தூரத்திலேயே காவல் நிலையம் முன்பு கூட்டம் சூழ்ந்திருப்பது தெரிந்தது . கூட்டத்தினை கண்டவுடன் சட்டென உள்ளத்தில் பற்றி கொண்ட பதட்டம் காரணமாக 100 அடி முன்பாகவே சாலையின் ஓரத்தில் பைக்கை நிறுத்தி காவல் நிலையம் நோக்கி நடந்து சென்றேன் , அதிகமும் இளைஞர்களும் நடுவயது ஆட்களுமாக இருந்தனர் , பரபரப்பாக மாறிமாறி பேசிக்கொண்டிருந்தவர்கள் நான் வரும்போது பேச்சை விடுத்தது என்னை நோக்கினர் , நான் பதட்டம் காரணமாக யார் முகத்தையும் நோக்காமல் வேகமாக ஸ்டேஷன் வாசல் நோக்கி நடந்தேன் . கூட்டத்திலிருந்து ஒரு குரல் ‘பொண்ணு சைடு ஆள் போல ” என்று பேச ஆரம்பித்தது காதில் விழுந்தது , கூடவே அதனை தொடர்ந்து இன்னொரு குரல் ” எவனா இருந்தா என்ன ” என்றது , நான் எதையும் உள் வாங்காதவனை பாவனையுடன் காவல் நிலைய வாசல் நோக்கி உள்ளே நுழைந்தேன் .வாசலை அடைந்ததும் மனம் உடனடியாக கண்கள் வழியாக உள்ளே துழாவியது , உள்ளே ஒரு இளைஞனின் பின்பக்கம் ஒட்டிக்கொண்ட படி நின்றிருந்த அவள் நின்று கொண்டிருந்தாள் . அவள் சரியாக அந்நேரம் பார்த்து எதேச்சையாக வாசலை நோக்கியவள் என்னை பார்த்ததும் சட்டெனெ குழிக்குள் பதுங்கும் எலி போல தலை கவிழ்த்து கொண்டாள் .
பிறகுமற்றவர்களை கவனித்தேன் , வரவேற்பு அறைக்கு நேராக உள்ளே இருந்த ஒரு அறைக்குள் இன்ஸ்பெக்டர் எதிரில் ஈஸ்வர் சாரும் அவர் மனைவியும் அமர்ந்திருக்க அவர்கள் அருகில் முகுந்தன் நின்றிருந்தான் , நான் நேராக போய் அவன் அருகில் நின்று கொண்டேன் , பின் மனம் துறுதுறுத்து மீண்டும் திரும்பி அவளை நோக்கினேன் ,அவள் முகம் திரும்ப மேலெழவே இல்லை , ஆனால் உடன் இருந்த இளைஞன் கடுகடுக்கும் முகத்துடன் என்னையே நோக்கி கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தேன் , அவன் முகத்தில் சற்றும் பதட்டமில்லைலை ,மாறாக தெனாவட்டான முகபாவனைத்தான் இருந்தது , அதைப்போலவே அவன் அருகிலிருந்த இன்னொரு நடுவயது ஆளிடமும் அதே போன்று சாதரண விஷயம் ஒன்றை அணுகுவதை போன்ற முகபாவனையே இருந்தது . அவர்களை விடுத்து திரும்பவும் அவளை மட்டும் மீண்டும் கவனித்தேன் , மிக சாதரணதொரு சேலை உடுத்தியிருந்தாள் , சரியாக சீவ படாத தலை , தூக்கம் இல்லாத கண்கள் , பாதி தூக்கத்தில் எழுந்து வந்து நிற்பவள் போலவோ அல்லது ஒரு பேய் படம் பார்த்து வந்தவள் போலவோ இருந்தாள் . இந்த சூழல் அல்லாது வேறு எங்காவது இந்த கோலத்தில் அவளை பார்த்திருந்தால் வேறொரு பெண் என்றே எண்ணியிருப்பேன் , மனம் சோர்ந்து அவளை பார்ப்பதை தவிர்க்க எண்ணி மனதை வலுக்கட்டாயமாக திருப்பி இன்ஸ்பெக்டரின் பேச்சினுள் கவனத்தை கொண்டு சென்றேன் .
