ஆவரகம் – எச். முஜீப் ரஹ்மான்

எச். முஜீப் ரஹ்மான்

 

1

அரண்மனையின் ராஜதர்பாரில் ராஜபிரதானிகள் புடைசூழ்ந்திருக்க மன்னரும் பரிவாரங்களும் இருக்கையில் அமர்ந்திருக்க அமைச்சர் வியர்வை வழிய மினுமினுக்கிற முகத்தோடு பேசிக்கொண்டிருந்தார்.

”நம் நாட்டுக்கு பெருமை தேடித் தந்திருக்கிற தளபதியாரின் அருமை புதல்வன் யவனத்துக்கு சென்று அங்கு நடைபெற்ற வீரதீரசாகச விளையாட்டு போட்டிகளில் வென்றிருப்பது நமது நாட்டின் புகழை உயர்த்தியிருக்கிறது. மரத்தானில் நடைபெற்ற இந்த ஒலிம்பிக்ஸ் குறித்து இந்திய துணைக்கண்டத்தில் இருக்கிற எத்தனை நாடுகளுக்கு தெரியும். ஆனால் திருவாங்கூர் ராஜ்ஜியத்தின் சார்பாக கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்றுள்ள நமது சிங்கத்தை பாராட்டுவதை இந்த அவையில் நமது மன்னர் முன்னிலையில் செய்வது தான் சரியாகும். இந்த நாட்டின் சார்பாகவும் நமது மன்னர் சார்பாகவும் சகலகலாவல்லவன் பட்டத்தை வழங்குவதில் பெருமகிழ்ச்சிக் கொள்கிறேன்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருமே கரகோஷத்தை ஒலிக்க அமைச்சர் மீண்டும் தொடர்ந்தார்.

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லுவார்கள். நமது அஞ்சாசிங்கம் பிரதாபனுக்கு அவரது மனைவி வியஜதரணி இருப்பதை இங்கு சொல்லியாகவேண்டும். எனவே இந்த தங்க விருதை விஜயதரணி அவர்களே தமது புருஷனுக்கு வழங்குவது சால பொருத்தமாக இருக்கும்.

கரஒலி அதிர்ந்தது. அமைச்சரின் குரல் ஒலித்தது. மனுதர்மினி விஜயதரணி அவர்களை மன்னர் முன்பாக வரும்படி அன்புடம் அழைக்கிறோம். முன்வரிசையில் அமர்ந்திருந்த விஜயதரணி புன்முறுவலுடன் எழுந்தார். காண்போர் அனைவரையும் வியக்கவைக்கும் அழகுள்ள விஜயதரணி எழுந்து அவையோரை வணங்கி மன்னருக்கு முன்பாக வந்து மன்னரை வணங்கினார். பின்னர் மெல்லிய குரலில் அவையோரை பார்த்து பேச ஆரம்பித்தார்.

‘’பெரியோர்களின் ஆசியில் எங்களுக்கு விவாகம் நடந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த பாக்கியம்தான் அற்புதமான இந்த புருஷனை பெற்றது. அவர் எதை செய்தாலும் என்னிடம் ஆலோசனை கேட்டுதான் செய்வார். ஒலிம்பிக்ஸில் பங்கெடுப்பது குறித்து அவர் சிறிது தயக்கம் உடையவராகதான் இருந்தார். நான் அவருக்கு ஆலோசனைகளையும், ஊக்கத்தையும் அளிக்க அவர் அதற்கு தயாரானார். பயிற்சியின்போது குதிரையில் இருந்து விழுந்ததால் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. நான் மிகவும் அச்சமுற்றேன். ஆனால் தளராத அவரது நம்பிக்கையால் காயம் உடனே மாறிவிட்டது. உங்களை போன்ற பெரியோர்களின் ஆசி இருக்கும்வரை அவர் இன்னும் பல சாதனைகளை சாதிப்பார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. உங்களின் வாழ்த்துகளுடன் சகலகலாவல்லவன் என்ற இந்த பட்டத்தை வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.”

