Month: August 2020

பதாகை வெளியீடு – எழுத்தாளர் நம்பி கிருஷ்ணனின் “பாண்டியாட்டம்”

​​எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன் அவர்களின் “பாண்டியாட்டம்” உலக இலக்கிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலின் விலை 320/- முன்பதிவு விலையாக 250/-…

A/c no.34804520231
(yaavarum publishers)​​
SBI bank Chinmaya nagar branch
IFSC code: SBIN0007990 or

Gpay 9841643380

ஆன்லைனில் பெற  ​​https://be4books.com/product/7462/

நூல் & அட்டை வடிவமைப்பு : Gopu Rasuvel
எழுத்தாளர்கள் கோட்டோவியம் : ஓவியர் Jeeva Nanthan

இது ஒரு யாவரும் & பதாகை கூட்டு வெளியீடு

தக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை

எனக்கின்று ஓர்மையில் இருக்கும் திருக்குறளில் பாதிக்கு மேல் ஆறாம் வகுப்பு முதல் பாடத்திட்டத்தில் பயின்றவை. தமிழ்நாட்டு அரசியல் அறிவுச் சூழலுக்கு இயைந்து எனக்குமோர் ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ பட்டம் தரலாம். ஆறாவது முதல் எட்டாவது வரை ஒழுகினசேரி எங்கோடிச் செட்டியார் தமிழாசிரியர். ஒன்பது முதல் பதினொன்று வரை தாழக்குடி மாதேவன் பிள்ளை. வாங்கிய ஊதியத்துக்கு வஞ்சனை இல்லாமல் சொல்லித் தந்தனர் என மொழிவதைக் காட்டிலும் வாங்கிய ஊதியத்துக்கு மூன்று மடங்கு பாடம் நடத்தினர் என்பது பொருத்தமாக இருக்கும். இல்லையென்றால் அறுபதாண்டுகள் கடந்தும் அவர்களின் பெயரினைச் சொல்வேனா? அகப்பையில் கோரக்கோர வருவதற்கு அவர்கள் பானையிலும் தாராளமாக இருந்தது. அல்லாது நாம் மாப்புலவர் குடும்பத்து, மூப்புத் தமிழறிஞர் குடும்பத்துக் குலக்கொழுந்து அல்லவே!

ஏழாவது வகுப்பில் வாசிக்கும்போது எமக்கு அறிமுகமான திருக்குறளின் ஒரு சொல்லே ஈண்டு கட்டுரையில் முயலப்படுவது! வேறு என் செய? திக்கற்றவனுக்குத் திருக்குறளே துணை. திருக்குறளின் அறத்துப்பாலின் நடுவுநிலை அதிகாரத்துக் குறள் அது.

‘தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்’

என்பதந்தக் குறள். வயக்காட்டிலிருந்து நேரே வகுப்புக்கு வரும் எங்களுக்கு அர்த்தமாகும்படிப் பாடம் நடத்துவார்.

ஒருவர் தகுதியானவரா, நேர்மையானவரா, யோக்கியரா, அறமும் ஒழுக்கமும் பேணுபவரா அல்லது புன்மகனா என்பது எப்படித் தெரியும்? அவரது எச்சத்தால் காணப்படும் என்பார் திருவள்ளுவர். பறவைகள் கழிக்கும் மலத்தை யாம் எச்சம் என்போம். மானுடனின் எச்சம் என்பது அதுவல்ல. வாழ்ந்து மறைந்தபின்பு விட்டுச்செல்லும் பெருமைகள் அல்லது சிறுமைகள். வாசம் அல்லது துர்நாற்றம்.

சமூகமே நற்சான்று உரைக்கும், “நல்ல மனுசன் பா!” என்று அபிப்பிராயம் வரும். “மனுசனா அவன்?” என்ற பழிச்சொல்லும் வரும். அதாவது ஒருவன் செய்த நல்லவையோ, அல்லவையோ அவனது எச்சம் எனப்படும். அதுவே அவனைத் தக்காரா அல்லது தகவிலரா என்பதைத் தீர்மானிக்கும்.

தக்கார் என்பது இன்று நமக்கோர் பதவியின் பெயர். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் போன்ற அமைப்பால் நியமிக்கப்படுவதல்ல. ஆளும்கட்சிப் பிரமுகர்களுக்கான பதவி. இந்து அறநிலையத்துறை ஆலயங்களை நிர்வகிக்க அரசு நியமிக்கும் அறங்காவலரே தக்கார் எனப்படுபவர். TNPSC–க்கும் இதற்கும் என்ன வேறுபாடு எனக்கேட்டால், முன்னதற்குப் போட்டித் தேர்வு எழுத வேண்டும். பெரும்பாலும் அஃதோர் சடங்கு அல்லது சம்பிரதாயம். பணம் பாதாளம் வரை பாயும். தக்கார் என்போரில் பெரும்பான்மையோர் ஆற்றும் அரும்பெரும் இறைப்பணி, சமூக நற்பணி, எவை என நாமிங்கு பேசாதிருப்பதே பெருமை. இந்துக் கோயில்களின் தக்கார் இறை மறுப்பாளராக இருக்கலாம், மாற்று மதத்தவராயும் இருக்கலாம் என்பது சமூக நீதியின் விதி.

அதற்காகத் தக்காருக்கு உண்டியலில் பங்கு, சொத்துக்களை வேண்டியவர்களுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொண்டு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடுதல், சிலைகளை ஆபரணங்களை காணாமல் போக்குதல், தம்மைப் பதவியில் அமர்த்திய அரசியல் கட்சித் தலைவருக்கு அத்தக்கூலியாகப் பணிசெய்தல் என்பவை தொழில் என்று நீங்கள் வீணாகக் கற்பனை செய்து கொள்ளலாகாது! இதெல்லாம் செய்வதாயின் அவர் எங்ஙனம் தக்கார்?

எச்சம் எனும் சொல் பற்றியும் நாம் பேசல் வேண்டும். ஒருவன் செய்த தான தருமங்கள், கல்விக்காக மருத்துவத்துக்காக செய்த சேவைகள், தான் சம்பாத்தியத்தையும் மூதாதையர் சொத்தையும் தன் பிள்ளைகளுக்குப் போக மிஞ்சியதை அறக்கட்டளை நிறுவி சமூகத்துக்கு ஆற்றிய பணிகள், மனிதகுல மேம்பாட்டுக்காகச் செய்த ஆய்வுகள், கலை இலக்கியம் இசைக்கு என ஆற்றிய ஊழியங்கள், எழுதிய நூல்கள், செய்த திருப்பணிகள், உடுக்கை இழந்தவன் கையெனப் பிறர்க்குச் செய்த உதவிகள் எனும் எண்ணற்ற காரியங்கள் ஒருவனின் எச்சம்.

தமிழாசிரியர் சொல்வார், “பெத்த பிள்ளைகளும் எச்சம்தான்டா!” என்று. பெரியவர்கள் இலகுவாக அறிவுறுத்துவார்கள், “எலே! அப்பன் பேரைக் காப்பாத்தணும் கேட்டயா?” என்று. “அப்பனுக்குப் பிள்ளை தப்பாமப் பொறந்திருக்கான்” என்பார்கள் பாராட்டாகவும் வசவாகவும்.

இன்றோ அறக்கட்டளைகள் என்பன பெரும்பாலும் வருமானவரி விலக்குக்கும், மறைமுகமான வெளிநாட்டுப் பணங்கள் பெறவும், செலவுக்கணக்கு எழுதவும் என்றே ஆகிப்போயின.

ஒருவனுடைய நல்ல காரியங்கள் யாவுமே அவனுடைய நல்ல எச்சங்கள். தக்கார் என்பது அவரது எச்சத்தால் காணப்படும். தகவிலர் என்பதுவும் அவரது எச்சத்தினாலேயே அறியப்படும். எவரும் அரசுப் பணியை உதிர்ந்த மயிர் என வீசிவிட்டுத் தம் இன மக்களுக்குப் போராட அரசியல் களமாட வரலாம். போற்றுதலுக்குரிய செயல். ஆனால் களமாட எனும் சொல் எழுத்துப் பிழையாகக் களவாட என்று மாறி இருபது ஆண்டுகளில் எழுநூறு கோடி சம்பாத்தியம், ஆயிரத்து இருநூறு கோடி சம்பாத்தியம் என்றால் எச்சத்தால் அவர் தக்காரா, தகவிலரா?

தகவிலர் என்றால் உண்மையற்றவர், நேர்மை அற்றவர், ஒழுக்கம் கெட்டவர், அறத்துக்கே கூற்றானவர், அரசியல் பிழைத்தவர், கூட்டிக் கொடுத்தவர், காட்டிக் கொடுப்பவர், வஞ்சகர், எத்துவாளி, ஏய்ப்பன், பொறுக்கி… என்ற குருவாயூரப்பா!

“நல்லோரு மனுசன்… பொட்டுனு போயிட்டான்” என்று சமூகம் வருந்துமானால் அவர் தக்கார். “பேப்பய… நீசப் பாவி… இப்பமாவது செத்தானே!” என்று சமுகம் ஆசுவாசப் பெருமூச்சு விடுமானால், அவர் தகவிலர். நெஞ்சில் ஈரம் கொண்டு, நியாயமாகப் பொருள் சேர்த்து, தன் சந்ததியாருக்கும் பொருள் ஈட்டி, ஏழை எளிய மக்களுக்கும் கொடுத்துச் சாகிறவன் தக்கார். தன் பெண்டு, தன் பிள்ளை, தன் பேரன், தன் சின்ன வீடு, வைப்பாட்டி, கூத்தியார், தன் கொழுந்தியாள், மைத்துனர், தன் சகோதர சகோதரிகள் அவர் எல்லோரது மக்கள், மருமக்கள் என்று நாட்டைக் கொள்ளையடித்துப் புன்மையான செல்வம் சேர்த்தவர் தகவிலர். இது நம் வசவல்ல, சாபமல்ல, வள்ளுவன் வாய்மொழி.

முன்பே சொன்னேன், எங்கள் தமிழாசிரியர் கற்பித்தார் என. எச்சம் என்பதற்குப் பிள்ளைகள் என்றும் பொருள் கொள்ளலாம் என. அடாவடியாகத் திரியும் சிலரைப் பார்த்து ஊரில் பெரியவர் சொல்வார், “அப்பன் பேரைக் கெடுக்கதுக்குன்னே வந்து வாச்சிருக்கான், கழுதைக்கு மத்தது வாச்சது மாதிரி” என்று. “எப்படியாப்பட்ட மனுசனுக்கு இப்படியாப்பட்ட பிள்ளை!” என்பார்கள். எனவே நன்மக்கட்பேறு வாய்த்தவர் தக்காரும் வாய்க்காதவர் தகவிலருமா? சரி, மக்கட்பேறு இல்லாமற் போனவர்? திருமணமே செய்து கொள்ளாதவர்? எனவே எச்சம் எனும் சொல்லுக்கு மக்களையும் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாமே தவிர, மக்கள் மட்டுமே என்று பொருள் கொளல் பொருந்தாது.

மற்றுமோர் கேள்வியும் உண்டு. தலைவன் ஒருவனுக்கு அவனது தளபதிகள், உப தளபதிகள், சிறு தளபதிகள், குறுந்தளபதிகள் என்போர் எச்சங்களா? காந்தியின், அம்பேத்காரின், மார்க்சின், செகுவேராவின், மாவோவின், பெரியாரின், காமராசரின் வழிவந்தவர் என்று தம்மை அறிவித்துக் கொண்டு கொலையும், கொள்ளையும் வஞ்சகமும் சூதும் தரகும் சுரண்டலும் அரசியல் வாணிபமும் செய்பவரைக் கணக்கில் கொண்டு அவர்களது தலைவர்களைத் தகவிலர் எனக் கொள்ளல் தகுமா? அந்தக் கணக்கில் பார்த்தால் கொண்டாடப்படும் மத குருக்களில் எவரை இன்று தக்கார் எனலாம்? எனவே எச்சங்களைக் கணிக்கும்போது தொண்டர்களையும் விலக்கி நிறுத்துவது தலைவருக்குப் பெருமை.

என்றாலும் தகவிலர் என்று வள்ளுவர் பேசும் குப்பைமேடுகளை, மலக்கிடங்குகளை, கழிவுநீர்க் கால்வாய்களை எத்தகு பட்டங்கள் சூட்டி, எங்கெங்கு சிலை நாட்டி, எப்படி ஆரவார அந்திமங்கள் செய்திருக்கிறோம் என்பதை சிந்தை தெளிவுள்ளோர் ஓர்மைப்படுத்திப் பார்க்கலாம்.

தகவு வேறு தகவல் வேறு என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். தகவல் எனும் சொல்லுக்கு அகராதிகள் தரும் பொருள்களைத் தாழே தருகிறேன்.

தகவல் : 1. Information, Intimation, செய்தி.

‘ஒரு தகவலும் வரவில்லை எனக்கு’ என்று தினமும் புழங்குகிறோம். அரசாங்கமும் ஆளுங்கட்சியும் சொல்ல விரும்புவதை மாத்திரமே பேசுகிற ‘தகவல் தொடர்புத் துறை’ உண்டு. ஊடகங்களும் தமது முதலாளிகள் கட்டளையிடும் தகவல்களை மட்டுமே அரித்துத் திரித்துச் சாயமேற்றி வெளியிடும்.

2. திருட்டாந்தம். திருஷ்டாந்தம் எனும் சமற்கிருதப் பிறப்பு. Citation, Illustration, Example.

3. Appropriate Answer. நேருத்திரம். அதாவது நேர்+உத்திரம். உத்திரம் என்றால் பதில். மலையாளத்தில் உத்திரம் எனும் சொல் புழக்கத்தில் உண்டு. நேர்விடை எனலாம் தமிழில்.

தகவல் எனும் சொல்லுக்கு மூன்று பொருள்கள் என்றால், தகவு எனும் சொல்லுக்கு பதினோரு பொருள்கள் தரப்பட்டுள்ளன அகராதிகளில், நிகண்டுகளில். பதிவுகள் கீழ் வருமாறு.

தகவு : 1. Suitability, Fitness, Worthiness. தகுதி.

தகுதி எனும் சொல் திருக்குறளில் உண்டு. நடுவுநிலைமை அதிகாரத்தின் முதற்குறள் –

‘தகுதி என ஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்’

என்று பேசும். அனைத்துப் பகுதி மக்களிடமும் முறை தவறாமல் நடந்துகொள்ளும் நேர்மை போற்றுதற்கு உரியது என்பது பொருள். மணிமேகலை சக்கரவாளம் உரைத்த காதையில் “தகவிலை கொல்லோ?” என்கிறது. தகுதி என்ற பொருளில்.

2. Similitude, Resemblance, Comparison, உவமை.

3. Quality, State, Condition, Manner, குணம்.

4. Emminence, Greatness, பெருமை.

திருவாசகத்தில் யாத்திரைப் பத்து பகுதியில் மாணிக்கவாசகர் ‘தகவே உடையான் தனைச் சாரத் தளராதிருப்பார்’ என்பார். பெருமை உடையவன் தன்னைச் சார்ந்தவர் என்றும் தளர்வடைய மாட்டார் என்பது பொருள்.

5. Mercy, Kindness, அருள்.

தகவுக்கு அருள் எனப் பொருளுரைப்பது சூடாமணி நிகண்டு.

6. தெலுங்கில் தகவு எனும் சொல்லுண்டு. பொருள் Justice, Equity, நடுவு நிலைமை.

7. Strength, Ability, வலிமை.

கம்ப ராமாயணத்தில், கிட்கிந்தா காண்டத்தில், மயேந்திரப் படலத்தில் கம்பன் பேசுவான் –

“நீலன் முதல்பேர், போர் கெழு கொற்ற நெடு வீரர்,
சால உரைத்தார், வாரி கடக்கும் தகவு இன்மை”

என்று. ‘நீலன், அங்கதன், சாம்பன் முதலாய போரில் சொல்லுவதற்கு அரிய ஆற்றல் காட்டும் கொற்ற நெடுவீரர் உறுதியாக உரைத்தனர், தமக்குக் கடல் கடக்கும் வலிமை இல்லை என’ என்பது பொருள்.

8. Knowledge, Wisdom, அறிவு.

தகவு எனும் சொல்லுக்கு அறிவு என்ற பொருள் தருவது அரும்பொருள் விளக்க நிகண்டு. கம்ப ராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில், மந்திரப் படலத்தில் வசிட்ட மாமுனிவன் தயரதனிடம் கூறும் பாடல், “தக்கதே உரைத்தனை; – தகவோய்!” என்பது. ‘தகுந்ததையே உரைத்தாய் அறிவுடையவனே’ என்று பொருள் எழுதினார்கள்.

9. Clarity, தெளிவு.

தெளிவு என்ற பொருளைத் தகவுக்கு தருவது அரும்பொருள் விளக்க நிகண்டு.

10. Chastity, கற்பு.

பரிபாடலில் வைகையைப் பாடும் நல்லந்துவனார்,

‘தகவுடை மங்கையர்’ என்கிறார். கற்புடைய மங்கையர் என்று பொருள் சொன்னார்கள்.

11. Good Behaviour, Morality, Virtue, நல்லொழுக்கம்.

இந்தப் பொருளைத் தருவது யாழ்ப்பாண அகராதி.

