வால்டர் பெஞ்சமின்

Colin Dickey on Walter Benjamin: A Critical Life : –

ஒரு மாதிரியான டெக்னோ-பியூச்சரிஸ்ட் சியர்லீடிங்குக்கும் (“எதிர்காலம் எத்தனை பிரகாசமாக இருக்கிறது!”) பிற்போக்குத்தன அபோகாலிப்டிய அங்கலாய்ப்புகளுக்கும் இடையே (“எதிர்காலம் நாசமாகிவிட்டது”) தடுமாறிக் கொண்டிருப்பதுதான் நம் வழக்கம் என்றால், பெஞ்சமின் வேறொரு வரலாற்றுப் பார்வையை நமக்கு அளித்தார் – நாம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட ஒரு பேரழிவின் சிதிலங்களிடையே நடந்து சென்று கொண்டிருக்கிறோம், எச்சரிக்கையான துக்க அனுஷ்டித்தல் போன்ற ஒன்று மட்டுமே இங்கு நமக்கு அருளப்பட்ட மிகச்சிறந்த வரம். “துக்கங்கள் அனைத்திலும் மௌனத்துக்கான நாட்டம் உள்ளது. நம் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்வதில் தயக்கம் இருக்கிறது என்பதைவிட, நம்மால் நம் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்ள இயலவில்லை என்பதைவிட, இந்த மௌன நாட்டமே பெரிது,” என்று அவர் 1925ல் எழுதினார். “சோகம் உலகுக்கு வஞ்சம் இழைத்து அறிவு பெறுகிறது என்றால்,” அது தன், “உறுதியான சுய-நாட்டத்தில், உயிரற்ற வஸ்துக்களைத் தன் சிந்தையைக் கொண்டு அணைத்துக் கொள்கிறது, அவற்றை மீட்டெடுக்க”, என்றார்.

பல ஆண்டுகளாக, வால்டர் பெஞ்சமினின் மிகச் சில கட்டுரைத் தொகுப்புகளே அமெரிக்காவில் கிட்டின; ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக ஆங்கில மொழியாக்கத்தைக் கொண்டு அவரது எழுத்துக்கு மேலும் செறிவூட்ட தீவிரமான முயற்சி நடைபெற்று வருகிறது. இது Howard Eiland மற்றும் Michael W. Jennings 1996ஆம் ஆண்டு வெளியிட்ட நான்கு நூல்களாகத் தொகுக்கப்பட்ட அவரது ‘தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகள்’, மற்றும் அதன் துணைநூலான Arcades Project முதலியவற்றைக் கொண்டு துவங்கியது. இப்போது இவர்கள் Walter Benjamin: A Critical Life என்ற ஏறத்தாழ எழுநூறு பக்க சரிதையைக் கொண்டு இதற்கு இன்னும் கனம் சேர்த்துள்ளனர். தீவிரமாகவும் மலைப்பாகவும் உள்ள இந்த நூல் பெஞ்சமினின் சிந்தனைப் பணியின் வெவ்வேறு திரிகளை ஒன்றுதிரட்ட முயற்சி செய்கிறது. அவர் எழுதி பதிப்பிக்கப்படாத கட்டுரைகளையும் அவர் பாதியில் கைவிட்ட கட்டுரைகளையும் புத்தக முயற்சிகளையும் இணைத்து இந்த மனிதர் மற்றும் அவரது சிந்தனையின் முழுமையான சரிதையை உருவாக்கியுள்ளனர்.

Walter Benjamin: A Critical Life, பெஞ்சமினின் பெரும்படைப்புகள் ஒவ்வொன்றுக்கும் மிக முக்கியமான சூழமைவு (கான்டக்ஸ்ட்) அளிக்கிறது என்பது மட்டுமல்ல, அவரது சிந்தனை வளர்ச்சியின் கூறுகளாக வெவ்வேறு படைப்புகளை முன்வைத்து, ஒவ்வொரு படைப்பின் மையக் கருத்தையும் தெளிவாக, அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விவரிக்கிறது. இதை வாசிக்க யாரும் முனைவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. இருபதாம் நூற்றாண்டின் அறிவுப்புல வரலாற்றில் மேம்போக்கான ஆர்வம் இருக்கும் எவருக்குமே இதில் உள்ள விஷயங்கள் யோசிக்கத் தூண்டுவதாக இருக்கும். முக்கியமான கட்டுரைகளுக்கும் புத்தகங்களுக்கும் சொல்லத்தக்க சூழமைவு அளித்து தேவைப்படும் விளக்கங்களைப் பதிவு செய்து ஐலாண்டும் ஜென்னிங்சும் பெஞ்சமினின் எழுத்தை நமக்கு இன்னமும் நெருக்கமானதாகச் செய்திருக்கின்றனர். அதைவிட மேலும் பெரிய கருத்துருவாக்கங்களுக்கும் கவலைகளுக்கும் இடையே இவற்றுக்கான இடத்தையும் இவர்கள் நிறுவியுள்ளனர்.