கரகோசம் பெரிதாக எழ அந்த தங்கப் பதக்கத்தை பிரதாபனின் கழுத்தில் மாலையாக சூட்டினார். எல்லோரும் எழும்பி நின்று பிரதாபன் வாழ்க வாழ்க என்று ஆர்ப்பரித்தனர். மன்னர் பிரதாபனை ஆரத்தழுவி கணையாழி ஒன்றை பரிசாக அளித்தார். கரகோசத்தின் நடுவே பிரதாபன் பேசத்துவங்கினான்.

அவையோருக்கு சிரம் பணிந்த வணக்கம். இங்கே பேசியவர்கள் எல்லோருமே நான் போட்டிகளில் சாதனை புரிந்துவிட்டதாக பேசினார்கள். என்னை பொறுத்தவரைக்கும் நான் என்னை ஒரு சிறுவனாகதான் உணருகிறேன். நான் சாதிக்கவேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளது. எனக்கு இந்த பட்டத்தை அளித்த என் சகதர்மினிக்கு நான் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். இந்த சபைக்கும், நமது நாட்டுக்கும், மாமன்னருக்கும் நான் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். என்னை பாராட்டி பேசிய அனைவருக்கும் நன்றி சொல்லி இன்னும் வரும் காலங்களில் இந்த நாட்டுக்கு சேவை செய்யவும் என்னை அர்ப்பணம் செய்வதாக இந்நேரத்தில் உங்கள் முன்பாக உறுதி கூறுகிறேன். மேலும்…””

கரகோசம் எழுந்து அடங்கிக் கொண்டிருந்த சமயம் விஜயதரணியின் முதுகுப் பக்கமாக அந்த குரல் கேட்டது..“அம்மா…”

திரும்பினார்.

அவருடைய தோழி அம்சவர்தினி குனிந்தவாக்கில் பவ்யமாய் நின்றிருந்தார்.

‘’என்ன…?”

தாங்களுக்கு ஒரு செய்தி..”

விஜயதரணி தோழியை கோபமாகப் பார்த்தார்.

“விழா நடந்து முடிகிறவரைக்கும் என்னை தொந்தரவு செய்யக்கூடாது என்று சொன்னேனா இல்லையா?..”

“அம்மா.. மிகவும் முக்கியமான செய்தி மாளிகை காவலன் செய்தி கொண்டு வந்திருக்கிறான்.”

விஜயதரணி திடுக்கிட்டார். என்ன செய்தி?

“யாரோ ஒரு வியாபாரி மாளிகைக்கு சென்று தாங்களை பார்க்கவேண்டும் என்று காவலனிடம் கேட்டிருக்கிறான். காவலன் எவ்வளவு முயன்றும் தாங்களிடம்தான் சொல்வதாக பிடிவாதம் பிடிக்க மாளிகையில் இருந்து வந்த வேலைக்காரி வியாபாரியிடம் பேசிப்பார்க்க அவளது காதில் ஒரு ரகசியம் சொல்லிவிட்டு போய்விட்டான். வேலைக்காரி என்னிடம் அந்த ரகசியத்தை சொன்னாள். இப்போது நான் அதை சொல்லவா?”

“சொல்லு..”

”நாளை குமாரகோவிலுக்கு தாங்கள் தனியாக செல்லவேண்டுமாம். அங்கே சந்திரிகா என்று ஒரு பெண்மணி உங்கள் பர்த்தாவை குறித்து ஒரு செய்தியை சொல்வதாக சொல்லி வியாபாரி போய்விட்டான்.”

“என்ன பர்த்தாவை குறித்தா?”

விஜயதரணி மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்தாள்.

பிரதாபனின் குரல் ஒலித்த்து.

ஆகவே.., இந்நாட்டின் மீது ஆணையாக எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்களை துவம்சம் செய்துவிடுவேன் என்று சொல்லிக்கொண்டிருக்க அனைவரும் கரஒலி எழுப்ப நினைவு திரும்பிய விஜயதரணியும் கரஒலி எழுப்பினார்.

வீரபிரதாபன் வாழ்க வாழ்க

2

அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுந்த விஜயதரணி குளித்து முடித்து கூந்தலை கற்பூர புகையிட்டு நறுமண தைலம் தடவி ஒப்பனை எல்லாம் முடிந்து சயன அறையில் நுழைந்தபோது படுக்கையில் கிடந்த பிரதாபன் போர்வையை விலக்கி, விஜயா, என்றழைத்தான்.

