ஸ்ரீஜீ – காளிப்ரஸாத் சிறுகதை

ஸ்ரீமந்நாராயணன் தன் பஜாஜ் எம்.எய்ட்டியின் ஹார்னை விடாமல் அடித்தபடி இருந்தார். பரிதவிப்புடன் கழுத்தைத் தூக்கிப் பார்த்தபடியே இருந்தார். அவருக்கு இரு பக்கத்திலும் இருந்த பைக்காரர்கள் அடித்த ஹார்ன் ஒலியில் இது கேட்கவே இல்லை. இருந்தாலும் விடாமல் அவர் அடித்துக் கொண்டுதான் இருந்தார். அதுவும் தொண்டை கட்டிப்போன ஆட்டுக்குட்டி போல பரிதாபக் குரல் எழுப்பியது. தொலைவில் இரு கல்லூரிப் பேருந்துகள் யூடர்ன் அடித்துக் கொண்டிருந்தன. சாலையின் இருபுறங்களிலும் வண்டிகள் நின்றன. எக்குத்தாப்பாக எதிரில் இருந்து வந்த கார் இடையில் சிக்கி நிற்க ரசாபாசம் ஆகியிருந்தது. போலீஸ்காரரைப் பார்த்த அந்த பஸ் ட்ரைவர் கையை உயர்த்தி வணக்கம் சொல்லித் திருப்பிக் கொண்டிருந்தான்.

புடுங்கி.. இதே நம்ம வண்டின்னா ஓரங்கட்டி நிக்க வச்சிருப்பான்..’ என்றார் அருகில் நின்றவர்

ஸ்ரீமந்நாராயணன் முகத்தைக் திருப்பிக் கொண்டு எதிர் திசையில் பார்த்தார். இப்பொழுது சமூகம் குறித்து கவலைப்படும் நிலையில் அவர் இல்லை. போயும் போயும் இன்னைக்கா இப்படி ஆகனும் என்று அவர் படபடத்துக் கொண்டிருந்தார். மெல்ல வழி சீரானது.

அவசர அவசரமாக சென்று வண்டியை நிறுத்தி தன் அலுவலகத்திற்கு விரைந்தார். அலுவலகம் போய் மீட்டிங் ரூமுக்குள் நுழைந்து காலியான இருக்கையில் அமர்ந்தபடி சட்டை மேல் பட்டனைக் கழட்டி விட்டுக் கொண்டு, கைக்குட்டையை எடுத்து கழுத்து முகம் எல்லாம் துடைத்துக் கொண்டார். முன்மண்டையில் பாதிவரை இருந்த வழுக்கையையும் மெல்ல துடைத்தார். பின் தன் புகார் புத்தகத்தைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு சுவர்க் கடிகாரத்தில் மணி என்ன என்று பார்த்தார். பத்து இருபத்தைந்து ஆகியிருந்தது

டி.ஜி.எம் அவரைக் கவனித்தாற்போல தெரியவில்லை. எப்படியும் தன்னுடைய பிரிவின் பிரச்சனைகளைப் பற்றி பேசியிருப்பார்கள். நோட்டுப் புத்தகத்தை விரித்து வைத்து, சென்ற வாரம் விவாதித்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார். டி.ஜி.எம் இப்பொழுது உணவகத்தின் ஒப்பந்தம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

தட்டுல சாப்பாட்ட வைக்கிறப்போ ஒரு மரியாத இல்லை.. டங் குனு கரண்டியால தட்டுறானுங்க.. சாம்பார் கேட்டா இந்தப் பக்கம் போனைப் பார்த்துகிட்டு காரக்குழம்பை எடுத்து ஊத்தறானுங்க.. ஏதோ அன்னதானத்துல பரிமாறமாதிரில்ல கொட்றானுங்க.. அவங்க ஹிந்தி பேசறதும் புரியல.. ’ என்றார் அலுவலகஉணவக அமைப்பின் உறுப்பினர்

இந்த வாட்டி சின்னப் பசங்க வேணாம்னு சொல்லிட்டு கொஞ்சம் பெரியவங்களா போடச் சொல்லி கண்டிராக்டர்ட்ட சொல்லலாம் சார். அவங்கன்னா கொஞ்சம் பொறுமையா பார்த்து செய்வாங்க” என்றார் கேண்டின் மேற்பார்வையாளர்

பொறுமையான்னா எப்படி நம்ம நாராயணன் சார் மீட்டிங்க்கு வர மாதிரியா? ‘என்றார் டி.ஜி.எம்

கேண்டீன்காரர் தர்மசங்கடமாக ஸ்ரீமந்நாராயணனைப் பார்த்தார்

அவங்கிட்டயே கொஞ்சம் பார்த்து பரிமாற சொல்லுங்க.. இல்லாட்டி வேற பசங்கள மாத்துங்கஎப்படீன்னாலும் பசங்கதான் சரி. வேகமா வேலையை முடிப்பாங்க.. அதை மாத்தி வச்சா லன்ச் டைமை ரெண்டுமணி நேரமாக்கனும்.. என்ன சார்?’ என்றார் ஸ்ரீமந்நாராயணனைப் பார்த்து

அவரோ இன்னும் அஞ்சு வருஷத்துல உனக்கும் என் வயசுதாண்டா என்ற அர்த்தததில் டிஜிஎம்ஐப் பார்த்தபடி இருந்தார்

சாரி.. நல்ல ட்ராஃபிக்ரெண்டு காலேஜ் பஸ்ஸு..’

