சாமக் கோடங்கி – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

அள்ளிச்செருகிய குடுமியுடன்
அதக்கிய வெற்றிலை ஊறிவழிய
ஓலைப்பெட்டியில் சேர்த்து வைத்த
தலைச்சன் மண்டையோட்டு மையுடன்
நட்டநடு நிசியில் சுடுகாட்டிலிருந்து
அள்ளி வந்த சாம்பலுமாய்
குறி சொல்ல வரும் சாமக்கோடங்கி
புதைச்சு வச்ச சூனியத் தகடு
சோற்றில் சிக்கும் சுருள் முடி
பற்றி எரியும் கூரை
சுற்றி வரும் நாகம்
பரிகாரங்கள் எல்லாம் பாட்டில் இருக்கும்.
ஆழாக்கு அரிசிக்கும், பூச்சி அரித்த போர்வைக்கும்
இணக்கமாக ஜக்கம்மாவின் அருள் உரைக்கும்..
வெயில் ஏறிய வெக்கை வேளைகளில்
தலையில் சுற்றிய துண்டோடு
கல்திண்ணையில் சாக்கட்டியில் வரைந்த
வெட்டுப்புலி ஆட்டம் விளையாட
அள்ளையை சொறிந்து கொண்டு
குத்த வைத்து உட்கார்ந்திருக்கும்.

oOo

ஒளிப்பட உதவி – Board Games of India

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.