சிறுகதை

ஓயா அலை – கமல தேவி சிறுகதை

கமல தேவி

பனி இன்னும் முழுமையாக விலகவில்லை. விடுதியில் பெரும்பாலும் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க விஜி மதியை எழுப்பி, “நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேங்க்கா,” என்றாள்.

“தேவையில்லாத வேல பாக்கற நீ. நீங்க  என்ன எல்லாத்தையும் புரட்டப் போறீங்களா? நீயும் அவன்களோட சேந்துக்கிட்டு…”

“இல்லக்கா. டீச்சிங் ப்ராக்டிஸ் முடிஞ்சி காலேஜ் போறதுக்குள்ள நாலு டெஸ்ட் வைக்கனுல்ல”

“ஸ்கூல் நேரத்தில உங்களால மட்டும் கலட்ட முடியலயாக்கும். போய்த் தொல”

விஜி போர்வையை எடுத்து அவள்மீது மூடியபோது, அவளைப் பார்த்து மதி, “வயலெட் வித் வொய்ட் சாரி அழகாயிருக்கு”, என்று கண் சிமிட்டினாள். பொங்கலும், சாம்பார் வடையும் தின்றுவிட்டு அவள் முருகன் கோவிலில் அமர்ந்திருக்கையில் மணி ஒன்பது.

“ஏண்டிம்மா சனியன்னைக்குமா? மத்தவா எங்க?”

“அவங்க வேல முடிச்சிட்டாங்கய்யா. ஃப்ரண்டு வருவான். எனக்கு ஸ்கூல் வேல முடியல,”  என்றவளுக்குத் தலையாட்டிவிட்டு பட்டர் படிகளில் அமர்ந்தார். அவரின் சருகுகளின் அசைவுகள் போன்ற கசகசத்த குரலில்,

“நாணி இனியோர் கருமமில்லை
   நாலய லாரும் அறிந்தொழிந்தார்…..
……
நீரெனைக் காக்க வேண்டில்
ஆய்ப்பாடிக் கேஎன்னையுய்த் திடுமின்,”

என்று பாடி நிறுத்தினார்.

“ச்…”

“என்னடிம்மா?”

“கவிதைன்னா பொய்யாவேதான் இருக்கனுமா?”

“லோகத்தில இல்லாததையா பாடிட்டேன். மார்கழியானா வாயில தானா வர்றது. உனக்கு பாட்டு புரியறது அதான் என்னடான்னு இருக்கு. ஆனா உன்னால நடைமுறையில இதெல்லாம் நம்பறத்துக்கு முடியல்ல. சின்ன வயசில இதில இருக்கற  ஏக்கம் மனசுக்கு பிடிக்கவும் என் ஆசையில திரும்பத் திரும்ப ஆண்டாளை படிச்சேன்… அங்க பாரு உன் சகா,” என்றார்.

வெளியில் கையில் ஒருபுத்தகத்தோடு நின்ற மனோ கைகாட்டினான். கையில் திருநீருடன், வாயிலில் கையெழுத்து போட்டுவிட்டு வாயிலவரிடம் தலையாட்டி நடந்தாள்.

மனோவிடம் திருநீரை நீட்டினாள்.

“புதுசா என்ன? இதெல்லாம் இட்டுக்கறதில்லன்னு தெரியாதா…”

“ராகவ ஐயர் புத்ரனா நீர்?”

“காலையிலேயேவா? அங்க பாரு திருநீருக்கு ஆள் வருது,” என்று பேருந்திலிருந்து இறங்கிய பாலுவைக் காட்டினான்.

திருநீறை நெற்றியிலிட்டுக் கொண்டே பாலு, “சும்மா விளையாடிட்டு இருக்கக் கூடாது. நான் கணக்கு டெஸ்ட் முதல்ல வைக்கறேன். இரண்டாவது பிசிக்ஸ்,” என்றான்.

இவள், “நான் என்ன ஏமாந்த ஆளா?” என்றாள்.

மனோ, “பயாலஜிதானே விஜி. பசங்க மதியம்கூட எழுதிடுவாங்க,” என்றான். பள்ளியில் நுழைகையில் பிள்ளைகள் பேசிச் சிரித்தும், ஓடிப் பிடித்தும் ஆடிக்கொண்டிருந்தனர்.

பாலு, “இந்த டெஸ்ட் அவங்களுக்கு ஒரு விளையாட்டு,” என்றான்.

“ஆமா பாலு. அதான் மதியக்கா நேத்தே வைக்க வேண்டியதுதானே, படிச்சிட்டா வரப் போறாங்கன்னாங்க. அவங்க, இவங்க எல்லாம் சரிதான். நாமதான் வீணா…”

“விடு விஜி. பிள்ளைகளுக்கு படிக்க நேரம் கொடுக்கனும்ல. நாம சரியாதான் பண்றோம்,” என்றான் பாலு. பிள்ளைகள் அனைவரும் வந்துசேர மேலும் அரைமணியாயிற்று.

விஜி பிள்ளைகளை மைதானத்தில் கட்டிட நிழல் பகுதியில் வரிசையாக அமரவைக்க மனோ பசங்களை மரநிழல்களில் அமர்த்திக் கொண்டிருந்தான். பாலு வினாத்தாள்களை எடுத்து அமர்ந்திருந்த பிள்ளைகளிடம் கொடுத்துக் கொண்டிருந்தான்.

சிட்டுகளும் காக்கைகளும் எழுந்து பறந்து சத்தமிட்டுக் கொண்டேயிருந்தன. சிறிது நேரத்தில் மூவரும் நடக்கும் ஒலி மட்டும் கேட்கும் அமைதி.

விஜிதான் முதலில் விமலா இடப்பக்கமாக சரிவதைப் பார்த்தாள்.

“என்னாச்சு விமலா?” என்று ஓடியவளின் பின்னே பாலுவும், மனோவும் வேகமாக நடந்தார்கள்.

“விஜி பதறாத… காலயில சாப்பிடாம வந்திருக்கும்,” என்ற பாலு, விமலாவின் வாயில் நுரை வருவதைப் பார்த்ததும், “தள்ளு விஜி. யாராவது தண்ணி எடு,” என்று அவளைத் தூக்கி விஜி மீது சாய்த்தான். கன்னத்தில் தட்டி நீர் தெளித்ததும் கண்களை மூடித்திறந்து பின் மூடிக்கொண்டாள்.

சூழ்ந்த பிள்ளைகளை மனோ கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

“இங்க ஆட்டோ சீக்கிரம் கிடைக்காது சார். பின் கேட் வழியா கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு பத்து நிமிசத்துல போயிரலாம் சார்”, என்றான் ஒருவன். அதற்குள் விமலாவின் கைக்கால்கள் உதறத் தொடங்கியிருந்தன.

“மனோ நீ ஸ்டூடண்ஸை வீட்டுக்கு அனுப்பிட்டு வா. விஜி நீ என்கூட வா”, என்று துவண்ட விமலாவைத் தூக்கி நிறுத்தி தோளில் போட்டுக்கொண்டு பின்கேட்டிற்கு விரைந்தான் பாலு.

பாதையில் வண்டி பிடித்து மருத்துவமனையில் நின்று கொண்டிருந்தார்கள்.

செவிலி தன் குறிப்பு ஏட்டைப் பார்த்து,“வயசு என்ன?” என்றார்.

பாலு, “பதினேழு இருக்கும்,” என்றான்.

“நீங்க யாரு?”

“எங்க ஸ்டூடண்ட்ங்க,” என்ற விஜியையும் பாலாவையும் அந்தச் செவிலி மேலிருந்து கீழ் வரைப் பார்த்தாள்.

“ட்ரெய்னிம்மா”, என்றான் பாலா.

“ம். யாரு கையெழுத்து போடறீங்க?”

பின்னால் வந்த மனோ, “நாங்க ரெண்டு பேரும்,”என்றதை மறித்து, “நானும் போடறேன்,” என்றாள் விஜி.

“கேஸ் என்ன தெரியுமா? ஏதோ பாய்சன் சாப்பிட்டிருக்கு. உள்ள வாங்க”

மனோ, “இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்லருந்து வந்துருவாங்க,” என்றான்.

அவர்களால் விமலாவிற்கு வயிறு தூய்மை செய்து கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை. அந்த இடம் அதற்கே உரிய ஒவ்வாத நாற்றத்தோடு இருந்தது.

அங்கிருந்த இளம் செவிலி, “நேரமாயிடுச்சுன்னு நெனக்கறேன்… சொல்ல முடியாது,” என்று கிசுகிசுத்தாள்.

விமலாவின் வயிறு பொருமி எழுந்தது. உடலையும் சேர்த்து உயிருடன் வெளியே தள்ளிவிட வாய் எத்தனிப்பதைப் போல திறந்து உறுமியது.

“நீங்க வெளிய நில்லுங்க”, என்ற குரலால் மூவரும் வெளியே வந்தார்கள்.

பெயர்ந்த தரை சில்லென்றிருந்தது. முன்னால் செடிகள் அடர்ந்து படர்ந்திருந்தன. வாசனையாலும் இருப்பாலும் அந்தக் கட்டிடம் தன் பழமையைக் காட்டிக் கொண்டிருந்தது . மருத்துவமனையின் கடைசியிலிருந்த தனி சிறு ஒற்றை அறை கட்டடம் அது. ஆள் நடமாட்டம் கூப்பிடும் தொலைவில் இருந்தது. வெளியே சாலையில் வாகனங்களின் ஒலிகள்.

விஜி நடுங்கும் இரு கரங்களாலும் பாலுவின் வலது மேல்கையை  பிடித்துக் கொண்டாள்.

“நீ போ விஜீ. நாங்க பாத்துக்கறோம்,” என்றாலும் பாலுவிடமிருந்த தடுமாற்றத்தை விஜியால் உணரமுடிந்தது.

“பொம்பளப் பிள்ளைங்கறதால விஜி இருக்கட்டும்,” என்றான் மனோ.

“ஒன்னுல்ல விஜி. பாத்துக்கலாம்,” என்ற பாலுவிற்கு உடல் வியர்த்து கசிந்தது.

“நா போகல. அந்தப் பொண்ணு உயிர் துடிக்கறத பாத்தியா? ஏன் இப்படி பண்ணிக்கறாங்க? இப்ப அவ ஒடம்புக்குள்ள ஒரு குருஷேத்ர யுத்தம்… தவறின தன்வாள் தன்னை வெட்றாப்ல தானே இது…” என்று கையை எடுத்து வலது காதை தேய்த்துக்கொண்டாள். மீண்டும் மீண்டும் அந்தக்கை வலது காதை தேய்த்துக் கொண்டிருந்தது.

“சும்மா இருக்க மாட்டியா விஜீ… எல்லாத்தையும் ஓவரா கற்பனை பண்ணிக்கிட்டு… உன்னோட கை எவ்வளவு சில்லுன்னு இருக்கு பாரு. ஒரு டீச்சராக வேண்டியவ இவ்வளவு பதட்டப்பட்டா எப்படி? அவளுக்குத் திமிரு . வேறென்ன?” என்றான் பாலு. மனோ எதுவும் பேசாமல் செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பையன் ஒருவன் உள்ளூர்ஆசிரியருடன் வருவது தெரிந்தது. விஜி பாலாவின் தோளிலிருந்து கையை எடுத்தாள்.

பாலு, “இதில என்ன இருக்கு… அவர் வந்தா என்ன?” என்றான்.

இவள், “பயப்படறது தெரியக்கூடாது பாலு”, என்றாள்.

“ம்”

கணக்கு வாத்தியார் வேகநடையில் வேட்டி சட்டையில் வந்தார். இந்த உடையில் சாதாரண தந்தையைப் போல இருந்தார்.

படிகளில் ஏறும்போதே, “யாருக்கிட்ட கேட்டு கிளாஸ் வச்சீங்க. நீங்க என்ன இங்க வொர்க் பண்ணவா வந்திருக்கீங்க? அதிகப் பிரசிங்கத்தனம். பிள்ளை எப்படி இருக்கு?” என்று குரலை உயர்த்தினார்.

“ஒன்னும் சொல்லல சார்”, என்றான் பாலா.

“ஐ திங்க் யூ ஆர் எ பர்பெக்ட் ஒன்”

“சார் ஹெச்.எம் சார்க்கிட்ட கேட்டுதான் வச்சோம். இந்த பொண்ணு இப்படி செஞ்சதுக்கும் பாலுவோட பெர்பெக்ஸனுக்கும் என்ன சம்மந்தம்?” என்ற விஜியைப் பார்த்து புருவங்களை சுருக்கிய கணிதஆசிரியர், “சட் அப்..” என்றபடி மனோ பக்கம் பார்வையை மாற்றினார்.

“ஸ்கூல் டேவா இருந்தா மட்டும் என்ன பண்ண முடியும்?”,என்றான் மனோ.

“இடியட். அதாண்டா…” என்றபடி ஆள் அரவம் கேட்டு திரும்பினார்.

வெளியில் வந்த செவிலி கையெழெுத்திட காகிதங்களைக் காண்பித்தாள். அதை வாங்கிய பாலுவிடமிருந்து பறித்த அவர் கையெழுத்திட்டு, “இவங்களும் ஸ்டுடண்ஸ்மா” என்று திருப்பிக் கொடுத்தார்.

“எப்படியிருக்கா?”

அவள், “பிழச்சுக்கும் சார்”, என்றபடி உள்ளே சென்றாள்.

பதறிய உடலும் நடையுமாக வந்த நடுவயது பெண், “நான் என்னடி சொல்லிப்புட்டேன். படிக்கற வயசுல வேற நாட்டம் வேணாண்ணு தானே”, என்ற குரலடைக்க தரையில் அமர்ந்தாள்.

