புதிய குரல்கள்

கா சிவா நேர்முகம் – நரோபா

1. உங்களைப் பற்றி- பணி/ குடும்பம்/ வசிப்பது

சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடிக்கும் அறந்தாங்கிக்கும் இடையே சிவலாங்குடி என்னும் கிராமத்தில் 1975-ல் பிறந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் இரு மூத்த சகோதரிகள். பத்து வயது வரை அம்மா மற்றும் சகோதரிகளுடன் கிராமத்திலேயே வளர்ந்தேன். தந்தை சென்னையில், தென்னக ரயில்வே தலைமையகத்தில் பணியாற்றினார். அம்மா, சகோதரிகளுடன் சென்னைக்கு 85-ல் வந்தேன். பொறியியலில் பட்டயமும், தமிழ் இலக்கியத்தில் பட்டமும் பெற்றேன். தற்போது தமிழக அரசுப் பணியில் உள்ளேன். மனைவி, மகன், மகள் மற்றும் தாய் தந்தையருடன் சென்னையிலேயே வசிக்கிறேன்.

2. இலக்கிய பரிச்சயம் எப்படி?

சென்னை வந்ததிலிருந்தே ஆனந்த விகடன் மற்றும் தினமணியின் வாசகன். சுஜாதாவின் கட்டுரைகள் மற்றும் வைரமுத்துவின் பெரும்பாலான நூல்களை வாசித்துள்ளேன். தினமணியில் வெளிவந்த நூல் விமர்சனத்தில் விஷ்ணுபுரம் நூல் பற்றி வாசித்து அந்நூலை வாங்கினேன். அந்நூலின் முன்னுரையில் கூறப்பட்ட விஷ்ணு புரண்டு படுப்பதைப் போல என் வாசிப்பும் தடம் மாறியது. அப்போது தினமணிக் கதிரில் வாரம் ஒரு சிறுகதையென வெளியான வண்ணதாசன் சிறுகதைகளும் என் வாசிப்பை மாற்றின. தொடர்ந்து நூலகத்தில் வண்ணதாசனை தேடித் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். வண்ணதாசன் கடிதங்கள் நூலின் மூலம் தி. ஜானகிராமனின் உயிர்த்தேன் நூலை அடைந்தேன். இன்றுவரை என் மனதில் இனிமையை ஊறவைக்கும் நூலாக அது உள்ளது ( =ஜெயமோகன் அதை நிராகரித்தபோதும்). இங்கிருந்து பின் சென்று புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன் என வாசித்து வருகிறேன்.

 

3. இலக்கிய ஆதர்சங்கள்

ஆசிரியராக ஜெயமோகனை ஏற்றுக் கொண்டுள்ளேன். குருவாக வண்ணதாசனை வணங்குகிறேன். தி. ஜானகிராமனிடம் விளக்கிவிட முடியாத ஓர் ஈர்ப்பு எப்போதும் உள்ளது.

என் மனதில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் என் பெரியப்பாவின் குரல் போலவே நாஞ்சில் நாடனின் குரல் எனக்குள் ஒலிக்கிறது.

தேவதேவனை நினைக்காமல் ஒரு நாளும் முடிவதில்லை.

4. எழுத்தாளர் என உணர்ந்தது எப்போது?

எழுத ஆரம்பித்த பின்புதான். என் ஆதர்சங்களைப் படிக்கும்போது இவற்றை படிப்பதே இவ்வாழ்க்கையின் பேறு, அதுவே போதும் என்றே எண்ணியிருந்தேன்.

5. எதற்காக எழுதுகிறேன் என கேட்டால் என்ன சொல்வீர்கள்?

என் கதைகளை என்னால்தான் எழுதமுடியும் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு கதையிலும் என்னையே நான் புதிதாகக் கண்டேன். இப்போது, இன்னும் என் பல முகங்களைக் காணும் சுவாரசியத்திற்காகவே தொடர்ந்து எழுத நினைக்கிறேன்.

கா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை

எழுத்தாளர் கா. சிவாவின் முதல் தொகுப்பு ‘விரிசல்’ மொத்தம் பதிமூன்று கதைகளை கொண்டுள்ளது. முதல் தொகுப்பு ஒரு அடையாள அட்டையை போன்றது. எழுத்தாளரின் மொழி, பாணி, அவருடைய முதன்மையான அக்கறைகள் மற்றும் கேள்விகள் பெரும்பாலும் முதல் தொகுப்பிலேயே வெளிப்பட்டுவிடும். எழுத்தாளர் தனக்கான வெளிப்பாட்டு முறையை கண்டுகொள்ளும்வரை செய்நேர்த்தி மற்றும் மொழியில் சில தத்தளிப்புகள் இருப்பது இயல்பானது. அவ்வகையில் கா. சிவாவின் இத்தொகுப்பு நம்பிக்கையளிக்கும் வருகை என தயங்காமல் சொல்லலாம்.

 

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘இருமை’ சிவாவின் படைப்புலகின் ஆதார இயல்பை சுட்டிக்காட்டுவது. நாவல் தன்மை கொண்ட, தொகுதியின் நல்ல கதைகளில் ஒன்று. உற்சாகமாக சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பும் வேலனிடம் அவன் மணக்க விரும்பிய பெண்ணுக்கு ஒரு வாரத்தில் திருமணம் என கதைசொல்லி சங்கரன் போட்டுடைக்கிறான். “அனைவரையும் காணப்போகும் எதிர்பார்ப்பின் மகிழ்வில் கிறக்கமாக நடந்து வந்தவன் அமர்வதற்கு முன் இதை சொன்னதற்கு அவனின் கந்தர்வ புன்னகையை பொறுக்க முடியாத என்னுள்ளிருந்த கொடு அரக்கனே காரணம்.” என எழுதுகிறார். இந்த பலூனில் ஊசிக்குத்தும் சின்னத்தனம் பல கதைகளில் வெளிப்படுகிறது. வேலன் குடும்பத்திற்காக உழைத்த லட்சிய இளைஞன். சங்கரனுக்கு எப்போதும் அவன் மீது லேசான எரிச்சலும் பொறாமையும் உண்டு. இதற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து ஊருக்கு செல்லும் சங்கரன் வேலன் தன் குடும்பத்தை விட்டு விலகி திருமணம் செய்துகொண்டு ஒரு சேரிப்பகுதியில் வாழ்வதாக கேள்விப்பட்டு சந்திக்க செல்கிறான். வாழ்வின் ஒரு துருவத்திலிருந்து மறு துருவத்துக்கு வந்த கதையை வேலன் சொல்கிறான். வெற்று கவுரவத்தால் வேலனின் வாழ்வை தன் குடும்பத்தினர் அழித்து விட்டதாக புகார் சொல்கிறான். “எதிரிகளை பழிவாங்கனும்னா வாழ்ந்து காட்டணும். உடனிருக்கிறவங்கள பழி வாங்கனும்னா அழிச்சுதான் காட்டணும்.” என சொல்கிறான். தன்னை அழித்துக் கொள்வதன் வழியாக குடும்பத்தை பழித்தீர்ப்பதாக எண்ணிக் கொள்கிறான். “ஊஞ்சல் ரெண்டு பக்கமும் மாறி மாறி ஆடணுங்கிறதுதான் அதோட அமைப்பு. ஒரே பக்கமா ரொம்ப தூரம் வந்துச்சுன்னா எதிர்பக்கமும் அதே தூரம் போகணும்ல,” என்றொரு வரி கதையின் மையத்தை சுட்டுகிறது. ஒருவகையில் சிவாவின் கதைகளின் மையமென இந்த வரியையே சொல்ல முடியும். உன்னதங்களுக்கும் கீழ்மைகளுக்கும் இடையிலான ஊசல். ‘அவரவர் இடம்’ சாலியும், ‘விரிசல்’ சங்கரனும், ‘நிறைவு’ கலாவும் ‘சுமத்தல்’ லக்ஷ்மி டீச்சரும் ஒருமுனை என்றால் ‘இழத்தல்’, ‘நண்பனாக’ ‘பந்தயம்’ போன்ற கதைகள் மறுமுனை.

சிவாவின் மொழி நேரடியானது. காட்சிப்பூர்வமானது. கம்மாய்கள், மழுவய்யனார் கோவில், வயல்காடுகள், கோவில் திருவிழாக்கள், புளிய மரங்கள் என யாவும் காட்சி அனுபவங்கள் அளிக்கின்றன. காட்சிகள் அரிதாகவே கவித்துவமாகவோ அல்லது படிமங்களாகவோ விரிகின்றன. ‘இருமை’ கதையில் தனது இரு துருவங்களுக்கு இடையிலான அலைச்சலை பற்றி வேலன் சொல்லிக் கொண்டிருக்கும்போது ‘பசும் பொன்னிற வேப்பம் காய்களை உண்ணும் காக்கைகள் தோலுக்குள் இருக்கும் சதைப் பகுதியை சப்பிவிட்டு கொட்டைகளை நழுவ விடுவதை’ வேலன் கவனிப்பது ஒரு நல்ல குறியீடு.‌ அவசியமானதை எடுத்துக்கொண்டு வேண்டாதவற்றை தவிர்த்துவிடலாம். எதற்கு உனக்கு இந்த ஊசலாட்டம் என கேட்பது போலிருந்தது. ‘பரிசு’ கதையில் ‘காலை வெயில் போலத்தான் இப்போதும் படர்ந்துள்ளது. ஆனால் காலையில் தோன்றும் மகிழ்வு இப்போது இல்லை. ஒளி நீடிக்கும் என்ற நம்பிக்கையினால் உண்டாகும் மகிழ்வு அது. மறையப் போகிறதே என்பதுதான் மனதில் சுமையாக ஏறி மென்சோகத்தை மாலையில் உண்டாக்குகிறது.’ இந்த வரிகளும் ஒருவகையில் சிவாவின் ஆதார கவலையை சுட்டுவதாக கொள்ள முடியும். ஒளி மறையப் போகிறதே எனும் பதட்டம். அல்லது எப்படியும் மறைந்துவிடும் எனும் அவநம்பிக்கை.

 

தொகுப்பின் தலைப்பிற்குரிய கதையான விரிசல் இதே பார்வையின் நீட்சியை கொண்டிருக்கிறது. பழுதற்ற பரப்பின் மீது சிறு விரிசல் தென்பட்டால் கூட மனம் அந்த விரிசலை நோக்கியே குவியும். அதை பூதாகரமாக்கும். எங்கும் எதிலும் நாம் விரிசலையே தேடுகிறோம், அதையே கண்டுகொள்கிறோம். சங்கர் ஒரு சிறிய உணவகம் நடத்தி வருகிறான். ஒரு விடுமுறை நாளில் உணவகத்திற்கு அவசர ஆர்டர் வருகிறது. தயங்கினாலும் ஒப்புக்கொண்டு அவனும் அவனுடைய உதவியாளன் சுப்புவுமாக சமைத்து கொண்டு போய் கொடுக்கிறார்கள். முன்பணமாக கொஞ்சம் பெற்றுக்கொண்டு மீதியை உங்களுக்கு உணவு திருப்தியாக இருந்தால் கொடுங்கள் என சொல்லிவிடுகிறான். சங்கர் சமைக்கும் முறை விவரிக்கப்படுகிறது. ‘உள்ளே செல்லும்போதிருக்கும் சங்கர் அல்ல, சமைப்பவன். சமைக்கும்போது வேறொரு தனியுலகில் இருப்பவன்.’ கவனம் சிதறாத முழு ஈடுபாட்டுடன் சமைக்கிறான். மறுநாள் மீதி பணத்தையும் பாத்திரங்களையும் பெற செல்பவர்களுக்கு அவமானம் காத்திருக்கிறது. தி. ஜானகிராமன் – நாஞ்சில்நாடன் கதையுலகை சேர்ந்த கதை. தொகுதியின் நல்ல கதைகளில் ஒன்று. அகங்காரச் சிறுமையும் அதை மீறி எழும் அகவிரிவையும் பேசுகிறது. ‘ஆனா என் நம்பிக்கையில லேசா விரிசல் விழுந்துச்சு மனுசனோட அகங்காரத்துக்கு முன்னால அறமும் தோக்குற காலம் வந்திடிச்சு போல,’ என சங்கர் சொல்வது தான் நன்மையின் மீதான அவநம்பிக்கையாக வெவ்வேறு கதைகளில் பரிணாமம் கொள்கிறது.

‘அவரவருக்கான இடம்’ இந்த நன்மையின் மீதான வெறுப்பை சொல்லும் மற்றுமொரு நல்ல கதை. சாலி தன் போக்கில் சரியாக நடந்துகொள்கிறாள். அப்படி சரியாக நடக்கும் பெண் பிறருக்கு பெரும் தொந்திரவாக ஆகிறாள். காரணமற்று வெறுக்கப்படுகிறாள். அவள் வீழ்வதற்காக ஊர் மொத்தமும் காத்துக் கொண்டிருக்கிறது. நிமிர்வின் மீதான பொது வெறுப்பை எப்படி புரிந்து கொள்வது? எனது நண்பன் பொதுப்பணித்துறையில் பொறியாளராக சேர்ந்தான். மொத்த அலுவலகத்திலும் பணம் வாங்காத ஒரே ஆள் அவன்தான். நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒவ்வொரு நாளும் அவனுக்கு குடைச்சல். அவர்களுள் ஒருவன் இல்லை, தனித்தவன் என்பதே சிக்கல். இப்படிப்பட்டவர்கள் அளிக்கும் மன தொந்திரவு என்பது நம்மை பற்றிய சுய மதிப்பீட்டை குலைப்பது. நேர்மையின்மைக்கும் தீமைக்கும் சந்தர்ப்பத்தை குற்றம் சாட்டி தப்பித்துக் கொண்டிருக்கும்போது அதற்கு நேர்மாறாக அதே சூழலில் ஒருவர் வாழ்ந்து காட்டுவது சமநிலையை சீர்குலைப்பது. நமது கீழ்மையை நமக்கு உணர்த்துபவர்கள் பெரும் பாதுகாப்பின்மையை அளிக்கிறார்கள். சமூகம் கொடுக்கும் அழுத்தத்தில், ஒன்று அவர்கள் சமூக போக்குடன் இயைந்து சராசரிகளுள் ஒருவராக ஆக வேண்டும். அப்போது அனைவரும் ஆசுவாசம் கொள்வார்கள். அல்லது அவர்களை மண்ணிற்கு மனமிரங்கி வந்த கடவுளாக்கிவிட வேண்டும். அப்போது அவர்களின் வாழ்க்கையும் செயல்களும் மனித யத்தனங்களுக்கு அப்பாற்பட்ட தெய்வ செயலாக, லீலையாக ஆகிவிடும். இக்கதையில் சாலி கடவுளாக்கப்படுகிறாள். இந்த இரண்டு எதிர்வினைகளுக்கு அப்பால் மனிதர்களை அவரவர் இடத்தில் வைத்து நோக்குவதற்கான வாய்ப்பு இல்லை என்பதே சிக்கல். கதை இறுதியை ஒரு பெரும் தாவல் வழியாக வந்தடைகிறார். நாட்டார் தெய்வங்கள் உருவாகும் வரலாறு புரிந்தவர்களால் கதையின் தாவலை புரிந்துகொள்ள முடியும்.

சாலி பதின்ம வயதில் கோபமும் ஆங்காரமும் கொண்ட சாமானிய பெண்ணாகத்தான் இருந்திருக்கிறாள். அவள் ஒருமுறை அவளுடைய சின்னாத்தா வசைபாடியதை பரணிலிருக்கும் சிறிய திறப்பின் வழியாக பார்த்தபோது வார்த்தைகள் கேட்காத ஊமைப்படம் போல இருந்ததை பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு ஏற்படுகிறது. அப்போது மின்னல் வெட்டென வெறுப்பை விலக்கி நோக்கும்போது எல்லாமே வேடிக்கையாக தெரிவதை கண்டடைகிறாள். வேலன் காக்கைகள் வேப்பம்பழத்தை உண்ணுவதை காணும்போது ஏற்படாமல் போன மின்னல் சாலிக்கு ஏற்படுகிறது. அதுவே அவர்களுக்கு இடையிலான வேறுபாடும் கூட. ‘நிறைவு’ கதையிலும் காரணமற்று பொழியப்படும் அன்பு உண்டாக்கும் எரிச்சலும் பொறாமையும் ஒரு முக்கிய சரடாக வருகின்றன. இதில் சித்தரிக்கப்படும் கலா எனக்கு தனிப்பட்ட முறையில் வானவன் மாதேவியை நினைவுபடுத்தினார். ஒவ்வொருவரின் மனத்திலும் இனிமையாக மட்டுமே தங்கிவிட வேண்டும் என எத்தனிக்கும் ஆன்மாக்கள். கல்பற்றாவின் சுமித்ராவை போல். ஆனால் சாலியை போல் தான் கலாவிற்கும் அவளுடைய மேன்மை மரணத்திற்கு பின்பே அங்கீகரிக்கப்படுகிறது.

