“கண்ணாடி துடைப்பவன்” குறித்து சிவேந்திரன்:
கிழக்கு திமோரின் விடுதலைக்கு எதிராக அமெரிக்காவும், அவுஸ்ரேலியா போன்ற நாடுகளும் இருந்தன என்பது வரலாறு. ஆனால் காலப்போக்கில் அவற்றின் நிலைப்பாடு மாறியது. எந்த வடிவிலான விடுதலைப் போராட்டம் என்றாலும் அதன் இறுதி வெற்றியை முக்கிய உலக நாடுகளின் போக்கே தீர்மானிக்கின்றது என்பதை கிழக்கு திமோரின் விடுதலையும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் இன்றைய காலகட்டப் பின்னடைவும் மீண்டும் உறுதிப்படுத்தின என்றே கூறவேண்டும்.
அண்மைக் கடந்த காலங்களில் சுதந்திரம் பெற்ற கிழக்குத் திமோரோ தெற்கு சூடானோ ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு நிகரான வலுவையோ அல்லது தியாகத்தையும், அர்ப்பணிப்பையுமோ கொண்டவையல்ல என்பது கடந்தகால உலக நடப்பை அவதானித்தவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்தவொன்று. அந்த நிலைப்பாட்டில் இருந்தே இக்கதையை எழுத ஆரம்பித்தேன்.
கதையை எழுத ஆரம்பிக்கும்போது ஈழவிடுதலைப் போராட்டத்தின் தியாகத்தை மட்டும் உயர்வாகவும், கிழக்குத் திமோர் விடுதலைப் போராட்டத்தை மற்றைய நாடுகளின் பிச்சையில் கிடைத்ததாக தாழ்வாகவும் கருதிய மனநிலையில் இருந்தேன். ஆனால் இந்தக் கதைக்கான தேடல் என்னை விடுவித்தது. அவரவர்க்கு அவரவர் தியாகங்கள் முக்கியமானவை. போராட்டத்துக்கு நீதியான காரணம் இருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டுமே தவிர எமது மனவிருப்பு வெறுப்புகள், அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து குறைகளைக் கண்டு அதைக் கொச்சைப்படுத்திவிடக் கூடாது என்பதில் மனம் இயல்பாகவே அமைந்துகொண்டது.
இக்கதையின் அடித்தளமாகவுள்ள கிழக்கு திமோரிய நிகழ்வுகள் மிகப்பெரும்பாலானவை உண்மையானவை. அதன் மீது நடமாடும் சிப்பிரியானோ அல்விஸ் அமரல் வெவ்வேறு நிஜ மனிதர்களின் சாயல் கொண்ட ஒரு கற்பனை பாத்திரம். கிழக்குத் திமோரி ஒருவர் இந்தக் கதையை வாசித்தால் அவர் பிழை பிடித்துவிடக்கூடாது என்ற கவனத்துடன் தகவல்களும் புனைவும் பிணைக்கப்படவேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்.
கண்ணாடி துடைப்பவர்களும் உண்மையானவர்கள். கண்ணாடி துடைப்பவர்களில் ஒருவரையும் சிப்பிரியானோவையும் சந்திக்க வைத்தபோது கதையை அவர்களே உருவாக்கிக் கொண்டார்கள்.
சிவேந்திரன் எழுதிய “கண்ணாடி துடைப்பவன்”, சிறுகதை இங்கே
“கிழக்கு திமோரின் விடுதலைக்கு எதிராக அமெரிக்காவும், அவுஸ்ரேலியா போன்ற நாடுகளும் இருந்தன என்பது வரலாறு.” என்பது சரி. ஆனால், “ஆனால் காலப்போக்கில் அவற்றின் நிலைப்பாடு மாறியது” என்பதை அவதானத்துடன் தான் சொல்ல வேண்டும்.
கிழக்குத் திமோரின் பெற்றோலிய வளத்தை அம்பாளித்துக் கொள்வதற்காகவே இந்த மனமாற்றம் ஏற்பட்டது என்று தான் நாம் பார்க்க வேண்டும். புதிதாக உருவாகிய நாடு, குறிப்பாக ஓர் ஏழ்மையான நாடாக இருக்கப் போவது, தன்னைப் பார்த்துக் கொள்வதற்காக வசதி செய்து தருவதை விடுத்து வளங்களை மடக்கிக் கொண்டது அவுஸ்திரேலியா. நுண்ணிய ஒட்டுக் கேட்கும் கருவிகளைப் பொருத்தியது மட்டுமன்றி, கிழக்குத் திமோரைப் பிரதிநிதித்துவப்படுத்திய சட்டவாளர்களையும் வீடு பகுந்து துழாவியது இந்த நாடு.
கண்ணாடி துடைப்பவன் பிடித்திருந்தது என்று முதலில் சொல்லி, சரித்திரத்தைப் பிடித்து வைப்பதில் முனைப்பாக இருந்ததால் கதை சொல்லல் அவசரமானதாக இருந்ததாய் உணர்ந்தேன் என்பதையும் சொல்ல வேண்டும்.