‘இரவுக்கு ஆயிரத்தொரு கண்கள் -2: ஆயிரத்து இரண்டாம் இரவின் கதை’

– ஆர். அஜய்-

ஆயிரத்தொரு இரவுகள் கதைகள் கேட்டபின் மனம் மாறி ஷெரியார் (Shahryar)  ஷஹேரேசாதவுடன் (Scheherazade) இனிமையான இல்வாழ்க்கை நடத்தினார் என்று ‘அரேபிய இரவுகள்‘ முடிகின்றன (இந்த ஆயிரத்தொரு இரவு காலகட்டத்தில் கதை சொல்லல்/ கேட்டல் இவற்றினூடே மூன்று குழந்தைகள் ஷஹேரேசாத/ ஷெரியார் தம்பதியருக்கு பிறந்தன என்பதையும் நினைவில் கொள்வோம்). அதன்பின் அவர்களுடைய இல்வாழ்க்கை எப்படி இருந்திருக்கக்கூடும்?  தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தி நீங்கியபின், தினமும் அரசனை மகிழ்விக்கும் கதை சொல்ல வேண்டிய நிர்பந்தம் இனி இல்லாத நிலையில் ஷஹேரேசாத அடுத்த இரவை எப்படி கழித்திருப்பார்? உறக்கமில்லாமல் கதை சொல்லிச் சொல்லி அலுத்துப் போய் நிம்மதியான இரவுத் தூக்கத்தை எதிர்நோக்கி காத்திருந்திருப்பாரா அல்லது ‘ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது’ என்பதற்கு ஏற்ப மேலும் கதைகளை உருவாக்கி இருப்பாரா? எட்கர் ஆலன் போ, ஆயிரத்தி இரண்டாவது இரவிலும் ஷஹேரேசாத இன்னொரு கதையை சொல்வதாக ‘The Thousand-And-Second Tale of Scheherazade‘ ல் புனைகிறார்.

போவின் புகழ் பெற்ற ஆக்கங்களைப் படித்து அவருடையது மிக இருண்மையான உலகம் என (சரியான) புரிதலில் இருப்பவர்களுக்கு இந்தக் கதையில் உள்ள மெல்லிய நகைச்சுவை புதிதாக இருக்கக்கூடும். அந்தப்புரத்தில் உள்ள அனைத்து கன்னிகளையும் கொன்று விடுவதாக தன் தாடியின் மீது ஷெரியார் உறுதி எடுக்கிறார். அவரை தைரியமாக மணம் முடிக்கும் ஷஹேரேசாத கணவனை உறக்கத்தில் இருந்து எழுப்பும்போது அவன் அவளைக் கடிந்து கொள்வதில்லை என்பதற்கு பாசம் காரணமல்ல, ‘… who bore her none the worse will because he intended to wring her neck on the morrow, …‘  என்பதுதான். தன் கணவன் குறட்டை விடுவதைப் பற்றிய மனத்தாங்கலும் ஷஹேரேசாதவுக்கு உள்ளது. எல்லாம் சுபமாக முடிந்த பின்பு, ஆயிரத்தி இரண்டாம் இரவில். குறட்டை விட்டபடி உறங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பல முறை கிள்ளி எழுப்பி ஷஹேரேசாத சிந்த்பாத்தின் ஏழாவது பயணத்தை பற்றிய கதை சொல்ல ஆரம்பிக்கிறார். குறட்டை ஒலியின் நாராசத்தை கேட்காமல் இருக்கவே இன்னொரு கதையை ஆரம்பித்தார் என்றும் கருதவும் இடம் உள்ளது.