ஈஸ்வர் சார் எனக்கு அறிமுகமானது முகுந்தன் வழியாக , நாங்கள் நண்பர்கள் பொதுவாக கூடி பேசும் இடங்கள் என்பது இங்குள்ள பேக்கரிக்கள்தான் ,ஒவ்வொரு பகுதிக்கும் அங்கிருக்கும் பேக்கரிகளில்தான் கூடுவோம் ,முகுந்தன் வேலை செய்யும் இடமருகில் இருக்கும் அருணா பேக்கரியில் தான் ஈஸ்வர் சாரை முதலில் சந்தித்தேன் ,அப்போது முகுந்தனோடு வந்தார் ,அவனது உயர் அதிகாரி இவர் ,பிறகான அடுத்தடுத்த சந்திப்புகளில் என் நெருங்கிய நண்பராகவும் மாறினார் , ஈஸ்வர் சாரின் சொந்தவூர் தஞ்சை பக்கம் ,நிறைய விவசாய நிலம் என வசதியான குடும்ப பின்னணி கொண்டிருந்தவர் காதல் திருமணம் காரணமாக அதையெல்லாம் இல்லாமலாகி கோவையில் வந்து சேர்ந்தவர் , இங்கு இவருக்கு சொந்தங்கள் என ஏதும் இல்லை , நண்பர்களும் குறைவு . ஈஸ்வர் சார் வயதானவர் என்றாலும் பேச்சில் அது தெரியாது , பேச்சில் எதிர்மறை அம்சமே இருக்காது , அது காரணமாக என் கனவுகளை எல்லாம் அவரிடம்தான் பகிர்வேன் , என்னை பற்றி என்னை விட அவர்தான் அதிகம் நம்பிக்கை கொண்டிருந்தார் .எனக்கு அவரை பிடிக்க இன்னொரு காரணம் அவரது தோற்றம் , எப்போதும் சீவிய தலை ,இன் செய்த உடை என இருப்பார் ,மேலும் அவரிடம் இருந்த நிதான இயல்பு எனக்கு மிகவும் பிடிக்கும் , குடிநிகழ்வுகளில் அவ்வளவு போதையிலும் பையனிடம் பில் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபார்த்த பின்புதான் கணக்கை முடிப்பார் . இவரது ஒரு குடும்ப விழாவிற்கு சென்ற போதுதான் இவருக்கு இப்படியான ஒரு அழகான இளம்பெண் இருப்பது தெரிந்தது , ஒரே ஒரு மகள்தான் , அதனாலேயே உருவான தனி கவனம் அவரில் எப்போதும் இருந்தது , அன்று எனக்கு அவளை அவர் அறிமுகபடுத்தும் பொழுது அவள் ” அங்கிள் ,அப்பாவை கொஞ்சம் செலவு பண்ண சொல்லுங்க ” என்று சிரித்துகொண்டே தந்தையை வாரி பேச துவங்கினாள் ,அப்போது அவளில் புது நபர் என்ற கூச்சமோ தயக்கமோ சிறிதும் இருக்க வில்லை , பேசிக்கொண்டே இருந்தாள் , அவளில் ஆடை உட்பட எல்லாமே மின்னியது ,அருகிலிருந்த முகுந்தன் அவளை வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டே இருந்தான் , என் கவனமும் அவள் பேச்சில் மட்டும் இருக்க படாதுபட்டது . அதன் பிறகான ஈஸ்வர் சாரை சந்திக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் அவளின் நலம் நான் விசாரிப்பேன் . அவருக்கு அவளின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்ற கனவு சர்வகாலமும் உடனிருந்துகொண்டே இருந்தது , அதை பற்றி பேச ஆரம்பித்ததுமே மனிதர் உற்சாகமாகி விடுவார் .