ஆக தகவு எனும் சொல்லுக்கு நாமறியும் பொருள்கள் – தகுதி, உவமை, குணம், பெருமை, அருள், நடுவு நிலைமை, வலிமை, அறிவு, தெளிவு, கற்பு, நல்லொழுக்கம் எனப் பதினொன்று. இவற்றுள் உவமை, கற்பு எனும் இரு பொருள்கள் நீங்கலாகப் பிற ஒன்பதுமே திருவள்ளுவர் பேசும்

‘தக்கார் தகவிலர் என்பது அவர்தம்
எச்சத்தால் காணப் படும்’

எனும் குறளுக்குச் சிறப்பாகப் பொருந்துகின்றன. வியப்பாக இருக்கிறது! திருவள்ளுவர் எப்படியாகப்பட்ட சொல்லைக் கையாள்கிறார் பாருங்கள்! அவரே சொல்வன்மை அதிகாரத்தில் கூறுகிறார் –

‘சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து’

என்று. ஐந்து ‘சொல்’ கையாள்கிறார் இந்தக் குறளில். ஆமாம்! தகவிலர் எனும் சொல்லை வெல்லும் சொல் எது?

Recommendation என்ற ஆங்கிலச் சொல் நமக்கு அறிமுகமாகிச் சில நூற்றாண்டுகள் ஆயின. சமூகத்தில் செல்வாக்கு உடையவர்கள் கல்விக்கும் வேலைக்கும் பணி உயர்வுக்கும் ஒப்பந்தங்களுக்கும் நீதிக்கும் இதனைச் செய்து தகவுடைய எளியவர் வறியவர் வயிற்றில் அடித்தனர். பின்னர் Recommendation உடன் இலஞ்சமும் தாலிகட்டிக் கொண்டது. கல்வித்தகுதி எல்லாம் இருந்தாலும் நன்கொடை என்னும் புனைபெயர் பூண்ட இலஞ்சம் என்னை நந்திபோல் வழிமறித்து நின்றது. கோரப்பட்ட இருபத்தைந்தாயிரம் கொடுக்க வக்கில்லை 1970-களில். கல்லூரியில் கணித விரிவுரையாளர் வேலை மறுக்கப்பட்டது. வேலை கிடைத்திருந்தால் இதுபோன்ற கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்க மாட்டேன். புல்கானின் என்பதுபோல் மறைபெயர் ஒன்று தரித்து முற்போக்குப் புரட்சிக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருப்பேன்.

Recommendation என்ற சொல்லை சிபாரிசு என்று தமிழாக்கினர். ‘பெரிய சிவாரிசு இல்லாட்டா கெடைக்காது லே! நமக்கெல்லாம் எங்க? நரி சிவலோகம் போன கதைதான்!’ என்றார் அப்பா. Recommendation என்ற சிபாரிசு ஊழலின் முதல் காலடி. “பையன் நம்ம அக்காளுக்கு மகனாக்கும்… பாத்துச் செய்யுங்கோ!” போன்ற சொற்களே ஊழலின் வாசற்படிதான். இன்று ஊழல், லஞ்சம் எனப் பெருங்கூச்சல் இடுபவர்கள் அதனை மறத்தல் ஆகாது.

இன்று அமைச்சர்களாக, ஆளுநர்களாக, நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களாக ‘மக்கள் பணி’ ஆற்றுபவரில் பெரும்பான்மையோரும் கட்சித் தலைமகனுக்கு வந்த சிபாரிசுகள் இல்லாமல் சாத்தியமா? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற உறுப்பினர் சிபாரிசு எனும் சொல்லின் அர்த்தம் அறியாதவர்களா? பேரூராட்சி தேர்தலுக்கு உறுப்பினர் பதவிக்கு நிற்பவர் ஐம்பது லட்சம் பணம் செலவு செய்கிறாராம். எந்த சிபாரிசுக்கும் செவிமடுக்காமல், அதைப்போல் நூறுபங்குப் பணம் எங்ஙனம் ஈட்டுவார்?

சிபாரிசு என்பது சமற்கிருதச் சொல் என்பதால் அதனைப் பரிந்துரை என்று தமிழ்ப்படுத்தினார்கள். சிறப்புரை, கருத்துரை, தகுதியுரை, அணிந்துரை, முன்னுரை, தலைமையுரை, வாழ்த்துரை, பணிந்துரை, அருளுரை, பரப்புரை போலப் பரிந்துரை. பரிந்து+உரை = பரிந்துரை. அற்புதமான சொல். ஆனால் சிபாரிசு, பரிந்துரை என எச்சொல் பயன்படுத்தினாலும் அது அநீதியின் அடுத்துள்ள சொல்தானே!

ஊழலுக்கான பாதையில் பல படிகள் கடந்து பரிந்துரை எனும் சொல்லில் வந்து தாவளம் போட்டுள்ளோம். Night Soil என்றாலும், சண்டாஸ் என்றாலும், கழிவு என்றாலும், மலம் என்றாலும், உண்மையில் அது பீ தானே நாயன்மாரே!

‘தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்து எந்தாய்
இன்னதென அறிகிலார் தாம்செய்வ திவர்பிழையை
மன்னியும் என்றுஎழிற் கனிவாய் திறந்தார் நம் அருள்வள்ளல்’

என்பது இரட்சணிய யாத்திரீகத்தில் ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை பாடிய பாடல். இயேசுபிரான் சிலுவையில் அறையப்படும் காட்சியில். அங்கு பேசப்படும் சொல், பரிந்து.

பரிந்து எனும் சொல்லின் பிறப்பே பரிந்துரை. ஆனால் இன்று பரிந்துரை எனும் சொல் வந்து சேர்ந்திருக்கும் இடம் பரிதாபத்துக்குரியது. பரிந்துரையும் பணமும் இருந்தால்தான் இன்று கல்வி, வேலை, பணி உயர்வு, பதவி, ஒப்பந்தங்கள் and what not? நாம் தக்காரா தகவிலரா?

பேரகராதி தகவுரை என்றொரு சொல் தருகிறது. தகவு+உரை. தகவுரை என்பதன் பொருள் Recommendation, சிபாரிசு என்கிறது பேரகராதி. தொகுக்கப்பட்ட காலத்தில் பரிந்துரை எனும் சொல் பிறந்திருக்காது போலும். ஆனால் தகவுரை எனும் சொல் பன்னிரண்டாம் நூற்றாண்டுச் சொல்.

வைணவ இலக்கிய நூல்களில் அஷ்டப் பிரபந்தம் என்று ஒன்று. அஷ்டம் என்றால் அட்டம், எட்டு. அஷ்டப் பிரபந்தம் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றியது. இத்தொகை நூலுக்கு, நூலாசிரியர் அஷ்டப் பிரபந்தம் என்று பெயரிடவும் இல்லை, இவற்றில் அடங்கிய எட்டுப் பிரபந்த நூல்களைச் சேர்த்தும் எழுதவில்லை. பின்னர் தொகுத்தவரோ, பதிப்பித்தவரோ இந்தப் பெயரைச் சூட்டி இருக்கலாம். சோழ நாட்டில் திருமங்கை என்னும் திருத்தலத்தில், அந்தண குலம் என்னும் யாவுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் குலத்தில், வைணவ சமயத்தில் பிறந்த பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு என்மனார் புலவ!

அஷ்டப் பிரபந்தம் என்றறியப்படுகிற இந்நூற்றொகையின் உறுப்புக்களான பிரபந்தங்கள் அதாவது சிற்றிலக்கியங்கள் எட்டு. திருவரங்கக் கலம்பகம் திருவரங்கத்து மாலை, திருவேங்கட மாலை, திருவரங்கத்தந்தாதி, திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி, சீரங்க நாயகர் ஊசல். ஆக ஒரு கலம்பகம், இரண்டு மாலை, நான்கு அந்தாதி, ஒரு ஊசல். கலம்பகம், மாலை, அந்தாதி, ஊசல் முதலாய சிற்றிலக்கியங்கள் பற்றி அறிய விரும்புபவர் எனது, ‘சிற்றிலக்கியங்கள்’ எனும் நூலைப் பார்க்கலாம். தமிழினி வெளியீடு, 2013.

அஷ்டப் பிரபந்தத்தில் ஏழாவது நூலான நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி எனும் நூலில், திருப்பாடகம் எனும் திருத்தலம் பற்றிய பாடல் :

‘தவம் புரிந்த சேதநரை, சந்திரன், ஆதித்தன்,
சிவன், பிரமன், இந்திரனைச் செய்கை – உவந்து
திருப்பாடகம் மருவும் செங்கண்மால் தன்மார்பு
இருப்பாள் தகவு உரையாலே’

என்பதாகும். முனைவர் இரா.வ.கமலக்கண்ணன் உரை – ‘திருவுள்ளத்தில் மகிழ்ந்து திருப்பாடகம் என்னும் திருத்தலத்தில் நித்திய வாசம் செய்கின்ற சிவந்த கண்களை உடைய திருமால், தவம் செய்த ஆத்மாக்களை சந்திரனும், சூரியனும், சிவபிரானும், பிரமதேவனும், தேவேந்திரனும் ஆகச் செய்வது, தனது வலத் திருமார்பில் வீற்றிருப்பவளான திருமகளினது தகவுரையாலே ஆகும்!’ பாடலில் இருக்கும் தத்துவச் செய்திகளினுள் போக விரும்பாமல் எனதுள்ளம் நிலை கொள்வது, ‘தன் மார்பில் இருப்பாள் தகவுரையாலே’ என்னும் தொடரில்.

தகவுரை எனும் சொல்லின் பொருளாக நாம் சிபாரிசு, பரிந்துரை எனும் சொற்களையே நாடவேண்டியது இருக்கிறது. தகவுரை எனும் சொல் இன்னும் தூய்மையாக இருக்கிறது. சிபாரிசு, பரிந்துரை போல் ஆபாசப்படவில்லை. தக்கார் தகவிலர் என்பது அவரவர் தகவுரையாலும் காணப்படும். பரிந்துரைக்கு மாற்றாக, சகல தகுதிகளுடனும் தகவுரை எனும் சொல்லை அறிமுகம் செய்வதில் எமக்கு கர்வம் உண்டு.

தகவிலார் என்கிறார் திருவள்ளுவர். தகவின்மை என்றுமோர் சொல்லுண்டு. தகவு+இன்மை = தகவின்மை. அறிவு+இன்மை = அறிவின்மை, கரவு+இன்மை = கரவின்மை என்பது போல.

தகவின்மை என்றால் Unworthiness, Un suitability, தகுதி இன்மை என்பது ஒரு பொருள். Injustice, Partiality, நடுநிலை இன்மை என்பது இரண்டாவது பொருள். Trouble, Anxiety, வருத்தம் என்பது மூன்றாம் பொருள். தஞ்சைவாணன் கோவையின், ‘தணிவாய் நின் தகவின்மை’ என்ற பாடல் வரி மேற்கோள். உனது வருத்தம், பதற்றம் தணிவாயாக என்பது பொருள். முதல் இரண்டு பொருள்களுக்கும் மாற்றாக அரசியல்வாதித்தனம் என்றொரு சொல்லை உபயோகித்துவிடலாம்.

தகவோன் என்றொரு சொல்லும் கிடைக்கிறது. One who is eminently fitted என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். Suitability of worthy என்றும். அதாவது தகவோன் என்றால் தகுதியுடையவன். தகவிலன் என்பதற்கு எதிர்ப்பதம் தகவோன். மறுதலையாகவும் சொல்லலாம்.

நாம் முன்பே குறித்த பதினோரு பொருள்களிலும் தகவு எனும் சொல்லை ஆள்கின்றன சங்க இலக்கியங்களான அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, பரிபாடல், புறநானூறு முதலானவை. சில பாடல் வரிகளை மேற்கோளாகத் தர தன்முனைப்பு ஏற்படுகிறது.

அகநானூற்றில் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிகண்ணனார் பாடல் ‘அழி தகவு’ எனும் சொல்லை ஆண்டுள்ளது. அழிதகவு என்றால் வருந்துதல் என்று பொருள் சொல்கிறார் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். அகநானூற்றில் ஓரம்போகியார் பாடல் ‘தற்தகவு’ என்ற சொல் தருகிறது. தன் தகவு என்பதே புணர்ச்சி விதிகளின்படி தற்தகவு ஆகிறது. தற்தகவு என்றால் தன் தகுதி என்று பொருள். தன் தகுதி என்ன என்று அறியாமல், அல்லது அபரிமிதமான மதிப்பீடு வைத்துக்கொண்டு சமூகப் பெருந்திரு என்று தம்மை நினைத்துக் கொள்பவர்கள் மக்களை மந்தை என்றெண்ணி அறிவுரையாக அருளிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஐங்குறுநூறு நூலில் முல்லைத்திணை பாடும் பேயனார், பாணன் பத்து முதற்பாடலில் “என் அவர் தகவே?” என்று கேட்கிறார். அவனது தகுதி என்ன என்பது பொருள். அடியாட்களும் குண்டர்களும் தரகர்களுமே இன்றைய தகவுகள்.

கலித்தொகையில் மருதக்கலி பாடிய மருதன் இளநாகனார், காமக் கிழத்தி கூற்றாகக் கூறுகிறார், ‘தாழ்ந்தாய் போல் வந்து தகவில செய்யாது’ என்று. மனக்குறை உடையவன் போல இங்கு வந்து தகுதி இல்லாச் செயல்களைச் செய்யாதே என்பது பாடல்வரியின் பொருள்.

குறுந்தொகையில் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல். பாலைத் திணையில் அமைந்தது. இயற்கைப் புணர்ச்சியில் இன்பம் தந்த தலைமகன் பிரிந்து போய் விடுவானோ எனும் அச்சத்தில் வருந்தும் தலைவியிடம் தலைவன் உரைத்தது.

‘மெய் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப,
நின் துறந்து அமைகுவென் ஆயின் எல் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக! யான் செலவுறு தகவே’

என்பது பாடல். ‘மெல்லியல்புகளை உடைய அரிவைப் பருவத்துப் பெண்ணே! நீ மனதினுள் வருந்திப் புலம்பாதே! உன்னைத் துறந்து வாழ்வேன் என்றால் என்னிடம் விரும்பி வந்து பொருள் பெற்றுச் செல்லும் இரவலர் என்னை நாடி வராது தவிர்க்கும் நாட்கள் பலவாக ஆகும்படியான தகுதியைப் பெற்றேன் ஆகுக!’ இது ஓர்நேர் உழவனார் மகனார் கோயம்புத்தூரில் உறையும் நாஞ்சில் நாடனார் உரை.

நற்றிணையில் பெயரறியாப் புலவன் ஒருவனின் பாலைத்திணைப் பாடல், ‘விசும்பின் தகவே’ என்று மழைமேகம் பொழியத் தகுதியுடையதாக நிற்கும் தன்மை உரைக்கிறது.

தகவு எனும் சொல்லின் பொருள்களை வரிசைப்படுத்தும்போது பரிபாடல் வரியொன்றை மேற்கோள் காட்டினோம். புறநானூற்றில் ஒரு பாடல் ஆலத்தூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியது. திணை வஞ்சி. துறை துணை வஞ்சி. வஞ்சித்திணை என்பது பகையரசர் இடத்தைக் கொள்ளக் கருதி வஞ்சிப்பூ சூடிச் செல்வது. துணை வஞ்சித்துறை என்பது பிறரை வெல்லவோ கொல்லவோ துணிந்து நிற்கும் வீரனைச் சில கூறி அமைதிப்படுத்துதல். பதின்மூன்று வரிப்பாடலின் கடைசி வரி, ‘‘நாணுத் தகவு உடைத்தே!” என்று முடியும். பொருள், ‘நாணமுறச் செய்யும் தகுதியை, தன்மையை உடையது’ என்பது. கோவூர்கிழார் புறநானூற்றில் நெடுங்கிள்ளியைப் பாடும்போது, இதே சொற்றொடர் பயன்படுத்தியுள்ளார், ‘நாணுத் தகவுடைத்து’ என்று.

புறநானூற்றிலேயே சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடும் குண்டுகட்பாலியாதனார் –

‘என் சிறுமையின் இழித்து நோக்கான்,
தன் பெருமையின் தகவு நோக்கிக்,
குன்று உறழ்ந்த களிறு என்கோ?
கொய் உளைய மா என்கோ?
மன்று நிறையும் நிரை என்கோ?
மனைக் களமரொடு களம் என்கோ?
ஆங்கு அவை கனவு என மருள,வல்லே, நனவின்
நல்கியோனே, நசை சால் தோன்றல்,
ஊழி வாழி, பூழியர் பெருமகன்’

என்று பாடுகிறார்.

‘என் சிறுமையைக் கண்டு இகழ்ந்து பாராது, தனது சொந்தப் பெருமையும் தகுதியும் நோக்கி, குன்றென நிமிர்ந்த களிறுகளையும், மிடுக்குடன் தலை அசைக்கும் குதிரைகளையும், மன்றம் நிறைந்து போகும்படியாக ஆநிரைகளையும், வீட்டுப் பணி செய்யவும் களப்பணி செய்யவும் ஆட்களையும், நானிது கனவோ என மயங்கும்படி உண்மையில் வழங்கினான். அவன் என்னில் விருப்பம் மிகுந்த அன்புத் தலைவன், பூழி நாட்டுத் தலைவன். அவன் கடையூழிக்காலம் வரை நீடு வாழ்க’. இது பாடலின் பொருள்.

இங்கும் நமது தேடல், தகவு எனும் சொல் குறித்தே! தகுதி என்ற பொருளில் இங்கு தகவு ஆளப்பட்டுள்ளது. ஆகவே தகவு எனும் சொல் மிகவும் ஆழமான பொருளுடைய தமிழ்ச் சொல்லென அறிகிறோம்.

