மாட்டுவண்டி மெதுவாக நகராட்சி சந்தைக்கு நகர்ந்து கொண்டிருந்தது.வண்டியோட்டி துண்டால் மிகமெல்ல மாடுகளை தட்டிக்கொடுத்து நடத்தினான்.

“ந்தா..ந்தா..வந்திருச்சு.எடம் வந்திருச்சு,”என்று மாடுகளுடன் பேசிக்கொண்டிருந்தான்.

திரும்பிநின்றார்.ஈரத்தரையில் பாசிபடர்ந்திருந்தது.

“டாடி..தயிர்லேந்து வெண்ண வராப்ல..மழத்தண்ணியிலந்து இந்தபாசி வந்து ஒட்டிக்குமா..

“ம்..இருக்குமாயிருக்கும்..”

“அப்ப யாருப்பா மழத்தண்ணியக்கடையறா..”

“ஜகன்மாதா…சுத்தறாலான்னோ..”

“அவளாட சேந்து நாமாளுந்தானே..”

“ஆமா..”

“எதுக்குப்பா…”

“ஜனிச்சுட்டோமோல்லிய்யோ கண்ணா..” விஸ்வா தொடர்ந்து, “அப்ப ஜனிக்காதவாள்ளாம் காத்தில இருக்களா மழபேஞ்சா வருவளா..”கேட்டுக்கொண்டேயிருந்தான்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவர் மனம் கேள்விகள் கேட்பதை நிறுத்தியது. கண்களை மூடித்திறந்தார்.முன்னால் கொய்யா அங்கங்கே இலைமறைவில் கனிந்திருந்தது.காய்களும் பிஞ்சுகளுமாய் இலைகளுக்குப்பின்னே காத்திருந்தது.

ஜான்சி அவரை அழைத்துக்கொண்டே வருவது கேட்டது.அவர் உள்நோக்கி நடந்தார்.தயங்கியப்பின் தென்கிழக்குப்பக்கம் சென்றார்.அறை வாயிலருகே நின்றார்.

விஸ்வாவிடம் அம்மா, “நன்னா சாப்பிடு கோந்தே,”என்று தலையைத்தடவினாள்.

அதே இடத்தில் கிடந்த விஸ்வாவின் பழைய டேபிளில் தோட்டத்தை வேடிக்கைப்பார்த்தபடி சீலா சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.இவரைக்கண்டதும் கண்களை விரித்தாள்.“நல்லா சாப்பிடும்மா..”என்று திரும்பினார்.

அலைபேசியின் அழைப்பு நடையை துரிதப்படுத்தியது.டாக்டர் ரவிதான்.மருத்துவமனைக்கு வர முடியுமா என்று கேட்டார்.ரவி மனசுக்கு அகப்படாத கேஸா இருக்கும் என்று காரில் ஏறினார். குழந்தைகள் மருத்துவர் டாக்டர் இளங்கோவின் அழைப்பு வந்துக்கொண்டிருந்தது.வெளியே மழைமுடிந்த வெள்ளை வெயில்.மழையை அர்த்தப்படுத்தும் வெயில்.

குளிர் உறையும் கனல் – தன்ராஜ் மணி சிறுகதை

அந்த நள்ளிரவில் “தப் தப் தப்” என்று செருப்பு முகத்தில் அறையும் ஓசை தெரு முக்கு திரும்பும் போதே என் வண்டி சத்தத்தை தாண்டி கேட்டது.

செல்வத்தை அவன் மச்சான் நடு ரோட்டில் நிற்க வைத்து செருப்பால் அடித்துக் கொண்டிருந்தான். அவன் மச்சானை விலக்கி வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ரத்தம் வழிந்து கொண்டிருந்த உதட்டில் தண்ணீர் அடித்து துடைத்துவிட்டு செல்வத்தை அவன் வீட்டு முன் படிக்கட்டில் உட்கார வைத்தேன்.

எப்படி இருந்த பையனிவன்

முதலில் இவனை என் வீடியோ கடையில் வைத்துதான் பார்த்தேன், இருந்தால் பத்து, பன்னிரெண்டு வயதிருந்திருக்கும். அப்பொழுது நான் சிவில் எஞ்சினியரிங் டிப்ளமா முடித்துவிட்டு வேலை எதுவும் கிடைக்காததால் அரிசிபாளையம் மெயின் ரோட்டில் சின்னதாக ஒரு கடை பிடித்து வீடியோ காசேட் லைப்ரரி நடத்திக் கொண்டிருந்தேன்

இவனும் குருவியும் ஒரே போன்றிருந்த  ஹீரோ புக் சைக்கிளில் வந்து கடை முன்னால் இறங்கினார்கள். இன்னும் நினைவிருக்கிறது இரண்டும் சிகப்பு கலர்

குருவிதான் உள்ளே நுழையும்போதே கேட்டான், “அண்ணா, ஈ டி எக்ஸ்ட்ரா  டெரஸ்ரியல் இருக்கானா,” என்றான்.

இருக்கு,” என்றேன்

இருவரும் சந்தோஷமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அண்ணா குடுங்கன்னா”

எங்க குடியிருக்கிங்க,” என்றேன்

இங்கதானா, அவ்வை மார்க்கெட் முன்னாடி செய்யட் காதர் ஸ்டீரிட்”

அங்க எந்த வீடு” என்றேன்

எட்டாம் நெம்பர், சுந்தரம் மில்ஸ் வீடு, இவன் பத்தாம் நெம்பர் பருப்பு மண்டி வெச்சிருக்காங்களே வரதராஜன்” 

ராகவன் தம்பியா நீ?”

ஆமாண்ணா,” என்றான் குருவி

சரி, அவன் பேர்லயே எழுதிக்கிறேன். டென் ரூபீஸ், ரெண்டு நாள்ல திருப்பி கொண்டு வந்திரணும் இல்லாட்டி எக்ஸ்ட்ரா கொடுக்கணும்” என்றேன்

சரிணா , நீங்க எனக்கும் , செல்லுக்கும் தனியாவே அக்கவுண்ட் போடுங்க” என்றான் குருவி.

ஏண்டா” என்றேன்.

சாமுண்டி கடைல எங்கண்ணனுக்கும் சேத்து நாங்க காசு கொடுத்தோம். வேணும்னே காசு குடுக்க மாட்டான். அபுறம் என் பாக்கெட் மணி போவும், நீங்க என் பேர்லயும் செல்லு பேர்லயும் ஒரு அக்கவுண்ட் போடுங்க,” என்றான்.

நான் சிரித்துக்கொண்டே, “சரி பேரச் சொல்லு,” என சிட்டையில் பேரும், அட்ரசும் எழுதிக் கொண்டேன்.

இவ்வளவு பேச்சும் நடந்து கொண்டிருக்கையில் செல்லுகடையில் உள்ள காஸெட்டுகளை ஒவ்வொன்றாய் நின்று பார்த்து கொண்டிருந்தான்ஒரு வார்த்தையும் பேசவில்லை

காஸெட்டை கொடுத்தேன்

குருவி “டேய்,” என்றான்.

செல்லு திரும்பி பார்த்துவிட்டு, பாக்கெட்டில் கைவிட்டு ஐந்து ரூபாய் எடுத்து கொடுத்தான்.

குருவி தன் பாக்கெட்டில் இருந்து ஐந்து ரூபாய் எடுத்து இரண்டையும் என்னிடம் கொடுத்தான்.

இது நல்ல டிமாண்ட்ல இருக்க படம், பாத்துட்டு உடனே குடுத்துறனும்,” என்றேன்

சர்ணா, தாங்ஸ்ணா, வாடா” என்றுவிட்டு வெளியேறினான்.

நின்ற இடத்தை விட்டு நகராமல், “குருவி இங்க வா,” என்றான் செல்லு.

குருவி மீண்டும் கடைக்குள் வந்து செல்லின் அருகில் நின்றான். சிட்டையை உற்றுப் பார்த்தேன். சிட்டையில் இருக்கும் பேருக்கும் குருவிக்கும் ஒரு அட்சரம் கூட சம்மந்தமில்லை

டிஸ்ப்ளேவில் இருந்த க்ரேஸி பாய்ஸ் ஆப் த கேம்ஸ் விடியோ காஸெட் அட்டையை சுட்டினான், “இதுவும் எடுக்கலாமா?”  என்றான்

டேய், மொதல்ல இதப் பாப்பம் வாடா,” என்று இழுத்துக் கொண்டு போனான் குருவி.

