சோப்பு தேவதை – ஜாக் ஸ்டாப்

 ஜாக் ஸ்டாப் – 

வீட்டுக்கு அருகில் உள்ள முட்கம்பி வேலிகளுக்குள் அவள் தன் மிருகங்களை வைத்திருந்தாள். நான் நடந்து செல்லும்போது அவற்றின் மிழற்றல்களையும் அந்த மிருகத்தின் பால்மடிகள் ஏழும் புல்தரையில் தேய்த்துக் கொள்வதையும் காட்டுக்குள்ளிருந்தும், என்னால் கேட்க முடிந்தது. அவை ஒரு கூட்டமாய் மலைமேல் ஒரு கருமேகமாய் தொங்கிக் கொண்டு இருந்திருக்கலாம், அல்லது தானியக் கிடங்கின் மூலைக்குத் தள்ளப்பட்ட கொழுத்த பெண் பன்றிஅது ஒன்றே ஒன்று மட்டும் இருந்திருக்கலாம்-..

ஒவ்வொரு இரவும் நான் அவளது கதவடிக்கு வந்தபோது என் கரங்களின் சருமத்தைத் தொட்டுத் தடவிப் பார்ப்பாள், நெருப்பருகே இப்புறமும் அப்புறமும் அவற்றைத் திருப்பிப் பார்ப்பாள். அவை ஏற்கனவே டிடர்ஜென்ட்கள் காரணமாய் பிளவுபட்டு ரத்தம் வடிந்து கொண்டிருக்கவில்லை எனில், எந்த மருந்து கொண்டு அவற்றைப் பிணைத்திருந்தாலும் வயல்வெளிகளைக் கடந்து அவளது அபார்ட்மெண்ட்டுக்குச் செல்லும் நீண்ட பயணம் அதை உறையச் செய்திருக்கும். முகத்தில் சினக்குறியோடு அவள் என் மணிக்கட்டைப் பற்றி உள்ளே இழுத்துச் சென்று என் மயிர்க்கால்களிலும் விரல்முடிச்சுகளிலும் க்ரீம் தேய்த்து விடுவாள். தட்டுகளிலும் அடுப்புக்கு மேலிருந்த கூரையிலும் எப்போதும் கெட்டித்து உறைந்திருந்த கொதிபால் நுரைக்கும் மணம் அறையை நிறைந்திருந்தது. மரத்தாலான குறுகிய அந்த அபார்ட்மெண்ட் ஒரு ப்ரெட்பாக்ஸின் உட்புறம் போலிருந்தது, அல்லது, கிழக்கு நோக்கியிருப்பின்,, கண்ணீர் வடிக்கும் எங்கள் காலணிகளை நெருப்புக்கருகில் வைத்திருக்கும் சவப்பெட்டி போலிருந்தது.

அவளது மருந்துகளின் மேற்பரப்பில் கடைந்தெடுத்த மணமற்ற ஐசிங்கை அதன்பின் புட்டி புட்டியாகக் குடித்தோம். அவள் சேகரித்து வைத்திருந்த மிகப்பெரிய ஸ்பூன்கள் சுவர்களைச் சுற்றி தொங்கிக் கொண்டிருந்தன, மரத்தாலான ஸ்பூன்கள் வரிசை வரிசையாக நேரடியாக கூரையில் ஆணியடித்துத் தொங்க விடப்பட்டிருந்தன. என் கையிலிருந்த கிளாஸ் ஏறத்தாழ எப்போதும் வழுக்கி விழத் தெரிந்தது. பற்றிக் கொள்ளாமல் காத்திருக்க நான் கற்றுக் கொள்ளும்வரை எந்தப் பொருளும் என் கையில் தங்குவதாயில்லை. ஆனால் அதுதான் மிதியடியின் வெண்மைக்குக் காரணம் என்று அவள் ஒருமுறை சொன்னாள். அப்போது திரவம் கீழே கொட்டிக் கெட்டித்துக் கொண்டிருந்தது. வெண்ணை போல் ஒரு விறகு என் விரல்களூடே வழுக்கிச் சென்றபோது சிக்கிக் கொண்ட ஒரு சிராயை அவள் அகற்றும்போது அவளது வாயினுள் முட்டை வடிவத்தில் இருந்த பற்களை நான் நினைவில் வைத்திருக்கிறேன். அப்போது நாங்கள் கூப்பன்களைத்தான் கொளுத்திக் கொண்டிருந்தோம், தீச்சுவாலைகளை விட்டு ஒழுகிய வண்ணங்களில் அவள் வீடு, அதன் வெளிறிய உட்புறத்தின் பிரமாண்ட ஆர்க்டிக்கில் காட்சிப்பிழையாய் பிரகாசித்தது.

இரவுகளின் அறையின் மூலைகளில் பிதுங்கிக் கொண்டிருந்த அவள் கண்களின் வழுக்கும் வெண்கருவைத தேடுகிறேன், அவளது கேசங்களின் கருவண்ண நூலாடைகளால் இன்னும் பின்னப்பட்டு என் வீட்டுத் தரையில் படுத்துக் கிடக்கும் நான் அவற்றைப் போலி செய்து பார்க்கிறேன். எது உண்மை என்றோ எவ்வளவு காலம் நான் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றோ என்னால் இப்போதெல்லாம் உறுதியாய்ச் சொல்ல முடிவதில்லைஎன் கால்விரல்கள் சிடுக்கான கயிறுகளில் சிக்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றை வேண்டுமென்றே நான் விழுங்கவில்லை என்று உறுதியாய்ச் சொல்லிக்கொள்வது முன்போல் இப்போதெல்லாம் என்னை ஆற்றுப்படுத்துவதில்லை.