கவுந்துடிச்சா’

ஸ்ரீமந்நாராயணன் அமைதியாக இருந்தார்

ஜஸ்ட் மெய்ன்டெய்ன் டென்! காரணம்லாம் சொல்ல வேண்டாம்..இந்த வாட்டி ரமேஷை வச்சுப் பேசிட்டோம்.. தேங்ஸ்.. வில் ஜாய்ன் எகெய்ன் நெக்ஸ்ட் வீக்’

எல்லோரும் கலைந்தனர்

ண்டி நிறுத்தத்தில் இருக்கும் காவலன் மீட்டிங் ரூம் வெளியே நின்று கொண்டிருந்தான்

என்ன?’ என்றார் டி.ஜி.எம்

சாரோட பைக்க அவசரத்துல கார் பார்க்கிங்ல வச்சுட்டாரு.. மாத்தி வைக்கனும்’

இதோ வறேன்.. ‘ கிட்டத் தட்ட ஓடினார் ஸ்ரீமந்நாராயணன்

பைக்! ‘ என்று டி.ஜி.எம் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

அஞ்சாத நிருபர் வீரபத்திரன்..” என்று ஒருமுறை ஆட்கள் முன் அழைத்திருக்கிறார்..

கரடுமுரடான சாலையிலும் கட்டுறுதியான சவாரி..பஜாஜ் எமெய்ட்டி

ஸ்ரீமந்நாராயணனுக்கு ஆற்றாமையாக பொங்கி வந்தது

இருபத்தைந்து வருடங்கள் முன் இது சிறிய தொழிற்பேட்டையாக இருந்த போதிலிருந்து ஒவ்வொரு சின்ன கம்பெனி வரும்போதும் அதற்கு மின்சார கம்பி செல்லும் பாதைமுதல் கழிவு நீர் செல்லும் பாதைவரை பார்த்துச் செய்தவன். பதினைந்து வருடங்கள் முன்பு இந்தப் பகுதி சிறப்பு பொருளாதார மண்டலமாக ஆன பின்னும் சாலை விரிவாக்கம் முதல் அதன் ஓரமாக அனைத்து வித கேபிள் செல்லும் குழாயைப் பதிப்பதிலும் இறங்கி வேலை செய்தவன். அப்பொழுதெல்லாம் என்னவொரு மரியாதை இருந்தது. தன்னுடைய பழைய டிஜிஎம் களை நினைத்துக் கொண்டார். ஸ்ரீ என்று அழைத்தவர்களும் ஸ்ரீ சார் என்று அழைத்தவர்களும் ஓய்வு பெற்று சென்றுவிட்டனர். இப்பொழுது அனைத்து நிறுவனங்களும் நிலைபெற்று இந்த தொழில்முனைவோர் கூட்டமைப்பு நிறுவனமும் நிதானத்துடன் செல்கிறது. இப்படி சரியான நிலைக்கு வந்த பின் வந்த இந்த புது டிஜிஎம் முன் அவமானப்பட்டு நிற்க வேண்டியிருக்கிறது.

வயது ஆவது ஒரு குறையா என்ன? இன்றும் உட்கார்ந்த இடத்திலிருந்து எந்த கம்பேனி லைன் எங்க போகுதுன்னு சொல்ல முடியும். இதோ மேல போற ஏசி டக்ட் எங்க போய் எப்படி திரும்பும்னு சொல்லவா

எக்ஸல், பவர்பாயிண்ட்,ஆக்ஸஸ், ப்சண்டேஷன் புரொஜெக்டர்னு படம் காமிச்சே ரமேஷ் டிஜிஎம்மைக் கவுத்துட்டான்.. கூட குமாரும் ஆனந்தும் கூட அவனோட சேர்ந்துகிட்டானுங்க.. ’

அவர்களை நினைத்து முகத்தைச் சுளித்துக் கொண்டார். “பயிற்சி தொழிலாளர்களாக இருந்தவர்களை பணிநிரந்தரம் செய்த நன்றி கூட இல்லை. அதுவரை ஜி ஜி ன்னு கூப்டுகிட்டு என்னையே சுத்தி வந்தானுங்க.. இப்ப புரொஃபஷனல்லேந்து கன்ஃபார்ம் ஆக அவன் பின்னாடி சுத்தறானுங்க..’

சின்னப் பையனா எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்யறது சரிதான். ஆனால், வயசானப்புறமும் ஏன் இப்படி அல்லாடுறீங்க.. உடம்பு ஒத்துழைக்க வேணாமா.. இனிம வேலையை குறைச்சுக்கோங்க” என்று மனைவி கேட்டு ஒருவருடம் ஆகவில்லை

எந்த நேரத்துல அப்படிச் சொன்னியோ மகராசி.. சுத்தி இருந்த தேவதை எதுவோ ‘சரி’ ந்னு சொல்லிடுச்சு போலிருக்கு..’ என்று நேற்று கூட சாப்பிடும்போது அங்கலாய்த்துக் கொண்டார்

அப்பா.. எல்லா வேலையும் நம்ம தலையில இருக்குங்கிறது மேல இருக்கறவங்களுக்கு உறுத்திக்கிட்டுதானிருக்கும்…அதனால புதுசா வந்தவங்க ஏற்கனவே வருஷக்கணக்கா இருக்கறவங்களைத் தட்டி வைக்கப் பார்ப்பாங்க..’

