கலைந்த நினைவு…

மோனிகா மாறன்

 

முடிவிலா தார்ச்சாலை..,.
மௌனத்தை ரீங்கரிக்கும் வண்டுகள்
சலனமற்ற நீர்ப்பரப்பு.,
பனியில் ஒளிரும் நிலாக்கிரணங்கள்…
இதம்தேட வைக்கும் வாடை….
முழு நிலவொளியிலும்
தன்னை வெளிப்படுத்தா நிழல்கள்….
உயிர்த்துடிக்கும் உன் அழுகை…
என் இயலாமை
உதிரம்…வலி…
உயிர்ப்பிண்டமாய்
என்னுள்ளிருந்து உன்னை
சுரண்டி எடுத்த அக்கணம்..
மயக்க ஊசியை மீறித் திறக்கும் என் விழிகளில்
உதிரத்தில் பொதிந்த உயிர்ச்சதை…
எந்த நொடியில் நீ தோன்றினாய் என் கருவறையில்
மூன்றாம் மகவாய்…
உனைக் கருவருக்க
ஆயிரம் காரணங்களைக் கூறினோம்….
என் சொல்வேன் பதில் நான்..
உலகறியா உன் சுவாசத்திற்கு
நீ மகனா? மகளா?
அறியவில்லை
நிச்சயம் உணர்கிறேன்
பிறந்திருந்தால்
சாய்ந்திருப்பேன் என் இறுதிநாட்களில் உன் தோள்களில்…
அறுத்தெரிந்தாலும்
மரணம் வரை எனைத்
தொடரத்தான் போகிறாய்
ஏன் அம்மா என்ற
ஒற்றைச் சொல்லுடன்…
என் இரவுகள் கரையத்தான் வேண்டும்
உன் உன்மத்த நினைவுகளுடன்..
இனி வருமா என் கனவுகளில்
கவிதைகளும்…மழலைகளும்…

2 comments

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.