சிறுகதை

ஒரு பயணமும் சில கதைகளும் – மாதவன் ஸ்ரீரங்கம்

ஒரு தேநீர் அருந்தினால் நன்றாக இருக்கும்போல் தோன்றியது. மகாபலிபுரம் நுழைந்ததும் சாலையோர விடுதி ஒன்றில் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன். சாலையை பார்க்கும்படியான மேஜையொன்றில் அமர்ந்துகொண்டேன். சாலைக்கு எதிரிலிருந்து ஒருவன், ஒரு பார்வையற்ற பெரியவரை கைப்பிடித்து அழைத்துவந்து விடுதியில் விட்டுவிட்டுச் சென்றான்.

பெரியவர் பார்ப்பதற்கு, நல்ல உயரமாகப் பழைய கருப்புவெள்ளை திரைப்படங்களில் வரும் கவுபாய்க்கிழவர் போலிருந்தார். தொப்பி மட்டும்தான் இல்லை. அடர் கருப்பு நிறத்தில் அவர் அணிந்திருந்த கண்ணாடியில் சாலையில் சென்ற வாகனங்கள் பிரதிபலித்தன. என் தேநீரை அருந்தியபடியே அவரைக் கவனித்தேன். அவர் தனது தேநீரை ஒரு குழந்தையைப்போல ரசித்துக்குடித்துக்கொண்டிருந்தார். டீ மாஸ்டர் பெரியவரிடம் பேச்சுக்கொடுத்தார்.

“எங்க சார் மெட்ராசா போவனும்”?

அவர் குரல் வந்த திக்கில் குத்துமதிப்பாகத் திரும்பி பதிலளித்தார்.

” ஆமாப்பா. என்னைக்கொஞ்சம் பஸ்டாப்பில கொண்டுபோய் விட்ரமுடியுமா”? என்றார் தனது காலித்தம்ளரை அருகில் வைத்துவிட்டுச் சில்லறையை எடுத்தபடி.

நான் எழுந்து தேநீருக்கான காசைக்கொடுத்துவிட்டு வெளியில் வந்தேன். பெரியவரிடம் கேட்டேன்.

“நானும் சென்னைதான் போறேன் சார். வரீங்களா இறக்கிவிட்டிடறேன்”

இதில் சம்மதமென்பதை அவர் முகத்தின் மகிழ்ச்சியின்வழி உணர்ந்துகொண்டேன். என் முழங்கையைப் பிடித்துக்கொண்ட அவர் உள்ளங்கை உஷ்ணமாக இருந்தது. உள்ளே அமர்ந்தபின் நான் காரைக்கிளப்பியபடியே அவரிடம் கேட்டேன்.

“யாரையாவது கூட கூட்டிட்டு வந்திருக்கலாமே சார். தனியா போக்குவரத்தெல்லாம் கஷ்டமில்லங்களா”

அவர் நேராக முன்புறத்துச் சாலையின் திசையில் முகத்தை வைத்தபடி மெலிதாகச் சிரித்தார்.

“சுத்தியும் மனுஷங்க இருக்கும்போது எனக்கென்ன தம்பி கவலை. உதவற மனுஷங்க இன்னும் இருக்காங்க உலகத்தில”

நான் சற்று அமைதியாக இருந்தேன். கார் சவுக்குத்தோப்புகள் அடர்ந்த சாலையில் சென்றுகொண்டிருந்தது.

“தம்பியும் சென்னைதானா”?

” ஆமா சார். அஷோக் நகர். நீங்க”?

“திருவான்மியூர் தம்பி.

“இங்க சும்மா சுத்திப்பாக்க வந்தீங்களோ”?

” இல்ல சார். ஒரு கம்பெனில ஆர் எம்மா இருக்கேன். சைட் விஸிட்டிங்காக கடலூர் போயிட்டு வந்திட்டிருக்கேன்”

“அப்ப பொறந்து வளந்ததெல்லாமே சென்னைதான்னு சொல்லுங்க”

“ஆமா சார். நீங்க”?

” இப்பத்தான் தம்பி கொஞ்சநாளா சென்னைல இருக்கேன்”

“ஓ ! அப்ப அதுக்கும் முன்ன”?

” அதெல்லாம் பெரிய கதை தம்பி. எதுக்கு உங்களை போரடிக்கனும்”

நான் சிரித்துக்கொண்டேன்.

“அப்டியெல்லாம் இல்ல சார். நீங்க வயசுல பெரியவங்க. எத்தனையோ அனுபவங்க இருக்கும். எப்டியும் முக்கால் மணிநேரம் ஆவுமே”

அவர் தனக்குள்ளாகப் புன்னகைத்துக்கொண்டார்.

“சரி அப்ப ஒண்ணு செய்வோம். நா உங்களுக்கு சில கதைங்களைச் சொல்லுறேன். அதுல எந்தக் கேரக்டர் நான்னு நீங்க சொல்லுங்க”

எனக்கும் பெரியவரின் இந்தப் பீடிகை பிடித்திருந்தது. நான் சம்மதம் என்றதும் அவர் துவங்கினார்.

கதைக்குள் கதை
————————
கண்விழித்தபோது அவன் உடலெங்கும் வலித்தது. குறிப்பாக இடதுகால் ஆடுதசைப்பகுதியில் அதிகம் வலித்தது. அவன் கூரையின் துளைகள் வழி சூரியவெளிச்சம் வழிந்தது. பக்கத்தில் தகர டிரம் ஒன்றின்மீது அவன் சீருடை கசங்கலாகக் கிடந்தது. அவன் சுற்றிலும் நோட்டமிட்டான். நிறைய தட்டுமுட்டுச்சாமான்களுடன் ஒரு பழைய அம்பாஸிடர் காரும் நின்றிருந்தது. கார்ஷெட்டாக இருக்கலாமென்று யூகித்தான்.

ஒரு மூலையில் மர அடுக்குகளில் விதவிதமான பறவைகள் கத்திக்கொண்டிருந்தன. இருந்தன. ஷெட்டின் தகர கேட்டின் மெலிதான கிரீச்சிடலுடன் உள்ளே நுழைந்த அந்தப்பெண் முக்காடு அணிந்திருந்தாள். தொலைவில் எங்கோ ராணுவவிமானம் பறந்த ஒலியைத்தொடர்ந்து பெரும் வெடியோசை கேட்டதில் அவன் படுத்திருந்த கட்டில் அதிர்ந்தது. அவள் நெருங்குவந்து அவன் கால் காயத்தைப் பரிசோதித்தாள். அவன் வலியில் முனகினான்.

“இது என்ன எடம் ? நா எப்டி இங்கவந்தேன்”?

அவள் பதில்கூறாமல் கட்டை அவிழ்த்துவிட்டுப் புதிதாக கட்டிட்டாள். அவனுக்குத் துளிகூட வலித்துவிடக்கூடாது என்பதுபோல் அவள் செயல்பட்டது அவனுக்கு பிடித்திருந்தது.

அவன் தன் குரலில் ஒரு கம்பீரத்தை வரவழைத்துக்கொண்டான்.

” கேக்கிறேனில்ல ? இது என்ன இடம்”?

“உங்க கால்ல இருந்த புல்லட்டை எடுத்தாச்சி. ஆனா காயம் ஆறக்கொஞ்சம் நாளாவும். அதுவரை நீங்க ஓய்வுலதான் இருந்தாவனும்”

அவனுக்கு அப்போதுதான் கடைசியாக நிகழ்ந்தவை நினைவுக்கு வந்தது. அவன் சுடப்பட்டான். எந்த திசையிலிருந்து என்று கவனிக்கக்கூட வாய்பின்றி மயங்கிவிட்டான்.

“இல்ல நா ஒடனே போயாகனும். இது என்ன இடம்னு சொல்லு. பக்கத்தில போன் எங்க கெடைக்கும்”?

அதற்கு அவள் கூறிய பதிலில் அதிர்ந்துபோய்விட்டான். ஏனெனில் அவள் கூறிய ஊரிருந்தது எதிரி தேசத்தில். அவன் சண்டையிட்டுக்கொண்டிருந்த பிரதேசத்தின் அருகில். யார் கண்டது. இவளே கூட அந்த தேசத்தின் பெண்ணாயிருக்கலாம். அவன் அவளிடம் என்னவோ கேட்க வாயைத்திறக்க அவள் அவசரமாக கைகளால் பொத்தினாள்.

வாசலில் யாரோ அழைக்கும் ஓசை கேட்டது. வாயில் விரல்வைத்து அமைதியாயிருக்கும்படி சைகை செய்து விட்டு அவள் வெளியேறினாள். வெளியில் சிலவிநாடிகள் பேச்சுக்குரல்கள் கேட்டன. பறவைகள் கீச்சுக்கீச்சென கத்திக்கொண்டிருந்தன. மறுபடி அவள் உள்ளே வந்தபோது சற்று வருத்தத்துடனிருந்ததை கவனித்துக்கொண்டான்.

” இங்க பக்கத்துல போன் எதுவும் கெடையாது. உங்காளுங்க ஒண்ணுவிடாம எல்லாத்தையும் அழிச்சுட்டு போயிட்டாங்க”

“புரியல. சண்டைல யார் ஜெயிச்சது”?

” யாரும் ஜெயிக்கல. உங்காளுங்க பார்டர்லதான் கேம்ப் போட்டு தங்கிருக்காங்களாம். இங்க உள்ளவங்க திட்டம் போட்டுட்ருக்காங்க”

“நீ என்னை ஏன் கொல்லாம காப்பாத்தின”?

” நா ஒரு டாக்டர். நீ குண்டடிபட்டுக் கெடந்தப்ப அப்டியே விட்டுட்டு வரமுடில. அதான். நீ இங்க இருக்கிறதுகூட யாருக்கும் தெரியாது”

அவன் அவளை விசித்திரமாகப் பார்த்தான். இருந்தால் அவளுக்கு முப்பது வயதிருக்கலாம். சிவந்த அவள் உடலில் சில இடங்களில் வெண்மைபுள்ளிகள் தென்பட்டன. செம்பட்டைநிறத்து அவள் கூந்தல் குட்டையாக கத்திரிக்கப்பட்டிருந்தது.

“உன் வீட்ல உள்ளவங்க ஒண்ணும் சொல்லலியா”?

அவள் வசீகரமாக புன்னகைத்துவிட்டுக் கூறினாள்.

“ யாரு இருக்காங்க கேட்க. என் வீட்டுக்காரர் இறந்துபோயிட்டார். அவரும் உங்களை மாதிரி சிப்பாய்தான். அது இருக்கும் ரெண்டு வருஷம்”

“கொழந்தைங்க”?

அவள் மவுனமாக வெளியேறினாள்.

அதன்பிறகு வந்த நாட்களில் இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. தினமும் அவள் அவனுக்கு உணவு கொண்டுவருவாள். புண்ணுக்கு மருந்திடுவாள். அங்கிருக்கும் பறவைகளுக்கு தானியங்கள் தூவுவாள். . மெல்ல மெல்ல அவன் கால் குணமானது. துணிவுபெற்ற ஒருநாளில் அவன் நடக்கமுயற்சித்தான். வலியிருந்தது. ஆனாலும் நடக்கமுடிந்ததில் மகிழ்ந்தான்.

ஒருநாள் அவள் கேட்டாள்

“ஒரு சிப்பாயா இருக்கிறதுக்காக என்னிக்காவது வருத்தப்பட்டிருக்கியா ? எதிர்ல நிக்கிற மனுஷங்களை கொல்றதுக்காக சங்கடப்பட்டிருக்கியா”?

” இது ரொம்ப கஷ்டமான கேள்வி. நீ ஒரு பொண்ணுங்கிறதால இப்டி யோசிக்கிறன்னு நெனைக்கிறேன்”

அவள் மவுனமாக புன்னகைத்தாள்.

“சரி நா இங்கிருக்கிறது தெரிஞ்சா உன்பக்கத்து ஆளுங்க உன்னை உயிரோட விடுவாங்களா”?

அதற்கும் அவள் பதில்கூறவில்லை. மறுநாள் அதிகாலையில் வந்தவள் அவசரமாக அவனைக் கிளம்பச்சொன்னாள். அவள் தேசத்து பட்டாளம் அதிகளவில் வந்துகொண்டிருப்பதாகவும், அங்கிருந்தால் அவன் பிடிபடுவான் என்றும் எச்சரித்தாள். அவனைத் தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு கொஞ்சதூரம் பயணித்து ஒரு காட்டுப்பகுதியில் இறக்கிவிட்டாள்.

” இதுக்குமேல என்னால உனக்கு உதவமுடியல மன்னிச்சிடு” என்றபோது அவள் கண்கள் கலங்கியிருந்தன. ஒரு சிறிய ட்ராவல் பேகில் உணவுப்பொருட்களும், டார்ச் லைட் மருந்து போன்ற சில பொருட்களும் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

அவள் நகர்ந்தபின்புதான் சட்டென்று சொல்லிவிட்டு நினைவிற்கு வந்தவனாக, காரைப்பின் தொடர்ந்தபடியே ஓடி கத்தினான்.

“உன் பேரென்ன”?

கார் ஒரு சிறிய கிறீச்சிடலுடன் நின்றது. அவள் தலையை வெளியில் நீட்டி, தன்னுடைய வழக்கமான புன்னகையை வழியவிட்டபடி காரை வேகமெடுத்து மறைந்துபோனாள். அவன் தனது காலை விந்தியபடி நடக்கத்துவங்கினான்

“அப்புறம்”? என்றேன் நான்

” இப்போது அடுத்தகதை” என்றார் பெரியவர்

“அய்யோ அதுவே இன்னும் முடியலியே”

அவர் சிலவிநாடிகள் அமைதியாக இருந்தார். காரினுள் ஏஸியின் குளிர்கடந்தும் முன்புறத்து வெயில் உஷ்ணம் கூட்டியது.

கதைக்குள் கதை 2
——————————-
காலடியோசை கேட்டு அந்தச்சிறுவன் திடுக்கிட்டான்.

“வந்துட்டியா அக்கா”? என்றான்.. பதில் வராதுபோகவே மறுபடி சந்தேகமாக கேட்டான்

” யாரது”?

அதற்கும் பதில் வரவில்லை. அறையின் நிசப்தமும் காற்றின் ஓசையும், தொலைவில் பறவையொன்று கூவும் ஓசையும் மட்டும் கேட்டன. சிறுவன் தனது இருக்கையிலிருந்து மெல்ல சுவரைப்பிடித்தபடியே நடந்து வாசலுக்கு வந்தான். வாசற்படியருகே காலில் ஏதோ இடற, குனிந்து கைகளால் தடவிப்பார்த்தான். யாரோ ஒருவர் விழுந்துகிடப்பது தெரிந்து அதிர்ந்தான். கீழே கிடந்த உருவத்தின் முகத்தில் கைகளால் தட்டி உலுப்பினான்.

“யாரு ? யாருங்க ? என்னாச்சு

உருவம் மெல்ல அசைந்தது கைகளில் தெரிந்தது.

“தண்ணீ… தண்ணீ” என ஈனஸ்வரத்தில் முனகியது கேட்டது. சிறுவன் மறுபடி சுவரைப்பிடித்தபடியே சமையலறை சென்று, பழக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்தான். வெடுக்கென்று பிடுங்கப்பட்டதில் சற்றே அஞ்சினாலும், வந்தவரின் தாகத்தை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

சற்றைக்கெல்லாம் அந்த உருவம் அவன் கைகளைப்பிடித்துக்கொண்டு படுக்கையறை வரை வந்தது.

“யார் நீங்க ? சாப்பிட எதாச்சும் வேணுமா ? அங்க ஒரு பெரிய பானையிருக்கு. அதுக்குள்ள கொஞ்சம் ரொட்டி இருக்கு. எடுத்துக்கோங்க” என்று ஒரு மூலையைக் காட்டினான். அந்தமூலைவரை சென்ற காலடியோசையில் அந்த உருவம் ரொட்டியை எடுத்திருப்பதை உணர்ந்துகொண்டான். பிறகு அவன் நாசியருகே சிகரெட்டின் நெடி படர்ந்தது.

காலருகே எதுவோ உரச, அவன் குனிந்து தடவினான். அவனது வளர்ப்புப்பூனை. மெல்ல அதைக்கைகளில் எடுத்து மடியில் வைத்து தடவிக்கொடுத்தபடியே கேட்டான்.

“அக்கா வெளிய போயிருக்காங்க. அவங்க இருந்தா டீயாவது வச்சித்தந்திருப்பாங்க. எனக்கு தெரியாது மன்னிச்சுக்கங்க”

இப்போது அந்த உருவம் அவனை நெருங்கி கட்டிலில் அமர்ந்துகொண்டது மெத்தையின் அழுந்தலில் தெரிந்தது. சிலவிநாடிகளில் சிறுவனுக்கு மருந்து நெடியடித்தது. சமயங்களில் அவன் தடுமாறி விழுந்து சிராய்த்துக்கொண்டால் அக்கா போட்டுவிடும் மருந்தின் வாசனை அது.

“உங்களுக்கு அடி பட்டிருக்கா ? மருந்து வாசனை வருதே”?

அவன் தலைமுடியை கோதிய விரல்களை பிடித்துக்கொண்டு கேட்டான்.

” உங்களுக்கு பேச வராதா ? எனக்கு பார்க்கமுடியாத மாதிரி “?

வாசலில் மாடுகளின் கனைப்பொலியும் கழுத்து மணியோசையும் கேட்டு சிறுவன் உற்சாகமானான்.

“அக்கா வந்துட்டியா ? ஏன்கா இவ்ளோ நேரம் ? நம்ம வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்க பாரு”

அறையில் தடாரென்று எதுவோ விழும் ஓசையும், அகக்அவின் முனகல் ஒலியும் கேட்டது. கட்டிலின் கிரீச்சிடலிலிருந்து பக்கத்திலிருந்த உருவம் எழுந்துகொண்டுவிட்டதென்று உணர்ந்துகொண்டான்.

“அக்கா…. அக்கா… என்னாச்சுக்கா”? என்றபடியே தரைகளில் ஒரு குழந்தைபோல தவழ்ந்துசென்றான். கைகளில் தட்டுப்பட்ட அக்காவின் கால்கள் உதறிக்கொண்டிருந்தன. அவள் முனகல் முன்னிலும் அதிகமாக வெளிவந்தது. சிறுவன் மெல்ல நகர்ந்த அவள் முகத்தைத் தடவினான். அவள் வாயோரம் ஈரமாக வழிந்துகொண்டிருந்தது.

அவன் பயத்தில் அழத்தொடங்கினான். வாசலில் மாடுகள் கத்தத்துவங்கின. மெல்லிய குளிர்காற்று அறைக்குக் நுழைந்ததைத்தொடர்ந்து மழையோசை கேட்டது.

தடார் தடாரென்று குச்சியுடையும் சப்தம் கேட்டது.

” அக்கா என்னாச்சுக்கா உனக்கு ? அக்கா என்னை பயமுறுத்தாதக்கா. ஏங்க யாரு இங்க இருக்கிறது ? அக்காவுக்கு என்னாச்சு”?

இப்போது அவன் முதுகில் ஆதரவாகத் தடவிய ஒரு கை, அவனை அங்கிருந்து நகர்த்திச்சென்று அமரவைத்தது. பின் அவன் கைகளைத் தரையில் நகர்த்தியது. ஓரிடத்தில் சிறுவனின் கைகளில் அகப்பட்ட பொருள் நீளமாக வழுவழுவென இருந்தது. அதன்பேரிலும் ஈரமாக இருந்தது.

சமையலறையில் அடுப்பு பற்றவைக்கும் ஒலியைத்தொடர்ந்து தண்ணீர் கொதிக்கும் சப்தம் வந்தது. சற்றைக்கெல்லாம் அவன் அக்காவின் விரல்கள் அவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டன. அவன் முடிகளை கோதிவிட்டன. மழை வலுவாகப் பெய்யத்தொடங்கியது. யாரோ வாசற்படியிறங்கி வெளியேறும் ஓசைகேட்டது.

*

இந்த இடத்தில் பெரியவர் நிறுத்திவிட்டார். கார் வீஜிபியைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. நான் கேட்டேன்.

“ஆக்சுவலா அந்தப்பொண்ணுக்கு என்னாச்சு சார்”?

” இப்ப அடுத்தது” என்றார்.

“ஏன் இப்டி பாதில பாதில விடுறீங்க”?

அவர் எனக்கு பதிலளிக்காமல் புன்னகைத்தபடியே அடுத்ததைத் தொடங்கினார்.

கதைக்குள் கதை 3
——————————
அவன் உடல் அசதியில் சோர்ந்துவிழுந்தபோது அவர்கள் நான்குபேர்களும் அவனைச் சுற்றிவளைத்துக்கொண்டார்கள். அவனால் அவர்களை முழுமையாகப் பார்க்கக்கூட இயலாதபடி கண்கள் இருளடைந்துகிடந்தது. இடதுகாலைக் கழற்றியெறிந்துவிடவேண்டும்போல் வலித்தது. அவர்கள் விழுந்துகிடந்த இவனைப்பற்றி பரிகாசமாக பேசிச்சிரித்தனர்.