அதன் பிறகு வாரத்திற்கு இரண்டு முறையாவது இருவரும் கடைக்கு வந்து விடுவார்கள்

ஆங்கில காமெடி மற்றும் சிறுவர் படங்கள் மேல் இருவருக்கும் பெரும் ஆர்வம். அவர்களுக்காகவே நான் பிரிண்ட்களை வரவழைக்கும் அளவுக்கு ரெகுலர் கஸ்டமர்கள் ஆனார்கள். குருவி விடாமல் பேசிக் கொண்டே இருப்பான், செல்லு பேசாமல் புன்னகையுடன் உடன் நிற்பான்ஆனால் சில வாரங்களிலேயே எனக்கு தெரிந்தது செல்லுதான் படங்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கிறான் என, அதில் ஒரு தொடர்ச்சியும் நேர்த்தியும் இருக்கும். ஒருவன் இருவருக்கும் சேர்த்து பேசுகிறான் இன்னொருவன் இருவருக்கும் சேர்த்து யோசிக்கிறான் என நினைத்து கொண்டேன்.

செல்லு மட்டுமல்ல அவன் பிற நண்பர்கள், அவன் வீடு, வீதியாட்கள் என எல்லோருமே குருவியை குருவி என்றுதான் அழைத்தார்கள் என்பது தெரிய எனக்கு சில மாதங்கள் ஆனது. யாருக்கும் பெயர்க் காரணம் தெரியாது , அவன் பெயரில் அவனை அழைத்து நான் யாரையும் பார்த்ததில்லை.

பள்ளிக்கூடம் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் என் கடையில் எப்பொழுதும் இருவரும் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் படம் எடுத்தால் சிட்டையில் எழுதுவதெல்லாம் முதல் வருடத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அவர்களுக்கு வேண்டிய படங்கள் கடையில் இல்லை என்றால் அவர்களே கடை போனில் என் சப்ளையர்களை அழைத்து  ஆர்டர் போட்டு வாங்கி விடுவார்கள். அவர்களுடைய பள்ளி நண்பர்கள் அத்தனை பேரும் வாடிக்கையாக வாங்கும் கடையானது என் கடை. மற்ற பெரிய கடைகள் எல்லாம் பெரியவர்களுக்காக படங்கள் எடுத்து வைக்க இவர்கள் இருவரால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் காஸெட் எடுக்கும் கடையாக என் கடை மாறிப்போனது.  

வேறு ஏரியாக்களில் இருந்தெல்லாம் தேடி வந்து வாங்க ஆரம்பித்தனர். சேலத்தில் பேர் சொன்னாலே தெரியும் வீடியோ கடைகளில் என்னுடையதும் ஒன்றானதுகடைக்குள் கிரிக்கெட் உபகரணங்கள் வைப்பது, நண்பர்களோடு உட்கார்ந்து அரட்டை அடிப்பது என இருந்து அவர்கள் பனிரெண்டாவது வகுப்பு போகும் போது ரோட்டில் போகும் பெண்களை கடைக்கு வெளியில் நின்று கொண்டு ரூட் விடுவது என  பள்ளிக் கூடம் போகாத பிற நேரம் முழுதும் என் கடையே கதி என கிடந்தனர் இருவரும்

அவர்கள் பார்க்கும் படங்களும் சிறுவர் படங்களில் இருந்து லாரன்ஸ் ஆப் அரேபியா, ப்ரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் என போய், பேஸிக் இன்ஸ்டின்க்ட் வழியாக இரண்டு மணி நேர முழு நீள நீலப்படம் பார்ப்பது வரை முன்னேறியிருந்தது

என் சப்ளையர் ஒருவன் கேபிள் டி.வி என ஒன்று மெட்ராஸில் புதிதாக வந்திருப்பதாகவும், இனி படமெல்லாம் அதில்தான் ஓடும், வீடியோவெல்லாம் போய்விடும் என்றான். அவன் விபரம் தெரிந்தவன் என்பதால் அவனை முழுமையாக நம்புவது என முடிவெடுத்தேன். அவனிடமே அதற்கான மெட்டீரியலை வாங்கி, கடையை கார்ட்போர்ட் சுவர் வைத்து இரண்டாய் தடுத்து பின் பக்கம் கேபிள் டி.வி சாதனங்களை வைத்துவிட்டு, முன் பக்கம் வீடியா லைப்ரரியாக மாற்றினேன். வீடு வீடாக நடையாய் நடந்து, “தினம் ஒரு படம் போடுவோம்கா, இருவத்தஞ்சு ரூபாதான் மாசத்துக்கு, ரெண்டு மாசம் பாத்துட்டு காசு குடுங்கக்கா,” என கொஞ்சி கூத்தாடி கேபிள் வயர் இழுத்துக் கொண்டிருந்த நேரம். இவர்கள் கடையில் இருந்தால் கல்லாவை பூட்டாமல்தான் வெளியே போவேன்

கஸ்டமர் கொடுக்கும் காசை வாங்கி செல்லும், குருவியும்தான் கல்லாவில் போடுவார்கள். தெரியாமல் அவர்கள் கைக் காசை  போட்டிருப்பார்களே ஒழிய ஒரு நாளும் கல்லாவில் காசு குறைந்ததில்லைபல பேர் அவர்கள் இருவரும் நடத்தும் கடை அது என என்னிடமே சொல்லும் அளவுக்கு கடையையும் அவர்களையும் பிரிக்க முடியாதிருந்தது.

ஒரு நாள் கேபிள் கான்வாஸிங் போய் விட்டு கடைக்கு வர மிக தாமதமாகிவிட்டதுவெளியில் யரும் இல்லை, கேபிள் தடுப்புக்குள் இருவரின் பேச்சு குரல் மட்டும் கேட்டது

நீலப்படம் ஏதாவது பார்க்கிறார்கள் போலவென நினைத்து கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றேன். குருவி கையில் ஒரு புல்லட் பியர் பாட்டிலை வைத்துக் கொண்டிருந்தான். செல்லு நான் உள்ளே வருவது கூட தெரியாமல் பாட்டிலையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கோபத்தில் பாய்ந்து பாட்டிலை பிடிங்கினேன்.

ஏற்கனவே பாதி குடித்துவிட்டிருந்தனர்.

பாபுனா,” என்றான் செல்லு, பாட்டிலுக்கு கையை நீட்டியபடி.

ஏற்கனவே உங்க ரெண்டு பேர் வீட்லயும் நீங்க படிக்காம இங்கயே உக்காந்திட்டு இருக்கிங்கன்னு என்ன திட்றாங்க. இன்னும் இதயெல்லாம் வேற பண்ணிங்கன்னா நாந்தான் உங்களுக்கு ஊத்தி உட்றேனு சொல்லுவாங்க. இன்னையோட சரிடா, இனிமேலு கடப்பக்கமே வராதிங்க. தயவு செஞ்சு கெளம்புங்க மொதல்ல,” என்றேன்

ண்னா இன்னிக்கிதான் ட் ரை பண்லாம்னு வாங்னோம்,” என்றான் குருவி

டேய், போதும், கெளம்புங்க மொதல்ல” 

போறணா, குடிக்காதிங்கன்னு சொல்ணா, கடைக்கு வராதிங்கன்னெல்லாம் சொல்லாத,” என்றான் செல்லு.

பெரிய மனுசா, பன்னண்டாவது படிச்சு மொதல்ல பாஸ் பண்றா. கட இங்கயேதான் இருக்கும், போ,” என்றேன்.

ணா, பாதி பாட்டிலு அப்படியே இருக்கு,” என்றான் குருவி தன் வழக்கமான சிரிப்போடு.

டேய் அடிச்சே புடுவேன், போயிரு பேசாம,” என்றுவிட்டு விடு விடுவென கடைக்கு முன் வந்து சாக்கடையில் மீதி பாட்டிலை கொட்டினேன்.

உண்மையிலேயே கோபமாக இருக்கிறேன் என்பது புரிந்து பேசாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

அடுத்த நாளே வழக்கம் போல் வந்து நின்றனர்.

நான் பேச வாயெடுப்பதற்குள், “உனக்கு நாங்க இங்க குடிக்க கூடாது அவ்ளோதான, குடிக்க மாட்டோம். நீயும் அட்வைஸ் மழைல எங்கள முக்கி எடுக்காத,” என்றான் குருவி.

அதற்குள் ஒரு சிறுவன் வந்து “செல்லுணாஹனி ஐ ஷ்ரங்க் த கிட்ஸ் இருக்கானா” என்றான்.