அப்ப, நம்ம கிட்ட ஒண்ணுமே இல்லங்கிறது உறுத்தாதா.. நீ போயி, டிகிரி எப்ப முடிக்கப் போறோம்.. என்ன வேலைக்குப் போகலாம்னு மட்டும் யோசி’ மகனிடம் பொரிந்தார்

டிஜிஎம் கூட பிரச்சனையில்லை. எனக்குத்தான் அவரு பாஸ். அவருக்கு அவரிடம் வேலைசெய்யும் பலரில் நானும் ஒருத்தன். என்னையே பார்த்துக்கிட்டு இருப்பது அவரோட வேலையில்லை. ஆனால் கூடவே இருக்கும் ரமேஷ் இருந்த சமயத்தில் நல்லா விளையாடறான். அவனோட கூட அந்த புதுப்பசங்களும் சேர்ந்து அவன் சொல்றதைதான் கேட்குறாங்க.. நேத்துவரை சார் சார் ந்னு என்னையே சுத்திக்கிட்டு இருந்தாங்க’

போதும் சாப்பிடுங்க.. நூறுவாட்டி ஆச்சு.. இன்னும் இதையே எத்தனை வாட்டித்தான் சொல்லுவீங்க.. முன்னாடி கொஞ்சம் சம்பளம் வாங்கிக்கிட்டு ராப்பகலா உழைச்சீங்க.. இத்தனை வருஷத்துல கொஞ்சம் கொஞ்சமா ஏறி இப்ப கொஞ்சம் நல்லா சம்பளம் வருது.. அதுக்கு இணயா முன்னைவிட நிறையா வேலை செய்யலைன்னு பதட்டப்படறீங்க..அனா ஒட்டுமுத்தமா பார்த்தா எல்லா கணக்கும் சரியாத்தான் இருக்கும்..’

பார்க்கிங் பகுதிக்கு வந்திருந்தார் ஸ்ரீமந்நாராயணன்

ஆனால் முன்னெப்போதும் விட ஏன் ரமேஷ் ஆர்வமா இருக்கான்? ஏதேதோ காரணம் சொல்லி சீக்கிறம் வீட்டுக்குப் போறவன், கொஞ்ச மாசமா பத்து மணிநேரம் ஆபீஸ்ல இருக்கான். டிஜிஎம் போன அப்புறம்தான் போறான். டெய்லி ரிப்போர்ட் முதல் சப்ளை வரை அனைத்தையும் கவனமா அவன் வழியாவே போவது போல பார்த்துக்கிறான். இதில் ரமேஷுக்கு வேறு ஒரு கணக்கும் கண்டிப்பா இருக்கனும். எப்படியும் எனக்குத் தெரியாமப் போயிடுமா என்ன? தான் பொருட்கள் வாங்கிய இடங்களில் இப்பொழுது அவன் வாங்குவது இல்லை. புதிதாக வேறு ஒருவர் சப்ளை செய்ய வர ஆரம்பிச்சுட்டார். கொஞ்சம் கொஞ்சமா தன் கையொப்பம் இல்லாமலேயே பொருட்கள் வாங்கப்படுது. இப்போது இங்கே தான் இல்லாமல் கூட எல்லாம் நடந்துடும்.

பார்க்கிங்கில் இருந்த காவலன் மொபைல் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அருகில் இருந்த அலுவலக உதவியாளனுடன் ஏதோ விவாதம். அவன் இளமையாக இருந்தான். ஸ்ரீமந்நாராயணன் அவர்களைக் கடந்து போய் வண்டியை நகர்த்தி வைத்து திரும்ப வரும் வரை அவர்கள் இவரைக் கண்டும் போனிலேயே மூழ்கியிருந்தனர்.

அந்த வண்டிய கொஞ்சம் நகத்தனும் வறியா..’

அவர்களில் இளமையாக இருந்த அலுவலக உதவியாளன், வேண்டாவெறுப்பாக எழுந்து வந்தான்

சார்.. மில்லியன்னா எவ்வளவு சார்.. ஒரு கோடிதான.. இவன் பத்தாயிரம் கிறான்..’

ஏண்டா என்ன ஆச்சு..’

இங்க பாருங்க சார்.. அழகுராணியோட வீடியோ பக்கம்சீக்கிரம் ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்துடுவாங்க.. மில்லியன்னாஒரு கோடிதான சார்”

அவனை சற்று எரிச்சலாகப் பார்த்தார் ஸ்ரீமந்நாராயணன். சின்னப்பையன்.. பொம்பள ஆடற வீடியோவைக் காட்டறான். அதுவே, தனக்கு கீழ் பொறுப்பில் இருக்கும் ரமேஷ் வந்தால் இவர்கள் போனை ஒளித்துக் கொள்வார்கள். ஆணையிடுங்க சார் என்று காத்து நிற்பார்கள்.. ஆனால் நம்மகிட்ட அந்த பொம்பள ஆடறதையேக் கொண்டுவந்து காட்டறான். எப்படியோ குமாரும் ஆனந்தும் மாதிரி இவனுங்க கூட கண்டுபுடிச்சுடறாங்க. யார் எப்போது முக்கியம்னு. தான் ஒருமுறை கூட அவர்களைச் சொடக்கு போட்டு அழைத்ததில்லை. ஆனால் அந்த எண்ணனும் மரியாதையும் இவர்களுக்கும் இல்லை.. ஆனால் அப்படி அழைப்பவர்கள் முன் போய் பணிந்து விடுகிறார்கள் சல்லிப்பசங்க..