ஒருவன் அவன் தோள்பையினை ஆராய்ந்தான். ஒரு டார்ச் லைட்டும், கத்தியும் சில துணிகளும் ஒரு மருந்துப்புட்டியும் பஞ்சு உருண்டையும், மதுப்புட்டியும் கிடைத்தன.

ஒருவன் கேட்டான்,

“யார் நீ ? இந்தக்காட்டுக்குள்ள என்ன செய்யிற”?

இவன் சிலகணங்கள் தயங்கினான். கண்களை நான்குமுறை மூடிமூடித்திறந்துகொண்டான்.

” நா ஒரு பிரயாணி. இந்த மாதிரி காடுகள்ல அலைஞ்சு திரிஞ்சு ஆய்வு பண்ணிட்ருக்கேன்”

“கால்ல எப்டி அடிபட்டிருக்கு”?

” வழில ஒரு பாம்பு கடிச்சிடுச்சி”

அவன் கையிலிருந்த ரேடியோப்பெட்டி அலறியது. அதில்யாரோ கரகரப்பாக பேசினார்கள். அவர்கள் தங்களுக்குள் உடனே கிளம்பவேண்டுமென பேசிக்கொண்டே இவனைப்பார்த்தார்கள். பிறகு இவன் உடைகளை அகற்றி நிர்வாணமாக்கி சோதனையிட்டார்கள். இப்போது அங்கே இன்னும் சிலர் வந்தார்கள்.

இவனுக்கான சான்று அட்டைகளோ இன்னபிறவோ இல்லாததில் சந்தேகித்தார்கள். வழியில் அனைத்தும் ஒரு நதி அடித்துச்சென்றுவிட்டதாக இவன் கூறியதை அவர்கள் நம்பத்தயாரில்லை. அருகிலுள்ள உயரமான மரத்தின் உச்சியில் கிளைதாவிக்கொண்டிருந்த மந்திகளைப் பார்த்தபடியிருந்தான் இவன். சிகரெட் பற்றவைத்துக்கொண்ட ஒருவனிடம் கைநீட்டினான் இவன். கோட்டுக்குள்ளிருந்து ஒரு பாக்கெட்டை இவன் பக்கம் எறிந்தான்.

தொலைவில் எங்கோ தொடர்ந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சப்தம் கேட்க, அவர்கள் அவசரமாக இவனது மதுப்புட்டியை பறித்துக்கொண்டு தன் வழியே சென்றார்கள். இவன் தனது காலை விந்தியபடி நடக்கத்துவங்கினான். அருகில் எங்கோ மாடுகளின் கழுத்துமணியொலி கேட்டது.

*

கார் நீலாங்கரையைக் கடந்து திருவான்மியூரை நெருங்கிக்கொண்டிருந்தது.

“திருவான்மியூர்ல டெர்மினஸ்கிட்ட விட்ருங்க தம்பி. அதுக்குப்புறம் நான் போயிப்பேன்”

“ஆனா நீங்க அந்தக்கதைகளை முழுசாச் சொல்லிருக்கலாம்” என்றேன் ஆதங்கத்துடன்.

“நாந்தான் எல்லாத்தையுமே சொல்லிட்டனே தம்பி” என்றார்.

அவர் கூறியதின் பொருள் எனக்குப்புரியவில்லை. டெர்மினஸில் இறங்கிக்கொண்டு எனக்குக்கையை நீட்டினார். நான் அவர் கையைப்பிடித்துக் குலுக்கினேன். அவர் மெல்ல அருகிலிருந்த யாரிடமோ என்னவோ கேட்டார். பின்புறத்திலிருந்து பேருந்து ஒன்று விடாமல் ஹாரனிக்க நான் காரை நகர்த்தியபடியே ரியர்வியூ மிரரில் பார்த்தேன். யாரோ ஒருவரின் கையைப்பிடித்தபடி சாலையைக் கடந்துகொண்டிருந்தார் பெரியவர்.

கண்ணாடி துடைப்பவன் – சிவேந்திரன்

சிவேந்திரன் –

சூரியன் உச்சிக்கு வருவதற்கு இன்னும் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இருந்தாலும் அனலடிக்கத் தொடங்கியிருந்தது. முகமன்கூறி வெளிவரும்போது, “ஏன் நீங்கள் இந்தக் கோடையில் வந்தீர்கள்? சுற்றுலாப் பயணிகளுக்குச் சிறந்த காலம் ஒக்டோபரில் இருந்து மார்ச் வரைத்தான்”, என்றாள் ஹோட்டல் வரவேற்பறைஃபிலிப்பினோப் பெண். ஜூன் மாதம் பாலை நிலத்தில் பயணம் செய்வதற்கு உகந்ததல்ல. ஆனால் அதற்கு அடுத்துவரும் மாதங்கள் இதைவிட மோசமானவை. இந்த மாதத்தில்தான் எனக்கு விடுமுறை எடுக்கமுடியும். நான் சிரித்துக்கொண்டே, கோடைகாலத்தைத் தாங்கிவிடலாம், ஆனால் குளிர்காலத்தில் உங்கள் ஹோட்டல் கட்டணத்தைத் தாங்கமுடியாதே, என்றேன்.அவள் சிறிது தடுமாறி, குட் ஜோக், என்றாள். நான் பிரதான வாயிற்கதவை அடைய, குட் மோர்னிங்க், என்றவாறு கதவைத் திறந்துவிட்டான் ஆபிரிக்கக் காவலாளி.

வெளியில் வெய்யில் அலையலையாக படர்ந்திருந்தது. செல்லவேண்டிய இடம் அதிக தூரத்தில் இல்லை. ஒரு இருபது நிமிட நடை. டாக்ஸிக்காக நின்று ஏறுவதற்குப் பொறுமை இல்லை. வெய்யிலை பொருட்படுத்தாமல் ஆட்கள் அங்கும் இங்குமாக விரைந்துகொண்டிருந்தார்கள். பல்வேறு நிறத்தவர்கள். அதிகம் இந்தியர்கள். இவர்கள் திமோரின் கடற்கரைகளிலுள்ள ஸ்ட்ராபெரி ஹெர்மிட் நண்டுகள்  இறந்த கடல்வாழ் உயிரினங்களின் ஓடுகளில் வாழ்வது போன்று அந்நிய தேசங்களில் வாழ்கிறார்கள் என்று தோன்றியது.

பாரசீக வளைகுடாவில் இருந்து உள்ளோடி வந்து காயல் தளும்பிக் கொண்டிருந்தது. இந்த வெயிலில் தண்ணீரை பார்ப்பதே மனதுக்கு குளிர்மையை வரவழைத்தது. நடந்து வந்த களைப்புக்கு, கடல் நீர் ஏரியை நோக்கியவாறு போடப்பட்டிருந்த நிழல்குடைகளுடனான நீண்ட மர இருக்கைகள் அருமையாக இருந்தன.இக்கரைச் சிறிய துறைக்கும் அக்கரைச் சிறிய துறைக்குமாக, முனைவுகளில் நிறுத்தப்பட்டிருந்த ஒற்றைத்தூண்களில் கூரையைக் கொண்ட படகுகள் மிதமான வேகத்தில் சென்றுகொண்டும் வந்துகொண்டும் இருந்தன. படகில் வெய்யில் விழும் பக்கமாக அமர்ந்திருந்தவர்கள் மட்டைகளாலோ வெறும் கைகளாலோ தலையை மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். கால்கள் வைக்கும் இடம் சுற்றிவர படகின் விளிம்பில் இருந்து சிறிதே பதிந்திருந்தது. அமர்வதற்காக நடுவில் ஒரு சாண் உயரத்தில் மேடை. அமர்ந்திருந்தவர்கள் தலைகீழாகக் கவிழ்த்த ‘வீ ‘ எழுத்தாக முழங்கால்களை உச்சியாகக் கொண்டு மடித்திருந்தனர். மேடையில் நடுவில் பெட்டிவடிவமாக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் நின்றுகொண்டு படகோட்டி அதைச் செலுத்திக்கொண்டிருந்தான். மறுகரையில் சில பெரிய சரக்குக் கப்பல்கள் கரையுடன் இழுத்துக் கட்டப்பட்டிருந்தன. சரக்குகள் ஏற்றிய கப்பல் ஒன்று காயலிலிருந்து வளைகுடாக் கடலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அதன் மேற்புறத்தில் சரக்குகள் பாலித்தீன் போன்ற பெரிய கூடாரத் துணியொன்றால் மூடிக் கட்டப்படிருந்தன.

நான் இருந்த மர இருக்கையில்கூட மெதுவாக சூடு ஏறுவதை உணரமுடிந்தது. அணிந்திருந்த அரைக் கை சட்டையின் முன் பொக்கட்டைத் தடவிப் பார்த்தேன். அந்த ஒரு திர்ஹாம் நாணயம் கிடந்தது. அதன் ஒரு புறத்தில் ஒன்று என்ற இலக்கம் அரபியில் பொருக்காக உயர்ந்திருந்தது. மறுபக்கம் தேநீர் கேத்தல் போன்று சற்று நீண்ட வடிவம். அலாவுதீனின் அற்புதவிளக்காக இருக்கவேண்டும். பெருவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் நடுவில் அதைத் தடவி துணியைத் தாண்டி உணர்ந்து கொண்டிருந்தேன்.வெளியில் எடுத்து தன்னிச்சையாக மேலே சுண்டி மீண்டும் பிடித்துக்கொண்டேன்.

இந்தச் சூட்டிலும் இவ்விடத்துக்கு வந்ததற்குக் காரணம் இன்றும் அவன் இவ்விடத்துக்கு வருவான் என்று நம்புவதால்தான். நேற்றைய மிகுதி வேலை இருக்கக்கூடும்.அவனைச் சந்திக்காமல் சென்றுவிட்டால் வாழ்நாள் முழுவதும் சரியாகப் புரிந்துகொள்ளாத பதிலொன்றோ அல்லது பதிலளிக்கப்படாத கேள்வியொன்றோ மனதில் கொழுவி இழுபட்டுக்கொண்டு இருக்கக்கூடும்.

நான் சிப்பிரியானோ அல்விஸ் அமரல்.தாய்லாந்துக்கான கிழக்குத் திமோர் தூதரகத்தின் பொறுப்புநிலை அதிகாரி. அப்படியென்றால் தூதர் இல்லாதவிடத்து அவரின் கடமைகளையாற்ற வேண்டிய நிலையில் இருப்பவன். விடுமுறைக்காலத்தின் சிலநாட்களுக்கு தனிப்பட்ட சுற்றுலாவாக இந்த நாட்டுக்கு வந்திருக்கிறேன். மீதி விடுமுறையை கிழக்கு திமோரில் சொந்த ஊரில் கழிப்பதென்று திட்டம். இந்தப் பாலைவன தேசம் தன்னை எப்படிக் கட்டியெழுப்பி இருக்கின்றது என்பது ஆச்சரியமாகவே இருக்கின்றது. செல்வச் செழிப்பின் பிரமாண்டமான, நவீன கட்டிடக்கலையில் ஒன்றுடன் ஒன்று போட்டிபோடும் கட்டிடங்களும், செயற்கையான பொழுதுபோக்கு அம்சங்களும் சமாதானத்தினதும், அரசியல் உறுதிப்பாட்டினதும் காரணமான சர்வதேச வர்த்தகத்தின் விளைவுகள். செயற்கையின் அத்தனை பிரமிப்பையும் தாண்டி எனக்கு மிகவும் பிடித்தது இந்தக் காயல்தான். பண்டைக்காலத்தில் மீன்பிடித்தலுக்கும், முத்துக்குளித்தலுக்கும், பிற நாட்டு வர்த்தகத்துக்கும் களமமைத்த மேடை இது என்று சுற்றுலாப் பயணிகளுக்கான கையேடு கூறுகிறது. இந்த நாட்டின் ஆத்மா என்றே கூறவேண்டும். இதன் இருகரைகளிலும் இருந்துதான் இந்த நாடு உருவாகி உட்பரம்பியது.

இங்கு வந்த நாளில் இருந்து காலைப் பொழுதில் இதன் கரைகளில் நடந்து செல்வதும், சற்று அமர்ந்து வேடிக்கை பார்ப்பதும் விருப்பமாகிவிட்டிருந்தது. அப்படித்தான் அவன் நேற்று என் கண்ணில் பட்டான். கடும் பச்சைநிற நீளக்காற்சட்டையும் அதே நிறத்திலான மேற்சட்டையும் அணிந்திருந்தான். அதன் முதுகுப்பக்கமாக டொப் கிளினிங்க் என்று பொறிக்கப்பட்டிருந்தது. இடுப்புப்பட்டியில் முன்னாலும் பின்னாலும் தனித்தனியாக இரு பைகள் தொங்கின. வலதுபுறத்தில் வாள் உறைபோன்ற சற்று பெரிய கூம்புவடிவிலான தொட்டி தொங்கிக்கொண்டு இருந்தது. கையில் கூடைபோன்ற, செவ்வகவடிவிலான வாயைக்கொண்ட நீலநிறத்திலான தொட்டி. அதன் அரைப் பங்குக்கு மேலாக வெண்ணிறமாக நுரைத்துக் கொண்டிருந்த திரவம் நிரம்பியிருந்தது. மறுகையில் ‘டி’ வடிவிலான  நீண்ட துடைப்பான் போன்றவொன்று.

நீலநிற பிளாஸ்டிக் தொட்டியை நிலத்தில் வைத்த பின்னர் அந்த ‘டி’ வடிவிலான கருவியை சுவரில் சாத்திவிட்டு அதன் கண்ணாடியை விரலால் தொட்டுப் பார்த்தான். கண்ணாடி தூசு படிந்து ஒளி புகவிடாத பனிக்கட்டிபோன்று தென்பட்டது. சுட்டுவிரலால் அதில் நிமிர்ந்த நிலையிலான முட்டைபோன்ற உருவைக் கீறியவன் அதன் இடது மேற்பக்கத்தில் இருந்து வலது கீழ்ப் பக்கம்வரை மூலைவிட்டம்போன்று கோடு இழுத்தான். சிறிது உற்றுப்பார்த்தவன் ‘டி’ வடிவக் கருவியை எடுத்து தொட்டியின் நுரைத்திரவத்தை நனைத்தெடுத்தான். வேகமாக மேலிருந்து கீழாக கண்ணாடியில் பூசத்தொடங்கினான். சீமெந்து விளிம்புகளில் சற்று உள் தள்ளியிருந்த செவ்வகவடிவ நீண்ட கண்ணாடிகளை  ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக பூசிக்கொண்டே சென்றான். பின்னர் முதலில் பூசிய கண்ணாடிக்கே வந்து இடுப்பில் கட்டியிருந்த கூம்புக்கூட்டிலிருந்து வழிப்பானை எடுத்தான். மேற்புறத்திலிருந்து வானவில் போன்று இடமிருந்து வலமாக வழித்தெடுக்கத் தொடங்கினான். இவ்வாறே அடிக்கண்ணாடிவரை வலமிருந்து இடமாக, இடமிருந்து வலமாக என்று துரிதமாக வானவில் வழிப்பை செய்துகொண்டான். எஞ்சிய நீர் கண்ணாடியில் கீழ்விளிம்பால் வழிந்துகொண்டது. கூம்புக்கூட்டில் முதல் வழிப்பானை வைத்துவிட்டு அதில் இருந்து சிறிய வழிப்பானை எடுத்து கீழ்விளிம்பில் தேங்கிய நீரை இழுத்துப் வெளியில் விட்டான். இடுப்புப் பட்டியில் பின்னால் தொங்கும் துணியை எடுத்து கண்ணாடியைத் துடைத்த பின்னர் அதை முன்னாலுள்ள பையில் போட்டுக்கொண்டான். இதையே வரிசையாக செய்துகொண்டு நகர்ந்தான். கட்டிடத்தின் பக்கவாட்டில் அவனைப்போன்றே சீருடை அணிந்த மேலும் இருவர் கண்ணாடியைத் துடைக்கும் வேலையில் இருந்தனர்.

நான் சற்று நகர்ந்து சென்று அருகில் உள்ள மர இருக்கையில் அமர்ந்து அவர்களின் வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். வெயில் உருக்கி ஊற்றத் தொடங்கிவிட்டது. 40°C இற்கு அதிகமாக இருக்கலாம். அவர்களின் உடைகள் வியர்வையில் தோய்ந்து உடலுடன் அங்கும் இங்குமாக ஒட்டிய இடங்கள் கருநிறமாகக் காட்சியளித்தன. அந்த இளைஞன் அணிந்திருந்த மேலாடையைக் கழற்றி உதறினான். எனது அடிவயிற்றிலிருந்து இனப்புரியாத புகை எழுந்து மூச்சைத் திணறடித்தது போன்று தடுமாறினேன். இருக்கையின் மரச்சட்டத்தை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன். அந்த மேலாடையை மடித்து பையில் வைத்தவன் உள்ளிருந்து வேகமாக டி சேர்ட் ஒன்றை அணிந்துகொண்டு நான் இருந்த இருக்கையை நோக்கி வந்தான்.

அவன் எனக்கு காற்றில் வீசப்படும் சவுக்கை நினைவூட்டினான். உடற்கட்டுமானப் பயிற்சியால் கட்டியெழுப்பப்பட்டது போன்றதாக அல்லாமல் அவனின் உடல் குறுந்தூர ஓட்டவீரனுக்குரிய ஒடுங்கி இறுகியதாக இருந்தது. அவன் வலிமையில் நிற்கும் யானையல்ல, வேகத்தினை உடலாகக் கொண்ட சிறுத்தை போன்றவன் என்று எண்ணிக்கொண்டேன். சிறு புன்னகையுடன் அவனை எதிர்கொண்டேன். கடுமையான வெய்யில், 40°C இருக்கக்கூடும் என்று அவனுக்கு ஆங்கிலம் புரியுமோ என்ற தயக்கத்துடன் கூறினேன். இல்லை;45°C இருக்கும் என்று ஆங்கிலம் பேசுகிறோம் என்ற பிரக்ஞை இன்றி சாதாரணமாகக் கூறினான். அருகில் அமர்ந்த அவனுடன் பேசுவதற்கு விரும்பினேன். அவனும் பேசுவதில் ஆர்வமுள்ளவனாக இருந்தான். மெதுவாகத் தொடங்கிய உரையாடல் ஏதோ ஒரு கட்டத்தில் சுழன்று என்னைப் பற்றியதாக மெலெழுந்தது. அவன் கண்கள் விரிய ஒருவிதமான ஈர்ப்புடன் எனது கதையைக் கேட்டது என்னை உற்சாகத்துடன் மேலும் மேலும் பேசத்தூண்டியது.

தொண்ணூறொன்றாம் ஆண்டு மே மாதம் ஜகார்த்தாவில் இருந்து கிழக்கு திமோரின் தலைநகருக்குத் திரும்பியபோது மீண்டும் சில காலத்தின் பின்னர் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பிவிடுவேன் என்றே நினைத்திருந்தேன். அப்பொழுது நான் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவன். பதினெட்டு வயது நிரம்பி பத்தொன்பது வயதில் இருந்தேன். திலியில் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே தலைமறைவு இயக்கத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தேன். கிழக்குத் திமோரின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய இயக்கம் மலைப்பிரதேசங்களில் செயற்பட்டுக் கொண்டிருந்தது.அதற்குப் புறம்பாக மாணவர்கள், இளைஞர்களை கொண்ட நெகிழ்வான கட்டமைப்புடனான இரகசிய இயக்கம் ஜனநாயகக் கட்டமைப்புக்குள் குடிசார் எதிராட்டத்தை இந்தோனேசிய அரசுக்கும் இராணுவத்துக்கும் எதிராக நடத்திக்கொண்டிருந்தது.

உலகிலேயே இந்தோனேசியாவைப் போன்ற பன்மைத்துவ நாடு இல்லை. மற்றைய நாடுகள் மக்களால் மட்டுமே பன்மைத்துவமுடையவை நிலத்தால் பெருமளவுக்கு இணைக்கப்பட்டவை. இந்தோனேசியா மக்கள் தொகையால் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்காண தீவுகளாலான தேசம் என்பதால் பூகோளத்தாலும் பன்மைத்துவமுடையது. ஆனால் அதனுடன் இணையவிரும்பாத  எம் கிழக்குத் திமோர் தேசத்தை படைவலுவால் கைப்பற்றிக்கொண்டமை பன்மைத்துவம் என்பதையே கேலிக்குரியதாக்கிவிட்டது. கூட்டாட்சியின் அதிகாரத்தின் கீழல்லாமல் சுதந்திரமாகவும் சிறு தேசங்கள் இருக்கமுடியும் என்பதும் பன்மைத்துவம்தான்.