வழக்கம் போல் பயணப் பித்தால் பீடிக்கப்படும் சிந்த்பாத் இன்னொரு பிரயாணத்தை ஆரம்பிக்கிறான். ஆனால் எப்போதும் போல் பெரும் பாம்புகளையோ, பறவைகளையோ சந்திப்பதில்லை, பயமுறுத்தும் ஜின்களோ, மயக்கும் அழகிகளோ, சாகஸ நிகழ்வுகளோ இல்லை. மனித- மிருக அம்சங்கள் கொண்ட ஜீவராசி ஒன்றைச் சந்திப்பவன், அதனால் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதும், அங்கு அவன் காண்பவற்றை விவரிப்பதுமே மீதிக் கதை. முதற்பார்வையில் பெரிதாக சுவாரஸ்யம் இல்லாத நிகழ்வுகள்தான், ஆனால் தன் (போவின்) காலத்திய கண்டுபிடிப்புகளை சிந்த்பாத் காண்பதாக சுட்டிச் செல்வதின் மூலம் தன் தனித்துவத்தை பதிவு செய்கிறார். சார்ல்ஸ் பாபெஜ்ஜின் கணக்கீடு கருவி, ஆரம்ப கால புகைப்படக் கருவி, ரெயில் வண்டி என சிந்த்பாத் பார்ப்பவற்றின் பெயரை நேரடியாக சொல்லாமல் குறிப்பால் உணர்த்துகிறார். ‘Another directed the sun to paint his portrait, and the sun did’ …’In place of corn, he had black stones for his usual good; and yet, in spite of so hard a diet, he was so strong and swift that he would drag a load more weighty than the grandest temple in this city, at a rate surpassing that of the flight of most birds‘  போன்றவை எவற்றைக் குறிக்கின்றன என வாசகன் யூகிக்க முடியும்.

இவற்றை ஷெரியார் எவ்வாறு எதிர்கொள்கிறார்? மனித- மிருக ஜீவராசி பற்றி கேள்விப்படும்போது மிகவும் மகிழ்விப்பதாக இருப்பதாக சொல்பவர் அதன் பின் ‘Hum’, ‘Hoo’, ‘Humph’, ‘Pooh’, ‘Stuff’ போன்ற பொத்தாம் பொதுவான ஒற்றை வார்த்தை எதிர்வினைகள் ஆற்றுவதன் மூலமும் அவை பின்னர்  ‘Nonsense’,  ‘Twattle’, ‘Ridiculous’, ‘Absurd’,  ‘Preposterous’ ஆக மாறுவதன் மூலமுமே அவர் மனநிலையை போ நமக்கு உணர்த்துகிறார். எனவே இறுதியில் ஷஹேரேசாதவைக் கொல்ல அவர் உத்தரவிடுவது பெரிய வியப்பில்லை. முதலில் வருத்தமடையும் ஷஹேரேசாத, பின் தன் அறிவிலி கணவனின் குழந்தைத்தனமான துர்நடத்தை பல கற்பனை செய்ய முடியாத சாகசங்களைப் பற்றி அவன் அறிந்து கொள்ள முடியாமல் தடுத்து விடுவது அவனுக்குதான் நஷ்டம் என்று தன்னை தேற்றிக் கொண்டு மரணத்தை தழுவுவதில் அவல நகைச்சுவை உள்ளது.

‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதன் உதாரணம் ஷஹேரேசாத என்று எளிதில் சொல்லி விடலாம். அதே நேரம் இன்னொன்றும் கவனிக்கப்பட வேண்டியது. பல விசித்திர, அசாதாரண கதைகளை ஆயிரத்தொரு இரவுகள் சந்தோஷமாக கேட்டு வந்த ஷெரியார் ஏன் உண்மையை எதிர்கொள்ளும்போது அது தலைவலி ஏற்படுத்துவதாக சொல்லி, அதற்காக மனைவியை தண்டிக்க வேண்டும்? போவிற்குதான் இவை நிகழ்கால உண்மைகள், ஷெரியாரைப் பொறுத்தவை அவை பொய்கள் (அல்லது எதிர்கால உண்மைகள்) என்பது சரியே, ஆனாலும் இந்த (நிகழ்/ எதிர்கால) உண்மைகள்/ பொய்கள் ஷஹேரேசாதவின் புனைவுகளைவிட எந்தளவுக்கு மாறுபட்டவை, நம்ப முடியாதவை? ‘Truth is stranger than fiction‘ என்று கதையின் ஆரம்பத்தில் போ குறிப்பிடுவதை கதையின் இறுதியோடு ஒப்பிட்டு பார்ப்பது போ இந்தக் கதையில் என்ன முயல்கிறார் என்பதை புரிய உதவக்கூடும். அதிலுள்ள நகைமுரணும்,  கதையின் மெல்லிய நகைச்சுவை அம்சமும் இதை கவனிக்கப்பட வேண்டிய கதையாக்குகின்றன.

oOo

இரவுக்கு ஆயிரத்தொரு கண்கள் – 1 – ஆர். அஜய்

One comment

  1. நான் அஸ்லி இலங்கையில் வசிக்கிறேன்
    எனக்கு ஆயிரத்தோர் இரவுகள் புத்தகங்களை PDF file களாக தர முடியுமா
    இது எனது வாட்சப் இலக்கம்
    +94766176719
    Aslyammaar90@gmail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.