மன்ஹாட்டனில் உள்ள ஸ்ட்ராண்ட் என்ற புத்தகக் கடையில் டெபோரா ஐஸன்பெர்க்கும் ஜார்ஜ் ஸாண்டர்ஸும் வாசிப்பு மற்றும் உரையாடல் நிகழ்வொன்றில் பங்கேற்றனர். இது குறித்து ஸ்டோரி ப்ரைஸ் என்ற தளத்தில் சென்ற ஆண்டு வெளிவந்த கட்டுரை இது. சமகால அமெரிக்க எழுத்தாளர்களில் மிக முக்கியமான இரு படைப்பாளிகள் பங்கேற்ற நிகழ்வை விவரிப்பதால் இக்கட்டுரை பதாகையில் பதிப்பிக்கப்படுகிறது. இதை எழுதியவர் பாட்ரிக் தாமஸ் ஹென்றி.
சிறுகதைகளில் தனி கவனம் செலுத்தும் முதன்மை எழுத்தாளர்களின் வரிசையில் ஐஸன்பெர்க் மற்றும் சாண்டர்ஸ் இருவரையும் அவர்களது சாதனைப் படைப்புகள் இருத்துகின்றன. Guggenheim Fellowship, MacArthur Fellowship, The Collected Stories of Deborah Eisenberg என்ற தொகுப்புக்காக, 2011 PEN/Faulkner Award மற்றும் பல பரிசுகளையும் விருதுகளையும் ஐஸன்பெர்க் பெற்றிருக்கிறார். 1994 முதல் 2011 வரை அவர் University of Virginiaவின் MFA program வகுப்புகள் பயிற்றுவித்திருக்கிறார். தற்போது Columbia Universityயில் கல்வி கற்பிக்கிறார். MacArthur Fellowship பெற்ற சாண்டர்ஸின் முதல் புத்தகமான Civil War Land in Bad Decline PEN/Hemingway Awardக்கான இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. In Persuasion Nation என்ற அவரது தொகுப்பு The Story Prizeக்கான இறுதிச் சுற்றில் பரிசீலிக்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு முதல் Syracuse Universityல் இளங்கலை எழுத்துப் பயிற்சிப் பட்டக்கல்வி பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்கிறார் சாண்டர்ஸ்.
Tenth of December தொகுப்பில் இருந்த “Home,” என்ற சிறுகதையை முதலில் வாசித்தார் சாண்டர்ஸ். இந்தக் கதையில் போர் அனுபவங்கள் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஓய்வு பெற்ற போர் வீரன் ஒருவன் தன் ஊருக்குத் திரும்பி வரும்போது தன் குடும்பம் அதன் சுற்றுவட்டார மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள சீர்குலைவைப் பார்க்கிறான். கதைசொல்லியால் தன் ஊரிலும் தன் தனிப்பட்ட வாழ்விலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்குப் பொருள் காண முடிவதில்லை. இறுதியில் அவன், வழக்கமான சாண்டர்ஸ் பாணியில், ““I started feeling like a chump, like I was being held down by a bunch of guys so another guy could come over and put his New Age fist up my ass while explaining that having his fist up my ass was far from his first choice and was actually making him feel conflicted,” என்று ஒப்புக் கொள்கிறான்.
அதன்பின் Twilight of the Superheroes என்ற தொகுப்பில் உள்ள “Revenge of the Dinosaurs,” என்ற கதையின் ஒரு பகுதியை வாசித்தார் ஐஸன்பெர்க். இந்தக் கதையின் நாயகி, லூலூ, அவளது பாட்டி நானா முடக்குவாதத்தால் பீடிக்கப்பட்டபின் ஈஸ்ட் கோஸ்ட் திரும்புகிறார். லூலூவுக்கும் அவளது சகோதரன் பில்லுக்கும் ஏற்படும் பிழைபுரிதல்கள் நானாவை யார் கவனித்துக் கொள்வது என்பது குறித்த உரத்த மோதல்களுக்குக் கொண்டு செல்கின்றன. இவர்கள் இருவருக்குமிடையே நிகழும் கசப்பான வாக்குவாதங்களின் பின்னணியில், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட நானா ஊமையாக, தொலைகாட்சிப் பெட்டியின் நிலையற்ற துகள் உருவங்களைத் தொடர்ந்து பார்த்தபடி அமர்ந்திருக்கிறாள். நம் வாழ்வை நிர்வகிக்கும் குழப்பமான உரையாடல்களுக்கான வீரியமிக்க படிமமாக இது அமைகிறது.
