தந்நலா
தெய்வமா இவன்
கடவுளே
இவன் ஆடும் தாண்டவத்தைக் கண்டு
கண்டது படிக்கும் நான்
பொறுக்கமாட்டாமல்
எரிந்து விழுகிறேன்
சாம்பலாய் விழுந்ததும்
மூன்று நாழிகைகளில் போதும்
போதும் விட்டால் போதுமென்று
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுந்தும் விடுகிறேன்
எரிந்து விழும் என்னை
பெருக்கியெடுத்து இவள் ஏன் ஒருபோதும்
குப்பைக்கூடையில் இடுவதில்லை
இட்டால் எப்படி உயிர்த்தெழுவதாம்
பைபிள் படிக்கும் இவள்
இவனது தாண்டவத்தைக் கண்டு
எரிந்து விழுகையில்
இவளது சாம்பலை
நான் பெருக்கியெடுத்து விட்டால்
மூன்று நாழிகைகளில்
எப்படி உயிர்த்தெழுவாளாம்
மீண்டும் மீண்டும் எப்படி
எரிந்து விழுவாளாம்
அப்படி சற்று தள்ளி நின்று
ஆட்டம் போடுங்கள் நடராசரே
அனைத்தையும் இயக்குபவள் தந்நலம்
எனில் என்னுள்ளும் அவளுண்டு
எச்சமாய் ஆட்டிவைக்கும்
ஊக்குவிக்கும் இச்சையாய்
பன்மையா குழந்தைமை
குழந்தையா இவன்
கடவுளே
இவன் எடுக்கும் அவதாரங்களை
சொல்லிமாளாது
ஆனாலொன்று இருவரும்
ஒரே சமயத்தில் எரிந்து
விழுந்துவிடாமல் கவனமாய்
இருந்துகொள்ளவேண்டும்
செயல் பிசிறினாலும்
பெருக்கியெடுக்கத் தயங்காக் குழந்தைக்கு
நடராசாத்தி இயக்கி குறித்த
இயலுணர்வு இருப்பினும்
பெருக்கியெடுப்பது குறித்து
என்ன தெரியப்போகிறது
oOo
பெரியவரின் சொர்க்கம்
கனவுகளை நனவாக்க
இயன்றோர்
தங்கள் மென்கனவுகளை
கடுங்கனவுகளாக்குகின்றனர்
கற்காலத்தில்
மென்னுடலைச் சாடியோர்
பிற்காலத்தில்
மின்னுடலைப் பாடுகின்றனர்
இல்லாததைத் தேடுவோர்
இல்லாததைத் தேடி
தேவையில்லாததைக்
கண்டடைகின்றனர்
வனவெளியில்
திரிந்துறங்கியோர்
விண்வெளியில்
கண்விழித்திருக்கின்றனர்
கனவுகளை நனவாக்க
இயலாதோர்
தங்கள் ராக்கனவுகளை
பகற்கனவுகளாக்குகின்றனர்
இதெல்லாமிருக்கட்டும்
பெரியவரொருவர் இருந்தார்
அவர் யெகோவாவின் சாட்சிகள்
கட்சிக்குத் தாவி சொர்க்கம் சென்றார்
சொர்க்கம் சென்றவர் செவத்த யெகோவாவைத்
தேடி கருத்த கிறிஸ்துவைக் கண்டார்
கிறிஸ்துவைக் கண்டவர்
சற்று தயங்கி நின்றார்
தயங்கி நின்றவரை கிறிஸ்து
அதோ அங்கே பாருங்களென்றார்
அங்கு சீலையைப் பார்த்து
பூரிப்படைந்தவர் அருகில் சென்று
கண்ணிமைத்து இதுவா யெகோவா
யெகோவியாக இருக்கும் என்கின்றார்