இருத்தலியன்

பேயோன்

குறுகிய தெருவில் அகன்ற மனிதன்
மெல்ல வழிமறித்துச் செல்கிறான்
‘ஹலோ!’ எனக் கோபித்து உசுப்பத்
தடுக்கிறதென் உள்ளார்ந்த நாகரிகம்
‘கொஞ்சம் வழி விடு’ எனச் சொல்ல
விடுவதில்லை அறிவுஜீவிக் கையாலாகாத்தனம்
‘அப்படி என்ன அவசரம்?’
என்று அவன் கேட்டுவிட்டால்
என்ன பதில் சொல்லப்போகிறேன்?
யாருடைய அனர்த்தம் பெரிது?
(என எப்படி நிரூபிப்பானேன்?)
பிறகு நான் உணர்கிறேன்:
இதுதான் என் வாழ்க்கை
எது நடக்க வேண்டுமோ
அதுதான் நடந்துகொண்டிருக்கிறது
அவன் உருட்டும் பாறையைவிட
முக்கியமல்ல நானுருட்டுவது.
குறுகிய தெருவின் அகன்ற மனிதனிடம்
மனதிற்குள் சொல்கிறேன்:
நண்பா, நம் பாறைகளின் அளவு
ஒன்றே எனினும் உன்
முக்கியத்துவங்களுக்கு முன்
நான் சுருங்கிப்போகிறேன், வாழ்த்துகள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.