செல்லு தலையை ஆட்டிவிட்டு கவுண்டர் தட்டியை தூக்கிவிட்டு உள்ளே வந்து கீழிருந்த காஸட்டை எடுத்து சிறுவனிடம் கொடுத்தான்.

காப்பி கம்மியாதான் இருக்கு, போன தடவ மாதிரி லேட் பண்ண, பைன் போடுவேன்,” என்றான் செல்லு.

சர்ணா, உடனே குடுத்துர்ரன்னா. உன் கடைல இல்லாத படமே இல்லனா,” என்றான் சிறுவன் உற்சாகமாக

அவன் கொடுத்த பணத்தை வாங்கினான். கல்லா முன்னால் நின்று கொண்டிருந்த என்னை பார்த்து விலகச் சொல்லி தலையை காண்பித்தான். விலகினேன். கல்லாவை திறந்து காசை போட்டுவிட்டு அருகில் இருந்த சேரில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டான்.

நான் ஒன்றும் பேசாமல் கேபிள் இழுக்கும் பையனை கூட்டிக் கொண்டு தெருவில் இறங்கினேன். அதன் பிறகு ஒரு நாள் கூட அவர்களிருவரும் என் கடையில் வைத்து குடித்ததில்லைப்ளஸ் டூ தேர்வு, நுழைவு தேர்வுக்கு ராசிபுரம் கோச்சிங் என போகும் வரை கடைக்கு வருவதை குறைக்கவும் இல்லை.

இருவருக்கும் ரிசல்ட் வந்தது. என்ஜினியரிங் கட் ஆப் மார்க் இருவருக்கும் நூற்றி இருபதுக்கும் கம்மி. ஒரு வாரம் கடை பக்கமே வரவில்லை. ராகவன் தான் படம் எடுத்து போகும் போது இருவரும் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாகவும் அதுவும் ஒரே காலேஜில் சேர வேண்டும் என அடம் பிடிப்பதாகவும் சொன்னான். தமிழ் நாட்டில் சேர முடியாது, பெங்களூரில் பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்லிவிட்டு போனான்

இங்கயே இருந்தா உன் கடைல உக்காந்து பெஞ்ச தேச்சுகிட்டு உருப்படாமதான் போவானுங்க, அங்கயாவது போயி படிக்கறானுங்களானு பாக்கலாம்,” என்றான்.

எனக்கு சங்கடமாக இருந்தது.

ஒரு வாரத்தில் முகமெல்லாம் சிரிப்பாக இருவரும் கையில் ஒரு டெய்ரி மில்க் சாக்லேட் பாருடன் கடைக்குள் நுழைந்தனர். ஒருவன் கையை பிடித்து கொள்ள இன்னொருவன் ஒரு வில்லையை உடைத்து என் வாய்க்குள் திணித்தான்.

டும்கூர் சித்தகங்கால ரெண்டு பேருக்கும் சீட் போட்டாச்சு, அடுத்த வாரம் கெளம்பறோம்” என்றான் குருவி.

அப்படியென்னடா இன்ஜீனியரிங்கே வேணும்னு அடம் பிடிச்சிங்களாம்,” என்றேன்.

பி. டெக் முடிச்சிட்டு ஜி ஆர் ஈ எழுதி யூ எஸ் போயிருவோம் பாபுன்னா, அங்க போயி ஷாரன் ஸ்டோன் மாதிரி ஒரு பிகர கரெக்ட் பண்ணி செட்டில் ஆக வேண்டியதுதான். பக்கா ப்ளானிங்,” என்றான் குருவி வாயெல்லாம் பல்லாக, செல்லு என்னை பார்த்து கண்ணடித்தான்.

அதானே பாத்தேன். என்னடா உருப்பட்டுடிங்களோனு நெனச்சேன்,” என்றேன்.

போறதுக்குள்ள உன் கடைல என்னென்ன படம் இருக்குனு சொல்லிட்டு போறோணா இல்லாட்டி அல்லாடி போயிருவ,” என்றான் செல்லு பெரிதாக சிரித்தபடி.

நேரம் டா. வாங்க இன்னிக்கி என்னோட ட்ரீட் உங்களுக்கு”  

பாவா கடைக்கு கூட்டிச் சென்று அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்தேன்

பிச்சு போட்ட கோழி, புறா ரோஸ்ட், கல்டா, முட்டை ரோஸ்ட் என ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.

எங்கோ எனக்குள் இருந்த குற்ற உணர்வு இவர்களுக்கு சீட் கிடைத்ததில் குறைந்து நிம்மதியாய் இருந்தது. அவர்கள் சாப்பிடுவதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதன் பிறகு அவர்களை அதிகம் நான் பார்க்கவில்லை. கேபிள் வேலைகளில் மூழ்கிவிட்டதால் கடையில் வேறு ஆள் போட்டு விட்டேன். கடையில் நான் இருப்பதில்லை என்பதால் ஊருக்கு வரும் போது அவர்கள் கடை பக்கம் வருவது குறைந்தது. ஊருக்கு வந்தால் சாமுண்டி செட்டியார் கடை வாசலில் நின்று நண்பர்களுடன் சிகரெட் குடிக்கிறார்கள் , கேப்டன் பங்க் பக்கத்தில் உள்ள பாரில் குடிக்கிறார்கள் என என் காதுக்கு செய்தி வந்து கொண்டிருந்தது. அவர்களை பார்ப்பதே எப்போதாவது என ஆகிவிட்டதால் பார்க்கும் போது அவர்களிடம் அதையெல்லாம் நான் கேட்பதில்லை.

ஓரு நாள் இருவரும் நான் கடை மூடும் நேரத்தில் இரண்டு சிகப்பு கலர் புத்தம் புது யமஹா பைக்கில் வந்திறங்கினர்.

எப்படா வந்திங்க, என்ன புது பைக்கா?” என்றேன்

பைக் எடுக்கறதுக்குனே வந்தோணா,” என்றான் குருவி.

ஊருக்கு எடுத்திட்டு போறிங்களா?” என்றேன்.

ஆமாண்ணா, முடியவே முடியாதுனாங்க அழுது அடம் பிடிச்சு வாங்கிட்டோம்ல,” என்றான் குருவி.

டேய் பாத்து ஓட்டுங்கடா,” என்றேன், வண்டியை சுற்றி வந்து பார்த்துக் கொண்டே.

ஓட்டி பாருணா,” வண்டியை விட்டு இறங்கி சாவியை கையில் கொடுத்தான் செல்லு.

ஒரு ரவுண்டு ஓட்டி விட்டு கொடுத்தேன்.

என்னுதையும் ஓட்டி பாரு,” என்று குருவி அவன் வண்டியை கொடுத்தான்.

அதையும் ஒரு ரவுண்டு ஓட்டி விட்டு கொடுத்தேன்.

நெம்பர் கூட ஒன்று போலவே இருந்தது இரு பைக்கிலும், ஒரே ஒரு எண் மட்டும் வித்தியாசம்.

லேட்டாச்சு. செந்திலுகிட்ட காட்டணும் இன்னும். கிளம்பறோம்னா, அடுத்த தடவ வரும் போது வரோம்,” என்றான் குருவி

இருவரும் ஒருவர் பின் ஒருவர் காற்றை கிழித்துக் கொண்டு வேகமாக போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன்.

ஏதோ ஒரே நாளில் அரை டவுசரில் இருந்து பாண்ட்டுக்கு அவர்கள் மாறிவிட்டது போல இருந்தது எனக்கு

அதன் பிறகு குருவியை நான் மார்ச்சுவரியில் பிணமாகத்தான் பார்த்தேன் , மூன்று மாதம் கழித்து.

லீவுக்கு வந்தவர்கள் பாரில் சென்று குடித்துவிட்டு, நள்ளிரவு தாண்டி போதையில் அண்ணா பூங்கா பெரியார் மேம்பாலம் முதல் ஐந்து ரோடு வரை டூ வீலரில் ரேஸ் விட்டு விளையாடி இருக்கிறார்கள்அப்பொழுதெல்லாம் இரவு பதினோரு மணிக்கு மேல் அவ்வளவு பெரிய ரோடு வெறிச்சோடி போய் கிடக்கும்மூன்றாவது முறை ரேஸ் விடும்போது குருவி கட்டுப்பாடு இழந்து வண்டியை சாலைக்கு நடுவில் இருந்த டிவைடரில் ஏற்றிவிட்டான். வண்டியில் இருந்து தெறித்து, விளக்கு கம்பத்தின் மேல் தூக்கி எறியபட்டிருக்கிறான்.   தலை முதலில் கம்பத்தின் மேல் மோதி, பதினைந்தடி உயரத்தில் இருந்து தலைக் குப்புற ரோட்டில் விழுந்திருக்கிறான்

செல்லு உலுக்கி எழுப்பப் பார்த்திருக்கிறான். தலையில் இருந்து பெருகிய ரத்தத்தை பார்த்து பயந்து மேம்பால இறக்கத்தில் இறங்கி அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு ஓடி ஆட்களை கூட்டி வந்திருக்கிறான்.

