ஜான் ஆஷ்பெரி – எம்மா பௌமன் எழுதிய அஞ்சலிக் குறிப்பு

Emma Bowman

மிகுமெய்ம்மை மற்றும் விடையிலித்தன்மை கொண்ட படைப்புகளுக்குப் பெயர் பெற்ற, புலிட்சர் பரிசு வென்ற கவிஞர் ஜான் ஆஷ்பெரி தொண்ணூறாம் வயதில் மறைந்திருக்கிறார்… அவர் தன் இல்லத்தில் இயற்கை மரணம் எய்தினார்.

1975ஆம் ஆண்டு வெளிவந்த அவரது கவிதை தொகுப்பு, ‘செல்ஃப் போர்ட்ரெய்ட் இன் எ கான்வக்ஸ் மிரர்’ பலராலும் அவரது மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. புலிட்சர் பரிசு, நேஷனல் புக் அவார்ட் மற்றும் நேஷனல் புக் கிரிடிக்ஸ் சர்க்கிள் பரிசு என்று இலக்கிய உலகின் மிக அபூர்வமான மூன்று விருதுகளை அது பெற்றது. இந்த நூலின் தலைப்புக் கவிதை அதே பெயர் கொண்ட பார்மிஜியானினோவின் பதினாறாம் நூற்றாண்டு ஓவியத்தின் மீதான தியானமாகும். முன்னால் அதிபர் பராக் ஒபாமா நேஷனல் ஹ்யூமானிட்டிஸ் பதக்கம் அளித்து ஆஷ்பெரியின் சாதனைகளை அங்கீகரித்துள்ளார்.

இளம் வயது முதலே கவி மரபுகளை நிராகரித்த ஆஷ்பெரியின் மனப்போக்கு ஜான் கேஜ் போன்றவர்களின் இசை மற்றும் காண்கலை, குறிப்பாக அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிஸ்ட் ஓவியர்களின் தாக்கத்தில் வளர்ந்த ஒன்று.

அவரது கவிதைகளுக்கும் ஓவியத்துக்கும் உள்ள உறவை நியூ யார்க் டைம்ஸ் இவ்வாறு அடையாளப்படுத்தியது: “அவரது கவிதைகள் சவாலாய் இருக்கின்றன என்றால் திரு. ஆஷ்பெரியின் நோக்கத்தில் அதுவும் ஒன்று- ஓவியம் குறித்த தம் முன்னனுமானங்களை பார்வையாளர்கள் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிஸ்டுகள் போலவே கவிதை குறித்த தம் முன்னனுமானங்களை வாசகர்கள் மீள்பரிசீலனைக்கு உட்படுத்த அவர் கட்டாயப்படுத்துகிறார்.”

பாரிஸ் ரிவ்யூவின் பீட்டர் ஸ்டிட்டிடம், “ஓவியனாவ்துதான் என் லட்சியம்,” என்றார் ஆஷ்பெரி. பதின்ம வயதுக்கு முந்தைய ஆண்டுகளில் அவர் ஓவிய வகுப்புகள் எடுத்துக் கொண்டார், ஆனால், “ஓவியம் வரைவதைவிட கவிதை எழுதுவது சுலபமாக இருப்பதை அறிந்து கொண்டேன்.” அதற்கிடையிலான காலத்தில் அவர் நவீன கவிதைகள் வாசிக்கத் துவங்கியிருந்தார்.

லூயி உண்டர்மேயர் தொகுத்த கவிதை நூல் ஒன்றில் தான் கவிஞனாய் அங்கீகாரம் பெற்றதாக அவர் ஸ்டிட்டிடம் சொல்கிறார். பல விமரிசகர்களும் ஆஷ்பெரியின் கவிதைகள் புரிந்து கொள்ள முடியாதவையாக இருப்பதாய்ச் சொல்வது குறித்து, “அதில் பலவும் எனக்கு முதலில் பிடிபடவில்லை… பிற கவிஞர்கள் போல் எழுத வேண்டும் என்ற ஆர்வம்தான் என்னைக் கவிதை எழுத வைத்தது என்று நினைக்கிறேன்”.

அவரது புதிர்க்கவிதைகள் இலக்கிய விமரிசகர்களையும் அவரது சமகால கவிஞர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தினாலும், சோதனை முயற்சிகள் மேற்கொள்ளும் அவரது பாணி ஒரு தலைமுறை எழுத்தாளர்களுக்கு இலக்கியத்தை புதிதாக்கி அளித்தது.