என்னங்க

என்ன எங்க கிளம்பிட்ட?

ஓ, அதுவா, குமாரகோவிலுக்கு முருகனை தரிசிக்கத்தான்..

விஜயா இன்று காலையில் எனது தாய்மாமன் வையாபுரி மதுரையில் இருந்து வருவது தெரியுமல்லவா?

என்னங்க அதை நான் மறப்பேனா.. நான் போய்விட்டு நாளிகைக்குள் வந்துவிடுவேன். நேற்றே சப்பரத்தை தயார் செய்யுமாறு சொல்லிவிட்டேன்.

விஜயா, என்று அழைத்தவாறு போர்வையை விலக்கிவிட்டு சயனத்தில் எழும்பி உட்கார்ந்தான் பிரதாபன்.

நேற்று தர்பாரில் வைத்தே உன்னை கவனித்துக் கொண்டிருந்தேன். என்ன ஆச்சு உனக்கு. ஏதோ பரபரப்புடன் இருப்பதை போன்று தோன்றுகிறதே.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை பிரபு..

என்கூட சரியா பேசல. தூக்கம் வருதுன்னு சொல்லிக்கிட்டு போய் படுத்த. என்ன விசயம் விஜயா?

என் தாய்மாமாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார்கள். அவ்வளவுதான்.

சரி இதற்காகதான் கவலைப்பட்டாயா? எல்லாம் சரியாக போகும்

சரி நான் கிளம்புகிறேன், என்று சொல்லிவிட்டு விஜயதரணி சப்பரத்துக்கு வந்து ஏறிக்கொண்டாள். சப்பரந்தூக்கிகள் நான்கு பேர் சப்பரத்தை தூக்க மெதுவாக அதிகாலையில் குமாரகோவிலை நோக்கி சப்பரம் அசைந்தவாறு சென்றது. வயல் வெளி ஏலாக்கள் தாண்டி வண்டித்தடம் சாலையை அடைந்து மேலாங்கோடு கோவில் கடந்து குமாரகோவில் வந்தபோது விடியலின் கீற்றுக்கள் மெல்ல தெறித்திருந்தன. கோவிலின் முகபிரகாரத்தில் தூக்கு விளக்குகள் ஒளியை சிந்தின. குமாரகோவில் குளத்தில் ஒளிக்கோடுகள் மெல்ல தண்ணீரில் அசைந்து ஊர்ந்து செல்லுவது போல் இருந்தது. குளத்தருகே சப்பரத்தை நிறுத்தி அதில் இருந்த படுதாவை விலக்கி வெளியே பார்த்தாள் விஜயதரணி. ஐந்தாறு பேர் குளக்கரையிலிருந்து கோவிலை நோக்கி நடந்து சென்றார்கள். அவர்கள் குளித்து முடித்திருந்தார்கள். அதிகமாக ஜனநடமாட்டம் வேறொன்றும் இல்லை. விஜயதரணி வெளியே இறங்கினாள். எதிர்பாராத வேளையில் ஒரு பெண்மணி அவளருகில் வந்தாள்.

நீங்கள் வீரப்பிரதாபனின் மனைவிதானே?

விஜயதரணிக்கு தூக்கிவாரிப் போட்டது.

நீங்கள் யார்..

நேற்று நடந்த வைபவத்தில் நானும் கலந்திருந்தேன். அதுதான் உங்களை கண்டதும் அறிமுகம் செய்யலாம் என்று வந்தேன்

விஜயதரணி நிம்மதியானாள். அப்படியானால் வியாபாரி சொல்லிச்சென்ற பெண் இவள் இல்லையா, அவள் யாராக இருக்கும் என்று கணநேரத்தில் யோசிக்கவும்..

உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி நான் வருகிறேன், என்று சொல்லிவிட்டு அந்த பெண் புறப்பட்டுப் போனாள்.

யாரந்த சந்திரிகா?அவளுக்கும் என் பர்த்தாவுக்கும் என்ன தொடர்பு? ஏன் அவரைப் பற்றி அவள் என்னிடம் சொல்ல வேண்டும் என்று பல்வேறு சிந்தனைகளை அலையவிட்டபோது விடிந்து விட்டது. கோவிலை சுற்றி ஜனக்கூட்டமும் வந்துவிட்டது.