குருவியின் உயிர் அவன் தரையை தொடும் முன்பே பிரிந்துவிட்டிருக்கிறது. நேராக மார்ச்சுவரிக்குதான் எடுத்து சென்றிருக்கிறார்கள்.

காலையில் தகவல் தெரிந்தவுடன் கடையை சாத்திவிட்டு சென்றேன். ராகவனுக்கு போலீஸ், ஆஸ்பிடல் சம்பிரதாயங்களுக்கெல்லாம் ஒத்தாசை செய்தேன். குருவியின் உடலை ஆஸ்பிடலில் இருந்தே காக்காயன் சுடுகாட்டுக்கு எடுத்து சென்று புதைத்தோம்

வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு உட்காரும் போதுதான் செல்லின் ஞாபகம் வந்தது

அவனை ஆஸ்பிடலில் பார்த்ததாகவே நினைவில்லை

வண்டியை எடுத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்றேன், அவன் அங்கு இல்லை. சாமுண்டி செட்டியார் கடைக்கு சென்றேன். அவன் நண்பர்கள்தான் நின்று தம்மடித்து கொண்டிருந்தார்கள். என்னை பார்த்தவுடன் ஒருவன் என் அருகில் வந்தான்

செல்லு இங்க வர்லணா. கீதாலாயா தியேட்டர்கிட்ட பாத்ததா ராஜேஷ் சொன்னான்,” என்றான்.

குடிச்சிருந்தானா,” என்றேன்,

சற்று தயங்கி விட்டு, “காலைல இருந்தே நிறைய சிரப் அடிச்சிட்டு இருந்தாண்ணா,” என்றான்.

எனக்கு பகீரென்றது. போதைக்காக ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் இருமல் மருந்தை சில மாத்திரைகளோடு சேர்த்து குடிக்கும் பழக்கம் காலேஜ் மாணவர்களுக்கு அந்த சமயத்தில் இருந்தது. செல்லு அதைச் செய்வான் என நான் நினைக்கவே இல்லை.

கீதாலாயா தியேட்டர் போனேன், அவன் வண்டி டூ வீலர் ஸ்டாண்டில் இருந்தது. தளபதி படம் ஓடிக் கொண்டிருந்தது

படம் முடியும் வரை அவன் வண்டிக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன்.

வந்தவன் என்னை பார்த்து வழக்கம் போல் புன்னகைத்தான்.

ண்ணா , சூப்பர் படண்ணா, செக்க காமிரா வொர்க்,” என்றான்.

சாப்டியா?”

இல்லணா”.

வா போய் சாப்புடலாம்”.

ம்”.

நியூ ரெஸ்டாரென்ட் போலாம், நீ முன்னாடி போ”

அவன் தெளிவாகத்தான் ஓட்டிக் கொண்டு போனான், நான் எங்கே விழுந்து விடுவானோ என்ற பயத்தில் அவன் பின்னாலேயே இடை வெளி விடாமல் தொடர்ந்தேன்.

போஸ் மைதானம் பாலம் தாண்டி, ஹென்றி அன் ஊல்ஸி மணிக் கூண்டுக்கு முன் திரும்பி ஹோட்டல் வாசலில் வண்டியை நிறுத்தினான்

அவன் போதையில் இருப்பதற்கான ஒரு அறிகுறியும் இல்லை

நெய் புரோட்டா ஆர்டர் செய்தான். முகத்தில் கவலை ரேகையே இல்லை, அமைதியாக உட்கார்ந்திருந்தான். புரோட்டா வந்தது, இரண்டு வாய் சாப்பிட்டவுடன் ஒமட்டலுடன் வாஷ் பேசினுக்கு ஓடி வாந்தி எடுத்தான்

எடுத்து விட்டு வந்தவன், வேணாம் என்பது போல் தலையாட்டிவிட்டு வெளியே வண்டியில் போய் உட்கார்ந்து கொண்டான்.

நானும் பாதியிலேயே எழுந்து கொண்டு பில்லை கொடுத்து விட்டு அவனருகில் போய் நின்றேன்.

சற்று நேரம் கழித்து “ அழுதியாடா,”  என்றேன்

அவன் ஒன்றும் சொல்லவில்லை

நான் ஒரு கிங்ஸ் பற்ற வைத்துக் கொண்டு அவனுக்கொன்று கொடுத்தேன்.

அழுதுரு செல்லு,” என்றேன்.

அதற்கும் அவன் ஒன்றும் சொல்லவில்லை, புகையை ஆழ இழுத்து கொஞ்சமாக வெளியே விட்டு கொண்டிருந்தான்.

நான் புகையை நுரையீரலுக்குள் இழுத்து தேக்கி கண்ணை கிறங்கி  மூடினேன். குருவியின் முகம் கண்ணுள் வந்ததுஅவன் கோவில் மணி போல் கணீரென்ற சிரிப்பும், ஓலைப்பாயின் மேல் பெய்யும் மழை போல ஓயாத பேச்சும்.

பேசிகிட்டே இருப்பான் தாயோளிஇப்படி அல்பாயுசுல போய்டான்,” வாய்விட்டு சொல்லிவிட்டு என்னையறியாமல் தேம்பி அழ ஆரம்பித்தேன். ரோடு என்னும் பிரக்ஞை எதுவும் இல்லை. ஒன்பது வருடங்கள் என் கண் முன் வளர்ந்த பையன். காலையிலிருந்து அடக்கி வைத்திருந்த துக்கம் அழுகையாய் மடை திறந்து கொட்டி கொண்டிருந்தது.

ஹோட்டலில் இருந்து ஒருவர் வண்டி எடுக்க அருகில் கடந்து போனார். சட்டென்று என்னை திரட்டி கொண்டு, கர்ச்சீப்பால் முகத்தை துடைத்தேன்.

செல்லு ரோட்டை வெறித்து கொண்டு அமைதியாய் உட்கார்ந்திருந்தான்

அவனை தொட்டு திருப்பினேன்

பொறந்ததுல இருந்து கூட இருந்தவன் இப்படி போறதுஎனக்கே தாங்க முடியல உனக்கு எப்படி இருக்கும்னு எனக்கு புரியுது. அவங்கூட இருந்தத எல்லாம் நெனச்சுக்கோ அழுதுருவ,” என்றேன்.

என்னை பார்த்து சிரித்தான்

போலாம் பாபுனா,” என்று வண்டியில் சாவியை போட்டான்

ஏதோ சரியாக இல்லை என புரிந்தது. எதுவும் பேசாமல் அவன் பின்னால் அவன் வீடு வரை வந்தேன். வண்டியை நிறுத்தியவன் நேராக வீட்டிற்குள் போய் அவன் ரூமுக்குள் புகுந்து கொண்டான்

இரண்டு வீடு தள்ளியிருந்த குருவி வீட்டிற்கு நடந்தேன். செல்லின் அப்பா முன்னால் சேரில் உட்கார்ந்திருந்தார்

வீட்டிற்குள் இன்னும் அழுகை சத்தம் கேட்டு கொண்டிருந்தது.

செல்லின் அப்பாவை தோளை தொட்டு தனியாக கூட்டி சென்றேன்

அண்ணா, செல்ல டும்கூருக்கு உடனே அனுப்பி வைங்க. அவன் இங்க இருக்கறது சரியா படல எனக்கு,” என்றேன்.

அவன் சுடுகாட்டுக்கு வராதப்பவே எனக்கு கலுக்குனுதான் இருந்துச்சு. மொதல்ல இந்த பாழா போன பைக்க விக்கணும்,” என்றார்.

சற்று நேரம் கழித்து “தனியா இருந்தா எதாச்சும் பண்ணிக்குவானோனு பயமா இருக்கு பாபு,” என்றார்.