இந்த வாசிப்புகளுக்கான எதிர்வினையாகப் பேசும்போது லூகாஸ் விட்மன் இந்த இரு எழுத்தாளர்களும் அன்றாட உரையாடலின் வெளிப்பாடற்ற, மொழிதலுக்கு அப்பாற்பட்ட இயல்புகளை மிக அழகிய வகையில் தங்கள் படைப்புகளில் கைப்பற்றியிருக்கின்றனர் என்று கூறினார். இவ்வாறு அவர் கூறியதும் எழுத்து மற்றும் சிறுகதையைக் கற்பித்தல் குறித்த ஒரு விவாதம் துவங்கியது.
ஐஸன்பெர்க் மற்றும் சாண்டர்ஸ் இருவரும் தங்கள் படைப்புகள் எவ்வாறு வாழ்வனுபவங்களை ஒட்டி அமைந்துள்ளவை என்பதை விவரித்தனர். மேலும், இவை எம்எஃப்ஏ மாணவர்களுக்கு தங்கள் சூழலை நேர்மையாக விவரிக்கும் பயிற்சி அளிக்கின்றன என்றனர். “Revenge of the Dinosaurs” கதையில் வரும் போருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களையும் ஹோம் கதையில் ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஊர் திரும்பும் போர் வீரன் இடம்பெறுவதையும் சுட்டி விட்மன், இருவரும் சமகால அரசியல் நிகழ்வுகளையொட்டிய உரையாடலில் தங்கள் கதைகளின் இடம் என்னவென்று சொல்ல முடியுமா என்று கேட்டார். அண்மையில் தவிர்க்கப்பட்ட பொருளாதார வீழ்ச்சியையும் அமெரிக்க மத்திய வர்க்கத்தின் நொறுங்கும் கனவுகளையும் குறித்து விட்மன் எழுப்பிய கேள்விக்கும் ஐஸன்பெர்க் பதிலளித்தார். “மத்திய வர்க்கம் என்று ஒன்று எப்போதும் இருக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இப்போது, அது கடுமையாக பாதிக்கப்பட்டு, நாம் எல்லா வகைகளிலும் புவியளவில் ஒரு பாதாள வீழ்ச்சியை எதிர்நோக்கி நிற்பது – இதை விட அச்சுறுத்துவதாகவும் கண்கொட்டாமல் கவனிக்க வைப்பதாகவும் வேறு எதுவும் இருக்க முடியாது,” என்றார் ஐஸன்பெர்க்.
எப்போதும் மாறிக் கொண்டேயிருக்கும் மெய்ம்மையின் ஏககால உள்ளார்ந்த அழகையும் பீதியையும் வெளிப்படுத்துவதுதான் எழுத்தாளனின் பொறுப்பு என்று சுட்டுவதாக ஐஸன்பெர்க்கின் பதில் இருந்தது. என்றாலும், கோட்பாடுகளுக்கு முதன்மை முக்கியத்துவம் அளிப்பதற்கு எதிராக அவரும் சாண்டர்ஸும் எச்சரித்தனர். அது கதையில் பாத்திரங்களுக்கும் நேர்மையான உணர்வுகளுக்கும் இடமில்லாமல் செய்து விடும், உணர்ச்சிகளே வாசகனை சிறுகதையின் புனையப்பட்ட உலகினுள் வரவேற்கின்றன என்று வாதத்தை முன்வைத்தனர் இருவரும். இந்தக் காரணத்தால்தான் ஐஸன்பெர்க் எழுதிய Twilight of the Superheroes கதைகளை தான் தன் எம்எஃப்ஏ மாணவர்களுக்குக் கற்பிப்பதாகச் சொன்னார் சாண்டர்ஸ், இந்தத் தொகுப்பின் “அறிவார்ந்த புறப்பரப்பும் முழுமுதல் வசீகரமும்” முக்கியமானவை என்றார் அவர்.