இன்ஸ்பெக்டர் ஈஸ்வர் சாரிடம் ” கல்யாணம் பண்ணிட்டாங்க ,பொண்ணு மேஜர் , எங்களால இனி ஒன்னும் பண்ண முடியாது ” என்று வருத்தம் தொனிக்கும் குரலில் கூறினார் , நான் உடனே கொஞ்சம் நகர்ந்து அறைவிட்டு வெளியே சென்று தனியான இடத்தில் நின்று அலைபேசியில் சாரதி அண்ணனை அழைத்து விஷயம் கூறினேன் ,கேட்டுக்கொண்டிருந்தவர் பிறகு அலைபேசியை இன்ஸ்பெக்டரிடம் கொடுக்குமாறு கூறினார் , பின்பு அந்த அறைக்குள் சென்று அலைபேசி கொடுத்த போது நிமிர்ந்து பார்த்த அவர் பின் ஏதும் சொல்லாமல் போன் வாங்கி பேசினார் , அதன்பிறகு அலைபேசியை என்னிடம் கொடுத்து ”அவர் உனக்கு யாரு” என்றார் ,நான் குரலை தாழ்த்தி “ரொம்ப வேண்டியவரு” என்றேன் . சிறுது நேரம் மவுனமாக இருந்தவர் பிறகு ” ஒன்னு வேணும்னா பண்ணலாம் ,பொண்ணுட்ட பேசி பாருங்க ,அவங்க உங்க கூட வரதா சொன்னா ,உங்க கூட அனுப்பிடறேன் ” ,”ஆனா அந்த பொண்ணு மறுத்தா ஒன்னும் பண்ண முடியாது “என்றார் .அப்போது அறைக்கு வாசலுக்கு அருகில் நின்றிருந்த அந்த இளைஞன் கூட வந்திருந்த நடுவயது ஆள் ” அதுதான் கல்யாணம் பண்ணிட்டாங்களே ,அப்பறம் என்ன புள்ளையை அனுப்பறது ” என்றார் . இன்ஸ்பெக்டர் சட்டென எகிறி “இது போலீஸ் ஸ்டேஷன் ,உங்க வீடு இல்ல ” என்றார் . பின் அந்த பெண்ணை அழைத்து “இங்க வந்து உட்காருமா” என்றார் ,பிறகு அந்த இளைஞனையும் நடுவயது ஆளையும் “வெளிய போய் நில்லுங்க” என்றார் . நடுவயது ஆள் ” பொண்ணை நீங்க மிரட்டுவீங்க ” என்றார் ,இன்ஸ்பெக்டர் பதிலுக்கு “உங்களை வெளிய போய் நிக்க சொன்னேன் ” என்றார் குரல் உயர்த்தி . பின்பு அவர்கள் வெளியேறியதும் வெளியே நின்றிருந்த கூட்டத்தில் இருந்து வாக்குவாத சத்தங்கள் அதிகரித்து உள்ளே வரைக்கும் கேட்டது . இன்ஸ்பெக்டர்எங்களிடம் “நீங்க பொண்ணுகிட்ட பேசுங்க “என்று சொல்லி அறைவிட்டு வெளியே நகர்ந்தார் .
அவள் இன்ஸ்பெக்டர் சொன்ன இருக்கையில்மெதுவாக அமர்ந்தாள் , தலை மேலெலெவே இல்லை ,அழும் ஒலி மட்டும் சன்னமாக கேட்டது ,அருகில் இருந்த ஈஸ்வர் சார் எதிரில் இருந்த சுவரை நோக்கி கண்கள் வெறித்தபடி அமர்ந்திருந்தார் ,அவரது அருகில் அவர் மனைவி ,அப்போதுதான் உரைத்தது அவர் மனைவியும் அவர் பெண்ணும் கிட்டத்தட்ட ஒருபோலவே இருப்பது ,அதே உடல்வாகு ,அதே போலவே அமர்ந்திருந்தது ,அதைப்போலவே தலைகவிழ்ந்து அழுவது என ,அதை உணர்ந்ததும் சட்டென என்னை மீறி என் முகத்தில் லேசான சிரிப்பு வந்து போனது . மூவருமே ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தனர் , முகுந்தன் ஈஸ்வர் சாரிடம் ” சார் ஏதாவது பொண்ணுட்ட பேசுங்க சார் “என்றான் . அப்போது ஏதோ யோசித்து கொண்டிருந்தவர் போல தோன்றியவர் சட்டெனெ எழுந்து வெளியே வேகமாக நடந்து போனார் ,முகுந்தன் ” சார் கொஞ்சம் பொறுமையா இருங்க “என்று சொல்லியபடியே பின்னால் சென்றான் ,இப்போது இந்த அறைக்குள் இந்த இருபெண்கள் அருகில் நான் மட்டும் நின்றிருந்தேன் , எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை ,பின் தயக்கத்தை உடைத்துகொண்டு ஈஸ்வர் சார் அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்தேன் , மெல்ல “ஸ்வேதா” என்று அந்த பெண்ணை அழைத்தேன் , அவள் பதில் ஏதும் சொல்லாமல் அப்படியே துளி அசைவும் கூட இல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் . அவளது அசைவின்மை எரிச்சலை உண்டுபண்ணியது ,உள்ளுக்குள்” கள்ளி “என்று எண்ணம் வந்து போனது ,பின்பு பொறுமையை வரவழைத்து கொண்டு ” இங்க பாருமா ,உன்னை அந்த பையனை விட்டுடு னெல்லாம் நான் சொல்ல வரல ,ஆனா இப்ப அம்மா அப்பா கூட போ ,பிறகு பேசி க்ராண்டா கல்யாணம் வச்சுக்க்கலாம் ,இப்போதைக்கு வெளிய தெரிய வேணாம் , உனக்கே தெரியும் அப்பா அம்மா க்கு நீ மட்டும்தான் எல்லாம் , நீ இப்ப வரலைனா அப்பறம் இவங்க என்ன செய்வாங்க னு எனக்கே பயமா இருக்கு , அப்பறம் இல்லாத பிறகு ஏங்கி ஒன்னும் செய்ய முடியாது ” என்றேன் . அவள் அதற்கும் பதிலேதும் சொல்ல வில்லை ,ஆனால் அவளில் அழகை சத்தம் இப்போது அதிகமானது . திரும்பவும் ” என்ன சொல்ற ” என்றேன் , அவள் பேசவே இல்லை, எனக்கு எரிச்சலாக இருந்தது . சிலக்கணம் ஒன்றும் சொல்லாமல் இருந்தேன் ,பிறகு ” என்ன முடிவெடுத்தாலும் அம்மா அப்பாவை ஒரு முறை நினைச்சு பார்த்து முடிவெடு ,அவ்வளவுதான் சொல்ல முடியும் ” என்றேன் . பின் எனக்கு சட்டெனெ ஓர் எண்ணம் தோன்ற ” பையன் சைடு ல இருந்து மிரட்டினாங்களா ,இல்ல வேறு ஏதாவது விஷயத்தில் மாட்டியிருக்கியா ,பயப்படாம சொல்லு நான் பார்த்துக்கறேன் ” என்றேன் ,நான் சொல்லி முடிப்பதற்குள் இல்லை என்பது போல தலையசைத்தாள் , பிறகு நான் கொஞ்சம் கோபமாக “எதுக்கு இப்படி திருட்டு கல்யாணம் ,அப்பாட்ட சொல்லி சம்மதிக்க வச்சு பண்ணியிருக்கலாமல ” என்றேன் , “அப்பா ஒத்துக்க மாட்டாரு ” என்று அழுகைக்கிடையே சொன்னாள் ,அவள் பேச ஆரம்பித்த போது அவள் மனதை மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை என் மனதுள் வந்தது , ,அந்த உற்சாகத்தை காட்டி கொள்ளாமல் பொறுமையாக ” இப்ப ஒன்னும் சிக்கல் இல்லை ,நான் பேசி அப்பாவை சம்மதிக்க வைக்கிறேன் ,நீ இப்போதைக்கு எங்க கூட வந்துடு ,மறுபடியும் சேர்த்து வைப்பது என் பொறுப்பு ” என்றேன் ,அப்படி சொல்லும் போதே மனதினுள் பெண்ணினை வேறு ஊர் மாற்றி கொண்டு சென்று விட வேண்டும் என்று எண்ணி கொண்டேன் . அவள் மனம் அசைவது போல தோன்றியது . பின் கடைசி சொல்லாக ” உங்க அம்மாவை அழ வைக்காத ,அவ்வளவுதான் சொல்ல முடியும்” என்றேன் ,அப்போது நான் சொல்லி முடிப்பதற்குள் அந்த இளைஞனும் அவனோடு இருந்த நடுவயது ஆளும் உள்ளே வந்தனர் , அவன் நேராக உள்ளே வந்து அவள் தலை மீது கைவைத்து ” என்ன மிரட்டினாங்களா ” என்றான் ,என்னை முறைத்து பார்த்தான் ,நான் அவனது பார்வை தவிர்த்தேன் , அவன் என்னை நோக்கி எதோ சொல்ல வந்தவன் பின்பு ஒன்றும் சொல்லாமல் நின்றான் , அவன் உடல் லேசாக நடுக்கம் கொண்டிருந்தது , நன்றாக குடிப்பவன் போல தெரிந்தான் . அப்போது இன்ஸ்பெக்டர் உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்தார் ,என்னை பார்த்து” பொண்ணோட அப்பா எங்கே “என்றார் ,நான் பதிலேதும் சொல்லாமல் அவரை பார்த்தேன் , அவருக்கு எப்படியும் 50 வயது இருக்கும் ,இது போல நிறைய பார்த்திருப்பார் என்று