அதெல்லாம் ஒன்னும் பண்ணிக்க மாட்டாணா. அவன் இங்க இருந்தா இதே ஞாபகமா சுத்திட்டு இருப்பான். அனுப்பிடுங்க,” என்றேன்

சாவு வீட்டில் பெருத்த ஓலம் ஒன்று எழுந்தது. சொந்தக் காரர்கள் யாராவது ஊரில் இருந்து வந்திருக்க வேண்டும்.

வீட்டை திரும்பி பார்த்துவிட்டு, “நீ சொல்றதும் சரிதான், எம்பேச்ச எங்க கேப்பான் , அவனம்மாகிட்ட பேசறேன்,” என்றார்

அடுத்த நாளே செல்லு டும்கூர் கிளம்பிப் போனான்.

சென்றவன் ஆறேழு மாதங்கள் சேலம் பக்கமே வரவில்லை. அவன் மறக்கட்டும் என அவன் வீட்டிலும் அவனை வா வென்று சொல்லவில்லை

அதற்குள் எனக்கு கேபிள் டி.வி நன்றாக பிக் அப் ஆகிவிட்டது. லோக்கல் திருவிழா வீடியோ எடுத்து ஒளிபரப்புவது, கடை விளம்பரங்கள் பிடித்து அவற்றை வீடியோ எடுத்து கேபிள் சானலில் ஒளிபரப்புவது என ஆரம்பித்தேன். இடக்குறைவால் வீடியோ கடையை மூடிவிட்டு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அனைத்தையும் அங்கு மாற்றிக் கொண்டேன். இருந்த வேலையில் யாரையும் பார்ப்பதற்கு கூட எனக்கு நேரம் இல்லாமல் போனது.

கோட்டை பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்பை வீடியோ எடுக்க போகும் போது ராகவனை பார்த்தேன்.

அவனை பார்த்தவுடன் நான் கேட்ட முதல் கேள்வியே, “செல்லு எப்டி இருக்கான்? ஊரு பக்கம் வந்தானா?” என்பதுதான்.

ராகவன், “ இங்கதா இருக்கான் ரெண்டு மாசமா. காலேஜ் ஹாஸ்டல்ல டோப் அடிச்சிருக்கான். சீட்ட கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிட்டானுங்க.,“  என்றான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சற்று தணிந்த குரலில், “பெங்களூர்லயே ரீ ஹாப்ல சேத்துவிட்டுருக்காரு வரதண்ணன், அங்க இருந்து செவுரேறி குதிச்சு எங்கயோ போயி மருந்தேத்திகிட்டு பஸ்ஸ புடிச்சு ஊருக்கு வண்டான். சும்மா வந்திருந்தாலும் பரவால்ல ஒரு நர்ஸோட மோதரத்த திருடிட்டு வந்திருக்கான். கர்நாடகா வேறயா வரதண்ணண் படாத பாடு பட்டு , தண்ணியா செலவு பண்ணி போலிஸ் கேஸ் இல்லாம பண்ணியிருக்காரு. மெண்டலாயிட்டான், பாபு,” என்றான்.

வீட்லயேதான் இருக்கானா?” என்றேன்.

கிட்டத்தட்ட பூட்டிதான் வெச்சிருக்காங்க. ஒரு நாளு சாமுண்டி வரைக்கும் நடந்தாவது போய்ட்டு வரேனு அவங்கம்மாகிட்ட ரொம்ப கெஞ்சியிருக்கான். கைல காசெல்லாம் எதுவும் குடுக்காம அனுப்பிவுட்ருக்காங்க. திரும்பி வந்தவன் புல் டைட்டு. காச கீச திருடிட்டானா பார்த்த அதுவும் இல்ல. ஆர்த்திதான் அவன் மைனர் செயின் சின்னதா இருக்க மாதிரி இருக்குனு சொல்லியிருக்கா. செயின்ல பாதிய நகை கடைல வெட்டி வித்திட்டு டோப்பு வாங்கியிருக்கான் பாபு. எனக்கெல்லாம் என்ன சொல்றதுனே தெரில,” என்றான்.

வீட்லயே வெச்சு ட்ரீட்மண்ட் பண்ண முடியாதா?” என்றேன்.

இந்த மாதிரி கேஸ் எல்லாம் ஜெயில் மாதிரி ஒரு ரீ ஹாப் செண்டர்லதான் வெச்சு ட்ரீட் பண்ணனுமாம். மெட்ராஸிக்கோ பெங்களூருக்கோதான் கூட்டிட்டு போவணும். வரதண்ணன் என்ன பண்ணப் போறாருனு தெரியல,” என்றான்

அன்றே சென்று பார்க்க வேண்டும் என நினைத்தேன் , சவுண்ட் மிக்ஸிங் வேலைகள், வேறொரு இடத்தில் மஞ்சு விரட்டு கவரேஜ் என்று பண்டிகையெல்லாம் முடிந்து ஒரு வாரம் கழித்துதான் அவன் வீட்டுக்கு போக முடிந்தது

அவன் வீட்டில் இல்லை. வரதண்ணன் அவனுக்கு மயக்க ஊசி போட்டு ஆம்புலன்ஸில் பெங்களுர் நிம்ஹான்ஸில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்

வீட்டில் யார் முகத்திலும் ஒளியில்லை, வீடே சாவு வீடு போல துக்கம் நிறைந்து கிடந்தது.

அங்கே இருக்க பிடிக்காமல் காபியை அவசரமாய் குடித்துவிட்டு கிளம்பிவிட்டேன்

அதன் பிறகு பல மாதங்கள் கழித்து ஒரு இண்ட் சுஸிகி வண்டியில் என் கேபிள் அலுவலகத்திற்கு வந்து இறங்கினான்

பாபுணா,” என்றான் அதே புன்னகையுடன்.

தோளோடு அனைத்து என்னுடைய ஆபிஸ் ரூமுக்குள் கூட்டி சென்றேன்

எப்டி இருக்கற, எப்படா வந்த பெங்களூர்ல இருந்து?” என்றேன் உற்சாகமாக

நல்லாருக்கனா, ரெண்டு வாரம் ஆச்சி வந்து”

முழுசா வெளிய வண்ட்டியா”

வித் ட்ராயல் எல்லாம் போச்சு, க்ரேவிங்கும் இல்ல. ரெண்டு மாத்தர மட்டும் குடுத்திருக்காங்க. நார்மலாதான் இருக்கேன்”

என்ன பண்ணப் போற, மண்டிக்கு போ போறியா”

இல்லனா, வைஸ்யால பி காம் சேந்துருக்கேன்”

சூப்பர்றா. அவன் சட்டுனு போய்ட்டான் நீ சின்னம்பட்டு போப் போறியோனு ரொம்ப பயந்தட்டண்டா,” இதைச் சொல்லும் போது  என் கண்கள் கலங்கிவிட்டன.

ம்.” சுற்றிலும் பார்த்துவிட்டு, “பிசினஸ் நல்லா பிக் அப் ஆயிருச்சு போலருக்குனா” என்றான்

மெட்ராஸ்காரன் அருணுக்குதான் தாங்க்ஸ் சொல்லணும். டி.வியெல்லாம் பாக்குறியா. சன் டிவி, எம் டிவி , வீ டி வினு நிறைய சானல் வந்துருச்சு,” என்றேன்.

போட்டியா உங்க சானலும் ஓடுதே. உங்க சானல பாத்துட்டுதான் வண்டியெடுத்துட்டு பாக்க வந்தேன்,” என்றான்.

பலமாக சிரித்துவிட்டு, “லொல்லு மட்டும் அப்படியே இருக்குடா உனக்கு,” என்றேன்

 நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பிச் சென்றான்

எனக்கு உண்மையாகவே குருவியும் அவனுடன் இருந்தது போலவே ஒரு உணர்விருந்தது அன்று.

அதன் பிறகு அவனை மீண்டும் அடிக்கடி பார்த்தது அவன் காலேஜ் மூன்றாம் ஆண்டு படிக்கும் போதுதான். அப்பொழுது நான் என் பழைய வீட்டை விற்றுவிட்டு அவன் தெருவிலேயே ஒரு பெரிய வீட்டை வாங்கி  குடி புகுந்திருந்தேன்

ரோட்டில் பார்த்தால் நின்று பேசாமல் போகமாட்டான். ஒரு நாள் பங்க் கடையில் நான் தம்மடித்து கொண்டிருக்கும் போது பார்த்தான், தம்மெல்லம் அடிப்பதில்லை என நான் கொடுத்தும் மறுத்துவிட்டான். மூன்றாம் வருட பரீட்சையெல்லாம் முடிந்துவிட்டது பி எஸ் ஜீ யில் எம் பி ஏ சேரலாம் என்றிருப்பதாக சொன்னான்உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தான், குருவியின் பேச்சு, குருவியின் சிரிப்பு, செல்லின் புன்னகை.