‘கண்ணாடியின் மிளிர்வு’ தொகுப்பின் முதல் கதை. சலிப்பற்ற நன்நம்பிக்கையாளர்களின் மீதான நல்லதொரு பகடிக்கதையாக வாசிக்க முடியும். அத்தை மகளின் கணவன் தற்கொலை செய்து கொண்டதற்காக கதைசொல்லி தன் அம்மாவுடன் துக்கம் விசாரிக்க செல்கிறான். அவனுடைய கதை, அத்தை மகளை அவனுக்கு திருமணம் செய்விக்க இருந்த திட்டம் நிறைவேறாத கதை என பலவும் சொல்லப்படுகிறது. மலர்கொடி அத்தை எல்லாவற்றிலும் நேர்மறைத்தன்மையை பார்க்கும் கண் உடையவர். உற்சாகம் குன்றாத, சோர்வடையாத ஆளுமை. குறையிலும் நிறை காணும் நன்நம்பிக்கையாளர். சிறிய வீடாக இருந்தால் பராமரிப்பது எளிது என்பவர். மூத்த மகன் காதல் திருமணம் செய்துகொண்டபோது பெண் தேடும் வேலை மிச்சம் என்றவர். மருமகனின் மரணத்தை எப்படி நேர்மறையாக சொல்வார் எனும் குறுகுறுப்புடன் செல்கிறான் கதைசொல்லி. அவன் எதிர்பார்ப்பு அம்முறையும் ஈடேறியது.

‘நண்பனாக’ நட்பின் மேல்பூச்சுக்கு அடியில் இருக்கும் பொறாமையை சொல்லும் கதை. கதைசொல்லியும் அவனது நண்பன் கண்ணனும் பெண் கேட்டு செல்கிறார்கள். கண்ணன் பொன்னழகை விரும்புகிறான். அவள் இவனை நேசிக்கிறாளா இல்லையா என தெரியாததால் நேராக பொன்னழகின் அம்மாவிடமே பெண் கேட்டுச்செல்லலாம் என தீர்மானிக்கிறார்கள். பொன்னழகை கண்ணன் திருமணம் செய்துகொள்ள முக்கிய காரணம் அவனுடைய நடையற்று போன அம்மாவை அவள் நன்கு கவனித்துக் கொள்வாள் என்பதுதான். ஏனெனில் வளர்ச்சி குன்றிய அக்காவை பொன்னழகு பராமரிப்பதை கவனித்திருக்கிறான். ஆனால் அவன் கவனிக்காத ஒன்றை கதைசொல்லி கவனித்திருக்கிறான். “புன்னகையுடனே உள் நுழைந்தவள் உள்ளே அமர்ந்திருந்த அவள் சகோதரியை பார்த்தபோது அவள் முகத்தில் ஏற்பட்ட அலுப்பா வெறுப்பா அல்லது சலிப்பாக என பகுத்தறியவியலா ஓர் உணர்வுடனான அம்முகம்.” கண்ணன் கதைசொல்லியிடம் அவன் முன்னர் செய்வித்த பள்ளி நண்பனின் திருமணத்தை நினைவுகூர்ந்து விசாரிக்கிறான். அதைப்பற்றி எதுவும் சொல்லாமல் இறுக்கமாக நடப்பவன் அந்த நண்பனின் அம்மா கண்ணீருடன் தன் மகன் வாழ்வு சிக்கலானதற்கு அவன்தான் காரணம் என சொன்னது நினைவுக்கு வருகிறது. வீட்டை தேடி கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. “நண்பனாகயிருப்பவன் எப்போதும் நண்பனின் நலத்தை மட்டுமே நாடுபவனாகவே இருக்கு வேண்டியதில்லை. சில நேரங்களில் சாதாரண எளிய மனிதனாகவும் இருக்கலாம் பெரிய பிழையில்லை என்று என் மனதிற்கு சொல்லியபடி இன்று எண்ணியபடியே எல்லாம் நடந்ததால் நிம்மதியுடன் நடந்தேன்.” ஒரு தளத்தில் இது பொறாமையை சொல்லும் கதையாகவும் மற்றொரு தளத்தில் இன்னொரு நண்பனின் வாழ்க்கைக்கு குற்றவாளியாக்கப்பட்டவன் எனும் முறையில் பொறுப்பிலிருந்து விடுபட்ட நிம்மதியின் கதையாகவும் தென்படுகிறது.

‘இழந்தது’ இதுவும் இரண்டு நண்பர்களின் கதைதான். நண்பனின் துரோகம் வழியாக நட்பை இழக்கும் கதை. சம்பத் பிரபா என இரு நண்பர்கள் சேர்ந்து ஒரு நிறுவனம் நடத்துகிறார்கள். மூன்றாவது நண்பனான தேவாவை அவர்கள் தொழிலில் சேர்த்துக் கொள்ளவில்லை. தொழிலில் சேர்த்துக் கொள்ளாத நண்பனுடனான கணக்கை உரிய சமயத்தில் தீர்க்கிறான். ‘நிம்மதி’ கதையில் கணவரும் மனைவியுமாக மனைவியை காதலித்தவர் வீட்டுக்கு செல்கிறார்கள். இறுதி திருப்பத்தை நம்பி எழுதப்பட்ட கதை.

சிவாவின் பல கதைகளில் கதை இறுதியில் ஒரு தலைகீழாக்கம் நிகழ்கிறது. அவ்வகையில் செவ்வியல் சிறுகதை வடிவத்தையே பெரும்பாலான கதைகளிலும் கைக்கொள்ள முயல்கிறார். கணவர் தன் சொந்தத்தில் ஒரு பெண்ணை காதலித்தவர். காதலித்தவர்களுக்கு தங்கள் இணை திருமணமாகி சென்ற இடத்தில் நன்றாக வாழ்கிறார்களா என எப்போதும் ஒரு அச்சமும் குழப்பமும் இருக்கும். அதை நீக்கினாலே அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். இதை மனைவியை காதலித்த (ஆனால் அவர் பதிலுக்கு காதலிக்காக என்று நம்பப்படும்) ராமகிருஷ்ணனுக்கு உணர்த்தவே கணவன் சட்டென அந்த முடிவை எடுக்கிறார். ராமகிருஷ்ணனுக்கு நிம்மதி ஏற்படுத்த சென்று மனைவியின் நிம்மதி பறிபோனதுதான் மிச்சம். இம்மூன்று கதைகளிலும் சிவா மானுட உறவுகளின் பூச்சுக்களையும் போலித்தனங்களையும் அடையாளம் காட்டுகிறார். இவை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதையுலகின் நீட்சி என்றொரு எண்ணம் ஏற்பட்டது. குறிப்பாக அவருடைய ‘தோழிகள்’ இரண்டு நெருங்கிய தோழிகளுக்கு இடையே ஊடாடும் அன்பும் வன்மமும் பதிவான கதை.

தொகுப்பில் மூன்று கதைகள் சற்றே அமானுடத்தன்மை கொண்டவை என சொல்லலாம். ‘கள்ளம் களைதல்’ இந்த தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று. தொகுப்பின் பெரும்பாலான கதைகளில் கதைசொல்லி அல்லது கதை நாயகனின் பெயர் சங்கராகவே உள்ளது.‌ சங்கர்களில் தொடர்ச்சியும் தனித்துவமும் உள்ளன. எங்கள் பகுதிகளில் ஏழூர் செவ்வா என்பது ஒரு முக்கியமான திருவிழா. அதன் பின்புலத்தில் ஊர் வழக்கங்களை அறியாத ஆனால் ஊரைச் சேர்ந்த சங்கருக்கு நண்பன் குமார் விளக்குவது தான் கதைவடிவம். சிவாவால் இவ்வாறு ஒன்றை சீரிய முறையில் விளக்க முடிகிறது. உதாரணமாக ‘இழந்தது’ கதை வாசித்து ஒருவர் சீட்டு கம்பெனியில் எப்படி ஏமாற்றலாம் என தெரிந்து கொள்ள முடியும். கதையில் ஊர் புள்ளிகளுக்கு காழாஞ்சி கொடுப்பதற்கு முன் ஒரு பஞ்சாயத்து நடக்கிறது. கந்தன் தன்னுடைய மனைவியின் கையை பாலன் பிடித்து இழுத்ததாக பிராது கொடுக்கிறான். இதற்கு பின்பான பாத்திர சித்தரிப்புகள், விவரணைகள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவை. இரு தரப்பிற்கும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமானது என உணரச்செய்யும் சாதுர்யம் வெளிப்படும். சங்கருக்கு ஊர் வழக்கங்களை விளக்கிச்சொல்லும் குமார் வழியாக கதையின் பிற சாத்தியங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. “கல்யாணம் பண்ணி விட்டுட்டு போயிடறது.‌ ஒரு வருசத்துக்கு அப்புறம் வந்து அவன் கையப்பிடிச்சான் இவன் அங்க தடவுனான்னு சொல்றது” என சொல்கிறான்‌. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது நேரில் பார்த்த ஒரு சாட்சி பாலனின் குற்றத்தை உறுதி செய்தபோது குமார் மீண்டும் கிசுகிசுப்பான குரலில் “அதானே பார்த்தேன் விசயம் ஏன் வெளிய வந்துச்சுன்னு” என்கிறான். மேல்தளத்தில் ஒன்று நடந்து கொண்டிருக்கும்போதே அடியில் வேறொன்று ஓடிக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார் சிவா. பாலனுக்கும் அவனுடைய தந்தைக்கும் இடையிலான உறவு பேசப்படுகிறது. அவர் மீது “நல்லதை மட்டுமே போதிப்பதினால் வந்த வெறுப்பு” இது சிவாவின் பாத்திர வார்ப்புகளில் ஒரு தொடர்ச்சி. அபாரமான அமானுட தருணத்தில் கதை நிறைவுறுகிறது. ஒரு சுவாரசியமான ஆவணத்தன்மையுடன் பயனிக்கும் கதை அதன் இறுதி வெளிப்பாட்டின் காரணமாக வேறொரு மெய்யியல் தளத்தை அடைகிறது.

‘பந்தயம்’ கதையும் அமானுட முடிவு கொண்ட கதைதான். கருக்கிருட்டில் அவனுடைய அக்கா வராததால் புளியம்பழம் பொறுக்க தனியாக செல்கிறான் சிறுவன் ராமன். சிறு சுழல் காற்று வீசியதும் அவனுக்கு கடந்த மாதம் அவனுடன் பந்தயம் போட்டு கண்மாய்க்குள்ளிருந்து தாமரை கொட்டையை எடுக்க சென்று கொடியில் சிக்கி செத்துப்போன சுந்தரத்தின் நினைவு வருகிறது. அது அவனுடைய ஆவி என்று அஞ்சுகிறான். சுந்தரத்தின் மரணத்திற்கு அவன்தான் காரணம் எனும் குற்ற உணர்வு அவனுக்கு. ஏதோ ஒன்று தன்னை தொடர்வதாக அஞ்சி வேகவேகமாக பிள்ளையார் கோவில் திண்ணையை நோக்கி, அங்கே சிலர் உறங்குவார்கள் என்பதால் ஓடுகிறான். ஒன்றுக்கு கழிக்கச் செல்லும் காவக்காரரின் ஓசைகளோடு அவனை தொடர்ந்த சுழலின் ஓசையையும் கேட்கிறான். அவர் கீழே விழும் ஓசையும் பிறகு அவரை தூக்கி செல்வதையும் உடலை தூக்கி செல்வதையும் ஓசைகளாக உணர்கிறான். விடிந்தபின் கதைசொல்லி ஆசுவாசமடைந்து எழுந்து செல்கிறான். ஏன்? தனக்கு நிகழ வேண்டியது காவக்காரருக்கு நிகழ்ந்து விட்டது என்பதாலா? தான் எஞ்சியிருப்பதாலா? திறந்த முடிவு கொண்ட கதை. ஒரு பேய்க் கதையாகவோ மனப்பிராந்தியை சொல்லும் கதையாகவோ வாசிக்க முடியும்.

சில கதைகளில் புலப்படும் அதீத திறந்த தன்மை ஒரு பலவீனமாகவும் ஆகிவிடுகிறது. ‘விளையாட்டாய்’ கதைசொல்லி சிறுவயதில் விளையாட்டாய் உறவினனும் பால்ய நண்பனுமான சீனியை கிணற்றில் தள்ளிவிட்டதும் குலதெய்வ கோயிலுக்கு செல்லும் வழியில் மகனை பாம்பு கடிப்பதும் இணை வைக்கப்படுகிறது. இந்த இணைவைப்பு ஒரு அகவயமான தொடர்புறுத்தல் மட்டுமே. எனினும் இந்த தொடர்பில் மெல்லிய மிஸ்டிக்தன்மை உள்ளது. சாமி பாம்பு வடிவத்தில் வரும் என நேற்று யாராவது சொல்லியிருந்தால்கூட நம்பியிருக்கமாட்டேன் எனும் ஒரு வரி அளிக்கும் சித்திரம். இக்கதைகளில் நாட்டார்கூறுகள் வலுவாக தென்படுகின்றன.

 

தொகுப்பின் சற்றே பலவீனமான கதைகள் என ‘சுமத்தல்’ ‘பரிசு’ ஆகிய கதைகளை சொல்லலாம். இரண்டுமே பள்ளிகால நினைவேக்க கதைகள். ‘சுமத்தல்’ கதையில் நினைவுகூரலாக மட்டும் எஞ்சிவிடக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் கொண்டு வரலாறு பாடம் எடுத்த லட்சுமி டீச்சர் வாழ்க்கையும் வரலாற்று ஆளுமையான ராணி லட்சுமி பாயும் இணை வைக்கப்படுகிறார்கள். வெளிப்புற மிடுக்குக்கு உள்ளே மருகும் சாமானிய பெண் இருப்பதை கண்டு கொள்கிறான் கதைசொல்லி. ஆனால் அதை வெளிப்படுத்தாததற்கு டீச்சர் அவனுக்கு நன்றி தெரிவிக்கிறாள். பிள்ளைகள் பிறந்தாலும் பிறக்காமல் இருந்தாலும் என் இருநிலையிலும் கூடும் சுமையை சொல்கிறது. ‘பரிசு’ இறுதி முடிச்சு கொண்டு காலம்காலமாக பெண்களின் உள்ள கிடக்கை சொல்ல முயல்கிறது.

வலுவான கேள்விகளும், கருப்பொருட்களும் கொண்ட கதைகள் இத்தொகுதியில் உள்ளன. காலப்போக்கில் கதைகூறும் விதமும் மொழியும் கூர்மையடையும்போது மேலும் செறிவான கதைகளை அவரால் எழுத முடியும் என்பதற்கான சான்றுகள் இந்த தொகுப்பில் உள்ளன.

பெரும்பாலான கதைகள் ‘பதாகை’ இணைய இதழில் வெளியானவை. ‘பதாகை’ வழியாக மற்றுமொரு எழுத்தாளர் அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சி. சிவாவின் கதைகளின் நிலப்பரப்பு நான் வாழும் செட்டிநாடு – அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவை என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. செவலாங்குடியை பூர்வீகமாக கொண்டவர். தற்போது சென்னையில் அரசு பணியில் உள்ளார். 45 வயதில் இலக்கிய உலகிற்குள் எழுத்தாளராக அறிமுகமாகிறார். எழுத்தாளர் கா. சிவாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பதாகை சொல்வனம் போன்ற இணைய இதழ்களில் எழுதிவரும் திறமையான புதிய எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களை பதிப்பிக்கும் வாசகசாலைக்கும் வாழ்த்துக்கள்.