கோவில் பக்கத்தில் இருந்த ஒரு வியாபாரியின் அருகே நின்றிருந்த நான்கைந்து பிராமணர்கள், சந்திரிகா, என்று சொல்வதை கேட்டு அவர்கள் அருகில் விஜயதரணி சென்றாள்.

நேக்குகூட சந்தேகமாத்தான் இருந்து? என்றார் ஒரு ஐயர்

ஆமா, சாயங்காலம் வரை நன்னா இருந்தவா இப்படி சட்டுன்னு போனா சந்தேகம் வராதா பின்னே

ஓய் சந்திரிகாவை யாரோ கொலைதான் செஞ்சிருக்கா

அது எப்படி ஓய் உமக்கு தெரியும்

எல்லா ஜெனமும் அப்படி சொல்லச்சே…, என்று இழுத்தார்.

சந்திரிகா கொலை செய்யப்பட்டாளா? இவர்கள் யாரை குறித்து பேசுகிறார்கள்? விஜயதரணி குழம்பினாள். எனினும் அவர்களிடம் இதைப்பற்றி கேட்க மனம் வரவில்லை. ஆனால் இதுவரை அவள் வரவில்லையே ஏன்? என்று யோசித்தவாறு சப்பரத்தில் ஏறி அமர்ந்தாள். சூரிய வெளிச்சம் காலையில் இதமாக பனியை விலக்கிக் கொண்டிருந்தது. நாழிகை கடந்துவிட்டது. இந்த பிராமணர்கள் சொன்னது சரதான். சந்திரிகா கொல்லப்பட்டிருக்கிறாள். இல்லை என்றால் இந்நேரம் அவள் என்னை சந்தித்திருப்பாள்தானே. சந்திரிகா யார்? அவள் என் கணவனைப் பற்றி என்ன ரகசியத்தை சொல்லப் போகிறாள் என்ற குழப்பத்துடனே சந்திரிகாவை எதிர்பார்த்து காத்திருந்தாள். அவள் வரவில்லை. பின்னர் அங்கிருந்து மாளிகைக்குச் சென்றாள். ஆனால் கேள்விகள் கேள்விகளாகவே இருக்கின்றன.