சொன்ன ஒன்றிரண்டு வாரங்களில் அவன் வீட்டைத் தாண்டும்போது ஒரே சத்தமாக இருந்ததுவண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன். வரதண்ணண் உள் கதவை வெளியே இருந்து சாத்தி விட்டு வீட்டு வராண்டாவில் செல்லை பெல்ட்டால் விளாசிக் கொண்டிருந்தார். செல்லின் அம்மா உள்கதவின் கம்பியை பிடித்துக் கொண்டு “ஐயோ அடிக்காதிங்க செத்துற போறான் விட்றுங்க அடிக்காதிங்க,”  என்று கதறிக் கொண்டிருந்தார்.

 நான் சென்று வரதண்ணனை பின்னால் இருந்து  இரண்டு கைகளையும் இறுகப் பிடித்து கொண்டேன். “அண்ணா, மேல கீழ ஏதாவது பட்ற போவுது, கொஞ்சம் பொறுமையா இருங்கண்ணா,” என்றேன்

படட்டும் பாபு பட்டு போய் தொலையட்டும் நாதேறி நாயி,” என்றார் மூச்சிறைக்க.

கொஞ்சம் அவரை அமைதிபடுத்தி , பெல்ட் டை கையில் இருந்து வாங்கிவிட்டு வராந்தா தின்னையில் அவரை உட்கார வைத்தேன்

செல்லு செருப்பு வைக்கும் ஸ்டேண்ட் அருகில் சுவற்றோடு ஒட்டி கால்கள் ரெண்டையும் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தான்

உள் வாசல் கதவை நான் திறந்துவிட்டேன், செல்லின் அம்மா ஓடி வந்து செல்லை கையை பிடித்து தூக்கி உள்ளே அழைத்து சென்றார்

வரதண்ணன் சட்டென்று உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார். பஜாரில் எல்லோராலும் பெரும் மரியாதையுடன் பார்க்கப்படும் அவ்வளவு பெரிய மனிதர் குலுங்கி அழுவதை பார்க்க மிகுந்த சங்கடமாக இருந்தது

சற்று அழுகை அடங்கியவுடன், “என்னாச்சுண்ணா?” என்றேன்

திரும்பவும் ஆரம்பிச்சிட்டான் பாபு. சுஸிகி ஆர். ஸி புக்க வெச்சு ஆறு மாசத்துக்கு முன்னாடி மாணிக்கத்துகிட்ட வட்டிக்கு பணம் வாங்கியிருக்கான். இவன் வட்டியும் கட்டல அசலும் திருப்பல. இனிமேல் இவண்ட்ட வாங்க முடியாதுனு தெரிஞ்சி போயி இன்னிக்கி காலைல வீட்டுக்கே வந்து மாணிக்கம் என்கிட்ட சொல்லிட்டான்

இவனுக்கு எதுக்கு இவ்வளவு பணம்னு கூப்புட்டு கேட்டா மாக்கான் மாதிரி அப்படியே நிக்கறான். ரூமுக்குள்ள போயி எல்லாத்தையும் பொரட்டி பாத்தா அலமாரி ட்ராவுக்கு கீழ ஒளிச்சு வெச்சுருக்கான் பாபு. கஞ்சால இருந்து சாரு கோக்கேயினுக்கு போய்ட்டாரு இப்போ.” 

என்னால் நம்பவே முடியவில்லை. “எவ்ளோ நாளாணா?”

யாருக்கு தெரியும். நான் வீட்ல அதிகம் இருக்கறதுல்ல காலைல போனா ராத்திரிதான் வரேன். இவள கேட்டா ஒரு வித்தியாசமும் இல்ல நல்லாத்தான் இருந்தான்றா. ஆர்த்திதான் அஞ்சாறு மாசமா அவன் ரூம்ல அவனே தனியா பேசி சிரிக்கிறானு சொல்லி இருக்கா இவகிட்ட . வயசு பையன் ஏதாவது புஸ்தகம் கிஸ்தகம் படிப்பானு இவ அசால்டா உட்டுட்டா என் கிட்ட சொல்லவே இல்ல.”

ஒரு வேள திரும்ப குருவி ஞாபகம் வந்து…” என்றேன்.

அட போ பாபு. அதெல்லாம் நம்ம சொல்லிக்கலாம் சமாதானத்துக்கு. இவன் ருசி பாத்துட்டான் இனி மேல் உட மாட்டான். அதுவும் இவன உடாது. இவன் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு இத விட்டானானே எனக்கு இப்ப சந்தேகமா இருக்கு,” என்றார்.

நல்லாதான இருந்தான் ட்ரீட்மெண்ட் போய்ட்டு வந்து?”

எப்படி நம்மள ஏமாத்துறதுனு கத்துகிட்டு வந்திருக்கான் ட்ரீட்மெண்ட்ல. ஒத்த ஆம்பள புள்ள பெத்து அவன இப்படி…” அடக்க மாட்டாமல் மீண்டும் அழ ஆரம்பித்தார்.

எந்த வார்த்தையும் அவரை தேற்றாது என தெரிந்து பேசாமல் அவரருகில் உட்கார்ந்திருந்தேன்

செல்லை பார்க்காமலே வண்டி எடுத்து கொண்டு கிளம்பிவிட்டேன்.

அவனை வரதண்ணன் எங்கும் அனுப்பவில்லை. அவனை கிட்டதட்ட சிறையில் வைத்திருப்பதைப் போல் வைத்திருந்தார். அவர் மண்டி மூட்டைக்காரர்கள் இரண்டு பேர்  எந்நேரமும் அவனுடனே இருந்தனர். அனைத்து கட்டுப்பாடுகளையும் மாதம் ஒரு முறையாவது உடைத்து பவுடர் வாங்கிவிடுவான். செயின், பணம், பாத்திரம் என எது கிடைத்தாலும் அதை பவுடராய் மாற்றி விடுவான். வரதண்ணன் சோகத்தில் ஆளே வாடி வதங்கி பாதியாகி போனார்.

நான் பல முறை சொல்லியும் அவனை திரும்பவும் ரீ ஹாப் அனுப்ப அவர் சம்மதிக்கவில்லை. அதில் சுத்தமாக அவருக்கு நம்பிக்கை போய்விட்டது.

ஆர்த்தி காலேஜ் முடித்த கையோடு அவள் கல்யாணத்தை முடித்து வைத்தார். செல்லை கல்யாணத்திற்கு கூட கூட்டி வரவில்லை, அம்மை போட்டிருக்கிறது  என்று மாப்பிள்ளை வீட்டில் சொல்லிவிட்டார்கள்.

ஆர்த்தி கல்யாணத்திற்காகவே உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்ததை போல, அவள் கல்யாணமாகி போன மூன்றே மாதத்தில் ஹார்ட் அட்டாகில் வரதண்ணன் போய் விட்டார்.

அவர் எழவு விழுந்த அன்று படிந்த சாவுக் களை அந்த வீட்டிலிருந்து இன்னும் விலகவே இல்லை. சில சமயம் யோசித்தால் குருவி போனதில் இருந்தே அப்படித்தான் இருந்தது என தோன்றும்

வரதண்ணன் இறந்த பிறகு மண்டி செல்லின் கைக்கு வந்தது. காலையிலேயே பவுடரை இழுத்து விட்டுத்தான் மண்டி பக்கமே போவான். வாயே திறக்காத செல்லு  சிரிக்க சிரிக்க பேசுபவன் என பஜார் முழுக்க பெயரெடுத்தான். அவனுடைய போதை பழக்கம் நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே தெரிந்த விஷயமாக இருந்தது. ஒன்றிரண்டு வருடங்கள் பெண் தேடினாலும் அதன் பிறகு அவனுக்கு வரன் பார்ப்பதையே செல்லின் அம்மா விட்டுவிட்டார். பழக்க வழக்கங்களில் தெரியாவிட்டாலும் நிர்வாகத்தில் போதையின் தாக்கம் நன்றாக தெரிந்தது. முடிவுகள் எதையும் அவனால் எடுக்க முடியவில்லை, எடுக்கும் முடிவுகளும் மோசமானவையாக இருந்தன. பல லாரிகள் ரோட்டை நிறைத்து நிறுத்தி லோடடித்த வியாபாரம் சுருங்கி சில லாரிகள், அரை லாரி, டெம்போ, ஆட்டோ என தேய்ந்து பத்து வருடங்களில் வியாபாரமே இல்லாத நிலை வந்தது

கையிருப்பு காசு தீரும் வரை வீட்டில் உட்கார்ந்து கோக் அடித்து கொண்டிருந்தான்.