ரமேஷ் எப்போதிலிருந்து சொடக்கு போட ஆரம்பித்தான்..

நாராயணன், நாளைக்கு 4ம் குறுக்கு சந்துல ஒரு டக்ட் தோண்டனும்.. எப்பன்னு நான் டைம் உங்களுக்கு டெக்ஸ்ட் பண்றேன்..’ என்றார் டிஜிஎம்

டெஸ்டா..என்ன டெஸ்ட் பண்ண போறீங்க சார்.. சாயில் டெஸ்டா.. ஏற்கனவே அதான் மொத்த ஏரியாக்குமே பண்ணியாச்சே சார்..” என்றார் ஸ்ரீமந்நாராயணன் அப்பாவியாக

அவர்கள் ஏன் அப்படிச் சிரித்தனர்? ஒருவேளை டிஜிஎம் தன்னை விட்டு ரமேஷை அழைக்க ஆரம்பித்ததும் அதற்குப் பின்னால்தானோ. அவர்களது உரையாடல்களுக்குள் தனக்கு இடமில்லை. அதற்குப் பின் சில நாட்களில் அவர்கள் இருவரும் ஒன்றாகவே உணவருந்த கூடச் செல்லத் துவங்கி விட்டனர். அவங்க நல்ல நண்பர்களாகவே இருந்துட்டுப் போகட்டும்.. நூறு வயசுக்கும் இளமையாவே இருக்கட்டும்.. ஆனால் அதற்காக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன்னை அவமானப்படுத்தும் அளவு இவர்கள் எப்படித் துணியலாம்? ஏதோ முட்டாளை எதிர் கொள்வது போன்ற எள்ளல்.. அலட்சியம்..

தள்ளிக்கொண்டு வந்த வண்டியைப் பார்க்கிங்கில் சரியான இடத்தில் நிறுத்தினார்

–X—

தற்கு அடுத்தவாரத்தில்தான், கேண்டீனில் வைத்து அவரிடம் ’ஃபோர்த் ப்ளாக்லேர்ந்து நைன்த் வரைக்கும் ஒரு டனல் போடறோம்.. இதான் எஸ்டிமேட்…’ என்றான் ரமேஷ்

போட்ரலாமே .. ஒரு வாரத்துல ப்ளான் போட்டு கொண்டுவறேன்.. ஆறாவது ப்ளாக்ல ஏற்கனவே..’

எல்லாம் டிஜிஎம் கிட்ட கொடுத்து அவர் அனுமதி எல்லாம் கொடுத்துட்டார்லேபர்களை குமாரும் ஆனந்தும் ஏற்பாடு பண்றாங்க.. ‘

நான் இன்னும் ப்ளானைப் பார்க்கலை ரமேஷ்..’

சரி.. கொண்டுவந்து காட்றேன்..’

நான் அப்ரூவல் பண்ணனுமே..’

என்னையே பார்க்கச் சொல்லி டிஜிஎம் அப்ரூவல் பண்றேன்னு சொன்னாரு.. நான் ப்ளானை சீட்ல கொண்டுவந்து காட்றேன்.. ’ கிளம்பிச் சென்றான் ரமேஷ்.

வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஸ்ரீமந்நராயணன்

நீங்க போனால் கம்பேனிக்குப் பெரிய பிரச்சனையா? ஒண்ணும் இல்லையே.. செய்த வரைக்கும் உழைச்சாச்சு.. அதுக்கேத்த ஊதியம்னு இல்லைன்னாலும் சம்பளம்னு ஒண்ணு கொடுத்துட்டாங்க.. முன்னாடி இண்டஸ்ட்ரீஸ் வந்துகிட்டு இருந்துச்சு..இது ஓடிக்கிட்டு இருந்தது.. இப்ப எல்லாம் நிலையா நிக்குது.. நமக்கு இப்போ மெய்ண்டனென்ஸ் மட்டும்தான்அதான் அவனுங்க ஆணவம் தலைக்கேறிப் போச்சு.. உழைச்சவங்களை எல்லாம் உதச்சுப் பார்த்து விளையாடறாங்க’ என்று கேண்டீன் மேற்பார்வையாளர் ஒருநாள் கூறினார். என்னா ஆனாலும் மனுசன் சாப்ட்டுத்தான ஆகணும். அவருக்குப் பிரச்சனையில்லை. அடித்துப் பேசலாம்

ஸ்ரீ.. நீ இப்ப இருக்கிற இடத்திலேயே இரு.. வேற எங்கேயும் மாறவேணாம்.. எனக்குமே இங்க சூழ்நிலை சரியில்லை.. உன்னை ஒண்ணும் வேலை இல்லைன்னு சொல்லி அனுப்பலையே.. கொஞ்சநாள் ஜாலியா இருமய்யா..’ என்றார் இங்கிருந்து சென்ற சமீர் பாய்