சுனில் கிருஷ்ணன்

காரைக்குடி

29.9.20

புதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா

(புதிய குரல்கள் பகுதியில் பொதுவாக எழுத்தாளரின் விரிவான நேர்காணல் மற்றும் அவருடைய ஆக்கத்தை பற்றிய விமர்சன கட்டுரை இடம் பெறும். இம்முறை அவைத்தநித்தநியாக இல்லாமல் எழுத்தாளருடன் உரையாடிப் பெற்ற அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் முதல் பகுதியிலும், கட்டுரை இரண்டாம் பகுதியிலும் இடம்பெறும் வகையில் ஒரே பதிவாக வெளிவருகிறது. கேள்விகளுக்கு பதில் அனுப்பிய எழுத்தாளர் சாதனாவிற்கு நன்றி)

எழுத்தாளர் சாதனா – ஒரு அறிமுகக் குறிப்பு

கே: உங்களைப் பற்றி

யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுதீவில் ஒரு குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக நான் பிறந்தேன். அப்பா ஒரு வாகனச் சாரதி. அத்தோடு பெரும் குடிகாரர். பெரிதாக உழைப்பதில்லை. அப்படியே உழைத்தாலும் கிடைக்கும் பணத்தையெல்லாம் கள்ளுத் தவறணையில் ஊற்றி விட்டு வருவார். அம்மா, தினம்தோறும் தனக்கு விதிக்கப்பட்ட விதியை நினைத்து நொந்து கொள்ளும் ஒரு அபலைப் பெண். எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது வறுமையின் காரணமாக என் அப்பா என்னை வளர்க்கும் பொருட்டு அவரின் மனைவியின் தமக்கையிடம் அதாவது, என் பெரியம்மாவிடம் ஒப்புக் கொடுத்து விடுகிறார்.  

என் பதின்ம வயது கொடூரமானது. கொடூரமானது என்றால் மிகவும் கொடூரமானது. உடலியல் ரீதியாக மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன். வீதியில், என்னைக் காணும் சிறுவர்கள், ‘ஏய் பைத்தியமே’ என்று கல்லால் அடிப்பார்கள். முப்பத்தி நான்கு வயதாயிற்று. இன்னும் திருமணமாகவில்லை. திருமணமாகவில்லை என்பதைக் காட்டிலும் யாரும் பெண் கொடுக்கவில்லை என்பதே சரி. இதற்கு, என்னுடைய கடந்த காலமும் ஒரு காரணம்.  

பதின்ம வயதில், உடலியல் ரீதியாக என்றால் இருபதுகளில், மனோரீதியான வன்முறைக்கு உள்ளாகி இருக்கிறேன். அதை விளக்குவது சிக்கலானது. ஒரு மாதிரியாக பைத்திய நிலையிலிருந்து வெளியேறி விட்டிருந்தாலும் கடந்த கால நினைவுகள் அவ்வப்பொழுது என்னைத் துன்பப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அதிலிருந்து மீள்வது பெரும் துயரமாகவும், ஆகாத காரியமாகவுமிருக்கிறது. புத்தகங்கள் என்னை மாற்றின. குறிப்பாக, தாஸ்தாயேவ்ஸ்கியும், ஆன்டன் செகாவும், சாருவும், சோபாசக்தியும் என்னை மாற்றினார்கள்.   

நான் படிப்பாளியாக இருக்கலாம். ஆனால், படித்தவன் கிடையாது. நான் என் சிறு வயதில் பெரியம்மாவிடம் ஒப்புக் கொடுக்கப்படாமல் என்னுடைய சொந்த தாய் தந்தையினாலேயே வளர்க்கப்பட்டிருப்பேனானால் நிச்சயம் நான் மாடு தான் மேய்த்திருப்பேன். ஒருவேளை, இது இரண்டுமே நடைபெறாமல் வேறொருவரிடம் நான் ஒப்புக் கொடுக்கப்பட்டிருந்தால் மருத்துவராகவோ, பொறியியலாளராகவோ குறைந்தபட்சம் வங்கி அதிகாரியாகவோ ஆகியிருப்பேன். என் சபிக்கப்பட்ட விதியானது இது இரண்டையுமே மாற்றி விட்டது. ஆகவே, நான் எழுத்தாளன் ஆகி விட்டேன்

கே: இலக்கிய பரிச்சயம் எப்போது, எப்படி நேர்ந்தது? 

 உண்மையில் அது ஒரு அசம்பாவிதம். ஏனெனில், என் குடும்பத்தில் மாத்திரமல்ல; பரம்பரையில் கூட புத்தக வாசிப்புப் பழக்கமுடையவர்கள் யாரும் கிடையாது. என்னவோ எப்படியோ அது எனக்குள் மாத்திரம் புகுந்து கொண்டு விட்டது. வாசிப்புப் பழக்கத்தில் உள்ள அதீதமான காதலால் வீட்டிலேயே பணம் திருடி இருக்கிறேன். அய்ம்பது ரூபாவைத் திருடி பத்து ரூபாய்க்கு புத்தகத்தை வாங்கினால் மீதி நாற்பது ரூபாய்யை என்ன செய்வதென்று தெரியாது. வீட்டில் மறைத்து வைக்க முடியாது.  பணம் திருடியிருக்கிறேன் என்பது கண்டு பிடிக்கப்பட்டால், முதுகுத் தோல் கிழிந்து விடும். ஆகவே, கடைக்காரரிடமே நாற்பது ரூபாய்யையும் திருப்பிக் கொடுத்து அடுத்த முறை புத்தகம் வாங்கும்போது இதில் கழித்துக் கொள்ளுங்கள் என்பேன். கடைக்காரரும் சிரித்துக் கொண்டே அதற்குச் சம்மதித்தது இப்போது இதை எழுதும் போது நினைவு வருகிறது.   

ஆரம்பத்தில், அம்புலிமாமாவில் தொடக்கி ராணி காமிக்ஸ் – மாயாவி, கரும்புலி, இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், லக்கி லுக் நினைவிருக்கிறார்களா – முத்துக் காமிக்ஸ் என்று போய் பின்னர் ரமணிச்சந்திரன், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, சோபா சக்தி, சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் என்று விரிந்திற்று. இது தவிர தாஸ்தாயேவ்ஸ்கி, ஆன்டன் செகாவ், மாக்சிம் கார்க்கி, லியோ டாஸ்டாய் என்பவர்களும் என் தீவிர இலக்கியப் பட்டியலில் உண்டு.  

என் பால்ய காலத்தில் அதிகம் வாசித்த நான், இப்போது வாசிப்பது குறைவு. காரணம், சமூக வலைத்தளங்களின் வருகை. நினைத்துப் பார்த்தால் பெரும் சோர்வைத் தருகிறது. இதிலிருந்து எப்படியாவது மீண்டு மறுபடியும் புத்தகங்களை வெறி கொண்டு வாசிக்க வேண்டும். பார்க்கலாம்.

கே: உங்களை நீங்கள் எழுத்தாளராக கண்டுகொண்டது எப்போது? முதல் கதை எப்போது வெளி வந்தது? 

உன்னிடம் சொல்வதற்ககுக் கதைகள் இல்லையென்றால் நீ எப்படி வாழ்ந்தாய் என்று கேட்கிறார் தாஸ்தாயேவ்ஸ்கி. முதலில் எழுத ஆரம்பித்தபோதே வேடிக்கையாக அல்லாமல் சீரியஸாகத் தான் தொடங்கினேன். சொல்வதற்கு ஏராளமான கதைகளுமிருந்தன. ஆகவே, நான் கதை சொல்லத் தொடங்கினேன். என்னுடைய முதலாவது சிறுகதை தாய். மனித மனங்கள் ஆசைகளுக்காக சொற்ப கணத்தில் எப்படியெல்லாம் மாறிப் போகும் என்பதான ஒரு கதை. என்னுடைய இருபத்தி அய்ந்தாவது வயதில் அக் கதையை எழுதியிருந்தேன். கதையை எழுதி விட்டு எழுத்தாளர் சயந்தனுக்கே அதை முதல் முதலில் அனுப்பி வைத்திருந்தேன். கதை குறித்து பாராட்டிய அவர், உங்களுக்குள் ஒரு எழுத்தாளன் உறங்குகிறான்; ஆகவே கதை எழுதுங்கள் என்று என்னைக் கண்டு பிடித்து எனக்குள்ளிருந்த அடையாளத்தை வெளியில் கொணர்ந்தது அவர் தான்.  

எழுத்தாளன் என்பது உண்மையில் மிகப்பெரிய வார்த்தை. அதை வெறுமனே சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதினால் ஆயிற்று என்று சுருக்கி விடமுடியாது. உண்மையில், எழுத்தாளன் என்பவன் சாதாரணவானவன் கிடையாது. அவன் இந்தக் கீழ்மையோடு இருக்கும் சமூகத்தை சீர் தூக்கி விட முனைபவன். ஒரு சமூகத்தின் பெரும் சொத்து அவன்.  

இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது எழுத்தாளன் என்கிற வார்த்தைக்கு நான் கொஞ்சம் கூட லாயக்கற்றவன். ஏனெனில், ஒன்று அல்ல; இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன். அப்போது நான் ரஷ்யாவில் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன்.  ஒருதடவை, என்னோடு கூட இருந்தவருக்கும் எனக்கும் தகராறு. கெட்ட வார்த்தைகள் சரளமாகப் புரள்கிறது. அப்போது நான் அவரை அவரின் ஜாதிப் பெயரால் பழிக்கிறேன். எவ்வளவு கீழ்த்தரமான செயலிது. வன்மத்தின் உச்சம்.   

இரண்டாவது, இதே போன்றுதான் அதுவும். ஆனால், அது சமூக வலைத்தளமொன்றில் நிகழ்ந்தது. வெளிப்படையாகவே ஒருவரை ஜாதிப் பெயரால் திட்டினேன். இதில் ஆகப் பெரும் வேடிக்கை என்னவென்றால் அப்போது முகப்புத்தகத்தில் என்னுடைய பெயர் எழுத்தாளர் சாதனா.

கே: இலக்கியத்தில் உங்கள் ஆதர்சங்கள் யார்? (ஈழ/தமிழ்/ உலக) 

நிறையப் பேர் இருக்கிறார்கள். எல்லோரும் ஏதோவொரு விதத்தில் என்னைக் கவர்ந்தவர்கள். இதில் எழுதும் ஆசையைத் தூண்டியது சாரு. நான் கண்டைந்து கொண்ட மொழியில் அவருக்கு மிகப்பெரும் பங்குண்டு. அவரின் எளிமையான, எல்லோருக்கும் புரியும்படியான கதை சொல்லல் முறை நான் பார்த்து வியந்த ஒன்று. அப்புறம் ஷோபாசக்தி என்னுடைய மிகப்பெரிய ஆதர்சனம். சிறுகதை எழுதும் நுட்பத்தை நான் அவரிடமிருந்தே கற்றுக் கொண்டேன். இது தவிர பொதுவான ஒருவரும் உண்டு. அவர் எஸ். சம்பத். அவருடைய இடைவெளி நாவல் எப்போதும் என் பையில் இருக்கும்.

 

எஞ்சியிருப்பதின் துயரம்

எழுத்தாளர் சாதனா ஈழத்தை பூர்வீகமாக கொண்டவர். தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார். ஆறு சிறுகதைகள் கொண்ட அவருடைய முதல் சிறுகதை தொகுப்பான ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ கடந்த ஆண்டு ஜீரோ டிகிரி பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. சாரு ஒரு நீண்ட முன்னுரை எழுதி இருக்கிறார். இளம் தலைமுறை ஈழ எழுத்தாளர்களான சயந்தன், அனோஜன், யதார்த்தன், அகர முதல்வன் போன்றோரின் படைப்புலகில் சில ஒற்றுமைகளும் சில தனித்துவங்களும் உண்டு. சாதனாவின் படைப்புலகம் அவருடைய தலைமுறை ஈழ எழுத்தாளர்களின் புனைவுலகை விட்டு முற்றிலும் விலகியது. ஆகவே தனித்துவமானதும் கூட. ஈழ நிலம் அறவே பதிவாகாத கதைகள் என சொல்லலாம்.

சாதனாவின் கதை மாந்தர்கள் அகவயமானவர்கள். இருத்தலியல் கேள்விகளை சுமப்பவர்கள். அக்கேள்விகளே அவருடைய படைப்புலகை நிறைக்கிறது, கதைகளை எழுத தூண்டுதலாக இருக்கிறது. ஆகவே அவருடைய கதை மாந்தர்கள் இயல்பாக கேள்விகளை விவாதிக்கும் பிரதிநிதிகளாக உருக்கொள்கிறார்கள். போருக்கும் இருத்தலியலுக்கும் நேரடி தொடர்புண்டு. இருத்தலியல் கேள்விகளுக்கு போர் ஒரு முன் நிபந்தனை அல்ல என்றாலும் போரின் இயல்பான விளைவு என உறுதியாக சொல்லிவிட முடியும். இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள ‘சிறுமி கத்தலோனா’ ‘தொலைந்து போன சிறிய கறுப்பு நிற பைபிள்’ மற்றும் ‘ஒ தாவீது ராஜாவே’ ‘ஜூதாசின் முத்தம்’ ஆகிய கதைகளில் சாதனா தனக்கான சில அடிப்படை கேள்விகளை பின் தொடர்ந்து செல்கிறார். அவை எடுத்துக்கொண்ட பேசு பொருள் காரணமாக முக்கியமான கதைகள் ஆகின்றன.

 ‘அக்கா’ கதையிலும் ஒரு பகுதி ஈழத் தமிழரின் புலம்பெயர் வாழ்க்கையை காட்டுகிறது என்றாலும் கூட  ‘சிறுமி கத்தலோனா’ இந்த தொகுதியில் உள்ள ஒரே ஈழக்கதை என சொல்லலாம். ஈழக்கதைக்கான வரையறைகள் எவை?  ஈழத்தை களமாக கொண்டிருக்க வேண்டும். ஏதோ ஒரு வகையில் போர் ஒரு பேசுபொருளாகவோ/ பின்னணியாகவோ/ அல்லது நினைவாகவோ கதையில் இடம்பெறும். ஈழத் தமிழர் மையக் கதாபாத்திரம் அல்லது கதைசொல்லியாக இருப்பார். கதை ஈழத் தமிழில் இருக்கும். எழுத்தாளர் ஈழத்தை சேர்ந்தவராக இருப்பார். சாதனாவின் மொழியில் ஈழத் தமிழின் சாயல் சன்னமாகவே தென்படுகிறது. சில அரிதான சொற்களை பயன்படுத்துகிறார். (உதாரணம்- ஜூதாஸின் முத்தம் கதையில் ஸ்தேயம் எனும் சொல்லை திருட்டுக்கு பயன்படுத்துகிறார்).  

ஒன்பது பகுதிகள் கொண்ட கதையில் ஐந்து பகுதிகள் சிலோன் நாதனின் வாழ்க்கையை படர்கையில் விவரிக்கிறது. இரண்டு பகுதிகள் சிலோன் நாதனின் தன்னிலையிலும் இரண்டு பகுதிகள் சிலோன் நாதனின் கதையை எழுதும் எழுத்தாளரின் தன்னிலையிலும் வருகிறது. சிலோன் நாதன் ஜெர்மனியில் வசிக்கிறார். அவருடைய கடந்த கால ஈழ வாழ்வில் ராணுவத்திடம் பிடிபடுதல், சிறையிலடைக்கப்படுதல், கொடுமைக்கு உள்ளாகுதல் என எல்லாமும் பொதுவாக ஈழக்கதைகளில் நிகழும் அதே வகையில் நிகழ்கின்றன. போரில் மருத்துவராக இருக்கும் சிலோன் நாதன் கால் சிதைந்த சிறுமி கத்தலோனாவை காப்பாற்ற முயல்கிறார். பெண் ராணுவத்திடம் பிடிப்பட்டு அவர்களால்  கடுமையாக அவமதிக்கப்படுகிறார். சிங்கள மொழியில் ‘உத்தோ’ என கேவலமாக வசைப்பாடப்படுகிறார். இந்த சிறை அனுபவம் ஆறாத காயமாக உள்ளூர உழன்றபடி இருக்கிறது. அவருடைய முதலாளி பாஸ்பெர்கின் மரணத்திற்கு பிறகு நேராக வேசியிடம் செல்லும் போது அந்த பெண்ணின் நடத்தை ராணுவ பெண்னை நினைவுறுத்துகிறது. சட்டென தடுமாறி விலகுகிறார். வேசியிடம் கூடியபிறகு அந்த நினைவுகளில் இருந்து மீள முடியாமல் கடும் குற்ற உணர்வில் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார். அனோஜனின் ‘உறுப்பு’ கதையில் சிங்கள ரானுவ வீரனின் பாலியல் இம்சைகளை அனுபவித்து அந்த வாதையிலிருந்து வெளியேற சிரமப்படும் சித்திரம் ஒன்றுண்டு. ஏறத்தாழ அம்மாதிரியான அகக் காயம் சிலோன் நாதனுள்ளும் உள்ளது. சிலோன் நாதனின் இருத்தலியல் கேள்விகளும், வாழ்வின் பொருளின்மை‌ சார்ந்த பார்வைகளும், தற்கொலை முயற்சிகளும் கதையின் இறுதியில் வெளிப்படும் உண்மையினால் துலக்கம் பெறுகிறது. அந்த இறுதி உண்மையே இக்கதையை வழக்கமான ஈழக்கதை அமைப்பிலிருந்து தனித்து காட்டுகிறது.