எனவே தகவு எனும் தன்மை, தக்கார் எனும் சிறப்பு, கடற்கரையில் புதைக்கப்பட்டு நினைவு மண்டபங்கள் எழுப்பப்படுவதிலோ, விரல்களை நீட்டிக்கொண்டு முச்சந்தி நாற்சந்திகளில் காகங்கள் இளைப்பாறச் சிலைகளாக நிற்பதிலோ, பாராளுமன்ற வளாகத்தில் சிலைவைக்க இடம் கோரிப் பெறுவதிலோ, விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அரசுக் கட்டிடங்கள் எனப் பெயர் சூட்டுவதிலோ, இல்லை, இல்லை, இல்லவேயில்லை. கால் குப்பி மட்டரக மதுவுக்கும் காக்கா பிரியாணிக்கும் கூலிக் கூட்டம் ‘அம்மாடி தாயரே!’ அடிப்பதிலும், நடந்து வா, நடந்து வா என்று மேல்வலிக்காமல் கூக்குரல் இடுவதிலும், வாடகைக் கவிஞர் கூட்டம் இரங்கற்பா பாடுவதிலும், கொள்ளையின் சிதறிய எச்சில் துணுக்குகள் நக்கித் தின்றவர் கரைத் துண்டால் கண்ணீர் துடைப்பதிலும், பெத்த தகப்பன் செத்துப் போனது போல் மொட்டை அடிப்பதிலும் இல்லை.

தகவுடையவன், தக்கார் என்பவன் வாழ்வாங்கு வாழ்ந்தவன். அவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.

புறநானூற்றில் நரிவெரூஉத் தலையன் என்ற புலவர் பாடுகிறார் –

‘நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்’

என்று. நம்மால் இயலுகிற காரியம் தக்காராக இருக்கிறோமோ இல்லையோ, தகவிலராக இல்லாது இருக்க முயலுவோம்!

அடையாளம் உரைத்தல் – கா. சிவா கட்டுரை

வரலாற்றில் நிகழ்ந்த அரிய நிகழ்வை விவரிக்கும் போது அதுவொரு வரலாற்றுத் தருணம் எனக் கூறுபவர் உண்டு. நான் எடுத்துக் கொண்டது காவியத் தருணம். ஆம், காவியத்திலுள்ள ஓர் அரிய நிகழ்வுகாதலன் தன் காதல் இணையை வர்ணித்தல் இயல்பு. கணவன் தன் மனைவியை வர்ணித்தல் அரிது. அதுவும் மற்றொரு ஆணிடம் தன் காதல் மனைவியின் உடலகை வர்ணித்தலென்பது அரிதினும் அரிதென்றே நான் கருதுகிறேன். கம்பராமாயணத்தில் இடம் பெற்றிருக்கும் இந்தக் காவியத் தருணம் வேறு ஏதேனும் காவியங்களில் இருப்பதாக என் சிற்றறிவிற்கு தென்படவில்லை.

வனவாசம் முடிவுறும் தருவாயில் இராவணன் சீதையை கவர்ந்து சென்றுவிட சுக்ரீவனின் வானரப் படைகளை சீதா தேவியைத் தேட அனுப்புகிறார்கள். அப்போது அனுமனைத் தனியே அழைத்த இராமன் தன் மனைவியை இதுவரை கண்டிராத அனுமனுக்கு அவளின் அங்க அடையாளங்களை விரிவாகக் கூறுகிறான்.

கம்பர், காவியத்தின் பல இடங்களில் சீதையின் அழகை வர்ணித்திருந்தாலும், இராமன் சீதையின் நினைவில் தனியே புலம்பியிருந்தாலும் அணுக்கன் அனுமனிடம் அவளின் அவயங்களின் அழகை விவரிப்பது அரிய அழகிய நிகழ்வு. இது கிஷ்கிந்தா காண்டத்தின் நாட விட்ட படலத்தில்இடம் பெற்றிருக்கிறது. முப்பத்து மூன்று பாடல்களில் பாதாதி கேசமாக விரிவாக வர்ணித்துள்ளார்.

இந்தப் பாடல்களின் மற்றொரு சிறப்பு பெண்களின் அவயங்களுக்கு மரபாக என்னன்ன உவமைகள் கூறப்படுகின்றன என்பதை வரிசையாகக் கூறிவிட்டு அதில் சீதைக்கு எது பொருத்தமானது என்பதைக் கூறுவது போன்று அமைக்கப் பட்டிருக்கும் பாங்கு.

கம்பராமாயணப் பதிப்புகளில் கொடுக்கப்பட்டிருக்கும் வரிசை எண்களைத் தந்தால் அது அவரவர் கையிலிருக்கும் பதிப்புகளிலிருந்து மாறுபடக்கூடும். எனவே கிஷ்கிந்தா காண்டத்தில் நாட விட்ட படலத்தில்33-ம் பாடலில் இருந்து அடுத்த முப்பத்து மூன்று பாடல்களிலேயே நான் குறிப்பிடும் பின்வரும் பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இராமன் ,சீதையின் இருபத்தாறு அவயங்களின் அடையாளங்களைக் கூறுகிறான். அனைத்தையும் கூற ஆவல் எழுந்தாலும் முக்கியமானதென்று நான் கருதுவனவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

கால் விரல்கள்

பாற்கடல் பிறந்த செய்ய

பவளத்தை, பஞ்சி ஊட்டி,

மேற்பட மதியம் சூட்டி,

விரகுற நிரைத்த மெய்ய,

கால் தகை விரல்கள்ஐய!-

கமலமும் பிறவும் எல்லாம்

ஏற்பில என்பது அன்றி, இணை

அடிக்கு உவமை என்னோ?

பாற்கடலில் தோன்றிய தெய்வப் பவளத்திற்கு பஞ்சின் மென்மையை ஊட்டி, அதன் மேல் முழு நிலவொளியை ஒளிரச் செய்து , திறமையுடன் அடுக்கி வைத்தது போன்ற எழிலுடன் சீதையின் கால் விரல்கள் இருக்கும். செந்தாமரை மலரையோ பிறவற்றையோ அப்பாதங்களுக்கு உவமையாக ஏற்க முடியவில்லையே வேறெதைக் கூறுவதென திகைக்கிறான். சொல்பவனே திகைத்துவிட்டால் கேட்பவன் நிலையென்ன.

வயிறு

ஆல் இலை, படிவம் தீட்டும்

ஐய நுண் பலகை, நொய்ய

பால் நிறத் தட்டம், வட்டக்

கண்ணாடி, பலவும் இன்ன,

போலும் என்று உரைத்த போதும்,

புனைந்துரை; பொதுமை பார்க்கின்,

ஏலும் என்று இசைக்கின், ஏலா;

இது வயிற்று இயற்கை; இன்னும்

பொதுவாக மகளிரின் வயிறுக்கு உவமையாகக் கூறப்படும் ஆலிலை, ஓவியம் தீட்டும் பலகை, பால் போன்ற வெண்தட்டு, வட்டக் கண்ணாடி போன்றவை சீதையின் வயிறுக்கு உவமையாகாது.

தனங்கள்

செப்பு என்பேன்;கலசம் என்பேன்;

செவ் இளநீரும் தேர்வென்;

துப்பு ஒன்று திரள்சூது என்பென்;

சொல்லுவென் தும்பிக் கொம்பை;

தப்பு இன்றிப் பகலின் வந்த

சக்கரவாகம் என்பென்;

ஒப்பு ஒன்றும் உலகில் காணேன்;

பலநினைத்து உலைவென் இன்னும்.

மகளிரின் தனங்களுக்கு உவமையாக சிமிழ் , பொற்கவசம் , செவ்இளநீர்க்காய் , சூதாட்ட களத்தில் வைக்கும் செப்பு , யானைத் தந்தம், சக்கரவாகப் பறவையென்று இத்தனை இருந்தாலும் சீதையின் தனங்களுக்கு ஒப்புமை கூற உலகில் ஒரு பொருளையும் காணாமல் வருந்துகிறேன்.

கைகள்

ஏலக் கொடு ஈன்ற பிண்டி இளந்

தளிர் கிடக்க; யாணர்க்

கோலக் கற்பகத்தின் காமர் குழை,

நறுங் கமல மென் பூ,

நூல் ஒக்கும் மருங்குலாள்தன்

நூபுரம் புலம்பும் கோலக் காலுக்குத் தொலையும்என்றால்,

கைக்கு ஒப்பு வைக்கலாமோ?

அசோக மரத்தின் கிளைகளிலுள்ள இளந்தளிர்கள் ஒருபுறம் கிடக்கட்டும், வளமையான கற்பக மரத்தின் மனங்கவரும் தளிர்களும், செந்தாமரை மலரும், நூல் போன்ற இடையுடைய சீதையின் சிலம்பு ஒலிக்கும் அழகிய கால்களுக்கே ஒப்புமை ஆகாதே அவற்றை கைகளுக்கு கூறலாமா.

கை நகங்கள்

வெள்ளிய முறுவல், செவ் வாய்,

விளங்கிழை,இளம்பொற்

கொம்பின்

வள் உகிர்க்கு, உவமை நம்மால்

மயர்வு அற வகுக்கலாமோ?

எள்ளுதிர் நீரே மூக்கைஎன்று

கொண்டு, இவறி, என்றும்,

கிள்ளைகள், முருக்கின் பூவைக்

கிழிக்குமேல், உரைக்கலாமோ?

வெண்மையான பற்களும் சிவந்த வாயும் ஒளிரும் அணிகலன்களும் கொண்ட இளமையான பூக்கொம்பு போன்ற சீதையின் கூரிய நகங்களுக்கு உவமையை குழப்பமின்றி தெளிவாகக் கூறமுடியுமா. மகளிரின் கை நகங்களுக்கு ஒப்புமை ஆகாது என தனது மூக்கை இகழ்வதாக் கருதி மகளிரின் இதழ்கள் போலத் தோன்றும் கல்யாண முருங்கையின் மலர்களைக் கொத்தும் கிளியின் மூக்கைத்தான் உரைக்க முடியுமா.

கழுத்து

அங்கையும் அடியும் கண்டால்,

அரவிந்தம் நினையுமாபோல்

செங் களி சிதறி, நீலம்

செருக்கிய தெய்வ வாட் கண்

மங்கைதன் கழுத்தை நோக்கின்,

வளர் இளங் கழுகும், வாரிச்

சங்கமும் நினைதிஆயின்,

அவை என்று துணிதி; தக்கோய்

சீதையின் கைகளையும் கால்களையும் காணும்போது செந்தாமரை நினைவுக்கு வருவதுபோல, சிவந்த, களி பொங்கும் குவளை மலர் போன்ற விழிகள் கொண்ட சீதையின் கழுத்தைக் காணும்போது வளரும் இளம் பாக்கு மரமும், கடலில் இருக்கும் சங்கும் உன் நினைவுக்கு வருமாயின் அது குற்றமென்ற முடிவுக்கு வருவாயாக.

வாய்

பவளமும், கிடையும், கொவ்வைப்

பழனும், பைங்குமுதப் போதும்,

துவள்வுஇல் இலவம், கோபம்,

முருக்கு என்று இத்தொடக்கம்

சாலத்

தவளம்என்று உரைக்கும்

வண்ணம்

சிவந்து, தேன் ததும்பும்ஆயின்,

குவளை உண் கண்ணி வண்ண.

வாய் அது; குறியும் அஃதே

சிவந்தது ஓர் அமிழ்தம் இல்லை;

தேன் இல்லை; உள என்றாலும்,

கவர்ந்த போது அன்றி, நினைப்ப.

ஓர் களிப்பு நல்கா;

பவர்ந்த வாள் நுதலினால்தன்

பவள வாய்க்கு உவமை பாவித்து

உவந்தபோது, உவந்த வண்ணம்

உரைத்தபோது, உரைத்ததாமோ?

குவளை மலர் போன்ற விழிகளுடைய சீதையின் வாய்க்கு உவமையாக பவளத்தையும் சிவந்த நெட்டியையும் கோவைப் பழத்தையும், சிவந்த அல்லி மலரையும் துவளாத இலவ மலரையும், சிவப்பான இந்திர கோப பூச்சியினையும் கல்யாண முருங்கையின் பூவினையும் உவமை கூறினால் அது உண்மையாக இருக்காது. ஏனென்றால் சீதையின் வாய் பல வண்ண மலர்களின் சிவந்த தேனால் நிறைந்த இனிமையுடன் அழகாக ஒளிர்வதாகும்.

சிவந்த நிறத்தில் அமிர்தம் இல்லை, தேனும் இல்லை. அப்படி உள்ளது என்றாலும் சுவைக்கும் போதுதான் இனிமை தருமேயன்றி நினைக்கும்போதே இனிமை தராது. ஒளி பொருந்திய நெற்றியை உடைய சீதையின் பவளம் போன்ற வாய்க்கு மனதில் உவமையை எண்ணி மகிழ்ந்து அதே மனநிலையுடன் உரைப்பது உண்மையாகுமா.

காதுகள்

வள்ளை, கத்திரிகை வாம

மயிர் வினைக் கருவி என்ன,

பிள்ளைகள் உரைத்த ஒப்பைப் பெரியவர் உரைக்கின் பித்து ஆம்;

வெள்ளி வெண் தோடு செய்த

விழுத் தவம் விளைந்தது என்றே

உள்ளுதி; உலகுக்கு எல்லாம்

உவமைக்கும், உவமை உண்டோ?

வள்ளைக் கொடியின் இலையையும், கத்திரிக் கோலையும், அழகிய மயிரை ஒப்பனை செய்யும் கருவியையும் மகளிரின் காதுகளுக்கு உவமையாக இளையோர்கள் கூறுவனவற்றை

பித்துப் பிடித்த பெரியவர்கள்தான் கூறுவார்கள். சீதை அணிந்துள்ள வெள்ளியென மின்னும் வெண்காதணியின் தவமே அவளின் காதுகளாக அமைந்துள்ளது. உலகிலுள்ள எல்லாப் பொருளுக்கும் உவமையாகக் கூடிய ஒப்பற்ற ஒன்றுக்கு உவமை என்பதும் உண்டோ.

கண்கள்

பெரிய ஆய்; பரவை ஒவ்வா;

பிறிது ஒன்று நினைந்து பேச

உரிய ஆய், ஒருவர் உள்ளத்து

ஒடுங்குவ அல்ல; உண்மை

தெரிய, ஆயிரக் கால் நோக்கின்,

தேவர்க்கும் தேவன் என்னக்

கரியஆய், வெளிய ஆகும்; வான்

தடங் கண்கள் அம்மா!

தேவர்களுக்கெல்லாம் இறைவனான திருமாலின் நிறத்தின் கருமையையும் அவனிருக்கும் பாற்கடலின் நிறத்து வெண்மையையும் கொண்டு ஒளிவிடும் சீதையின் கண்களை ஆயிரம் முறை நோக்கினாலும், விரிந்து பரந்த கடலும் அதற்கு உவமையாகாது. அதைவிட சிறந்த உவமையை எவரும் உள்ளத்தால் எண்ணுவதும் அரியதாகும்.

புருவங்கள்

கேள் ஒக்கும் அன்றி, ஒன்று

கிளத்தினால் கீழ்மைத்து ஆமே;

கோள் ஒக்கும்என்னின் அல்லால்,

குறி ஒக்கக் கூறலாமே?

வாள் ஒக்கும் வடிக் கணாள்தன்

புருவத்துக்கு உவமை வைக்கின்

நாள் ஒக்க வளைத்து நிற்ப

இரண்டு இல்லை, அனங்க சாபம்.

வாள் போன்ற கண்களையுடைய சீதையின் புருவங்கள் ஒன்றுக்கொன்று உவமையாகுமே தவிர அவற்றிற்கு வேறொன்றைக் கூறுவது இழிவானதாகும். மனதிற்கு ஏற்புடைய உவமை பொருளுக்கும் பொருத்தமானதாக அமையுமா. சீதையின் புருவங்களுக்கு மன்மதனின் வில்லை உவமையாகக் கூறலாமெனில் அவனிடம் இரண்டு வில் இல்லையே.

முன் நெற்றி மயிர்

வனைபவர் இல்லை அன்றே,

வனத்துள் நாம் வந்த பின்னர்?

அனையன எனினும், தாம் தம்

அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா;

வினை செயக் குழன்ற அல்ல;

விதி செய விளைத்த; நீலம்

புனை மணி அளகம் என்றும்

புதுமை ஆம்; உவமை பூணா.

நாங்கள் வனத்திற்குள் வந்தபிறகு சிகையை பராமரிப்பதற்கு அப்பணியாற்றுபவர் எவருமில்லை. ஆயினும் இயற்கையான அழகுக்கு அழிவு உண்டாகாது. சீதையின் குழல் ஒப்பனையாளர்களால் குழன்றது அல்ல. நீலமணி போன்ற சீதையின் நெற்றியின் மேல் இயல்பாகவே விழும் கூந்தல் புதுமை கொண்டதாகவும் உவமை கூற முடியாததாகவும் விளங்கும்.

முகம்

கொண்டலின் குழவி, ஆம்பல்,

குனி சிலை, வள்ளை, கொற்றக்

கெண்டை,ஒண் தரளம் என்று இக்

கேண்மையின் கிடந்த திங்கள்

மண்டலம் வதனம் என்று

வைத்தனன், விதியே; நீ, அப்

புண்டரிகத்தை உற்ற பொழுது,

அது பொருந்தி ஓர்வாய்.