விஜி ஓடிச்சென்று அவளைப் பிடித்து, “பயப்படாதீங்க… காப்பாத்தீட்டாங்க”, என்றாள். அவள் விஜியை மிரளப் பார்த்துவிட்டு மேலும் பதறினாள். தொடுகையிலேயே அவளின் அத்தனை நடுக்கங்களும் தெரிந்தது. தன்னியல்பில் கண்கள் கலங்குவதை விஜி கட்டுப்படுத்தினாள்.

“ஏம்மா பிள்ளங்கள பாத்து பதமா பேசறதில்லயா?” என்றார் சார்.

“என்ன சார் பேசிட்டேங்கறீங்க. ஒன்னுமே சொல்லக்கூடாதா… சொன்னா இந்த வேலயதான் பாப்பேன்னா… போகட்டுங்க,”என்று கத்தினாள்.

“சரிம்மா… சரிம்மா… கோவப்படாதீங்க”

செவிலி வந்து, “பயப்படாதீங்க… ரெண்டுநாள் இருக்கனும். போய் பாக்கலாம்,” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

உள்ளே அமைதியாய் விமலா படுத்திருந்தாள். அந்தம்மாள் விமலாவின் கன்னத்தைப் பிடித்து முத்தம் கொடுத்தபடி கத்தி அழுதாள். சார் விமலாவின் தலையை தடவிவிட்டு கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.

“நீங்க கிளம்புங்க…” என்று சார் மூவரையும் சொல்லிவிட்டு அந்தம்மாவை மெதுவாக அந்த இடத்திலிருந்து தள்ளி அழைத்துப் பேசத் தொடங்கினார்.

“சிங்கம் உறுமுது…” என்று தொடங்கிய விஜியை பாலு முறைத்ததும் அவள் பேசுவதை நிறுத்தினாள்.

“வேறொருத்தர்ன்னா நம்மள டென்சனாக்கி, நம்மையே கைய காட்டி விட்டுருப்பாங்க”, என்ற பாலு  நடந்தான். மனோவின் உடல் நடுக்கத்தை அருகில் நடந்த கணத்தில் உணர்ந்த விஜி, அவன் விலகியே நின்று கொண்டிருந்ததை நினைத்துக் கொண்டாள்.

இரு புறமும் செடிகள் அடர்ந்த அகலம் குறைந்த பாதையில் நடந்தார்கள். “இன்னக்கி காப்பாத்தியாச்சு… இந்த மாதிரி யோசிக்கற பிள்ளைய காவலா காக்க முடியும்?” பாலு முகத்தில் சலிப்பைக் காட்டினான்.

மனோ, “இனிமே மேக்சிமம் அப்படி செய்யமாட்டா…” என்றான்.

“அவ்வளவு உறுதியா எப்படி சொல்ற?”

“இதமாதிரி நானும் நினச்சவன்தாண்டா. யூ. ஜி முடிச்சதும் அவளுக்கு கல்யாணம் பண்ணி… எனக்கு கருமாதி பண்ற நேரம் வந்திச்சு… எத்தனையோ காரணங்கள்…” என்று பெருமூச்சு விட்டான்.

“அந்த வயசில என்ன பண்ண முடியும்?”

“அதான்… செத்துப்போலான்னு முடிவு பண்ணினேன்,”

“நீயா!” என்றான் பாலா.

விஜி, “ஒரு பையனுக்கும் பொண்ணுக்குமான அன்பு… ச்… எதுக்கு மழுப்பல்… காதல்  எப்பவும் ஆச்சர்யம், எப்பவுமே கேள்வி, எப்பவுமே பிரச்சனை…”என்று உதட்டைப் பிதுக்கி முகத்தைச் சுளித்தாள்.

மனோ ,“அந்த வயசில பெரிய மேஜிக்கும்தான்… எல்லாமே அழகா தெரியும்,” என்றான்.

பாலு,“அது சலிப்பானதும்தான்,”என்றான்.

எங்கிருந்தோ பேசுபவன் என மனோ, “அம்மா என்னை புரிஞ்சுகிட்டா… எங்கூடவே இருந்தா. சின்னப்பிள்ளையில அவக்கூடதான் படுத்துப்பேன். பத்தாவது பரீட்ச்சைக்கு படிக்க தனியா தூங்க ஆரமிச்சபிறகு எனக்கு தனி படுக்கைதான். நான் விமலா மாதிரி முடிவெடுத்தப்ப மறுபடியும் என் நெஞ்சில ஒரு கைய வச்சி தூங்க ஆரமிச்சா… எங்கூடவே இருந்தா. அதப்பத்தி எதுவும் பேச மாட்டா. நான் மூணு மாசம் வீட்டவிட்டு வெளிய போகல. மறுபடியும் எம்.எஸ்.சி முதல் நாளன்னிக்கி காலையில குளிச்சிட்டு துண்டோட வந்தப்ப அம்மா வீணைச் சத்தம் கேட்டுச்சு. நான் தோட்டத்து படியில நின்னுட்டேன். அந்த ராகத்துக்கு … காத்தில நடுங்கற கொடி மாதிரி ஒரு நடுக்கம்… பின்ன அதுவே எதுத்து நிக்க பண்ற பேலன்ஸ் மாதிரி எப்படியோ மாறிடுச்சு. வீணை நின்ன பிறகு பாத்தா அப்பா ஹாலில் உட்காந்திருந்தார். நான் மெதுவா வீட்டுக்குள்ள போய் நின்னேன். பூஜை ரூமிலருந்து வந்தவ பாஞ்சு என்னய கட்டிப் பிடிச்சுக்கிட்டா… இந்த முதுகுல இன்னமும் அந்தக் கை சூட்டோட இருக்கறாப்ல இருக்கு,” என்று முன்னால் பார்த்தபடி நடந்தான். மெயின் ரோட்டிற்கு வந்திருந்தார்கள்.

“அது ஒண்ணுமில்ல மனோ… இயற்கையாவே அந்த வயசில ஹார்மோனல்…” என்று தொடங்கிய விஜியின் தோளில் ஓங்கித்தட்டி, “என்னப்புள்ள நீ… அவன் என்ன சொல்றான்… நீ என்னத்த பேசற… வாயமூடிக்கிட்டு வா…” என்ற பாலுவை முறைத்துவிட்டு தோளைத் தடவியபடி வேகமாக நடந்து மனோ பக்கம் சென்றாள்.

பாலு மனோவிடம், “ரூமுக்கு போய் கொஞ்சநேரம் தூங்கிட்டு வேலயப்பாரு… விஜீ நீ ஒழுங்கா ஹாஸ்ட்டல் போய் சேரு,” என்றபடி  பேருந்தில் ஏறிக் கொண்டான்.

மீண்டும் மனோ, “நீ சொல்றாப்ல அந்தவயசில… வெய்யிலுக்குப் பின்னாடி நல்லமழ வந்து சட்டுன்னு நின்னாப்ல ஒரு ஏமாத்தம்…கோபம் , அதத்தாண்டி என்னமோ… இந்த வயசில உணர முடியாது விஜி. எல்லாத்துக்கும் காலத்துக்கிட்ட செக் உண்டுல்ல,” என்றான். விஜி தன்னுள் ஆழ்ந்தாள். அவர்கள் நின்றிருந்த புளியமரத்தின் நிழலில் குட்டி இலைச்சருகுகள் காற்றில் சுழன்று சுழன்று விழுந்தன.

மனோ, “விமலா அம்மாவுக்கும், அவளுக்கும் குடிக்கறதுக்கு ஜூஸ், சாப்பிட எதாவது  வாங்கி குடுத்திட்டு வர்றேன்,” என்று சுற்றி கடைகளைப் பார்த்தான்.

விஜி அவன் முதுகில் கை வத்து, “உண்மையாலும் சாகனுன்னு தோணுச்சா?!” என்றாள்.

“அது எப்பவுமே சந்தேகப்படற விஷயம்தானே…..”என்ற மனோ, விஜியின் கண்களைப் பார்த்து, “எல்லாத்துக்கும் காரண காரியம் தேடாத விஜி… படிப்பால உலகத்தப் பாக்காத…” என்றான்.

“பின்ன?” என்றவளைப் பார்த்து புன்னகைத்த மனோ, “நீ ஃபிசியாலஜி படிச்சத வச்சு அந்த பொண்ணுக்கு இப்ப எவ்வளவு கஸ்ட்டன்னு புரிஞ்சுகிட்ட மாதிரி , அதில மனச போட்டுப்பாரு. இப்ப என் முதுகில நீ கை வச்சிருக்கறது எதுக்கு? நீ எதாச்சும் சொல்வ… ஆனா அன்னிக்கு அம்மா வச்ச அதே கை,” என்றான்.

“இது ரொம்ப பைத்தியக்காரத்தனமா இருக்கு. மதர் அபெஃக்சென்ங்கறது …” என்று ஆரம்பித்த விஜியின் கையைப் பிடித்து நெரிசலாக சாலையைக் கடந்த மனோ, “நான் அப்படித்தான்… நீ இப்படித்தான் .என்னால உன்னப் புரிஞ்சுக்க முடியும்… உன்னால எப்பவுமே என்னைப் புரிஞ்சுக்க முடியாது…  நீ படிச்சத, நீ எப்படி இருக்கனுன்னு மத்தவங்க சொன்ன குப்பைகளை உன்மேல போட்டு மூடிட்ட. நீதான்  உதறனும்….”என்று சிரித்தபடி, “கண்ண உருட்டி உருட்டி கேள்வியா யோசிக்காம பாதையப் பாத்துப் போ..”என்றபடி கடைக்குள் நுழைந்தான் .புழுதி மங்கலாக்கிய சாலையில் மதிய வெயிலில் பசியுடன் விஜி நடந்தாள்.

 

 

 

 

 

சலூன் – சங்கர் சிறுகதை

சங்கர்

எங்கள் தெருவில் புதிதாக ஆரம்பித்திருந்த பிரபல சலூனிற்கு அழைத்திருந்தேன். “சீனியர் இல்லை. ட்ரைனீதான் இருக்கிறார் உங்களுக்கு ஓக்கேவா?” என்று மறுபடி அழைத்துக் கேட்டார்கள். “இல்லை, நாளை வருகிறேன்,” என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

திரும்பினால் அம்மா. “ஏன்டா… முடிவெட்ட போகலயா?”

“இல்லம்மா… ஸ்பெசலிஸ்ட் இல்லயாம்”

“முடிவெட்றதுல என்னட ஸ்பசெலிஸ்ட்… எதுக்குத்தான் இப்படி காசக் கரியாக்குறியோ… நீ ஸ்கூல் படிக்கும்போது உனக்கு பழனி வெட்டிவிடுவான் நியாபகம் இருக்கா… அஞ்சோ பத்தோதான் வாங்குவான்.. ஆனா நல்ல ஒட்ட வெட்டிவிடுவான். இப்ப என்னடான்னா நாலு முடிய வெட்டிக்கிட்டு வந்து எழ நூறு ரூபா ஆச்சுங்கிற. மணி பத்தாகப் போகுது சீக்கிரம் வேற எங்கயாச்சும் போய் வெட்டிட்டு வாடா. ஊர்ல வேற கடையா இல்ல? வெளக்கு வைக்கிற நேரத்துல அப்றம் முடிவெட்டப்போறேன்னு கிளம்புவ…”

“நீ எப்பத்தான்மா மாறுவ?”

“என்னடா மாறனும்?”

ஒரு நொடி அமைதியாக இருந்தேன். “இப்பயும் ஸ்கூல் பையனாட்டம் ஒட்ட வெட்டிப்பாங்களா?”

“ஆமா, அப்றம் தல வலிக்குது. தலைல நீர் கோத்துருக்குன்னு யாரு சொல்றா, நானா நீயா?” அம்மா அடுத்த பத்து நிமிசத்திற்கு பேசுவார் என்று தெரியும். சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினேன்.

பழனி. அம்மா ஒவ்வொரு முறை முடிவெட்டப் போகும்போதும் சொல்வதாலோ ஏனோ அவரை இன்றுவரை நான் மறக்கவில்லை. அல்லது வேறு காரணங்களுக்காகவும் இருக்கலாம்.

“அம்மா பழனி வந்துருக்கான்மா”

“முடிய நல்லா ஒட்ட வெட்ட சொல்லு. போன வாரந்தான் வெட்டுனது. அதுக்குள்ள காடு மாதிரி வளந்து நிக்குது”

கிணத்தடியில் பையுடன் உட்கார்ந்திருந்தார் பழனி. காதுக்கு மேலே இரண்டு பக்கமும் கொஞ்சம் கருப்பு முடி இருந்தது. மற்ற இடங்களிலெல்லாம் அவர் சிரிப்பைப் போல் பளிச்சென்று இருந்தன.

“பழனி, நீ இன்னைக்கு பொடனி பக்கம் கோடு போடாத. அப்படியே விட்று. கிருதாவும் எடுக்க வேணாம்”

“அய்யோ அம்மா வையும் சாமி…” என்று சொல்லிக்கொண்டே முடியை வெட்டத் தொடங்கினார்.

ஒவ்வொரு முறை முடி வெட்டும்போதும் நான் சொல்லும்படி வெட்டுமாறு அவரிடம் கெஞ்சி, அழுது புரள்வேன். பள்ளியில் வித்தியாசமாக தெரியவேண்டும் என்பது ஆசை. ஆனாலும் ஒவ்வொரு முறையும் அம்மா சொல்லும்படியே வெட்டுவார். ஏறக்குறைய மொட்டையடித்த மாதிரிதான் இருக்கும்.

“தீவாளிக்கு ஊருக்கு போலையா?” என்று கேட்டார்.

“போறோம்…” என்றேன் விசும்பலுடன். “பழனி… ப்ளீஸ், கிருதாவ எடுக்காத, ப்ளீஸ்.”