ஈழத்தமிழர் சிங்களவர் எனும் இருமையை கடந்து மானிடர் எனும் நிலைநோக்கி நகர்கிறது. இரண்டாவது வாசிப்பில் சிலோன் நாதன் வீட்டில் இருக்கும் புத்தர் சிலை அவருடைய அடையாளத்தை குறிப்புணர்த்துகிறது. கண்முன் காலற்ற சிறுமி கத்தலோனா கைவிடாதீர்கள் என கூறி அழும்போது சிங்களர் எனும் ஒரே காரணத்திற்காக உயிருடன் விடுதலை செய்யப்படும் சிலோன் நாதன் குற்ற உணர்வினால் உந்தப்பட்டு தான் ஏன் இனியும் வாழ வேண்டும்? எனும் கேள்வியை எழுப்பிக்கொள்கிறார். சாதனாவின் கதை மாந்தர்களின் பொதுவான மனப்போக்கு என்பது இந்த குற்ற உணர்விலிருந்தே எழுகிறது. இந்த கதையில் வரும் பாஸ்பெர்க் வழியாக பாத்திரங்களுக்கு இடையிலான முரண் பேசப்படுகிறது. அவர்  இருத்தலியல் சிக்கல் ஏதுமற்றவர். வாழ்க்கையையே மரணத்தை நோக்கிய பயணமாக காணும் சிலோன் நாதனுக்கு கிட்டாது ஒன்று பாஸ்பெர்கிற்கு எளிதாக கிடைக்கிறது. மகிழ்ந்து ஆடிக்கொண்டே இருக்கும் போது நிகழும் மரணம்.

இக்கதையில் அவர் வளர்க்கும் நத்தைக்கு சிலோன் நாதன் என பெயரிடுகிறார். “நத்தைகள் குறித்து இன்னும் சொல்லவேண்டுமென்றால் அவை தன் வீட்டைத் தானே சுமக்கும். மழை காலங்களிலோ, அல்லது தனக்கு ஒவ்வாத காலநிலையைக் கொண்ட காலங்களிலோ தன் முதுகிலுள்ள ஓடு போன்ற கூட்டினுள் தன்னை மறைத்துக் கொள்ளும். தன்னுடைய இந்தத் தன்மையை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் அவை பயன்படுத்துகின்றன.” எனும் சிலோன் நாதனின் குறிப்பில் அவருடைய அடையாள மறைப்பு வாழ்வு கோடிட்டுக்காட்டப்பட்டு நத்தை அவருடைய குறியீடாகவே இருக்கிறது. சிலோன் நாதன் ஏன் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும்? தன் அரசின் குரூர முகத்தை கண்டவனின் மனசாட்சியின் தொந்திரவு. அச்சம். ஒவ்வாமை. இதற்கு நான் பொறுப்பல்ல எனும் விலக்கம் என பலவாறாக விளங்கிக்கொள்ள முடியலாம் என்றாலும் கதையில் அதற்கான காரணம் எதுவும் வலுவாக கூடி வரவில்லை. அதுவும் ஒரு தமிழர் பகுதியில் மருத்துவராக இருக்கும் சிங்களர் தன் அடையாளத்தை ஏன் மறைத்துக் கொள்ள வேண்டும்? கதையில் “எதிர்காலம் குறித்த பயம் அந்த ‘ஏதோ ஒன்றை’ என் வாயிலிருந்து வெளிவராமல் தடுத்தது.” என எழுதுகிறார். இது மர்மமாகவே விடப்படுகிறது. வாசகரிடம் இது ஒரு நம்பிக்கையை கோருகிறது. தனிப்பட்ட காரணங்கள் ஏதேனும் இருக்கும் என சமாதானம் அடைந்துகொள்ளச் சொல்கிறது. கதை இறுதியில் சிறுமி கத்தலோனாவின் காலற்ற ஊருதல் நத்தையுடன் இணைவைக்கப்படுவதன் வழியாக ஒரு தலைகீழாக்கம் நிகழ்கிறது. 

சயந்தனின் ‘ஆறாவடுவில்’ ஒரு பகுதி, குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலத்தின்’ இறுதி பகுதி, அனோஜனின் ‘பபுலி’ போல் பெரிதும் மனவிரிவளித்த கதை. அடிப்படையில் ஒரு சிங்களவர் தமிழ் பெண்ணிற்காக பெரும் துயரத்தை சுமந்து தன்னையே அழித்து கொள்வதென்பது கற்பனாவாதத்தன்மையுடைய கதைக்கரு. ஈழக் கதைகளில் கற்பனாவாதம் ஒரு மிக முக்கிய கூறாகவே திகழ்கிறது. கற்பனாவாதத்தை முழுக்க எதிர்மறையாக அணுகவேண்டியதுமில்லை. தமிழின் முதன்மை நாவல்களில் ஒன்றாக கொண்டாடப்படும் ‘புயலிலே ஒரு தோணி’ கூட தமிழக வீரனொருவன் அந்நிய நாட்டை விடுவிக்கும் சாகச கற்பனாவாத கதையின் தன்மையுடையதே. சிலோன் நாதனின் துயரம் எஞ்சியிருப்பதின் துயரம். அறத்திலிருந்து எழும் துயரம். சிலோன் நாதனின் குற்ற உணர்வு இன்னும் நுண்மையானது. மரணம் மற்றும் அழிவுக்கு மனிதன் சாட்சியாக இருக்கும்போது வாழ்விச்சை பெருகுகிறது. பாஸ்பெர்கின் மரண சடங்கிற்கு பின் அவர் நேராக வேசியை தேடுகிறார்.  விடிந்ததும் குற்ற உணர்வில் தற்கொலைக்கு முயல்கிறார்‌. அதிலிருந்து உயிரிச்சையால் மீள்பவர் ராணுவப் பெண் நினைவை போக்க வேசியை நினைத்து சுய மைதுனம் செய்ய முயல்கிறார் ஆனால் குறி விறைக்கவில்லை. தெருவில் விளையாடும் பதின் வயது சிறுமியொருத்தி தொடை தெரிய விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்ததும் விறைக்கிறது. சிலோன் நாதனின் சிக்கல் என்பது அவர் உயிருடனிருக்க எந்த நியாயத்தையும் உணராத போதும் அவருடைய உயிரிச்சை அவரை சாக விடவில்லை என்பதே. இயேசு இறந்தபிறகு ஜூதாஸ் அடையும் அதே துயரம். இங்கிருந்துதான் அவருடைய கதை உலகின் பிரதான கேள்வியான வாழ்வு விதிக்கப்பட்டதா? மனிதர்களின் சுய தேர்வின் ( freewill) பங்கு என்ன? எனும் கேள்வியை கேட்கிறார். மனிதருக்கு வாழ்வில் வேறு சில தேர்வுக்கான சாத்தியங்கள் இருந்தபோதும் அவன் ஏன் அழிவையே தேர்வு செய்கிறான்? இக்கேள்விகள் எவையும் புதியவை அல்ல. ஆனால் விவாதித்து தீராதவை. கடவுளற்ற உலகில் மனிதர்களின் அறம் என்னவாக இருக்கும் என்பதே தாஸ்தாவெஸ்கியின் அக்கறையாக இருக்கிறது‌. தாஸ்தாவெஸ்கியின், தால்ஸ்தாயின் கிறிஸ்து இப்படி உருவானவர் தான். தால்ஸ்தாய்க்கு இயேசுவின் தேவையில் எவ்வித ஐயமும் இல்லை. தால்ஸ்தாய் இருமுனைகளுக்கு இடையேயான ஊசலில் இருந்தார் என்பது என் எண்ணம். ‘தொலைந்துபோன சிறிய கறுப்புநிற பைபிளின்’ முடிவில் அறம் தொலையும் போது கடவுளும் தொலைவது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த ஊசலின் மறுமுனையை ‘ஒ தாவீது ராஜாவே’ சென்றடைகிறது.

‘தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ தொகுதியின் தலைப்பு கதை. இரண்டாம் உலகப் போரின் பின்புலத்தில் ரஷ்யாவை களமாக கொண்ட கதை.  ‘குளிரில் பூமியானது வெள்ளைநிற போர்வையோன்றைத் தன் உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு துயில் கொள்வதைப் போல் இருந்தது.’ போன்ற விவரணைகள் நல்ல காட்சி அனுபவத்தை அளிக்கிறது. வார்சா நோக்கி ராணுவத்தில் சேருவதற்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கிறான் கதை நாயகன். தாஸ்தாவேஸ்கி நாவல்கள் மற்றும் குடும்ப புகைப்படம் உள்ள நோட்டு மற்றும் சிறிய கறுப்புநிற பைபிள் அவன் கொண்டு செல்லும் பையில் உள்ளது. 

அங்கே விளாமிடினை சந்திக்கிறான். புவியியல் பட்டதாரியான அவன் நேசித்தவள் வேறொருவனுடன் இருப்பதை கண்டு கொலை செய்யும் அளவிற்கு ஆத்திரம் கொண்டு பின்னர் பைத்தியமாகி மீண்டு ராணுவத்திற்கு வந்தவன். அவன் தற்கொலை செய்து தலைசிதறி இறக்கிறான். அவனுடைய சிநேக சமிஞைகளை கதைசொல்லி அங்கீகரித்து அவனுக்கு திருப்பியளிக்கவில்லை. ராணுவ ஒழுங்கிற்கு பொருத்தமில்லாத மனிதனாக இருக்கிறான் என்பது விளாமிடின் ஓடிவரும்போது கீழே விழுவதையும் அவனை வேறெவரும் கவனிக்காததையும் சுட்டுவதன் வழியாக நிறுவுகிறார்.

துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக அவனை அழைத்து செல்கிறார்கள். ‘ஆனால் நான் எதற்காக இந்தக் கரடியைக் கொல்ல வேண்டும்?’ என்றொரு கேள்வியை எழுப்புகிறான். சம பலமற்ற எதிரி. ஆனால் அந்தக் கரடியின் சாவும் கதைசொல்லியின் வாழ்வும் பிணைந்திருக்கிறது. ஏறத்தாழ கீதையின் காட்சி இங்கு மறு ஆக்கம் செய்யப்படுகிறது. ஆனால் போதிப்பவரான ட்ரான்ஸ்கியின் உறுதி குலைகிறது. ‘உன்னுடைய மகிழ்ச்சியில் இன்னொருவருக்கு துக்கம் இருக்குமாயின் நீ அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்வாயா?’ என எழுப்பப்படும் கேள்வி ‘சிறுமி கத்தலோனா’ வில் எழுப்பப்படும் அதே கேள்வியின் நீட்சி. பெரும்பாலான கதைகளை துளைத்து செல்லும் மைய சரடு இக்கேள்வியே.

கரடியை சுடுவதற்கு முன்பு நிகழும் விவாதம் மனிதனின் சுய தேர்வுக்கும் விதிக்கும் இடையிலான ஊசலைப் பற்றிய உரையாடல். எல்லா சமயங்களிலும் வேறொரு வாய்ப்பு இருக்கு என நம்ப விரும்பும் கதைசொல்லி. அவற்றை மறுக்கும் ராணுவ அதிகாரி. ஏனெனில் ராணுவத்திற்கு அதுவே உகந்தது. ஒருவகையில் இதே கேள்வியைத்தான் சிலோன் நாதன் சிறையில் எதிர்கொள்கிறார். தவறான தேர்வு என தான் நம்புவதே அவரை வதைக்கிறது. ஜூதாசும் தனது தேர்வை எண்ணி மருகுகிறான். சுட்டுக்கொல்லப்பட்ட கரடி கனவில்  தலைகோதி தூங்க வைத்து அவனை மன்னிக்கிறது. சிலோன் நாதனை மன்னிக்க கனவில் எவரும் வரவில்லை. இறுதியில் தற்கொலை செய்துகொண்டு மரிக்கிறார்.

உயரதிகாரி லூக்கா அவனை அழைத்து பேசுகிறார். அவரிடம் தானொரு நல்ல ஓவியன் என பொய் சொல்கிறான். இயேசுமீது நம்பிக்கை இருக்கிறதா என லூக்கா கேட்கிறார். தேவாலயத்தில் அமர்ந்து சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் முகத்தைப் பார்ப்பதுபோல் வேறெதுவும் எனக்கு அமைதியைத் தந்து விடப்போவதில்லை என்கிறான். தொடர்ந்து விவாதிக்கிறார்கள்.  நேரியதான நல்லவனை படைப்பதே உலகத்தில் மிகவும் சிக்கலான காரியம்  டான் குயிக்சோட் பூரண நல்லவன். அவன் அசடனாக இருப்பதாலேயே நல்லவனாகிறான். தன் மதிப்பையறியாத நல்லவன் முட்டாளாக்கப்படுகையில் கருணையுணர்வு பிறக்கிறது. இந்த உரையாடல் கதையின் பின்புலத்தில் மிக முக்கியமான ஒன்று. படிப்படியாக மனித தன்னிலை மறைவதையே கதை சொல்கிறது.

மனைவி ஆன்யாவிற்கு கடிதம் எழுதுகிறான். போர் கொலைகள் பற்றிய விவரணைகள்- உன்னுடைய மகிழ்ச்சியில் இன்னொருவருக்கு துக்கம் இருக்குமாயின் நீ அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்வாயா? எனும் அந்த கேள்வியை விரிவாக்குகிறது. இயேசுவை ஆதர்சமாக  கொண்ட லூக்கா தான் கொல்வதில் இன்பமடைகிறார். போரில் அடிபட்டு கிடப்பவனுக்கு நீர் கொடுத்துவிட்டு மறைத்து வைத்த கத்தியால் அவனை குத்தி கொல்லும் போது அவன் மற்றொரு லூக்காவாக மாறுகிறான். அதற்குப்பின் அஞ்சி ஒளிந்து கொண்டிருக்கும் பெண்னை வெறும் ஆர்வத்தில் நெருங்கி அகங்காரம் சீண்டப்பட்டு அவளை துன்புறுத்தி புணர்கிறான். கிறிஸ்து ஒரு ஒளியாக அவனுடைய சாயலில் தோன்றி குரலாக ஒலிக்கிறார். அகங்கார வெறியில் இருப்பதை சொல்கிறார். புணர்ந்து கொண்டிருப்பவனின் பின்னால் நின்றுக்கொண்டு அவ்வுருவம் மீண்டும் எச்சரிக்கிறது. அவனுடைய மனைவிக்கும் பிள்ளைக்கும் இது நேரலாம் என சொல்கிறது அக்குரல். ஆனால் அவன் கேட்கவில்லை. வெறியில் அந்த பெண்ணை சிலையொன்றால் அடித்து கொல்கிறான். நம்பிக்கையாளன் கிறிஸ்துவை தொலைக்கும் கதை என சொல்ல முடியும். கிறிஸ்து ஒருவகையில் அவன் மனசாட்சியாக இருக்கிறார். கதையிறுதியில் பைபிள் தொலைந்ததும் பெரும் ஆசுவாசத்தை உணர்கிறான். இதுவே இதை ஒரு தாஸ்தாவெஸ்கிய கதையாக ஆக்குகிறது. ஜூதாஸ் மற்றும் சிலோன் நாதன் தங்களுடைய குற்ற உணர்விலிருந்து மீள முடியாமல் மரிக்கிறார்கள். ‘தொலைந்துபோன பைபிள்’ நாயகன் இயேசுவை கைவிடுவதன் வழியாக தற்கொலையிலிருந்து தப்பிக்கிறான். நிம்மதியாக வாழ்கிறான். ‘ஒ தாவீது ராஜாவே’ அகங்காரத்தை விட்டுவிட்டு இயேசுவை பற்றுவதன் வழியாக தற்கொலையில் இருந்து தப்பிக்கிறான்.