இந்தோனேசியா எமது நாட்டில் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களைப் பற்றி ஆராய்ந்து அறிக்கையை கையளிப்பதற்காக ஐக்கிய நாடுகள் ஆதரவுடனான போத்துக்கேய நாட்டுப் பிரதிநிதிகளையும் ஊடகவியலாளர்களையும்கொண்ட குழுவொன்று வருகைதர இருந்தது. இது வரலாற்றில் முக்கியமான தருணம் என்பதால் எனது நாட்டில் இருந்தேயாக வேண்டும் என்று ஜகார்த்தாவில் இருந்து திலிக்குத் திரும்பினேன். மக்கள் மத்தியில் குழுவின் வருகை தொடர்பான செய்திகள் பெரும் உற்சாகக் கொந்தளிப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தன. எந்தவிடத்திலும் மக்கள் சந்தித்தால் முதலில் இதைப்பற்றியே பேசிக்கொண்டார்கள். போத்துக்கல் குழுவின் வருகையின்போது கிழக்குத் திமோரின் விடுதலைக்காக ஆர்ப்பாட்டம்  நடத்தினால் அது உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும். அதனால் ஆர்ப்பாட்டமொன்றை நடத்திவிட வேண்டும் என்று தீவிரமாக வேலைகளில் ஈடுபட்டோம். அதேவேளை கிழக்குத் திமோர் இந்தோனேசியாவின் மாகாணம் என்றும் அதற்கு எதிராகச் செயற்படும் சக்திகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை கிழக்குத் திமோரியர்களைக் கொண்டே நடத்துவதற்கும் அரசு தீர்மானித்து செயற்பட்டது.

அரசின் ஆர்ப்பாட்டத்துக்கான ஆட்சேர்ப்புகளில் கிழக்குத் திமோர் ஆதரவாளர்களும் வெற்றிகரமாக ஊடுருவியிருந்தனர். ஆர்ப்பாட்டம் தொடங்கியதும் அதை அப்படியே அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டமாக மாற்றிவிடுவது அவர்களின் திட்டம். அதேவேளை இராணுவமும் உளவாளிகளும் திமோர் விடுதலைக்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். முன்னர் பாப்பரசர் வருகையின்போது ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தமையால் இந்தக் குழுவின் வருகையின் போது இடம்பெறலாம் என்று இராணுவம் சந்தேகித்தது. அவ்வாறு எதிராட்டத்தில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என்பதை அவர்கள் வெளிப்படுத்தியவாறு இருந்தனர்.சில இடங்களில் இராணுவம் பகிரங்கமாக பாரிய புதைகுழிகளைக் கிண்டியது. அதன் செய்தி தெளிவானது.

கதையை நிறுத்தி சற்று இடைவெளிவிட்டு அமைதியாக அவனைப் பார்த்தேன். அவனின் முகத்தில் இருந்த, சிக்கித் தெரிந்த உணர்வுகளை வேறுபிரித்துக் கொள்ளமுடியவில்லை.

சற்று நேரத்தில், பிறகு?, என்றான் அவன்

தடியொன்றின் இருமுனைகளிலும் தென்னோலைகளால் மீன்களைக் கட்டித்தொங்கவிட்டு, தோளில் சுமந்து செல்லும் மீன் வியாபாரியைப் பின்தொடர்ந்து செல்லும் பூனைகளைப் போன்று இளைஞர்கள்,மாணவர்கள் பின்னால் கிழக்குத் திமோரிகளை உள்ளடக்கிய இராணுவ உளவாளிகள் திரிந்து கொண்டிருந்தனர். சந்தேகத்துக்கு இடமான பலரும் கைது செய்யப்பட்டனர். எனது வீட்டுக்கும் வந்து தேடிவிட்டு சென்றனர். அப்பொழுது வெளியில் சென்றிருந்தேன். தகவல் எட்டியதால் திரும்பிச் செல்லாமல் நண்பன் வீட்டில் தங்கிவிட்டேன்.

நாட்கள் நெருங்க நெருங்க தேடுதல்களும் கைதுகளும் தீவிரமடைந்தன. எதிர்ப்பை உலகறியச் செய்யவேண்டும் என்ற வெறி கூடிக்கொண்டே வந்தது. தேவாலயங்கள் தேடுதலுக்குள்ளாகும் சந்தர்ப்பம் அரிதாக இருந்ததால் மோடெயல் தேவாலயத்தில் குழுவொன்று தங்கியிருந்து பணிகளில் ஈடுபடுவது நல்லதென்று முடிவெடுத்தோம். மோடெயல் தேவாலயம் என்படும் திலியின் புனித அந்தோனியார் தேவாலயம் கடலை நோக்கியவாறு வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாக நின்றிருந்தது. மறுபுறம் தொலைவில் தெரிந்த மலைகள் அந்தத் தேவாலயத்தின் வரலாற்றுக்கும்கூட சாட்சியாக அமைதியாக ஓய்ந்திருந்தன. நெடிந்து நீண்ட பிரார்த்தனை நடுக்கூடம். பிரதான வாயிலுக்கு முன்புறமாக சற்றுப்பதிந்து இறங்கிய தாழ்வாரம். அதில் தாமரை இதழின் மேற்பாதிபோன்ற, இருபுறமாக மேல்வளைந்து உச்சிகொண்ட நான்கு நுழைவாயில்கள். தேவாலயத்தின் முன் இடது மூலையில் சுவருடன் ஒட்டி, நீண்டு உயர்ந்த மணிக்கூட்டுக் கோபுரம். அதன் உச்சியிலும் முன்பக்க நுழைவாயில்கள் போன்று தாமரை இதழின் மேற்பாதிபோன்ற இடைவெளிகளால் முழுமையாக வெளித்தெரியும்படி மணி கட்டப்பட்டிருந்தது. தேவாலயத்தின் இருமருங்கிலும் முன்புறம் போலவே தாழ்வாரங்கள் சுவரின் உச்சியில் இருந்து சற்றுக் கீழே ஆரம்பித்து சரிந்து நீண்டிருந்தன. ஆனால் அவை திறந்தவாறு அமையாமல் மூன்று புறமும் சுவரெழுப்பி கதவிடப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது. நான்காம் பக்கம் சுவரற்று, நடுக்கூடத்தின் வெளியுடன் தனது வெளியை இணைத்தவாறு இருந்தது.

தேவாலயம் என்றால் அதன் கட்டிடமல்ல அதன் ஓங்கி உயர்ந்த உட்புறவெளிதான். பலமுறை சென்றிருந்தாலும் அந்த உட்புறம் பாதுகாப்புணர்வையும், பதட்டத்தையும் ஒருசேர மனதில் ஏற்படுத்துவதை தவிர்க்கவே முடிவதில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக ஆழ்மனதில் படிந்த குகை வாழ்க்கை நினைவுகள் தூண்டுவதால் அந்தப் பாதுகாப்புணர்வு வருகின்றது என்று எண்ணிக்கொள்வதுண்டு. பதட்டத்துக்கான காரணத்தைத்தான் புரிந்துகொள்ளமுடிவதில்லை. மனிதனின் தேவைக்கு மிக அதிகமான, மேலதிக வெளி அளிக்கும் அசௌகரியமாக அது இருக்கக்கூடும்.

காலை மாலை இருநேரமும் ஆராதனைகள் நடைபெறுமாயினும் மாலையிலேயே கூட்டம் நெருக்கும். அந்தோனியாரை வேண்டிக் கொள்வதுடன் சூரியன் வீழ்ந்து மறைவதை ரசித்தபடி கடற்கரையோரமாக சிறுநடை செல்வதற்காக அதிக கூட்டம் வருகின்றது. ஆராதனை முடிந்து கூட்டம் கலைந்த பின்னர் இரவு முழுவதும் தேவாலயம் எமது கைக்குள் இருக்கும். தாழிட்டுவிட்டு உட்புறமாக தேவாலய மின் குழல் விளக்குகளை நிறுத்திவிடுவோம். நான்கைந்து பேராக குழுக்களாக வட்டவடிவில் அமர்ந்து இரவிரவாக பதாதைகள் வரைவது, படங்கள் வரைவது, கொடிகள் செய்வதென்று பணிகள் நீளும். நடுவில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருக்கும்.

போத்துக்கேய குழுவின் வருகை நாள் அண்மிக்க அண்மிக்க, நாடெங்கிலும் எதிர்பார்ப்புடனான பதட்டமும், பயமும் அதிகரித்துக்கொண்டே வந்தது. மக்களின் பேச்சுகள், தொடர்புகள், நடவடிக்கைகளில் எல்லாம் உளஎழுச்சியும் எச்சரிக்கை உணர்வும் நிறைந்திருந்தன. காற்றில்கூட அவை பரவித் ததும்புவதுபோன்று இருந்தது. ஒவ்வொருவரும் அதைப் பற்றிய உணர்வே இன்றி இயல்பாக இருப்பதாக இராணுவத்தினருக்கும், உளவாளிகளுக்கும் காட்டுவதற்கு முற்பட்டுத் தோற்றுக்கொண்டிருந்தனர். மாணவர்களும் இளைஞர்களும் கைது செய்யப்படும், காணாமல்போகும் தகவல்களை நாளாந்தம் கேள்விப்பட்டுக் கொண்டிருந்தோம் .தம்மைமீறி எதுவும் நடைபெறக்கூடாது என்பதில் அவர்கள் வெறியுடனிருந்தார்கள்.

தேவாலயத்தில் நாங்கள் எச்சரிக்கையாகவே செயற்பட்டோம்.அப்படியிருந்தும் வெளியே சென்று திரும்பிய சிலர் இந்தோனேசிய உளவாளிகளின் கண்களில் பட்டுவிட்டார்கள்.வழிபாட்டுக்குச் செல்வதாக கூறிவிட அவர்களும் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.இந்த நிகழ்வு ஆலயத்தினுள் ஓர் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியது. உளவாளிகள் பெரிதுபடுத்தாமல் சென்றதாலும், திடீரென்று வேறு இடத்துக்கு அனைத்தையும் மாற்றுவது சாத்தியமில்லை என்பதாலும் பணிகளைத் தொடர்ந்து செய்தோம்.

பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்ற சில பத்திரிகையாளர்களின் வருகையை இந்தோனேசிய அரசு எதிர்த்தமையால் போத்துக்கல் குழு வருகையை நிறுத்திவிட்டது. அடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலை. மெதுமெதுவாக மறைவான இடங்களுக்கு பதாகைகளையும், கொடிகளையும் கொண்டுபோய் சேர்த்த பின்னர் நாங்களும் இடம் மாறிக்கொள்ளலாம் என்று நினைத்தோம். தொண்ணூற்றொராம் ஆண்டு ஒக்டோபர் இருபத்தெட்டாம் நாளை எதை மறந்தாலும் என்னால் மறக்கமுடியாது. நள்ளிரவு தாண்டி ஒரு மணி இருக்கும்.தூரத்தில் நாய்களின் ஊளை எழுந்தது. அதைத் தொடர்ந்து நாய்களின் ஊளைகள் கிறிஸ்மஸுக்குக் கொழுத்தும் சரவெடி போன்று ஒன்றன்பின் ஒன்றாக நெருங்கி வந்தன. காற்று தேவாலய வளாகத்தை பல்வேறு அளவிலான ஊளை ஒலிகளைக் கொண்டுவந்து நிரப்பியது. என்ன நடக்கின்றது என்ற  பதட்டத்து எழுந்து நின்ற எங்களை ஒவ்வொரு பக்கமாக ஊன்றப்பட்டிருந்த மெழுகுதிரிகள் பல்வேறு திசைகளில் நிழல்களாக விழுத்தின. சில அடர்ந்தியானவை, சில மற்றைய ஒளியில் மங்கியவை. ஒன்றுடன் ஒன்று கலந்தும், பிரிந்தும்,குறுக்குவெட்டியும் அசைந்த நூற்றுக்கணக்கான நிழல்கள் நாய்களின் ஊளைச் சத்தத்துக்கு ஏற்ப நடனமிடுவது போன்றிருந்தன. வெளியில் ட்ரக் வண்டிகளின் இயந்தி ரஇழுவிசை ஓசைகள் கேட்டன. தேவாலயத்தின் உட்புறவெளி அச்சமாக மாறி அனைவர் மீதும் அழுத்தியது.

நானும் சிலரும் தேவாலயத்தின் தாழ்வாரம் மறைத்தபடி இருந்த பின்பகுதியின் பக்கவாட்டுக் கதவை திறந்து மெதுவாக வெளியில் வந்தோம். காற்று சுழன்றவாறு உள்நுழைந்து மெழுகுதிரிகளை அணைத்த வேளையில் ட்ரக் வண்டிகளின் ஓசை நின்று தடதடவென்று சப்பாத்துக்கால்கள் நிலத்தில் குதிக்கும் சப்தம் கேட்டது. கண நேர இடைவெளியில் தேவாலயக்கதவு உக்கிரத்துடன் தட்டப்படுவதும் அதைத் தொடர்ந்து கதவு உடைந்து திறபடும் சத்தமும், உள்ளிருந்தவர்களின் அபயக்குரல்களும் எழுந்தன. இந்தோனேசிய மொழியிலும், டெட்டும் மொழியிலுமான கூச்சல்களும், வாதாட்டங்களும், தள்ளுமுள்ளுகளும் கலந்து கேட்டது. அதைத் தொடர்ந்து வேட்டுச் சத்தங்களுடன், கத்தியால் குத்திவிட்டார்கள் என்ற அலறல் எழுந்தது. நான் பக்கவாட்டுச் சுவரில் உன்னி ஏறிக் கூரையில் குப்புறப்படுத்துக் கொண்டேன். கூரையில் படுத்திருப்பது புத்திசாலித்தனமானதல்ல. பக்கவாட்டில் தொலைவில் இருந்து பார்த்தால் கண்டுவிடக்கூடும். எந்த நேரமும் வெடி விழலாம் என்ற பதட்டத்தில் மூளையில் சிந்தனைகள் மங்கியோடின. இறங்கி ஓடினால் வெடி நிச்சயம். திடீரென்று கோயில் மணி ஒலிக்கத் தொடங்கியது. அக்கம் பக்கத்தில் இருந்து மக்கள் கோயிலை நோக்கி வரும் சலசலப்புகள் கேட்டன. மக்கள் தேவாலயத்தைச் சூழ குழுமத் தொடங்கிவிட்டார்கள். கொலைகாரர்கள் என்று இராணுவத்தை திட்டுவதும்,கோயில் வளாகத்துக்குள் நுழைய முனையும் வாக்குவாதங்களும் தெளிவில்லாமல் இரைச்சலாகக் காதில் விழுந்தன.

சிறிது நேரத்தில் ஆயர் பெலோவின் குரல் கேட்டது. இராணுவத்தினருடன் வாதாடும் ஒலியும் அவர்கள் ஏதோ கூறுவதுமாக தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியாத ஓசைகள். மக்கள் உள்ளே கூட்டமாக வளாகத்துக்கு நெருக்குப்பட்டு வேகமாக உள்வருவது தெரிந்தது. நான் மெதுவாக இறங்கி அவர்களுடன் கலந்தேன். தேவாலய முன்றலில், மின்விளக்கின் ஒளியில் இரு உடல்கள் கிடப்பது தெரிந்தது. பிரதான வாயிலில் இருந்து துடைப்பத்தால் பூசப்பட்ட தீந்தை போன்று விழுந்து கிடக்கும் உடல்கள் வரை இரத்தம் இழுபட்டிருந்தது. மண்ணில் தோய்ந்து ஒருபுறம் சரிந்திருந்த முகம்.நண்பன் செபஸ்டியாவ் கோமஸ். ஏசுவே… கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. சற்று தலையை உதறி மற்றையதை நோக்கினேன் வாயைப் பிளந்தபடி கிடந்த அது இராணுவ உளவாளி அஃபொன்ஸோ. அவன் உடலில் செருகப்பட்டிருந்த கத்தியின்பிடி மட்டும் வெளித்தெரிந்தது. மக்கள் கூட்டத்தை தள்ளியபடி இராணுவத்தினர் ஏனைய நண்பர்களை ட்ரக் வண்டிகளை நோக்கி இழுத்துச் சென்றார்கள். கூட்டத்தின் மத்தியில் நான் தலையைக் குனிந்துகொண்டு நின்றேன். செபஸ்டியாவ்வின் உடலின் அருகில் இராணுவ சப்பாத்தினால் உருவான பள்ளத்தில் வழிந்த இரத்தம் தேங்கிநின்றது. ஆயர் பெல்லோ அதில் குனிந்து எதையோ எடுத்தார். செபஸ்டியாவ் அணிந்திருந்த சிலுவையுடனான சங்கிலி. இரத்தம் அதில் இருந்து துளித்துக் கொண்டிருந்தது.

கலைந்து கொண்டிருந்த கூட்டத்துடன் சென்று நண்பன் ஒருவனின் வீட்டில் அடைக்கலமானேன். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தேவாலயத்தில் இருந்து சிலர் தப்பியதை அறிந்து கொண்ட இராணுவம் தேடுதலை முடுக்கிவிட்டது. இரண்டு நாட்களுக்கு அதிகம் ஒரே இடத்தில் மறைந்திருக்காமல் இடம் மாறியபடியே இருந்தேன். இராணுவத்தினர் ஒருமுறை நான் தங்கியிருந்த வீட்டையும் தேடினர். வீட்டின் பின்புறமுள்ள கால்களை மடித்தவாறு ஒருவர்  குந்தியிருக்ககூடிய கிடங்கில் நான் அப்பொழுது ஒளிந்திருந்தேன். அதன் மீது காற்று வருவதற்கான சிறு இடைவெளிவிட்டு மரப்பலகை இடப்பட்டு அதன் மேலாக மண்ணைப் பரப்பிப் பழைய பொருட்களை இட்டிருந்தனர். இராணுவத்தினர் பின்புறம் எட்டிப் பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். மீண்டும் வரலாம் என்று சந்தேகம் எழுந்ததால் இரவோடு இரவாக வேறு இடத்துக்கு மாறவேண்டியதாகிவிட்டது.

போத்துக்கேயக் குழுவின் வருகை நிறுத்தப்பட்டது மக்களின் உற்சாகத்தை வற்றச் செய்துவிட்டது. மழை சற்று தூறியிருந்தாலும் நவம்பர் மாதத்தில் காற்றில் தூசுகள் அடங்கவில்லை. அந்தத் தூசுகள் போன்று விரக்தி ஒவ்வொருவர் மீதும் படிந்து கொண்டிருந்தது. செபஸ்டியாவ் கோமஸின் படுகொலை உள்ளே எரிந்து கொண்டிருந்தது. அதையும், எதிர்பார்ப்பு முறிந்த ஏமாற்றத்தையும் இராணுவத்தின் ஆயுதங்கள் மீதான பயம் சாம்பலாக மூடியிருந்தது. ஆயினும் நாம் மனம் தளரவில்லை. செயற்பாட்டாளர்கள் பல குழுக்களாகப் பிரிந்து வேலை செய்து கொண்டிருந்ததால் தேவாலயக் கைதுகளுக்குப் பிறகும் தேக்கம் ஏற்படவில்லை. இதை எப்படி சாதகமாக மாற்றுவது என்பதையே சிந்தித்துக் கொண்டிருந்தோம். எமது வழக்கப்படி இறப்பின் பின்னரான பதினாலாம் நாள் நினைவு வழிபாடு மேற்கொள்ளப்படும்.

செபஸ்தியா கோமஸின் நினைவுநாள் வழிபாட்டை இந்தோனேசிய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாற்றுவதற்குத் தீர்மானித்தோம் .ஃபலின்டில் விடுதலைப் போராட்டத் தலைமைக்கு இது குறித்துத் தெரிவிக்கப்பட்டது. குடிசார் எதிராட்டத்துக்கான இரகசிய இயக்கம் ஆயுதப் போராட்ட இயக்கத்தில் இருந்துவேறா க,சுயாதீனமாகச் செயற்பட்டாலும் முக்கிய நடவடிக்கைகளை அவர்களின் ஒப்புதலைப் பெறாமல் ஈடுபடுவதில்லை. விடுதலைப் போராட்டத்தின் அர்ப்பணிப்பில் அவர்களின் முதன்மை இடத்தை அங்கீகரித்தவர்களாகவே இருந்தோம். எந்தவித வன்முறையிலும் ஈடுபடாது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு ஃபலின்டிலிடம் இருந்து பதில் வந்தது. ஆயத்தப்பணிகள் தீவிரமடைந்தன. தங்குமிடங்களும் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான பிரதிநிதி திலிக்கு வந்திருந்தமையால் அவர் இருந்த இடத்துக்கும் நினைவு நிகழ்வுடன் ஊர்வலமாகச் செல்வதற்கு திட்டமிடப்பட்டு நிகழ்வு ஒரு நாள் பின்தள்ளி வைக்கப்பட்டது.

குறிப்பிட்ட நாள் விடிவதற்கான பதட்டத்துடன் சரிந்து கிடந்தேன். மனதில் ஏதேதோ குழப்பங்கள். நள்ளிரவில் திடீரென்று இரகசிய செயற்பாட்டு நண்பன் ஒருவன் வந்தான். அவசரமாக ஓரிடத்துக்கு செல்லவேண்டும் வா என்று அழைத்துச் சென்றான். வீதிகளைத் தவிர்த்து ஒழுங்கைகளாலும் வளவுகளுக்குள்ளாலும் இராணுவத்தால் உடைக்கப்பட்ட கட்டிடம் ஒன்றுக்கு அழைத்து சென்றான். சுற்றிவர புதர்கள் அடர்ந்து கூரைகள் எதுவுமற்ற சுற்றுப்புறச்சுவர் மட்டும் எஞ்சி நின்றது. கதவுகள், சாளரங்களின் நிலைகள் கழற்றி எடுக்கப்பட்ட வெறும் சிமெந்துச் சுவர்கள்.உள்ளே நிலத்தில்கூட வெடிப்புகள் ஏற்பட்டு ஆங்காங்கே புதர்கள் எழுந்திருந்தன. கூரையுள்ள வீடு மனிதனுக்குத்தானே தேவை.