மிகச் சிறந்த கவிஞர் என்று போற்றப்பட்ட டபிள்யூ. ஹெச். ஆடனை ஆஷ்பெரியின் முதல் புத்தகம் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறச் செய்தது (“கவிஞனாய் என் மொழியை உருவாக்கிய முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர்” என்று ஆஷ்பெரி ஆடன் குறித்து மதிப்பு கொண்டிருந்தார்). ‘சம் ட்ரீஸ்’ (1956) என்ற புத்தகத்துக்காக ஆஷ்பெரியை யேல் யங்கர் போயட்ஸ் பரிசுக்குத் தேர்வு செய்த ஆடன் பிற்காலத்தில், “அதில் ஒரு வார்த்தைகூட தனக்கு பிடிபடவில்லை என்று ஒப்புக்கொண்டார்”, என்பதை டைம்ஸ் குறிப்பிடுகிறது.

ஆம், 2008ஆம் ஆண்டு தி அசோஷியேட்டட் பிரஸ்சுக்கு அளித்த பேட்டியில் ஆஷ்பெரி, தன் பெயரை தான் வினைத்தொகையாக்குவதானால் அது, “மனிதர்களைச் சொல்லவொண்ணாதபடி குழப்புவது”, என்று பொருட்படும் என வேடிக்கையாய் குறிப்பிட்டார்.

வாழ்வே அவ்வாறு இருப்பதால்தான் ஓவிய மரபுகளைப் பின்பற்றாத அவரது படைப்புகளும் சீரில்லாமல் இருக்கின்றன என்று ஒரு முறை ஆஷ்பெரி லண்டன் டைம்ஸில் கூறினார்: “வாழ்வில் நேரடி அறிவிப்புகள் எதுவும் இருப்பதாய் நான் கண்டதில்லை. அறிவு அல்லது உணர்வு எனக்கு எவ்வாறு வருகிறதோ, அதைப் போல் அல்லது அதை நகல் செய்யும் வகையில் என் கவிதை உள்ளது- தட்டுத் தடுமாறி, திசையின்றி வளர்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையை கச்சிதமான வடிவங்களில் அமைக்கப்பட்ட கவிதைகள் பிரதிபலிக்காது என்று நினைக்கிறேன். என் கவிதை துண்டிக்கப்பட்ட தன்மை கொண்டது, ஆனால் வாழ்வும் அப்படிதான் இருக்கிறது”

வீக்எண்ட் எடிஷன் நிகழ்ச்சியை நடத்திய ஸ்காட் சைமனிடம் 2005ஆம் ஆண்டு ஒரு நேர்முகத்தில் அவர், கவிதை எழுதுவது என்பது சமூகத்தில் “ஒரு விளிம்புநிலைத் தொழில்” என்றார். பெருவாரி வாசகர்களால் அவரது படைப்புகளைப் புரிந்து கொள்ள முடிவதில்லை என்பதைத் தாம் கண்டிருப்பதாக விமரிசகர்கள் தன்னிடம் கூறியுள்ளனர் என்றும் அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டார், ஆனால் மானுட அனுபவம் தொடர்பான தனது கருப்பொருட்கள், ஐயம், தீர்மானமின்மை போன்றவை, பலரையும் முன்னிட்டுப் பேசுபவை.

“எத்தனை பேர் புரிந்து கொள்ள முடியுமோ அத்தனை பேருக்கும் அவை புரிந்தால் நன்றாகத்தான் இருக்கும்,” என்று அவர் சைமனிடம் கூறினார். “அவை அந்தரங்கமானவை அல்ல, அப்படி நான் சொல்ல மாட்டேன். அவை நம் அனைவரின் அந்தரங்கம் குறித்தவை, சிந்திப்பதும் முடிவெடுப்பதும் நமக்கு எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பது குறித்தவை. அப்படி பார்க்கும்போது அவை, யாருக்காவது புரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்குமானால், அவர்களுக்கெல்லாம் பிடிபடும் என்று நினைக்கிறேன்”

(This is an unauthorised translation of the article, ‘John Ashbery, Celebrated And Experimental Poet Of The 20th Century, Dies At 90’, by Emma Bowman, published at NPR. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.