நான் கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகளாக இணையத்தில் அங்குமிங்குமாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்கு முன்னர் எதுவும் எழுதியதில்லை, நாட்குறிப்பில் கவிதை எழுதியதைத் தவிர. இணையத்திலும் மொழிபெயர்ப்பு (நான்கு சிறுகதைகள், பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு இருபது கவிதைகள், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு நூற்றைம்பது பழந்தமிழ்க் கவிதைகள்) எழுத்துக்களே அதிகம்.
ஏதேனும் ஒரு படைப்புக்காகவாவது சன்மானம் வாங்கியவர் தான் எழுத்தாளர் என்றால் நான் எழுத்தாளனில்லை. மிஞ்சிப் போனால் ஒரு இருநூறு பேர் நான் எழுதியவற்றைப் படிப்பார்கள். நாலைந்து பேர் பின்னூட்டமிடுவார்கள். நான் இதுவரை எழுதியவற்றைப் புத்தகமாகப் போட்டால் ஒரு பத்து இருபது பேர் வாங்கலாம். ஆனாலும் விடாமல் எழுதத் தூண்டுவது எது?
நான் அறிந்தவற்றை உலகத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை தான். இதில் உலகத்துக்கு எந்தப் பயனும் இருக்கிறதா என்ற கவலை எனக்கில்லை. எனக்கு சந்தோஷமாக இருப்பதால் எழுதுகிறேன். இதில் சற்று கர்வம் ஒளிந்திருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன். நான் மதிக்கும் நபர்களிடம் இருந்து பாராட்டுகள் வரும் போது சற்றே மிதப்பாகத் தான் இருக்கிறது.
எழுதுவது எனக்குத் தொழில் அல்ல. தொழிலுக்கு நடுவே எழுதுகிறேன். அது போல எழுதுவதற்கு ஏற்ற இடம் என்றெல்லாம் எதுவுமில்லை. எனது பல படைப்புகள் நான் வாரா வாரம் இரயில் வண்டியில் பயணம் செய்யும் போது மனதில் எழுதப் படுபவையே. மனதளவில் ஒரு வடிவம் வந்த பிறகு தட்டச்சிடுவதே எனது எழுதுமுறை. காகிதத்தில் எழுதியது மிகமிகக் குறைவு. கணிணியிலும் கைபேசியிலும் தட்டச்சிட்டதே அதிகம்.
எழுதாமல் என்னால் இருக்க முடியுமா என்றால் முடியும் தான். ஆனால் என் வாழ்க்கையில் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டேயிருக்கும். எழுதுவது என்னை முழுமையடைய வைப்பதாய் நான் நினைக்கிறேன். அதனால் எழுதுகிறேன். எனக்காகத் தான் எழுதுகிறேன். என் பார்வையை உலகமும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற பேராசையினாலும் தான் எழுதுகிறேன்.
oOo
(13 வருடங்களாக வலைப்பதிவுகளில் எழுதி வரும் செந்தில்நாதன், மொழிபெயர்ப்புகள் மூலம் இணையவெளியில் அறியப்பட்டவர். சங்ககாலக் கவிதைகள் முதல் நவீனக் கவிதைகள் வரை 150 கவிதைகள் மற்றும் சதத் ஹசன் மண்டோவின் 4 சிறுகதைகள் மொழிபெயர்த்துள்ளார். தற்போது ஈடுபட்டிருப்பது பழந்தமிழ்க் கவிதைகள் மொழிபெயர்ப்பு – https://oldtamilpoetry.wordpress.com . சென்னையிலும் தூத்துக்குடியிலும் வசிக்கும் இவர், கனரக வாகன நிறுவனம் ஒன்றில் பங்குதாரராய் இருக்கிறார்)