ஐஸன்பெர்க் கதைகளின் “வசீகரத் தாக்குதல்” வெற்றி பெறக் காரணம் அவரது கூறுமொழி பாத்திரங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் உள்ள நாடகீய முரண்களை விவாதிப்பதுதான் என்றார் சாண்டர்ஸ். இதனால் பாத்திரங்களின் நடத்தை தீவிரமான சிந்தனைகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன என்றார் அவர். ஒரு எழுத்தாளர் இதுபோன்ற கதையை எழுதும்போது இயல்பாகத் தோற்றம் பெறும் குறியீடுகள், ட்ரோப்புகள், உவமான படிமங்கள் கதையின் கருத்தைக் கூறும்போது அது, “இன்னமும் நேர்மையாக, விசுவாசம் கொண்டதாக” இருக்கிறது என்றார் சாண்டர்ஸ். இந்த விமரிசன மதிப்பீட்டைத் திருப்பிப் பார்த்தால் அது சாண்டர்ஸின் கதைகளையே துல்லியமாக மதிப்பிட உதவும். உதாரணத்துக்கு ஹோம் போன்ற ஒரு கதை, குழப்பமான கோட்பாடுகளைக் கொண்டு கதைசொல்லியின் வீட்டில் நிலவும் சூழலைப் புரிந்து கொள்ள முடியாது என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது.
கருத்துருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த ஒரு புனைவையும் எழுத முயற்சிக்கக்கூடாது என்பதற்கான இன்னொரு காரணத்தை ஐஸன்பெர்க் கூறினார் – “விதிகளைக் கட்டாயமாக்கும் ஆபத்து”க்கு அது இடம் கொடுக்கிறது.
“வெள்ளித்தட்டில் தொழில் ரகசியங்கள்” எம்ஃப்ஏ மாணவர்களுக்குக் கிடைக்கின்றன என்ற பிழைபுரிதலை சாண்டர்ஸ் வேடிக்கையாக மறுத்தார். இருவரும் நிகழ்த்திய உரையாடலுக்குப்பின், விட்மன், எம்ஃப்ஏ வகுப்புகளின் நோக்கம் விதிமுறைகளை பிரகடனப்படுத்துவதற்கு மாறாய், தங்களையும் பிறரையும் வாசித்துக் கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதாக இருக்கிறது என்றார். இதை ஐஸன்பெர்க், சாண்டர்ஸ் இருவரும் ஏற்றுக் கொண்டனர்.
இருவருமே, சிறுகதையின் குறுகிய வடிவம் கூறுமொழியின் தெளிவையும் வேகத்தையும் பெரிதுபடுத்திக் காட்டும் கருவியாக இருக்கிறது என்றனர். இங்கு இவர்கள் இருவரும் மிக முக்கியமான, ஆனால் எளிதில் நாம் மறந்துவிடக்கூடிய ஒரு செய்தியைச் சொன்னார்கள் என்று நினைக்கிறேன். பழைய பழக்கங்களுக்கு மாறாக, எழுத்தாளனின் தொழில்நேர்த்தி உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் துல்லியமாக, நேர்மையாக, கண்முன் நிகழ்த்திக் காட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்க வேண்டும்.
ஐஸன்பெர்க் தன் எழுத்துப் பழக்கங்களைச் சொல்லும்போது இதைச் சொன்னார்: செப்டம்பர் 11க்கு அடுத்த நாட்களில் அவர் நோட்டுப் புத்தகங்களில் குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டார். “9/11 ஒரு பெருந்தடை. எல்லாம் உடனே மாறப் போகிறது என்று நினைத்தேன்… துல்லியமாக நினைவு வைத்துக் கொள்ள முடியாது என்று நினைத்தேன்” என்றார் அவர். அதனால் அவர் தன் எழுத்து முறைகளை இன்னமும் இறுக்கமாக மாற்றிக் கொண்டு, நாட்குறிப்புகள் எழுதினார். மானுடத்துக்கும் மேலான முக்கியத்துவத்தை கருத்துருவாக்கங்களுக்கு அளிக்கும் வகையில் தன் எழுத்தில் பேருரைகள் ஆற்றுவதை முனைந்து தவிர்த்தார் அவர்.
அந்த குளிர்மிகுந்த மழை இரவில் ஐசன்பெர்க், சாண்டர்ஸ் இருவரும் ஒரு வெம்மையான உணர்வை வழங்கினர்- நாம் ஏன் எழுதுகிறோம், யாருக்காக எழுதுகிறோம் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளும் களங்கமற்ற படிகத்தன்மை கொண்ட பார்வை அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாய்க்கட்டும் என்றனர். அப்போது அன்றைய ஸ்ட்ராண்ட் புத்தகக் கடை வாசிப்பில் இருந்தது போலவே Eisenbergன் Collected Stories, Saundersன் Tenth of December, இரு தொகுப்புகளையும் இந்த எதிர்பார்ப்பே நிறைக்கிறது.