“அம்மா வையும் சாமீ… அழுகாம திரும்பு…” அழுகையை அடக்கமாட்டாமல் கத்தத் தொடங்கினேன். அம்மா அடுப்படியிலிருந்து வந்தார். ” அம்மா…ப்ளீஸ்மா… முடிய ஒட்ட வெட்ட வேணாம்ன்னு சொல்லும்மா. கிருதாவ எடுக்க வேணாம்மா…”

“டேய்… சளி புடிச்சுக்கிட்டே இருக்கு. எத்தன தடவ ஒரு மாசத்துல ஆஸ்பிடல் போறது,.. ஒழுங்கா ஒட்ட வெட்டிக்க,” என்று சொல்லிவிட்டு மீண்டும் வீட்டுக்குள் போய்விட்டார். அன்று கடவுளுக்கும், பழனிக்கும் என் அம்மாவுக்கும் இரக்கமே எல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். அம்மா சொன்னபடியே வெட்டிவிட்டு இரண்டரை ரூபாயையும், நான்கு மாம்பழங்களையும் வாங்கிக்கொண்டு சென்றார் பழனி.

ஊரில் இரண்டு முடிவெட்டும் கடைகள் இருந்தன. பழனி மட்டும்தான் வீட்டிற்கு வந்து வெட்டிக்கொண்டு இருந்தார். எனக்கு கடைக்குச் சென்று முடி வெட்டிக்கொள்ள வேண்டுமென்று ஆசை. ஆனால் அதற்கு ஒன்றரை கிலோமீட்டர் நடந்து வர வேண்டும். அப்பாவிடம் சைக்கிளில் கொண்டு வந்து விடச் சொன்னால், ” எதுக்கு கடைக்குலாம் போகனும்… அதான் பழனி வர்றான்ல…” என்பார்.

அடுத்தடுத்த முறைகளும் அதே கதைதான். நான் அழுவதும் அவர், “அம்மா வையும் சாமீ,” என்பதுமாய் சென்றன. ஒரு மாதம் கழித்து வந்த அன்று எப்போதும் இருக்கும் அந்த பளிச் புன்னகை அவர் முகத்தில் இல்லை. அதே சமயம் கோபமாய் இருப்பதாயும் இல்லை.

பழனி வெட்ட ஆரம்பித்தார். எப்படியும் நான் சொல்லும்படி வெட்டப்போவதில்லை என்பதால் போன முறையிலிருந்தே அழுகையை நிறுத்தியிருந்தேன். “எப்படியோ வெட்டிவிட்டுப் போ,” என்று அமைதியாக உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரம் பழனியும் அமைதியாகவே அவர் வேலையைச் செய்து கொண்டிருந்தார். கிருதாவையும் எடுத்தார். எழுந்திருக்கப் போனவனிடம், “இரு சாமீ,” என்று கண்ணாடியில் பின் கழுத்தைக் காட்டினார். எப்போதும் இருக்கும் கோடு இல்லை. பின் கழுத்தில் இருக்கும் முடியை எடுக்காமல் அப்படியே விட்டிருந்தார். எங்கிருந்தோ வந்த சந்தோசம் என்னைப் போட்டு அமுக்குவது போல் உணர்ந்தேன். “தாங்ஸ் பழனி… தாங்ஸ்” என்று கத்தினேன். வந்ததிலிருந்து அமைதியாக இருந்தவர் அப்போது மெலிதாய் ஒரு சிரிப்பை சிரித்தார். பின் காதோரம், “மெயின் ரோட்டுல கடை போட்ருக்கேன். அடுத்த வாட்டில இருந்து கடைக்கு வந்துரு,” என்றார். நான் அவர் சொன்னதை சரியாய் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. எனக்கு சந்தோசம் தலைக்கு மேல் ஓடியதால் குடுகுடுவென்று ஓடி அம்மாவிடம் தண்ணீர் வைக்கச் சொன்னேன்.

ஒரு மாதம் ஓடியது. பழனி அந்த ஒரு மாதத்தில் ஒரே ஒரு முறை மட்டும் வீட்டிற்கு வந்தார், அப்பாவிற்கு முடி வெட்ட. தம்பிக்கு வெட்டச் சொல்லி அனுப்பியபோது வரவில்லை. எனக்கு அப்போதுதான் நினைவிற்கு வந்தது. அம்மாவிடம் பழனி கடை போட்டிருக்கும் விசயத்தைச் சொன்னேன். “கடைல போய் வெட்டனுமா?” என்று ஒரு நிமிடம் பார்த்தவர், “அதெல்லாம் வேண்டாம். நான் பாத்தன்னா இங்கயே வந்து வெட்டிவிடச் சொல்றேன். நீ போய் விளையாடு,” என்றார்.

அப்பாவின் கடைக்குச் செல்லும் வழியில் இருந்த முடிவெட்டும் கடைகளின் பக்கம் தலையை எதேச்சையாய் திருப்பினேன். குப்பென்று வேர்த்துவிட்டது. பயந்து போய் யாரும் பார்த்துவிடுவதற்குள் ஓடத் தொடங்கினேன்.

திரும்பி வரும்போது அப்பாவும் உடன் இருந்தார். அந்த முடிவெட்டும் கடை வந்தவுடன் தலையைத் திருப்பலாமா வேண்டாமா என்று ஒரே குழப்பம். பயம். ஆனாலும் பார்க்க வேண்டுமென்று ஏதோ ஒன்று உந்தியது. ஏற்கனவே கிரிக்கெட் விளையாடும்போது அந்தக் கடையைப் பற்றியும், கடைச் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்ட்டரைப் பற்றியும் இரண்டொரு முறை சண்முகம் பேசியிருக்கிறான். சேலை விலகிய நிலையில் இருக்கும் அந்த பெண்ணின் போஸ்ட்டரை நான் பார்ப்பது அதுதான் முதல் முறை என்பதால் உண்டான பயம் இன்றைக்கும் ஒரு மெல்லிய புன்னகையைத் தந்துகொண்டிருக்கிறது.

அம்மா எப்போது பழனியிடம் பேசினார் என்று தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தூங்கி எழுந்து வரும்போது கிணற்றடியில் தம்பிக்கு முடிவெட்டிக் கொண்டிருந்தார். வெட்டி முடித்தவுடன் அவன் காதிலும் ஏதோ சொன்னார். நினைத்தபடியே வீட்டிற்குள் வந்தவன், “அம்மா பழனி கடைக்கு வரச்சொல்றான்மா,” என்றான்.

அம்மாவிற்கு கோபம் வந்துவிட்டது. அவரிடம், “ஏன் பழனி பசங்ககிட்ட என்ன சொல்லற ஒவ்வொரு தடவயும்”

“இல்ல தாயி, முன்ன மாதிரி நடக்க முடியல. காலு ரொம்ப நோவுது, அதான் கடைப் பக்கம் வரச்சொன்னேன்…”

“அவரு வீட்ல இருக்கறது ஒரு நாளுதான் பழனி. அன்னைக்கும் கடைக்கு கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லலாம் முடியாது. நீ வேணா அஞ்சு ரூபா வாங்கிக்க, நானும் வீட்டுக்கு எடுத்துட்டுபோக எதுனாச்சும் தர்றேன். நீ வீட்டுக்கே வந்து வெட்டிவிட்டுப் போ,” என்றார். பழனி எதுவும் பேசவில்லை. அமைதியாகச் சென்றுவிட்டார்.

அந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு ஓரிரு முறை வீட்டிற்கு வந்தார் பழனி. ஒவ்வொரு முறையும் கடையில் கண்ணாடிகள் வாங்கியிருப்பதாயும், சுத்தும் சேர் வாங்கியிருப்பதாயும் சொல்லுவார். ஆனால் கடைக்கு வா என்று கூப்பிடவில்லை. எனக்கு அவர் கடைக்குப் போகவேண்டும் போலிருந்தது. ஒருவேளை அவர் கடைகளிலும் போஸ்டர்கள் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர் கடையை ஒரு முறை கூட நான் பார்க்கவில்லை. மெயின் ரோட்டில் இருந்த இரண்டு கடைகள் மட்டும்தான் நாங்கள் அந்த ஊரைவிட்டு வரும் வரை இருந்தன. அப்பா என்னை சைக்கிளில் கூட்டிக்கொண்டுபோய் முடிவெட்டிக் கூட்டிக்கொண்டு வரத் தொடங்கிவிட்டிருந்தார்.

அன்னை – தன்ராஜ் மணி சிறுகதை

தன்ராஜ் மணி

“உன்ன அனுப்புறதா இல்ல, அந்த கெழவிக்கு இதே வேலையாப் போச்சி, எப்ப பாரு ட்ராமா போட்டுக்கிட்டு,” பால் பாத்திரத்தை நங்கென்று அடுப்பின் மேல் வைத்தாள் கெளசல்யா.

சாந்தாவிற்கு சத்தத்தில் பல் கூசியது, பல்லை நாவால் தேய்த்துக் கொண்டார்.

“எல்லாம் நீ குடுக்குற எடம்,” என்றாள் சீறலாய். “கொழந்த பொறந்தா அவ அவ அம்மா வருஷக்கணக்கா வந்து இருந்து பாத்துக்குராங்க, எனக்குப் பாரு கொடுப்பினைய, எடுத்ததே ஆறு மாச விசாதான் அதுல ரெண்டு மாசம் கூட முழுசா முடியல, அதுக்குல்ல போறேனு நிக்கற.” கெளசல்யாவின் தோள்கள் குலுங்க, கேவல் ஒலி எழுந்தது.

“பொறந்து ரெண்டு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள, மகதி எம்மூஞ்ச பாத்து பாத்து சிரிக்குது, எனக்கு மட்டும் அத உட்டுட்டு போகனும்னு ஆசயா கெளசி? ஆறு மாசம் அதுகூட இருந்துட்டு உனக்கும் ஒத்தாசயா இருக்கனும்னுதான் ஆச. உடம்பு முடியலனு சொன்னா என்ன பண்ண முடியும்?”

“இதெல்லாம் உன்ன அங்க வர வைக்க அந்த கெழவி போடுற நாடகம். அத்தனை பேரு அங்க இருக்காங்க, அது போதாதா அதுக்கு. காய்காரம்மா பாக்யத்துக்கு பணங்குடுத்து டெய்லி வந்து பேசிட்டு இருக்கச் சொல்லிட்டுதானே வந்திருக்க? அது பத்தாதுனு ஒரு நாடகம் கூட மிஸ் பண்ணாம பாக்கனும்னு அதோட ரூம்ல புது டிவி வாங்கி வெச்சிருக்க, மணியண்ணன்கிட்ட தெனம் அதுக்கு புடிச்ச அயிட்டம் ஒன்னாவுது பண்ணிருனு சொல்லியிருக்க, அப்பாவையும் அருணையும் வேற, அது எது சொன்னாலும், கத்தினாலும் வாயே தொறக்ககூடாதுனு மெரட்டி வெச்சிட்டு வந்திருக்க, இதெல்லாம் எனக்கு தெரியாதுனு நெனச்சியா?. ஒரு ஆறு மாசம் அந்த கெழவி நீ இல்லாம இருக்காதா? உடம்பெல்லாம் விஷம்,” என்றாள், அழுகையை நிறுத்தாமல்.

“அங்க இல்லாதப்போ ஒண்ணுக் கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா…”

“அடேயப்பா! அப்படியே பொட்டுனு போயிரும் உங்கொம்மா. எல்லார் உசுரயும் எடுத்துட்டுதான் அது போகும்,” கண்ணைத் துடைத்துக் கொண்டே பாலை அடுப்பு பாத்திரத்தில் இருந்து டம்பளரில் ஊற்றினாள். காபித்தூள், சர்க்கரை போட்டு கலக்கி எடுத்துக் கொண்டு மாடிப்படி ஏறினாள்.

சற்று நேரத்தில் குழந்தையுடன் கீழே வந்தாள். குழந்தையை ராக்கரில் போட்டுவிட்டு சமையலறைக்கு வந்தாள். சாந்தம்மா உணவு மேஜையில் அமர்ந்த்து அழுது கொண்டிருந்தார்.

மகளைப் பார்த்தவுடன் கண்களைத் துடைத்துக் கொண்டு, “கிளம்பும்போதே இப்பிடி உட்டுட்டு போகாதன்னு புலம்பிகிட்டே இருந்துச்சு, ஏதாவுது ஆயிருமோனு பயமா இருக்கு, நான் போறண்டி”

“போ, அப்புறம் உனக்கு மக இருக்கானு மறந்திரு”

“ஏண்டி இப்படி பேசற”

“முப்பது வருஷமா மருமகன் வீட்டில ஒக்காந்துகிட்டு எல்லாத்தையும் ஆட்டி வெச்சிக்கிட்டு இருக்கு, அது சொல்ற ஆட்டத்தை எல்லாம் நீயும் ஆடிக்கிட்டு இருக்க. நிஜமாத்தான் சொல்றேன், பொண்ணு வேணுமா அம்மா வேணுமானு நீயே முடிவு பண்ணிக்கோ”

“எல்லாருக்கும் வயசாகும் கெளசி”

“சாபம் உடுறியா உடு. உன்ன மாமியார் இருந்தாக்கூட வேலை வாங்காத அளவுக்கு வேல வாங்கிட்டு இருக்கு அது. தெனம் இதப்பண்ணு அதப்பண்ணு, அதை அங்க வெக்காத இங்க வை, டிவியை போடு சீக்கிரம்னு விரட்டிகிட்டே இருக்க மகராசிக்கு தான் உன்கிட்ட எப்பவும் பவசு.”

கெளசி காய்கறிகளை ப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெட்டத் தொடங்கினாள். சாந்தம்மா, “இங்க குடு நான் வெட்றேன்,” என்றார்.

“ஒன்னும் வேணாம் நானே பண்ணிக்கிறேன், போய்டியினா நான் தானே பண்ணனும்.”