3

மேலைப்புலங்களில் இலக்கிய மானிடவியல் பெரிதும் வளர்ந்துவிட்ட ஒரு துறையாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. செவ்விலக்கியக் கருவூலத்தைக் கொண்ட தமிழ் மரபில் இலக்கிய மானிடவியல் வளர வேண்டிய ஒரு முக்கியமான கற்கைத் துறையாகும். இத்தகைய தன்மை கொண்ட எச்.முஜீப் ரஹ்மானின் ‘ஆவரகம்’ என்ற வரலாற்று நூல் ஒருவகையில் இனவரைவியல் எனலாம். இலக்கிய மானிடவியல்துறையில் தொல்குடிச் சமூகங்களையும் பண்பாடுகளையும் நுட்பமாக ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில் சங்க இலக்கியங்களிலிருந்து வெளிக்கொண்டு வரவேண்டிய  சமூகவியலும் பண்பாட்டுவியலும் நமக்குத் தேவையாகின்றன. இயற்கையோடு இயைந்த சமூகமாகச் சங்ககாலச் சமூகம் காணப்பட்டது. அதனைத் திணைச் சமூகம் என்றே கூறலாம். தமிழ்ப் பண்பாட்டின் நீண்ட நெடிய தொன்மையையும் தொடர்ச்சியையும் சான்றுரைக்கும் வகையில் 5000 வருடங்களுக்கு முன்பே உருவானவை சங்க இலக்கியங்கள். தொல்லியல் அகழாய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகளுக்கு அப்பால் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களால் எமதாக்கப்பட்ட பண்பாட்டுத்தரவு மூலங்களாகவே சங்க இலக்கியங்கள் உள்ளன என்பது மானிடவியல் நோக்கிலான கருத்தாகும்; சங்ககாலப் பன்மியச் சமூகக் கட்டமைப்பினையும் சமூகப் பண்பாட்டுக் கூறுகளையும் ஒருசேர அறிந்து கொள்ள இவ்விலக்கியப்பரப்பு பெரிதும் துணை புரிகின்றது.  நாயர்கள் தொடர்பான குறிப்புகளும் அவர்களுடைய வாழ்வியல் பதிவுகளும் இனவரைவியல் விவரிப்புக்கு உட்பட்டுள்ளன. இலக்கிய மானிடவியல் புலம் தமிழில் உருவாக்கம் பெற்றுள்ளது என்பதற்குச் சான்றாக இந்நூல் விளங்குகின்றது. அறிஞர் கைலாசபதியின் தமிழ் வீரநிலைக் கவிதைத் தமிழ் மரபினை கிரேக்கம் வேல்ஸ், ஐரிஷ் உள்ளிட்ட மேலை மரபுகளோடு ஒப்பிட்டுக் காட்டுகிறது. இதன் தொடர்ச்சியாக நூலாசிரியர் பக்தவத்சல பாரதி அவர்கள் தமிழ் மரபைத் தமிழகத்துக்கு அருகாமையில் உள்ள தென்னிந்திய நாடோடி மரபோடும், அதற்கடுத்து வட இந்திய நாடோடி மரபோடும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.ஆய்வாளர் டி.தர்மராஜ் சொல்வது போல தனது சமூகத்தையே எழுதுவது என்ற பழக்கம் கொள்கையாகவே பேசப்பட்டது,  வட்டார இலக்கியங்களின் வருகைக்குப் பின்னரே. வட்டார இலக்கியங்களின் வருகையும், பிற்படுத்தப்பட்ட சாதிலிருந்து படைப்பிலக்கியவாதிகள் உருவாவதும் ஒரே தருணத்தில் நடைபெறுகிறது. பட்டியலின சாதிகளைப் போல தாமதமாகவே இலக்கியவுலகினுள் அடியெடுத்து வைக்கிற பிற்படுத்தப்பட்ட சாதிகள் தங்களைப் பற்றிய பதிவுகள் எதுவும் நவீன எழுத்தில் இல்லையென்று கண்டதும்,பட்டியலின மக்களைப் போல் அதனைப் போராட்டமாக அல்லது கோஷமாக மாற்றியிருக்கவில்லை. ஆனால், தங்களைப் பற்றிய பதிவுகளையும் இலக்கியத்தினுள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இந்த வகை எழுத்துகளை‘வட்டார இலக்கியம்’ என்றும் பெயரிட்டுக் கொண்டனர். ஏறக்குறைய இதே காலகட்டத்தில், தமிழ்த் திரைப்படவுலகினுள்ளும் படையெடுக்கிற பிற்படுத்தப்பட்ட சாதிகள் கிராமங்களை நோக்கி தமிழ்த்திரைப்படக் கதையாடலை நகர்த்தியதையும் யோசித்துப் பாருங்கள். 