உள்அறை ஒன்றுக்கு சென்ற போது அதில் சிலர் துணியொன்றை விரித்து வட்டமாக அமர்ந்திருந்தனர். அருகில் கூடை ஒன்று கவிழ்க்கப்பட்டு இருந்தது. நெருங்கிச் சென்றபோது அவர்கள் இரகசிய செயற்பாட்டு நண்பர்கள் என்பது தெரிந்தது. ஒருவரை மட்டும் அடையாளம் தெரியவில்லை. நடுத்தர வயதுடையவர்; நெற்றி கால்வாசி தலை வரை மேலேறி விட்டிருந்தது.அதைச் சமப்படுத்தும் வெறியுடன் வளர்க்கப்பட்டு பின்புறமாக வாரி இழுத்த, சிக்கெடுக்கப்படாத முடி தோள்களில் புரண்டது. அதே போன்றே ஒழுங்காக்கப்படாத மீசை. யாரது என்ற பார்வையை நண்பனில் விட்டெறிந்தேன். ‘எல் செவின், எல் செவின்’ என்று தேவாலயத்தில் ஆராதனை நடைபெறும் போது பக்கத்தில் நிற்பவரிடம் அவசரமாக எதையாவது கூற நேர்வது போன்ற ஒருவித பதட்டத்துடன் என்னைத் திரும்பிப் பார்க்காமலே கூறினான்.

நான் உறக்கத்தில் கனவு காண்கிறேனா இல்லை உண்மையாகவே நாட்டுப் புறக்கதைகளின் வீரனைக் காண்கிறேனா என்று திகைப்பெழுந்தடங்கியது. எல் செவினைப் பற்றி எத்தனை கதைகள். ஒருமுறை எல் செவினை இந்தோனேசிய இராணுவம் சுற்றி வளைத்துத் தாக்கியபோது புகையாக மாறி மெலெழுந்து சென்றதாகவும் மலையைக் கடந்து சென்று மறுபக்கம் மழையாகப் பெய்து மீண்டும் எல் செவினாக மாறியதாகவும் வியப்புடன் பேசிக்கொள்வர். காட்டில் கொடியாக மாறி மரத்தில் படர்ந்து உச்சி வரை சென்றிருந்ததாகவும் இராணுவம் அதைக் கவனிக்காமல் கடந்துவிட்டதாகவும், இன்னுமொரு முறை பச்சைப் புறாவாக மாறிப் பறந்து சென்றதாகவும் இப்படிப் பல கதைகள்.

உங்களுக்காக இன்று எத்தனையோ அபாயங்களைத் தாண்டி வந்துள்ளேன். உடனடியாக செய்து முடித்துக் கிளம்பவேண்டும் என்று மெல்லிய புன்னகையுடன் அவரின் மீசை அசைந்தது. மற்றவர்களுடன் நானும் அரைவட்டமாக அமர்ந்தோம். நிலத்தில் விரிக்கப்பட்டிருந்த சிவப்புத்துணியில் ஃபலின்டில் என்று எழுதப்பட்டிருந்தது அதன் மேற்புற விளிப்பின் மையத்தில் மரத்தாலான சிலுவை கிடையாக வைக்கப்பட்டிருந்தது.

எல் செவின் எழுந்து கூடையைத் தூக்கி கழுத்தில் பொன்னிற இறகுகளும் பழுப்பு நிறமும், சாம்பல் வெள்ளை சிறகுகளுமாக க்கெக் க்கெக் என்றுகொண்டிருந்த சேவலைப் பிடித்துக்கொண்டு வந்து அமர்ந்தார். தலையில் இருந்து மெதுவாகக் கழுத்துவரைத் தடவினார். சேவல் சிலிர்த்து அரைக் கண்ணை மூடியது. நாளை எமக்கு வெற்றியாக அமைய வேண்டும்.முன்னோர்கள் மலைகளில் இருந்து இறங்கி வந்து எமது கால்களிலும் தோள்களிலும் வலுச் சேர்க்கவேண்டும் என்று முணுமுணுத்தவாறு சடுதியாக ஒற்றைக் கையால் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கினார். சிறகுகள் இரண்டும் படபடவென்று அடித்து இறகுகள் பறந்தன. உடல் துடித்து அமைதியானது. பின் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கியவாறு கழுத்தில் மெல்லிய கீறல். துணியில் வைக்கப்பட்ட குவளையில் இரத்தம் ஒழுகி நின்றது. வீட்டுக்கு வந்து படுத்தபோது மனத்தில் எதுவும் இருக்கவில்லை. மலை மீது ஏறி இறங்கியபின் வரும் ஆழ்ந்த உறக்கத்தில் வீழ்ந்தேன். சேவல் கூவும் சத்ததுடன் எழுந்தேன். நேற்றைய உறக்கம் வியப்பாக இருந்தது. ஆர்ப்பாட்டத்துக்கான நேரம் நெருங்க உடலெங்கும் பதட்டத்துடனான பரவசமொன்று உருவாகிக் கொண்டிருந்தது.

சுத்தமாகி,உடைகளை மாற்றிக்கொண்டேன்.சுருட்டப்பட்டிருந்த பழைய படுக்கை விரிப்பை விரித்து உள்ளடங்கியிருந்த பதாகையையும் கொடியையும் எடுத்தேன். மேற்சட்டையை கழற்றி உடம்பின் சுற்றிக்கொண்டு மீண்டும் அணிந்து கொண்டேன். காலைக் குளிருக்கு இதமாக இருந்தது. தேவாலய ஆராதனைக்கு சென்றால் உளவாளிகள் என்னை அடையாளம் கண்டுவிடக்கூடும் என்பதனால் ஆர்ப்பாட்டத்தின் இடைநடுவில் கலந்துகொள்வதற்காக காத்திருந்தேன். ஆராதனை அதிகாலை ஆறுமணிக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. முடிவதற்கு ஒரு மணிநேரம் எடுக்கும். பதட்டத்துடனான காத்திருப்பு.

ஆர்ப்பாட்டத்தின் குரல் அலையலையாக நெருங்கி வந்துகொண்டிருந்தது. வீவா திமோர் லெஸ்தே, வீவா ஸனானா முழக்கங்களுடன் கலந்த இரைச்சல். உடல் சிலிர்த்தது. நூற்றுக்கணக்கானோரையே எதிர்பார்த்தோம். ஆனால் நிச்சயமாக அதைத் தாண்டியிருக்கின்றது. அருமை திமோர் லெஸ்தே உன் விதி மாறுகின்றது என்று பாடினேன். ஆர்ப்பாட்டத்தின் முனை நான் இருந்த இடத்தை தாண்டியது. கடந்து சென்று கொண்டிருப்பவர்களின் முழக்கமும் வந்துகொண்டிருப்பவர்களின் முழக்கமும் இருவேறு திசைகளில் இருந்து வரத்தொடங்கின .மின்னலென வெளிவந்து கூட்டத்துடன் கலந்தேன். அதே வேகத்தில் பதாகையும், கொடியும் உடலில் இருந்து வெளியில் வந்தன.

பெருமழை பெய்து வீடுகள், வளவுகள் எங்கிலும் இருந்து நீர் வீதிக்கு ஓடிவந்து இணைவது போன்று செல்லும் வழியெங்கும் திசைகள் எங்கிலும் இருந்து இளைஞர்கள், நடுத்தர வயதினர், பெண்கள், பாடசாலைக்கு வந்த மாணவர்கள் இணைந்துகொண்டே இருந்தார்கள். காந்தமொன்று இரும்புத் துணிக்கைகளுக்கு இடையால் இழுக்கப்படுவதாக மக்களை ஊர்வலம் தன்னிச்சையாக ஈர்த்துக்கொண்டே சென்றது. பொலிசாரும், இராணுவத்தினரும் சோதனைச் சாவடிகளிலும், வீதியோரங்களிலும் பெருமளவில் நின்றார்கள். அவர்கள் முகங்கள் நம்பவே முடியாத ஆச்சரியம், கோபம், வெறுப்பு என்று கலந்துகட்டிப் பிரதிபலித்துக் கொண்டன. இத்தனை மாதங்களாக எது நடைபெறக் கூடாதென்று இராப்பகலாகப் பாடுபட்டார்களோ அது அவர்களின் கண்முன்னே நடந்துகொண்டிருந்தது.

அரசியல் நாடகங்களால் ஆனது. வெறும் அரசியல் நிலைப்பாடுகள் வரலாற்றை உருவாக்குவதில்லை. அதன் அடிப்படையில் நடத்தப்படும் நாடகங்களே வரலாற்றை நகர்த்துகின்றன என்பது எம் இரகசிய அமைப்பினரின் கூட்டங்களில் அடிக்கடி கூறப்படும் வாசகமாகும். நிலைப்பாடு சரியாக இருந்தாலும் நாடகம் சரியாக அமையாவிட்டால் அந்த நிலைப்பாட்டை முன்னகர்த்த முடியாதென்பது அதன் இன்னுமொரு வடிவம். கிழக்குத் திமோர் இந்தோனேசியாவின் ஒரு அங்கம் என்பதைக் காட்டுவதற்காக ஜகார்த்தா அரசும், தனி நாடு என்பதைக் காட்டுவதற்காக நாமும் போத்துக்கேயக் குழுவின் முன் ஆர்ப்பாட்ட நாடகங்களை நடத்தத் திட்டமிட்டிருந்தமை வருகை நிறுத்தப்பட்டதுடன் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் ஒத்திகையை வீணாக்காமல் விடுதலை ஆதரவாளர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதை மறுதரப்பு ஆத்திரத்துடனும் இயலாமையுடனும் பார்த்துக்கொண்டு நிற்கிறது.

திட்டமிட்டபடி  ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி தங்கியிருந்த ஹோட்டல் அமைந்த வீதிக்கு திரும்ப முயன்றோம். ஆனால் பொலிஸாரின் கடுமையான தடுப்பைமீறிச் செல்ல முடியவில்லை .தெற்காகத் திரும்பி இடுகாட்டை நோக்கித் தொடர்ந்து செல்லத் தொடங்கினோம். மண் எனும் சிலுவையில், எழவே முடியாதபடி மனிதர்களை வைத்து அறையப்பட்ட, ஒன்றைப் போன்று ஒன்றல்லாத சிமெந்து ஆணிகளின் தோட்டம் ஸண்டா க்ரூஸ். புகைப்படங்கள் பதிக்கப்பட்டவை, கண்ணைப் பறிக்கும் வண்ண டைல்ஸ் பதிக்கப்பட்டவை, இயேசுவின் சிலைகளைத் தாங்கியவை, சிறுவீடுகள் போன்றவை, பரிசுத்த ஆவியான புறா இறங்கிக் கொண்டிருப்பவை என்று கூறிக்கொண்டே போகலாம் .இவற்றுடன் செபஸ்டியாவ் கோமஸினதும் இணைந்துவிட்டது. புதிய மண் குவிக்கப்பட்டு பெரிய வெள்ளை சிலுவை உயர்ந்து நின்றது. நெடுக்காக ஆர்.ஐ.பி, பிறப்பு இறப்பு திகதி விபரங்களும், குறுக்காக செபஸ்டியாவ் கோமஸ் என்ற பெயரும் கறுத்த மையால் எழுதப்பட்டிருந்தன. பெரிய மலர் வளையம் ஒன்றை சிலுவையின் கழுத்தில் இட்டார்கள் .இதுவரை இருந்த ஒட்டுமொத்த உற்சாக மனநிலை வடிந்து வெறுமை குடிகொண்டது. இன்று அவனும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். என்ன பைத்தியக்காரத்தனமான எண்ணம்! அவன் இருந்தால் இது நடைபெற்றே இருக்காதே என்று மறுவிநாடி தோன்றியது.

இடுகாட்டுக்குள்ளும் வெளியிலுமாகக் கூட்டம் நெரிபட்டது. எதிர்ப்புக் முழக்கங்கள் ஓயவில்லை. நான் மீண்டும் வெளியில் வந்து, வீதியைப் பார்த்த வண்ணம் ஏற்கனவே மதிலில் நின்றிருந்தவர்களுடன் ஏறிக் கொண்டேன். வீதியெங்கும் நிறைந்து வழிந்தது. வீவா திமோர் லெஸ்தே,வீவா ஸனானா முழக்கங்கள் எழுந்தன.

இராணுவ வாகனங்கள் வந்து கூட்டத்தின் காரணமாகத் திரும்புவதும் அதில் இருந்து சீருடை முழுமையாக அணிந்தவர்களும்,மேலாடை இல்லாமல் காற்சட்டை மட்டும் அணிந்தவர்களுமாக இறங்கி எதிரில் இருந்த இராணுவத்தினரின் இடுகாட்டுக்கு வரிசைகட்டிச் செல்வதும் தெரிந்தது. சற்று நேரத்தில் அவ்விடுகாட்டின் மதிற்சுவர்களிற்கு மேலால் துப்பாக்கிகள் எம்மை நோக்கி நீண்டன. பீதியுடனான கூச்சல் எழுந்தது. கையில் இருந்த மெகாபோனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒருவர் நாம் அமைதியாகவே எதிர்ப்பைக் காட்டுகின்றோம், இராணுவத்தினர் எமக்குப் பாதுகாப்பளிக்கவே வந்துள்ளனர் என்று பதட்டத்துடன் கூறியவாறு நின்றிருந்தார். இராணுவத்தினர் வரிசையாக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு நின்றதையும் விசையை அழுத்தத் தயாரான அவர்களின் நிலையையும் புறக்கணித்தாலும்கூட அவர்களின் கண்களில் உறைந்து கொண்டிருந்த வேட்டையாடும் வெறி மூளையில் எச்சரித்தது. பின்புறமாகக் குதிக்கவும் துப்பாக்கிகள் வெடிகளைத் தீர்க்கவும் சரியாக இருந்தது.

எங்கும் கூக்குரல், மரண ஓலம். சில நிமிடங்கள் தொடர்ச்சியாக துப்பாக்கிகள் வெடித்துத் தள்ளின. நான் ஓடியும், கல்லறைகளுக்குள் பதுங்கி ஊர்ந்தும் நகர்ந்து கொண்டிருந்தேன். உண்மையில் பீதியில் கூச்சலும் வெடிச்சத்தமும் கேட்டதே தவிர சுற்றிவர என்ன நடக்கின்றது என்பதை எனது புலன்கள் அறியவில்லை. மூளை உறைந்துவிட்டது போன்ற நிலை. என்னைச் சுற்றி இருட்போர்வை போர்த்துக்கொண்டது போலவும் ஓடுவதற்கான காலடி வைக்கும் இடங்கள், பற்றுவதற்குரிய இடங்களை மட்டும் அப்போர்வை கிழிந்து கிழிந்து வெளிச்சத்தை அனுமதிப்பது போன்றும் இருந்ததாக பின்னர் நினைவுக் கூரும்போது தோன்றுகின்றது. இடுகாட்டின் பின்புறத்துக்கு வந்து மூச்சிரைக்க கல்லறையொன்றின் மறைவில் படுத்துக்கொண்டேன். சற்று தொலைவில் இன்னொரு கல்லறை மறைவிலிருந்து வெள்ளையர் ஒருவர் தனது வீடியோவில் பதிவு செய்துகொண்டிருந்தது தெரிந்து சற்று தெளிவடைந்தேன். எதிர்ப்பாட்டத்தை குறித்து செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் அவர்.

சட்டை முழுதும் இரத்தம் தெறித்திருந்தது. தடவிப் பார்த்தேன் . கால் கைகளில் சிராய்ப்புக் காயங்களைத் தவிர வேறில்லை. கூட்டமாக ஓடியபோது யாருடைய இரத்தமாவது பட்டிருக்க வேண்டும். முதுகில் குளிர்வது போன்று இருந்தது. கையால் தடவினேன் ஏதோ ஒட்டிக்கொண்டிருந்தது. மனப்பதைப்புடன் இழுத்தெடுத்தேன் . இரத்தத்தால் ஊறிய தலைமயிர்கள் ஒருபுறமாகவும், பசைபோன்று வழுவழுத்த இரத்தம் சதைகளுடனான மறுபுறத்தையும் கொண்ட மண்டையோட்டின் துண்டு. கையை உதறி வீசினேன். முன்னரைப் போன்று தொடர்ச்சியாக அல்லாமல் இடைக்கிடை வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. காயப்பட்டு விழுந்து கிடந்தவர்களைச் சுட்டுக்கொண்டு இராணுவத்தினர் மெதுவாக உள்ளே வந்து கொண்டிருந்தனர். விழுந்து துடித்து க்கொண்டிருந்த ஒருவரை சுடுவதற்கு முயல்வதும்.ரவை தீர்ந்ததால் இடுப்பில் இருந்து கத்தியை எடுத்து அவர் வயிற்றைக் கிழிப்பதும் தெரிந்தது. கழுத்தில் குளிரேறித் தலை விறைத்துக்கொண்டு வந்தது . கால்களில் வலுவைத் திரட்டி பின்மதிலால் பாய்ந்து ஓடத்தொடங்கினேன்.

மீண்டும் தலைமறைவு வாழ்க்கை ஆரம்பித்தது. ஸண்டா க்ரூஸ் மயானத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்று பின்னர் தெரியவந்தது. நாளாந்தம் பயங்கரமான செய்திகள் வந்துகொண்டே இருந்தன. காயமடைந்தவர்கள் பலர் இராணுவ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தனர். அங்கு பணிபுரிபவர்களை வெளியில் அனுப்பிவிட்டு இராணுவத்தினர் பெரிய கற்களால் மண்டைகளைப் பிளந்தும், காயங்களுக்கு குளிர்நீர் ஊற்றியும் அவர்களைப் படுகொலை செய்ததாக ஒளிந்திருந்து தப்பியோர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டோர் பலர் ஆற்றங்கரையில் வரிசையாக நிற்கவைத்து சுடப்பட்டு வீசப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. காயமடைந்தோர் நகரிலும், சுற்றுப்புறக் கிராமங்களிலும் தேடித்தேடி கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

தலைமறைவாக எவ்வளவு காலத்துக்கு இருக்கமுடியும் என்று தெரியவில்லை. தேடுதல் தொடர்ந்து இடம் பெற்றுக்கொண்டே இருந்தது. பல்கலைக்கழகக் கல்வியை இடை நிறுத்திவிட்டு வந்த சில காலத்திலேயே மீண்டும் திரும்பிச் செல்லமுடியாத ஒற்றையடிப் பாதை வழியாக வெகுதூரம் வந்துவிட்டேன் என்றெண்ணித் திகைத்து நின்றேன். இனித் திரும்பிப் பார்ப்பதில் பயனில்லை.

திமோரின் நீட்டுவாக்காக, முதுகெலும்பாக மலைத்தொடர் சென்றது. சமவெளிகள் தாய், தந்தை; மலைகள் பாட்டன், பாட்டி என்பது திமோரிகளின் வழக்கு.தாய், தந்தை கைவிட்டாலும் பாட்டன், பாட்டி கைவிடுவதில்லை என்ற நம்பிக்கை எம்முடன் பின்னிப் பிணைந்தது. நானும் வேறு சில செயற்பாட்டாளர்களும் ஃபலின்டில் இயக்கத்தினர் நடமாட்டம் அதிகமுள்ள மலையடிக் கிராமமொன்றை அடைந்தோம். கிராமத் தலைவரிலிருந்து கிராமத்தவர் அனைவரும் விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தனர். இந்த மலைப் பிரதேசங்களில் இந்தோனேசிய இராணுவத்தினர் எளிதில் நுழைந்துவிட முடியாது இராணுவ நடவடிக்கையொன்றால் மட்டுமே வரமுடியும். அங்கிருந்து நான் ஃபலின்டிலுக்கான ஓட்டவீரனாக செயற்படத் தொடங்கினேன். அதை எஸ்டா ஃபெடா என்று கூறுவார்கள். கடிதங்கள், உணவு, இராணுவ நடமாட்டத் தகவல்களை மலைக்காடுகளிலுள்ள இயக்கத்தினருக்கு எடுத்துச் செல்லும் பணி.

விரைவில் படைப்பயிற்சி பெற்று ஃபலின்டில் முழு நேர உறுப்பினராகிவிட்டேன். ஸண்டா க்ரூஸ் படுகொலைகளுக்குப் பிறகு என்னைப் போன்று வேறுபலரும் இணைந்திருந்தார்கள். இந்தோனேசியா பெரிய நாடு. அதை நேரடியாக வெற்றிகொள்ள முடியாதென்பதை நாம் அறிந்திருந்தோம். எமக்கான சூழல் உருவாகும்வரை தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே ஃபலின்டிலின் நோக்கமாக இருந்தது. எதிரி நிலத்தைப் பிடித்திருக்கலாம். ஆனால் அவன் நிம்மதியாக உறங்கக்கூடாது. நாங்கள் மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட குழுக்களாக செயற்பட்டோம். சிறுசிறு தாக்குதல்கள், கிராமங்களில் ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பது என்று பணிகள் இடைவிடாது இருந்துகொண்டிருந்தன.