வரதண்ணன் மெயின் ரோட்டில் சில கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். அந்த கடைகளை தவிர வேறு வருமானம் இல்லை என்ற நிலை வந்தது. செல்லின் அம்மா கடை வாடகையை அவனை வாங்க விடவில்லை. விட்டால் அதையும் விற்று பவுடர் ஆக்கி விடுவான் என பயந்து தரமுடியாது என சொல்லிவிட்டார்

ஏதாவது வேலை வேண்டும் என என்னை வந்து பார்த்தான். டி டி எச் எல்லாம் வந்து கேபிள் டல்லடிக்க ஆரம்பித்த நாட்களிலேயே நான் விளம்பர படங்கள் எடுப்பது, பெரிய கல்யாணங்களுக்கு  சினிமா போல வீடியோ எடுப்பது என தொழிலை  சற்று மாற்றிக் கொண்டிருந்தேன். அதன் மூலம் எனக்கு நிறைய பெரிய மனிதர்களின் தொடர்புகள் இருந்தது. ட்ரீட்மெண்ட் எடுத்து கொண்டால் எங்காவது சொல்லி வேலை வாங்கி தருகிறேன் என சொன்னேன். அதன் பிறகு என்னை பார்க்க அவன் வரவில்லை. ஒரு வருடம் கழித்து நான் தான் அவனை பார்க்க போக வேண்டியிருந்தது

அவன் பேசும் நுனி நாக்கு ஆங்கிலத்தால் ஒரு பெரிய பைனான்ஸ் கம்பெனியில் மானேஜராக வேலை கிடைத்து சேர்ந்திருந்தான். அவர்கள் அவனை கட்டி வைத்திருக்கிறார்கள் என செல்லின் அம்மா ஒரு நாள் இரவு பத்து மணிக்கு வந்து கதவை தட்டினார். அவரை என் வீட்டிலேயே என் மனைவியுடன் இருக்க சொல்லிவிட்டு என்னிடம் வேலை செய்யும்  ஐந்தாறு பேரை அங்கு நேராக வரச் சொல்லிவிட்டு நானும்  அந்த கம்பெனிக்கு போனேன். செல்லை மானேஜர் ரூம் சேரிலேயே நைலான் கயிற்றால் கட்டி வைத்திருந்தார்கள். அருகில் நின்றிருந்தவர்கள் யாருமே ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்பவர்கள் போல் இல்லை. செல்லின் உதடு தடித்து போய், முகமெல்லாம் வீங்கி இருந்தது

என்னைப் பார்த்தவுடன் கட்டை அவிழ்த்து விட்டனர்

ரெண்டு லட்ச ரூபா கையாடல் பண்டாரு சார், கேட்டா கெத்தா செலவாயிருச்சினு சொல்றாரு,“ வேறோரு ரூமில் இருந்த வந்த சேட்டு பையன் போல இருந்தவன் சொன்னான். இவன் ஒருவன் தான் அந்த கம்பெனியில் வேலை பார்ப்பவன் போல இருந்தான்.

அதுக்காக கட்டி வெச்சு அடிப்பிங்களா. போலிஸுக்கு போக வேண்டியதுதானே?” என்றேன்.

சார் கம்பெனி ரெப்பூடேஷன் டேமேஜ் ஆயிரும் சார். பொய் சொல்றாரு நாலு தட்டி தட்டுனா உண்மை வரும்னு பாத்தோம். இப்பதான் இந்தாளு ஒரு போத பார்ட்டினு தெரிஞ்சது, அதான் வீட்டிக்கி போன் பண்ணோம். சார் இவர் பண்ண வேலையால இந்த ப்ராஞ்சல இருக்க எல்லார் மேலயும் ஆக்‌ஷன் எடுப்பாங்க சார். நாந்தான் இந்த ப்ராஞ்சுக்கு சீனியர் மேனேஜர், என் வேலயே போய்ரும் சார்,” என்றான் நாத்தழுதழுக்க.

அவன் அந்த காசு முழுசா பவுடர் அடிச்சிருப்பான். அஞ்சு பைசா அவன் கைல இருக்காது. அவங்க வீட்லயும் இப்ப இருக்க நிலைமைல ஒன்னும் கிடைக்காது. நீங்க அவன அடிச்சு கொன்னு போட்டுட்டு ஜெயிலுக்கு போலாம் அவ்ளோதான்” என்றேன்

சார் ஏதாவது பாத்து பண்ணுங்க சார். இந்தாளுக்கு வேல கொடுத்த பாவத்துக்கு நான் நடுத் தெருவுல நிப்பேன் போலருக்கு,” என்றான்.

இப்ப நான் இவன கூட்டிட்டு போறேன். என் நம்பர தரேன் நாளைக்கு மத்தியானத்துக்கு மேல கூப்புடுங்க அவங்கம்மாகிட்ட பேசி எவ்ளோ தர முடியும்னு பாத்து சொல்றேன்” 

அவனை ஆஸ்பிடல் கூட்டிப் போய் மருந்து போட்டு வீட்டிற்கு அழைத்து சென்றேன்

பைனான்ஸ் கம்பெனிக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுப்பதாக பேசி, செல்லுடைய அம்மா நகையை அடகு வைத்து அந்த பணத்தை கொடுத்தார்

அதன் பிறகு மாதம் ஒரு தொகையை அவனுக்கு கொடுக்க ஆரம்பித்தார். அப்படியும் ஆறு மாதத்திற்கொரு முறை நகையோ, வெள்ளி சாமானோ மாயமாவது தொடந்து கொண்டுதான் இருந்தது. இப்போது தங்கை மகனின் அரணைக் கொடியை கழட்டி பவுடராக்கிவிட்டு நடு ரோட்டில் செருப்படிபட்டு உட்கார்ந்திருக்கிறான்

நான் போகாமல் நிற்பதை பார்த்துவிட்டு, “ஒரு தம்மு வாங்கி தரியா பாபுணா” என்றான்.

போதை நன்றாகவே இறங்கி இருக்கிறது போல பட்டது எனக்கு.

எந்திருச்சி வா,” என்றுவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

செருப்பெதுவும் போடாமல் அப்படியே நடந்து வந்து வண்டியின் பின்னால் உட்கார்ந்தான்.

புது பஸ் ஸ்டாண்டிற்குள் போய் ஒரு பெட்டி கடையில் கிங்ஸ் வாங்கி அவனிடம் கொடுத்தேன். நான் சிகரெட் இப்பொழுது குடிப்பதில்லை

பற்ற வைத்து இழுக்க ஆரம்பித்தான். சிரிப்பும் மிதப்பும் கண்ணில் இல்லை. முழுதாக போதையிறங்கி நின்று கொண்டிருந்தான்.

இப்படி போதையில இல்லாதப்போ என்ன வாழ்க்க வாழ்றோம்னு ஒரு நாளாவது யோசிச்சி பாத்திருக்கியாடா?” 

அவனுக்கு புகை இழுப்பதில் கவனமெல்லாம் குவிந்திருந்தது

எனக்கு கோபம் ஏறி வந்தது.

உனக்கு நாப்பது வயசுக்கு மேல ஆகுதுஇது வரைக்கும் நீ வாழ்ந்த வாழ்க்க யாருக்காச்சும் உபயோகமா இருந்தததா, உனக்கே கூட இல்ல. உன்ன விட சின்ன பையனெல்லாம் உன்ன நடு ரோட்ல செருப்பால அடிக்கறான். இப்படி வாழனுமாடா. இப்பாவாவது வாடா ட்ரீட்மெண்ட் எடு,”  என்றேன்

ட்ரீட்மெண்ட் எடுத்தா?”

“ம்.. திரும்ப ஒரு மனுசனா வருவஎன்றேன்.

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நீ என்கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது ஒரு வார்த்த சொன்ன ஞாபகம் இருக்காநீதாண்டா அவன்னு, அது உண்மைனா. கோக் ஏத்துனா நான் ரெண்டாள் பாபுணா. குருவி எனக்குள்ள இறங்கிறுவான். அப்புறம் சிரிப்பும் சந்தோஷமும் மட்டும்தான். செல்லா மட்டும் இருந்தன்னா ரெண்டு நாள்ல செத்து போயிருவேன்,” என்றான்.