மரியாதை இல்லய்யா இங்க.. வேலைய விட்டு வீட்டுலயும் இருக்க முடியாது.. ஒருத்தன் என் வண்டிய வச்சு என்னைக் கிண்டல் பண்றான்யா.. இன்னொருத்தன் கேண்டீன்ல வச்சு புது வேலை ஆரம்பிக்கறதப் பத்தி சொல்றான்.. இவனுக்குத் தெரியுமா.. எங்க எப்படி ரூட்டு போகுதுன்னு.. அசிங்கப்பட்டு வறதுக்குள்ள நாமளே கிளம்பிடனும்.. எனக்கும் பசங்க படிக்கணும்.. அவங்களுக்கு கல்யாணம் பண்ணனும்.. வேலை போச்சுன்னு சும்மா உட்கார முடியாது.. கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துகிட்டு இருக்கேன்.. இவனுங்க கிட்ட அசிங்கப் படறத விட, விட்டு கிளம்பிடனும்யா. ஏதாவது வேலை இருந்தா சொல்லுய்யா’ என்று கத்தினார் ஸ்ரீமந்நாராயணன்

சும்மா கத விடாத ஸ்ரீ.. எல்லாம் ஆனா மட்டும் நீரு சும்மா உட்கார்ந்திடுவீரா.. சுத்தியலத் தட்டாம இருந்தா உமக்குத்தான் கை நடுங்குமே.. நல்ல போன் வாங்கி படம் பாருய்யா.. வாட்சப்பு, யூட்யூபு, டிக்டாக்கு ஏதாவது தெரியுமாய்யா உனக்கு. எடுத்துபாரு யாரு கேட்கப் போறா..’ சிரித்தார் சமீர் பாய்

ஆமா.. இங்க இருக்கிற மரியாதைக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்…மயிறு” கோபமாக போனை வைத்தார் ஸ்ரீமந்நாராயணன்

–X–

கேபிள் டனல் வேலை முடிஞ்சிருச்சின்னு சொன்னேன்.. நாளைக்கு நம்ம வேலையைப் பார்க்க ஆடிட்டர் வறாரு.. ஃபோர்த் ட்டூ நைன்த் ப்ளாக் வரை போட்ட டனல்தான் காட்டப் போறோம். ரமேஷ்.. எல்லாம் ரெடியா இருக்கா..” என்றார் டிஜிஎம் போனில் ரமேஷை அழைத்தபடி

ஸ்ரீமன்நாராயணன் பத்துமணிக்கே மீட்டிங் க்கு வந்திருந்தார்

முகர்ஜிதான் ஆடிட்டர். கேபிள் தரத்தை எல்லாம் ரொம்ப நோண்டுவான்னு சொன்னாங்க. எல்லாம் நம்ம ஸ்டாண்டர்ட் படி நல்ல ஒர்க் தான?’

ஒண்ணும் பிரச்சனையில்லை சார்.. நேத்தோட எல்லாம் தயார்” என்றான் ரமேஷ் மறுமுனையில்

சரி.. நான் நாராயணன் கிட்ட சொல்லிடறேன்.. ஆடிட்டிங்ல அவரை உங்களுக்கு ஹெல்ப்புக்கு வச்சுக்கங்க.’

நாராயணன்.. ஆடிட்டிங் முடியற வரை ரமேஷ்க்கு ஒத்தாசையா இருங்க..’

தலையசைத்தார்.

அவருக்கு என்ன வேணுமோ செய்யுங்க.. கொஞ்சம் வேகமா இருக்கனும்..’

மீட்டிங் முடிந்து கிளம்பிச் சென்றனர். போகும் வழியில் இருந்த முற்றத்தில் அலுவலக உதவியாளன் அமர்ந்திருந்தான். டிஜிஎம்மைப் பார்த்து ஒளித்து வைத்த போனை எடுத்து மீண்டும் பார்க்க ஆரம்பித்தான்.. பின்னால் வந்த ஸ்ரீமந்நாராயணன் அவனைக் கடந்து வெளியே சென்று டீ வாங்கிக் குடித்தார். போனை எடுத்தார்..

என்னயா ஸ்ரீ.. புது போனு வாங்கிட்டீரா..நாலு நல்ல போட்டோ இருக்கு வாட்சப்புல அனுப்பலாமா…” என்றார் சமீர்பாய் எடுத்த எடுப்பிலேயே

யோவ் நான் சொன்னது என்னய்யா ஆச்சு. மறைமலைநகர் ஸ்ரீபெரும்புதூர் எங்கயாச்சும் வேலை இருந்தாலும் சொல்லுய்யா.. இங்க நடக்குறது தெரியாம விளையாடாத.. இங்க என்னைய அவனுக்கு அசிஸ்டென்டா போடறன்யா…’

மொத்தக் கதையும் சொல்லிமுடித்தார்..

..முகர்ஜியா.. சுபாஷ் சந்திர போஸ்னு நெனப்பு அவனுக்கு… அஞ்சு வருஷம் கழிச்சு திரும்ப வறானா.. அப்ப உனக்கு மூணாவது டைமு.. அவன்லாம் வருமான வரித்துறைக்கு போக வேண்டியவன்யா.. ரொம்பவும் துருவுவானே அவன்ட்டயா திரும்ப உன்னை விடறாங்க..”

ஆமாம்.. போஜாருயா அவனோட.. அவன் எங்கே போய் எப்படி நோண்டுவான்னு யாருக்குமே தெரியாது.. எல்லோரும்போல கேபிளோட தரம், இரும்புக் கம்பின்னு பாக்க மாட்டான். திடீரென நடுவில் ஒரு இடத்தில் இருந்து ஆரம்பிப்பான். ஸ்டாக்கைப் பார்ப்பான். அதிலிருந்த பழைய பொருளை எங்காவது போட்டோமா என்று நோண்டுவான்.. ஓரமா வைத்திருக்கும் உடைசல்களையும் கணக்கு கேட்பான். சாவடிப்பான்.. இன்னும் ஞாபகம் இருக்கா உனக்கு..”

