காற்றில் இலை பரப்பி
குலை தள்ளி
வேரில் செழித்திருந்த
வாழை மரமொன்றை
வெட்டித் தள்ளினேன்
இலை கிழித்து
குலை சிதைத்து
தோல் உரித்து
வெண்தண்டு கடித்துக் குதறி
வேர் வெட்டி
வெற்றியுடன் மீண்டபோது
நானறியாது
அனைத்தையும் பார்த்திருந்த
புதுக்கன்று
மெல்ல தலைதூக்கி
உலகுக்கு வந்தது,
ஆம், அப்படிதான் ஆகும்
..