கூரை நடைபாதை கற்குவியல்கள் இருப்புப் பாதை என எங்கும் உதிர்ந்த சருகுகள் நிறம் மங்கிய நீர்வண்ண ஓவியம் போலொரு களைத்த பொலிவு இற்றது போல்வன எனினும் இறாது நிற்கும் நிலையத்தின் மரவரிகள் ஒரு நூறு நினைவுகளின் மௌன சாட்சிகள் அவ்வப்போது பாதை தேய்த்து சலிப்புடன் பெருமூச்செறிந்து வந்து நின்று பொருமலுடன் நீர் சிந்தி வேண்டா வெறுப்பாக கிளம்பிச் செல்லும் புகையற்ற வண்டி தரும் கிளர்ச்சியின் குற்றவுணர்வுடன் இரவில் தனித்திருக்கும் பகிர்வுகளில் பேதமேதும் பாராட்டுவதில்லை இருப்புப் பாதையோரம் இன்று முளைத்த எருக்கம்செடிக்கும் நடைமேடையின் நடுவீற்றிருக்கும் முரட்டு அரசுக்குமிடையே செல்லமாய் வருடி செந்நிறப் புழுதியை வீசியடித்து கழுவும் எத்தனையோ மழைக்காலங்களில் ஒன்றைக் கடந்து செல்ல இன்று காத்திருக்கும் உடலம்
Advertisements
One comment