ரகு படியிறங்கும் ஓசை கேட்டது.

எடுத்து வந்த காலி காபி கோப்பையை சமையலறை சிங்கில் போட்டான். அவனை பார்க்காமலே, “மெதுவா இறங்க மாட்டிங்களா, கொழந்த தூங்குதில்ல,” என்றாள் கெளசி.

ரகு சிரித்துக் கொண்டே “என்ன காலங்காத்தால அம்மா பொண்ணு சண்டையா?” என்றான். பேசிக்கொண்டே சாந்தம்மா அமர்ந்திர்ந்த உணவு மேஜையைக் கடந்து சென்று தோட்டக் கதவின் திரைச்சீலைகளை விலக்கினான் . கண்ணாடியால் ஆன இரட்டைக் கதவுகள் வழியாக தோட்டத்தில் இருந்து சூரிய ஒளி உள்ளிறங்கியது.

சாந்தம்மா தணிந்த குரலில் ” காலையில ஊர்ல இருந்து போன் வந்தது, கெளசி பாட்டிக்கு ஒடம்பு செரியில்லனு”

“என்னாச்சு?”

“ப்ரஷர் ரொம்ப கம்மியா இருக்காம், எந்திரிக்கவே முடியலயாம். சாப்ட்டே ரெண்டு நாள் ஆச்சாம், பால்தான் ஸ்பூன்ல…” சொல்லி முடிக்கும் முன்னே அழ ஆரம்பித்துவிட்டார்.

“ஆஸ்பிடல் கூட்டிடு போலயா அத்த?”

“ஒண்ணும் பெருசா பண்ண முடியாது வீட்லேயே வெச்சுப் பாருங்கனு சொல்லிட்டாங்களாம்”

“சாப்புடாம தர்ணா பண்ணா ப்ரஷர் எறங்கதாம் செய்யும்,” சீறலாய்ச் சொன்னாள் கெளசி.

” சாப்பிட முடியலயாம்டி” என்றார் சாந்தம்மா.

ரகு போனை எடுத்து டயல் செய்தான்.

“மாமா, ரகு. ஹாங் நல்லா இருக்கேன். பாட்டிக்கு எப்படி இருக்கு?”

“…”

“ம்”

“…”

“ம்”

“…”

“ம்”

“சரி நீங்க பாருங்க, நான் மத்தியானத்துக்கு மேல போன் பண்ணிச் சொல்றேன்”, போனை வைத்தான்.

“என்ன, அனுப்பி வைங்கனு சொல்றாரா, குடுங்க போனை,” என்று ரகுவை நோக்கி வந்தாள் கெளசி.

” கெளசி,” என்றான் ரகு சற்று குரலை உயர்த்தி.

“ஆமா என்ன மெரட்டி அடக்குங்க,” என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள்.

“சீரியஸாதான் இருக்கு கெளசி, கொழந்த மாதிரி பண்ணிட்டு இருக்காத. அத்த, உங்க டிக்கெட் ப்ரிண்ட் அவுட் குடுக்கிறிங்களா, இப்பவே போன் பண்றேன்,” என்றான் ரகு

சாந்தம்மா முந்தானையில் கண்ணைத் துடைத்துக் கொண்டு டிக்கெட் எடுக்க மாடிப்படி ஏறினார்.

சாந்தம்மா லண்டன் வந்து ஒரு வாரம் வரைக்கும் பாட்டி நன்றாகத்தான் இருந்தார். அதன் பிறகுதான் சரியாக சாப்பிட முடியவில்லை, இரவெல்லாம் தூங்காமல் கத்துவது என்று ஒன்றொன்றாக ஆரம்பித்தது. இரண்டு நாளாக படுத்த படுக்கை.

சாந்தம்மாவிற்கு குற்றவுணர்ச்சி வாட்டியது. எப்படியாவது அங்கு போய் சேர்ந்து விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார். ரகு அன்று மதியமே கிளம்பும் படி பயணச்சீட்டை மாற்றிக் கொடுத்தான். கெளசி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அது வேறு சாந்தம்மா மனதை சங்கடப்படுத்தியது.

பெட்டியில் அனைத்தையும் எடுத்து அடுக்கிவிட்டு கீழே வந்தார். அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. குழந்தையை ஸ்ட்ராலரில் போட்டு எடுத்துக் கொண்டு ஒரு நடை போக கிளம்பினார்.தினமும் செய்வதுதான். கெளசி கதவை மூட வரும்போது ஏதோ சொல்ல வந்து எதுவும் சொல்லாமல் மூடிவிட்டுச் சென்றாள்.

கோடைக்கால லண்டன் தெரு வண்ணமயமாய் இருந்தது. தெருவின் இரு மருங்கிலும் பிங்க் செர்ரி ப்ளாசம்களும், தங்கச் சங்கிலி மரம் எனப்படும் கொத்து கொத்தாக மஞ்சள் நிற பூக்கள் பூத்துக் குலுங்கும் லேபர்னம் மரங்களும் நின்றன. பூத்து நிற்கும் இம்மரங்களுக்கு நடுவில் நடப்பது அந்த சோகமான மனநிலையிலும் சாந்தம்மாவிற்கு இதமாக இருந்தது. குழந்தையை தள்ளிக் கொண்டு வழக்கமாக செல்லும் பூங்காவிற்கு சென்று ஒரு பெஞ்சில் அமர்ந்தார்.

அவர் முன்னால் பழமையான ஓக் மரம் பெரிய புல்வெளியை பார்த்து நின்றுக் கொண்டிருந்தது, அதைச் சுற்றிலும் பல வண்ணங்களில் பூத்த ரோஜா பாத்திகள். சுற்றியிருந்த இயற்கையின் வண்ணங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து எந்த எண்ணமும் இல்லாமல் ஒவ்வொரு நிறமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

எப்போதும் போல பூங்காவில் நாய் எஜமானர்கள் தங்கள் நாய் மலம் கழிக்கும் வரை நின்று அதை பாலிதீன் பையில் அள்ளி கையில் வைத்துக் கொண்டு குப்பைத் தொட்டியை கண்ணால் தேடியபடி நடந்தனர். வயதான பாட்டிகள் சக்கரம் வைத்த பைகளைத் தள்ளிக் கொண்டு சிரித்து பேசிக் கொண்டே கடந்து சென்றனர். இவர்களுக்கெல்லாம் கெளசியின் பாட்டியைவிட பத்திருபது வயது அதிகமாகவே இருக்கும். இந்த ஊரில் வயதானவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தங்குவதில்லை, தனியாகத்தான் வாழ்கின்றனர் என்று கெளசி சொல்லியிருக்கிறாள். இங்கு வரும் வரை குழந்தைகள் ஆதரவில்லாமல் தனியாக இருப்பதால் இங்கிலாந்தில் வயதானவர்கள் எல்லோரும் சோகமாக வானத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பார்கள் என்றே சாந்தம்மா நினைத்திருந்தார். சிரித்துக் கொண்டு, உற்சாகமாய் சுற்றித் திரியும் இந்த பாட்டிகளை பார்த்தால் எப்போழுதுமே அவருக்கு ஆச்சரியம். ஆனால் இப்போது இவர்களைப் பார்த்தவுடன் அம்மாவின் ஞாபகம் அதிகமாக, கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது.

எழுந்து குழந்தையை உருட்டிக் கொண்டு மீண்டும் வீடு வந்து சேர்ந்தார். டி.வி.யில் ஹிந்தி நாடகம் ஓடிக்கொண்டிருந்தது, கெளசி அதைப் பார்க்காமல் போனை நோண்டிக் கொண்டிருந்தாள். யாரிடமோ சொல்வது போல போனில் இருந்து கண்ணை தூக்காமலே, “ஒரு மணி நேரத்துல ஏர்போர்ட் கெளம்பணும், டாக்சி வந்துரும்,” என்றாள்.

“நீயும் வரியா ஏர்போர்டுக்கு?” என்று கேட்டார் சாந்தம்மா. கெளசி எதுவும் சொல்லவில்லை.

சாந்தம்மாவிற்கு மெலிதாய் சிரிப்பு வந்தது, ரகு அலுவலகம் விட்டு வரும் வரை நைட்டியில் உலாத்திக் கொண்டிருப்பவள், டாப்பும் ஜீனும் போட்டு தயாராக உட்கார்ந்திருந்தாள்.

அம்மாவை ஏர்போர்டிற்கு அழைத்துச் சென்று, செக்கின் செய்து, செக்யூரிட்டி கேட் வாசலில் வைத்து, “போய் சேந்ததும் போன் பண்ணு “என்றதை தவிர கெளசி எதுவுமே பேசவில்லை.

தனியாக விமானத்தில் அமர்ந்தவுடன் சாந்தம்மாவிற்கு அம்மாவின் ஞாபகம் அதிகமானது. ஊர் போய் சேருவதற்குள் அம்மா போய் விடுவாளோ என்ற நினைப்பு வந்து கண்ணில் நீர் முட்டிக் கொண்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறு வயது ஞாபகம். சாமிநாதபுரத்தில் குடியிருந்த அந்த ஒண்டிக் குடித்தன வீடு, எந்நேரமும் உடனிருக்கும் விளையாட்டுத் தோழிகள், சாப்பாட்டிற்கே இல்லாவிட்டாலும் சந்தோஷமான நாட்கள் அவை. அப்பாவும் அம்மாவும் சேர்ந்து நூல் தோண்டி, தறி நெய்தால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இரண்டு வேட்டி நெய்ய முடியும். அடுத்த பதினைந்து நாட்களுக்கு அதில் கிடைக்கும் கூலியில்தான் சாப்பாடு. பல நாட்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டம். அவர்களுக்கு இருக்கிறதோ இல்லயோ சாந்தம்மாவிற்கு ஒரு வேளை சாப்பாட்டிற்காவது அம்மா வழி செய்து விடுவார். அப்பொழுதே அம்மா எல்லோரிடமும் அதிகார தோரணையில்தான் பேசுவார், அது அவர் சுபாவம்.அப்பாவும் சாந்தம்மாவும் நேரதிர், வாயே திறக்க மாட்டார்கள்.

பத்தாவதில் அவர் பள்ளியிலேயே முதலாவதாக சாந்தம்மா தேறியிருந்தார். அம்மாவிடம் தாயார் மடத்தில் இலவச தையல் கிளாஸ்ஸில் சேர்த்துவிட்டால் அவர்களே கற்றுக் கொடுத்து, ஒரு தையல் மிஷினும் கொடுப்பதாக யாரோ சொல்ல, மேற்கொண்டு படிக்க வேண்டாம் நீ தையல் கற்றுக் கொள்ள போ, என்று சொல்லிவிட்டார். க்ரேஸி மிஸ் வீட்டிற்கே வந்து, பெண்ணைப் படிக்க வையுங்கள், என்று எவ்வளவோ கேட்டுப் பார்த்தார், அம்மா பிடிவாதமாக மறுத்து விட்டார்.

தையல் கிளாசில் சேர்ந்த ஒரு மாதத்திலேயே கெளசியின் அப்பா வீட்டுக்காரர்கள் பெண் கேட்டு வர, கல்யாணமும் அந்த வயதிலேயே முடிந்து விட்டது. திருமணமான ஓரிரு வருடத்திலேயே அப்பா இறந்துவிட்டார், அப்பொழுதிருந்து அம்மா சாந்தம்மா வீட்டில்தான் இருக்கிறார். நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது சாந்தம்மாவிற்கு, அம்மா சொன்னதை இது நாள் வரை ஒரு முறை கூட மறுத்துப் பேசியதேயில்லை. விமானத்தில் இருந்த பத்து மணி நேரமும் தூக்கமும் இல்லாமல், கொடுத்த எதையும் சாப்பிடவும் முடியாமல் இந்நினைவுகளுடன் சங்கடமாக நெளிந்து கொண்டே இருந்தார்.

அழைத்துச் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த அருண், பார்த்தவுடன், “அதுக்கு ஒன்னும் இல்லமா, உன்ன பாத்தா சரி ஆயிடும் வா,” என்றவன் காரில் ஏறிய சிறிது நேரத்தில் அவனாகவே “ நைட்லாம் ஐயோ ஐயோனு கத்துது, எனக்கே பயமா இருக்கு, யாருக்குமே தூக்கம் இல்ல,” என்றான்.

காரை வழியில் எங்குமே நிறுத்த விடவில்லை சாந்தம்மா. சேலம் வந்து சேர்ந்தவுடன், வீட்டு பக்கத்தில் இருக்கும் ரோஷன் பேக்கரியில் நிறுத்தி தேங்காய் பன் வாங்கி வர சொன்னார். சாந்தம்மாவின் சிறுவயது தோழி அனிதாவின் குடும்ப கடை அது. “ஒன்னுமே சாப்புடறதில்லமா,” என்றவனிடம் “என் மனசு திருப்திக்கிடா, போ வாங்கிட்டு வா,” என்றார்.

தேங்காய் பன்னுடனும், நீண்ட பயணத்தின் களைப்புடனும் சாந்தம்மா வீட்டிற்குள் நுழைந்தார்.

அம்மாவை, அவருடைய அறையில் இல்லாமல், வீட்டு ஹாலிலேயே ஒரு ஓரமாய் ஒரு புதிய நைலான் நாடா கட்டிலில் படுக்க வைத்திருந்தனர். தலை மொட்டை அடித்திருந்தது. வாய் எதையோ அனத்திக் கொண்டிருந்தது.

“அம்மா, பாரு சாந்தா வந்திருக்கேன்,” என்று சில முறை சொன்னார்.

“தூங்கிட்டிருக்கு, கொஞ்ச நேரத்துல எந்திரிச்சிரும்,” என்றார் கெளசியின் அப்பா.

“என்னங்க மொட்டை எல்லாம் அடிச்சிருக்கிங்க?”