கரிய மேகத்தின் கொழுந்தும் சிவந்த அல்லி மலரும் வளைந்த வில்லும் வள்ளைக் கொடியின் இலையும் சிறப்புடைய கெண்டை மீனும் ஒளிரும் முத்துக்களும் மேலும் இவற்றிற்கு உறவாக விளங்குகின்ற ஏனையவும் திகழ்கின்ற சந்திர மண்டலத்தை சீதைக்கு முகம் என்று பிரம்மன் படைத்தான். தாமரை போன்ற முகம் உடைய அவளை நேரில் காணும்போது நீ இதை உணர்வாய்.

( மேகம் கூந்தலுக்கும், அல்லி மலர் வாய்க்கும், வில் புருவத்திற்கும், வள்ளையிலை காதுக்கும், கெண்டை மீன் கண்களுக்கும், முத்துக்கள் பற்களுக்கும் உவமையாக கூறப்பட்டுள்ளது )

கூந்தல்

காரினைக் கழித்துக் கட்டி,

கள்ளினோடு ஆவி காட்டி,

பேர்இருட் பிழம்பு தோய்த்து,

நெறி உறீஇ, பிறங்கு கற்றைச்

சோர் குழல் தொகுதி என்று

சும்மை செய்தனையது அம்மா!-

நேர்மையைப் பருமை செய்த

நிறை நறங் கூந்தல் நீத்தம்!

நுண்மையானதை பருப்பொருளாக்கியது போன்ற சீதையின் கூந்தல், கரிய மேகத்தை துண்டுகளாக்கி கட்டி, தேனும் அகிற் புகையும் அதனோடு சேர்த்து , பேரிருள் குழம்பை அதில் தோய்த்து, அதனை நெறிப்படுத்தி, ஒளிரும் குழல் கற்றையாக்கிய பெரும் சுமையைப் போல தோன்றுவதாகும்.

இன்சொற்கள்

வான் நின்ற உலகம் முன்றும்

வரம்பு இன்றி வளர்ந்தவேனும்,

நா நின்ற சுவை மற்று ஒன்றோ

அமிழ்து அன்றி நல்லது இல்லை;

மீன் நின்ற கண்ணினாள்தன்

மென்மொழிக்குஉவமைவேண்டின்

தேன் ஒன்றோ? அமிழ்தம்ஒன்றோ?

அவை செவிக்கு இன்பம்

செய்யா.

மீன் போன்ற கண்களையுடைய சீதையின் மென்மையான இனிய மொழிக்கு உவமை கூற விரும்பினால் இனிய தேன் என்றோ பால் என்றோ கூறமுடியாது. இவை செவிக்கு இன்பம் அளிக்காது. மூன்று உலகங்கள் வான்வரை எல்லையின்றி பரந்திருந்தாலும் நாவில் பரவும் சுவைகளில் அமிர்தத்தையன்றி சிறந்ததில்லை என்றாலும் அதுவும் செவிக்கு இன்பம் அளிக்காது.

நடையழகு

பூ வரும் மழலை அன்னம்,

புனை மடப் பிடி என்று இன்ன,

தேவரும் மருளத் தக்க

செலவின எனினும் தேறேன்;

பா வரும் கிழமைத் தொன்மைப்

பருணிதர் தொடுத்த, பத்தி

நாஅருங் கிளவிச் செவ்வி

நடை வரும் நடையள்நல்லோய்!

நற்குணத்தோனே, தாமரையில் வாழ்கின்ற இள அன்னப் பறவையும் அழகிய பெண் யானையும் தேவர்களும் கண்டு வியக்கும் நடையழகு உடையன. என்றாலும் சீதையின் நடையழகிற்கு இவற்றை உவமையாக சொல்லமாட்டேன். பாடல்கள் இயற்றுவதில் அனுபவம் வாய்ந்த மரபான கவிஞர்கள் இயற்றிய அடியொழுங்கும் நாவால் உரைக்கத் தக்க பாவழகும் விளங்க நடக்கும் சொற்களின் சிறந்த நடையழகு போன்றதாகும் சீதையின் நடை.

நிறம்

எந் நிறம் உரைக்கேன்?-மாவின்

இள நிளம் முதிரும்; மற்றைப்

பொன் நிறம் கருகும்; என்றால்,

மணி நிறம் உவமை போதா;

மின் நிறம் நாணி எங்கும்

வெளிப்படா ஒளிக்கும்; வேண்டின்

தன் நிறம் தானே ஒக்கும்;

மலர் நிறம் சமழ்க்கும் அன்றே!

சீதையின் நிறத்திற்கு எதை உவமையாக உரைப்பேன். மாவின் இளந்தளிர் நிறம் மாறி முற்றிவிடும். பொன்னிறமோ இவள் நிறத்திற்குமுன் கறுத்துத் தோன்றும். நவரத்தின மணிகளோ உவமை கூறத்தக்கதல்ல. மின்னலைக் கூறுவதென்றால் அது தோன்றியவுடனேயே நாணம் கொண்டு ஒளிந்துகொள்ளும். தாமரையும் அவள் நிறம் கண்டு நாணித் தாழும். எனவே சீதையின் நிறத்திற்கு ஒப்புமை அவள் நிறம் மட்டுமே.

கட்டுரையின் நீளம் கருதி புறங்கால்கள், கணுக்கால்கள், தொடைகள், அல்குல், இடை உந்திக்கமலம், மயிர் ஒழுங்கு, வயிற்று மடிப்பு, தோள்கள், முன் கைகள், கழுத்து பற்கள், மூக்கு மற்றும் நெற்றி போன்ற அவயங்களுக்கான பாடல்களை கூறாமல் விட்டுள்ளேன். ஆவலுடையோர் அணுகியறிந்து மகிழலாம்.

சீதையின் அடையாளத்தை விவரிக்க முயன்ற இராமன் பெரும்பாலான அவயங்களுக்கு ஒப்புமை கூறும் உவமைகள் இல்லையே என்று வருத்தமுறுகிறான். அத்துடன் எல்லாம் அறிந்த அனுமனே நீயே உணர்ந்துகொள், அறிந்துகொள் என்றும் கூறுகிறான். பிரம்மச்சாரியான அனுமன் பலவான்தான். அறிவுக் கூர்மையுடையவன்தான். ஆனால் கற்பனைத் திறனும் உடையவன் என இராமன் நம்புகிறான் போலும்.

ஆனால் சற்று கூர்ந்து நோக்கினால் ஒரு அவயத்தைப் பற்றி கூற முயலும்போது வேறு அவயங்களுக்கான உவமைகளை உரைப்பதைக் காணலாம். இவற்றை விரிவாக எடுத்துக் கூறாததற்கு காரணம் ஆர்வமுள்ள வாசகர்களின் கண்டறியும் சுவாரசியத்திற்கு தடை போடவேண்டாமே என்பதற்காகத்தான்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மற்ற அவயங்களுக்கு உவமை சொல்ல தயங்கி திகைக்கும் இராமன் , முகத்திற்கான அடையாளத்தை எந்த ஐயமோ தயக்கமோ இன்றி தெளிவாக உரைத்துள்ளான். ஒரு பெண்ணைத் தேடி செல்பவனுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டிய அடையாளம் முகம்தானே. எனவே அதனை அனுமன் மனதில் நிறுத்திக் கொள்ளுமாறு உரைத்துள்ளான் எனப் புரித்து கொள்ளலாம்.

இக்கட்டுரையின் நோக்கம் சீதையின் பாதாதி கேசத்தை இராமன் உரைக்கும் பாங்கினை விவரிப்பதுதான் என்றாலும் இராமன் கூறிய அடையாளங்களைக் கொண்டு அனுமன் எப்படி சீதையை அடையாளம் கண்டுபிடித்தான் என்பதைக் கூறினால்தான் நிறைவடையும் என கருதுகிறேன்.

சுந்தர காண்டத்தில் காட்சிப் படலத்தில் இக்காட்சி இடம் பெற்றுள்ளது. அனுமன் இலங்கைக்குள் நுழைந்து ஒவ்வொரு இடமாக தேடி மலர்த் தேன் நிறைந்த சோலை ஒன்றைக் கண்டான்.

கடக்க அரும் அரக்கியர்

காவல் சுற்று உளால்

மடக்கொடி சீதையாம்

மாதரே கொலாம்

கடல் துணை நெடிய தன்

கண்ணின் நீர்ப் பெருந்

தடத்திடை இருந்தது ஓர்

அன்னத் தன்மையாள்

//எம் அரும் உருவின் அவ்

இலக்கணங்களும்

வள்ளல் தன் உரையோடு

மாறு கொண்டில //

//அரவணைத் துயிலின் நீங்கிய

தேவனே அவன் இவள்

கமலச் செல்வியே //

கடல்போன்ற. தன் பெரிய கண்களில் நீர் பெருகித் தடாகமான இடத்தில் அமர்ந்த, அன்னம் போன்றவளைச் சுற்றி

கடந்து செல்ல இயலாதவாறு அரக்கிகள் காவல் காக்கிறார்களே. இளங்கொடி போன்ற அவள் சீதையாகிய பெண்தானோ?.

குற்றமற்ற இந்த உருவத்தின் இலக்கணங்கள் இராமன் கூறிய அடையாளங்களுக்கு மாறுபாடு இல்லாமல் ஒத்துள்ளது.

பாம்புப் படுக்கையில் துயில் கொண்ட தேவனே அவன். இவள் தாமரையில் அமர்ந்திருந்த திருமகளே.

இலங்கை முழுக்க நிறைந்திருந்தவர்கள் அரக்கர்கள். அரக்கிகளால் சீதை சூழப்பட்டுள்ளாள். ல்அரக்கிகளிடையே பெண்ணுருவில் துயருடன் இருப்பவளை கூர்ந்த அறிவுடைய அனுமன் எளிதாகவே அடையாளம் கண்டுவிடுவான். இது இராமனுக்கும் தெரியும். கம்பருக்கும் தெரியும். அதற்காக நீயே கண்டுபிடித்து வா என்று கூறிவிடமுடியுமா. காவியத்தின் கூறுகளிலொன்று, காவியகர்த்தா தான் வாழும் காலத்தில் வழங்குபவற்றில் முக்கியமானதென்று கருதுவனவற்றை காவியத்தினுள் அருமணியென பொதித்து எதிர்காலத்திற்கு கடத்துவதாகும். பத்தாயிரத்திற்கு அதிகமான பாடல்கள் கொண்ட காவியம் இவற்றையும் உள்ளடக்கித்தான் நிறைவு பெற்றுள்ளது.

எப்படியோ, நாம் மீண்டும், மீண்டும் படித்தும், மனதில் நினைத்தும், திளைத்தும் இன்புறுவதற்கு இத்தனை இனிய பாடல்கள் கிடைத்ததற்காக மகிழ்வோம்.

கடைசியாக ஒன்று, சுட்டிக் காட்டப்பட்டு இக்கட்டுரையை வாசிக்கும் வெண்முரசு ஆசானோ, நாஞ்சில் கும்பமுனியோ முனிந்து எனக்கு சாபம் ஏதும் கொடுத்துவிடக் கூடாதென விஷ்ணுபுரத்தில் புரண்டு புரண்டு துயிலும் நீள் கரியபெருமானை வேண்டிக் கொள்கிறேன்.

 

நிஜத்தின் கள்ளமின்மை – நாகபிரகாஷின் ‘எரி’ சிறுகதை தொகுப்பை குறித்து லாவண்யா சுந்தரராஜன்

அறிமுக எழுத்தாளர் நாகபிரகாஷ் எழுதிய எரி என்ற சிறுகதை தொகுப்பில் ஒன்பது சிறுகதைகள் இருக்கின்றன. யாவரும் பதிப்பகம் 2019 வெளியீடு. இந்த சிறுகதைகளை வாசிக்கும் போது முன்னுரையில் எழுத்தாளர் கோபாலகிருஷ்ணனின் தலைப்பையே மறுமொழிய வேண்டியிருக்கிறது. இந்த சிறுகதைகள் பால்யத்தின்/பதின்பருவத்தின் துயர் சித்திரங்கள். குடும்பச்சுழல் பொருட்டு சிறுவயதிலேயே ஏதேனும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்திலிருக்கும் கதைமாந்தர்களில் வாழ்க்கையை மையமாக கொண்ட பல சிறுகதைகள் இந்த தொகுப்பில் வாசித்து பல நாட்கள் இந்த தொகுப்பிலிருந்து வெளியேற இயலாமல் தடுமாறியிருக்கிறேன். ஒவ்வொரு முறை வாசிக்கும் போது உணர்ச்சிவசப் படாமல் வெறும் புனைவாக விலகி நின்று வாசிக்க இந்த கதைகள் இடம் தரவில்லை.

என் வீடு என்ற கதையில் கதைசொல்லி மீண்டும் மீண்டும் தேடத் தொடங்குவது தனது வீடு என்ற ஒரு வடிவத்தை. அவனுடைய தேடலில் அடுத்த படி அன்னையின் அருகாமை கலந்த வெம்மை. குளிர்ந்த இரவுகளில் சுருண்டு கொள்ள நினைப்பவனுக்கு அந்த வெம்மை அன்னையின் புடவைக்குள் ஒளிந்திருக்கிறது. அந்த கடந்த காலத்தின் நினைவாக உபயோகமில்லாமலும் ஒரு ஸ்வெட்டர் வாங்க நினைக்கிறான். அன்னையின் அரவணைப்பில் அவளருகிலிருப்பது பிள்ளைக்கு எவ்வளவு பாதுகாப்பைத் தரும். இது ஒவ்வொரு குழந்தையின் உரிமையல்லவா குடும்ப சுமையை ஏற்க அந்த வெம்மை இழக்கும் பாலகனுக்கு இந்த சமூகம் என்ன பெரிதாய் தந்துவிட முடியும்?

கூப்பன் இந்த கதையிலும் இயல்பான இரண்டு சிறுவர்கள். இருவரின் உலகமும் மிக எளியது. அவர்கள் பாவனைகள், இன்பங்கள் எளியது. குடும்ப சூழல் பொருட்டு பொருள் ஈட்ட பட்டறைகள், கடைகளில் வேலை செய்யும் சிறுவர்கள் இயல்பாகவே தமக்கென்று ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்கின்றார்கள். இயல்பாகவே ஒருவர் மேல் மற்றொருவர் அன்பாலும் அக்கரையாலும் பிணைகின்றனர். தினப்படி வேலையில் குடும்பத்துக்கு தேவையான சம்பளம் கிடைக்காத போது அவர்கள் வருமானம் ஈட்ட வேறு வழிகளை தேடத் தொடங்குகின்றார்கள். அது மிக இயல்பாக வெளிப்படும் அருமையான கதை. ஆனால் பள்ளிக்கூட பையை சுமக்க வேண்டிய கையால் துறு பிடித்த இரும்புப் பிசிறுகளை அள்ளிப் போட்டுவிட்டு கையில் கசியும் ரத்தக்காயங்களை சித்திரமாக்கியிருக்கும் வரிகளை படிக்கும் போது அய்யோ இந்த பையன் டெட்டனஸ் ஊசி போட்டுக்கொள்வானா அப்படி போடவில்லையென்றால் என்ன ஆகும் என்று அது புனைவென்பதையும் மீறி தோன்றும் தருணமே இந்த கதையின் வெற்றி என்று நினைக்கிறேன். இது போன்ற தரிசனங்கள் இவர் கதைகளில் பல இடங்களில் நிகழ்கிறது.

சுவருக்கு அப்பால் சிறுகதை மிக அடர்த்தியான கதை. இந்த கதையிலும் கதைசொல்லிக்கு தேடல் இருக்கிறது. அந்த தேடல் ஆன்மீகத்துக்குள் என்ற புரிதலோடு இருந்த அவனுக்குள் நிகழும் மாற்றமே கதை. அந்த கதையை அவர் கதையாக்கிய விதம் கதையுள் நாமும் பயணிக்கும் நம்பதன்மையை கொடுக்கிறது. கதைசொல்லி பதின்பருவத்து இளைஞன் போல சித்தரிக்கபடுகிறது. ஆனால் அவனுக்கு சக பிரம்மச்சாரிகளிடம் பழக தயக்கமிருக்கிறது. வெளியிலிருந்து அவன் இருக்குமிடம் வரும் சிறுவர்களுடன் பழகுவதை விரும்புகிறான். இன்னொரு கதைமாந்தரிடம் தனது வயதுக்கும் தகுதிக்கும் மீறி ஒரு சிறுவன் நட்பு பாராட்டப்படுவதாக, அவர் அதை விரும்புவதாக அல்லது அதுவே வசதியானது என்ற சித்தரிப்பு வருகிறது. இருவருமே ஏதோ தாழ்வு மனப்பான்மையோடு இருக்கும் உளவியலை கதையோட்டத்தோடு நமக்கு புரியவைக்கிறார் சிறுகதையாசிரியர். ஆகவே தான் இவ்விருவராலும் சம அந்தஸ்துள்ள நபர்களுடன் எளிதாக உறவாட முடிவதில்லை. தேடலும், தாழ்வுமனப்பான்மையும் கதைசொல்லியை எதிலும் நிலையற்று தடுமாறவிடுகிறது. மிக முக்கியமான கதை.

