எதற்காக எழுதுகிறேன்? – பேயோன்

பேயோன்

எழுத ஒரு விஷயம், ஒரு ‘பொறி’, தோன்றும்போது எப்படி எழுதாமல் இருக்க முடியும்? ஆனால் இந்த primal உந்துதலைத் தாண்டி வேறு சில காரணங்கள் இருப்பது தவிர்க்க இயலாதது.

நான் என்னுடைய அறிவார்த்தத் திருப்திக்காக எழுதுகிறேன், என்னைப் போன்ற ரசனையைக் கொண்ட, நான் கவனிக்கும் அதே வேடிக்கையான விஷயங்களை அதே பார்வையில் பார்க்கும் படிப்பாளர்களுடன் என் ரசனையைப் பகிர்ந்துகொள்ள எழுதுகிறேன். சில (பல) படைப்புகள் அநேகமாக எனக்கு மட்டுமே ஈர்ப்பவை. உதாரணமாக, ‘இன்றைய செய்தித்தாள்’ – ஒரு அர்த்தமும் மேலான நோக்கமும் இல்லாத கதை இது. ஆனால் என் படைப்புகளில் எனக்குப் பிடித்தவை என்று பட்டியலிட்டால் முதலில் இதைத்தான் குறிப்பிடுவேன்.

ஆகவே நான் அடிப்படையில் என் திருப்திக்காகத்தான் எழுதுகிறேன். அதுதான் இயல்பானது என்று நினைக்கிறேன். மற்றவர்களைக் கவரும் தொழிலில் இல்லாத பட்சத்தில், நமது அறிவுத் திறனால் மற்றவர்களை அசத்த வேண்டியிராத பட்சத்தில், நம்முடைய திருப்திக்காகத்தானே எழுத முடியும்? சுயதிருப்தி, ரசனைப் பகிர்வு ஆகியவை என்னுடைய இலக்குகள்.

நான் எழுதுவது முதலில் எனக்குத் திருப்தியளிக்க வேண்டும். எழுதுவது எனக்கு அந்தரங்கமான ஒரு விஷயம். பலருக்கும் அப்படி இருக்கலாம். என் விஷயத்தில் ஏன் அப்படி என்றால், நான் எப்போதோ படித்த புத்தகங்களைத்தான் என் தூரிகையால் மீட்டுருவாக்க விரும்புகிறேன். ரஷ்ய இலக்கியம், கலை, இரண்டாம் உலகப் போர், 50களில் 60களில் எழுதப்பட்ட அகிலன், கல்கி, நா. பார்த்தசாரதி நாவல்கள், ராஜேஷ்குமார் நாவல்கள், அபத்த இலக்கியம் போன்ற பழைய வாசிப்பில் தங்கிவிட்ட விஷயங்களைத்தான் நான் வேறு வடிவங்களில் எழுதுகிறேன்.

சமீபகாலமாக மார்வெல்-DC காமிக்ஸ், அவற்றின் திரைத் தழுவல்கள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். ‘ஒமேகா செயல்திட்டம்’ நான் விரும்பி எழுதிய கதை. அதில் வரும் குறிப்புகள் யாருக்கும் புரிய வாய்ப்பில்லை என்று எனக்குத் தெரிந்தாலும் நான் எழுதியே ஆக வேண்டிய நிலை. அது தொடராகவும் நீளலாம். இது எனக்காக எழுதியது. எனக்கு மட்டுமே புரிந்தால்கூடப் பரவாயில்லை. நான் அங்கீகாரத்திற்காக எழுதுவதில்லை. வந்தால் பிரச்சினை இல்லை, ஆனால் என் நோக்கம், எழுத வேண்டியதை எழுதுவது. இன்னொரு எடுத்துக்காட்டு, ‘விஷ ஊசி’. இது இரண்டாம் உலகப் போரின்போது நடக்கும் உளவுக் கதை. இதுவும் தொடரும்.

எழுதுவது எனக்கு ரொம்பப் பர்சனலான விஷயம் என்பதை இதை இன்னும் படித்துக்கொண்டிருப்பவர்களுக்கு விளக்க விரும்புகிறேன். ‘பெரும்பாலும் குறுங்கவிதைகள்’ தொகுப்பில் வரும் ‘குவியல்’, ‘இன்றைக்குக் காலையில்’ ஆகிய கவிதைகள் முறையே ஞானக்கூத்தன், ஆனந்த் ஆகியோர் கவிதைகளின் மறுவாசிப்பு மற்றும் பகடி.

ஞானக்கூத்தன் கவிதை:

சூளைச் செங்கல் குவியலிலே
தனிக்கல் ஒன்று சரிகிறது.

என் கவிதை:

குவியல்

தனிக்கல் அது சரியும் வரை
சூளைச் செங்கல் குவியலிலே.

ஆனந்தின் கவிதை:

சற்றைக்கு முன்

சற்றைக்கு முன்
ஜன்னல் சட்டமிட்ட வானில்
பறந்து கொண்டிருந்த
பறவை
எங்கே?
அது
சற்றைக்கு முன்
பறந்து கொண்டிருக்கிறது.

என் கவிதை:

இன்றைக்குக் காலையில்

இன்றைக்குக் காலையில் பார்த்தபோதுகூட
நன்றாக இருந்த மனிதர் எங்கே?
அவர் இன்றைக்குக் காலையில்
நன்றாக இருக்கிறார்.

நான் skits எழுதுபவன். கதை, கவிதை என எதுவாக இருந்தாலும் அது ஓர் elaborate joke-ஆக அல்லது practical joke-ஆக வெற்றி பெற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. ஒரு படைப்பு வெற்றியா தோல்வியா அல்லது ‘புரமோட்டட் வித் வார்னிங்’-ஆ என்பதை நான்தான் தீர்மானிக்கிறேன். இந்த ஸ்கிட்களுக்கும் நெடும் நகைச்சுவைத் துணுக்குகளுக்கும் தேவையான சிந்தனைகள் எனக்கு இருக்கின்றன, பார்ப்பதில்/படிப்பதில்/கவனிப்பதில் கிடைக்கின்றன. இவற்றின் சிற்பி என்கிற முறையில் இவற்றை ‘வடிப்பதை’த் தவிர வேறு வழியில்லை என்பதால் எழுதுகிறேன்.

ஆகவே, நான் ‘வெறும்’ நகைச்சுவை எழுத்தாளன் என்பதையும் மீறி எனது அறிவுப்பூர்வமான மனநிறைவுக்காகவும் என் படைப்புகளுக்கு மிகையாக விளக்கமளித்து உயர்த்திப் பிடிக்காமல் சரியாகப் புரிந்துகொள்ளும் அந்த ஆறேழு படிப்பாளர்களுக்காகவும் எழுதுகிறேன். 🙂

oOo

(தமிழில் ஒன்பது புத்தகங்களை எழுதியிருக்கும் முதல் மற்றும் ஒரே கற்பனைப் பாத்திரம். கதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதும் முழுநேர எழுத்தாளர், பத்தியாளர், ஓவியர். 1967இல் பிறந்த இவர், ஒரு மனைவிக்கும் மகனுக்கும் சொந்தக்காரர். எழுத்துத் துறையில் இருபது ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கிறார்.)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.