தடயம் – ஜே. பிரோஸ்கான் கவிதை

ஜே. பிரோஸ்கான்

வனாந்தரத்தின் தனிமையை அடைந்திருந்தாய்
அப்போது
யௌவனத்தின் உயர் வெப்ப நிலையில்
கணங்கள் நொடிந்தன.
படுக்கையில் தனிமை பெரும் கொடுமை.
ஆசை வேகமாக வெடிக்கிறது
பூக்களின் வெடிப்பில் மகரந்தம்
வெளியேறுவது போல்.
தாபத்தின் மோனநிலை
பருவத்துக்குள் குலைந்து
நாலா புறமும் சிதறி பரவுகிறது.
மோகத்தின் போதையில் நீ
பெரும் தூரத்தைக் கடக்க நினைத்து
பிசாசுகளின் இரவு நிலையில்
நடந்து சேருகிறாய்.
பெரும் பாவத்தின் தடயத்தை
விட்டு விட்டு
மீண்டும் திரும்புகிறாய்.
மனசு பட்ட குதூகலத்தின் பிரமிப்பில்
துவண்டு படுத்துறங்கி விழிக்கிறாய்
உனது அறைக்கு வெளியே காத்திருக்கிறார்கள்,
உன் பாவத்தின் தடயத்தில்
நடந்து வந்தவர்கள்.

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.