ஸண்டா க்ரூஸ் படுகொலைகளின் ஒளிப்பதிவு வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாக கிழக்குத் திமோர் மீதான சர்வதேசப் பார்வை மாறத்தொடங்கியது. அது அதிரடியான திருப்பம். வரலாறு சடுதியாக  எமது பக்கம் திரும்பியது. வெளிநாட்டு அழுத்தங்களால் படுகொலைக்குப்பின் எட்டாண்டுகளில் இந்தோனேசியா பொதுவாக்கெடுப்பு நடத்தியதும் கிழக்குத் திமோர் தனி நாடானது நாம் எவருமே நம்பியிருக்காத வகையில் நடைபெற்று முடிந்தன.

நான் நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தேன். கண்கள் ஒளியேறி மினுங்கின. எனது கைகளைப் பற்றி வாழ்த்துகள் என்றான். விடுதலையடைந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டாலும், பலமுறை இவ்வாறான வாழ்த்துகளை கேட்டிருந்தாலும், அவனின் வாழ்த்து எனது மனதுக்கு நெருக்கமாக இருந்தது. அவனின் கைகளைப் பிடித்து நன்றி, நன்றி என்று மீண்டும் மீண்டும் கூறினேன்.

விடுதலைப் போராட்ட வீரர்களில் குறைந்தபட்ச எழுத்தறிவற்றவர்களைத் தவிர ஏனையோர் கிழக்குத் திமோருக்கான இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். எதிர்காலத்துக்கான உத்தரவாதம் கிடைக்கும் என்றாலும் எனது இயல்புக்கு பொருத்தமற்றதென்பதால் நான் இராணுவத்தில் இணையவில்லை .எனது மூதாதையர்களின் கிராமத்துக்கு சென்று விவசாயம் செய்வதற்குத் தீர்மானித்தேன். செல்வதற்கு முன் ஆயர் பெல்லோவை சந்திக்கச் சென்றேன். எமது புதிய நாட்டுக்குக் கற்றவர்கள் அதிகம் தேவை. நாட்டுக்கான பணி என்றும் முடிவடையக் கூடியதல்ல. பல்கலைக் கழகத்தில் ஓராண்டு கற்ற உன்னைப் போன்றவர்களை விட்டுவிடமுடியாது. நீ தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்கிறேன்; படி என்றார் அவர். முப்பது வயதாகி விட்டது இனி எப்படி என்றேன் தயங்கியபடி. உனக்கு தாய்லாந்தின் அஸம்ஷன் பல்கலைக் கழகத்தில் இடமெடுத்துத் தருகின்றேன் என்று கூறி, அதன்படி இடமெடுத்துத் தந்தார். நீ புறச்சவால்கள் பலதை வென்றவன் என்று தெரியும். தாய்லாந்து உன் அகத்துக்கான சோதனை. அதில் வென்று வந்தால் மட்டுமே நீ உண்மையான விடுதலை வீரன். இல்லாவிட்டால் வெறும் சாகச விரும்பி மட்டுமே என்று சிரித்தபடி வழியனுப்பி வைத்தார் பெல்லோ.

அங்கு பட்டப்படிப்பையும் பட்டமேற்படிப்பையும் படித்து முடித்தேன். அங்கிருந்த கிழக்குத் திமோர் தூதரகம் என்னை உள்வாங்கிக்கொண்டது என்று கூறிவிட்டு அமைதியானேன். சற்று நேரத்தின் பின்னர் என்னைப் பற்றி இவ்வளவு கூறிவிட்டேன், உன்னைப் பற்றி அறியலாமா என்று கேட்டு அவனை ஏறிட்டேன். தனது சட்டைப் பையைத் தடவியவன் நாணயக் குற்றியொன்றை எடுத்தான். ஒரு திர்ஹாம். தலையா வாலா என்றான். குழப்பத்துடன் தலை என்றேன். மேலே சுண்ட, நாணயம் எழுந்து இறங்கி சுழன்று சரிந்தது; தலை. அவன் முகத்தில் மெல்லிய முறுவல். அப்பொழுது அவனின் நண்பன் அவனை நோக்கி வேகமாக வந்து ஏதோ கூறினான். அவன் சிரித்தபடி எனக்கான வாகனம் வந்துவிட்டது. செல்கிறேன் என்றவாறு நண்பனுடன் வேகமாக சென்று கட்டிடங்களில் மறைந்தான். எனக்கு எதுவுமே புரியவில்லை.கீழே கிடந்த நாணயத்தை எடுத்துப் கையில் வைத்து திருப்பித் திருப்பிப் பார்த்தவாறு நின்றிருந்தேன் .சட்டைப் பையில் போட்டுக்கொண்டு ஹொட்டேலுக்குத் திரும்பினேன்.

அவன் மேற்சட்டையை மாற்றியபோது அந்த உடலில் கண்ட தழும்புகள் மனதில் மீண்டும் மீண்டும் புரண்டு கொண்டிருந்தன. நிச்சயமாக அவை ஆயுதங்களால் ஏற்பட்டவை என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் அவனுடன் அவ்வளவு ஈர்ப்புடன் உரையாடினேன். அவன் தனது ஊரின் பெயரை ஆங்கிலத்தில் ஒருவிதமாகவும் அவனது மொழியில் ஒருவிதமாகவும் கூறுவார்கள் என்று உச்சரித்துக் காட்டியது நினைவுக்கு வந்தது. பட்டிக்கலோ என்பது ஒன்று. மற்றைய பெயர் எவ்வளவோ நினைவுபடுத்த முயன்றும் வரவில்லை.

அப்பாவின் சட்டை – வேல்முருகன்

வேல்முருகன். தி

“ஏன்டா பந்த ஊட்டு மேல அடிக்கீறிங்க? எழவெடுத்தவனுவளா உங்களுக்கு விளையாட வேற இடமே கிடைக்கலையா?”

நல்ல தூக்கத்தில் வந்த கனவில் அதிர்ந்து எழுந்தான், பகல் தூக்கம் பாதியில் கலைந்ததில் கண் எரிந்து அசதி தெரிந்தது.

ஓட்டு வீட்டு சிமெண்ட் தரை சித்திரை வெயிலுக்கு இதமாக இருந்தது. திரும்ப படுத்து ஐன்னல் வழியாக வானத்தைப் பார்த்தான் ஒரே நீலம் சிறிது கூட மாசி இல்லை. சீராக இளந்தென்றல் வீசிக் கொண்டிருந்தது. எதிர் வேலியில் இருந்த மரமுல்லை மரத்திலிருந்து பழுத்த மஞ்சள் இலைகள் காற்றில் சுழன்று இறங்கின. எங்கிருந்தோ பறந்து வந்த கருவாட்டு வால் குருவி கிளையில் அமர்ந்து வாலை ஆட்டிக் கொண்டு திரும்பி இலையில் ஒட்டியிருந்த பச்சைப் புழுவை கவ்வி வாலை ஆட்டிக் கொண்டு இறக்கை மூடி மூடித் திறந்து பறந்து சென்றது.

பச்சைக்கு சொனைப்பூச்சி வந்து விட்டது. அடிமரம் முழுவதும் படைபோல் இருக்கிறது. இரவானால் விளக்கு ஒளிக்கு வீட்டிற்குள் வந்து தோதாகக் கிடைக்கும் இடங்களில் அமர்ந்திருந்து ஒத்தி வைத்து விடுகிறது வேலியை அகற்றி அழிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, இதை வேறங்கோ பாத்திருக்கோமே  என்று நினைவு திசைமாறிவிட்டது.

சிறிது நேரத்தில் அது ஞாபகத்துக்கும் வந்து விட்டது ராம் மேஸ்திரி வீட்டுத் தோட்டத்தில் உள்ள பூவரசமரத்து அடியில் படைபடையாக பார்த்தது  கிரிக்கெட் விளையான்ட பந்து எடுக்க போய் கிழவரிடம் திட்டு வாங்கி வந்தோமே, ஆகா அந்த நினைப்புதான் கனவு போலிருக்கு, என்று நினைத்துக் கொண்டான்.

சொனைப்பூச்சியை அழிப்போமோ இல்லை கிரிக்கெட் விளையாட போவலாமா என்று யோசிக்க, ஆகா இன்று ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாட போகலாம் நாளை வந்து சொனைப்பூச்சியை பார்ப்போம், என்று முடிவு செய்தான்.

எழுந்து முகம் கழுவி கொடியில் முன்னால் இருந்த புதுச்சட்டையைப் பார்த்துவிட்டு, விளையாட போவும்போது வேண்டாம், என எண்ணி, பிறகு அந்தச் சட்டையே போட்டு கொண்டு கண்ணாடியில் பார்த்துக் கொண்டான் வெளிர் நிறத்தில் அரைக்கை சட்டை. அப்பாவின் நிறத்துக்கு கம்பீரமாக தெரியும் இவனது புது நிறத்துக்கு சற்று கம்மிதான். பரவாயில்லை. தலையை மடித்துச் சீவி கையால் பங்க்கை கோதி கொண்டான். லுங்கிலேயே போவும், வேடிக்கை பார்த்துவிட்டு வந்து விடலாம், கிழவன் வாயில் மாட்டக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.

பசங்களுடன் அன்று விளையாண்டபோது அவனுக்கு வாகாக இடது புறம் வீசி விட்டார்கள் வச்சி இழுத்ததில் பூவரச மரத்துக்கு மேல் பறந்தது தெரிந்தது கிழவருக்கு பயந்து பந்தை எடுக்க யாரும் போகவில்லை அவனைக் கைகாட்டினார்கள். பந்து எடுக்கச் சென்றவனை நாய்தான் வரவேற்றது. சத்தம் கேட்ட கிழவர் வெளியே வந்து, “மூணு கழுதை வயசு இருக்கும் போல இருக்கு உனக்கு, ஏன் வேலைக்கு போனா என்ன, பசங்க கூட சேந்து பந்து விளையாடற?.யார் ஊடு நீ? எவனா இருந்தாலும் கிடையாது கூரை வீடு, பின்னாடி ஓட்டு வீடு, ஓடேல்லாம் உடைச்சு வச்சிட்டிங்க எவன் அவுக்கறது முதலு? நிக்காத, இங்க ஏன் வாயில் வன்டை வன்டையா வருது,” என்று சத்தம் போட்டார்.

திகைத்து திரும்ப வேலியைப் பார்த்து கொண்டு வந்த போதுதான் சொனைப்பூச்சியை பூவரசமரத்து அடியில் பார்த்தான் அந்த மரம் தனியாக நன்றாக தழைத்து அடி பெருத்திருந்தது, மரம் முழுவதும் மஞ்சள் பூவும் காயும் தெரிந்தது சிறு வயதில் பூவரசு இலையில் பீப்பீ ஊதியதும் அதன் காயில் தென்னை ஈர்க்கை நடுவில் செருகி பம்பரம் விட்டதும் நினைப்பு வந்து புன்னகைத்துக் கொண்டான் வேலி முழுவதும் ஆடாதொடையும் நொச்சியும் வைத்து நெருக்கி வேலி கருவையை இடையில் ஊன்றி மூங்கில் முள்ளால் கிட்டி பிடித்து இருந்தது அந்த பூவரசமரத்து ஓரமாக கொஞ்சம் சந்து தெரிந்தது ஆனால் நுழையக்கூடிய அளவில்லை அவன் அங்கு வரவும் கிழவரும் சரியாக அங்கு வந்து விட்டார்

“என்ன நோட்டம் உடற? இதான் உனக்கு மரியாதி. இனி இந்தப் பக்கம் பார்த்தேன், நடக்கறதே வேற,” என்று மறுபடியும் கத்த ஆரம்பித்தார்.

“பாத்தியாண்ண, கிழவன் அப்படிதான். அந்தப் பந்து போச்சு. கூரை ஊட்டுவுள்ள போயிடுச்சுண்ண, வெளியில உழுந்து இருந்தா வேயோட்டி, கிடக்கும்,” என்றான் ஒருவன். பசங்க கிழவரைத் திட்ட ஆரம்பித்ததும், “பந்து வேற வாங்கிக்குங்க”, என்று காசு கொடுத்து விட்டு வந்தான்.

வெயில் தாழ ஆரம்பித்திருந்தது அங்கு போவலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டே சென்றான், பசங்க கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது “வாங்கண்ண,” என்று
அவனையும் சேர்த்துக் கொண்டனர்

“அண்ணனுக்கு லெக் சைடு போடாதிங்க பழசான பின்னாடி போடுவோம், காணாடிச்சுட்டு காசு தருவாரு, புதுசு வாங்கலாம்,” என்றான் ஒருவன்

ஆச்சு டீம் பிரித்தாயிற்று.

பந்து அடிப்பது பூவரசமரத்து வீட்டிற்கு செல்லாத வகையில் அவனை ஃபீல்டிங் நிறுத்தி விட்டனர். நாலு ஓவர் முடியும் வரை பந்து அவனை ஒட்டி வரவில்லை. ஐந்தாவது ஒவரின் முதல் பந்தை அவனை நோக்கி அடிக்க அவன் முயன்றும் பிடிக்க முடியவில்லை துரத்திக் கொண்டு ஒடினான் பூவரச மரத்தை நோக்கி ஒடியது பந்து குனிந்து எடுத்தபோது பூவரச மரத்து அடியில் இருந்து புகை தெரிந்தது அருகில் இருந்த வைக்கப்போர் தீ பிடிக்க ஆரம்பித்திருந்தது.

அவன் பதறி பசங்களை நோக்கி, “எல்லாம் ஒடியாங்க ஒடியாங்க, தீ புடிச்சிடுச்சு, தீ புடிச்சிடுச்சு,” என்று கத்திக் கொண்டே முன்னே ஓடினான். படல் கேட் பூட்டி இருந்தது பசங்க அவன் பின்னே தீ தீ என்று ஓடி வந்தனர். ஆளாளுக்கு கேட்டைப் பிடித்து ஆட்டியதில் சட்டம் உடைந்து விட்டது உள் நுழைந்து பார்த்ததில் வைக்கோல் அடிப் போர் தீ பிடித்து புகைந்து எரிய ஆரம்பித்திருந்தது.

தோட்டத்தில் இருந்த தண்ணீர்க் குடங்கள், குவளைப் பாத்திரத்தில் இருந்த தண்ணீர் எல்லாம் ஊற்றிப் பார்த்து விட்டு அணைக்க முடியாமல் தோட்டத்து கிணற்றில் இறங்கி வளர்ந்த பையன்களை எல்லாம்  அவனுக்கு மேல் நிற்கச் சொன்னான்.

தீ மேலே பரவி புகை கிணற்றுக்குள் வர ஆரம்பித்து விட்டது குடமும் குவளையும் வாளியும் வருவது எல்லாவற்றிலும் நிமிராமல் தண்ணீரை நிறைத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தான்  ஒரே சத்தம். பக்கத்து தெருவில் இருந்தவர்கள், அருகில் இருந்தவர்கள், எல்லாம் வந்து தீயை மேலும் பரவ விடாமல் தடுத்து வைக்கப்போரையே பிரித்து உதறு உதறு என்று ஒரே கூப்பாடு வேலியைப் பிரித்து வைக்கோலை வெளியே கொண்டு போகச் சொல்லுவது அவனுக்கு நன்றாகவே கேட்டது.

கிணற்றில் இருந்த தண்ணீர் குறைந்து சேறும் தண்ணீருமாக வாரிக் கொடுத்து கொண்டு இருந்தான் மேலெல்லாம் சேறு, கல், மண் எல்லாம் விழுந்து எரிச்சல் ஆரம்பித்து விட்டது பயன்படுத்தாத கிணற்றில் இருந்து கிளம்பிய கும்பி வாடை நிற்க முடியவில்லை.

மேலிருந்து, “போதும் சாமிவலா மேல வாங்க”, என்ற கிழவரின் குரல் கேட்டது ஒவ்வொருவராக மேலேறிச் சென்றனர். இவன் கை நீரில் ஊறி வெளுத்திருந்தது பாசியில் கை வழுக்கி கீழே விழப்போனவன் சமாளித்துக் கொண்டு, கிணற்றுப்படியில் கால் ஊன்றி முதுகை உரசி நின்றான். மடித்துக் கட்டியிருந்த கைலி கிழிந்தது.

மேலேறிப் பார்த்தபோது சுமார் 50 பேராவது இருக்கும்- வேலியைபிரித்து வெளியே கொண்டு சென்று வைக்கலை உதறிக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த கூரை வீட்டிலும் தண்ணீர் ஊற்றியிருந்தனர். வேலியெல்லாம் பிய்த்துக் எறிந்து பார்க்க போர்க்களம் போல் இருந்தது. புகை வாடை நாசியிலும் உடம்பு முழுவதும் தெரிந்தது ஒரே நேரத்தில் தலைவலி போலவும் தாகம் போலவும் இருந்தது அவனுக்கு உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டியது புதுக் காற்றில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு தண்ணீர் குடித்தான்

கிழவர் மருமகளைத் திட்டி கொண்டு இருந்தார். “சொனைப்பூச்சிக்கு நெருப்பு வச்ச மாடு இருந்து அணைச்சிட்டுல்ல போயிருக்கனும் ஒரே நாளில் தெருவல நிக்க வுட்டுற, பார்த்தாலே எங்க அடுக்கும் தெய்வமே!” என்று திட்டிக்கொண்டே, “பிள்ளைவலோ, யாரு பெத்த புள்ளையோ, நல்லா இருப்பிங்க இருங்க வரேன்” என்று உள்ளே போய் ஒரு கொட்டுக் கூடை நிறைய பந்து கொடுத்தார். சிவப்பும், நிலமும், மஞ்சளுமாக பந்துகள். பசங்க வாங்கிக் கொள்ளத் தயங்கினர் அவன் சொன்னதும் ஆளுக்கொன்றாக எடுத்து கொண்டனர்

சூரியன் விழுந்து கொண்டிருந்தான், செவ்வானம் தெரிந்தது. மேலே ஒட்டியிருந்த சேறு காய்ந்து,  வரவர என்றிருந்தது முதுகு எரிந்தது அவனுக்கு. தன் சட்டையைக் கழற்றினான். தைக்க முடியாத மிகப் பெரிய கிழிசல் வரி வரியாக, கோடாக, பல வடிவங்களில். கிழிசலை வெறித்து பரிதாபமாகப் பார்த்தான் கிணறும் படியில் அமர்ந்திருந்த கிழவரின் மருமகள் அழுவதும் அப்பாவின் சட்டைக் கிழிசலில் ஒருசேரத் தெரிந்தது.

இயந்திரம் [சிறுகதை]

பாலகுமார் விஜயராமன்

அலைபேசியில் பேசும் போதே குப்பென வியர்த்து விட்டது. உலகின் ஒட்டு மொத்த இயக்கமும் ஒரு நொடி நின்று போனது போலவே தோன்றியது. மனைவி கருவுற்றது உறுதியான நாளில் இருந்து, இந்த நாளுக்காகத்தான் காத்திருந்த்தான். சரியாக இப்போது பார்த்து இப்படியான சூழ்நிலை அமைந்து விட்டதே என்று உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தான். எவ்வளவு சாதாரணமாக இருக்க முயன்றும், பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

நேற்று காலை பரிசோதனைக்குச் செல்லும் போது கூட ஸ்கேன் செய்து பார்த்து விட்டு, குழந்தை தலை இன்னும் திரும்பவில்லை, இன்னும் பத்து நாட்களாவது ஆகும் என்று தான் மருத்துவர் கூறியிருந்தார். நீர்ச்சத்து மட்டும் சற்று குறைவாக இருப்பதால், இன்று காலை வந்து ஒரு ஊசி போட்டுக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள்.

இன்னும் பத்து நாட்களுக்கு அலுவலத்திற்கு விடுப்பு. எங்கும் வெளியே கூட செல்லப் போவதில்லை , மனைவி அருகிலேயே இருக்க வேண்டும் என்று நேற்று மாலை தான் நினைத்துக் கொண்டான். நினைத்த சற்று நேரத்திற்கெல்லாம், அலுவலகத்தின் தலையமையகத்திலிருந்து அதிமுக்கியமான அவசர அழைப்பு. ஹைதராபாத்தில் ஏதோ பெயர் தெரியாத ஊரின் ஆளரவமற்ற நெடுஞ்சாலையில் பழுதாகிக் கிடக்கும் இயந்திரத்தை இரண்டு நாட்களுக்குள் சரி செய்தால் தான் ஆச்சு என்று கட்டளை. மறுத்துக் கெஞ்சிய அத்தனை பதில்களுக்கும், கட்டாயம் செல்லவேண்டும், வேறு வழியில்லை என்ற ஒற்றை கட்டளை மட்டுமே மீண்டும் மீண்டும் வந்தது. சரி, பத்து நாள் இருக்கிறதே என்ற தைரியத்தில், பக்கத்து வீட்டு அக்காவை துணைக்கு இருக்கச் சொல்லி விட்டு வேறு வழியின்றி நேற்று இரவு தான் இரயிலேறினான். இரண்டு நாள் வேலை தான் என்றாலும் கிளம்பும் போதே சிறு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. ஒன்றும் ஆகாது என்று மனதை சமாதானம் செய்து கொண்டு கிளம்பி வந்தால், இன்று சரியாக காலை பத்து மணிக்கு அலைபேசி அழைப்பு வந்து விட்டது.