கெளசியின் அப்பா, “ நீ போன ரெண்டு வாரத்துலயே தலை ரொம்ப அரிக்கிதுனு சொன்னுச்சு. டாக்டர் பாத்திட்டு சொரிஞ்சு சொரிஞ்சு ரொம்ப புண்ணா இருக்கு முடி எடுத்தா தான் மருந்து போட முடியும்னு சொன்னாரு, அதான்.. இதையெல்லாம் சொன்னா அங்க வருத்தப்பட்டிகிட்டு இருப்பனு சொல்லல, போ துணியாவுது மாத்திகிட்டு வா, பத்து நிமிஷத்துல திரும்பி எந்திருச்சிரும்,“ என்றார்.

அம்மாவின் உடல் பாதியாகி இருந்தது, கன்னங்கள் இருக்கும் இடமே தெரியாமல், பற்கள் மிக பெரிதாக தெரிந்தது. அம்மாவின் கைகளை தடவிக் கொண்டும் முகத்தையே பார்த்துக் கொண்டும் அருகில் உட்கார்ந்திருந்தார் சாந்தம்மா. திடீரென்று ஐயோ என்று சத்தமாக, ஆங்காரமாய் ஒரு ஓலம் அம்மாவிடம் இருந்து வந்தது. அவ்வளவு நொய்மையான உடலில் இருந்து வரும் குரலே அல்ல அது. சாந்தம்மாவிற்கு அதிர்ச்சியில் உடல் குலுங்கியது, பற்கள் தாங்கவே முடியாத அளவிற்கு கூசியது. “ஐயோ… ஐயோ… ஐயோ…” வென உக்கிரமான ஜெபம் போல கத்திக் கொண்டே இருந்தார்.

சாந்தம்மா சற்று சுதாரித்து கொண்டு, அம்மாவின் மோவாயை பிடித்து ஆட்டி, சத்தமாக “அம்மா, சாந்தாமா, சாந்தா” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார். கத்தல் மெதுவாக நின்றது. அம்மாவின் வழக்கமான குரல் “வந்துட்டியா..” என்று ஈனஸ்வரத்தில் கேட்டது.

“வந்துட்டேமா, தொட்டுப் பாரு இங்கதான் இருக்கேன்,” சொல்லிக் கொண்டே அவர் கைகளை எடுத்து தன் முகத்தின் மேல் வைத்தார். அம்மாவின் கைகள் சாந்தாவின் முகத்தில் அளைந்தது. அதே ஈனஸ்வரத்தில், “போவாத, உட்டுட்டுப் போவாத,” என்று அனத்தல் எழுந்தது.

“எங்கயும் போவல, உம் பக்கத்துலதான் இருக்கேன், கவலப்படாத, தேங்கா பன்னு சாப்புடிரியா, அனிதா கடைல வாங்கிட்டு வந்தேன்.”

“உம்” என்றார் அம்மா. அம்மாவை தூக்கி சாய்ந்தவாக்கில் உட்கார்த்தி வைத்தார். தேங்காய் பன்னை சிறிதாகப் பிய்த்து, மெது மெதுப்பு வரும் வரை பாலில் சில முறை முக்கி, அம்மாவின் வாயில் வைத்தார். உடனே விழுங்கி விட்டு அடுத்த வாய்க்கு வாயைத் திறந்தது.

“பாரு, நாலு நாளா யாரு எது குடுத்தாலும் வாயே தொறக்கல, நீ ஊட்டுனா கப்பு கப்புனு முழுங்குது,” என்றான் அருண் எரிச்சலாக.

“சும்மா இருடா கொஞ்ச நேரம், இன்னும் கொஞ்சம் பால் கொண்டு வா, போ,” என்றார் சாந்தா.

ஒரு மணி நேரத்தில் பாலில் தொய்த்துக் கொடுத்த முழு பன்னையும் அம்மா சாப்பிட்டு முடித்தார். “சாப்புடலனா உடம்பு என்னத்துக்கு ஆறதும்மா, சாப்புட வேண்டியதுதான,” என்றார் சாந்தா.

“சாப்புட புடிக்கல” என்றார் அம்மா அதே ஈனஸ்வரத்தில்.

“சரி, படுத்துக்கோ. நைட்டு நானே சமைக்கிறேன், என்ன வேணும் உனக்கு?”

“பொங்கலு,” என்றார் அம்மா.

சாந்தம்மா முகத்தில் புன்னகை அரும்பியது. “சரி, பண்ணி தரேன், இப்போ கொஞ்ச நேரம் தூங்கு, நான் தான் வந்துட்டேன்ல, எல்லாம் சரி ஆயிடும்.”

அருண் பாட்டியை முறைத்து பார்த்துவிட்டு எழுந்து போனான்.

சாந்தம்மா வந்திறங்கிய மூன்று நாளில் எழுந்து சற்று நடமாடும் அளவுக்கு உடல் தேறி வந்தது பாட்டிக்கு. தினமும் சாந்தா அவருக்கு அருகிலேயே இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டார், கேட்டதை சமைத்து போட்டார், அனத்தலும் அலறலும் மூன்று நாளில் சுத்தமாக நின்று போனது. நான்காம் நாள் அதிகாலையில் சாந்தம்மா அசந்து தூங்கி கொண்டிருந்தார்.

“சாந்தா, சாந்தா ஏய் சாந்தா,” பிசிரற்ற அம்மாவின் குரல் கூவி அழைக்க திடுக்கிட்டு எழுந்து ஹாலுக்கு ஓடினார். அம்மாவின் முகம் மிகத் தெளிவாக இருந்தது, ஊருக்குப் போவதற்கு முன்னால் இருந்ததை விட நன்றாக இருப்பதாக சாந்தம்மாவிற்கு தோன்றியது. “என்னம்மா,” என்றார்.

“இன்னும் என்ன தூங்கிட்டு இருக்க, வூட்டு வாசல்ல கோலம் போட்டு எத்தன நாள் ஆவுது, நீ போனதுல இருந்து உம் மருமவ கீழ தல காட்றதே இல்ல, போயி கோலத்த போடு.“

“ம்” என்று விட்டு கொல்லைப்புறம் நோக்கி நகர்ந்தார்.

“சாந்தா, அந்த சுப்பரபாதம் டி.வி போட்டுட்டு போ”

ரிமோட் எடுத்து TTD சானலை போட்டு விட்டு, கொல்லைப்புறம் சென்றார். கோல மாவை எடுத்துக் கொண்டு வரும் வழியில் ஊருக்குப் போவதற்கு சில மாதங்களுக்கு முன் நட்ட குட்டை ரக பப்பாளி முதல் காய் போட்டிருப்பதைப் பார்த்து அதை மெதுவாக தடவி கொடுத்தார். அருகில் இருந்த துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து அதை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அடி வயிற்றில் இருந்து ஒரு கேவல் எழுந்தது. கைகளால் வாயைப் பொத்தியபடி குரல் அடக்கி அழ ஆரம்பித்தார்.

தழலாட்டம்- கமல தேவி சிறுகதை

கமல தேவி

சந்தியா விடியலில் எழும்போது இரவு சரியாக உறங்காத அயர்வு எஞ்சியிருந்தது. தலையின் பின்புறம் குறிப்பிட்ட இடத்தில் மெலிதாக எதோ அடைத்த உணர்வு அவளுக்கு எரிச்சலைத் தந்தது. சில மாதங்களாக அவள் எழும்போதே தலைவலியும் எழுந்து கொள்கிறது. தலை வலிக்கிறது என்ற உணர்வு நாள் முழுவதும் இறக்கி வைக்க முடியாத சுமையாக கனத்துக் கொண்டேயிருக்கிறது.

இந்த சில மாதங்களில் அவள் தலைவலியைவிட, அதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது அல்லது யாருக்கும் புரிய வைக்க முடியாது என்று நன்றாக உணர்ந்திருந்தாள். எந்த வலியுமே அவ்வாறுதான் என்று சந்தியா உணர்ந்தபின் மற்றவர்கள் மீதான ஆதங்கமும், வலியை வெளியே சொல்வதும் குறைந்தது.

மார்கழியின் குளிர் அறைக் கதவைத் திறக்கத் தயங்க வைத்தது. தலையில் ஸ்கார்ப்பைக் கட்டிக்கொண்டு கதவைத் திறந்தாள். காத்திருந்த குளிர் சட்டென்று அறைந்து பரவியது. வெளியில் நின்று மேற்கே பார்த்தாள். ஒரு தடயமாகக்கூட கொல்லிமலைத்தொடர் கண்களுக்குத் தெரியவில்லை. வெண்நிற புகையாய் பனி சூழ்ந்து நாடி நரம்புகளை விதிர்க்கச் செய்தது. விறுவிறு என்று தலையில் வலி பரவி பின் மெதுவாகக் குறைந்தது.

சந்தியா கனவில் இருப்பது போன்று கிளம்பி அம்மாவுடன் பேருந்து நிறுத்தத்தை அடையும் நேரத்திலும் குளிர் அப்படியே இருந்தது. மக்கள் மந்திரக்கோலால் ஆளப்படுபவர்கள் போல நின்றிருந்தார்கள். ஆலமரத்து காளைகள்கூட கூலத்தின் மேல் அசையாமல் படுத்திருந்தன.

பக்கத்தில் மணல் மாட்டுவண்டிகளை ஓட்டும் ஒட்ட நாய்க்கர்கள் காளைகள் கழித்துப்போட்ட கூலத்தையும், குச்சிகளையும், பேப்பர்களையும் போட்டுக் கொளுத்தி, தீயைச் சுற்றி அமர்ந்து கைகளை உரசி கன்னங்களிலும், மேல்கைகளிலும் தடவிக் கொண்டிருந்தார்கள். எரிப்பான்களை கொஞ்சம் கொஞ்சமாகத் தீயில் போடவும், தீ தாழாமல் எம்பிக் கொண்டிருந்தது. தீயில் மின்னிய அவர்களின் முகங்களில் சூடு தெரிந்தது. தீ எம்புவதும், கீழிறங்குவதும், காற்றில் சரிவதும், கலைவதும், சீறுவதுமாக நிலையில்லாமல் இருந்து கொண்டிருந்தது.

பச்சை தலைப்பாகை கட்டியிருந்தவர் தீயின் விளிம்பில் கைகளை விரித்துக்காட்டி, பழுப்பு தலைப்பாகைக்காரரின் கன்னங்களில் வைக்கப்போக, அவர் முகத்தைத் தள்ளிக்கொண்டு காவிப்பற்கள் தெரிய சிரித்தார். புன்னகைத்தபடி திரும்பிய சந்தியா, ‘அங்கே போய் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு அமர்ந்தால் எப்படியிருக்கும்?’ என்று நினைத்துக் கொண்டாள். அம்மா வேல்பீடத்தில் அமர்ந்து காளங்கன் தாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்தாள். அனைத்துமே தீ மாதிரிதானே என்று அவளுக்குத் தோன்றியது.

சந்தியா பையைத் திறந்து பணம், மருத்துவமனையின் அடையாள அட்டையை மீண்டும் சரிபார்த்தாள். தலைவலியால் குளிரிலும் அவளுக்கு வியர்க்கத் தொடங்கியிருந்தது. அவளுக்கு எங்காவது அமர்ந்தால் பரவாயில்லை என்று இருந்தது.

ஏற்கனவே வந்திருந்தவர்கள் கருங்கல் பலகை, வேல்பீடங்களில் அமர்ந்திருந்தார்கள். அருகிலிருந்த வண்டியின் கைப்பிடியை பிடித்தபடி நின்றாள். கால் மாற்றி, கால் மாற்றி சலித்து யாரையாவது தள்ளி அமரக் கேட்டு அமரலாம் என நகர்ந்த வேளையில் இருளில் பேருந்தின் ஒலி கேட்டது. முகத்தைச் சுளித்து மூக்கைத் தடவியபடி திரும்பினாள். தீயில் பாலித்தீன் ஒன்று புகைந்து கொண்டிருந்தது.

கடந்து செல்லும் குன்றுகளையும் வயல்களையும் எந்த நினைப்புமின்றி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறுநத்ததைத் தாண்டி காலிமனைகளாகவும், முள்முளைத்த காடுகளாகவும் மாறியிருந்த பெரிய ஏரியின் படுகையில் அரக்கனை துதிக்கையில் சுருட்டி எறியக் காத்திருக்கும் பிள்ளையாரைக் கண்டதும் அவளின் முகம் விரிந்தது.

ஒரு காலை முன் வைத்து பின்காலை ஊன்றி எழுந்து வெளிரிய நீலநிற இடையாடை பறக்க, தூக்கிய துதிக்கை அசுரனோடு காற்றில் நிற்க, கைகள் முன்பின்னாக வீசி நிற்கும் பிள்ளையாரின் வான் நோக்கிய முகத்தின் கண்கள் எப்படியிருக்கும், என்ற கற்பனை தெளிவாக பிள்ளையாரின் கண்களைக் காட்டாது மின்னி மறைந்தது. கிழக்கில் பச்சைமலைக் குன்றுகளில் இருந்து எழுந்த சூரியனைப் பார்த்ததும், ஆதவனும் நிலவென எழும் அழகிய மார்கழி என்று அவளுக்குத் தோன்றியது.

துறையூர் சாலைமாரியம்மன் கோவிலைத் தாண்டும்போதும் மீண்டும் தலைவலி என்று எதுவோ ஒன்று. அவளுக்கே ஐயமாக இருந்தது, நினைத்துக் கொள்ளும்போது வருகிறதா அல்லது அதிகமாகும்போது தெரிகிறதா என்று. பேருந்து நிலையத்தின் சிமெண்ட்  தரையில் ஏதோ ஒரு பேப்பர் அட்டையில் படுத்து கோணியைப் போர்த்தி சுருண்டிருந்த தாடிக்காரரைக் கண்டதும், இவருக்கெல்லாம் தலைவலி இல்லை என்று அவள் நினைத்துக் கொண்டு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

திருச்சி சாலையில் பயணிக்கையில் மனதில் பதட்டம் வந்து போனது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க எவ்வளவு நேரமாகும்? அதில் என்ன முடிவுகள் தெரியும், என்று மனம் நினைத்து அலைபாய்ந்து கொண்டேயிருந்தது.