எண்ணி கொண்டேன் . அவர் என்ன பேசுவது என்பதில் தெளிவாக இருந்தது தெரிந்து , தெளிவான குரலில் அவளை நோக்கி ” இங்க பாருமா ,உனக்கு யார் கூட போக விருப்பமோ அவங்க கூட போலாம் ,உன் முடிவுதான் ,எதையும் யோசிச்சு முடிவு பண்ணிக்கோ ” என்று சொல்லி எங்களையும் அந்த இளைஞனையும் வரவேற்பு அறையில் இருந்த பெஞ்சில் போய் அமருமாறு சொன்னார் , இளைஞன் நகராமல் அதே இடத்தில நின்றிருந்தான் ,” அங்க போ னு சொன்னேன் ” என்று மிரட்டல் தொனியில் சொன்னார் , நாங்கள் அதற்குள்ளாக நகர்ந்து விட்டிருந்தோம் , அப்போதுதான் உரைத்தது அவள் அம்மா ஒன்றுமே பேசவே வில்லை என்பது , சிலை போல அமர்ந்திருந்தவர் இன்ஸ்பெக்டர் சொன்னதுமே எழுந்து போய் அதே விதத்தில் பெஞ்சில் அமர்ந்து கொண்டார் ,
இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணிடம் அவள் மட்டும் கேட்கும் அளவிற்கு ” உன்னை யாரும் மிரட்ட முடியாது ,நான் இருக்கேன் , உனக்கு எது சரினு படுதோ ,அதை செய் , உன் அப்பா எல்லாம் பாவப்பட்ட ஆளா தெரியறாரு , எதையும் யோசி , அப்பா அம்மா கூட போறதுதான் எனக்கு நல்லதுன்னு தோணுது , ஆனா உன் விருப்பம்தான் ,நீ முடிவு பண்ணிக்க என்கிறார் ”
சில கணங்கள் அவள் எதுவும் பதில் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் , பிறகு திரும்பவும் இன்ஸ்பெக்டர் கேட்க அவள் ” நான் அவர் கூடயே போறேன் சார் “என்றாள் .சில கணங்கள் மவுனமாக இருந்த இன்ஸ்பெக்டர் பின் எழுந்து எங்கள் பக்கம் வந்து ” பொண்ணு பையன் கூடயே போறேன் னு சொல்றா ,விட்டுடுங்க ” என்றார் , அவள் அம்மா அப்போதும் அதைப்போலவே தலைகவிழ்ந்துதான் இருந்தாள் ,அவளிடம் “பொண்ணுட்ட திரும்பவும் ஏதாவது பேசி பாக்கறீங்களா “‘என்றேன், அவளிடம் என் வார்த்தைகள் உள்ளே செல்லவே இல்லை என்று தோன்றியது . நான் பெண்ணின் முடிவை யூகித்திருந்தேன் என்றாலும் எங்களோடு வருவாள் என்ற சிறு நம்பிக்கை இருந்தது ,இப்போது கடும் ஏமாற்றம் மனதில் தோன்றியது , பெண் எங்களை நோக்கி சற்றும் திரும்பாமல் அவன் அருகில் போய் பழையபடி ஒட்டிக்கொண்டு நின்று தலை கவிழ்ந்து கொண்டாள் .
இன்ஸ்பெக்டர் என்னிடம் திரும்பவும் ” விட்டுடுங்க ,அவ்வளவுதான் ” என்று சொல்லி ” சரி வெளிய போறேன் ,வரீங்களா ” என்றார் , நான் அவள் அம்மாவை பார்க்க “அவங்க இருக்கட்டும் ,நீங்க வாங்க ” என்றார் . வெளியே செல்லும் போது வாசலில் திரண்டிருந்த கூட்டத்தினர் எங்களையே பார்த்து கொண்டிருந்தனர் ,அவர் புல்லட்டில் இரு சாலைகள் தாண்டி இருந்த காபிசாப் சென்றோம் , அவர் மிக ரிலாக்ஸாக இருந்தார் ,பிறகு ” தம்பி, பொண்ணோட விருப்பம்கிறதெல்லாம் ஒரு விஷயமே இல்ல , கூட்டம் ,அதுதான் பேசும் , அதுதான் வலு , ,பொண்ணுகிறது ஒரு அசட் மாதிரிதான் , நம்ம கிட்ட வலு இல்லைனா நம்ம கைய விட்டு போயிடும் ” என்றார் . பின் காபி ஒரு முடக்கு பருகிய பின் ” இந்த கூட்டம் இல்லைனா பொண்ணை உங்க கூட அனுப்பியியிருப்பேன் ” என்றார்
வழக்கமான காதல் கதை. ஆனால் அப்பா, அம்மா இதைத் தட்டிக்கேட்க வலுவற்றவர்கள். ஏனெனில் ஒரு காலத்தில் அவர்களும் இப்படித்தானே வந்திருப்பார்கள்!