நோக்கு கதையில் வரும் ஒரு கதைமாந்தாரான பஸிரா, அவள் முன் முறை தனியாக பயணித்து வரும்போது அவளுக்குள் உருவாகும் உணர்வு கதையின் உச்சமாகிறது. இந்த கதையில் இருக்கும் பல கதைபாத்திரங்கள், உரையாடல்களை கொஞ்சம் குழப்பத்தை உண்டாக்கினாலும், பஸிரா போன்ற பெண்ணின் மனநிலையை மிக நுட்பமாக பேசியதில் இந்த கதை முக்கியமானதாகிறது. கதையுள் ஒரு குறிப்பிட்ட இனத்து மக்களின் வீடு, நடைமுறை எல்லாமும் எப்படியிருக்குமென்று மிக நுட்பமாக விளக்கி இருப்பதும், கதை நிகழும் காலத்தை சொல்ல தற்காலத்து கைபேசி செயலிகளை குறிப்பிட்டு எழுதியிருப்பது மிக கூர்ந்து நோக்க வேண்டிய விஷயம். இந்த காலத்திலும் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த பெண் தனியாக பேருந்தில் பணிப்பது ஒரு சாகச செயல் என்பது போன்ற கதையமைப்பு வியக்கதக்கது. ஆனால் தொகுப்பின் பலவீனமான கதைகளில் இதுவும் ஒன்று.

அட்டை துப்புரவு தொழிலாளியின் எளிய வாழ்க்கை. அடையாளம் என்பது எல்லோரும் ஒருவித லட்சியம். அதுவும் மறுக்கப்பட்டு, மிக போராடி பின்னர் பெறும் அடையாளம் நிச்சயமாய் பித்துமனநிலையை தரும் போதை. அந்த மனநிலையை அப்படியே அழகாய் கதைக்குள் கொண்டு வந்திருக்கும் நாகபிரகாஷ் இந்த கதையின் மூலம் மிகச்சிறந்த கதைசொல்லியாக மாறுகிறார். இந்த கதையில் சொல்லிக் கொண்டிருக்கும் கதையொன்று உள்ளே மறைத்து வைத்திருக்கும் கதை இன்னொன்று, உறவுகளில் கயமை, தன் தகுதியை உணர்ந்திருக்கும் கதைசொல்லி ஒருவேளை அவன் தன்னைத் தானே குறைவாய் மதிப்பிட்டுக் கொள்கின்றானோ என்று கூட தோன்றுகிறது. மிகவும் நேர்த்தியாக சிறுகதையின் கச்சித வடிவத்தோடு எழுதி இருக்கும் இந்த கதை தொகுப்பின் மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று.

கோதைமங்கலம் நாகபிரகாஷ் கதைகளில் இன்னொரு பரிமாணம், தோற்றத்தில் கொஞ்சம் பருமனான அழகு என்பது பால்ய காலத்திலும் இல்லாத ஒரு இளைஞன், சொந்த வாழ்க்கை பிரச்சனைகளுக்குள், தனது இழந்த காதலை நினைத்து அந்த நினைவுகளை எங்காவது அனாதை போல விட்டுவிட்டு போக வேண்டும் என்று துடிக்கும் சராசரி இளைஞன். அவனால் அந்த நினைவுகளில் கிளறும் விதம் வந்து சேரும் இலச்சினை பயணிக்கும் பேருந்திலேயே விட்டுவிட்டு கிளம்ப மட்டுமே முடிகிறது, வேண்டாத நினைவு தானே என்ற போதும் கூடவே வைத்துக் கொள்ளவும் முடியாத ஒன்று அதை வீசியெறிய ஏன் மனம் வருவதில்லை ஏன் இந்த தெளிவின்மை, இந்த தெளிவின்மையே அகசிக்கல் அனைத்திருக்குமான திறவுகோல். ஒரு பேருந்து பயணம் முடிவதற்குள் கதைசொல்லிக்குள் நடக்கும் மன போராட்டங்கள் அவை சொல்லப்பட்ட விதம் இதனை கச்சிதமான கதையாக காட்டியிருக்கிறது.

அடுத்த கதை சகடம், இந்த கதையில் அப்பாவின் கதையொன்று, மகனின் கதை ஒன்று, இரண்டும் இணைத்து பின்னும் கதை இன்னொன்று. இந்த வடிவயுத்தியை பலர் உபயோகபடுத்தியிருக்கின்றனர். பெரும்பாலான கதையில் வரும் கதைசொல்லிகள் சிறுவர்களாக இருக்கின்றனர். அவர்களின் அப்பா கொஞ்சம் பொறுப்பினை திறந்தவராக அல்லது எந்த வேலையிலும் நிலைக்க முடியாத, பணம் சேர்க்க திறமையற்றவராக இருக்கிறார். இது ஒருவித டெம்பிலேட் மனநிலையை நமக்குள் கொண்டு வந்துவிடுகிறது. மேலும் இவர் கதையில் சொல்லும் கதை, சொல்லப்பட்ட கதைக்கிடையே மறைபொருளாக உணர்த்தபடும் கதை வாசிப்பனுபவத்தை இன்னும் சுவாரஸ்யாமாக்குகிறது. இதுவே நாகபிரகாஷ் பெரும்பாலான கதைகளில் கையாளும் உத்தியாகும். இது வாசிப்பு சுவாரஸ்யத்தை கூட்டினாலும் பல இடங்களில் கதையின் உள்முடிச்சிகளில் சிக்கி சிலசமயம் கதையிலிருந்து நழுவிச் செல்ல வாய்ப்புகளை உள்ளடக்கியே இருக்கின்றன.

எரி நுட்பமான விஷயங்கள் பல பின்னப்பட்ட பலகதைகளை உள்ளடக்கிய கதை, கூட்டத்தில் வளர்மதியை தேடும் ஒருவரி ஒரு காதல் கதையை சொல்ல வந்து சொல்லாமலோ, சொல்ல முடியாமலோ விக்கித்து நிற்கிறது அல்லது நீங்கள் ஊகித்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு அடுத்த வரிக்கு நகர்ந்து விடுகிறது. திருவிழா காட்சிகளும், நிஜ மாந்தர்கள் கடவுளர்களாக வலம் வரும் சித்தரிப்புகளும் வாசிக்க மிக சுவாரஸ்யமானது. பலரும் இது போன்ற காட்சிகளையும் வண்டி வேடிக்கை என்ற ஒரு செயல்பாட்டையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தற்கால திருவிழாக்களில் அம்மன் அலங்கலரமாய் டிராக்டர் வண்டிகளில் வருவதை கண்டிருக்கிறேன். ஆனால் நிஜ மாந்தரகள் வேடமணிந்து வலம் வருவதை எங்கும் கண்டதில்லை. மேலும் கதைசொல்லி வழக்கமாக பாட்டி வீட்டுக்கு வரும் போது நல்ல சாப்பாடு கிடைக்கும், போகும் போது கைநிறைய பலகாரம் எடுத்துப் போகலாம் என்று நினைத்திருந்தவனுக்கு கனவில் பழைய சோறு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அது பாட்டி தன் அம்மாவையும் தன்னையும் உதாசீனம் செய்வதாக கதைசொல்லி மனதுக்குள் உணர்வதால் வருகிற கனவா? இந்த காட்சிகள் வாசகர் தனக்கான பலகதைகளை உருவாக்கிக் கொள்ள வகைசெய்யும் வண்ணமிருக்கின்றன. அதன் பிறகு மனதுக்குள் திருவிழாவிற்கு கதைசொல்லியின் அன்னை ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுகிறது. உடல் வாதையும், வறுமையும் சிறு சிறு சித்தரிப்புகளிலேயே எழுதப்பட்டிருக்கும் இந்த கதையில் கதைசொல்லியின் உடல் சூடு கண்ணை எரிப்பதற்கும், பாட்டியின் பெருமூச்சுக்கும் இருக்கும் இணைப்பை அவ்வளவு எளிதாக தரிச்சித்து விட முடியாத அழமான கதை.

பவித்ரா இந்த கதையும் பல நுண்கதைகளால் நெய்யப்பட்ட கதை, கதையின் மையப் பிரச்சனையான பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தையின் மென் மனநிலை, ஆனால் இது மட்டுமே கதையில்லை, கதைசொல்லியின் மனைவிக்கும் கதைசொல்லிக்கு இருக்கும் உறவுசிக்கலை பூடகமாய் சொல்லும் கதை. கதைசொல்லியின் மனைவி ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு, கதைசொல்லி பாதுகாக்கும் புத்தகங்களை இடம் மாற்றி வைப்பதற்கும், மகளிடம் கதைசொல்லி நாம மட்டும் வேறு எங்காவது போயிடலாமா என்று கேட்பதற்கும் இருக்கும் இணைப்பை மறுமுறை இந்த கதையை வாசிக்கும் போதே புரியும். எளிய உறவுசிக்கில் இடையே சிறு பெண் குழந்தை தனது தாய் தன்னைக்குமிடையே பின்னப்படும் இடைவெளியை விளக்கிக் கொள்ள முடியாமல் தவிக்கும் சித்தரிப்பு அழகான இடம். ஆனால் இந்த கதையின் குவிமையம் வெறும் உறவு சிக்கல் என்று திசையில் மட்டுமின்றி குழந்தையின் உளவியலை கையாண்டிருந்தால் வேறு ஒருதளத்திற்கு நகர்ந்திருக்க வேண்டிய கதை.

நாகபிரகாஷ் கதைகளில் சிறு சிறு எளிய வரிகளை சரியாக பொருத்திப் பார்க்காவிட்டால் நம்மை எளிதாக ஏமாற்றிவிடும்படி அமைத்திருக்கிறார். நாகபிரகாஷின் கதைகள் அத்தனையும் வாசிக்கும் போது முக்கியமாக புலப்படும் ஒரு விஷயம் இவரது கதைக்களுக்குள் உலவுபவர்கள் கல்மிஷமற்ற அப்பாவித்தனமும், தோல்வியை எப்போதும் தரிசிக்கும், தாழ்வுமனமும் அழகின்மையுடன் கூடைய கதைமாந்தர்கள். ஆயினும் புகார்கள் எதுவும் இல்லாமல் தனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை வாழும் மிக மிக சாதாரணமானவர்கள். இவற்றில் எந்த இடத்திலும் கள்ளமில்லை. இவர் படைப்புகளில் யாரும் எவர் மீதும் சலிப்பையும், வெறுப்பையும் சுமத்தும் எந்த பதிவுகளுமில்லை. அடித்து துன்புறுத்தும் வன்முறைகள் இல்லை. அறியாமை, வறுமை, குடும்ப அமைப்பு என்ற கடமை என்ற பெயரால் செல்லும் பல்வேறு வன்முறைகளில் பொருட்டு பாதிக்கப்பட்ட மாந்தர்களின் கதைகள் இவை என்று சொல்லலாம். நாகபிரகாஷின் கதைகள் அதிக வாசிப்பு கவனத்தை கோருபவை. அதனால் எளிய வாசகர்கள் இந்த கதைகள் சென்றடைவது மிகவும் சிரமம். இவரது மொழியை கதை சொல்லும் முறையை இன்னும் கொஞ்சம் எளிமைபடுத்தி வரும்காலங்களில் கதைகளை எழுதுவார் என்று நம்புகிறேன். அவரது முதல் தொகுப்பான எரி பரவலான வாசிப்பைப் பெற்று அதிகம் பேசப்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

வாசனை – பாவண்ணன் சிறுகதை

சந்தனநிறச் சட்டை. தீபாவளிக்கு எடுத்தது. அலமாரியிலிருந்து எடுத்து வைக்கும்போதே பாச்சா உருண்டையின் மணம் எழுந்தது. மேல்சட்டைப் பையின் மேல்விளிம்பில் எம்ப்ராய்டர் வேலையால் உருவாக்கப்பட்ட ஆங்கில எஸ் எழுத்து மட்டும் அடர்பழுப்பு நிறத்தில் இருந்தது. அடர் பழுப்பு நிறப் பேண்ட்டுக்குப் பொருத்தமான சட்டை.

சிவபாலன் அந்தச் சட்டையையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். தயக்கத்துடன் திரும்பி வெள்ளைக்கோடும் நீலக்கோடும் கட்டங்களாகக் காட்சியளிக்கும் மற்றொரு சட்டையை எடுத்து சந்தனநிறச் சட்டைக்குப் பக்கத்தில் வைத்தான். இரண்டையும் மாறிமாறிப் பார்த்தான்.

”டேய் பாலா, சீக்கிரமா கெளம்பாம இன்னும் என்னடா செய்யற இங்க? வண்டி வேற வந்துட்டுது” என்றபடியே அறைக்குள் தம்பிதுரை வந்தான். வந்த வேகத்தில் தான் அணிந்திருந்த ஆடைகளை ஒரு நொடியில் களைந்து ஆணியில் மாட்டிவிட்டு அலமாரிக்குப் பக்கத்தில் வைத்திருந்த பெட்டியைத் திறந்து தன் புதுச்சட்டைகளை எடுத்து அணியத் தொடங்கினான்.

“இப்ப கெளம்பனாத்தான் நாம ஒரு மணிக்குள்ளயாவது போய் சேரமுடியும் பாலா. காஞ்சிபுரம் என்ன பக்கத்துலயா இருக்குது? நூத்தி இருவது கிலோமீட்டர் போவணுமே” என்றபடி கண்ணாடியைப் பார்த்து தலைசீவிக் கொண்டான். “என்ன இது, ஏதோ ஒரு வாசன புதுசா இருக்குது ஒன் ரூம்ல” என்று கேட்டான்.

“வாசனயா, எனக்கு ஒன்னும் தெரியலயே. பாச்சா உண்ட வாசனயா இருக்கும். இப்பதான் அலமாரிய தெறந்தேன்” என்று பதில் சொன்னான் சிவபாலன். ”அந்த வாசன எனக்குத் தெரியாதா? இது என்னமோ புதுசா ஒரு வாசன” என்று மறுபடியும் மூச்சை இழுத்து வாசனையை நுகர்ந்தான்

“சரி, வாசன இருக்கட்டும், இந்த ரெண்டுல எந்த சட்டைய போட்டுக்கலாம்? கொஞ்சம் பாத்து சொல்லு” என்று கேட்டான் சிவபாலன்.

தம்பிதுரை திரும்பி கட்டில்மேல் வைக்கப்பட்டிருந்த இரண்டு சட்டைகளையும் ஒருகணம் பார்த்தான். மறுகணமே “அந்த கட்டம் போட்ட சட்டைய போட்டுக்கடா” என்றான்.

”அப்ப இது வேணாமா?” சிவபாலன் சந்தனநிறச் சட்டையைத் தொட்டுக் காட்டினான். அவன் குரலில் சற்றே ஏமாற்றம் தெரிந்தது. “ஒனக்கு இருவத்திநாலு மணி நேரமும் ஸ்கூல் வாத்தியாருங்கற நெனப்புதானா? பொண்ணுக்கு கல்யாணப்பொடவ எடுக்கப் போறம்டா. அத ஞாபகத்துல வச்சிக்க. பாத்தாவே பளிச்சினு தெரியறமாதிரி ஒரு மாப்ள எடுப்பா இருக்கவேணாமா?” என்றபடி சிவபாலனின் தோளைத் தட்டினான் தம்பிதுரை. பெட்டியிலிருந்து மணிபர்சை எடுத்துக்கொண்டு மீண்டுமொரு முறை கண்ணாடியைப் பார்த்து தலைமுடியைப் படியவைத்தபடியே வெளியே சென்றான்.

சட்டையை அணிந்து பெல்பாட்டத்துக்குள் இன் செய்துகொண்டு பெல்ட் போட்டபடி தன்னைத்தானே ஒருமுறை நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொண்டான் சிவபாலன். தலையணைக்குப் பக்கத்தில் இஸ்திரி போட்டு மடித்துவைக்கப்பட்டிருந்த வெள்ளைக் கைக்குட்டையை எடுத்து கன்னத்தில் தெரிந்த பவுடர் பூச்சைத் துடைத்துக்கொண்டு வெளியே நடந்தான்.

திண்ணையில் முருகேசன் மாமாவும் தேவனாதன் பெரியப்பாவும் தினத்தந்தியைப் பிரித்து வைத்து படித்துக்கொண்டிருந்தார்கள். சொக்கலிங்கம் சித்தப்பாவும் நல்லசிவம் மாமாவும் கரும்புவெட்டுக்கு ஆள் கிடைக்காத குறையைப் பேசித் தணித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் குடித்துவிட்டு வைத்த டீத்தம்ளர்களை சித்தி பெண் ரேவதி எடுத்துக்கொண்டு சென்றாள். வண்டியைத் துடைத்துக்கொண்டிருந்த டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்தார் அப்பா.

“என்ன மச்சான். பேப்பர்ல என்ன போட்டிருக்கான். ஒரு எழுத்து உடாம படிச்சிட்டிருக்கிங்க?”

“இந்த ஜனதா ஆளுங்க கெடச்ச வாய்ப்ப கோட்ட உட்டுடுவானுங்க போல. சரியான மடப்பசங்க. நான் பெரிய ஆளு நீ பெரிய ஆளுனு இவனுங்களுக்குள்ளயே ஓயாத சண்ட. போற போக்குல அந்த பொம்பளதான் மறுபடியும் ஆட்சிக்கு வரும் போல்ருக்கு.”

“நாடா இருந்தாலும் சரி, ஊடா இருந்தாலும் சரி. ஒத்துமயா இருந்தாதான் வாழமுடியும் மச்சான். இல்லைன்னா காலம் முழுக்க கண்ண கசக்கிகினே இருக்கவேண்டிதுதான்.”