ஒரு பப் இழுத்துவிட்டு தொடர்ந்தான். “உங்களுகெல்லாம் அவன் செத்துட்டான் எனக்கு இன்னும் அவன் உயிரோடதான் இருக்கான். கல்லுல மந்திரம் சொல்லி சாமிய எழுப்புற மாதிரி என் உடம்புல கோக்கை விட்டு அவன எழுப்புறேன். நான் உசுரோட இருக்க வரைக்கும் அவனும் இருப்பான்” 

இன்னுமாடா உம் பழக்கத்துக்கு குருவி பேர சொல்லிகிட்டு இருப்ப?” என்றேன்.

நிமிர்ந்து என்னை பார்த்தான்பில்டர் வரை கங்கு போய்விட்டது, அதை கீழே போடாமல் விரல்களை விசில் அடிப்பது போல் மடக்கி நடுவில் கங்கின் நுனியில் மெலிதாக ஒட்டிக் கொண்டிருந்த பில்டரை பிடித்து உதட்டில் வைத்து புகையை இழுத்தான், கங்கு உதட்டில் ஒளிர்ந்து அடங்கியது

புத்தக கண்காட்சி 2020 – பதாகை பதிப்பக வெளியீடுகள்

ஒரு நாவல், இரண்டு சிறுகதை தொகுப்புகள், ஒரு கதம்ப படைப்பு மற்றும் ஒரு கட்டுரை தொகுப்பு என  பதாகை யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு ஐந்து நூல்களை கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது.

கத்திக்காரன்- ஸ்ரீதர் நாராயணன் – சிறுகதைகள். 

ஸ்ரீதர் நெடுநாட்களாக இணைய உலகில் இயங்கி வருபவர். பதாகையின் தோற்றுனர்களில் ஒருவர். அமெரிக்காவில் வசிக்கிறார்.பூர்வீகம் மதுரை. ‘கத்திக்காரன்’ முழுக்க அமெரிக்க பின்புலத்தில் உருவான கதைகள். ‘வானவில்’ அமெரிக்க இந்திய  பதின்மரின் வாழ்வை பற்றி நுண்ணிய சித்திரத்தை அளிப்பது. பியாரி பாபு ஹோரஸ் அலெக்சாண்டர் பற்றிய நினைவுகளை சொல்லும் கதை. ஸ்ரீதரின் கதைகூறும் முறை பிசிறற்ற தெள்ளிய முறை என சொல்லலாம். இரா.முருகன் ஒரு நல்ல முன்னுரையை அளித்திருக்கிறார்.இந்த ஆண்டு ஸ்ரீதரின் தொகுப்பு நன்கு கவனிக்கப்படும் என்று நம்புகிறேன்.

ஒளி – சுசித்ரா – சிறுகதைகள்

சுசித்ரா, சுவிட்சர்லாந்தில் வசிப்பவர். உயிரியல் துறையில் ஆய்வு செய்து வருகிறார். இவரும் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். ஆங்கிலத்தில் வலுவான வாசிப்புடையவர். அண்மையில் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த அவருடைய ‘ஒளி’ முன்னோடி எழுத்தாளர்கள் பலரால் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. தொகுதியில் வெளிவந்துள்ள ‘தேள்’ ஒரு நல்ல டிஸ்டோபிய கதை. இரண்டு அறிவியல்புனைவுகளும் வாழ்க்கையின் அடிப்படை வினாக்கள் மீது கட்டி எழுப்பப்பட்டவை. ‘ஹைட்ரா’ எனக்கு பிடித்த கதை. இந்த ஆண்டு மிகவும் பேசப்படும் தொகுதிகளில் ஒன்றாக இது இருக்கும் என நம்புகிறேன். படைப்பூக்கம் கொண்ட எழுத்து. வருங்காலத்தில் முக்கிய எழுத்தாளராக அறியப்படுவார்.

வீடும் வெளியும் – அனுகிரஹா – கதம்ப படைப்பு

அனுகிரஹா  சொல்வனம்  மற்றும் பதாகை ஆசிரியர் குழுவில் இருப்பவர். சேலத்தை பூர்வீகமாக கொண்டவர். பெங்களூரில் வசிக்கிறார். அவருடைய ‘வீடும் வெளியும்’ நூலை படைப்பு கதம்பம் என்றே சொல்ல வேண்டும். தமிழுக்கு இப்படியான வடிவம் முன்மாதிரி அற்றது என எண்ணுகிறேன். நான்கு தலைப்புகளில் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் அவரே வரைந்த ஓவியங்கள் என படைப்பின் எல்லா பரிணாமங்களும் கொண்ட நூல். அனுவின் கவிதைகள் மிக முக்கியமானவை. புதிய கோணங்களை திறப்பவை. அவை இவ்வாண்டு பேசப்படும் என்று நம்புகிறேன்.

இயர் ஜீரோ – காலத்துகள் – நாவல்

‘காலத்துகள்’ பதாகை வழி உருவாகி வந்த எழுத்தாளர். அவருடைய சிறுகதை தொகுப்பும் அடுத்து வர இருக்கிறது. ‘இயர் ஜீரோ’ செங்கல்பட்டில் தொண்ணூறுகளின் மத்தியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒரு மாணவனின் கதை. நினைவுகளின் ஊடாக ஒரு தெறிப்பை காலத்துகள் இந்நாவலில் நிகழ்த்துகிறார். ஒரு தலைமுறையே அவருடைய கதையோடு தங்கள் நினைவுகளை பொருத்திப் பார்க்க முடியும். ஆத்மார்த்தமாக தன்னை கண்டடையும் நோக்கில், தன நினைவுகளை கிளறி எழுத்தாக்கும்போது அதன் நேர்மையின் ஆற்றலால் அப்படைப்பு நம்மை வசீகரிக்கிறது. தமிழில் வந்துள்ள சிறந்த ‘coming off age’ வகையிலான நாவல்களில் ஒன்று காலத்துகளின் ‘இயர் ஜீரோவை’ சொல்லலாம்.

பாண்டியாட்டம் – நம்பி கிருஷ்ணன் – மேலை இலக்கிய கட்டுரைகள்

நம்பி கிருஷ்ணன், அமெரிக்காவில் வசிக்கிறார். சொல்வனத்தில் தொடர்ச்சியாக உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகிறார். அரூ அறிவியல் புனைவு போட்டியில் அவருடைய கடவுளும் கேண்டியும் மூன்றாவது பரிசு பெற்றது. அவர் எழுதிய Ecco homo எனக்கு பிடித்த காந்தி கதைகளில் ஒன்று. தமிழிலிருந்து ஆங்கிலத்தில் செறிவான மொழியாக்கங்களை செய்திருக்கிறார். தமிழில் அவர் அளவுக்கு அயல் இலக்கிய வாசிப்பு உரியவர்கள் மிகக் குறைவு என்பது என் கணிப்பு. ‘பாண்டியாட்டம்’ உண்மையில் அப்படி பிரதிகளின் மீது அவர் தாவித்தாவி செல்லும் கட்டுரைகளின் தொகுப்புதான். பெருமைக்குரிய மிக முக்கியமான அறிமுகம் என நம்பியின் இந்த கட்டுரை நூலை கருதுகிறேன். ஓவியர் ஜீவானந்தத்தின் கோட்டுச் சித்திரங்களோடு நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது, கண்காட்சி முடிவதற்குள் வந்துவிடும்  என நம்புகிறேன்.

பதாகை இணைய தளம் தொடர்ந்து செயல்பட காரணமாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி. பதிப்பகமாக மலர்ந்திருக்கும் பதாகையையும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முந்தைய ஆண்டு பதாகை- யாவரும் கூட்டாக வெளியிட்ட

1. பாகேஸ்ரீ- எஸ்.சுரேஷ்- சிறுகதைகள்

2. வெளிச்சமும் வெயிலும் – சிவா கிருஷ்ணமூர்த்தி – – சிறுகதைகள்

3. வளரொளி- நேர்காணல்கள், மதிப்புரைகள்- சுனில் கிருஷ்ணன்

ஆகியவையும் விற்பனைக்கு உள்ளன.

இந்த நூல்கள் புத்தக கண்காட்சியில் யாவரும் அரங்கில் (189 & 190) கிடைக்கும். ஆன்லைனில் பெற http://www.be4books.com or Whatsapp no.9042461472யை தொடர்புக் கொள்ளலாம்.