​எதிரீடு – கா.சிவா கவிதை

ஒவ்வொரு தடவையும்
விலகிட துடிப்பதற்கு​​
முந்தைய கணம்
ஒருதுளி சொட்டியிருக்கும் …

அவள் மீதான பிரியம்
மிளிர்கரு வண்ணத்
தேன் துளியாய்
சேகரமாகும் கண்ணாடிக் குடுவையினுள்

இன்னுமொரு துளி விழும்போது
தோன்றுகிறது
இனந்தெரியா வெறுப்பு

பிறிதொருமுறை சொட்டும்போது
எழுகிறது பெருஞ்சினம்

குதிக்கும் பெருவிழைவை
எழுப்பியபடி பெருகும்
கடுவிடத் துளிகளை
பதைப்புடன் நோக்கியபடி
அமர்ந்திருக்கிறது ..
ஈரக்காற்றிற்கே உதிர்ந்திடும்
மென் சிறகை
மெல்ல விசிறியபடி
என்னுள் அமைந்த வண்ணத்துப்பூச்சி…

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.