ஆமாம் ஆமாம்.. மொத ஆடிட்டிங்கில அவனோட குடைச்சலைத் தாங்காமஅடுத்த ஆடிட்டிங்கிற்கு அவன் வறதுக்குள்ள ஓரமாக கிடந்த பழைய கேபிள் எல்லாத்தையும் அள்ளிகிட்டுப் போயி கண்காணாத தெருவில் ஓரமாக வீசிட்டு வந்தோமேகூடவே கண்கிரீட் மூடிங்களையும் போட்டுட்டு வந்தோம்.. நீயும் நானும்தான தூக்கிட்டுப் போனோம்… சுனாமி வந்தப்போ வெள்ளம் வந்தப்போக்கூட அப்படி ஓடலைய்யா நானு…’

வெள்ளத்தை வுடு.. சாதாரண மழைக்கே முட்டிக்கல் வரைக்கும்ல நிக்குமே இங்க.. ப்லேகிரவுண்டுல போஸ்ட்டு ஷாக் அடிச்சு ரெண்டு மாடு செத்து போச்சுன்னு ஓவர் நைட்ல அத்தனையையும் சரி பண்ணோமே.. மாடு செத்த விஷயமே கூட நம்ம ஆபீஸ்ல ஒருத்தனுக்கும் தெரியலையே..”

அப்பல்லாம் எவன் எங்க வத்தி வைப்பான்னு கத்தி வைப்பான்னு தெரியும்.. அதுக்கு முன்னாலயே நாம் போய் நின்னோம்.. இப்பா சலிச்சுப் போச்சுயா.. அந்த ஆட்டத்த ஆடறவன பாத்தாலும் சலிப்பு வருது…சும்மா வுடுங்கடா நான் பாட்டுக்கு என் வேலைய பார்த்துட்டுப் போய்ட்டே இருக்கேன்…’

சர்தான்.. அங்க தெருவுல இருக்குற லைட்லேந்து தள்ளுவண்டி நிக்கிற ப்ளாட்ஃபார்ம் வரைக்கும் நம்ம பாத்து பண்ணதுய்யா.. இன்னைக்கு அங்க டீ விக்கிறவனுக்குத் தெரியுமா இதெல்லாம்… சரி..அதவிடு டீக்கடை வச்சிருந்தாளே அவ பேரு என்னய்யா.. நல்ல பேரு திடீர்னு மறந்துபோச்சு..”

நீ அவ பேர மறந்துட்டியா.. நான் நம்பணுமா..”

பேரு மட்டும்தான்யா மறந்துடுச்சி.. மத்த எல்லாம் ஞாபகம் இருக்கு…சரி நம்ம விஷயத்துக்கு வா.. முகர்ஜீக்கு அப்புறம் எவனாவது வந்தானா…”

ஆமாம்.. அதுக்கப்புறம் வேற ஒருத்தன் வந்தான்.. அவன் நாம் சொன்னத கேட்பான்.. போயிருவான்.. இப்ப முகர்ஜி திரும்ப வாறான்.. இந்த வாட்டி இவனுங்க என்ன பண்ணி வச்சிருக்காங்கன்னு தெரியலையே..”

உன்னைதான் அவனுங்க இந்த வேலையப்ப சேர்க்கவே இல்லையே.. அதனால இத லைட்டாவுடு.. என்ன ஆனாலும் இது உன் பிரச்சனையே இல்லையே..”

சரிதான்… ஆனால் அந்த டீம்ல நானும் இருக்கேன்யா.. இவனுங்க எப்ப நம்ம தலைய உருட்டலாம்னுதான் இருக்கானுங்க.. அதுவும் கொஞ்சம் பயமாவும் இருக்கு..”

முகர்ஜிக்கு ஒரு இடத்துல சந்தேகம்னு வந்தாதானே நோண்ட ஆரம்பிப்பான்.. அப்படி வராம பாத்துக்கஆரம்பத்துல அப்படி ஏதும் சந்தேகம் வரலைன்னா அவனும் போய்ட்டே இருப்பான். அதான அவன் கேரக்டரு.. அவ்வளவுதான…”

அவ்வளவுதான்.. ”

ஸ்ரீமந்நாராயணன் வீட்டிற்குப் போகும் வழியில் அந்தத் தெரு வழியாகச் சென்றார். பழைய பொருட்கள் போட்டு வைத்த ஒதுக்குப்புறமான காலியிடம் புதர்மண்டிப் போய் ஏழாவது ப்ளாக் அருகே கிடந்தது. அந்தத் தெரு மட்டுமே முட்டுச்சந்து என்பதால் பெரிதாக போக்குவரத்தும் இருக்காது. மறுபக்கம் குடியிருப்புப் பகுதிதான். ஆகவே அங்கு கண்காணிப்பும் இல்லை. லேபர்கள் அங்குதான் குடிப்பதற்கு ஒதுங்குவர். வேறுசிலவும் நிகழ்வதாக சொல்லப்படுவதுண்டு. அந்தப் பழைய கான்கிரீட் மூடிகள் இன்னும் அங்கேயே இருந்தன. மணல்மூடிப் போய்க் கிடந்தைப் பார்த்தார்.. கேபிள்களையெல்லாம் அப்பவே தூக்கிட்டுப் போயிருப்பானுங்க.. இங்க எதுவுமே காசுதான். கான்கிரீட் மூடிக்கு பெரிய மதிப்பு கிடையாது.. புசுசே நூறு ரூபாய்தான் இருக்கும்.. அதான் வுட்டுட்டுப் போயிட்டானுங்க..” என்று எண்ணியபடி ஓரமாகக் கிடந்த ஒரு கம்பியை எடுத்துக் குத்திப் பார்த்தார். இருட்டில் சலசலப்பு இருந்தது. பாம்பா பல்லியா அல்லது ஆளா என்று கூட தெரியவில்லை. மூத்திரம் பெய்ய வந்தவர் போல திரும்பிச் சென்றார். அதிகாலையில் வந்தால் இங்கு நடமாட்டமும் இருக்காது. பயமும் இல்லை. யாராவது இருந்தாலும் தெரிந்துவிடும்.

