மணச்சேறு
மிடறு மிடறாய்
திரித்து பின்னிய
மதுக் கயிற்றில்
தேடல் வாளியை இறுக்கி
நினைவுக் கேணியில்
இறக்கி, ஏற்றி
ஏற்றி, இறக்கி
ஒர் புணர்ச்சிப் பொழுதின்
முன் விளையாடல்கள் போல்….
தொலைத்த காலங்களை
அள்ளி அள்ளி
எடுக்கிறேன்.
நீ
பணத்தை தரப் போகும் எஜமானி
முக பாவத்தோடு நிற்கிறாய்
அள்ளி குவித்த
சேற்றில் மணக்கிறது
நாம்
சேர்ந்திருந்த
பொழுதுகளின் வாசம்.
ஆண் மாடல்
பனைவாழை செந்தூண்கள்
மேல் அகண்ட குன்றுகள்
அமர்த்தி அதிர நடக்கையில்
அவையெங்கும்
மெளன மகுடி ஒசை
இடுக்குகளை பொத்தி
எழாது அடக்குகின்றன
நாற்காலி மறைவுகளில் கரங்கள்.
இருப்பினும்
சிலிர்த்து பாயும்
பார்வை நாக்குகளால்
ருசிக்கேம் தேகத்தின்னிகள்
இசையதிர நடக்கிறேன்
உள்ளாடை மீது குவிகிறது ஒளி
உண்ண வசதியாய் எடுப்பாய்
நிமிர்ந்தப்பட்டு இருக்கிறது
தீனி
எழுச்சிக்கு உதவுகிறது
மின்புள்ளி திரைகளோடு
மூளை செல்களால்
புணர்ந்த நினைவு.
அளவிலும் கலையிலும்
மெருகேற்றிய ஆடைகளை
வாங்க வெறியேற்றும்
பிழைப்பு எனக்கு.
இப்போதெல்லாம்
“வெளிச்சம் சூழ்”
ஒளி வெள்ளத்தில்தான்
எழுச்சியுறுவேன்
என்கிறது உறுப்பு.
வெட்கம் கொள்ளும்
இளம் மனைவிக்கு
எப்படி புரிய வைப்பேன்
இதை.