கதையை தற்காலத்திலிருந்து விலக்கி வேறொரு காலத்தில் வேறொரு நிலத்தில் நிகழ்த்தும் போது அரசியல் தரப்புகளை கடந்து ஆதாரமான கேள்விகளை எழுப்பிக்கொள்ள முடியும். சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘காலத்தின் அலமாரி’ ‘எலும்புக்கூடுகள்’ போன்றவை இப்படியாக சமகால நிகழ்வுகளிலிருந்து விலக்கிக்கொண்டு ஈழ சிக்கலை அணுகுபவை. சாதனா போர் ஒரு மனிதனின் நுண்ணுணர்வுகளை அழித்து படிப்படியாக மிருகமாக்குவதை சித்தரிக்கிறார். அ. முத்துலிங்கத்தின் ‘வெள்ளிக்கிழமை இரவுகள்’ வன்புணர்வு செய்த சிங்கள சிப்பாயின் வீட்டுக்கு அவனால் உருவான பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்று காண்பதை சொல்லும் கதை. தன் நல்ல கணவன் , மகளின் நல்ல தந்தை, வேறொருத்தியை வன்புணர்வு செய்தவன் என அறியவரும்போது அவள் என்ன ஆவாள்?

இரண்டாம் உலகப்போர் என்பது ஸ்டாலினின் காலம். ஸ்வெட்லான அலேக்சிவிச் ‘second hand time’ நூலில் ரஷ்யாவை குறித்து கொடுக்கும் சித்திரத்தில் ரஷ்யாவின் தேவாலயங்கள் இடிக்கப்பட்டதையும் கடுமையாக ஒடுக்கப்பட்டதையும் சொல்கிறார். இரண்டாம் உலகப்போரை ஒட்டியே ஸ்டாலின் ஒரு உத்தியாக மீண்டும் கிறிஸ்தவத்திற்கு இடமளிக்கிறார். கிறிஸ்தவத்தின் ரட்சகராக தோற்றம் அளிக்கிறார். ஆனால் பிற்காலத்தில் நிலைமை மோசமாகிறது. சோவியத் உடைந்தபிறகு பெருந்திரளாக மக்கள் தேவாலயங்களுக்கு சென்றார்கள். கிறிஸ்தவ நம்பிக்கை சோவியத்தில் கிட்டத்தட்ட ராஜ துரோகமாக கருதப்பட்டது. இந்த சூழலில் ராணுவ உயரதிகாரி புதிய வீரனிடம் இப்படி உரையாடுவது முற்றிலும் சாத்தியமற்றது என சொல்லிவிட முடியாது என்றாலும், சற்றே நம்பகமற்ற பின்புலத்தை அளிக்கிறது. இங்கும் வாசகரின் நம்பிக்கையும் தனிப்பட்ட உரையாடல் எனும் சமாதானமும் தேவைப்படுகிறது.

இதே வரிசையில் ‘எஞ்சியிருப்பதன் துயரை’ பேசும் அடுத்த கதை  ‘யூதாசின் முத்தம்.’ இது ஒரு தொன்ம மறு ஆக்க ஊகப் புனைவு. நாமறிந்த யூதாசின் கதையில் உள்ள இடைவெளிகளை படைப்பூக்கமிக்க வகையில் நிரப்புகிறார். துரோகத்தின் முத்தமாக பார்க்கப்பட்ட யூதாசின் முத்தம் உண்மையில் அன்பின் முத்தமாக ஆகிறது. துரோகத்தின் சின்னமாக காலம் காலமாக கருதப்படும் யூதாஸ் முன் இருந்த தேர்வுகள் எவை? அவன் எதை தேர்ந்தான்? எனும் கேள்விகள் வழியாக அவனுடைய பிம்பத்தை தலைக்கீழாக்குகிறார். யூதாசுக்கு ஒரு காதல் வாழ்க்கை, நெருக்கடிகள், அரசியல் பின்புலம் என அனைத்தையும் உருவாக்குகிறார். பிலாத்துவின் வீரர்கள் நகர்வலம் வரும் இயேசுவை கைது செய்ய வரும்போது யூதாஸ் முதல் ஆளாக அவர்களுக்கு முன் நின்று அவர்களை விரட்டியடிக்கிறான். யூதாசின் காதலி சாரா, அவளுடைய அண்ணன் இப்ராகிம் நகர தலைமைக்கு எதிராக ஒரு புரட்சிப்படையை தொடங்கியதாக சொல்கிறாள். அதற்காக முப்பது வெள்ளிக்காசுகளை அளிக்க கோருகிறாள். அதற்காக அலையும்போது யூதாசின் குடும்பத்தை பிலாத்துவின் ஆட்கள் பிடித்து கொண்டு போய்விடுகிறார்கள் (இப்பகுதி மட்டும் சற்றே வழக்கமான பரப்பியல் பாணி எனத் தோன்றியது). சாராவின் வீட்டிலிருக்கையில் யூதாஸும் பிடிபடுகிறான். இறுதி விருந்தின்போது இயேசு கூறும் கதையில் குடிகாரன் இறந்த தந்தையை தங்க மோதிரத்துடன் சேர்த்தே புதைக்கிறான். இயேசு நன்றியைப் பற்றி பிரசங்கம் செய்வதும் வருகிறது. யூதாஸ் இயேசுவை கைது செய்யும்போது அவருக்கு முத்தமிடுகிறான். விசாரணையின்போது பராபஸ் விடுவிக்கப்படவேண்டும் என எல்லோரும் கூக்குரலிடுவதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இயேசுவை நிர்பந்தத்தினால் காட்டிக்கொடுத்தாலும் பிறகு மீட்டுவிடலாம் என்பதே அவனுடைய கணக்கு. எப்படியும் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வார் என நம்பினான். ‘இயேசுவையே விடுதலை செய்யுங்கள் என கண்ணீர்விட்டு அழுவதை’ எவரும் கேட்கவில்லை. பிலாத்து கொடுத்த வெள்ளிக்காசை வீசிவிட்டு வனத்திற்கு செல்கிறான். இயேசுவின் மரணத்திற்கு தான் காரணம் என்பது அவனை வருத்துகிறது. பாம்பொன்று அவனிடம் ஓநாயாக உருமாறி பேசுகிறது. இவையும் இயேசுவின் திட்டம் என சொல்கிறது. நீ ஒரு துரோகியல்ல, சாக வேண்டாம் என சொல்கிறது ஆனால் காட்டுக்குள் சென்று தூக்கிட்டு சாகிறான் யூதாஸ். சாத்தான் சொல்லும் சமாதானம் எல்லாவற்றையும் இறைத் திட்டத்தின் பகுதி என ஏற்க சொல்வதே. அதை ஏற்றுக்கொண்டால் யூதாஸ் சமாதனமடைந்து நிம்மதியாக வாழ்ந்திருக்கக் கூடும். ஆனால் சுய தேர்வின் வாய்ப்பையும் அதற்கான பொறுப்பையும் முற்றிலுமாக மறுத்ததாக ஆகும். ஆகவே அவன் தற்கொலை செய்துகொள்கிறான். தற்கொலைகள் ஒருவகையில் விதியின் வலைப்பின்னலுக்கு எதிரான கலகம். பழி தீர்ப்பு. சுமத்தப்படும் விதியின் வழித்தடங்களுக்கு எதிரான மறுப்பு. சுய தேர்வுக்கான சாட்சியங்களை வலுக்கட்டாயமாக நிறுவும் யத்தனங்கள்.

‘ஓ… தாவீது ராஜாவே!’ இதே கேள்விகளை கொண்டு வேறொரு பதிலை அடைந்த கதை என சொல்லலாம். நார்வே கடலில் மீன் பிடிக்கும் கிழவரின் கதை. கிழவனும் கடலை நினைவுபடுத்தும் காட்சியனுபவம்‌. கிழவர் தாவீது தந்தை மோசேயுவுடன் மீன் பிடிக்க சென்ற நினைவுகளில் ஆழ்கிறார். தேவன் நம்மை கைவிடமாட்டான் என தத்தளிக்கும் படகில் இருந்தபடி மோசேயு ஆறுதல் சொல்லும்போது ஒரு ராட்சச அலை அடங்கி செல்கிறது. ‘இத்தனை ஆண்டுகளாக கடல் என்றால் மிகவும் அமைதியான ஒன்று, ஒரு தாயைப் போன்றோ அல்லது தந்தையைப் போன்றோ எங்களை அரவணைக்கக் கூடியது என்று நினைத்திருந்தவனுக்குக் கடலின் இத்தனை மூர்க்கத்தனங்களையும் பார்த்தபோது வேதனையும் அதேசமயம் கோபமும் உண்டாயிற்று.’ எனும் இவ்வரியில் கடல் வாழ்க்கையின் குறியீடாகி அதன் கருணையின்மையை முதன்முறையாக எதிர்கொள்ளும் இளம் மனதின் தவிப்பு புலப்படுகிறது.  ‘முட்டாள்களையும் குழந்தைகளையும் தேவன் காப்பாற்றுவார். நீ குழந்தை, நான் முட்டாள், ஆகவே எதற்கும் பயப்படாதே என்றார்.’ இந்த உரையாடல் ‘தொலைந்து போன பைபிள்’ கதையில் லூக்காவுடன் டான் குவிக்சாதே பற்றி நிகழும் உரையாடலுடன் தொடர்புடையது. கிழவர் பெரும் முயற்சிக்கு பிறகு பிடித்த சிவலை மீன் அவரிடம் பேசத் தொடங்குகிறது. கிழவரும் தனிமையை போக்கிக்கொள்ள மீனிடம் பேசுகிறார். ‘நான் தோற்றுப்போனவன்’ என அரற்றுகிறார். மரணத்தை தவிர தனக்கு வேறென்ன எஞ்சி இருக்கிறது என மீனிடம் கேட்கும் கிழவரை தேற்ற மீன் மரணத் தருவாயில் பிழைத்து வந்த தாஸ்தாவெஸ்கியின் கதையை சொல்லி அவருக்கு ஆறுதல் அளிக்கிறது. மீனிடம் “இறப்பின் இறுதி நொடியில் என்னிடமிருந்து தப்பிவிடும் சாத்தியம் உள்ளதா?” என கேட்கும் கிழவரின் கேள்வி “தொலைந்து போன பைபிள்” கதையில் கதைசொல்லி அவனுக்கு துப்பாக்கி பயிற்றுவித்த ட்ரான்ஸ்கியிடம் கரடியை சுட சொன்னப்போது கேட்ட அதே கேள்வியின் நீட்சி. கொடும் பசியில் இருக்கும் தாவீது உயிர்வாழ வேண்டும் என மன்றாடாதபோதும் மீனை முத்தமிட்டு மீண்டும் நீரில் விடுகிறார். இந்த தருணத்தையும் “தொலைந்து போன பைபிள்” கதையில் கரடி சுடப்பட்டு இறப்பதுடன் ஒப்பிட முடியும். கரடி சுடப்படுவதிலும் மீன் உண்ணப்படுவதிலும் தான் பிழைத்திருக்க முடியும் எனும் நிலையில் இருவேறு முடிவுகளை இருவரும் எடுக்கிறார்கள். வீடு திரும்பும் தாவீது தனது பாடுகளில் பங்குபெறாத இயேசுவின் மீது கோபப்படுகிறார். தாவீது தனது வயிற்றை அறுத்து உள்ளுக்குள் உழன்று கொண்டிருக்கும் மலைப்பாம்பை வெளியே இழுத்து போட்டுவிட்டு வயிறை தைத்துக்கொள்கிறார். வீடு முழுவதும் பாம்புகள் சூழ்கின்றன. கடற்கரையில் சிற்றில் கட்டிக்கொண்டிருக்கும்போது இயேசு அவர் முன் தோன்றுகிறார். வீட்டுக்குள் திரும்பும்போது பாம்புகள் மறைந்து போகின்றன. இதே கதையில் மீன் முன்னர் பேசும்போது சாத்தானை விட கர்த்தர் வலிமையானவர் என சொல்கிறது. கொடும் பசியே உள்ளுக்குள் உழலும் பாம்பாக, சாத்தானாக உருவகப்படுத்தப்படுகிறது. இக்கதை எனக்கு இரண்டு கதைகளை நினைவுபடுத்தியது. ஒன்று தால்ஸ்தாயின் ‘where love is god is’ – இதில் மார்டின் எனும் மகனை இழந்த, செருப்புதைப்பவர் கனவில் வரும் இயேசு நாளை உன் வீட்டிற்கு வருவதாக சொல்கிறார். காலையிலிருந்து இயேசுவிற்காக காத்திருக்கும் மார்டின் வெவ்வேறு பாவப்பட்ட ஜீவன்களை சந்திக்கிறான். அவர்களுக்கு உதவுகிறான். இயேசு வராததை எண்ணி மருகும் அன்றிரவு கனவில் மீண்டும் இயேசு வரும்போது ஏன் வரவில்லை என கேட்கிறான். அதற்கு நான் தான் வந்தேனே என சொல்வார். பதின்ம வயதில் பள்ளியில் படித்த கதை. இயேசுவின் வருகையையும் இருப்பையும் உணர்த்தும் கதை. ஆயிரத்தொரு அரேபிய இரவுகளில் கடலில் மீன்பிடிக்க செல்லும் கிழவனிடம் கிட்டும் பேசும் மீன் கதை ஒன்றுண்டு. இக்கதையும் அமைப்பில் அத்தகைய தேவதை கதை/ நீதிக்கதை அமைப்பைக் கொண்டிருக்கிறது. தாஸ்தாவேஸ்கியின் கதையுலகிலிருந்து நன்னம்பிக்கையும் ஆசுவாசமும் அளிக்கும் தால்ஸ்தாய் கதையுலகிற்கு சென்ற கதை என இதை சொல்லலாம். சிலோன் நாதனும் யூதாசும் தற்கொலை செய்து இறந்து விட, மீதி இரண்டு கதைகளின் நாயகர்களும் உயிர் பிழைத்து இருக்கிறார்கள். தொலைந்து போன பைபிளின் நாயகன் நம்பிக்கையை தொலைப்பதன் வழியாகவும் தாவீது நம்பிக்கையை பற்றியபடியும். ஒருவகையில் ஒரே சிக்கலின் மூன்று சாத்தியமான விடைகளை சாதனாவின் கதைகள் பரிசீலிக்கின்றன என சொல்ல முடியும்.

தொகுப்பின் மீதி இரண்டு கதைகளும் எனது வாசிப்பில் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. ‘அக்கா’ இரண்டு சரடுகள் கொண்ட கதை. கதைசொல்லியின் கதை ஒரு பகுதியும். பிற பகுதிகள் அவன் எழுதும் கதையும் கொண்ட அமைப்பு. கதை சொல்லியின் கதை சற்றே சுவாரசியமான வாசிப்பை அளிக்கிறது. அவன் எழுதும் கதை எவ்விதத்திலும் புதுமையாகவோ அரிதாகவோ இல்லை. சாதி பிரச்சனை, இன சிக்கல், ஆணவக் கொலை போன்ற பேசு பொருளையே விந்தையான ஒரு நிலப்பரப்பிற்கு கொண்டு சென்று விவாதிக்கிறது. இரண்டாம் பகுதியில் கதைசொல்லியின் வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்து பாரிசில் ஒரு இத்தாலிய உணவகத்தில் வேலை செய்கிறான். அதன் பிறகு அவனுடன் வேலை பார்க்கும் மருது பற்றிய கதை வருகிறது. மருதுவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே தன்னை பற்றி பேசத் தொடங்குகிறான் (மருதுவை பற்றிய கதையாகவே வாசிக்கப்படும்). முன்னர் வேலைப்பார்த்த அலுவலகத்திலிருந்து வெளியேறிய கதை, பெண்களுக்கு எதிரான ஆவேசம், பென்னியவாதிக்கு டில்டோ அனுப்பிய ஆணாதிக்கவாதி. முள்ளி வாய்க்கால் மரணத்தின் போது தற்கொலை செய்து கொள்ள எண்ணியவன். குடும்பத்திற்கு அறையை கொடுத்தவன். தன்னை தாஸ்தாவெஸ்கியுடன் ஒப்பிட்டு கொள்கிறான்.பெயரை மாற்றும் அளவிற்கு. கதை மாந்தர்களை அங்கிருந்தே எடுப்பதாக சொல்கிறான். தான் வாழும் உலகம் நாஜிக்களின் வதை முகாம் என எழுதுகிறான்.