அம்மாவின் முகம் தெரிந்ததும் பேச்சு நின்றது. “இங்கயே சாமி கும்புட்டுட்டு கெளம்புவமா, இல்ல போற வழியில மாரியாத்தா கோயில்ல கும்புட்டுக்கலாமா?” என்று வாசக்கால் பக்கமாக நின்று திண்ணையில் இருந்தவர்களைப் பார்த்து பொதுவாகக் கேட்டாள். “இங்கயே கும்புட்டுக்கலாம்மா வள்ளி. கோயில் வாசல்ல எல்லாரும் ஒரு தரம் மறுபடியும் எறங்கி ஏறணும்ன்னா நேரம்தான் வீணாவும்” என்றார் தேவனாதன் பெரியப்பா.

வேப்பமரத்தின் நிழலில் சாக்கு விரித்து உட்கார்ந்து அரிவாள்மனையில் புளி ஆய்ந்துகொண்டிருந்தாள் ஆயா. பத்து பன்னிரண்டு கோழிகள் அவளைச் சுற்றி நடமாடிக்கொண்டிருந்தன. “ஆயா, நீயும் வா ஆயா, வண்டிலதான போறம். அங்க வந்தா நீயும் பொண்ண பாத்தமாதிரி இருக்குமில்ல” என்றான் சிவபாலன்.

“அதான் போட்டாவுலயே பாத்தனே. அப்பறம் என்ன கண்ணு? நம்ம ஊட்டுக்கு வரப்போற பொண்ணுதான? அப்ப பாத்துக்கறன்” என்று வெற்றிலைக்கறையேறிய பற்களைக் காட்டிச் சிரித்தாள் ஆயா. ஆயாவுக்கு அருகில் கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருந்த தாத்தா “நாயப்படி பாத்தா கல்யாணப்பொடவ எடுக்கற வேலையில ஒனக்கு பங்கே கெடயாது தெரியுமா? என்னமோ நம்ம செல்லப்புள்ளனு ஒன்ன கூப்ட்டும் போறாங்க” என்றார்.

“போ தாத்தா, ஒனக்கு ஒன்னுமே தெரில. இப்ப காலம் எவ்ளோ மாறி போச்சி”

“ஒங்க ஆயாவ தாலி கட்டற அன்னிக்குத்தான் நான் அந்த காலத்துல பாத்தன் தெரிமா. பொண்ணு பாக்கறதுக்கு கூட எங்கப்பா என்ன கூப்ட்டும் போவல. புடிக்குதா புடிக்கலயானு கூட கேக்கலை.”

“அதெல்லாம் அந்தக் காலம். இப்பலாம் பொண்ணும் புள்ளையும் சம்மதம்னு சொன்னாதான் கல்யாணம்.”

தம்பிதுரையும் வண்டி டிரைவரும் சேர்ந்து தோட்டத்திலிருந்து கீற்றுகளைக் கொண்டுவந்து வேனுக்குள் ஒன்றின்மீது ஒன்றாகப் பரப்பிவைத்து அதன்மீது சமுக்காளங்களை விரித்தார்கள். டிரைவர் ஒரு படிக்கட்டுப் பலகையை எடுத்து கால்வைத்து ஏறுவதற்கு வசதியாக வண்டியோடு ஒட்டியபடி வைத்தார்.

”ஆம்பளயாளுங்க எல்லாம் ஒவ்வொருத்தவங்களா வந்து ஏறுங்க. பொம்பளைங்க சாமி கும்புட்டுட்டு வருவாங்க. வாங்க.”

“அப்ப நாங்க?” என்று படிக்கட்டுக்கு அருகில் வந்து சின்னப் பிள்ளைகள் அனைவரும் நின்றார்கள்.

“நீங்க இல்ல செல்லங்களா. பெரியவங்க மட்டும்தான்” என்றான் தம்பிதுரை. அவர்கள் முகம் உடனே வாடிவிட்டன. வேகமாக அவர்கள் அருகில் சென்று “ஆத்துத் திருழாக்கு அன்னிக்கு போனமே, அதுமாதிரினு நெனச்சிட்டிங்களா?” என்று கேட்டான் சிவபாலன். அவர்கள் ஆமாம் என்பதுபோல தலையசைத்தார்கள்.

“வண்டி இப்ப திருழாவுக்கு போகல. கடைக்கு போவுது. இப்ப முழு பரீச்ச லீவு வருமில்லல. அப்ப நாம எல்லாம் சேந்து மெட்ராஸ்க்கு போவலாம். சரியா? அங்க பீச்சு, ஜூ, கலங்கரைவிளக்கம்லாம் இருக்குது”

“பெரிய பீச்சா? கடலூரு பீச்சவிட ரொம்ப பெரிசா இருக்குமா?”

“ஆமாம். ரொம்ப நீளமா இருக்கும்.”

”சரி, கடயிலேந்து வரும்போது எங்களுக்கு ஏதாச்சிம் வாங்கியாறிங்களா?”

“என்ன வேணும் ஒனக்கு? காராசேவு வாங்கியாரட்டுமா?”

“லட்டும் காராசேவும்.”

“அண்ணா, எனக்கு பூந்தி.”

சித்தப்பா, பெரியப்பா, மாமாக்கள் அனைவரும் ஒவ்வொருவராக வண்டிக்குள் ஏறி உட்கார்ந்தார்கள்.

“நல்லா மெத்மெத்துனு செஞ்சி வச்சிட்டான் நம்ம தொர. ஆளு தெறமசாலிப்பா.”

“ஏ மச்சான். அவனும் வளந்து நிக்கறானில்ல. அவனுக்கும் ஒரு பொண்ண பாருங்க. சீக்கிரமா கல்யாணத்த பண்ணிடுவம்…”

“நானா பண்ணமாட்டறன்? சுத்துவழி சொந்தத்திலயே மூனு பொண்ணுங்க இருக்குது. இவன் யார காட்டனாலும் சரி. அப்பவே முடிச்சிடலாம். அவுங்க குடுக்க தயாராதான் இருக்கறாங்க. கைக்கு ஒரு வேல அமையட்டும், அப்பறம் பாக்கலாம்னு இவன்தான் இழுக்கறான்…”

“அவன் சொல்றதும் ஞாயம்தான? கல்யாணத்துக்கப்பறம் பொண்டாட்டிய வச்சிகினு ஒங்கிட்ட வந்து நூற குடு எரநூற குடுன்னு கேக்க முடியுமா? ஒருநாளு ரெண்டுநாளு குடுப்ப. அப்பறம் அலுப்புசலிப்புல எதயாவது சொல்வ? அதெல்லாம் தேவையா? சொந்த சம்பாத்தியம்னு ஒன்னு இருந்தா, அவனுக்கு நல்லதுதான?”

“நான் ஒன்னும் தப்பு சொல்லலியே. சர்க்காரு வேல கெடச்ச பிறகுதான் கல்யாணம் செஞ்சிக்குவன்னு ஒத்தக் கால்ல நிக்கறான் அவன். நான் என்ன செய்யமுடியும் சொல்லு.?”

“நம்ம சிவபாலனவிட தம்பிதொர பெரியவனில்ல?”

“ஆமா. ஒரு வருசம் மூத்தவன்.”

“அந்த ரயில்வே வேல என்னாச்சி? போன மாசம் இன்டர்வ்யூ இருக்குதுனு மெட்ராஸ்க்கு போய்வந்தான?”

“அந்த முடிவு இன்னும் தெரில. எல்லாம் கூடி வந்தா அடுத்த தைக்குள்ள முடிச்சிடலாம்.”

அம்மா, சித்தி, பெரியம்மா, அத்தை அனைவரும் கதவைப் பூட்டிக்கொண்டு தாத்தாவிடமும் ஆயாவிடமும் சொல்லிக்கொண்டு வந்து வண்டியில் ஏறினார்கள்.

பிரித்திருந்த தடுப்புப்பலகையை நிமிர்த்தி கொண்டியில் பொருத்தி சங்கிலி போட்டுக் கட்டிவிட்டு படிக்கட்டுப் பலகையை எடுத்து வண்டிக்குள் ஓரமாக வைத்தான் சிவபாலன்.

“நானும் சித்தப்பாவும் முன்னால ஒக்காந்துக்கறம். நீ பின்னால எடம் பாத்து உக்காதுக்கடா.”

சிவபாலன் வேப்பரமத்தடிக்குச் சென்றான். ஆயா, தாத்தாவிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான். தடுப்புப்பலகையில் விளிம்பில் கால்வைத்து மேலே தொங்கிய கயிற்றைப் பிடித்துக்கொண்டு தாவி வண்டிக்குள் ஏறினான். சின்னப்பிள்ளைகள் அனைவரும் அவனைப் பார்த்து கையசைத்தார்கள்.

“ஏன் பாலா, மதியச் சாப்பாடு எங்க?” என்று கேட்டார் முருகேசன் மாமா. எல்லோரும் அதைக் கேட்டு சிரித்தார்கள்.

”இன்னம் தெருவயே தாண்டல. அதுக்குள்ள மாமனுக்கு மதிய சாப்பாட்டு ஞாபகம் வந்துட்டுது.”

மீண்டும் சிரிப்பு அதிர்ந்தது.

“நடுவுல எதாவது காரம் சாரமா உண்டானு தெரிஞ்சிக்கறதுக்காக கேட்டன்?” மறுபடியும் தொடங்கினார் முருகேசன் மாமா. அதைக் கேட்டதும் சிவகாமி அத்தைக்கு கோபத்தில் முகம் சிவந்தது. ”ஒரு ஈசிபேசி இல்லாம பேசுது பாரு. ஆளுதான் கெடாவாட்டம் வளந்திருக்குது. புத்தி வளரலை” என்று முணுமுணுத்தாள். அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து சாலையின் பக்கமாகத் திரும்பிக்கொண்டாள்.

“ம். ஏரிபட்டுல பச்சமொளகா சட்டினியும் ஒரு பாட்டிலும் குடுக்கறாங்களாம். எறங்கிக்கலாமா?”

“நாம போற வேல என்ன, நீங்க பேசற பேச்சு என்ன? வேத்து மனுசங்க முன்னால நமக்கு ஒரு மரியாத வேணாமா? நேரம் காலம் தெரியாம எல்லா நேரத்துலயும் ஒரே பேச்சுதானா?”

”நான் வந்தா மரியாதயா இருக்காதுன்னா, என்ன இங்கயே எறக்கி உட்டுடுங்க.”

“ஐயய்ய. நீங்க ரெண்டு பேரும் இப்பிடி மாறிமாறி பேசிகிட்டா என்ன அர்த்தம்? பக்கத்துல பெரியவங்க சின்னவங்க இருக்காங்கங்கற நெனப்பு வேணாமா?” அம்மா பொதுவில் சத்தம் போட்டதும் பேச்சு நின்றது. சித்தி பேச்சை மாற்றும் விதமாக சிவபாலனைப் பார்த்து “பொண்ணு ஊட்டுக்காரங்களும் இந்நேரத்துக்கு கெளம்பியிருப்பாங்க இல்ல?” என்று கேட்டாள்.

“பன்னெண்டு மணிக்குலாம் பஸ் ஸ்டேன்ட்கிட்ட வந்துடுவம்ன்னு சொன்னாங்க சித்தி.”

“அப்ப, அவுங்க வந்து மொத ஆளா நிப்பாங்கன்னு சொல்லு.”

“நாமளும் போயிருக்கலாம். ஆனா நாம சொல்லிவச்ச வண்டி இப்பதான வந்தது? அதுல நம்ம தப்பு ஒன்னும் இல்லயே.”

சித்தி நிறுத்தியதும் கல்பனா அத்தை “ஏன் பாலா, இங்க சிறுவந்தாடுதான நமக்கு பக்கம். பட்டுப்பொடவய இங்கயே எடுத்திருக்கலாமே. எதுக்கு காஞ்சீபுரம் வரைக்கும் போவணும்?” என்று தொடங்கினாள். “போவ வர ஒரு நாளு ஆயிடுமே”

“காஞ்சிபுரம் பட்டுன்னு சொன்னா ஒரு தனி கெளரவம்தான அத்த?”

“எங்களுக்குலாம் சிறுவந்தாட்டுலதான் எடுத்தாங்க.”

கூட்டுரோடைத் தாண்டும்போது வண்டியை நிறுத்தி எல்லோரும் பூ வாங்கி வைத்துக்கொண்டார்கள். “பாப்பா, ரெண்டு ரூபாய்க்கி தனியா மல்லிப்பூ கட்டிக் குடும்மா” என்று கேட்டு தனியாக வாங்கி வைத்துக்கொண்டாள் அம்மா. “அந்த ரஞ்சினி புள்ளைக்கு குடுத்தா சந்தோஷப்படும் இல்ல. ரஞ்சினிதானடா அந்த புள்ள பேரு?” என்று சிவபாலனைப் பார்த்தாள். சிவபாலன் வெட்கத்தில் முகம்சிவக்க “ம்” என்றபடி குனிந்துகொண்டான்.

தம்பிதுரை பூவுக்கான பணத்தை எடுத்துக் கொடுத்ததும் வண்டி புறப்பட்டது.

“அண்ணி, பாலா கல்யாணம் முடிஞ்ச கையோட ஐயனாருக்கு ஒரு கெடாவ வெட்டி பொங்கல் வைக்கணும்ண்ணி.”

“குடும்பத்தோட போயி வச்சிட்டு வருவம். அதுக்கு முன்னால பத்திரிக அடிச்சி முடிச்சதும் மொத பத்திரிகய எடுத்தும் போயி அய்னாரு கால்ல வச்சி படச்சிட்டு வரணும்.”

“அப்ப, அதுக்கும் ஒரு கெடா வெட்டுவமா?”

“கெடாதான? வெட்டிடுவம்.”

“நீங்க கோயிலுக்கு போற தேதி என்னன்னு மட்டும் எங்கிட்ட சொல்லுங்க. கெடா செலவ நான் ஏத்துக்கறேன். பொங்கல் வைக்கறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலயே வீட்டுல கொண்டாந்து எறக்கிடுவன். கண்டறகோட்ட கெடா. சும்மா சிங்கம்மாதிரி இருக்கும்.”

”ஆட்டுக்காரன்கிட்ட சும்மா ஒரு வாய்வார்த்தயா சொல்லி வைங்க நீங்க. சித்திரமாசத்துலதான் தேதி குறிச்சி குடுத்திருக்காரு ஐயரு. நடுவுல நாள் நெறயா கெடயாது. பத்திரிகய அடிச்சி முடிச்சதும் போய் வந்துடலாம்.”

“எதுக்கு அவ்ளோ நெருக்கடியில சித்திரயிலயே வச்சிட்டிங்க. கொஞ்சம் நாள் கழிச்சி வைகாசி ஆனியில வச்சிருக்கலாமே.”

“மண்டபம் கெடக்கணுமே. இந்த சித்திரையிலதான் மண்டபம் கெடைச்சிது. இல்லன்னா ஆவணிக்கு தள்ளி போயிடும். சித்திரைன்னா புள்ளைங்களுக்கு லீவ் நாளில்லயா? ஊட்டோடயே இருக்கலாம். நிம்மதியா நாலு எடம் போய் வரலாம். அக்கடானு ஊட்டுல படுத்துங்கெடக்கலாம். வேணும்ன்னா கோயில் கொளத்துக்கும் போய்வரலாம். எல்லாத்துக்கும் வசதியா இருக்கும்.”

“மாப்பளைக்கு பொண்ணு ஊட்டுல புல்லட்டு கில்லட்டுனு பெரிய வண்டி ஏதாச்சிம் குடுக்கறாங்களா?”

“அதெல்லாம் ஒன்னும் கெடயாது. பாலா அதெல்லாம் எதயும் கேக்க கூடாதுனு கறாரா சொல்லிட்டான்.”

“அப்படியா பாலா? என்ன பாலா இது ? உலகம் தெரியாத பச்ச புள்ளயா இருக்கியேப்பா. ஊர்ல பத்து ரூபா சொந்தமா சம்பாதிக்க தெரியாதவனெல்லாம் கூட நான் பெரிய ரியல் எஸ்டேட், நான் பெரிய பைனாசியர்னு பொய்ய சொல்லிட்டு பொண்ணு ஊட்டுக் காரங்ககிட்டேர்ந்து புடுங்கிட்டு ஓடறானுங்க. நீ ஒரு ஸ்கூல் டீச்சர். சர்க்கார் வேல. மூச்சு இருக்கற காலம் வரைக்கும் உனக்கு சம்பளம் உண்டு. பென்ஷன் உண்டு. நீ எதயும் கேக்கலைன்னா எப்பிடி?”

சிவபாலனுக்கு எரிச்சலாக இருந்தது. ”வரதட்சணை வாங்கறதும் குற்றம், குடுக்கறதும் குற்றம். அப்படித்தான் சட்டம் சொல்லுது.”

”தட்சணயின்னா என்ன நினைச்சிட்ட நீ? அது ஒரு அன்பளிப்பு. ஒரு காணிக்கை. பொண்ண காலம் முழுக்க வச்சி காப்பாத்தற பையனுக்கு பொண்ணு ஊட்டுக்காரங்க மனப்பூர்வமா குடுக்கற அன்பளிப்பு.”

“அதெல்லாம் நாமாவே நினைச்சிக்கற கற்பனை. இப்ப அது சட்டப்படி குற்றம்.”

வண்டி வேகமாகச் சென்றது. திண்டிவனத்தைத் தாண்டியதும் ஒரு இடத்தில் மட்டும் தேநீர் அருந்துவதற்காக பத்து நிமிடம் நிறுத்தினார்கள். அதற்குப் பிறகு இறக்கை முளைத்ததுபோல பறந்து சென்றது வண்டி.