காலம் காலமாய் நான் அவளைப் பெட்டிகளுக்குள் பெருக்கித் தள்ளுவது போலிருக்கிறது. என்றாலும் நான் இப்போதும் அவள் என் உடலின் வெற்றிடங்களில், என் சருமத்தின் வேர்களில் கலந்து சிக்கிக் கொண்டதாய் உணர்கிறேன். அவள் தன் ஈக்களை இங்கு விட்டுச் சென்றுவிட்டாள், அவை என் சப்பாத்திக் கள்ளிகளில் முட்டையிட்டு குஞ்சு பொரித்துக் கொண்டிருக்கின்றன. காலையில் புழுக்கள் ஆனந்தமாய் பிறக்கின்றன, மாலையில் மணல் வரும்போது ஊதியணைக்கப்படும்வரை, புளித்த என் கண்களுக்குக் குறுக்கே பறந்து செல்கின்றன,. இங்கு மழையில்லை, பனியில்லை. ஒரு காலத்தில் அழகாயிருந்த வெளிறிய கேக்வண்ண வெளிச்சத்தில் சூரியன் பிரகாசிக்கிறது, எனக்கென்று ஒரு ஜதை காலணிகள் இருந்ததே கிடையாது. அவள் இங்கிருப்பதே இல்லை, ஆனால் எப்போதும் மாடிப்படிகளில் இருக்கிறாள்கதவைத் தட்டத் தயாராக, தன் முகத்தை ஒத்திகை பார்த்துக்கொண்டு. அல்லது, அவள் தபால் பெட்டிகளுக்கு அருகில் காத்திருக்கிறாள், அவளது மிகச் சிறிய மண்டையோட்டில் மயிர்கள் வாரிக்கட்டி கொண்டையிடப்பட்டிருக்கின்றன, அவளது பின்னங்கழுத்தின் அலமாரிகளைத் திறந்து பார்க்கச் சொல்லி என்னை அழைப்பது போல்.

சர்க்கரை, பால், மெத்தென்ற ரொட்டிகள் எல்லாவற்றிலும் கெட்டித்த கருஞ்சிவப்பு சாஸ் ஊற்றியணைத்து உட்கொள்கிறேன். என் தினசரி குளியல்களின் மணத்தால் என் கைகளும் கால்களும் புளித்த வாடையடிக்கின்றன, என் விரல்கள் மெழுகுவர்த்திகளாய் வீங்கும்வரை குளியல்தொட்டியில் சௌடரில் நான் ஊறிக் கொண்டிருக்கிறேன். ஒருமுறை என் சருமத்தை ஒரு கத்தியால் சுரண்டினேன், என் நாளங்களும்கூட கிளிசரினாகக் கெட்டித்து விட்டது என்ற நம்பிக்கையில் (இது போன்ற எண்ணங்களில் திளைத்தபடி நான் சில்லிட்ட ரெடியேட்டரில் பல மணி நேரம் நிர்வாணமாய்ச் சாய்ந்து நிற்கிறேன்). நான் நினைத்தது தவறு, கிளிசரின் அல்ல, மணமற்ற தெளிவான ஜெல்தான் இருந்தது காலியாய் இருக்கும் கணப்படுப்பின் மறுபுறம் நோக்கி நாங்கள் ஹீலியம் குரல்களில் உரக்கக் கூவுவது போல் கனவு காணும் கண்மூடிய கண்ணிமைகளின்மேல் பொருக்கு தட்டிய அதே திரவம்தான். சிலநாட்கள் அவள் இருந்ததே இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் லெதர் நாற்காலிகளில் இருக்கும் அவளது விரல்ரேகைகளின் பிசுக்குத் தடங்களைக் காண்கிறேன் (என்னுடையதோ?). என் ஸ்பூன்கள் காணாமல் போய்விட்டன, சில ஆக்டேவ்கள் உயர்ந்து ஒலிக்கும் குரலோடு கண் விழிக்கிறேன்.

என் ஜன்னலுக்கு வெளியே உள்ள கைப்பிடியில் கட்டப்பட்டிருக்கும் தொலைபேசி வயர் கதவிடிக்கக் காத்துநிற்கிறேன். அதனால் ஒரு பயனுமில்லை. எறும்புகளுக்கான என்னை அடைய உதவும் கொண்டோலா மட்டுமே அது. பல நாட்களாகவோ அதற்கும் அதிகமாகவோ அதன் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. என் வீட்டின் பக்கங்களுக்கு எதிராய் கனைப்பொலியுடன் சடை பின்னப்பட்ட கருங்கயிறு அளவிடையாய் அலறுகிறது. கதவடிக்கும் அவளது கரங்கள்கூட இத்தனை சத்தம் செய்யாது, என்று சொல்லிக் கொள்கிறேன்.

நன்றி – Soap Idol, Jacque Staub, 3 AM Magazine

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.