என்னங்க, நீர்ச்சத்து ரொம்ப கம்மியா இருக்காம், இன்னிக்கே சிசேரியன் செய்யனும்னு டாக்டர் சொல்றாங்க!”

என்னப்பா சொல்ற, நேத்து தானே எல்லாம் நார்மலா இருக்குனு சொன்னாங்க?”

ஆமாங்க, இன்னிக்கு மறுபடியும் ஒரு ஸ்கேன் செஞ்சு பார்த்தாங்க. பேபி முழு வளர்ச்சி வந்திருச்சு. நீர்ச்சத்து கம்மியாயிட்டா மூச்சு முட்ட ஆரம்பிச்சுரும். ரிஸ்க் வேணாம் இன்னிக்கே எடுத்துறலாம்னு சொல்றாங்க

சரி, டாக்டர் என்ன சொல்றாங்களோ, அது மாதிரி செய்யுங்க. நீ ஒன்னும் பதட்டப்படாதே. எல்லாம் நல்லபடியா நடக்கும். அக்காட்ட ஃபோனை குடு

அக்கா, ஒன்னும் டென்ஷன் ஆகாதீங்க. நான் எவ்ளோ சீக்கிரம் கிளம்பி வர முடியுமோ  அவ்ளோ சீக்கிரம் வரப்பாக்குறேன். டாக்டரம்மாட்ட தெளிவா கேளுங்க. கண்டிப்பா சிசேரியன் தான் பண்ணனும், அதுவும் வெயிட் பண்ண முடியாதுஇன்னிக்கே பண்ணனும்னு சொன்னாங்கன்னா, சரின்னு சொல்லீருங்கவேற என்ன செய்ய.. ?”

வழக்கமாய், எதிர்பாராத நேரத்தில் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய வேலை தான் என்றாலும், கண்டிப்பாக பிரசவ நேரத்தில் உடன் இருக்க வேண்டும் என்று உறுதியாகத் தான் இருந்தான். அதற்காகவே இந்த ஒரு மாதத்திற்கு எந்த வெளியூர் வேலையும் இல்லாதவாறு அட்டவணை எல்லாம் அமைத்து வைத்திருந்தான். போதாக்குறைக்கு மேலாளரிடமும் அவசர வேலை எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் வேண்டாத குறையாய் சொல்லி வைத்திருந்தான். ஒருவன் எதைப்பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறோனோ, அதில் சொதப்ப வைப்பது தான் விதியின் விளையாட்டு.

ரெண்டு நாள் வேலை தான், ரொம்ப முக்கியமான பிராஜட். இங்கிருந்து போன மெஷின்ல ஏதோ பிரச்சனை, அதை சரி செய்ய மாட்டாம மொத்த வொர்க்கும் அப்படியே நின்னு போய் கிடக்கு. நீ போய்யிட்டு வந்துரு, என்ன?” என்று விதி முதலாளி குரலில் பேசும் போது ஊழியனின் மறுப்பெல்லாம் எடுபடவா போகிறது? இன்று தன் முதல் குழந்தையின் வரவுக்காக மருத்துவமனையின் வராண்டாக்களில் குறுக்கும் மறுக்குமாக கையை பிசைந்தபடி நடந்து கொண்டிருக்க வேண்டியவன், ஆயிரம் கிலோமீட்டர்கள் தள்ளி கனரக வாகனங்கள் புழுதி இரைத்துச் செல்லும் இந்த மாநில நெடுஞ்சாலையின் பராமரிப்புப் பணிக்காக தாரும், டீசலும் கலந்த வாசனையோடு மூச்சு விட்டுக் கொண்டு நிற்கும் இந்த ராட்சச இயந்திரத்தை உயிர்ப்பிக்கப் போராடிக் கொண்டிருக்கின்றான்.

இரண்டு மணி நேர இடைவெளியில் மனைவியை அலைபேசியில் அழைத்தான்

என்னப்பா, டாக்டர் என்ன சொல்றாங்க?”

எத்தனை மணிக்கு ஆப்பரேஷன் வச்சுக்கலாம்னு கேட்டாங்க

இதென்ன, நம்மட்ட கேக்குறாங்க. அவங்களுக்குத் தெரியாதாமா?”

இல்லங்க நல்ல நேரம் பார்த்து சொல்லச் சொன்னாங்க

எல்லா நேரமும் நல்ல நேரம் தான், குழந்தைக்கு மூச்சு முட்டும்னு சொல்றாங்க, பார்த்து சீக்கிரமா பண்ணச் சொல்லுங்க

ம்ம்ம்நீங்க கூட இருந்தா கொஞ்சம் தைரியமா இருக்கும், நீங்க எங்கேயோ போய் உட்கார்ந்திருக்கீங்க!”

என்ன லூசுத்தனமா பேசுற, நான் என்ன வேணும்னா வந்து விளையாட்டி இருக்கேன்சும்மா டென்ஷனைக் கிளப்பாதே  சரி நான் ஃபோனை வைக்குறேன். சார்ஜ் வேற கம்மியா இருக்கு

ஒருவனின் ஆற்றாமை தான் கடுஞ்சொற்களை உற்பத்தி செய்கிறது. ஆறுதலாய் இரண்டு வார்த்தை பேசுவதற்காக அலைபேசியை எடுத்தவன், கடைசியில் அவள் மனம் புண்படும்படி பேச நேர்ந்து விட்டதே என்று அலைபேசியை வைத்த பின் அவனுக்குத் தோன்றியது. மீண்டும் அவளை அழைக்கத் தோன்றிய எண்ணம் வேலை பளுவில் பின்னுக்குச் சென்றது.

சாதாரண வேலை என்று சொல்லி முதலாளி அனுப்பி வைத்து விட்டார். இங்கு வந்த பார்த்த பிறகு தான் தோண்டத் தோண்ட பூதம் போல கிளம்பி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. கிட்டத்தட்ட முழு இயந்திரத்தையும் கழற்றி மறுசீரமைப்பு செய்து மாட்ட வேண்டிய வேலை. இயந்திரம் பழுதாகி நிற்கும் நெடுஞ்சாலையின் சுற்று வட்டாரத்தில் மருந்துக்குக் கூட ஒரு கடை கண்ணி இல்லை. ஊற்றி வழியும் வியர்வையும், கிரீஸ் பிசுபிசுப்பும், தார் வாசமும், அவ்வப்பொழுது அடிக்கும் புழுதிக் காற்றும், காலையிலிருந்து எதுவும் சாப்பிடாத பசியும் சோர்வும் சேர்ந்து வேலையை இன்னும் கடுமையாக்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் கூட வேலையை சீக்கிரம் முடித்து விட்டுக் கிளம்ப வேண்டும் என்ற ஆர்வம், பணியை துரிதப்படுத்திக் கொண்டே இருந்தது. அந்த இயந்திரத்தோடு உழன்று கொண்டிருந்த பத்து மணி நேரமும், மனது மனப்பாடம் செய்த செய்யுளை ஒப்பிப்பது போல, “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும், மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தது.

இத்தனை நாளும் கணவன் மனைவிக்குள் மகனா, மகளா என்று ஒரு பெரிய போட்டியே நடந்து வந்தது. இவன் எப்போதும் தங்களுக்கு மகள் தான் பிறக்கும் என்று உறுதியாய் நம்பிக் கொண்டிருந்தான். அவளோ,என் வயித்துல இருக்க பிள்ள எனக்குத் தெரியாதா, நிச்சயம் பையன் தான்என்று வாதிடுவாள்

பையன், பையன்னு சொல்லிட்டு இருக்க, கடைசீல பொண்ணு பிறக்குறப்ப ஏமாந்து போயிடாதேஎன்று அவளை வம்பிழுப்பாள்

அதெல்லாம் இல்ல, பையன் தான் பிறப்பான். நீங்க பார்க்கத்தானே போறீங்க!” என்று அவளும் விடாமல் அடம் பிடிப்பாள்

பாரு, ஏழாவது மாச ஸ்கேன்ல ஒன்னும் சொல்லலேல்ல, அப்ப பொண்னு தான், பையன்னா நர்ஸ்மார்க குறிப்பால சொல்லிருப்பாங்க

நீங்க என்ன வேண்ணா சொல்லுங்க என் பையனை எனக்குத் தெரியாதா!”

சரி, எந்தக்குழந்தைன்னா என்ன, நல்லபடியா பிறந்தா சரி தான்என்று இவன் தான் கடைசியில் இறங்கிப் போவான்.

இன்று காலையில் இருந்து அவனையும் அறியாமல் மனம்மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்என்று வேண்டுவது ஏனென்று அவனுக்கும் புரியவில்லை. இரண்டு நாட்கள் பிடிக்கும் வேலையை முழுமூச்சாய் பத்து மணி நேரத்தில் சரி செய்து விட்டான். ஒரு வழியாய் வேலையை முடித்து இயந்திரத்தை முழுத்திறனில் இயக்க விட்டு சோதித்ததில் முழு திருப்தி. மேலாளரை அழைத்து தகவலை சொல்லி விட்டுக் கிளம்பலாம் என்று அலைபேசியில் எடுத்தால் சிக்னல் சுத்தமாக இல்லை. பிறகு சிறிது தூரம் நடந்து அலைபேசியை தூக்கிப் பிடித்துப் பார்க்கும் போது ஒற்றைக் கோடு வந்தது. அவசரமாய் மேலாளரை அழைத்து வேலை முடிந்த விஷயத்தை சொல்லி விட்டு வைக்கும் போது பேட்டரி 1 சதவீதத்தில் இருந்தது. இன்னும் ஒரு அழைப்புத் தாங்கும் என்று நினைத்தவனாய் மனைவிக்கு அழைத்தான். பதிலில்லை. மீண்டும் முயற்சித்தான். அப்பொழுதும் பதிலில்லை.

சரி, உடனிருக்கும் அக்காவை அழைக்கலாமென அவர்கள் எண்ணுக்கு அடித்தான். நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு, எவ்ளோ நேரமாப்பா, உன் நம்பருக்கு ட்ரை பண்றது. அவள இப்போ தான் ஆப்பரேஷ்ன் தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போறாங்க. அதுக்கு முன்னாடி அவ உன்கிட்ட ஒரு வார்த்தை பேசனும்னு முயற்சி செஞ்சுட்டே இருந்தாஉன் ஃபோன் நாட் ரீச்சபிளாவே இருந்தது…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அலைபேசி உயிரை விட்டு விட்டது.

சில தருணங்கள் அப்படித்தான் அமைந்து விடுகிறது. எழுதி வைத்து நிகழ்ச்சி நிரல் படி நடக்குற விஷயமெல்லாம் வாழ்க்கையில் எதிர்பார்க்க முடியுமா என்ன? பெற்று வளர்த்த அம்மா அப்பாவை விட்டு விட்டு எந்த நம்பிக்கையில் தன்னோடு வந்தாளோ அதனை இன்றளவு இம்மி பிசகாது காப்பாற்றி வருவதாகத் தான் நம்புகிறான். இருந்தும் இப்படி ஒரு சூழ்நிலை இன்று அமைந்து விட்டது. தான் உடலளவில் அவள் அருகில் இல்லாவிட்டாலும் கூட தனது நினைவு முழுதும் அவளைச் சுற்றிக் கொண்டிருப்பதை அவளும் இந்நேரம் உணர்ந்து கொண்டு தான் இருப்பாள் என முழுதாக நம்பினான். அத்தகைய புரிதல் இல்லாமல் என்ன தாம்பத்யம்!.  முன்னும் பின்னுமாக நினைவுகள் முந்தியடிக்க ஸ்தம்பித்தவனாய்ச் சிறிது நேரம் அசைவற்று நின்றான்.

பின் சுதாரித்துக் கொண்டவன் மனதில், சரி, அறுவை சிகிச்சை முடிய எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். அதற்குள் நகர எல்லையை அடைந்து விட்டால், அங்கிருந்து தொலைபேசி செய்து தகவலை தெரிந்து கொள்ளலாம், அதற்கு முன் இங்கிருந்து உடனே கிளம்பு, உடனே கிளம்பு, என பரபரக்கத் துவங்கியது. நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்த கனரக வாகனங்களுக்கு சைகை காட்டி நிறுத்த முயற்சித்தான். நான்கைந்து வண்டிகள் நிற்காமல் செல்ல, பின் வந்து நின்ற லாரி ஒன்றில் தொற்றிக் கொண்டான். நகரத்திற்குள் சென்றதும், அங்கிருந்து ஏதேனும் வாடகை ஊர்தியோ, அல்லது லிஃப்டோ கேட்டு அரை மணி நேரத்தில் இரயில் நிலையத்தை அடைந்து விட்டால் எப்படியும் நள்ளிரவு பணிரெண்டு மணி இரயிலை பிடித்து விடலாம். அப்படியானால் நாளை இரவுக்குள் ஊருக்குச் சென்று பொண்டாட்டியையும், பிள்ளையையும் பார்த்து விடலாம். நினைத்துக் கொண்டே வந்தவனுக்கு கண்களில் இருந்து நீர் தாரை தாரையாய் வழிந்து கொண்டிருந்தது. “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும், மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்என்ற பிரார்த்தனை வலுத்துக் கொண்டே வந்தது.

திண்ணை [பாவண்ணனின் புதிய சிறுகதை]

பாவண்ணன்

popsicle-stick-house

ஆறாவது வகுப்பு படிக்கிற பிள்ளைகள் மட்டுமே கலைப்பொருள் செய்யும் போட்டியில் கலந்துகொள்ளலாம் என்பது பள்ளிக்கூடத்தின்  விதிகளில் ஒன்று. ஆஸ்பெஸ்டாஸ் கூரையிட்ட ஒரு மேடைமீது நடக்கும் அந்தப் போட்டியை பிற வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகளும் ஆசிரியர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். முதல் வகுப்பு படிக்கிற காலத்திலிருந்தே முத்துசாமிக்கு அந்தப் போட்டிமீது ஒரு ஈர்ப்பு இருந்தது. உண்மையிலேயே ஆறாவது வகுப்புக்குச் சென்ற பிறகு அவன் மனம் துடிக்காத நாளே இல்லை. பழைய துடிப்பு ஆயிரம் மடங்காகப் பெருகிவிட்டது.

போட்டியில் அவன் அழகான ஒரு வீடு செய்ய விரும்பினான். இருபுறமும் விரிந்த பறவையின் இறக்கைகள்போன்ற  கூரையைத் தாங்கியபடி வட்டவடிவமான சுவர்களைக் கொண்ட வீட்டை பல முறை அவன் கனவுகளில் கலைத்துக்கலைத்துக் கட்டினான். மூன்றாவது வகுப்பில் இருந்த அவனுடைய தம்பி கந்தசாமிஇங்க ஒரு ஜன்னல் வச்சா நல்லா இருக்கும், அங்க ஒரு கதவு வச்சா அருமையா இருக்கும்என்று புதுசுபுதுசாக எதையாவது சொல்லி, அவன் கற்பனையைத் தூண்டியபடியே இருந்தான்.

பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் திண்ணையில் வீடு கட்டி விளையாடுவதுதான் இரண்டு பேருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு. கந்தசாமிக்கு வலதுபக்கத் திண்ணை. முத்துசாமிக்கு இடதுபக்கத் திண்ணை. ஒருநாள் கல்வீடு. இன்னொருநாள் மண்வீடு. மற்றொரு நாள் அட்டைவீடு. தகடு, ஓடு, இலை, கம்பிகள், குச்சிகள் என கைக்கு எது கிடைத்தாலும் அதில் வீடு செய்துவிடுவார்கள்.

அது அவர்களுடைய பெரிய அத்தை வீட்டுத் திண்ணை. மூன்று அத்தைகளுக்கு அந்த வீடு என்றும் பக்கத்திலிருந்த காலிமனை அவர்களுடைய அப்பாவுக்கு என்றும் தாத்தாவின் காலத்துக்குப் பிறகு பாகப்பிரிவினை செய்யப்பட்டபோது, மற்ற அத்தைமார்களுக்கு பங்குப்பணத்தைக் கொடுத்துவிட்டு, பெரிய அத்தை முழு வீட்டையும் தன் பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டார். அத்தைக்கு கதிர்காமத்தில் வேறொரு  வீடு இருந்ததால், அதைப் பூட்டு போட்டு வைத்திருந்தார். ஆள்நடமாட்டம் இல்லாத திண்ணை முத்துசாமிக்கும் கந்தசாமிக்கும் விளையாட்டுக் களமாக மாறியது. காலிமனையில் அவர்கள் அப்பா மாயாண்டி கட்டிய சிறிய கூரை வீட்டில் திண்ணை இல்லை என்பது முக்கியமான காரணம்.

கையில் எது கிடைத்தாலும் அதை வளைத்தும் நிமிர்த்தியும் எப்படியாவது ஒரு வீடாக மாற்றிவிடும் திறமையும் வேகமும் முத்துசாமியிடம் இயற்கையாகவே குடியிருந்தது.  இனிமேல் பயன்படவே பயன்படாது என்று அவன் அம்மா ஆண்டாள் தூக்கி வீசிய ஒரு பழைய காய்கறிக்கூடையை கவிழ்த்துப்போட்டு அழகான ஒரு வீடாக அரைமணி நேரத்தில் மாற்றிவிட்டான் அவன். கத்தரிக்கோலால் கச்சிதமாக வெட்டி அவன் உருவாக்கிய கதவு அருமையாக இருந்தது.  சின்ன துண்டுத்துணியால் அந்தக் கதவுக்கு ஒரு திரையைச் செய்து மாட்டினான். நீல நிறத்தில் அந்தத் திரை காற்றில் அசைவது வசீகரமாக இருந்தது. ஒரு மரப்பாச்சியை தரையில் கவிழ்த்து, அது ஊர்ந்து ஊர்ந்து வீட்டுக்குள் செல்வதுபோல தம்பியிடம் செய்து காட்டிச் சிரித்தான். “பாலைவனத்துல இப்பிடிதான்டா ஊட்டுக்குள்ள போவாங்களாம். டீச்சர் சொன்னாங்க  என்று சிரித்தான். “அண்ணே அண்ணே, நானும் ஒரு தரம் செஞ்சி பாக்கறேண்ணேஎன்று மரப்பாச்சியைக் கேட்டு வாங்கினான் கந்தசாமி. கவிழ்த்துப்போட்டு தள்ளும்போது ஆர்வத்தின் காரணமாக அவனும் தரையில் படுத்துக்கொண்டான். முருங்கை மரத்திலிருந்து கீரை பறித்துக்கொண்டு திரும்பிய ஆண்டாள்என்னடா செய்றிங்க?” என்று அதட்டினாள். “இங்க வந்து பாரும்மா. அண்ணன் பாலைவன வீடு கட்டிருக்கான்என்று எழுந்து குதித்தான் கந்தசாமி. “அது சரி, நாம இருக்கற நெலமயில பாலைவனத்துலயும் சுடுகாட்டுலயும்தான் ஊடு கட்டணும்என்று முனகிக்கொண்டே திரும்பினாள் ஆண்டாள்.

காற்று வேகத்தில் முருங்கை மரத்திலிருந்து ஏதோ விழும் சத்தம் கேட்டு எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். குச்சிகளாலும் செத்தைகளாலும் பின்னப்பட்ட ஒரு கூடு. முத்துசாமியும் கந்தசாமியும் திண்ணையிலிருந்து இறங்கி ஏ என்று கத்திக்கொண்டு அதைநோக்கி ஓடினார்கள். “டேய் தொடாதிங்கடா பசங்களாஎன்றபடி பின்னாலேயே ஓடிய ஆண்டாள் அந்தக் கூட்டில் களிமண் உண்டைகள்போல இரண்டு காக்கைக்குஞ்சுகள் இருப்பதைப் பார்த்ததும் உச்சுக் கொட்டினாள். தீக்குச்சித்துண்டு போன்ற சின்ன அலகுகள். கருமணிக் கண்கள். பீதியில் அவை எழுப்பிய குரல் நெஞ்சைப் பிசைந்தது. வேகமாக வீட்டுக்குள் சென்ற ஆண்டாள் ஒரு முறத்தை எடுத்து வந்து, அதில் ரொம்பவும் கவனமாக கூட்டைத் தூக்கிவைத்தாள். ”எதுக்குமா மொறத்துல எடுக்கற?” என்று அதற்குள் பத்து முறை கேட்டுவிட்டான் கந்தசாமி. “தொணதொணக்காம சித்த நேரம் இருடாஎன அவனை அடக்கிவிட்டு வீட்டுக்கூரைமீது சமமான ஒரு இடம் பார்த்து முறத்தை வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தாள். பிறகு பிள்ளைகளிடம்எட்ட போய் நில்லுங்கடா. அப்பதான் அம்மா காக்கா வந்து அதுங்கள தூக்கிட்டு போவும்என்று அதட்டினாள். அடுத்த கணமே கந்தசாமி, “அம்மா காக்கா வந்து எடுத்துப் போவலைன்னா, குஞ்சுங்கள நாமளே வளக்கலாமாம்மா?” என்று புடவை முந்தானையைப் பிடித்துக்கொண்டு ஆசையோடு கேட்டான். ஆண்டாள் பதில் சொல்லாமல் அவனை திரும்பிப் பார்த்து முறைத்தாள். “அம்மா சொல்லும்மா, நாமளே வளக்கலாமாம்மா?” என்று மறுபடியும் கெஞ்சினான் கந்தசாமி. “சரி, வளக்கலாம். போஎன்று அந்த இடத்திலிருந்து அவர்களை விரட்டினாள் ஆண்டாள்.