சிவபாலன் மனமெல்லாம் காஞ்சிபுரத்திலேயே இருந்தது. ரஞ்சனி வந்த வண்டி வந்திருக்குமா, காஞ்சிபுரத்தில் இறங்கியதும் அவளால் தன்னைக் கண்டுபிடித்துவிட முடியுமா, நெருங்கி வந்து பேசுவதற்கு நேரமிருக்குமா என்றெல்லாம் நினைவுகள் அலைபாய்ந்தன.

பெரியப்பாவிடமிருந்து தினத்தந்தியை வாங்கி நாலாக மடித்துவைத்துக்கொண்டு ஒவ்வொரு செய்தியாக சத்தம் போட்டு படித்தாள் அத்தை.

காஞ்சிபுரம் பஸ் ஸ்டான்டில் இறங்கும்போது மணி ஒன்றரையாகிவிட்டது. பெண்வீட்டு வண்டி கண்பார்வையில் படும்படியே நிறுத்தப்பட்டிருந்தது. அதற்குப் பக்கத்திலேயே சென்று வண்டியை நிறுத்தவைத்தான் தம்பிதுரை. வேகமாக இறங்கி அங்கிருந்தவர்களையெல்லாம் பார்த்து கைகுவித்து வணங்கினான். ரஞ்சினியின் முகம் சிவபாலனைத் தேடியது.

“மாப்பள பின்னால வெயில் படாம உக்காந்து வராரு” தம்பிதுரையின் சொற்களைக் கேட்டு வெட்கம் கொண்டு வேகமாக நகர்ந்து சென்று தன் வண்டியோடு ஒட்டிக்கொண்டு நின்றாள் ரஞ்சினி.

வண்டியிலிருந்து கடைசியாக இறங்கி உடைகளை சீர்படுத்தியபடியே வந்த சிவபாலன் அவளை நிமிர்ந்து பார்க்கும் விதமாக தொண்டையைச் செருமினான். அவள் திரும்பி அவனைப் பார்த்து திகைத்து, பிறகு மகிழ்ந்து புன்னகைத்தாள். ஆகாய நீல நிறத்தில் அவள் புடவை உடுத்தியிருந்தாள். வெட்கத்தில் அவள் முகம் சிவப்பது அழகாக இருந்தது. அவன் அவசரமாக அவளைப் பார்த்து “ரொம்ப அழகா இருக்குது” என்று சொன்னான். அவள் சிறுநகை தேங்கிய உதடுகளுடன் வெட்கத்தில் முகம் சிவக்க “ம்?” என்று கண்களைச் சுருக்கியபடி கேட்டாள். “புடவை, புடவை” என்று பதில் சொன்னான். பிறகு அவனாகவே “எட்டு மணிக்கே வரேன்னு சொன்ன வண்டிக்காரு பத்து மணிக்குதான் வந்தாரு. அதான் லேட்” என்று சொன்னான். அதற்குள் “பாலா” என்ற தம்பிதுரையின் குரல் கேட்டு முன்னால் ஓடினான்.

“பாலா, வந்த வேலய மொதல்ல முடிக்கலாம்ன்னு அம்மா சொல்றாங்க. மாமா, பெரிப்பாவுக்கெல்லாம் பசிக்குதான். நான் ஆம்பள ஆளுங்களயெல்லாம் அழச்சிகிட்டு ஓட்டலுக்கு போறன். நீ பொம்பளயாளுங்கள அழச்சிகிட்டு பொடவைக்கடைக்குப் போ. சரியா?”

”அதோ அந்த மகாலட்சுமி பட்டு சென்டருக்கு போகலாம். ரஞ்சினி அக்காவுக்கு கூட அங்கதான் எடுத்தம். ரொம்ப ராசியான கட. வெலயும் நமக்கு கட்டுப்படியாவறமாதிரி இருக்கும்” ரஞ்சனியின் அப்பா சிவபாலனின் அம்மாவிடம் சொன்னார். ”அங்கயே போவலாம்ங்க” என்றார் அம்மா.

நடந்துபோகும்போதே அம்மா தன் பையிலிருந்த பூ பொட்டலத்தை எடுத்து ரஞ்சினியிடம் கொடுத்தார். “வச்சிக்க கண்ணு” என்றார். ரஞ்சினி பொட்டலத்தைப் பிரித்து அதிலிருந்த மல்லிகைச்சரத்தை தன் தலையில் அப்போதே சூடியபடி அம்மாவிடம் “தேங்க்ஸ்மா” என்றாள். அவள் விழிகள் சிவபாலனைத் தேடின. சிவபாலன் எல்லோருக்கும் கடைசி ஆளாக வந்துகொண்டிருந்தான். கடைக்குள் செல்வதற்கு முன்னால் அவள் அவனைப் பார்த்துவிட்டாள். அவனைப் பார்த்தபடி பின்னலை முன்பக்கமாக எடுத்து மீண்டும் பின்பக்கமாகப் போட்டாள். அதற்குள் அவன் அந்தப் பூச்சரத்தைப் பார்த்துவிட்டான். கண்களை ஒருகணம் மூடி புன்னகையுடன் தலையை மகிழ்ச்சியுடன் அசைத்தான். அதற்குப் பிறகு அவள் வேகமாக அடிவைத்து துள்ளலோடு சென்று பெண்கள் வரிசைக்குள் சேர்ந்துகொண்டாள்.

இருவர் பக்கமிருந்தும் பத்து பெண்கள் இருந்தார்கள். கடைச்சிப்பந்தி அவர்களைப் பார்த்ததும் எழுந்து வந்து உள்ளே அழைத்துச் சென்றான்.

“சொல்லுங்கம்மா, என்ன நெறத்துல பாக்கறிங்க, என்ன வெலையில பாக்கறிங்க. நம்மகிட்ட ரெண்டாயிரத்துலேருந்து ஒரு லட்சம் வரைக்கும் வகைவகையா புடவைங்க இருக்குது.”

அடுக்கிலிருந்து சில புடவைகளை எடுத்து மேசைமீது வைத்தார் சிப்பந்தி. ஒவ்வொரு புடவையின் நிறமும் சரிகைகளும் பளிச்சென்றிருந்தன.

அம்மா திரும்பி “கண்ணு, இங்க வாம்மா” என்று ரஞ்சினியை அழைத்தார். ரஞ்சினி திகைத்து நாக்கைக் கடித்தபடி அம்மாவின் அருகில் நின்றாள். “இதான் பொண்ணு. எங்க ஊட்டுக்கு வரப்போற பொண்ணு. அதுக்கு புடிச்ச நெறத்துல, புடிச்ச டிசைன்ல அவசரமில்லாம நிதானமா காட்டுங்க.”

“சரிம்மா, ரேட்டு….?”

“ஏழாயிரம் எட்டாயிரம் ஆனாலும் பரவாயில்ல. பொண்ணுக்கு புடிச்சிருக்கணும். அதான் முக்கியம்” அம்மா தொடர்ந்து ரஞ்சினியிடம் “நீ அவசரமில்லாம பாத்து சொல்லு கண்ணு” என்றபடி அவள் தோளைத் தொட்டு அழுத்தினார். பக்கவாட்டில் திரும்புவதுபோல திரும்பிய ரஞ்சினி சிவபாலனைப் பார்த்தாள். அவள் கண்களில் நீர்க்கோடுகள் தெரிந்தன.

அதற்குள் அத்தைகள் “அண்ணி” என்று அவசரமாக அம்மாவைத் தடுக்க முயற்சி செய்தார்கள். ”அந்தக் காலத்துல அறநூறு எழுநூறு ரூபாய்லதான் எங்களுக்கு பொடவ எடுத்துக் குடுத்தாங்க” என்று முணுமுணுத்தார்கள். சித்தியும் “என்னக்கா இப்பிடி ஒரேடியா எட்டாயிரம்னு சொல்லிட்டிங்க?” என்று காதோரமாக வந்து சொன்னாள். நாக்கைத் தட்டி “த்ச்” என்ற ஒரே சத்தத்தால் அவர்களை அமைதிப்படுத்தினார் அம்மா. அடங்கிய குரலில் “அது என்ன நம்மளாட்டம் ஊட்லயே இருக்கற பொண்ணாடி? டீச்சர் வேல பாக்கற பொண்ணு. அதுக்கேத்த மாதிரிதான துணிமணியும் இருக்கணும்” என்றாள்.

கடைக்காரர் ரஞ்சினியிடம் “எந்த மாதிரி நெறம் வேணும், சொல்லுங்க” என்று கேட்டார். ரஞ்சினி அடுக்குகளில் வைக்கப்பட்டிருந்த எண்ணற்ற பட்டுப்புடவைகள் மீது பார்வையைப் படரவிட்ட பிறகு மெதுவாக “மயில்கழுத்து நிறம்” என்று பதில் சொன்னாள்.

கடைக்காரர் ஒரே நிறத்தில் வெவ்வேறு டிசைன்களில் உள்ள புடவைகளை எடுத்து மேசைமீது பிரித்துவைத்தார். அனைவரும் ஒவ்வொரு புடவையையும் தொட்டும் தடவியும் பார்த்தார்கள். ரஞ்சினியின் அம்மா ஒரு புடவையை எடுத்து ரஞ்சினியின் தோள்மீது வைத்துப் பார்த்தார்.

கடைக்கு உள்பக்கமாகவே படியேறிச் செல்லக்கூடிய ஒரு மாடிப்பகுதி இருந்தது. முதலாளி கண்ணைக் காட்டியதும் ஒரு வேலைகாரர் மாடிக்குச் சென்று மயில்கழுத்துப் புடவைகள் மட்டுமே நிறைந்த ஒரு பெட்டியை எடுத்துவந்து மேசை மீது வைத்தார். சிப்பந்தி எல்லாப் புடவைகளையும் ஒவ்வொன்றாக வெளியே எடுத்து பிரித்துவைத்தார்.

மோர் நிறைந்த தம்ளர்கள் அடுக்கப்பட்ட ஒரு பெரிய தட்டை எடுத்துவந்த ஒரு சிப்பந்தி அம்மாவின் முன்னால் நின்று “எடுத்துக்குங்க மா” என்று சொன்னார். “எதுக்குங்க இதெல்லாம்?” என்று தயங்கினார் அம்மா.

“எடுத்துக்குங்கம்மா. நல்ல வெயில் நேரம். தண்ணிக்கு பதிலா மோர். அவ்ளோதான். ஒங்க வீடுன்னு நெனச்சி எடுத்துக்குங்க.”

அம்மா ஒரு தம்ளரை எடுத்து ரஞ்சினியிடம் கொடுத்தார். பிறகு தானும் ஒரு தம்ளரை எடுத்துக்கொண்டார். ரஞ்சினி கண்களைச் சுழற்றி சிவபாலன் நின்றிருக்கும் இடத்தைப் பார்த்தாள். ”குடி குடி” என்றபடி சைகை காட்டினான் அவன். அவள் ஒரே ஒரு மிடறு அருந்திவிட்டு நுனி நாக்கால் உதடுகளைத் தடவினாள். அத்தையின் பக்கம் அம்மா திரும்பிய ஒரு கணத்தில் மின்னல்போலத் திரும்பி மேசைமீது தேர்ந்தெடுத்து ஒதுக்கி வைத்திருந்த புடவைகளின் மீது விரல்வைத்து “ஓகேவா?” என்பதுபோல கண்களால் கேட்டாள். அவற்றின் நிறம் உண்மையிலேயே மயிலின் கழுத்து நிறத்தில் இருந்தது. சரிகை வேலைகளும் அற்புதமாக இருந்தன. நன்றாக இருப்பதாக சிவபாலனும் கண்களாலேயே பதில் சொன்னான்.

மோர்த்தம்ளர்களை சிப்பந்தி வாங்கிச் சென்றார். சில கணங்களுக்குப் பிறகு ரஞ்சினி அங்கிருந்த புடவைகளைக் காட்டி “இந்த அஞ்சுமே ஓகேமா. இதுல ஒன்ன பெரியவங்க நீங்க பாத்து சொல்லுங்க” என்றாள். “பாருடி என் தங்கத்த. சட்டுபுட்டுனு வேலய முடிச்சிட்டுது. அவ அவ ஊருல ஒரு பொடவய எடுக்க ஒரு நாள்பூரா பாத்துகினே இருக்கும். ஜோசிய அட்டைய கிளி எடுக்கறமாதிரி கண்ண மூடி கண்ண தெறக்கறதுக்குள்ள வேலய முடிச்சிட்டுது” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அம்மா ரஞ்சினியின் அம்மாவை நோக்கி “இங்க வாங்கம்மா. இந்த அஞ்சில ரஞ்சினிக்கு எது ரொம்ப பொருத்தமா இருக்கும்? நீங்களே பாத்து சொல்லுங்க” என்று கேட்டார். அந்த அம்மாவும் அவரோடு வந்திருந்தவர்களும் ஒருசேரக் கூடி பேசி, ஐந்தை இரண்டாகக் குறைத்தார்கள். பிறகு ரஞ்சினியிடம் திரும்பி “அதுவா, இதுவா, நீயே சொல்லும்மா ரஞ்சினி” என்று கொடுத்துவிட்டார்கள்.

ரஞ்சினியின் கண்கள் மீண்டும் சிவபாலனின் திசையில் திரும்பின. சொல் என்பதுபோல புருவத்தை உயர்த்தினாள். யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக விரலை காதோரமாக நகர்த்திச் சென்று கூந்தலை ஒதுக்கினாள். வலதுகையின் கட்டைவிரலை மட்டும் உயர்த்தி ஓகே என்பதன் அடையாளமாக தலையை மேலும் கீழும் அசைத்தான். அவள் அதை மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் அந்தப்புடவையை மட்டும் கையிலேந்தி “இதுவா?” என்பது போல புருவத்தை உயர்த்திக் கேட்டாள். உதடுகளில் புன்முறுவலைத் தேக்கி அவன் விழி சுருங்க அவளைப் பார்த்தான்.

“செலக்‌ஷன் முடிஞ்சிதாடா?” என்றபடி தம்பிதுரை உள்ளே நுழைந்து சிவபாலனின் பக்கத்தில் வந்து நின்றான். அவனைத் தொடர்ந்து ஆண்கள் கூட்டமும் நுழைந்தது. அம்மாவுக்கு அருகில் சென்று நின்றார் அப்பா. “இதத்தான் செலக்ட் பண்ணியிருக்கம். நீங்களும் பாருங்க” என்று அம்மா காட்டினார். “எனக்கு என்னம்மா தெரியும் புடவையைப் பத்தி. நீங்க எத முடிவு பண்றீங்களோ, அதுக்கு நான் பணத்த கட்டுவன்” என்றார் அப்பா.

பணத்தைச் செலுத்தியதும் கடைக்காரர் பட்டுப்புடவையை ஒரு பையில் போட்டு ஒரு தட்டில் தேங்காய் வெற்றிலை பாக்கு பூ எல்லாவற்றையும் வைத்துக் கொடுத்தார்.

“எதுக்குங்க இதெல்லாம்?”

“காலம் காலமா குடுக்கறதுதான்மா. இதெல்லாம் ஒரு ஐதீகம். திடீர்னு விட்டுடமுடியாது.”

“ஜாக்கெட் தனியா எடுக்கணுமா?”

“தேவையில்லைமா, புடவை கூடவே இருக்குது. டைலர்கிட்ட குடுத்திங்கன்னா அவுங்க பிரிச்சி தச்சி குடுத்துடுவாங்க.”

கடையை விட்டு வெளியே வந்தார்கள்.

”பாலா, வெயிலா இருக்குது. நான் எல்லாரயும் வண்டிகிட்ட கூட்டிட்டு போறன். நீங்க போய் சாப்ட்டுட்டு வாங்க. அதோ அங்க போங்க. கிரிஜா பவன். அங்க நல்லா இருக்குது.”

கிரிஜா பவனுக்குள் சென்றார்கள். அந்த நேரத்திலும் கூட்டம் வழிந்தது. ஒருபக்கம் கோவில்களுக்கு வரும் கூட்டம். இன்னொரு பக்கம் பட்டுப்புடவைகள் எடுக்க வரும் கூட்டம். சிவபாலனும் அவன் வீட்டுப் பெண்களும் ஒரு வரிசையில் இரு மேசைகளில் உட்கார்ந்தார்கள். சுவரோரம் உள்ள மற்றொரு வரிசையில் ரஞ்சினியும் அவள் வீட்டுப் பெண்களும் சென்று அமர்ந்தார்கள்.

தொலைவான வரிசையில் அமர்ந்திருந்த ரஞ்சினியைப் பார்த்தான் அவன். ஒரு துளி ஈரம் பட்டுத் தெறித்ததுபோல அவளுடைய அழகிய கண்கள் ஒருகணம் அவனைத் தொட்டுச் சென்றன. அவள் குனிந்து இலையைப் பார்த்து சிரித்துக்கொண்டபோது அவள் கன்னத்தின் கீழ்த்தசையில் ஒரு கோடு விழுந்தது. அங்கே மிளகென உருண்ட ஒரு மச்சம் இருப்பதுபோலத் தோன்றியது. அவன் பார்வையைத் திருப்பி இலையைப் பார்த்தான்.

என்ன வைத்தார்கள், என்ன சாப்பிட்டோம் என்பதே அவனுக்குத் தெரியவில்லை. ஒருகணம் இலையைப் பார்ப்பதும் அடுத்த கணம் கண்களைத் திருப்பி ரஞ்சினியின் திசையில் பார்ப்பதுமாக நேரம் கரைந்தபடி இருந்தது.

“என்னடா இது, கோழி கெளறர மாதிரி சாப்படற? ஒழுங்கா எடுத்து சாப்புடு.”

அம்மா அதட்டிய பிறகு ஒழுங்காக நாலு வாய் எடுத்துச் சாப்பிட்டான். அதற்கு மேல் முடியவில்லை. மீண்டும் விரல்களால் அளையத் தொடங்கினான். அக்கணத்தில்தான் ரஞ்சினி எழுந்து கைகழுவும் இடத்துக்குச் செல்வதைப் பார்த்தான். “போதும்மா, நீங்க சாப்புடுங்க. வயித்த பெரட்டறமாதிரி இருக்குது” என்றபடி எழுந்து வேகமாக கைகழுவும் இடத்துக்கு விரைந்தான்.

சுவரோரமாக இருந்த வாஷ் பேசினில் கைகழுவியபடியே கண்ணாடியில் முகம் பார்த்தவாறு நின்றிருந்தாள் ரஞ்சினி. கோதுமை நிறத்தில் நீண்டிருந்த அவள் விரல்களை எட்டிப் பற்றிக்கொள்ளவேண்டும் போல இருந்தது. விரல்களில் பட்டு ஓடைபோல ஓடியது நீர். சிவபாலன் இரண்டாவது பேசினில் கைகழுவியபடி அவளைப் பக்கவாட்டில் பார்த்தான். ஒரே நொடியில் அவன் உடலிலிருந்த ரத்தம் முழுவதும் முகத்தை நோக்கிப் பாய்வதுபோல இருந்தது. என்னென்னவோ பேசவேண்டும் போல ஆசை துடித்தது. ஒரு சொல்லும் கூடி வராமல் மனம் தவித்தது. தன் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்து அவளிடம் நீட்டினான். வெட்கம் படர்ந்த புன்னகையுடன் அவனைத் திரும்பிப் பார்த்தபடி அவள் அதைப் பெற்றுக்கொண்டாள். பிரித்து விரல்களைத் துடைத்துக்கொண்டாள்.

”நல்லா இருக்குது” அவசரமாகச் சொன்னான்.

“ம்?” அவள் விழி சுருக்கியபடி அவனைப் பார்த்தாள்.

“ஜிமிக்கி, ஜிமிக்கி நல்லா இருக்குது”

“ம்”

“ஜிமிக்குக்குள்ள ஒரு சின்ன ஜிமிக்கி ஊஞ்சலாடறமாதிரி இருக்குது.”

“ஓ”

“மகிழம்பூ மாதிரி வட்டமா இருக்குது”

“ம்”

இல்ல இல்ல. மரத்துல பன்னீர்ப்பூ தொங்குமே அந்த மாதிரி…”

“ம்”

“ஐயோ, எதுவுமே எனக்கு சொல்லத் தெரியல. நீ ரொம்ப அழகா இருக்கே.”

“என்ன புடிச்சிருக்குதா?”

“ரொம்ப ரொம்ப புடிச்சிருக்குது. அது என்ன கழுத்துல, காதுக்குக் கீழ,, மச்சமா?”

அவள் விரல்கள் சட்டென உயர்ந்து அதை மறைத்தன. ”ஐயையோ” என்றாள். பிறகு நாணத்துடன் ‘எப்ப பாத்திங்க?” என்றாள்.

“இப்பதான். நீ சாப்ட்ட சமயத்துல”

”ம்”

“எதாவது பேசேன். ஏன் ஒன்னும் சொல்லமாட்டற?”

“உங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்குது”

“நான் ஒன்ன பத்தி நெறய கவிதை எழுதி வச்சிருக்கேன்.”

“உண்மையாவா?

“நூறு நூத்தியம்பது கவிதை இருக்கும். ஒரு நோட்டு போட்டு எல்லாத்தயும் எழுதி வச்சிருக்கேன்.”

“எனக்கு படிக்கணும் போல இருக்குது. இங்க கொண்டுவந்திருக்கீங்களா?”

“ம்ஹூம். வீட்ல வச்சிருக்கேன். நான் அப்பறமா படிக்க குடுக்கறேன்.”

“அப்புறம்னா?”

“அப்பறம்னா அப்பறம்தான்…”

“அதான் எப்பறம்?”

“அப்ப்ப்ப்ப்ப்பறம்.”

ச்சீ என செல்லமாகச் சிணுங்கியபடி அவள் பேசினிலிருந்து விலகி செல்வதற்கு முனைந்தாள். அவன் கொடுத்த கைக்குட்டையை மடித்து உதட்டைத் துடைத்து கைக்குள் மூடி வைத்துக்கொண்டாள். பிறகு இடுப்பில் செருகியிருந்த தன் கைக்குட்டையை எடுத்து புன்னகைத்தவாறே அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

அவள் புன்னகை அவன் நெஞ்சை நிறைத்தது. கண்ணாடிச்சுவரைத் தழுவியிறங்கி நழுவியோடும் மழைச்சாரலென வயிற்றை நிறைத்து அதிரவைத்தது. நீண்ட நேரம் தாகத்துடன் நடந்துசெல்வதுபோல ஒரு தவிப்பை உணர்ந்தான்.

பூப்போட்ட கைக்குட்டையை மெதுவாகப் பிரித்தான். ஒரு சின்ன சதுரம் போன்ற கைக்குட்டை. இரு மூலைகளில் எஸ் என்னும் ஆங்கில எழுத்தும் மற்ற இரு மூலைகளில் ஆர் என்னும் ஆங்கில எழுத்தும் பின்னலால் பொறிக்கப்பட்டிருந்தன. அந்த எழுத்தை உயர்த்தி முத்தமிட்டான். மல்லிகைப்பூவின் மணம். வியர்வையின் மணம். ரஞ்சினி இன்னும் அந்த இடத்தில் நிற்பதுபோல நினைத்துக்கொண்டான். அக்கணமே வெட்கம் படர பேசினை விட்டு வெளியே வந்தான்.

“என்னடா, என்ன செய்யுது? ஏன் இவ்ளோ நேரம்?” அம்மா கேட்டாள்.

“தெரியலம்மா. காலயில சாப்ட்டது ஒத்துக்கல போல. வாந்தி வரமாதிரி இருக்குது. ஆனா வரலை.”

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை. மணி மூன்றாகிவிட்டது.

“நாங்க கெளம்பட்டுமா சார்?”

ரஞ்சினியின் அப்பா வந்து சிவபாலனின் அப்பாவிடம் கேட்டார்.

“நல்லதுங்க. அமாவாசக்குப் பிறகு ஒரு நல்ல நாளா பாத்து வரேன். அதுக்குள்ள நீங்க பத்திரிக மேட்டர எழுதி வைங்க. வந்து வாங்கிட்டு போறன். அடிச்சி முடிச்சிட்டா ஒரு பொங்கல வச்சி படயல போட்டுட்டு ஊருக்கு குடுக்க ஆரம்பிச்சிடலாம்.”

“வரும்போது மறக்காம பொடவய எடுத்துட்டு வாங்க. அக்கம்பக்கத்து உறவுக்காரங்க பாக்கணும்ன்னு சொன்னாங்க…..” ரஞ்சினியின் அம்மா முன்னால் வந்து சிவபாலனின் அம்மாவிடம் சொன்னாள். அதற்குச் சம்மதம் என்பதுபோல அம்மா தலையசைத்தாள்.

அவர்கள் வண்டி புறப்பட்டது. ரஞ்சினி திரும்பிப் பார்ப்பதை அவன் உணர்ந்தான். “டேய், பொண்ணு ஒன்ன பாக்குதுடா” என்று தம்பிதுரை சுட்டிக் காட்டியபோது வெட்கத்தோடு தலையைத் திருப்பிக்கொண்டான்.

“நாமளும் கெளம்புவமா?”

“கோயில் இருக்கற ஊருக்கு வந்துட்டு, சாமிய பாக்காம போனா எப்பிடி சித்தி? நாலு மணிக்கு கோயில் தெறந்துருவாங்க. பாத்துட்டு போயிடலாம்” என்றான் தம்பிதுரை.

”என்னடா நீ என்ன சொல்ற?” என்று அம்மா சிவபாலனைக் கேட்டாள். அவன் இந்த உலகத்திலேயே இல்லாதவன் போல இருந்தான். அவனை உலுக்கி மறுபடியும் கேட்கவேண்டியதாக இருந்தது. சட்டென்று சுயநினைவுக்கு வந்து சரியென்று தலையாட்டினான்.

காமாட்சியம்மன் கோவிலையும் வரதராஜ பெருமாள் கோவிலையும் பார்த்துவிட்டு வெளியே வருவதற்குள் மணி ஆறாகிவிட்டது. சிவபாலனுக்கு கோவிலுக்குள் எந்த உருவத்தைப் பார்த்தாலும் ரஞ்சனியாகவே தெரிந்தது.

வண்டிக்குள் ஏறி அனைவரும் உட்காரும்போதுதான் முருகேசன் மாமாவைக் காணவில்லை என்பது தெரிந்தது. “நம்ம பின்னாலதான வந்துகினே இருந்தாரு? அதுக்குள்ள எங்கடா மாயமா போனாரு?” என்று ஆச்சரியப்பட்டான் தம்பிதுரை.

“ம். அதுக்குள்ள எங்கயாவது வாசம் புடிச்சி போயிருப்பாரு. நாயக் குளிப்பாட்டி நடுவூட்டுல வச்சாலும் அது வால கொழச்சிகினு போவற எடத்துக்குத்தான் போவுமாம். அந்தக் கதைதான் இவரு கத. ஒன்னும் தேடவேணாம். அவுரா வருவாரு, ஏறி ஒக்காருங்க.”

சிவகாமி அத்தை எரிச்சலோடு சொன்னபடி படிக்கட்டுப்பலகையில் கால்வைத்து முதல் ஆளாக ஏறி வண்டிக்குள் உட்கார்ந்தாள். அவளைத் தொடர்ந்து அனைவரும் ஏறி உட்கார்ந்தனர்.

அதற்குள் துண்டால் சிரிப்பை மறைத்தபடி வண்டிக்கு அருகில் வந்துவிட்டார் முருகேசன் மாமா. “எனக்காகத்தான் வெய்ட்டிங்கா? சரி சரி போலாம் ரைட்” என்ற வண்டியின் விலாப்புறத்தில் தட்டியபடி உள்ளே ஏறி அமர்ந்தார்.

அத்தை உடனே வெடித்தாள். “அந்த நாத்தம் புடிச்ச தண்ணிய ஒருநாளு கூட குடிக்காம இருக்கமுடியாதா? எங்க எங்கன்னு மோப்பம் புடிச்சிட்டு போய் வந்துட்ட?”

அம்மா அத்தையின் தோளைப் பற்றி அழுத்தி பேச்சை நிறுத்தும்படி சொன்னாள்.

முருகேசன் மாமா நமுட்டுச் சிரிப்போடு சாலையில் செல்லும் வாகனங்களின் பக்கம் திரும்பிக்கொண்டார். “கெளம்பலாம் தொர” என்று சொன்னபடி சிவபாலன் தடுப்புப்பலகையைத் தூக்கிப் பொருத்திவிட்டு கயிற்றைப் பிடித்து தாவி வண்டிக்குள் உட்கார்ந்தான்.

இருட்டு பரவத் தொடங்கியது. காற்றில் சற்றே குளுமை படர்ந்துவந்தது. வந்தவாசியைக் கடக்கும்போது முற்றிலும் இருள் சூழ்ந்துவிட்டது. முருகேசன் மாமா திடீரென ’அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு’ என்று பாடத் தொடங்கிவிட்டார். அருமையான குரல். சரியான ஏற்ற இறக்கமுடன் எந்தப் பிசிறுமில்லாமல் அவர் குரல் ஒலித்தது. “வெக்கம் மானம் சூடு சொரண எதுவுமில்லாத ஆளுடி. பாட்டு பாடுது பாரு மானம் கெட்ட பாட்டு” என்று முனகியபடி தோளை ஒடித்து முகம் திருப்பிக்கொண்டாள் சிவகாமி அத்தை. அந்தப் பாட்டு முடிந்ததுமே முருகேசன் மாமா உற்சாகத்தோடு ‘ஓடும் மேகங்களே’ பாடத் தொடங்கினார். அவர் குரலில் மகிழ்ச்சி கூடிக்கொண்டே போனது. வளவனூர் வந்து சேர்கிறவரைக்கும் அவர் நாற்பது ஐம்பது பாடல்களாவது பாடியிருப்பார். கொஞ்சம் கூட களைப்பே இல்லை. அவ்வளவு பாடல்கள் அவருக்கு மனப்பாடமாக தெரியும் என்பதே அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியம் அளித்தது.

வீட்டுக்கு வந்ததும் வண்டிக்கு பணம் கொடுத்து அனுப்பினான் தம்பிதுரை. புடவைப்பையை நடுவீட்டுக்கு எடுத்துச் சென்ற அம்மா சாமிக்கு முன்னால் வைத்துவிட்டு கற்பூரம் ஏற்றி சில கணங்கள் கண்மூடிக் கும்பிட்டாள். பிறகு வெளியே எடுத்து வந்து ஆயாவிடமும் தாத்தாவிடமும் காட்டினாள்.

“சரிசரி, பேசிட்டே ஒக்காந்துட்டிருக்காதீங்க. இட்லியோ தோசையோ எதயாவது ஊத்துங்க. காலையில கெளம்பணுமேங்கற பரபரப்புல சரியாவே தூக்கம் இல்ல. இன்னைக்காவது சீக்கிரம் தூங்கி எழுந்தாதான் நாளைய பொழுது நல்லா இருக்கும்”

அப்பா சொன்னதும் பெரியம்மா, சித்தி, அத்தைகள் எல்லோரும் அடுப்படிக்குச் சென்றார்கள். எல்லோரும் சேர்ந்து பம்பரமென வேலை செய்வதை உட்கார்ந்த இடத்திலிருந்து அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தான் சிவபாலன். அவனுக்கு அருகில் அமர்ந்து தம்பிதுரை சொன்ன கதைகள் எதுவுமே அவன் மனத்தில் உறைக்கவில்லை.

இட்லித்தட்டு வைக்கப்பட்டதும் ஆவலோடு எல்லோரும் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார்கள். பொட்டுக்கடலை சட்டினியில் மிதந்த கறிவேப்பிலையின் கரிந்த மணம் நாசியை எட்டியபோதுதான் சிவபாலனுக்கு மதியச் சாப்பாடு நினைவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து ரஞ்சினியின் நினைவு வந்துவிட்டது. தனக்கு அருகில் ரஞ்சினி இல்லை என்கிற எண்ணம் அவனுக்கு வேதனையாக இருந்தது. பேருக்கு இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு அறைக்குள் வந்தான். மேசைமீதிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து படிப்பதுபோல விரித்துவைத்துக்கொண்டு நினைவுகளில் மூழ்கினான். ரஞ்சினி இல்லாத உலகம் வெறுமை சூழ்ந்ததாக இருந்தது அவனுக்கு. அந்தப் புருவம். அவள் கண்கள். அவள் ஜிமிக்கி. அந்த மச்சம். எல்லாவற்றையும் துல்லியமாக நினைவுகூர்ந்தான்.

“என்னடா போவலாமா?” என்றபடி அறைக்குள் வந்தான் தம்பிதுரை. எங்கே என்பது போல அவனைப் பார்த்தான் சிவபாலன்.

“மொட்டமாடிக்குடா. என்ன முழிக்கற? அங்கதான நாம படுத்துக்குவம். வா. இன்னைக்கு காத்து நல்லா இருக்குது.”

மூலையில் சுருட்டிவைக்கப்பட்டிருந்த பாய்களையும் தலையணைகளையும் எடுத்தான்.

த்ச் என்று நாக்கு சப்புக்கொட்டியபடி ‘நா வரலைடா. நீ போ. நான் இங்கயே படுத்துக்கறேன்” என்றான் சிவபாலன். புதுசாகப் பார்ப்பதுபோல ஒருகணம் அவனை விசித்திரமாகப் பார்த்துவிட்டு பாய்மூட்டையோடு வெளியே போனான் தம்பிதுரை.

விளக்கை நிறுத்திவிட்டு படுக்கையில் சரிந்தான் சிவபாலன். நிலா வெளிச்சத்தில் வெள்ளித்தகடுகளென மின்னித் தொங்கும் தென்னங்கீற்றைப் பார்த்தபடியே படுத்திருந்தான். பேசின் குழாயில் தண்ணீரை வாங்கி வழியவிட்டபடி நீண்டிருந்த ரஞ்சினியின் விரல்கள் நினைவுக்கு வந்தன. அந்த விரல்கள் நீண்டு தன் கன்னத்தைத் தொடுவதுபோல நினைத்துக்கொண்டான்.

எதிர்பாராத கணத்தில் நினைவுக்கு வந்தவனாக எழுந்து ஆணியில் தொங்கிய பேண்டிலிருந்து சதுரக் கைக்குட்டையை எடுத்துக்கொண்டு படுத்தான். நிலவொளியில் ஆர் எழுத்துகளும் எஸ் எழுத்துகளும் மங்கலாகத் தெரிந்தன. அவற்றை தானாகவே அவன் விரல்கள் சில கணங்கள் வருடின. பிறகு அந்தக் கைக்குட்டையைப் பிரித்து முகத்தின் மீது விரித்துக்கொண்டான். மல்லிகைப்பூவின் மணம். வியர்வையின் மணம். ரஞ்சினி தனக்கு அருகிலேயே இருப்பதுபோல நினைத்துக்கொண்டான்.