
கடவுள் எது
கல் எது
என்று பிரிக்கும் கோடு
ஒன்று இருக்கும் என்றால்
மிகவும் மெல்லியது
அது ஜெஜூரியில்
எல்லா கற்களுமே
கடவுள்கள்
அல்லது
கடவுளின் உறவினர்கள்
கடவுள் தவிர
வேறெதுவும்
பயிராவதும் இல்லை
இங்கு
இருபத்திநாலு மணி நேரமும்
வருஷம் முழுக்க
தரிசு நிலத்திலும்
இறுகிய பாறையிலும்
அறுவடையாவதெல்லாம்
கடவுள் மட்டுமே
ஒரு கல்லை எடுத்து
சுரண்டினாலுங்கூட
புதிதாய் ஒரு
புராணம் தோன்றும்
படுக்கையறை போன்ற
அந்தப்பெரிய பாறை –
அது கந்தோபரின் சாபத்தால்
கல்லாய் மாறிய அவரது மனைவி
பாறையின் குறுக்கே ஓடும்
அந்தப் பிளவு
கடுங்கோபத்தில்
தன் பெரியவாளால்
கந்தோபர் வெட்டியதன்
தழும்பு
00
ஒளிப்பட உதவி – alexmontjohn
அருண் கொலாட்கரின் Scratch என்ற கவிதை தமிழாக்கம்