ஸ்ரீமந்நாராயணன் மறுநாள் அதிகாலையில் வந்தார். ஓரளவு வெளிச்சம் இருந்தது. அங்கிருந்த முறுக்குக் கம்பியைக் கொண்டு அந்த கான்கிரீட் மூடியை நெம்பினார். நாலாவது குத்தில் பெயர்ந்து வந்தது.. இரண்டாவது மூடியையும் நெம்பித் தள்ளினார். ஏதோ ஒரு சப்தம் கேட்டது. அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தார். மரத்தின் மீதிருந்த பறவைகள் பறந்து சென்றன. அவருக்கு ஆசுவாசமாக இருந்தது. அக்கம்பக்கம் யாரும் இருக்கிறார்களா என்று மீண்டும் சுற்றிவரப் பார்த்தார். அருகிலிருந்த குடியிருப்புப் பகுதியின் மாடியில் ஒரு பெண்மனி இவருக்கு பின்புறத்தைக் காட்டியபடி சேலையை உதறிக் கொண்டிருந்தாள். சற்று ஒளிந்து கொண்டு அவள் போகும்வரைக் காத்திருந்தார் ஸ்ரீமந்நாராயனன். பின் மெல்ல அந்த கான்கிரீட் மூடிகளை புது டனலின் வாயிலில் வைத்து மூடியவர் ஏற்கனவே இருந்த இரும்பு மூடிகளை தூக்கிச் சென்று அருகில் இருந்த சாக்கடைக்குள் பொத்தெனப் போட்டார்

–X–

டிஜிஎம் ரமேஷை பார்த்த பார்வையில் கனல் எரிந்தது. ரமேஷ் குமாரையும், குமாரும் ஆனந்தும் ஒருவரை ஒருவரும் பார்த்துக் கொண்டனர். ஆள் இல்லாத இடத்தில்தான் முகர்ஜி முதலில் பார்ப்பான் என்ற அவரது கணிப்பு சரியாகியிருந்தது.

எட்டாயிரம் கணக்கு காட்டின ரெண்டி இரும்பு மூடிக்கு பதிலா நூறு ரூபாய் கான்கிரீட் மூடி போட்டிருக்கீங்க.. வாங்க அப்படியே மொத்தமா தோண்டிப் பாத்துடலாம்…’

ஸ்ரீமந்நாராயணன் அமைதியாக பார்த்தபடியிருந்தார். நடுவில் உள்ள கேபிள்களிலும் கம்பிகளிலும் தானடா எப்படியும் உங்க கைவரிசைய காட்டிருப்பீங்க. அதனால்தான வேலை முடியும்வரை என்னை அண்டவும் வுடல.

மொத்த ஸ்டாக்கையும் பார்க்கனுமேயார் அப்ரூவல் பண்ணியது?’

டிஜிஎம் அமைதியாக நின்றார்

இனி தாம் இறங்க வேண்டிய இடம்.

முகர்ஜி.. அந்த ரோட்டுக்கு அந்தப் பக்கம் மக்கள் வாழற குடியிருப்பு இருக்கு.. அங்க இருந்து பசங்க ஏறிக் குதிச்சு வந்து இப்படி தூக்கிட்டுப் போய் பழைய இரும்பு கடையில பாதி விலைக்கு வித்துட்டு அந்தக் காசுல தண்ணி அடிப்பாங்க.. அது ஒரு முட்டு சந்து.. பக்கத்துல வெறும் காலி இடம்தான் இருக்கு. அதான் வசதியாப் போச்சு.. இதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்.. மத்த ஆறு தெருவுலயும் இந்தப் பிரச்சனை இல்லை. நல்ல மூடிதான் இருக்கு.. நீங்களே வந்து பாருங்க..’

ஆனா.. இப்படி வசதியான காரணம் இருக்கிற இடத்துலதான் கம்பேனி காரங்களும் கைவரிசை காட்டுவாங்க ஸ்ரீஜீ… நான் இப்ப தோண்டிப் பார்த்தே ஆகணும்”

ஆனால், அங்க மூடி ஜிஐ மூடி தான் போட்டேன்.. அதை லேபரோ இல்லாட்டி இவனுங்க யாராவதோதான் எடுத்திருக்கனும்..சொல்லுங்கடா என்றான்” என்றான் ரமேஷ் குமாரையும் ஆனந்தையும் பார்த்து ஆவேசமாய்

அவர்கள் கண்களில் தெரிவது மிரட்சியா கோபமா என்று பார்த்தார் ஸ்ரீமந்நாராயணன்.