தாத்தாவைக் காட்டிலும் முற்போக்காக இருந்த, ஜாதிகளே ஒழிய வேண்டும் என விரும்பிய தந்தை தன் மகள் வேறொரு இன ஆணை திருமணம் செய்தது பிடிக்கவில்லை என்பதால் அக்கா வீட்டை விட்டு வந்ததை அறிகிறான் என்பதே கதைசொல்லி எழுதும் கதை. லட்சியவாதத்தின் மீதான சலிப்பு அல்லது அவநம்பிக்கையை சொல்லும் கதை. ஒரு அரசியல் அல்லது தத்துவ கேள்விகளை கதைக்களனை பெயர்க்கும் (decontextualise) போது எழும் உயரம். உறவு சிக்கல்களின்/ சமூக அமைப்பின் கதைகளை பெயர்க்கும்போது நிகழ்வதில்லை. ஒட்டகப்பால், புகையிலை செடி, பெயர்கள் என புதிய யதார்த்தத்தை அளிக்க முற்படுகிறார். இதே சிக்கலே மற்றொரு கதையான ‘தாய்’ கதையிலும் உள்ளது. உறவுகளின் சுயநலம், சுரண்டல், துரோகம் போன்றவற்றை சொல்வதற்கு ரஷ்யாவின் பனி படர்ந்த பின்புலம் எவ்வகையில் உதவுகிறது?

‘தாய்’ ரஷ்யாவில் நிகழ்கிறது. கதையில் மாசி மாச பனி என்பதால் நான்கு இன்ச் அல்லது ஐந்து இன்ச் இருக்கும் என்கிறார். ரஷ்ய பின்புல கதையில் தமிழ் மாதத்தை கொண்டுவருவது பொருந்தவில்லை. பனிவெளியில் குதிரைகள் இழுக்கும் வண்டியை பற்றிய சித்திரம் (படர்கையில்?) வருகிறது. தன்னிலையில் கதைசொல்லி தனது தந்தைக்கும் தாயுக்கும் இடையிலான உறவை பற்றி சொல்கிறான். சிறுவனாக தந்தையின் பக்கமே அவன் சாய்கிறான். ரத்தம் வரும்படி தாயை தாக்கிவிட்டு தந்தை வெளியேறி செல்கிறார். அதற்காக அவனுக்கு தாயின் மீது உள்ளுக்குள் ஆத்திரம் கனன்று கொண்டபடி இருக்கிறது. அப்பாவிற்காக காத்திருக்கும் அம்மாவின் மாற்றங்களை நுட்பமாக சொல்கிறார். அப்பா இருந்தபோது வைத்த சூப்பை விட ருசியான சூப்பை வைக்கிறாள், காசு கொடுத்து அவளும் அவனுக்கு ஷூ வாங்கித் தருகிறாள். அவனுடைய தேவையை தீர்ப்பவரிடம் அவனுக்கு அன்பு கூடுகிறது. தனது சேகரிப்பை எல்லாம் முதிர்ந்த தாய் அவனிடம் அளிக்கும்போது அவனுக்கு அவள் மேல் பாசம் கூடுகிறது. அம்மாவிற்கு எதாவது செய்ய வேண்டும் என எண்ணும்போது நல்ல நிலையிலிருக்கும் தந்தையிடமிருந்து அவனையும் வரச்சொல்லி எழுதிய கடிதம் கிடைத்ததும் தந்தையின் மீது பெரும் கோபம் கொள்கிறான் யோகோவிச். அம்மா என்றாள் என்னவென்று உனக்கு காட்டுகிறேன் எனும் ஆவேசத்துடன் தனிமையில், தந்தையின் நினைவிலேயே வாழும் முதிர்ந்த அம்மாவை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்கிறான். நடுவழியில் பனிப்பொழிவில் முதிர்ந்த அம்மாவை இறக்கிவிட்டு வண்டியில் கடந்து செல்கிறான் யோகொவிச். முதிர்ந்த தாயை காசுக்காக கைவிடும் மகனின் கதை இங்கே கதைகளிலும் நிகழ்வுகளிலும் நாம் நன்கறிந்த கருதான். முதியோர் இல்லத்திற்கு சென்றால் அத்தனைபேரும் இப்படியான கதையை சொல்வார்கள். மனிதர்களை பயன் கருதி கைவிடுவது என்பது இலக்கியத்தின் சாசுவதமான பெசுபோருல்களில் ஒன்று. ஆனால் ‘அக்காவின்’ சிக்கல் இதிலும் உண்டு. இந்த கதை கருவிற்கு கதை நிகழும் வெளி எந்த அளவிற்கு பங்களிப்பாற்றுகிறது? யோகொவிச்சின் அந்த முடிவைத்தான் நவீன இலக்கியவாதி எழுதுவார். நவீன இலக்கியத்தின் கருபொருட்களில் கூட தேய்வழக்கு உண்டு. தேய் வழக்கு என்பது என்ன சொல்லப்படுகிறதோ அதுவல்ல, அது எப்படி சொல்லப்படுகிறது என்பதே. சாரு முன்னுரையில் ‘இதுகாறும் பழகியிருந்த நிலங்களிலிருந்து விலகி இந்தப் பூமிக் கோளத்தில் நம்மைப் போலவே சிரித்து நம்மைப் போலவே கண்ணீர் விட்டு நம்மைப் போலவே துரோகம் செய்து நம்மைப் போலவே கொலைகள் செய்து நம்மைப் போலவே புணர்ந்து நம்மைப் போலவே சுரண்டப்பட்டு வாழும் வேற்று நில மனிதர்களின் கதைகளைச் சொல்கின்றன. இதுதான் இந்தக் கதைகளின் விசேஷம். இதுதான் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது. சாதனாவை கவனிக்கவும் வைத்தது.’ என எழுதுகிறார். சாரு இதை பெரும்பலமாக கருதுகிறார். ஆனால் ஒரு கதைக்கும் அது நிகழும் நிலப்பரப்பிற்கும் ஆதாரமான பிணைப்பு உள்ளது. தத்துவ நோக்கோ, வரலாற்று நோக்கோ இல்லாத கதைகளுக்கு இந்த கதைகள மாற்றம் பாதகமான விளைவையே ஏற்படுத்தும். பிற நான்கு கதைகளுக்கு அவற்றின் பேசு பொருள் காரணமாக இத்தகைய கதைக்களம் சாதகமான விளைவை ஏற்படுத்துகிறது. சாருவின் கூற்றை பொத்தாம்பொதுவான வரையறையாக கொள்ளமுடியாது. ஜெயமோகனின் ‘தேவதை’ ஒருவகையில் காந்தியின் வாழ்க்கையை ஆப்ரிக்க பின்புலத்தில் புனைந்த கதை. அந்நிய கதைக்களம் எங்கு தேவைப்படும்? சற்றே விலகி நின்று நோக்கும்போது நாம் நன்கறிந்த ஏதோ ஒன்றில் பண்பாட்டு/ வரலாற்று/ சமூக பூச்சுகளுக்கு உள்ளே அறியாத வேறொன்றின் இயங்குமுறை தென்படும். அப்படி ஒரு புதிய கோணம் கிட்டாதபோது கதைகளன் மாற்றப்படுவது ஒரு உத்தியாக மட்டுமே எஞ்சிவிடும். ஒரு கணவன் மனைவி சண்டை அமெரிக்காவில் நிகழ்வதாக கதை எழுதும்போது, அங்கே அமெரிக்க பண்பாடு எவ்வகையிலாவது ஊடுபாவை நிகழ்த்தியுள்ளதா என பார்க்கப்படும். அப்படி எதையும் நிகழ்த்தவில்லை என்றால் இந்த கதையை அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல என்ன காரணம் என வாசகன் ஒரு கேள்வியை எழுப்பக் கூடும். அப்படிச் செய்யக் கூடாதா? என்றால் அப்படியான விதிகள் ஏதுமில்லை. ஆனால் அது வாசிப்பில் ஒரு இடராகவே கருத்தில் கொள்ளப்படும். சிறுகதையின் மற்றொரு விதியான ‘சொல்லாதே காட்டு’ நினைவில் கொள்ளப்படவேண்டியது. தத்துவ பகுதிகள் நேரடியாக விவாதிக்கப்படுகின்றன. ‘புகழ்ச்சியானது ஒரு மனிதனின் திறமையை மழுங்கடிக்கச் செய்துவிடும் என்பதே அதற்குக் காரணம்’ போன்ற பொதுவான வரிகள் ஆங்காங்கு விரவிக் கிடக்கின்றன. ‘தனது வலது கையின் கட்டை-விரலுக்கு அடுத்துள்ள விரலினால் கண்ணாடியைத் தேய்த்து நத்தையை உசுப்பினார்’ என எழுதுகிறார். வலது ஆள்காட்டி விரல் என எழுத வேண்டிய இடத்தை இப்படி சுற்றி எழுதுவதான மொழி பயன்பாடுகள் ஒரு சில இடத்தில் இடறுகின்றன.  

சாதனாவின் கதைகள் அவை எடுத்துக்கொண்ட கேள்விகளை நேர்த்தியாக பின் தொடர்ந்தவை எனும் முறையில் முக்கியமான கதைகளாகின்றன. தனிப்பட்ட முறையில் எனக்கான கதைகள் என்றும் சொல்வேன். தமிழ் சிறுகதைகள் உலக நிலப்பரப்புகளில் விரிந்து பரவுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எழுத்தாளர் சாதனாவிற்கு வாழ்த்துக்கள்.

அரிசங்கர் நேர்காணல் – லாவண்யா சுந்தர்ராஜன்

  1. இலக்கியத்தில் நுழைந்தது எப்படி?

பெரும்பாலானவர்களுக்கு நேர்ந்ததைப் போலவே தான் எனக்கும் அமைந்தது. தனிமையே முதலில் என்னை வாசிப்புக்குள் இழுத்துச்சென்றது. பிறகு இடதுசாரி இயக்கத் தோழர்களின் வழி சரியான வாசிப்புக்குள் திசைத்திருப்பப்பட்டேன். முதலில் ரஷ்ய இலக்கியங்களும் பிறகு, தமிழின் நவீன இலக்கியமும் பரிச்சயம் ஆனது. தொடர்ந்து கிடைத்த நண்பர்களே இலக்கிய வழிக்காட்டிகளாக உள்ளனர். அதில் ஒவ்வொருவரும் அவரவர் ரசனைக்கேற்ப, அரசியலுக்கேற்பப் படைப்புகளைப் பரிந்துரைப்பார்கள். அதிலிருந்து எனக்குத் தேவையானதை நான் எடுத்துக்கொள்கிறேன். வாசிப்பின் ஆரம்பத்திலேயே எழுத வேண்டும் என்ற ஊந்துதல் வந்துவிட்டது. அதற்கு சரியான காரணம் தெரியவில்லை. புதுச்சேரியில் இருக்கும் போதே சில சிறுகதைகளும், மாயப்படகு என்ற சிறுவர் நாவலும் புதுச்சேரியிலிருந்து வெளிவந்துக்கொண்டிருந்த புதுவைப்பாமரன் மற்றும் புதுவை பாரதி ஆகிய இதழ்களில் வெளிவந்தது. அதற்கு பிறகு அதை தொடர முடியவில்லை. பிறகு வேலைக்காக சென்னைக்கு வந்த பிறகே மீண்டும் எழுத ஆரம்பத்தேன். மலைகள், பதாகை, சொல்வனம், உயிர் எழுத்து, காக்கைச் சிறகினிலே ஆகிய இனைய இதழ்களில் தொடர்ந்து கதைகள் வெளிவந்தது. இதில் பதாகை பாஸ்கர் அவர்கள் வழிகாட்டுதல் மிக முக்கியமானது.

  1. வாசிக்கும் போது என்ன கற்று கொள்கின்றீர்கள் அது உங்கள் எழுத்துக்கு எப்படி உதவுகிறது?

வாசிக்கும் போது எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை. படைப்பை அனுபவிக்கவே விரும்புகிறேன். அவ்வாறு அனுபவத்தை தராத படைப்புகளிடமிருந்து விலகிவிடுகிறேன். ஆனால், தற்போது வாசிக்கும் பழக்கத்தில் சிறிது மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஒவ்வொருவரும் மொழியை எவ்வாறு கையாண்டிருக்கிறார்கள் என்று ஆராய்கிறேன். நுட்பமான விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன். இவ்வாறு செய்வது என் எழுத்தை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது.

  1. உங்கள் புனைவு உலகினை பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

எனது முதல் தொகுப்பை வெளியிடும் போது இருந்த மனநிலை, அந்தத் தொகுப்பு வெளியான சிறிது காலத்திற்குள்ளாகவே மாறத்தொடங்கியிருந்ததை என்னால் உணர முடிந்தது. அத்தொகுப்பின் என்னுரையில் நான் எதார்த்தவாத்ததின் தேவையைப் பற்றியும் வரலாற்றில் அதன் முக்கியத்துவத்தின் பற்றியும் கூறியிருப்பேன். ஆனால், அதன் பின் என் சிந்தனை முழுக்க கோட்பாடுகள், மாய எதார்த்தம் என மாறத்தொடங்கியது. கதைச் சொல்லலில் புதிய யுக்திகளைக் கையாள வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. இதற்கு முக்கிய காரணம் வாசிப்பில் நான் மேற்கொண்ட சில மாற்றங்களைச் சொல்லலாம். அதன் பிறகே என் புனைவுலக மனிதர்கள் நிறம் மாறத்துவங்கினார்கள். என் முதல் தொகுப்பிற்கு பிறகு வந்த கதைகளில் இதைக் காணலாம். வடிவத்தில் சில மாற்றங்களை நான் மேற்கொண்டிருந்தாலும் எப்போதும் என் கதைகளில் எளிய அடித்தட்டு மனிதர்களைப் பற்றியே தொடர்ந்துப் பேசி வருகிறேன். மேலும், நான் இருக்கும் ஐ.டி. மற்றும் பிபிஓ துறைப் பற்றியும் அவ்வபோதுக் கதைகளை எழுதி வருகிறேன். ஆனால், எனது சொந்த ஊரானப் புதுச்சேரியைப் பற்றியே அதிகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

  1. உங்கள் வாசிப்பில் அயல் இலக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தியிருக்கின்றீர்கள். நமது இலக்கியத்துக்கும் அயல் இலக்கியத்துக்கும் இருக்கும் வேறுபாடு எப்படியிருக்கிறது?

முக்கியமாக இங்கு இருக்கும் எழுத்தாளர்களுக்கு சமகாலத்தைப் பற்றிய உணர்வு இல்லையோ என்றே தோன்றுகிறது. பெரும்பாலானவர்கள் தங்கள் கதைகளை நினைவுகளில் இருந்தே படைக்கிறார்கள். அவ்வாறு படைக்கப்படும் கதை பத்திலிருந்து இருவது வருடங்கள் பிந்தையதாகவே இருக்கிறது. ஆனால், அயல் இலக்கியங்களில் தற்காலத்தைப் பற்றி அதிகம் கவனம் கொள்ளபடுவதாகத் தோன்றுகிறது. தலைமுறைகளின் மாற்றங்கள், அரசியல் மாற்றங்கள், பண்பாடு, கலாச்சார மாற்றங்கள் என அதிகம் அங்கேப் பதிவுச் செய்யப்படுகிறது. ஆனால், இங்கே கடந்த முப்பது ஆண்டுகளில் ஏற்பட்டக் கலாச்சார மாற்றங்களை நாம் இன்னும் சரியாக பதிவு செய்ய ஆரம்பிக்கவில்லை. குறிப்பாக உலகமயமாக்கலுக்குப் பிறகான குடும்பங்களின் அமைப்பு எவ்வாறு சிதைந்திருக்கிறது, ஆண் பெண் உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், மேலும் பெண்களின் உலகம் எவ்வாறு விரிவடைந்திருக்கிறது என எதைப் பற்றியும் நாம் அதிகம் யோசித்ததாகத் தெரியவில்லை.