அலைபேசியை எடுத்து, ‘யூஸ் ஆஃப் எம்.ஆர்.ஐ,’ என்று எழுதிவிட்டு தேடுதலுக்கு தொடாமல் தயங்கினாள்.  “நெட்ல சர்ச் பண்ணாதீங்க,” என்று மருத்துவர் சொன்னது நினைவுக்கு வந்ததும் பின்வாங்கினாள்.

மணச்சநல்லூர் இரட்டைக் கால்வாய் மெதுவான ஓட்டத்திலிருந்தது. எங்கு பார்த்தாலும் நெல்லறைக்கும் ஆலைகள். குனிந்து பாதை ஓரத்து பாசன வாய்க்கால்களைப் பார்த்தபடி எண்ணத்தில் ஆழ்ந்தாள். குளிர் விட்டு வெயில் தெரியத் தொடங்கிய நேரத்தில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கினார்கள்.

மாநகரப் பேருந்தில் மாரீஸ் தியேட்டர் தாண்டும்போதே கண்கள் சிக்னலைத் தேடித் தவித்தன.

“ம்மா… அடுத்த ஸ்டாப்…” என்றாள்.

சிக்னலில் இறங்குகையில் அம்மா வேகமாக, “கண்டக்டர் அங்கன்னு சொன்னான்… ஒரு விவரம் தெரியுதா என்ன?” என்று புலம்பியபடி நடந்தாள்.

முன்னால் சந்தியா தெளிவற்று அலைபாய்ந்த கண்களை மூடித் திறந்து சூரிய வெளிச்சத்தை எதிர்கொள்ளாமல், உள்ளே மனம் எச்சரிக்கை எனப் பதற சாலையை குறுக்கக் கடந்து குறுக்குச் சாலையில் நுழைந்தாள். வலது ஓரத்தில் பெயர்ப் பலகைகளையும், கட்டடங்களையும் பார்த்தபடி கடந்தாள்.

“எங்கன்னு ஒழுங்காத் தெரியுமா… இல்ல அவனுக்கு போன் பண்ணட்டுமா?”

“இந்த சந்து தாம்மா… என்ன தொந்தரவு பண்ணாம வாங்க. பயப்படாதீங்க… பாத்துப் போகலாம்.”

“அந்த தள்ளுவண்டிக்காரங்கிட்டக் கேளு”

“சும்மா வாங்கம்மா…”

ஸ்கேன் சென்டரின் முகப்புத் தெரிந்ததும் ஏதோ ஒன்று மெல்லப் பறந்து மறைந்து, வேறு ஏதோ வந்து மனதில் அமர்ந்தது. கண்ணாடிக் கதவில் கை வைக்கும்போது அதன் அசைவு கலைக்க பின்நகர்ந்தாள். சக்கர நாற்காலியில் கைகளை மடக்கி தலை சாய்த்து விழிகள் வெறுமையாய், வயோதிகத்தில் குனிந்த உடலுடன் கடந்து செல்பவரை சந்தியா பார்த்தபடியிருக்க அம்மாவின், “உள்ளப் போ…” என்ற குரல் அவளைக் கலைத்தது.

அந்நேரத்திற்கே கர்ப்பிணிகளும் வயோதிகர்களுமாக கூடம் நிறைந்திருந்தது. வரவேற்பறையில் நின்ற மூன்று பேரும் வேலையில் சுறுசுறுப்பாக இருந்தார்கள்.

அம்மாவை அமர வைத்துவிட்டு சந்தியா அங்கு சென்றாள்.

கொஞ்சம் அழுந்திய மூக்கும், விரிந்த இதழும் கொண்டவள், “யாருக்கு எம்.ஆர்.ஜ?” என்றாள்.

சந்தியா கையிலிருந்த மருத்துவரின் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, “எனக்குத்தான் மேடம்,” என்றாள்.

அவள் புருவத்தை உயர்த்தி, ‘என்ன?’ என்னும் பாவனையில் பார்த்து, “என்ன பிரச்சனை,”என்றபடி எழுதினாள்.

“தலைவலி”

சீட்டை நீட்டியபடி, “எனக்கும்தாங்க… தலைவலி பெரிய பிரச்சனை,”என்று முகத்தை சுருக்கினாள்.

“ம். ஆனா இது வேற மாதிரி…”

“தெரியுங்க. தனியாவா வந்தீங்க…”என்றவளிடம் அம்மாவைக் காட்டினாள்.

பணம் செலுத்தியபின் வந்து அமர்ந்தாள். தண்ணீர் குடித்தபின் சுற்றிலும் பார்த்தாள். ஒரு நாளுக்கு இங்கு மட்டும் இத்தனை மக்களா என்று தோன்ற மீண்டும் ஒருமுறை சுற்றிப் பார்த்தாள். தன் முகம் சோர்வாகவோ, வேதனையாகவோ இருக்க வேண்டும் என்று சந்தியாவுக்குத் தோன்றியது. தன்னைப் பார்க்கும் கண்களில், முகங்களில் அது தெரிகிறது என்று நினைத்த அவள் முகத்தை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள். உதடுகளை சப்பிக்கொண்டு கண்களை சிமிட்டி முன்னாலிருந்த கண்ணாடிக் கதவை நோக்கிப் புன்னகைத்தாள்.

சந்தியா பெயர் சொல்லி அழைக்கப்பட அவள் எழுந்து சென்றாள்.

“இன்னிக்கு இனிமே நீங்க ஒரு எம்.ஆர்.ஐதான். இங்கயே இருங்க… எடுத்தறலாம்,” என்றவனிடம் தலையாட்டிவிட்டு அமர்ந்தாள். திரும்பித் திரும்பிக் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் அலைபசி அழைத்தது.

“இன்னும் இங்க வேல முடியாம ஹாஸ்பிடலுக்கு பேசி என்னப் பண்றது?”

“…”

“நான் சமயம் பாத்து பண்ணிக்கறேன்…” என்ற பின் நிமிர்ந்து கண்ணாடிக் கதவைப் பார்க்கத் தொடங்கினாள்.

அம்மாவின் அலைபேசி அழைத்து முடித்தது.

அம்மா, “அவன்தான் சொல்றானில்ல… போன் பண்ணி டோக்கன் போட்டா என்ன? எதுக்கெடுத்தாலும் பிடிவாதம்…” என்றாள்.

சந்தியா, “இல்லம்மா இன்னும் கொஞ்சம் நேரமாகட்டும். ஒம்பதுமணிக்கு மேலதான் கால் பண்ணனுன்னு போட்டிருக்கு…” என்றாள்.

“போன் பண்ணத் துப்பில்ல… எங்கிட்டநல்லா பேசு”

சந்தியா ஒன்றும்பேசாமல் அலைபேசியை காதில் வைத்தாள்.

“ஹலோ மேடம்… டோக்கன் போடனும்…”

“….”

“சாரி மேடம்… வலியோட பேசறவங்ககிட்ட இப்பிடித்தான் பேசுவீங்களா?”

“…..”

சந்தியா அலைபேசியை வைத்தாள்.

“பேசும்போதே அடிச்சும் பேசனும். பூனமாதிரி பேசினா?”

“சந்தியா… மிஸ். சந்தியா…” என்ற குரல் கேட்டு எழுந்தாள்.

“நீங்கதான் சந்தியாவா?”

“ஆமாம்…”

அவன் பின்னால் நின்ற இன்னொருவனிடம் கண் காட்டி வாய்க்குள் சிரித்தான். சட்டென்று அவளுக்கு எரிச்சலாக வந்தது.

“கொஞ்ச நேரம் இருங்க எடுக்கலாம்…”

“இன்னும் சாப்பிடல சார்… போயிட்டு வர்றோம்…”

“இல்லங்க… எடுத்துட்டுதான் போகனும்…”

அவள் பொறுமையிழந்து, “எம்.ஆர்.ஐ வெறும் வயித்தில எடுக்கனுன்னு அவசியமில்ல தானே சார். சாப்பிட்டுட்டு வந்திடறாம்,” என்றாள்.

“ஓ.கே,” என்றபடி நகர்ந்தான். அம்மாவுடன் இறங்கி தெருவில் நடக்கையில் சந்தியாவுக்கு மீண்டும் கண்கள் கூசியது. அந்தஇடத்தில் தெருக்கடை தவிர சாப்பிட ஒன்றுமில்லை. நடந்து அடுத்த மையப்பாதைக்கு வந்து சாலையை குறுக்காக கடக்கும்போது போக்குவரத்து முன்பைவிட அதிகமாக இருந்தது.

“எங்கனுதான் போவானுங்களோ இவ்வளவு வேகமா…” என்று பதறியபடிய அம்மா கூட வந்தாள்.

ஸ்கேன் எடுப்பதற்கு முந்தைய விளக்கங்களை அளித்தபின் அவன்  சிறுதட்டிகளால் ஆன அறையை காண்பித்துவிட்டு உள்ளே சென்றான். துப்பட்டாவை அவிழ்த்து வைக்கும்போது அவன் சிரித்தது நினைவிற்கு வந்தது. தலையை ஆட்டியபடி வெளியே வந்து ஊக்குகள் நகைகளை அம்மாவிடம் கொடுத்துவிட்டு உள்ளே போனாள்.

அவன் மறுபடியும், “எதாவது சின்னதான மெட்டல்கூட இருக்ககூடாது,”என்றபடி தன்வேலையை ஆரம்பித்தான்.

சட்டென்று உள்ளாடையின் சிறிய ஹீக் நினைவிற்கு வந்ததும், “ஒரு நிமிஷம்,” என்றபடி வெளியில் சென்றாள். மீண்டும் உள்ளே வரும்போது அவளுக்கு முகம் கடுகடுத்திருந்தது.

அவன், “இதில் ஏறிப் படுங்க. ஒரு இருபது நிமிஷம் ஆகும். அசையாம படுக்கனும். எச்சில் விழுங்கக்கூடாது. பயப்படாதீங்க… இங்கதான் இருப்போம்,” என்றபோது அவள் உடல் எந்திரத்தினுள் சென்றது.

அவளுக்கு தான் எங்கோ சந்துக்குள் மாட்டிக்கொண்டது போல இருந்தது. நெருக்கிப் பிடிக்கும் கரங்கள் போல… சுருங்கி நெருக்கும் அறை அல்லது சிறுவயதில் கல் தொட்டியில் மாட்டிக் கொண்டது போல என்ற நினைவு வந்தபோது வியர்த்தது. மெல்லிய இசை காதுக்குள் மிக மெல்லக் கேட்டது. கண்களை விரித்து மிக அருகிலிருந்த வெண்மையான பரப்பை பார்க்கத் தொடங்கியதும் பதட்டம் குறைந்தது. நேரம் பற்றிய நினைவு மறந்து அந்த இசை எங்கோ இருக்க, அவள் எங்கோ தனியாக அலைந்தாள்.

வலது காலில் தொடும் உணர்வு வந்ததும் சட்டென்று விழித்தாள்.

“தூங்கிட்டீங்களா?” என்றான். மனித முகத்தைக் கண்டதும் மூச்சை இழுத்துவிட்டாள்.

“மாத்திர போட்டதுனால…” என்றபடி இறங்கினாள்.

வெளியில் காத்திருக்கையில் மனதின் குதிரை கட்டவிழ்ந்து ஓடியது. குனிந்து அமர்ந்திருந்தாள்.

மீண்டும் அழைக்கும் குரல். உள்ளிருந்து வந்தஅவன், “ரைட் சைடுதானேங்க?”

“ம்”

உள்ளிருந்து ஒருவர் கையாட்டினார். உள்ளே சென்றதும் ஸ்கேன் ரிப்போர்ட்டை கொடுத்து, “ஜோஸ் தானே அனுப்பினார்…” என்றார். ஆமாம் என்று தலையாட்டினாள்.

அவர் சந்தியாவின் தோளில் தட்டி, “போய்ப் பாருங்க..”என்றபடி கணினி பக்கம் திரும்பினார். வெளியில் வந்தார்கள். வெளியே நல்ல வெயில். இடதுபுறம் சிறிய பெட்டி போன்ற சிமெண்ட் ஆலயத்தில் அமர்ந்திருந்த பிள்ளையாரின் கண்கள் நன்றாக தெரிந்தன. எட்டு வயது பிள்ளையின் கண்கள் என்று சந்தியா நினைத்துக் கொண்டாள்.

அவள் புன்னகைப்பதைப் பார்த்த அம்மா, “டாக்டருட்ட போகனுன்னுதான் இல்ல. உனக்கு போகப்போறன்னாலே எல்லா வலியும் சரியாப் போயிரும்…”என்று சிரித்தாள். எத்தனையோ முறை பார்த்தவை என்றாலும் இன்று புதியவை என பிள்ளையாரின் கண்களே சந்தியாவினுள் நிறைந்திருந்தன.