நாங்க லேபரைக் கூப்பிட்டு வந்தோம்.. எங்களால எப்படிப் பண்ண முடியும் ஜீ.. எங்களுக்கு கொடுத்த பொருளைப் பொருத்தினோம். அவ்ளோதான் ஸ்ரீஜீ’ என்றனர் குமாரும் ஆனந்தும்’ ஸ்ரீமந் நாராயணைப் பார்த்து

உங்களுக்குக் கொடுத்த பொருள்னா என்ன அர்த்தம்?” என்றார் டிஜிஎம்

ஆர்டருக்கும் பொருளுக்கும் சரிபார்த்துதான் வாங்குனீங்க..’

ஆனந்தும் குமாரும் ரமேஷைப் பார்த்தனர்

ரமேஷ் தலை கவிழ்ந்து நின்றான். அவனைத் துருவிக் கேட்டதில் தரமற்ற பொருளை வாங்கிப் போட்டுக் கமிஷன் அடித்ததை ஒப்புக் கொண்டான். பின் மெல்ல விசும்பினான்.. அப்புறம் அழத் துவங்கினான். டிஜிஎம் நம்பிக்கையை மோசம் செய்து விட்டேன் என்று கதறினான்.

ஆனா சத்தியமா அந்த மூடி இரும்புதான் போட்டேன்ங்க..”

செண்டிமெண்ட் வேணாம் ஜீ.. அதை உங்க ஹெச் ஆர் பாத்துப்பாங்க. ’

சார்.. நீங்க ரெண்டுநாள்ல நீங்க வேலையை சரியா முடிங்க.. நான் பில்லை அப்ரூவ் பண்றேன்..’ என்று இறங்கி வந்தார் முகர்ஜீ

டிஜிஎம் முகத்தில் ஒரு ஆசுவாசம் ஏற்பட்டது.

நீங்க கொஞ்சம் இதைப் பார்க்க முடியுமா ஸ்ரீஜீ’

துறு துறுவென ஓடிச் சென்று வேலையைச் முடித்தார் ஸ்ரீமந்நாராயணன். அவர் பேசியதில் பொருட்களை அதே சப்ளையரே மாற்றிக் கொடுத்தான். நீண்டநாள் கழித்து வேலை செய்யும் ஆர்வமும் ஏற்கனவே முகர்ஜியை இருமுறை சமாளித்திருந்த அனுபவமும் அவருக்குக் கைகொடுத்தன.

ஸ்ரீஜீ..குட் வொர்க்.. உங்க எக்ஸ்பீரியன்ஸ் நல்லா ஹெல்ப் பண்ணிச்சு.. தேங்ஸ்.. நம்ம ரெபுடேஷன காப்பாத்திட்டீங்க ” ஏன்றார் டிஜிஎம் மகிழ்ச்சியுடன்..

ஆனால் ரமேஷ் இப்படி நம்பிக்கை துரோகம் பண்ணுவான்னு எதிர்பார்க்கலை ஸ்ரீஜீ… நான் அவனை ரொம்ப நம்பிட்டேன்.. போற இடத்துலயாவது அவன் ஒழுங்கா இருக்கட்டும் ”

அவருடன் பேசிக்கொண்டே அவர் இருக்கை வரை வந்தவர் அங்கு அவருக்கு மீண்டும் ஒருமுறை கைகொடுத்துவிட்டுக் கிளம்பிச் சென்றார். ஸ்ரீமந்நாராயணன் தன் இருக்கையில் அமர்ந்து நிமிர்ந்து பார்த்தார். ஓரமாக நின்று மொபைல் பார்த்துக் கொண்டிருந்த அந்த அலுவலக உதவியாள இளைஞன் மொபைலை ஒளித்துக் கொண்டான். அசடு வழிந்தான்

என்னடா? ம்..’ ஒரு சொடக்குப் போட்டார்

அவன் ஓடி வந்து நின்றான்.. அவன் கையிலிருந்த மொபைலைப் பற்றிக் கொண்டு’ என்னடா.. எப்படி இருக்கா உன் அழகுராணி..அந்த ஒரு மில்லியன் வந்துடுச்சா.. ம்…”

ஆமா சார்.. ஆமா சார்..” என்று நெளிந்தவன்.. டிஜிஎம் தண்ணீர் கேட்பதைக் கண்டு அவரை நோக்கி பதறி ஓடினான்..

டேய் மொபைல் இந்தாடா..’ என்று வாயெடுத்தவர்.. அதில் அந்த அழகுராணி வீடியோவைக் கண்டார். திகைத்தார். மெல்ல இரு விரல்களால் அதை அகலமாக்கினார்

அதில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்த அழகுராணி ‘சலக்கு சலக்கு சேலை..அதைக் கட்டிக்கத்தானே’ என்று இடுப்பை நெளித்து ஆடிக்கொண்டிருக்க, அவளுக்குப் பின்னால் தொலைவில், லில்லிபுட் உயரத்தில் இருந்த ஸ்ரீமந்நாராயணா மங்க்கி தொப்பி அணிந்துகொண்டு இருப்புக் கம்பியால் தரையில் மண்ணுக்குள் பதிந்து போயிருந்த கான்கிரீட் மூடியை நெம்பிக் கொண்டிருந்தார்

2 comments

  1. நடு வயதில் வரும் அலுவலக வேதனையை மற்றும் நரி குணம் இறுதியில் வரும் திருப்பம் அவரை தொடர்ந்து அமைதி இல்லாமல் ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.