– எஸ். சுரேஷ் –

கூண்டிற்குள் நிலைகொள்ளாமல் அங்கும் இங்கும்
நடந்து கொண்டிருந்தது பிரும்மாண்டமான மனித குரங்கு
திடீரென்று நின்று கூண்டின் கம்பிகளை கையால் பிடித்து
தலையை கம்பிகள் நடுவில் விட்டு வெளியில் பார்த்தது
மறுபடியும் நடை, மறுபடியும் நின்று பார்ப்பது என்று இருந்தது
வாழைப்பழம் விற்பவன் வண்டியை தள்ளிக்கொண்டு வருவதைக்
கண்ட மனித குரங்கு இரு முறை கூண்டினுள் குதித்தது
பின்னர் கம்பிகளை வேகமாக ஆட்டி, தலையை நடுவில் நீட்டி
வாழைப்பழம் விற்பவனை பார்த்து கத்தியது
“ஒரு டசன் வாழப்பழம் அம்பது ரூபாக்கு வித்தா
நாங்கெல்லாம் எப்படிடா உயிர் வாழறது?”
திடுக்கிட்டவன் வண்டியை வேகமாக தள்ளிக்கொண்டுச் சென்றுவிட்டான்
இடைவிடாமல் கூண்டிற்குள் நடந்துக் கொண்டிருக்கிறது
மனித குரங்கு