ஒருநாள் மாலை வழக்கம்போல வீடு கட்டும் விளையாட்டில் மூழ்கியிருந்தான் முத்துசாமி. உலர்ந்த குச்சிகள் மீது தேங்காய் ஓடுகளை வரிசையாக அடுக்கி கூரையை கட்டியெழுப்பும் சித்திரம் அவன் மனத்தில் இருந்தது. சாக்குப்பையில் சேமித்துவைத்திருந்த ஓடுகளை ஒவ்வொன்றாக எடுத்து எடுத்துக் கொடுத்தான் கந்தசாமி. ஒரு ஜீப் வேகமாக வந்து நின்ற சத்தம் கேட்டு இரண்டு பேரும் திரும்பிப் பார்த்தார்கள். ஆறேழு பேர்கள் வண்டியிலிருந்து இறங்கினார்கள். அந்தக் கூட்டத்தில் இரண்டு போலீஸ்காரர்களும் கருப்பு கோட் அணிந்த ஒரு வக்கீலும் இருந்தார்கள். கூட்டத்தில் இருந்த சந்தனப்பொட்டுக்காரரைப் பார்த்துவிட்டு சுவரோடு சாய்ந்து படுத்திருந்த மாயாண்டி ஓடிவந்து கைகளைக் கட்டிக்கொண்டு எதையோ சொல்லத் தொடங்கினான்.

சந்தனப்பொட்டுக்காரர் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்து ஊதியபடி மாயாண்டியைப் பார்த்து  ஒன் பஞ்சப்பாட்டு எதுவும் எனக்கு வேணாம் மாயாண்டி. எனக்கு என் பணம்தான் வேணும். வேற எதயும் கேக்கறதுக்கு நான் தயாரா இல்ல. என்கிட்ட இன்னிக்கு நீ சொல்றதல்லாம் அன்னிக்கு அந்த சாரங்கபாணிக்கு ஜாமீன் கையெழுத்து போட்டியே, அப்ப யோசிச்சிருக்கணும். இப்ப பொண்டாட்டிய காட்டி என்ன பிரயோஜனம்? புள்ளய காட்டி என்ன பிரயோஜனம்? அவன் செத்ததலேருந்து நாலு மாசமா நானும் நடயா நடக்கறன். ஒரு வழியும் பண்ணமாட்டற நீ. அதான் கோர்ட் ஆர்டரோட வந்துட்டன். இனிமே நீயாச்சி, அவுங்களாச்சிஎன்றார். பிறகு பக்கத்தில் நின்றிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து கண்களை அசைத்தார். அவர்கள் தம்மோடு வந்த ஆட்களைப் பார்க்க, அவர்கள் ஒரே நொடியில் வேகமாக வீட்டுக்குள் புகுந்து சாமான்களையெல்லாம் எடுத்துவந்து வெளியே போட்டார்கள். ஆண்டாள் மார்பில் அடித்துக்கொண்டு ஐயோஐயோ என்று அலறி அழுதாள். முத்துசாமியும் கந்தசாமியும் திண்ணையிலிருந்து இறங்கி ஓடிவந்து ஆண்டாள் பின்னால் நின்றுகொண்டு அழுதார்கள். பத்து நிமிடங்களில் எல்லாப் பொருட்களையும் வாரி வெளியே போட்டுவிட்டு, கதவை இழுத்துப் பூட்டினார்கள். “ஐயா, ஐயாஎன்று மாயாண்டியும் ஆண்டாளும் அழுது அழுது வேண்டியதற்கு எந்தப் பயனும் இல்லை. அவர்கள் நெருங்கிவிடாதபடி சட்டென்று விலகிச் சென்ற சந்தனப்பொட்டுக்காரர் ஜீப் கதவைத் திறந்து ஏறி உள்ளே உட்கார்ந்துகொண்டார். மற்றவர்களும் ஒவ்வொருவராக ஜீப்புக்குள் ஏறினார்கள். ஒரு போலீஸ்காரன் தன் லத்தித்தடியால் திண்ணையில் முத்துசாமி கட்டியிருந்த ஓட்டு வீட்டைக் குத்தி இடித்துத் தள்ளினான். பிறகு சிரித்தபடி வண்டியில் ஏறினான்.

இருள் கவியும் வரைக்கும் எதுவும் பேசாமல் முருங்கை மரத்தடியில் போட்டிருந்த கல்மீது தலைகுனிந்தபடி உட்கார்ந்திருந்தான் மாயாண்டி. கண்ணீர் வழியவழிய ஆண்டாள் அவனை கண்டமேனிக்குத் திட்டினாள். அவள் கண்களில் கோபம் நெருப்பைப்போல எரிந்தது. இருண்ட பிறகு, சிதறிக் கிடந்த சாமான்களையெல்லாம் மெளனமாக எடுத்து வந்து திண்ணையில் அடுக்கி வைத்தான் மாயாண்டி. அழுது அடங்கிய ஆண்டாள் செங்கற்களை அடுக்கி அடுப்பு மூட்டி கஞ்சி காய்ச்சினாள். ஆளுக்கு இரண்டு தம்ளர் குடித்துவிட்டு மற்றொரு திண்ணையில் படுத்துவிட்டார்கள்.

திண்ணைகளே இருப்பிடமாக மாறிய பிறகு விளையாடுவதற்கு இடமில்லாமல் முத்துசாமியும் கந்தசாமியும் தவியாய்த் தவித்தார்கள். முருங்கைமரத்தின் பக்கம் நிழலே இருப்பதில்லை. சாயங்காமல் வரையில் அங்கே வெயிலே நிறைந்திருந்தது. தூங்குமூஞ்சி மரத்தடியில் தாராளமாக நிழல் இருந்தது. ஆனால் அந்த இடம் மொத்தத்தையும் ஆக்கிரமித்து பட்டாளத்துக்காரர் லாரிலாரியாக செங்கற்களையும் ஜல்லியையும் மண்ணையும் கொண்டு வந்து கொட்டியிருந்தார். கோயில் வாசலில் ஆடுவது  ஆண்டாளுக்கு சுத்தமாக பிடிக்காத காரியம். தப்பித்தவறி அவள் பார்வையில் பட்டால் முதுகுத்தோல் உரிந்துவிடும்படி அடித்துவிடுவாள். முகத்தில் சோகம் படர வாசலில் உட்கார்ந்துகொண்டு இருவரும் தெருவை வேடிக்கை பார்த்தார்கள்.

பழக்கடையில் குலைகுலையாய் தொங்கும் வாழைத்தார்களை வேடிக்கை பார்த்தபடி பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிய நாளொன்றில்அண்ணே அண்ணே, நம்ம திண்ணைக்கு முன்னால் ஒரு ஆட்டோ நிக்குதுஎன்று சுட்டிக் காட்டினான் கந்தசாமி. ஒருகணம் உற்றுப் பார்த்த முத்துசாமி, “நம்ம ஊடு இல்லடா அது. பக்கத்து ஊடுடாஎன்று சொல்லிவிட்டு வாழைத்தார்கள்மீது பார்வையை மறுபடியும் திருப்பினான். சில கணங்களுக்குப் பிறகுஇல்லண்ணே, நம்ம ஊடுதாண்ணே. அம்மா கூட பக்கத்துல நிக்கறாங்க. நல்லா பாருஎன்றான் கந்தசாமி. சலிப்போடு மீண்டும் அந்தத் திசையில் உற்றுப் பார்த்தவன் ஒரு கணம் திகைப்பில் உறைந்துவிட்டு மறுகணமேவாடா, வேகமா போயி பாக்கலாம்என்று ஓடினான். கந்தசாமியும் தோளில் தொங்கிய பள்ளிக்கூடப் பையை இறுக்கமாகப் பிடித்தபடி இறைக்க இறைக்க ஓடினான்.

ஆட்டோவுக்கு அருகில் பெரிய அத்தை நின்றிருந்தார். ஒரு கோயில் தூண்போன்ற உறுதியான உருவம். அவரிடம் மாயாண்டி என்னமோ பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஆண்டாள் தம் கண்களிலிருந்து கண்ணீர் சரிந்து விழுந்துவிடாதபடி உதடுகளை இறுக்கமாக கடித்துக்கொண்டு பக்கவாட்டில் இருந்த முருங்கைமரத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். இரண்டு குருவிகள் நிலைகொள்ளாமல் கிளைகிளையாகத் தாவியபடி இருந்தன. ஆட்டோவுக்கு அருகில் அவர்கள் சென்று நின்றதை பெரிய அத்தை கவனிக்கவே இல்லை. அருவருப்பான பொருளுக்கு அருகில் நிற்பதுபோல முகத்தைச் சுளித்தபடி மாயாண்டியை வாய்க்கு வந்தபடி திட்டினார் அவர்.

கூறு கெட்டதனமா நீ செஞ்ச காரியத்துக்கு நான் என்னடா செய்ய முடியும், சொல்லு. என்னைக்காவது பத்து ரூபா சேத்து வச்சி ஒரு பொருள நீ வாங்கியிருந்தாதான அந்தப் பொருளுடைய அருமை ஒனக்கு தெரியும். அஞ்சு கழுத வயசாவுது. இன்னும் ஒனக்கு புத்தி வரலைன்னா யாரு என்ன செய்யமுடியும்?” தன் நெற்றியில் அடித்துக்கொண்டார் அத்தை.

நீ ஒரு வார்த்த அந்த சந்தனப்பொட்டுக்காருகிட்ட பேசனா கேட்டாலும் கேப்பாருக்கா…” என்று இழுத்தான் மாயாண்டி.

கேட்டு கிழிச்சிடுவாரு போ. எல்லாம் ஒன் நெனப்புதான் பொழப்ப கெடுக்குது. கோர்ட்டுக்கு வந்து நீ கட்டவேண்டிய பணத்த என்ன கட்டுன்னு சொல்வாரு. கட்ட சொல்றியா?”

மாயாண்டி ஒரு பதிலும் சொல்லாமல் அத்தையின் முகத்தையே பார்த்தபடி நின்றான்.

செத்துப்போன நாய்க்கு மண்டில நாப்பது பேரு கூட்டாளி இருக்கும்போது, அதுல ஒன்ன தேடி வந்து கையெழுத்து போடுன்னு ஏன்டா சொல்றான் ஒருத்தன்? கொஞ்சமாச்சிம் யோசிச்சியாடா நீ? புத்தி இல்லாத மடயனா நீ? ஒன்கிட்ட மட்டும்தான் சொத்துன்னு ஒன்னு இருக்குது. நாள பின்ன அவன் குடுக்கலைன்னாலும் ஒன்கிட்ட புடுங்கிடலாம்ன்னு இழுத்து உட்டுட்டான். அப்ப பெரிய தர்மப்பிரபாட்டம் கையெழுத்து போட்டுட்டு வந்து இப்ப நடுத்தெருவுல நிக்கற.”

அவ்ளோ விவரம்லாம் தெரியாதுக்கா எனக்குவிழிகளிலிருந்து உருண்ட கண்ணீரை மாயாண்டி தன் கையை உயர்த்தித் துடைத்துக்கொண்டான்.

என்னமோ அவசரத்துக்கு எல்லா சாமானயும் திண்ணையில கொண்டாந்து போட்டுகினதுலாம் சரிடா மாயாண்டி. சீக்கிரமா வேற எங்கனாச்சிம் வாடகைக்கு கீடகைக்கு எடம் பார்த்துட்டு கெளம்பி போவற வழிய பாரு. நாலஞ்சி பார்ட்டிங்க இப்பதான் நல்ல வெலையா சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. சரியா படியாமதான் தள்ளித்தள்ளி போவுது. ஒருதரம் எடத்த பார்க்கணும்ன்னு சொன்னாங்கன்னா, பார்ட்டிய கூப்டாந்து காட்டணுமில்ல? திண்ணைய இந்த கோலத்துல வச்சிருந்தா வர ஆளுங்க ரொம்ப கேவலம்ன்னு என் மூஞ்சியிலயே துப்பிட்டுதான் போவாங்க. எவ்ளோ சீக்கிரம் முடியுதோ, அவ்ளோ சீக்கிரமா வேற எடம் பாத்துகினு போயிடு. அப்பதான் இதுக்கு ஒரு வெல நல்லபடியா படியும்.”

நான் எங்கக்கா போவன்? எனக்கு ஒருத்தரயும் தெரியாதுக்கா…..”

பொறக்கும்போது எல்லாரும் எல்லாத்தயும் தெரிஞ்சிகிட்டாடா பொறக்கறாங்க.  முட்டி மோதி தெரிஞ்சிக்க வேண்டிதுதான்…..”

ஐயோ அக்கா

டேய், அக்காவும் இல்ல, சொக்காவும் இல்ல. ஒழுங்கா சொல்றத கேளு. போவும்போது முழுசா சுத்தம் பண்ணிட்டு போ. குப்ப கூளத்தயெல்லாம் போட்டது போட்டபடி போயிடாத.”

அத்தை விரலை ஆட்டிப் பேசிவிட்டு ஆட்டோவில் ஏறிக்கொண்டு போய்விட்டார். அவர் போன திசையைப் பார்த்தபடி தலையில் கைவைத்துக்கொண்டு வாசலிலேயே உட்கார்ந்துவிட்டான் மாயாண்டி. சத்தம் காட்டாமல் புத்தகப் பைகளை திண்ணையில் வைத்துவிட்டு முத்துசாமியும் கந்தசாமியும் புதருக்கு அருகில் ஓடும் அணில்களை வேடிக்கை பார்க்கச் சென்றுவிட்டார்கள்.

அத்தை சொன்னவை முழுக்க நாடகம் என்று  கஞ்சி குடிக்கும் சமயத்தில் சொன்னாள் ஆண்டாள். குடும்பத்தை திண்ணையிலிருந்து வெளியேற்றுவதற்காக அவள் போடும் திட்டம் என்றாள். கதிர்காமத்தில் மூன்று வீடுகளும் இரண்டு மனைகளும் வைத்திருப்பவருக்கு  இந்த வீட்டை விற்கும் அளவுக்கு பணமுடை எதுவும் இல்லை. திக்கில்லாதவர்களாக நாம் தெருவில் இறங்க இறங்க, அதைப் பார்க்கும்போது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றாள். அதற்குப் பிறகு ஆண்டாள் பேசவும் இல்லை, ஒரு வாய் கஞ்சியும் குடிக்கவில்லை. வெகுநேரம் அழுதபடியே இருந்தாள்.

அழாத ஆண்டாளு, சும்மா இரு ஆண்டாளு, எல்லாத்தயும் அந்த ஆண்டவன் பார்த்துக்குவான். உடுஎன்று மாயாண்டி தயங்கித்தயங்கி சொன்னான். இறுதியில் பெருமூச்சு வாங்கியபடி, “எல்லாம் என்னாலதான். எல்லாரயும் நல்லவங்கன்னு நெனச்சதுக்காக, எல்லாமே என் தலயில வெடிஞ்சிட்டுது. இந்த மண்ணுல நான் எப்பிடி தலய தூக்கி இனிமேல நடக்கப் போறனோ தெரியலைஎன்று தடுமாறித் தடுமாறிச் சொல்லிவிட்டு கையைக் கழுவினான். ஆண்டாள் அப்போதும் அழுதபடியே இருந்தாள். கொடியில் இருந்த துண்டை உருவி வாயைத் துடைத்த பிறகுநாளைக்கி சாயங்காலமா கொளத்தங்கர பக்கமா, ரைஸ்மில் ஸ்டோர் ரூம் பக்கமா எங்கனா பொறம்போக்குல எடம் கெடக்குதான்னு பார்த்துட்டு வரேன் ஆண்டாளு. இருந்தா ஒரு குடிச போட்டுக்கலாம்என்று சொல்லிவிட்டு எழுந்தான்.

மறுநாள் பள்ளியில் நீண்ட காலமாக எதிர்பார்த்துவந்த கலைப்போட்டிகள் பற்றிய அறிவிப்பு பிரார்த்தனை அரங்கத்தில் படிக்கப்பட்டது. அதைக் கேட்டு மகிழ்ச்சியில் துள்ளினான் முத்துசாமி. அந்தப் போட்டியில் வென்று மேடையில் ஏறி பரிசு பெறும் கனவு அக்கணத்திலேயே  அவன் மனத்தில் உதித்துவிட்டது. ’முதல் பரிசு பெறும் மாணவன் மா.முத்துசாமி, ஆறாம் வகுப்பு அ பிரிவுஎன்னும் அறிவிப்புக்குரல் அவன் அடிநெஞ்சில் சன்னமாக ஒலிக்கிறது. அவன் மனத்தில் உருவாக்கிய வீட்டை அவனுடைய வகுப்பில் படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் கண்விரிய ஆச்சரியத்துடன் பார்த்து கைதட்டுகிறார்கள். ஒவ்வொருவரும் அவனருகில் நின்று கையை வாங்கிக் குலுக்குகிறார்கள். பானுமதி டீச்சர் அவன் தலையை வருடி முடியை கலைத்துவிட்டு கன்னத்தில் தொட்டுக் கிள்ளி சிரிக்கிறார். சமூக அறிவியல் ராமலிங்கம் சார்ஜப்பான்காரன்லாம் ஒங்கிட்ட பிச்ச வாங்கணும் முத்துசாமிஎன்று சிரிக்கிறார். எல்லாரும் வாய் பிளந்தபடி பார்த்திருக்க சிறப்பு விருந்தினர் அவனை எதிர்காலக்கலைஞன் என்று சொல்லி பாராட்டுகிறார். கனவுகளில் மிதந்தபடி இருந்ததால் அவன் பசியையும் தாக்த்தையும் உணராதவனாக இருந்தான்.

மாயாண்டி மூட்டை தூக்கும் வேலையை பகலோடு முடித்துக்கொண்டு ஊருக்கு வெளியே புறம்போக்குப்பகுதிகளில் குடிசை கட்டுவதற்கு எங்காவது இடம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டு போனான். எந்த இடத்திலும் நாலடி இடம் கூட இல்லை. மாந்தோப்பைத் தாண்டி ஒரு பெரிய குப்பை மேடு இருந்தது. நெருக்கமுடியாத அளவுக்கு கெட்ட வாடை வீசியது. அந்த மேட்டைச் சுற்றி முப்பது நாற்பது வீடுகள் இருந்தன. இரண்டடி இடம் கூட இல்லை. ஏமாற்றத்தோடு திரும்பிய சமயத்தில்எங்க வந்தீங்கண்ணே, ஏன் கெளம்பிட்டிங்ண்ணே?” என்ற குரல் கேட்டு திகைத்துத் திரும்பியபோது ஒரு குடிசையின் வாசலில் குமாரசாமி கையசைப்பதைப் பார்த்தான். “நல்லா இருக்கியாடா?” என்று கேட்டபடி அவன் பக்கமாகச் சென்றான். பிறகு தயங்கித்தயங்கி தன் தேவையை முன்வைத்தான்.

என்னங்ண்ணே இது? ஒங்களுக்கு போயி இப்பிடி நடக்கலாமாண்ணே. நல்லதுக்கு காலமே இல்லாம போச்சிண்ணேஎன்றபடி நெற்றியில் அடித்துக்கொண்டான் குமாரசாமி. பிறகு ஒரு பெருமூச்சோடுஇங்க எல்லாமே பொறம்போக்குதாண்ணே. அந்த கல்யாண மண்டபத்துக்காரன் இது மேல ரொம்ப நாளாவே கண்ணு வச்சிருக்காண்ணே. காலிபண்ண சொல்லி அவன் ஆளுங்க அடிக்கடி வந்து மெரட்டிகினே இருக்கறாங்க. போதாகொறைக்கி புதுசா வந்த தாசில்தாரயும் வட்டத்துக்குள்ள வளச்சிபுட்டானுங்க. நாலு நாளைக்கி முன்னாலகூட ஆளுங்க வந்து ஒழுங்குமரியாதயா எல்லாத்தயும் அள்ளிகினு ஓடி போயிடுங்கடா, புல்டவுசர் வந்து அள்ளிச்சின்னு வை, ஒரு மண்ணும் கெடைக்காது. அப்பறம் ஒங்க இஷ்டம்னு மெரட்டிட்டு போனானுங்க. என்னா ஆவுமோ தெரியலைண்ணேஎன்று கைகளை விரித்தான். “சரிடா, வேற எங்கனாச்சிம் எடம் இருக்கற தகவல் தெரிஞ்சா சொல்லுடாஎன்றபடி மாயாண்டி திரும்பினான். அப்போதுஒங்களுக்கு நானு ஒரு முப்பது ரூபா தரணும்ண்ணே. ஊர உட்டு போவறதுக்குள தந்துடறண்ணேஎன்று இழுத்தான் குமாரசாமி. “நான் ஒன்னும் அதுக்கு வரலடா, போஎன்று தலையை அசைத்தபடி நடந்தான் மாயாண்டி.

