பேரமைதி – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

சரவிளக்கொளியால் மெருகேற்றப்பட்ட
அகண்ட அரங்கத்தில்,
நறுவிசாய் உடுத்திய
கனவான்களும் குணவதிகளும்
சீரான வரிசையில்
தூசியற்ற தரைவிரிப்புக்கு நோகாதபடி
ஊர்ந்து செல்கிறார்கள்,
கரம் பற்றியும், மெலிதாக கட்டியணைத்தும்,
ஆறுதல் சொற்களை அளந்து பரிமாறியபடி.

பேரமைதியை குலைத்தபடி
வெடித்து கிளம்புகிறது
ஓர் அழுகைக் குமுறல்,

மலர் ஜோடனையுடனான மரப்பெட்டியினுள்
லினன் விரிப்பின் மேல்
நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டுக் கிடந்தவரை
இரத்தமும் சதையுமாக
இழுத்து வெளியில் போட்டது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.