  1. புனைவாக்கத்தை தவர வேறு ஏதேனும் எழுதும் விரும்பம் உள்ளதா? அப்படி எழுத ஆசைபட்டால் எதனை பற்றி எழுதுவீங்க?

நிச்சயம் இருக்கிறது. வரலாற்றின் மீது எனக்கு அளவில்லாத ஆர்வமுண்டு. சொல்லப்பட வேண்டிய பல விஷயங்கள் இன்னும் சொல்லப்படாமலேயே, ஆராயப்படாமலேயே இருக்கின்றது என்ற வருத்தம் எனக்கு உண்டு. நிச்சயம் வரலாற்றுத் தொடர்பான அப்புனைவுகளை எழுதுவேன்.

  1. உங்கள் சிறுகதைகளுக்கு நீங்கள் யாரை முன்னோடியாக நினைக்கின்றீர்கள் ஏன்?

எனக்கு முன்னோடிகள் நிலையானவர்களாக இல்லை. முதலில் ராஜேந்திர சோழன் இருந்தார். பிறகு அசோகமித்ரன், பிறகு பஷீர் என காலத்திற்கும் வாசிப்பிற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இது வாசிப்பின் வழி என்னை மேம்படித்திக்கொள்வதாகவே கருதுகிறேன். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கூறு பிடித்துள்ளது. எதையும் புறந்தள்ள முடியவில்லை.

  1. எழுத்தைத் தவிர வேறு எந்த கலைவடிவில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்? உதாரணத்துக்கு ஓவியம்/புகைப்படம் அதில் ஏதேனும் முயன்று இருக்கின்றீர்களா? அதற்கும் எழுதுவதற்கு என்ன வித்தியாசம்? அது என்ன மாதிரியான அனுபவங்களை தருகிறது?

எனக்கு நிறைய விஷயங்களில் ஆர்வம் உண்டு. டிஜிட்டல் பெயிண்டிங், போட்டோ மேனுபிசோஷனிலும் அதிகம் ஆர்வம் உண்டு. கதைகளில் விவரிப்பத்தை விட இதில் என்னால் கூடுதலாக காட்சிப்படுத்த முடிகிறது. இதுவே தான் வேலையாகவும் இருப்பதால் கூடுதலான நேரம் ஒதுக்க வேண்டும் என்ற சிரமும் இல்லை.

  1. பிறர் எழுத்தை வாசிப்பதற்கும் உங்கள் எழுத்தை நீங்கள் வாசிப்பதர்க்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? இரண்டிலும் இயக்கும் மனநிலையில் அதிக சவாலானது எது?

நான் எழுதியதை நானே வாசிப்பது தான் மிகவும் சவாலானது. பிறர் எழுதியதை வாசிக்கும் இருக்கும் எதிர்பார்ப்பு, ஆச்சரியங்கள் எதுவும் நம் சொந்தப் படைப்பை வாசிக்கும் போது இருக்காது. அதனால் பலருடையப் படைப்புகளில், நீங்கள் எழுதியதை மீண்டும் மீண்டும் வாசித்திருந்தால் இத்தவறு நிகழ்ந்திருக்காது” என்றக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால் அது எளிதானதல்ல.

  1. உங்கள் பயண அனுபவங்கள் எப்படிப்பட்டது? ஏதேனும் படைப்பின் உள்ளாக்கத்தின் தேவை பொருட்டு பயணித்தது உண்டா?

நான் அதிகம் பயணம் செய்யக்கூடியவன் அல்ல. அடுத்த நாவலுக்கு அவ்வாறு ஒருப் பயணத்தை மேற்க்கொள்ள திட்டமிட்டிருக்கிறேன்.

  1. உங்கள் முதல் தொகுப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது அது சார்ந்த அனுபவத்தை பகிர முடியுமா?

எழுத ஆரம்பித்த சில மாதங்களிலேயே முதல் தொகுப்பு வெளிவந்தது. எனக்குத் தெரிந்தப் பலரின் கருத்து நான் அவரசப்பட்டுவிட்டேன் என்பதாகவே இருந்தது. ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. நான் எந்த ஒரு மோசமானக் கதையையும் எழுதவில்லை. இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணமுண்டு. ஆனால் அப்போது எனக்கு உதவ இலக்கிய நண்பர்கள் யாருமில்லை. அக்கதைகள் தவறான கைகளுக்கு எடிட் செய்ய சென்றுவிட்டது. ஆனாலும் அக்கதைகள் எனக்கு ஒரு சில விமர்சனங்களைத் தவிர்த்து நல்ல பெயரையே ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. தகுதியற்றவர்கள் எடிட் செய்யும் போது நல்லக் கதைகளும் காணாமல்தான் போகும்.

  1. இளம் வயது சுவாரஸிய அனுபவங்கள் பற்றிச் செல்லுங்கள்? அவை உங்கள் எழுத்தில் எங்கேனும் இடம் பிடித்திருக்கிறா?

பலக் கதைகளில் அதை சொல்லியிருக்கிறேன். குறிப்பாக “மெளனம் களையட்டும்” கதை.

  1. உங்கள் படைப்புகளுக்கு வரும் எதிர்வினை என்னவிதமான உளவியல் சிக்கல்களை உங்களுக்கு ஏற்படுத்தும்?

பெரிதாக ஒன்றும் இதுவரை வரவில்லை. என்னை யாருக்கும் தெரியாது. அதற்கு காரணம் இங்கிருக்கும் குழு மனப்பான்மை. என்னை திட்டுவதாலும், பாராட்டுவதாலும் விமர்சிப்பதாலும் யாருக்கும் எந்த நல்லதும் நடந்துவிட போவதில்லை. என்னால் யாரும் கவனத்திற்குள்ளாவப் போவதுமில்லை. அனைத்தும் தேவையைப் பொருத்தே நடப்பதால், நான் இன்னும் எவருடையத் தேவைப் பட்டியளுக்குள்ளும் வரவில்லை.

  1. எழுத்தின் மூலம் வாசிப்பின் மூலம் எதை கண்டடைய விரும்புகின்றீர்கள்?

ஒன்றே ஒன்று தான். இச்சமூகத்தைப் புரிந்துக்கொள்ள விரும்புகிறேன். முரண்பாடுகள் நிறைந்த இச்சமூகம் எப்படி இவ்வாறு ஒற்றுமையாக இயங்குகிறது. அதற்கு ஆதாரப்புள்ளி என்ன என்பதைக் கண்டடையவேத் தொடர்ந்து வாசித்தும் எழுதியும் வருகிறேன்.

  1. எழுதவதற்கு மொழியின் மீதான கவனம் , ஆளுமை முக்கியமானதா?

தை மேம்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் என்னென்ன?

நிச்சயம் முக்கியமானது தான். என்னைப் பொருத்தவரைத் தொடர்ந்து கவனத்துடன் வாசிப்பதும், திரும்பத் திரும்ப எழுதிப்பார்ப்பதும் தான் மேம்படுத்த சிறந்த வழி. நான் அதைத்தான் செய்கிறேன்.

  1. உங்களது படைப்பில் உங்களுக்கு மிகவும் கவர்ந்த படைப்பை பற்றி சொல்ல முடியுமா?

அனைத்தையும் எனக்குப் பிடித்தே எழுதினேன். ஆனால் பதிலடி என்றக் கதையை எழுதியிருக்க வேண்டாமே என்ற எண்ணம் இப்போது இருக்கிறது. அது, இந்தச் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறது என்று என்னும் போதுத் தவறான ஒரு விஷயத்தை இச்சமூகத்திற்குச் சொல்லிவிட்டோமோ என்றுத் தோன்றுகிறது. அக்கதையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பாகவும் அமைந்தது துரதிஷ்டமானது.

  1. யாருடைய படைப்பை பார்த்தது அடடா இது நான் எழுதியிருக்க வேண்டிய கருவல்லவா என்று நினைத்துண்டா அல்லது யாருடைய படைப்பை பார்த்தாவது இந்த லைன் நான் எழுதியிருந்தால் எவ்வளவு சிறப்பாக எழுதியிருப்பேன் என்று நினைத்தது உண்டா?

நிறைய உண்டு. உதாரணமாக சமீபத்தில் ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் என்று ஜப்பானிய நாவலை வாசித்தேன். அதை முன்பே வாசித்திருந்தால் பாரிஸை இன்னும் வேறு தளத்திற்கு உயர்த்தியிருக்க முடியும் என்றுத் தோன்றியது.

  1. உங்கள் படைப்புலத்தின் ஆதார மனநிலை என்ன?

இயலாமை. இச்சமூகத்தில் பெருங்கூட்டம் ஒன்று இம்மனநிலையிலேயே இயங்குகிறது. நடுத்தர மக்களின் ஆதார மனநிலை இதுவாகத்தான் இருக்கிறது. தங்களின் இயலாமையை மறைக்கவே தான் அவர்கள் போராடுகிறார்கள். அவர்களின் இயலாமையை தான் பன்னாட்டு நிறுவனங்கள் காசாக்குகிறார்கள். அரசியல்வாதிகள் ஓட்டாக்குகிறார்கள். எதையும் எதிர்த்து கேட்கவிடாமல் ஒடுக்கப்படுகிறார்கள். சுரண்டுபவன் தைரியமாக சுரண்டுகிறான்.

  1. பெரும்பாலான கதைகளில் சிறுவர்கள் கதைமாந்தராகவும் அல்லது சிறு வயதில் நடந்த சம்பவத்தின் பிண்ணனியில் கதை எழுதப்பட்டிருக்கிறது. இது தற்செயலாக நடந்ததா அல்லது இன்னும் பால்யத்தை விட்டு வெளியேறாமல் இருக்கிறதா உங்கள் படைப்பு மனம்?

இருக்கலாம். இவை அனைத்தும் என் ஆரம்ப கதைகள் தான். அதனால் ஒருவேளை அப்படி இருக்க வாய்ப்புண்டு. ஆனால் முதல் தொகுப்பிற்கு பிறகு வெளியான எந்தக் கதையும் அப்படியானதல்ல.

  1. பெண் கதைமாந்தாரின் கதைகளை(விடிவிப்பு, நகரிசொல்லும் போதும் பெண்களின் நுட்ப உணர்வுதளங்களை எழுத முடியாமல் போவதற்கு என்ன காரணமென்று உங்களால் யூகிக்க முடிகிறதா

தெரியவில்லை.

  1. நிழல் தேடும் பறவைகள் சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் பெண்ணாக மாறிப்போன தனது அப்பாவை கூடவே இருக்கச் சொல்லும் காட்சியை நினைவூட்டுகிறது, அதை போல உங்கள் படைப்பை ஒருபகுதியை பிற கலைவடிவிலோ அல்லது பிறர் படைப்பிலோ கண்டிருக்கின்றீர்களா? அப்படி கண்டறியும் போது நீங்கள் என்ன உணர்வீர்கள்?

இதே கேள்வி பலமுறை கேட்கபட்டுவிட்டது. நிழல் தேடும் பறவைகள் கதையை நான் பத்து வருடங்களுக்கு முன் எழுதினேன். அது புதுவைப் பாமரன் என்ற இதழில் வெளிவந்தது. அப்பொது அதை ஒரு குறுங்கதையாக மாற்றம் என்றத் தலைப்பில் எழுதியிருந்தேன். மீண்டும் அதை விரிவாக இந்த தலைப்பில் எழுதினேன். அக்கதைக்கூட படம் வெளிவருவதற்கு ஓராண்டுக்கு முன்பே பதாகையில் வெளிவந்தது. திரைப்படங்களில் இவ்வாறு எடுத்தால்வது இப்போது சகஜமான ஒன்று தான். சர்வசாதாரணமாக அவர்கள் அதை இன்ஸ்பிரேஷன் என்று சொல்லிவிடுகிறார்கள். எனது அமிலம் என்ற சிறுகதை வாசகசாலை இனைய இதழில் வெளிவந்தது. அதை ஒரு நண்பர் நாளைய இயக்குனருக்காக என்னுடம் அனுமதி பெற்று குறும்படமாக்கினார். ஆனால் அதை அப்படியே ஒரு பிரபல படத்தில் ஒரு காட்சியாக்கிவிட்டனர்.

  1. சிறுமிகளுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் அவளது திருமண வாழ்வை பாதிக்கும் என்ற பல்வேறு ஆய்வுகளும் அதை மையம் கொண்ட புனைவுகளும் வந்திருக்கும் நிலையில் உங்களது மௌனம் கலையட்டும் ஒரு சிறுவனுக்கு நடக்கும் வன்கொடுமையை பதிவு செய்கிறது. அவனது உளசிக்கல்களை பேசுகிறது, இந்த கதையின் கருவை நீங்கள் புனைவாக்கும் போது உங்களுக்கிருந்த சவால்கள் என்னென்ன?

உண்மையில் இது எனக்கு நடந்த ஒரு விஷயம் தான். இதை பகிரங்கமாக வெளிபடுத்த தயங்கவில்லை. நிச்சயம் இது போன்ற விஷயங்களைப் பதிவு செய்யவேண்டும் என்றே இதைக் கதையாக்கினேன். ஆனால் ஒவ்வொன்றையுன் நினைவுக்கூர்ந்து எழுதுவது தான் மிகக் கடினமானதாக இருந்தது. மீண்டு வந்த ஒரு கிணற்றுக்குள் மறுபடியும் குதிக்க வேண்டுமா என்ற தயக்கம் இருந்தது. இருந்தாலும் குதித்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

  1. பிணந்தின்னிகள், பதிலடி போன்ற கதைகளில் நீங்கள் பூடகமாக பதிய விரும்புவது சாதிய ஏற்றத்தாழ்வுகளையா

நிச்சயமாக. சாதிய கொடுமைகளால் தலித் மக்கள் மட்டுமே பாதிக்கபடுவதாக பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். ஒருவகையில் அது உண்மை என்றாலும் ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு மேல் உள்ளவர்களார் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். பிணந்தின்னிகளில், பொருளாதார ரீதியில் எவ்வித உதவியும் செய்ய முன்வராத சொந்த சாதியினர், அடுத்தவர்களின் திருமண விஷயத்தில் தலையிட்டு அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதும், மற்ற சாதியினரைக் கொல்லத்துணிவதும் எவ்வகையில் நியாயம் என்று இதுவரை தெரியவில்லை.

  1. மைதானம் இந்த கதையின் மூலம் நீங்கள் சொல்ல வருவது நகரமயத்தின் சீரழிவையா அல்லது பருவமாற்றம், வெப்பமாதல் போன்ற பயங்கரத்தையா அல்லது அது மாபெரும் ஏரி புனைவு மட்டுமா?

அரசியலற்ற படைப்பை எப்போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எதாவது ஒருவகையில் சிறு அரசியலையாவதுத் தொட்டுவிடவே எப்போதும் முயல்வேன். சில சமயம் வித்தியாசமான கதைகள் அமையும் போது அதை சமரசம் செய்து கொள்வேன். மைதானம் கதை உலகமையமாக்களால், பன்னாட்டு நிருவனங்களால் கிராமங்களின் நீர் வளம் எவ்வாறு இல்லாமல் போய்விட்டது என்பதையே சொல்ல விரும்பினேன்.

  1. குப்பைகள் போன்ற சில கதைகளில் கதை வடிவத்தில் புதுமையை முயற்சி செய்திருக்கின்றீர்கள் நீங்கள் கதைக்காக வடிவத்தை தேர்தெடுப்பீர்களா அல்லது இந்த வடிவில் எழுத வேண்டுமென்று முடிவு செய்து விட்டு கதை களத்தை, கருவை யோசிப்பீர்களா?

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இரண்டுமே நடக்கிறது. குப்பைகள் கதையைப் பொருத்தவரை முதலில் கதை தான் உருவானது. அதை நேர்க்கோட்டில் தான் எழுதினேன். அது எனக்கு திருப்தி தராததால் இரண்டு முறை மாற்றி எழுதினேன். பிறகே இவ்வடிவம் உருவானது. வடிவத்தை முதலில் தீர்மானித்தும் கதைகள் எழுதியுள்ளேன். ஆனால் அவை எதுவும் பதிலடி தொகுப்பில் இடம்பெறவில்லை. அடுத்தத் தொகுப்பில் வாரும்.