 

 

பொதுபுத்தி – ராதாகிருஷ்ணன் சிறுகதை

ராதாகிருஷ்ணன்

வாசலில் நுழையும்போதே அந்தப் பெண் இன்னும் போகாமல் உள்ளே இருப்பது தெரிந்தது, தயங்கி வெளியேவே நின்று விட்டேன். உள்ளே ராஜன் அண்ணனின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது கொஞ்சம் ஆசுவாசம் அளித்தது, அவர் சூழலை சமாளிப்பார் என்பது கொஞ்சம் தைரியம் அளித்தது, இருந்தாலும் உள்ளே சென்று அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்க தைரியமில்லை, வெளியேவே பைக்கின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். உள்ளிருந்து டீ வாங்க வெளியே வந்த சாம், “ஏனே இங்கயே நின்னுட்டீங்க, எல்லாரும் உள்ள இருக்காங்க போங்க,” என்றான், சாமின் பேச்சு சத்தம் கேட்டு உள்ளே ஜன்னல் பக்கம் இருந்த அங்குராஜ் அண்ணா திரும்பி பார்த்தார், ” உள்ள வாடா ” என்றார், தப்பிக்க வழியின்றி உள்ளே சென்று காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தேன், அந்தப் பெண்ணைப் பார்க்க சங்கடப்பட்டு தலை தூக்காமல் அமர்ந்திருந்தேன்.

சங்க அலுவலகம் வரத் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, 18 வயதில் அங்குராஜ் அண்ணா வழியாகத்தான் உள்ளே வந்தேன், வந்த புதிதில் இங்கேயே பலியாக கிடப்பேன், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வேன், சங்கம் என் பலத்தை பன்மடங்கு பெருக்கியதாக எண்ணினேன், எந்த அநீதியையும் சங்கம் வழியாக எதிர்த்து வெல்ல முடியும் என்று நம்பினேன், ஆனால் நாளாக நாளாக யதார்த்தம் புரிந்தது, பிறகு ஆர்வம் குறைய ஆரம்பித்தது, எனினும் பழக்கம் காரணமாக தினமும் காலையில் இங்கு வந்துவிட்டுத்தான் பிறகு எங்கும் செல்வேன், வேலைகள் ஏதும் இல்லாத சமயங்களில் இங்குதான் இருப்பேன், இன்று இந்த ஊரில் எங்கு சென்றாலும் அங்கு எனக்கு பரிச்சயமான ஒருவர் இருப்பதற்கு காரணம் இந்த சங்கம்தான். அனைத்து நாளிதழ்களும், பத்திரிக்கைகளும் வாங்கிவிடுவார்கள், இந்த இதழ் வாசிப்புகள் வழியாகத்தான் எனக்கு புத்தக வாசிப்பு பழக்கம் உருவானது.

சங்கத்தில் சேர்ந்த காலங்களில் எல்லாவற்றிற்க்கும் என் கருத்துக்களை சொல்வேன், நல்ல கருத்துக்கள் என பாராட்டுக்கள் எல்லாம் கிடைக்கும், ஆனால் முடிவுகள் என வரும்பொழுது அது மேலிருந்து வரும் முடிவுகளாகவோ அல்லது அதிகாரம் கொண்டவர்களின் செயலாகவோ இருப்பதை உணர்ந்த பிறகு கருத்துக்கள் வைத்து வாதிடுவது தன்னாலேயே குறைந்தது. கருத்துக்களுக்கு ஒரு மதிப்பும் இல்லை என்பதுதான் நான் இங்கு பயின்ற முதற் பாடம். பெரும்பாலும் சாதாரண வேலைகளை பெரிய பணி என்று சொல்லி ஒப்படைப்பார்கள், சாதாரண வேலைகள் என்பது அலைச்சல் வேலைகள் மற்றும் எடுபிடி பணிகள், ஆனால் எனக்கு இந்த வகை வேலைகளில் இயல்பாகவே ஆர்வம் இருந்ததனால் இவற்றினையெல்லாம் சந்தோசமாகவே செய்வேன், இந்த வேலைகள் வழியாக எல்லோருடனும் பழகவும் அவர்களை அறியவும் முடிந்தது, இந்தப் பழக்கம் வழியாகத்தான் ராஜன் அண்ணா எனக்கு வழிகாட்டியாக, ஆசிரியனாக கிடைத்தார்.

பல நேரம் என் குரல் எடுபடாமல் போகும்பொழுது ராஜன் அண்ணாதான் தேற்றுவார், “எதுவும் ஒரே நாளில் மாறிடாது, உனக்கு மாற்றம் கொண்டு வர விருப்பம்னா அதை, அதன் பலன்களை மற்றவர்களுக்கு புரிய வைக்கணும், விழிப்பு மட்டும்தான் மாற்றத்தை உருவாக்கும்,” என்பார். இப்பொழுதெல்லாம் எதற்கும் வருத்தப்படுவதும் எதையும் பொருட்படுத்துவதும் இல்லை, மாறாக கொஞ்சம் உற்சாகம் கொண்டு இயங்குகிறேன், காரணம் இங்கு எனக்கு ஜுனியர்கள் வந்து விட்டதுதான்! அந்த வகையில் சாம் அப்படியே என் நகல்.

நேற்று இரவு சாம் அழைத்து ஒரு பெண் வந்து அழுது கொண்டு நின்றிருக்கிறாள் என்று சொன்னவுடனே எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு விரைவாக வந்து பார்த்தேன். மிக ஒல்லியாக இருந்தாள், நீளமான முகம், கழுத்தில் தங்கநிறம் மங்கிய பித்தளை செயின் சுற்றிலும் தேமல் இருந்தது, முடி எல்லாம் எண்ணை படாமல் செம்பட்டை நிறம் கொள்ளத் துவங்கியிருந்தது, மலிவான சேலை உடுத்தியிருந்தாள், பிளாஸ்டிக் செருப்பு அணிந்திருந்தாள், அருகில் சிறு பெண் ஒருவள் நின்றிருந்தாள், அப்படியே இந்தப் பெண்ணின் சிறு வடிவம், நிறம் மங்கிய, அழுக்கானதைப் போல தெரிந்த கவுன் அணிந்திருந்தாள், காலில் செருப்பு இல்லாமல் இருந்தது. அருகில் சாம் மட்டும் நின்றிருந்தான், அவன் முகத்தில் சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பது தெரியாத குழப்பத்தை காண முடிந்தது. என்னைப் பார்த்ததும் “அக்கா, பயப்படாதீங்க, வந்துட்டாங்க,” என்றான். அவள் திரும்பி என்னைப் பார்த்து அழுதபடி கை கூப்பினாள்.

அவளிடம் காணப்பட்ட பய உணர்வு எனக்கு மனதிற்குள் நடுக்கத்தை அளித்தது. “அழாதீங்கம்மா, என்னனு சொல்லுங்க,” என்றேன், திரும்பி சாமை நோக்கி, “ராஜன் அண்ணாக்கு தகவல் சொல்லு,” என்று பணித்தேன், அவன், “கூப்பிட்டேன், உங்களைக் கூப்பிட்டு பேசச் சொன்னாரு, ” என்றான், மனதிற்குள் திக்கென்று ஆகி விட்டது, நான்தான் இனி பொறுப்பு, இந்தச் சிக்கலை என் தலையில் கட்டி விட்டார்கள், காலையில் சாவகாசமாக வந்து என்னிடம் விசாரிப்பார்கள் என்பதை எண்ணும்போதே எரிச்சலாக வந்தது.

“என்னன்னு சொல்லுமா,” என்றேன். அவள், “வீட்டைப் பிடுங்கிட்டாங்க, எங்கள வீட்டுல இருந்து வெளிய போகச் சொல்லிட்டாங்க,” என்றாள், அவளால் சீராகப் பேச முடியவில்லை, பேசப்பேச அவளின் அழுகையும் பயமும் அதிகமாகியது. “வீட்டுக்காரர் எங்கே?” என்றேன், “அவரு பயந்து ஓடிப் போயிட்டாரு,” என்றாள், எனக்கு அவன் மீது கோபமாக வந்தது.

“அவங்ககிட்ட கடன் வாங்கியிருந்தோம் , அவங்க காசுக்கு பதிலா வீட்டை மிரட்டி எழுதி வாங்கிட்டாங்க”

“வீட்டுக்காரர் என்ன தொழில்ங்க?”

“சலூன் வச்சுருந்தோம், அப்பறம் இவரு சரியா நடத்தாம அது போயிடுச்சு”

வலுவில்லாத சாதியினர் இந்த பெண் என்பது உறைத்தது, வீடு திரும்ப கிடைப்பது கடினம் என நினைத்துக் கொண்டேன்.

ஏதோ தோன்றி அவளிடம், “வீட்டுக்காரரு குடிப்பாரா?” என்றேன், அவள் தயங்கி, “குடிப்பாருங்க,” என்றாள், பின் அவளாகவே, “அதனாலதாங்க தொழில் போயி கடனாளி ஆனோம்,” என்றாள்.

“வீட்டுக்காரர் எங்க இருப்பார்னு ஏதாவது தெரியுமா?”

“தெரியலீங்க, அவர இவங்க அடிச்சாங்க, அடிச்சுதான் எழுதி வாங்கினாங்க, இரண்டு நாளா அழுதுட்டே இருந்தாரு, இனி என்ன பண்ணப் போறேன்னு தெரியலையேன்னு சொல்லி என்கிட்ட அழுதுட்டே இருந்தாரு”

“எப்ப போனாரு?”

“இன்னைக்கு காலி பண்ணச் சொல்லி கெடு கொடுத்திருந்தாங்க, நேத்து நைட்டு தூங்காம அழுதுட்டு இருந்தவர்ட்ட, “நாம காலுல விழுவோம் கேட்பாங்க”ன்னு சொன்னேன், அவரு, “இல்லைடி” னு சொல்லி அழுத்துட்டுருந்தாரு, “விடிஞ்சு ஏதாவது செய்வோம்ங்க”னு சொல்லி தூங்க வச்சேன், காலைல பாயில அவரு இல்ல, சுத்தி எங்க தேடியும் காணோம்”

“பணம் கொடுத்தவங்க யாரு?”

“அவங்கள முன்னாடி பழக்கம் இல்லைங்க, அவங்க பத்து ஆளுகளுக்கு மேல கூட்டிட்டு வந்து, “வீட்டை எங்களுக்கு எழுதி கொடுத்துட்டாரு, கிளம்பு” னு சொன்னாங்க, அவங்களைப் பார்க்கவே பயமாயிருந்தது, வெளிய வந்துட்டேன்”

“ஸ்டேஷன் போனீங்களா”

அவள் பதில் ஏதும் சொல்லவில்லை, திரும்பவும் கேட்டபோது, “பயமா இருக்குங்க” என்றாள்.

சாம் இடையில் புகுந்து, “ஷீலா அக்காதான் இங்க அனுப்பி விட்டுருக்காங்க, அவங்ககூட வேலை செய்யறவங்களாம் இவங்க”

அந்தப் பெண்ணை நோக்கி, “உங்களுக்கு இங்க சொந்தக்காரங்க இருக்காங்களா?” என்றேன்.

“இல்லைங்க”

சாமை நோக்கி, “ஷீலா அக்காட்ட கூப்பிட்டு அவங்க வீட்டுல தங்க வை,” என்று சொல்லி பெண்ணை நோக்கி, “கவலைப்படாதமா, வீட்டுக்காரரை கண்டுபிடிச்சிடலாம், எல்லாம் சரியாகிடும், கவலப்படாத,” என்றேன்.

சாமை அழைத்து 500 கொடுத்து, “சாப்பாடு இவங்களுக்கு வாங்கிக் கொடு, நாளைக்கும் இவங்ககூடயே இரு,” என்றேன்.

பிறகு கிளம்பி வீட்டுக்கு வந்தேன், நெடுநேரம் தூங்க முடியாமல் தவிப்பாக இருந்தது, அந்தப் பெண்கூட இருந்த சிறுமியின் முகம் கண்ணுக்குளேயே நின்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட விடியும் நேரத்தில்தான் தூக்கம் வந்தது.

 

“ஏன்டா லேட்டு” என்று ராஜன் அண்ணா கேட்டபோது முகம் தூக்கி அவரைப் பார்த்தேன், அவர் முகத்தில் துக்கமோ சந்தோஷமோ எதுவுமே வெளிப்படாது, அவர் சிரித்தே இத்தனை வருடங்களில் பார்த்ததில்லை, அதிசயமாக முகம் எப்பவாவது புன்னகைக்கும். ராஜன் அண்ணா முழுநேர சங்கப் பணியாளராக இருக்கிறார், காலையில் பத்து மணிக்கு அலுவலகம் வருவார், மதியம் 3 மணிக்குச் செல்பவர் திரும்ப மறுநாள் காலைதான் வருவார், மதியத்திற்கு மேல் லைப்ரேரியில் அல்லது அவர் அறையில் அல்லது ஸ்டார் பேக்கரி வாசலில் இருக்கும் நீள் மர பெஞ்சில் இருப்பார். மிக அவசரம் என்று இருந்தால் மட்டுமே வருவார், வெள்ளை வேட்டி சட்டை எப்போதும் சுத்தமானதாக இருக்கும், மர விளிம்பு கொண்ட கண் கண்ணாடி அவரை பேராசிரியர் போல எண்ண வைக்கும், நல்ல உறுதியான பழைய சைக்கிள், அதில்தான் எங்கும் போவார், நான் ஸ்கூட்டி அல்லது மொபெட் வாங்கச் சொல்லி பலமுறை கெஞ்சியிருக்கிறேன், அவர் பொருட்படுத்தியதே இல்லை.

அந்த பெண் கொடுத்த நிலத்தின் நகல் பத்திரத்தை பக்கங்கள் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்தார். பிறகு கண் கண்ணாடியை மேசையின் மீது வைத்து அந்த பெண்ணை பார்த்தார். “குழந்தை பேர் என்னமா?” என்றார்.

“கிருத்திகாங்க” என்றாள், அவள் முகத்தில் கொஞ்சம் தெளிவு இருந்ததை இப்போதுதான் கவனித்தேன், இரவு அவளைப் பார்த்தபோது தற்கொலை செய்து விடுவாளோ என பயந்தேன், இப்போது அவளில் இருந்த சிறு தெளிவு ஆச்சரியம் தந்தது.