1960கள் என்று சொல்லப்படும் காலகட்டம் பிற்படுத்தப்பட்ட  சாதிகளின் காலமாகவே தமிழகத்தில் கணிக்கப்பட வேண்டும். அரசியல்அதிகாரத்தைக் கைப்பற்றுதல், வெகுஜன ஊடகங்களில் ஊடுறுவுதல், நவீன இலக்கியப் பிரதிகளை ஆக்கிரமித்தல் என்று சகல தளங்களிலும் அவர்களின் இருப்பை உணர முடியும். தத்தம் சமூகத்தை எழுதிக்கொள்ளும் போக்கு வட்டார இலக்கியத்தின் அறிமுகத்தோடே நடைபெறுகிறது என்றால், அதற்கு முன்பு செய்யப்பட்ட இலக்கியங்கள் இந்த குணத்தைக் கொண்டிருக்கவில்லையா, அவையும் அவரவர் அவரவர் சாதியை எழுதிக் கொண்ட பிரதிகள்தானே என்ற கேள்வி எழலாம். நான் ஏற்கனவே சொன்னது போல் நவீனத் தமிழ் இலக்கியம் அப்படித்தான் என்றைக்குமே இருந்தது. அவரவர், அவரவர் சாதியை எழுதிக் கொள்வது என்பதுதான் வழக்கமாக இருந்தது. அவற்றை மீறி ஏதாவது செய்யப்பட்டிருந்தால் அவையெல்லாம் பிரச்சாரகுணம் கொண்டவை, இலக்கியத் தரமற்றவை என்றுசொல்லப்பட்டிருந்தன. இன்று தமிழகத்தில் காணப்படும் குடிப்பிள்ளைகள்  என்னும் மரபு பண்டையமரபின் நேர் தொடர்ச்சியாக அமைவதையும் காட்டுகிறார்.  இன்றைய நிலை பற்றி சமூகப்படி மலர்ச்சியை  மானிடவியல் நோக்கில் மிகத் தெளிவாகப் பொருத்தமாக விளக்குகிறார். நீண்டதொரு சமூகப் படிமலர்ச்சிச் சூழலில் எத்தகைய மாற்றங்களோடு உருமாறிப் புதிய திரிபு வடிவங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதனைச் சமூகப் பண்பாட்டுப் படிமலர்ச்சி, இனவரைவியல், இனவரலாற்று அணுகுமுறைகளின் அடிப்படையில் இந்த வரலாறு பல்துறை இணைநோக்கின் அணுகுமுறைகளின் தேவை தமிழிலக்கியச் சூழலில் உணரப்பட்டு வருகின்ற சமகாலத்தில் தமிழுக்கு இந்நூல் ஒரு புதிய வரவு. இந் நூலின் பயன் என்பது தனியே நாயர்களின் வாழ்வியலை விளங்கிக் கொள்வது மட்டுமல்ல, ஆதிக்க சமூகங்கள் பற்றியும் அவற்றின் தொடர்ச்சியான இன்றைய சாதிய, பழங்குடிச்  சமூகங்கள் பற்றியும்  மானிடவியல் நோக்கில் புரிந்துகொள்வதற்கான புதிய அணுகுமுறையையும் தந்துள்ளது. த லித்துகளின் வாழ்க்கையை அப்படியப்படியே எழுத்தில் வடிக்கிறேன் என்ற பெயரில் பயன்பாட்டிலிருக்கும்  அத்தனை வசைச்  சொற்களையும்  சர்வ சாதாரணமாய்  பயன்படுத்தி தலித்  இலக்கியங்கள் செய்யப்பட்டன. வசைகளை அச்செழுத்தில் பார்க்கிற அதிர்ச்சியை இதனால் தமிழ்கூறு நல்லுலகம் பெற்றது  என்றாலும், இதற்கான காப்புரிமையும்கூட சிற்றிதழ் வட்டார கலகக்கார எழுத்தாளர்களிடம் இருப்பது நாட்சென்றே தெரியவந்தது. இப்படியாக, தமிழ்  இலக்கியம்  தனக்கான கதை சொல்முறையையும், எழுத்து முறையையும் தேடித் திரிந்த பயணம் ஏராளமான முட்டுச்சந்துகளை உடையது. இனவரைவியல் எழுத்து முறையும், பேச்சு வழக்கில் கதை சொல்லும் முறையும் ஏதோ தனித்தனியான இரண்டு கதையாடல் வகைகள்  போலத் தோன்றினாலும், உண்மையில் இரண்டும் ஒரே விதமான நோக்கங்களை உடையவை. இந்நூலில் பாடுபொருள் வரவேற்புக்குரியதாகும். அதனை இன்றைய இதனைப் பயன்படுத்தி மேலும் பல ஆய்வு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளும்போது இந்நூலின் பயன் தவிர்க்க இயலாது சமூக அறிவியல்களில் துறைதோறும் புதுப்புது கற்கை நெறிகளுடன் ஆராய வேண்டியுள்ளது. வரை இணைத்து ஒரு முழுதளாவிய  பார்வையுடன் நோக்கியிருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். மானிடவியல் அறிவும், தமிழர் பண்பாடு தொடர்பான ஆழ்ந்த புலமையும், அதிகமான தமிழ் இலக்கிய வாசிப்புகளும், நுண்நிலையான புரிதலும், தேடலும்  இந்நூலின் பின்புலமாக  அமைகின்றன.

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.