அடுத்த நாள் வில்லியனூர் பக்கம் சென்று அலைந்துவிட்டுத் திரும்பினான். அதற்கும் மறுநாள் மூலகுளத்தைச் சுற்றிப் பார்த்தான். ஒரே ஒரு அடி மண் கூட எங்கும் இல்லை. எல்லா இடங்களிலும் அடைசலாக சின்னச்சின்ன குடிசைகள் ஒன்றையொன்று ஒட்டியபடி இருந்தன. பெண்கள் பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் சுமந்து நடந்து சென்றார்கள். நடைபாதைக்கு நடுவில் குச்சிகளை நிற்கவைத்துவிட்டு பத்து பன்னிரண்டு பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடினார்கள். ஒரு குடிசைக்குப் பக்கத்தில் இரண்டு எருமைகள் மண்தொட்டியில் தவிடு கரைத்த தண்ணீரை அருந்தியபடி நின்றிருந்தன. அவை கழுத்தை அசைக்கும்போதெல்லாம் அவற்றின் கழுத்து மணிகள் அசைந்து ஓசையிட்டன. அவன் நின்றுநின்று பார்ப்பதைப் பார்த்த ஒரு மூதாட்டிஎன்ன தம்பி? யாரு ஓணும்? யார தேடற?” என்று கேட்டாள். அவன் தலையை அசைத்தபடிகுடிச போட எங்கன எடம் கெடைக்குமான்னு பாக்கறன்ம்மாஎன்றபடி விவரம் சொன்னான். ”ஐய, இங்க எடமும் இல்ல மடமும் இல்ல. திரும்பி பாக்காம போயிகினே இருஎன்றாள் அவள்.

ஒருநாள் இரவில் கேழ்வரகு மாவில் செய்த அடையை ஆண்டாள் எல்லோருக்கும் சாப்பிடுவதற்கு வைத்தாள். எரியும் மண்ணெண்ணெய் விளக்கை நடுவில் வைத்துவிட்டு, அதைச் சுற்றி எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். இடம் தேடும் வேலையில் இறங்கிய பிறகு மாயாண்டியின் பேச்சு முற்றிலும் குறைந்துவிட்டது. திரும்பத்திரும்ப தோல்விக்கதைகளைச் சொல்லும்போது தன்னைப்பற்றிய ஒரு கசப்புணர்வு தன்னையறியாமல் ஊறுவதை உணர்ந்த பிறகு அவன் பேச்சைக் குறைத்துக்கொண்டான். அவன் தட்டு காலியானதைப் பார்த்துவிட்டு ஆண்டாள், “இன்னும் ஒரு துண்டு சாப்பிடறியா?” என்று எடுத்து வைக்கப் போனாள். “வேணாம் வேணாம்என்றபடி அவன் தட்டை பின்னால் இழுத்துக்கொண்டான். அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல்என்ன சாப்பாடு சாப்புடற நீ? இப்பிடி அரயும் கொறயுமா சாப்ட்டா சத்து எங்கேருந்து வரும் ஒனக்கு? ஒரு மூட்ட தூக்கற மனுசனுக்கு ஒடம்புல வலு வேணாமா?” என்று சத்தம் போட்டாள் ஆண்டாள். ”மனசுல வலு இருந்தா ஒடம்புல தானா வலு வரும், போஎன்று சிரித்தான் அவன். அந்த நேரத்தில்அண்ணே அண்ணேஎன்று வாசலில் யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. தட்டு வைத்திருந்த கையோடு எழுந்து சாக்குப்படுதாவை விலக்கிவிட்டு வெளியே பார்த்தான் மாயாண்டி. குமாரசாமியும் அவன் மனைவியும் நான்கு பிள்ளைகளும் இருட்டில் நின்றிருந்தார்கள். திகைப்புடன் திண்ணையை விட்டு இறங்கிய மாயாண்டி வேகமாக வாசலுக்குப் போனான். ஆண்டாளும் பிள்ளைகளும் எழுந்து வந்து பின்னால் நின்றார்கள்.

என்னடா குமாரசாமி, குடும்பத்தோட எங்க கெளம்பிட்ட? ஏதாச்சும் கோயில் பயணமா?” என்று கேட்டான் மாயாண்டி.

கோயிலும் இல்ல, கொளமும் இல்லண்ணே. சாய்ங்காலம் அந்த கல்யாணமண்டபத்து ஆளுங்க புல்டவுசர கொண்டாந்து நிறுத்திட்டாங்ண்ணே. ஒழுங்கு மரியாதயா காலி பண்ணுங்க. இல்லன்னா அவுங்கவுங்க அக்கா தங்கச்சிங்கள எனக்கு கூட்டி குடுங்கண்ணு ரொம்ப அசிங்கமா பேசிட்டாண்ணே. தடுத்து பேச ஒரு நாதியில்லண்ணே. அனாதயா போயிட்டம்ண்ணே. இனிமெ இந்த தெரு எதுக்கு? ஊரு எதுக்கு? அதான் கெளம்பிட்டம்ண்ணே

பக்கத்தில் வந்து அவன் கைகளை வாங்கி தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு அழுத்திக்கொடுத்தான் மாயாண்டி.

இப்ப போனா பெங்களூரு ரயில புடிச்சிரலாம்ண்ணே. அங்க எங்கனா கல்லுசட்டி மண்ணுசட்டி தூக்கி பொழச்சிக்குவம்ண்ணேஎன்றான்.

கனக்கும் மனத்துடன் அவன் முகத்தையே மெளனமுடன் பார்த்தான் மாயாண்டி. “ஒனக்கு ஒரு முப்பது ரூபா ரொம்ப நாளா பாக்கியாவே இருக்குதுண்ணே. இனிமே பாத்துக்குவமோ இல்லயோ, குடுத்துட்டு போவலாம்ன்னு வந்தண்ணேஎன்றபடி ரூபாய்த்தாளை எடுத்து அவனிடம் நீட்டினான் குமாரசாமி. அதைக் கேட்டு ஒரு அடி பின்வாங்கிய மாயாண்டி, “என் பணத்த குடுன்னு ஒங்கிட்ட நானு கேட்டனா? அதெல்லாம் ஒன்னும் வேணாம் போ. போயி புள்ளைங்களுக்கு எதாச்சிம் வாங்கி குடுஎன்றான். பிறகு எதையோ நினைத்துக்கொண்டவனாகசரி, ஒரு கம்பு அட சாப்பிடறியாடா?” என்று கேட்டுவிட்டு ஆண்டாளைப் பார்த்தான். “வேணாம்ன்ணே, சாப்ட்டுட்டுதான் கெளம்பணம்என்றான் குமாரசாமி. அவன் மனைவியிம் பிள்ளைகளும் அருகில் சிலைபோல குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தார்கள். தெருவிளக்கின் வெளிச்சம் ஒரு கோடாக குமாரசாமியின் முகத்தில் விழுந்தது. அவன் கண்களில் ஈரம் மின்னியது. பார்வையாலேயே விடைபெற்றுக்கொண்டு அவன் நடக்க, அவன் பின்னால் எல்லோரும் போனார்கள்.

புறம்போக்கில் இடம் தேடுவதை நிறுத்திவிட்டு, வாடகைக்கு வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தான் மாயாண்டி. ஆயிரம் ரூபாய் என்பதை ஒரு எல்லையாக வைத்துக்கொண்டு அறிவிப்புப்பலகை தொங்கும் வீடுகளை அணுகி பேசிவிட்டுத் திரும்பினான்.  பல இடங்களில் வாடகை அவனுடைய எல்லைக்கு மேல் இருந்தது. அவன் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ஆயிரம் காரணம் சொல்லி தட்டிக் கழித்து திருப்பியனுப்பினார்கள். பழக்கமுள்ள வீட்டுத் தரகர் ஒருவர் மூலமாக எடுத்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

வருத்தத்துடன் வீட்டுக்கு திரும்பும் சமயத்தில் மாயாண்டிக்கு சின்ன அக்கா ஞாபகமும் நடு அக்கா ஞாபகமும் வந்தது. நடு அக்கா தேங்காதிட்டிலும் சின்ன அக்கா நோணாங்குப்பத்திலும் குடியிருந்தார்கள். அவர்கள் வழியாக ஏதாவது வாடகை வீடு அமையக்கூடும் என்கிற எண்ணத்தில் திரும்பி டவுன்பஸ் பிடித்து அவர்களைப் பார்க்கச் சென்றான். பஸ்ஸில் அலைந்த அலைச்சல்தான் மிச்சம். நினைத்தது எதுவும் நடக்கவில்லை.

இருந்த சொத்த பறிகுடுத்துட்டு இப்பிடி அரிச்சந்திர ராஜாவாட்டம் வந்து நிக்கறியே, வெக்கமில்லையா?. போ, எங்கனா சுடுகாட்டுக்கு போயி எடத்த பாருஎன்றாள் நடு அக்கா. “இந்த ஏரியா முழுக்க சொந்த ஊட்டுல இருக்கறவங்கதான்டா. வாடகைக்கிலாம் இங்க எதுவும் கெடைக்காது. எங்கனா கெடைக்கற எடமா பாத்து போடாஎன்று அனுப்பிவைத்தாள் சின்ன அக்கா.

ஆண்டாள் அன்று இரவு  எல்லோருக்கும் நொய்க்கஞ்சி வைத்திருந்தாள். பொட்டுக்கடலையும் காய்ந்த மிளகாயையும் போட்டு அரைத்த சட்னியைத் தொட்டுக்கொண்டு எல்லோரும் சாப்பிட்டார்கள். வாடகைக்கு வீடு தேடிச் சென்ற இடங்களில் நடந்ததையெல்லாம் உணர்ச்சியற்ற குரலில் ஒவ்வொன்றாகச் சொன்னான் மாயாண்டி. இறுதியாக பெருமூச்சு வாங்கியபடிநா என்ன இவுங்ககிட்ட பிச்சயா கேட்டன்? வேற எடம் பாரு வேற எடம் பாருன்னு சொல்றதுக்கு. வாடகைக்கு வீடு வேணும்ன்னு கேக்கறதுகூட ஒரு குத்தமா ஆண்டாளு?” என்று சொல்லிவிட்டு தலையைக் குனிந்துகொண்டான். சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் எதையோ சொல்ல வாய் திறந்துவிட்டு, பிறகு மனசுக்குள்ளேயே விழுங்கிக்கொண்டான்.

போட்டிக்கான நாள் நெருங்கநெருங்க முத்துசாமிக்கு மனம் பறந்தது. அவனுடைய வீடு கட்டும் திறமையை அவன் வகுப்பில் படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் தெரிந்துகொண்டார்கள். ஒரு கைப்பை நிறைய குச்சிகளை கொண்டுவந்து கொடுத்து தனக்கொரு வீட்டைக் கட்டிக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாள் சீதாலட்சுமி. கரும்புக்கணுவில் ஒட்டியிருக்கும் விதைமுத்துபோன்ற அவளுடைய தெத்துப்பல் அழகாக இருந்தது. கால் மணி நேரத்தில் அவன் கட்டியெழுப்பிய வீட்டை ஒரு கோட்டையைப்போல கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள் அவள். வகுப்புப்பிள்ளைகள் எல்லோரிடமும் அந்த வீட்டைக் காட்டி மகிழ்ச்சியடைந்தாள். கலைப்பொருள் போட்டியில் அவனுக்குத்தான் முதல் பரிசு காத்திருக்கிறது என்று எல்லோரும் வெளிப்படையாகவே பேசிக்கொண்டார்கள். அதையெல்லாம் கேட்கக்கேட்க முத்துசாமிக்கு ஆகாயத்தில் நீந்திப் போவதுபோல இருந்தது.

பள்ளிக்கூடம் விட்டு திரும்பும்போது கந்தசாமி அவனிடம்நீ ஜெயிச்சா ஒனக்கு நெறயா பணம் குடுப்பாங்களா?” என்று கேட்டான்.

பணம்லாம் குடுக்கமாட்டாங்கடா. ஏதாச்சிம் பொருள்தான் குடுப்பாங்க. தட்டு, தம்ளர், கிண்ணம், சொம்பு. சோப்புடப்பா அந்த மாதிரி ஒன்னு

ரெண்டு தட்டு குடுத்தா எனக்கு ஒன்னு தருவியா?” என்று ஏக்கத்துடன் கேட்டான் கந்தசாமி.

ஒனக்கு எதுக்குடா தட்டு?”

என் தட்டுல ஓட்ட உழுந்துட்டுது. அம்மா ஊத்தற கஞ்சியில தண்ணியே நிக்கமாட்டுது. கீழயே தரதரன்னு ஒழுவி ஓடிடுது.”

முத்துசாமி அவன் முதுகில் ஆதரவோடு தட்டிக்கொடுத்தான். “அதுக்குலாமாடா கவலப்படுவ? ரெண்டு குடுத்தாலும் நீயே வச்சிக்க. ஒன்னு குடுத்தாலும் நீயே வச்சிக்க. போதுமா?” என்றான். அதைக் கேட்டு புன்னகையுடன் வேகமாக தலையை ஆட்டிக்கொண்டு நடந்தான் கந்தசாமி. வீட்டை நெருங்கும்போது பெரிய அத்தை வாசலில் நின்றபடி அம்மாவிடம் பேசுவதும் அம்மா குனிந்த தலை நிமிராமல் கேட்டுக்கொள்வதும் தெரிந்தது. வீடு நெருங்குவதற்குள் அத்தையை அழைத்துக்கொண்டு ஆட்டோ போய்விட்டது.

இரவில் ஆண்டாள் கிண்டிய சூடான கம்பங்களியை முத்துசாமியும் கந்தசாமியும் விரும்பிச் சாப்பிட்டார்கள். தொட்டுக்கொள்வதற்காக சுட்ட நெத்திலிக் கருவாடு அமுதமாக இருந்தது. களியின் ருசியைப்பற்றி பேசிக்கொண்டே இரண்டு பேரும் திண்ணையில் சாக்குகளை விரித்து ஓரமாக படுத்துக்கொண்டார்கள்.

வானத்தில் மேகங்களைக் கடந்து செல்லும் நிலவு தெரிந்தது. அதைப் பார்த்த வேகத்தில் அடுக்கடுக்காக நிலவுக்கதைகளை உருவாக்கி கந்தசாமிக்குச் சொன்னான் முத்துசாமி. இன்னும் இன்னும் என்று கதைகளுக்காக அவனைத் தூண்டிக்கொண்டே இருந்தான் கந்தசாமி. நிலாவில் காற்று இல்லை. ஒரே ஒரு அடி எடுத்துவைக்க அரைமணி நேரமாகும். நிலாவில் நடப்பது பறப்பதுபோல இருக்கும் என்று படுத்தவாக்கில் நெளிந்துநெளிந்து காட்டினான். கந்தசாமி கைதட்டி விழுந்துவிழுந்து சிரித்தான். எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே இரண்டு பேரும் தூங்க ஆரம்பித்துவிட்டார்கள்.

விளக்கை சிறிதாக அடக்கிவிட்டு ஆண்டாளும் மாயாண்டியும் வெகுநேரம் அடங்கிய குரலில் பேசிக்கொண்டே இருந்தார்கள். மனம் பொங்கி ஆண்டாள் விழிகளில் கண்ணீர் தளும்பும்போது மாயாண்டி ஆறுதல் சொன்னான். சோர்வின் பாரம் தாளாமல் விரக்தியில் மாயாண்டி மெளனமாகிவிடும் தருணத்தில் ஆண்டாள் அவனை தோளோடு அணைத்துக்கொண்டாள்.

நள்ளிரவைக் கடந்த நேரம். நிலா உச்சிவானத்தைத் தொட்டுவிட்டு மறுபுறத்தில் சரியத் தொடங்கியிருந்தது.  முத்துசாமி கந்தசாமி, ஏந்திருங்கப்பாஎன்ற அழைப்பைக் கேட்டு மெதுவாகப் புரண்டு கண்விழித்தான் முத்துசாமி.  அவன் மனத்தில் ஓடிக்கொண்டிருந்த கனவிலிருந்து அவன் முற்றிலும் வெளிவராதவனாகவே இருந்தான். கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு மறுபடியும் உருள ஆரம்பித்தான் கந்தசாமி.

டேய் பசங்களா, ஏந்துருங்கடா

முத்துசாமி சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். போட்டி, வீடு, பரிசு என்று துண்டுதுண்டாக வார்த்தைகள் தன்னிச்சையாக அவன் வாயிலிருந்து வெளிப்பட்டதை, மறுகணமே அவன் திகைத்து நிறுத்திக்கொண்டான். அப்போதுதான் அம்மாவும் அப்பாவும் எங்கோ கிளம்புவதற்குத் தயாராகி நிற்பதுபோல நிற்பதைப் பார்த்துக் குழம்பினான். படுக்கப் போகிற கணம் வரை நிகழ்ந்தவற்றையெல்லாம் அவன் மனம் வேகவேகமாக ஒருகணம் தொகுத்துக்கொண்டது.

முத்துசாமி, தம்பிய சீக்கிரம் எழுப்புப்பா, கெளம்பணும்டா

எங்கம்மா?” என்று தயக்கத்துடன் ஆண்டாளின் முகத்தைப் பார்த்தான் முத்துசாமி.

பெங்களூருக்குடா. குமாரசாமி சித்தப்பா போனாங்க இல்ல. அதுமாரி நாமளும் அங்க போயிடலாம்

திண்ணையிலிருந்து இரண்டு மூட்டைகளை மட்டும் இறக்கி வாசல்பக்கம் வைத்துவிட்டுத் திரும்பினான் மாயாண்டி. ஆண்டாளும் மாயாண்டியும் அடங்கிய குரலில் சிறிது நேரம் பேசிக்கொண்டார்கள். “எல்லாத்தயும் அங்க போயி பார்த்துக்கலாம்என்று திருப்பித்திருப்பிச் சொன்னான் மாயாண்டி.

கண்களைக் கசக்கியபடி எழுந்த கந்தசாமிஎன்னடா?” என்று கேட்ட தருணத்தில் தன் அம்மாவும் அப்பாவும் எதிரில் நிற்கும் தோற்றம் பார்வையில் பட்ட பிறகு சட்டென்று அமைதியானான்.

திடீரென நினைவுக்கு வந்தவனாக ஆண்டாளின் பக்கம் திரும்பிய முத்துசாமி, “அம்மா, நாளைக்கி ஸ்கூல்ல கலைப்பொருள் போட்டிம்மாஎன்று சொல்லிவிட்டு திகைத்து நின்றான். ஒருகணம் அவன் உடல் தூக்கிவாரிப் போட்ட மாதிரி அதிர்ந்து அடங்கியது. பதில் எதுவும் பேசாமல் ஆண்டாள் அவனையே ஒருகணம் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, பிறகு இருட்டான திண்ணையின் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். படுத்திருந்த போர்வைகளை மடித்துச் சுருட்டி பைக்குள் வைப்பதில் மும்முரமாக இருந்தான் மாயாண்டி. அக்கணத்தில் முத்துசாமியின் தூக்கம் முழுக்க கலைந்துவிட்டது.

எல்லோரும் திண்ணையிலிருந்து இறங்கி வாசலுக்கு வந்தார்கள். ஆண்டாள் மெதுவான குரலில்சின்ன மூட்டய நீ தூக்கு முத்துசாமி. பெரிய மூட்டய அப்பா தூக்கிக்குவாருஎன்றபடி கைப்பையை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தாள். “நான் எதுவும் தூக்க வேணாமாம்மா?” என்று கையை விரித்துக்கொண்டு கேட்டபடி ஆண்டாள் பின்னால் ஓடினான் கந்தசாமி. ”வேணாம்டா. நீ அண்ணன் கைய கெட்டியா புடிச்சிகினு வா. போதும்என்றாள் ஆண்டாள். அவன் துள்ளிக்கொண்டு சென்று முத்துசாமியின் கைவிரலைப் பிடித்துக்கொண்டான். அடுத்த கணமே கண்ணில் தெரிந்த மின்மினிப்பூச்சியைப் பற்றியும் விளக்குக்கம்பத்துக்கு அருகில் உறங்கும் நாய்க்குட்டியைப் பற்றியும் பேசத் தொடங்கிவிட்டான். ஏதோ ஒரு தருணத்தில் வானத்தைப் பார்த்துவிட்டு, ”நிலா கூட நம்மகூடவே வருதுஎன்று சொல்லிவிட்டு சிரித்தான்.