ராஜன் அண்ணா நிதானமாக, “உன் சொந்த ஊர் எது, அம்மா அப்பா இருக்காங்களா?”

“துறையூர்ங்க, அப்பா இல்ல, அம்மாவும் தம்பியும் மட்டும்தான், அவங்ககிட்ட இதை சொன்னா பயந்திடுவாங்க”

“வேற யாராவது சொந்தத்துல பெரியவங்க இருக்காங்களா?”

“இருக்காங்க”

“சரி ஒன்னு செய்யு, ஊருக்கு கிளம்பு, இப்ப கிளம்பினா சாயிங்காலத்துக்குள்ள போயிடலாம், இரண்டு நாள் கழிச்சு வீட்டுல சொல்லி பெரியவங்கள கூட்டிட்டு இங்க வா, பேசிக்கலாம்”

“வீட்டுக்காரர்…”

“அவரு எங்கயும் போயிருக்க மாட்டாரு, இங்க வந்தார்னா நாங்க உனக்கு தகவல் சொல்றோம்”

அவள் மேலும் ஒன்றும் சொல்லவில்லை, ராஜன் அண்ணா சட்டையின் பைக்குள் இருந்து நான்கு 500 ரூபாய் தாள்களை எடுத்து அந்தப் பெண்ணிடம் நீட்டினார், “செலவுக்கு வச்சுக்கம்மா”.

அவள் எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள், ராஜன் அண்ணா ஒரு நாளைக்கு 100 ரூபாய் செலவு செய்யாதவர் என்பது ஞாபகம் வந்தது.

ராஜன் அண்ணா சாமை அழைத்து பஸ் ஏற்றி விட்டு வருமாறு பணித்தார்.

அறையில் சிறிது நேரம் யாரும் பேசவில்லை.

மெதுவாக அங்குராஜ் அண்ணா அசைந்தபோதே அவர் பேசப் போகிறார் என்பது தெரிந்தது, “இனி வீட்டை இந்த பொண்ணு மறந்திட வேண்டியதுதான்,” என்றார், நான் ஏற்கனவே அதை உணர்ந்திருந்தாலும் இவர் சொல்லும்போது இவர் மேல் வெறுப்பு வந்தது.

“ஆனா வீட்டை பிடுங்கவுள்ள செஞ்சிருக்காங்க, நாம போயி பேசி இந்த பொண்ணுக்கு ஏதாவது பண்ணிக் கொடுக்கணும்,” என்றேன்.

“நடக்கற காரியம் சொல்லுடா,” என்றார்.

“இந்த ஏமாற்று வேலையை கண்டுக்காம இருக்க சொல்றீங்களா?” என்றேன்.

அவர் சிரித்து, “சரி, நீ போய் கேளு,” என்றார்.

நான் மேற்கொண்டு அவரைப் பார்க்காமல் திரும்பி ராஜன் அண்ணாவை நோக்கினேன், அவர் மேசையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.

“அண்ணா, நீங்களும் இப்படித்தான் நினைக்கிறீங்களா?” என்றேன், அவரைப் பார்த்து, ஏறிட்டு என்னைப் பார்த்தவர் ஏதும் சொல்லாமல் திரும்பவும் மேசையை ஒழுங்குபடுத்தும் வேலையைச் செய்தார். எனக்கு உள்ளுக்குள் விரக்தி தோன்றி பிறகு அதை அப்படியே விட்டு கைகளை மேல் தூக்கி சோம்பல் முறித்தேன், அங்குராஜ் அண்ணா, “அப்ப நான் பிறகு வரேன்,” என்று சொல்லிக் கிளம்பினார்.

ராஜன் அண்ணாவும் நானும் மட்டும் அறையில் இருந்தோம். அவர் மேஜையை ஒழுங்குபடுத்தும் வேலையை எல்லாம் முடித்து, இருக்கையின் பின்பக்கம் சாய்ந்து உடலைத் தளர்வாக்கி பின் நிதானமாக பேச தொடங்கினார். “டே வெறும் நியாயத்தை மட்டும் வச்சு ஒன்னும் பண்ண முடியாது, நாம காந்தி இல்ல, காந்திக்கு இருக்கற ஆன்மபலம், காந்தியவாதிகள்கிட்ட இருக்கற ஆன்மபலம் என்பதெல்லாம் இயல்புலயே ஒரு சிலர்க்கு இருக்கக்கூடிய விஷயங்கள், நீ நானெல்லாம் சாதாரண மனுஷங்க, சாதாரண மனுஷன் என்ன பண்ண முடியுமோ அதைத்தான் நம்மால பண்ண முடியும்”.

நான் பதில் ஏதும் சொல்லாமல் அவரைப் பார்த்தேன், அவரில் இருந்த நிதானம் எரிச்சல் கொடுத்தது.

“அந்த நிலத்தை பிடுங்கனவனுகளுக்கு போலீஸ் உட்பட எல்லா இடத்திலும் ஆள் பலம் இருக்கும், என்ன மோதினாலும் கஷ்டம், எழுதி வாங்கிட்டானுக, சட்டம் அவங்க பக்கம்தான் பேசும்”

” ஆனா நியாயம் இந்த பொண்ணுகிட்ட இல்ல இருக்கு”

“வெறும் நியாயத்தை வச்சுட்டு என்ன பண்ண, அதை நிலைநிறுத்த பலம் வேணும், இவ ஊருல இருந்து ஆட்களை கூட்டிட்டு வந்தா நாம இவளுக்கு உதவலாம், அதும் நேரடியா இல்ல “.

நான் பதில் ஏதும் சொல்லாமல் கவனிப்பது போல பாவனை செய்தேன், அவர் பேசும்போது இடையில் பிறர் பேசினால் மேற்கொண்டு பேசுவதை நிறுத்தி அமைதியாகி விடுவார்.

“நாம இதைச் சார்ந்து ஏதாவது பண்ணனும்னு நினைச்சா பொதுபுத்தியில இதைப் பற்றின விழிப்பை உருவாக்க முயற்சி பண்ணலாம், அதுதான் ஏதாவது பலனை கொடுக்கும்”

நான் என்ன என்பது போல முகத்தை வைத்து கொண்டேன்.

“பொதுவா நிலம் வைத்திருந்து இரண்டு மூணு தலைமுறை தாண்டினவங்களுக்கு இந்த புத்தி இருக்காது, நிலம் இல்லாதவன், நிலம் வாங்க நினைக்கறவன், புதுசா சம்பாத்தியம் பெறவன் எல்லாத்துக்கும் இந்த அபகரிப்பு புத்தி இருக்கும், இதைச் சரி செய்யறது ரொம்ப கஷ்டம், ஒன்னு மட்டும்தான் பண்ண முடியும், சமூக ஒழுக்க விதியில் இதை தீவிரமா வலியுறுத்தலாம். சமூகத்துல பொது ஒழுக்கம் என்பதே கண்காணிப்புக்கு பயந்து உருவாகிற ஒன்னுதான், கண்காணிப்பு மட்டும்தான் இவனுகள கட்டுப்பாட்டுல வைக்கும். இப்படி திருடறவங்களை சமூகத்தில் விலக்குவது மாதிரியான மனநிலை உருவாக்கணும், அதாவது நேர்மை மனநிலையை மதிப்பானதாவும், ஏமாற்றுத்தனத்தை சில்லறத்தனமாவும் பொதுபுத்தில உருவாக்கறது, இது மாதிரியான விஷயங்களதான் நம்ம சங்கம் செயல்பாடுகளா முன்னெடுக்கணும் .”

யதார்த்தம் பற்றிச் சொல்ல வாயெடுத்து பின் எதிர்மறையாக சொல்லவேண்டாம் என நினைத்து விட்டுவிட்டேன். அவர் தனக்குள்ளேயே பேசுவதைப் போல தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். “இதெல்லாம்விட ஒன்னு இருக்கு, ஒரு கூட்டம்கிறது ஓரளவுக்கு மேல இருக்கக் கூடாது, அப்படி அதிகமாகிடுச்சுனா ஆதிக்கம் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க, ஓரளவுக்கு மேல எந்த கூட்டமும் உடையனும், சமூகத்தோட மிகப் பெரிய எதிரியே இந்த கும்பல் மனோபாவம்தான், கும்பலா தன்னை உணர்ந்தாங்கன்னா பிறகு அவனுகளுக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயம் ஆக்கிடுவானுக, அந்த மனநிலை என்பது பிறகு அவங்ககிட்ட இருந்து மறையவே மறையாது”

சரி என்பதைப் போல ஆமோதித்தேன், பிறகு ஏதோ தோன்றி, “ஒற்றுமையே தப்புனு சொல்ல வரீங்களா?” என்றேன்.

“தான் பிறன்னு பிரிக்காத எந்த ஒற்றுமையும் நல்லதுதான், ஆனா நடைமுறைல மனுசங்க பிறப்பு சார்ந்த ஒற்றுமைக்குள்ளதான் போவாங்க, நாம அதை உடைக்கணும்,” என்றார்.

“இது ஆகற காரியமா?”

“எதுவும் கிளை பிரிந்து தனித்தனியா பிரிவுகளாக ஆகும், அதுதான் இயல்பு, அதை தடுக்கற விஷயங்களை உடைத்தால் போதும்”

பாதி புரிந்த மாதிரியும் பாதி புரியாத மாதிரியும் இருந்தது. பிறகு இருவரும் ஏதும் பேசிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தோம், இடையிடையே இப்படி நடந்து விடுவதுண்டு, பேச்சின் இடையே உருவாகும் மவுனம் அப்படியே விரிசலாகி உரையாடல் அப்படியே நின்றுவிடுவது என. அவர் பேசினதையே மறந்து தனக்குள் மூழ்கி விட்டிருந்தார். நான் வெறுமனே அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன், நாளாக நாளாக அழகாகிக் கொண்டே வருகிறார் என்று தோன்றியது, முடி நரைகூட லட்சணமாக, பொருந்தி அமைவதைப் போல இருந்தது.

அவர் இப்படி அமைதியாகி சிந்தனையில் மூழ்கினார் என்றால் அருகிலிருப்பவர்களைக்கூட மறந்து விடுவார். தொந்தரவு தர வேண்டாம் என்று நினைத்து வெளியே எழுந்து செல்ல நினைத்தேன், டீ குடிக்க வேண்டும் என தோன்றியது. அவரிடம் ஏதும் சொல்லாமல் வெளியே வந்தேன்.

அலுவலகத்தின் நேர் எதிரில்தான் பேக்கரி, இது எங்களுக்கு இரண்டாவது அலுவலகம் போல, அங்கு இல்லையெனில் இங்கு இருப்போம். பேக்கிரியின் முன் திண்ணையில் அங்குராஜ் அண்ணா பேப்பர் படித்து கொண்டிருந்தார். “நீங்க இன்னும் கிளம்பலையா?” என்றேன், அவர் என்னைப் பார்த்தவுடன் பேப்பரை மடித்து கீழே வைத்தார், அவர் அருகில் போய் அமர்ந்து கொண்டேன். அவர் கிண்டலாகச் சிரித்தபடி, “என்ன சொல்றார் உங்க குரு?” என்றார்.

“உங்க தலைமைல கொடி பிடிச்சு ஒரு போராட்டம் நடத்த சொன்னாப்புல!” என்றேன் சிரித்து.

சிரித்தவர், “பரவாலயே, நான் உண்ணாவிரதம் இருக்கச் சொல்லுவாருனுல்ல நினைச்சேன்!”

நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன் .

” டே , நான் இந்த திருப்பூர் வந்து 20 வருஷம் மேல ஆயிடுச்சு, இது போல பல சம்பவங்களைப் பார்த்துட்டேன், பொண்ணுக கொஞ்ச நாள்ல தெளிவாயிடுங்க, அடுத்தது என்னனு போயிடும்ங்க, ஆனா ஆண்கள் மரை களண்டவனுக போல ஆயிடுவானுக, குடி ஒன்னுதான் மீட்பு, அதுவும் குடிக்கற சமயத்துலதான்.”

“இப்படி ஏமாத்தறவனுகளுக்கு ஒன்னும் ஆகறது இல்லையா?”

அவர் சிரித்து, “அப்படி ஆனதே நான் பார்த்ததில்லை, நல்லாத்தான் இருக்கானுங்க”.

இதை பற்றி பேசுவதை விட்டு விடலாம் என எண்ணி ” டீ சொல்லவா?” எனக் கேட்டு இரண்டு டீ ஆர்டர் செய்தேன்.

அவர் திடீரென ஞாபகம் வந்ததைப் போல, “டே, ராஜன் அண்ணா அந்தப் பொண்ணுக்கு ஏன் அவ்வளவு பணம் கொடுத்தாரு தெரியுமா?” என்றார், அவர் முகத்தில் சுவாரஸ்யம் சொல்லப் போகும் ஆர்வம் இருந்தது, அதைக் கேட்ட ஒருசில கணத்திற்குள் என் மனம் சொடுக்கி என்னென்னவெல்லாமோ யோசிக்கத் துவங்கி விட்டது, பிறகு மனமே தீர்வு கண்டு, ‘ அவர் நல்லவர்’ என்று சொல்லியது. அங்குராஜ் அண்ணனிடம், “ஏன்?” என்று கேட்டேன்.

“ராஜன் அண்ணா சொத்தையும் இப்படித்தான் பிடுங்கனானுக, பிறகுதான் ஊரை விட்டு ஓடி இங்க வந்து சேர்ந்தாரு, வந்து இருபது வருசமாச்சு, இப்ப வரை அவரு ஊருக்கு போனதில்ல,” என்றார். எனக்கு அப்போது அந்தப் பெண்ணும் கூட இருந்த சிறுமியும் மனதில் வந்து சென்றார்கள்.