அந்தியின் செவ்வொளி

ஜீவானந்தம்

| | bird |

அந்தியின் செவ்வொளி
ஆற்றங்கரையோரம் நெற்வயல்கள்
கொக்குகள் பறந்தெழுந்து அமர்ந்தபடியிருக்க
மாடோட்டிச் செல்கிறாள் தாயொருத்தி
நாணற் செடியின் புதர்களிலிருந்து இருளிசை ஒலிக்கவும்
நெய்விளக்கேந்திய பெண் சித்திரம் ஒன்று
உதடுகளில் சிரிப்புடன் அசைந்து செல்கிறது.
மணற்வெளி புதைந்த சிறு சங்குகள் பொறுக்கி
விசிலூதி செல்கிறான் தம்பி.
தாய்மடி நிரம்பிய பொண்ணாங்கண்ணியிலிருந்து
சொட்டியுதிரும் நீர்த்துளிகள் கண்ணுற்றபடி
வா வீட்டுக்கு போகலாம், எனச் சிணுங்குகிறாள் செல்லம்.
நீர் மூழ்கிய பாதங்களில் கொத்திக் கொத்தி ஒளிந்தலையும் கள்ள மீன்களே
நகரம் திரும்பும் நம் நண்பனை வழியனுப்பிவிட்டு
அக்காவுக்குத் தெரியாமல் நாளை நான் கொண்டு வருவேன்
கைப்பிடியளவு கடலையும்
மீந்திருக்கும் சில சொற்களையும்.

ஒளிப்பட உதவி – Rajendran Rajesh

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.