இவ்வளவு நீண்ட புத்தகமாக இருந்தாலும் ஐலாண்ட்டும் ஜென்னிங்சும் எழுதியுள்ள இந்த​​​ச் சரிதையை வேகமாக வாசிக்க முடிகிறது, துவக்கப்பகுதிகள்தான் சற்றே மெல்லச் செல்கின்றன. புத்தகம் 1940ஐ நெருங்க நெருங்க, அவரது முதிர்ந்த மாஸ்டர்பீஸ்கள் தோற்றம் பெறுவதைப் பார்க்கும் த்ரில், பாசிசம் பரவுவதன் மூச்சுத்திணறும் திகில், பெஞ்சமின் மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார் என்ற பரபரப்பு நம்மில் உணர்வுளாய் வெளிப்படுகின்றன. (1937ஆம் ஆண்டின் கோடைக் காலத்திலேயே பெஞ்சமின், “நாம் எந்த ஜன்னலில் பார்த்தாலும் இருட்டைத்தான் பார்க்க முடிகிறது,” என்று குறிப்பிட்டிருக்கிறார்).

இவையனைத்தும் 48 வயதான பெஞ்சமின், மனமுடைந்து உடல் நலம் குன்றிய நிலையில், பிரான்சுக்குத் தப்பிச் செல்லும் கடைசி கட்ட நம்பிக்கையில் பிரனீஸ் மலைகளைக் கடந்து நடந்து செல்லும் மறப்பதற்கில்லாத பிம்பத்தில் கலக்கின்றன. அவர் தன் கையில் ஒரு கறுப்புநிற கைப்பெட்டியை வைத்திருந்தார். அதில் ‘ஒரு புதிய எழுத்துப் பிரதி’ இருக்கிறது என்றார் அவர், ‘என்னைவிட முக்கியமானது இது,” என்று அவர் அதைப் பற்றி கூறினார். போர்ட் பூ வந்ததும் பெஞ்சமினும் அவரது சகாக்களும் இன்ன காரணமென்று சொல்வதற்கில்லாத வகையில் எக்ஸிட் விசாக்கள் இல்லை என்று சொல்லி கைது செய்யப்பட்டனர் (இதற்கான காரணம் தெளிவாக்கப்படவே இல்லை, எல்லை மறுநாள் மீண்டும் திறக்கப்பட்டு அகதிகள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர்). அங்கே, அந்தச் சந்தி நகரில், செப்டம்பர் 26, 1940 அன்று, பெஞ்சமின் மார்பின் ஓவர்டோஸ் எடுத்துக்கொண்டு தன்னை மாய்த்துக் கொண்டார்.

இந்த துயர கதியின் நிழல் புத்தகமெங்கும் இருப்பினும், ஐலாண்ட்டும் ஜென்னிங்சும் பெஞ்சமினின் வாழ்வு குறித்த, ஏராளமான வியப்பளிக்கும், சில சமயம் மகிழ்ச்சியளிக்கும் நுண் தகவல்களை இந்நூலில் அளித்திருக்கின்றனர். அவரைப் பற்றி நமக்கிருக்கும் சோகமான கோட்டுருவத்துக்கு இவை உயிரூட்டி, சிக்கலான, அகப்போராட்டங்கள் கொண்ட ஒரு தனிமனிதரை நம்முன் இருத்துகிறது.

மிகக் கடும் சயாட்டிகாவின் காரணமாக அவர் முதலாம் உலக யுத்தத்தை எப்படி தவிர்த்தார் என்று அறிகிறோம் (பின்னர் இது குறித்து அவரது மனைவி டோரா, ஜெர்ஷோம் ஷோலமுக்குச் சொன்ன விஷயம் இது – பெஞ்சமினுக்குத் தெரியாமல் ஹிப்னடிச முறையில் தான் சயாட்டிகா நோய்க்குறிகளை அவரது ஆழ்மனதில் புகுத்தியதாகச் சொன்னார் அவர், அப்போதுதான் யுத்தத்துக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் அலுவலர்கள்முன் அவர் தன் முதுகுவலியைச் சரியானபடி வெளிப்படுத்துவார் என்று நம்பினாராம் டோரா). த்ரூபாவின் Jules et Jim திரைப்பட பிரதான பாத்திரங்களின் அடிப்படையாக இருந்த கணவன் மனைவியர், பிரான்ஸ் மற்றும் ஹெலன் ஹெஸ்ஸலுடன் அவருக்கு 1920கள் முழுக்க நெருங்கிய நட்பு இருந்தது என்று இதில் அறிகிறோம். அவர் பால் க்ளீயின் Angelus Novus ஓவியத்தை ஆயிரம் மார்க்குகள், ஏறத்தாழ பதினான்கு டாலர்கள், என்ற சொற்பத் தொகைக்கு வாங்கினார் என்பதைத் தெரிந்து கொள்கிறோம் . இந்தச் சிறிய ஓவியத்துக்குதான் பின்னர், “வரலாறு எனும் கருத்துருவாக்கத்தைப் பற்றி” என்ற தன் இறுதி கட்டுரையில் பெஞ்சமின் புகழ் சேர்ப்பார்.

மேலும் வாசிக்க – Los Angeles Review of Books

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.