  1. மாயப்படகு இது நீங்கள் பனிரெண்டாம் வகுப்பில் எழுதியது என்று உங்கள் முன்னுரையில் சொல்லியிருக்கின்றீர்கள். இப்போது அதை மறு ஆக்கம் செய்ய வேண்டாமென்று முடிவு செய்தத்தற்கு உங்களால் அந்த பதின்வயதுக்கு திரும்பி சென்று எழுத முடியாதென்று நினைத்தது காரணமா

கண்டிப்பாக. என்னால் மீண்டும் அந்த வயதுக்குரிய மனநிலைக்குச் செல்ல முடியாது. வேலையினால் ஏற்படும் மன அழுத்தில் பாதிக்கப்பட்டுள்ளேன். சராசரியான ஒரு மனிதனுக்குரிய மனநிலையே இல்லாத போதுப் பதின்பருவ மனநிலைக்குச் செல்வது நிச்சயமாக இயலாதக் காரியம். அதனால் அதை அப்படியே விட்டுவிட்டேன்.

  1. பாரீஸ் குறுநாவலில் பிரெஞ்ச் குடியுரிமைக்காக பெண்ணுக்கு பணம் கொடுத்து மணந்து கொண்டு பாரீஸ் போகின்றார்கள் என்பது கதைகளம் அந்த மனபோக்கு இப்போதும் இருக்கிறதா? பாரீஸ் குடியுரிமை கொண்ட பெண்ணை மணப்பதன் மூலம் பாரீஸுக்கு குடியேறி அங்கேயே தங்கிவிடும் பழக்கம் நிஜத்தில் இருக்கிறதா ? அதே போல அதில் குடியுரிமையுள்ள ஆண்களை மணந்து குடியுரிமை பெற பெண்கள் பெரிதாக விரும்பதில்லை என்பதில் ஏதேனும் உளவியல் காரணங்கள் உண்டா?

பாரிஸுக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள் இருபாலரிலும் இருக்கிறாகள். ஆண்கள் பணம் கொடுத்து திருமணம் செய்து கொண்டால், பெண்கள் இரண்டாம் தாரமாக செல்ல தயங்குவதில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது குறைந்துள்ளது. அதற்குக் காரணம், கட்டாயமாக பிரெஞ்ச் மொழி தெரிந்திருக்க வேண்டும், பிரான்ஸ் அரசின் பொருளாதார நிலை, அவர்கள் புதிதாகக் கொண்டுவந்திருக்கும் சில கட்டுப்பாடுகள் எனப் பிரான்ஸ்க்குச் செல்வது தற்போது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். ஆனால் இன்றும் அவ்வாறு நடக்கத்தான் செய்கிறது.

  1. பாரீஸ் நாவலிலும், சில சிறுகதைகளிலும் கதை களமான பாண்டிச்சேரியும் அதன் போதை வஸ்துகளும் நாவலில், சிறுகதையில் உபயோகபடுத்தியிருக்கும் கதைமாந்தர் சிலரின் வசனங்கள் முகம் சுளிக்க வைக்கும்படி அமைந்திருப்பதற்கும் ஏதேனும் சம்மந்தமிருக்கிறதா?

இந்த கேள்வி சற்று வருத்தமளிக்கிறது. மனிதர்கள் பல நிலைகளில் வாழ்ந்து வருகிறார்கள். மிக மேல்தட்டு நிலை முதல் மிக மிக கீழ் தட்டு நிலைவரை வாழும் மனிதர்களின் கலாச்சாரம், மொழி, பழக்க வழக்கங்கள் என அனைத்திலும் மிக அதிக அளவில் வித்தியாசம் இருக்கும். நீங்கள் கேட்டும் கேள்வி கீழ்தட்டு மக்கள் அதிக அளவில் கெட்ட வார்த்தகள் பேசுவது போலவும் பாண்டிச்சேரியில் இருப்பவர்கள் அதிக போதை மற்றும் குடிக்கு அடிமையானர்கள் போலவும் சொல்ல வருகறீர்கள் என்றுத் தோன்றுகிறது. உண்மையில் பாண்டிச்சேரிக்கு அதிகமாக குடிக்க வெளி மாநிலத்திலிருந்து தான் வருகிறார்கள். உழைப்பால் ஏற்படும் உடல் வலி மற்றும் மன அழுத்ததிற்காக குடிக்கும் கீழ்தட்டு மக்களை விட வெறும் போதைக்காக குடிக்கு மேல் தட்டு மக்கள் அதிகம். பப்களில் பயன்படுத்தப்படும் போதை வஸ்துகளை கீழ்தட்டு மக்கள் பார்த்தே இருக்கமாட்டார்கள். ஃபக் எனும் ஆங்கில வார்த்தை எந்த வகையில் காதுக்கு இனிமையான வார்த்தை என தெரியவில்லை.

அரிசங்கரின் பதிலடி, பாரிஸ் நூல்கள் குறித்து லாவண்யா சுந்தர்ராஜன்

அறிமுக எழுத்தாளர் அரிசங்கர் மூன்று நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளார். மாயப்படகு இவரது பதின்ம வயதில் எழுதி சிறார் இதழொன்றில் தொடராக வெளிவந்தது என்று தனது முன்னுரையில் கூறியிருக்கிறார். பதிலடி என்ற சிறுகதைத் தொகுப்பு இதில் பதினாறு கதைகள் இருக்கின்றன. அதைத் தவிர பாரிஸ் என்ற குறுநாவலும் எழுதியிருக்கிறார்.

மாயப்படகு இது அவரது சிறுவயதில் எழுதப்பட்டதால் அந்த சாகச மனநிலைக்குரிய எழுத்துநடையும் ஊர் சுற்றும் சுவாரஸ்யமான அனுபவமும் நிறைந்திருக்கிறது. ஆனால் அந்த பதின்வயதில் அவரது கதாநாயகனை பற்றி ஒரு வரி அந்த நூலில் வருவது போலவே வயதுக்கு மீறிய அறிவு கொண்டவராக, சிறுவயது பாலகர்களுக்கு இளைஞராக வாழும் என்ற கனவு ஆகியவற்றின் காரணமாக கதை சொன்னபோது அவருக்கு இருந்த வயதிலும் அதிக வயதுடைய இளைஞனை கதைக்குள் கொண்டு வந்து சாகசங்களை நிகழ்த்தியிருக்கிறார். கூடவே குழந்தைத்தனமான கதாநாயக சாகசங்களும் இருக்கிறது. கல்மிஷமற்ற எல்லோருக்கும் இரக்கப்படும் குழந்தை மனது முழு நாவலிலும் பயணம் செய்கிறது.

பதிலடி சிறுகதைத் தொகுப்பிலுள்ள பதினாறு கதைகளுமே ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைகளங்களை கதையம்சங்களை கொண்டவை. இவை அனைத்துமே சிறுகதை என்று வடிவத்துக்குள் பொருந்துகின்றன. இதுவரை பேசப்படாத கதைக்களங்களையும் கையாளுவதில் ஹரி சங்கர் சிறிது வெற்றி பெற்றிருக்கிறார். சமூக பிரச்சனைகளை, ஏற்றத்தாழ்வுகளை, அரசியல் பார்வைகளை, சீரழரிவுகளை கதையூடே சொல்லியிருக்கிறார். அவை எதுவும் வலிந்து திணிக்கப்படாமல் கதையோடு ஒட்டிவருவதே இந்த கதைகளின்  தனிச்சிறப்பு

புதுசட்டை கதையில் சிறுவயது பாலகனை அவனுடைய வறுமையை பயன்படுத்தி சுரண்டும் சுயநலம் பிடித்த உறவினர் கூட்டம் பற்றிய கதை என்று விலகி போய் விட முடியாது. தமிழ்நாட்டின் அரசியலை சினிமா எவ்வளவு பாதித்தது என்பது வரலாறு. அதே போலவே சின்னதிரையின் அறிமுகம்  பல்வேறு அரசியல் மாற்றங்களும் காரணமாகியதோ இல்லையோ, மக்கள் மனதை அது எந்த அளவுக்கு அடிமைபடுத்தி வைத்திருந்தது அதன் பொருட்டு இயங்கும் உளவியல் பிரச்சனைகளை பூடகமாக சொல்கிறது இந்த கதை. கரையும் நினைவுகள் ஒரு மாயத்தன்மையுடைய கதை போல இருந்தாலும், மருத்துவமனைகளில் நிகழும் நம்பத்தன்மையற்ற போக்குகளையும், அதன் பொருட்டு பாதிப்புக்குள்ளாகும் தாய், மகன் அவன் காதலி ஆகியோரது கதை. துருவங்கள் ஆண், பெண் உறுவு சிக்கலை பேசுகிறது. ஆண் மனம் ஆணாகவும் பெண் மனம் ஆண் மனதில் தெரியும் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். இவரது இந்த கதையில் மட்டுமல்லாது பிற கதைகளின் பெண் மாந்தர்களும் ஆண்மனதில் தெரியும் பெண் சித்திரங்களாகவே இருப்பது வியத்தகு உண்மை.

வாசனை நுட்பமான கதைக்களம். கணவன் உடலில் ஒவ்வாத வாசனையை உணரும் பெண்ணின் உளசிக்கலாக விரியும் இந்த கதை இறுதி சில பத்திகளில் கதையின் பரிமாணம் பிறன்மனை நோக்கின் பொருட்டு எழுந்த சிக்கலாக மாறி போகிறது. இந்த கதையின் தொடக்கம் மையம் இவை முன்னர் சொன்ன கருத்தை இன்னும் வலுவானதாக பேசியிருந்தால் இன்னும் சிறப்பான கதையாக அமைந்திருக்கும். திருடர்கள் கதையில் காலகுழப்பம் கொஞ்சமிருந்தாலும், சிறுவயது பாலகர்களை பணிக்கு நிமித்தல் அவர்களுக்கு என்னவிதமான மனகுழப்பங்களையும், சிறுவர்கள் மனதில் கசடையும் எப்படி உறுவாக்க கூடும் என்பதை சொல்லும் சிறப்பான கதை.  

தொகுப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கதைகளில் ஒன்று மௌனம் கலையட்டும், சிறு வயதில் பாலியல் துன்புறுத்துதல்களுக்கு உள்ளாகும் சிறுமிகள் பற்றிய பலகதைகளும் அவர்களின் உளவியல் சிக்கல்களும், திருமண வயதடையும் போது உண்டாகும் மன உளைச்சல் பற்றியும் பல பதிவுகளை படித்திருத்திருக்கிறோம். சில இளைஞர்களால், சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் போது அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று சொல்லும் கதையை நான் இதுவரை படித்தது இல்லை. பாம்பு என்ற உருவகத்தில் வரும் நினைவும் அந்த நினைவின் பொருட்டு அலைகலிப்பும், பயமும் மிக அழகாக பதிவாகியிருக்கின்றன. அந்த கதையில் அந்நிகழ்வின் பின்னர் கதைசொல்லி காலில் முள் தைப்பதை உணர முடியாத வேகத்தோடு கண்மண் தெரியாமல் ஓடிவரும் பாலகனாக சித்திரக்கப்பட்டிருப்பார். இந்த சித்தரிப்பு அந்தருணத்தின் வலியை சொல்லாமலே உணர்த்திவிடுகிறதுகதையின் முடிவை மட்டும் கொஞ்சம் செழுமையாக்கியிருக்கலாமென்று எனக்கு தோன்றியது

விடிவிப்பு சமூகத்தின் கீழ்தட்டிலிருக்கும் பெண்களின் சிக்கல்களை பேச முற்பட்டிருக்கிறது. ஒரு பெண் தனியாக வேலை தேடும் பொருட்டு நின்றிருந்தால் ‘அங்கே வா’ என்று சொல்லி அழைத்து போய் வலுகட்டாயமாய் கலவி கொள்ள வேண்டுமென்ற மனநிலையில் இயக்கும் ஒரு மனநிலையுள்ள ஆண்மகனும், இன்னது அன்னது என்று காரணமே இல்லாமல் மனைவியை எதற்கெடுத்தாலும் அடித்து துவைக்கும் கணவன், அவள் கற்பு நிலையின் மீது கலங்கம் கற்பிப்பவனை அடித்து அதன் பொருட்டு அடிபடவும் தயாராக இருக்கும் மனநிலையுள்ள இன்னொரு ஆண்மகனும் என்று சமூகத்தின் முரண் மனநிலையை பதிவு செய்கிறது. பெண்களுக்கு எதிரான எல்லா குற்றங்களுக்கும் இந்த முரண் மனநிலையே காரணம் என்று நாம் ஆராய சிறு திறப்பை இந்த கதை ஏற்படுத்துகிறது.

நகரி மற்றொரு சிறப்பான கதையாகி இருக்க வேண்டிய கதை. மிகச்சிறப்பாக தொடங்குகிறது, மிக சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சிறுவயதில் கதாநாயக பாவத்துடன் பார்க்கப்படுவரையே இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் நாயகி, அவளது கற்பனை பிம்பம் எப்படி சிதைகிறது, பொருந்த மணம் அவளை எப்படி பாதிக்கிறது என்பதை எழுதும் வாய்ப்புகளை தன்னுள்ளே வைத்திருக்கும் கதை. நிழல் தேடும் பறவையும் அதே போல மிக கனமான களம் இதில் கதைசொல்லியின் மன அழுத்தங்களை பதிவு செய்திருக்க வேண்டும். கணவன் இறந்து போக தனது கணவனுடன் பிறந்த திருநங்கையை மணக்க நேரிடும் பெண்ணை பற்றிய கதைகள் இதுவரை வந்திருக்கிறதா தெரியவில்லை. ஆனால் கதாநாயகியின் வலி பெருளாதாரம் சார்ந்தது என்பதோடு சுருங்கிவிடுகிறது. அந்த திருமணத்திற்கு பின்னர் அவள் அடையும் உளசிக்கலை பேசும் சாத்தியமுடைய கதை. அவ்வாறு பேசப்பட்டிருந்தாலும் இது மிகவும் வலுவான கதையாக மாறியிருக்கும் இருப்பினும் மிக சிறப்பானதொரு கதை களம்

புயல் கதையும் தன்னளவிலான சமூக அவலங்களை பதிவு செய்திருக்கிறது. கதையில் அப்பா மகள் உறவு சார்ந்த பதிவுகளை ஹரி சங்கர் எளிதாக சேர்த்திருக்க முடியும். அப்படி செய்திருந்தால் இந்த கதையின் கனம் இறுதியில் கூடியிருக்க வாய்ப்புகள் அதிகம். பிணந்தின்னிகள் கதையில் சாதிய ஏற்றதாழ்வுகள் பதிவு செய்கிறது. ஆயினும் சின்னய்யா வெட்டியான் என்பதை பதிவு செய்ய புஷ்பநாதன் என்ற கதாபாத்திரமும் அவரது மனைவியின் இறப்பும் கதைக்குள் அவ்வளவு விரிவாக பதிவாகியிருப்பது எதற்காக என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதை கதையில் வடிவயுத்தி என்று சொல்லலாமா என்பதில் எனக்கு குழப்பமிருக்கிறது. இவரது பிற கதைகளான செஞ்சிறை, குப்பைகள் போன்ற கதைகளிலும் கதையின் மைய ஓட்டத்துக்கு பொருந்தாக காட்சி கதை தொடக்கத்தில் விரிவாக பதிவாகிறது. இது கதையின் இறுக்கத்தை ஒருவித்தத்தில் பாதிக்கிறதென்றே சொல்ல வேண்டும். செஞ்சிறை கதையிலும் முதல் பத்தியிலேயே இறந்து போகும் புருஷோத்தமன் எப்படி கொல்லப்பட்டார் என்பதற்கான சித்திரம் இவ்வளவு விரிவாக தேவையா என்ற கேள்வியுண்டு எனக்கு. ஏனென்றால் கதையின் களம் வேறு. இந்த கொலையின் பொருட்டு சந்தேகத்தின் பெயரில் சிறை செல்லும் கற்பிணியின் கதை. அந்த பெண்ணின் அல்லலும், காவல்துறையின் மெத்தனம், கரிசனமற்ற போக்கு இதுவே களம். இது ஓரளவு சிறப்பாக பதிவாகியிருக்கும் போது கொலையான புருