– ஸ்ரீதர் நாராயணன் –
அவள் எப்போதும் உறங்கியதேயில்லை.
அப்பாவிற்கான கனவுகளைத்தான்
உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்.
எப்போதும்.
பெரிய இறக்கைகளோடு
பறக்கும் வீடு ஒன்று
அப்பாவின் முதுகு போல்
அவளை சுமந்து செல்கிறது எங்கும்
அவள் கனவில் வரும்
புத்தகங்கள் எல்லாம்
அப்பாவின் குரலில் கதைசொல்கின்றன.
குதித்தோடும் தோட்டத்து முயல்கள்
அப்பாவின் பற்களைக் காட்டி
சிரித்து செல்கின்றன.
அப்பாவின் விழிபுலத்தை நிறைத்தபடி
அலங்கார மேஜையின் கண்ணாடி
அவளைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது
அம்மா கூட
அப்பாவின் கரங்களோடுதான்
உணவு ஊட்டிவிடுகிறாள்.
கிளைகள்தோறும்
ஊஞ்சல்களை வீசி ஆடியபடி
கூடவே நடந்து வரும்
மரங்களின் காற்று
அப்பாவின் மூச்சு போல
அவளை ஆசுவாசமடைய வைக்கிறது.
அவள் கனவுகள் எதுவும்
கலைந்து போகாமலிருக்கும்
ஒரு கனவை
அவனும் எழுதி வைக்கிறான்.
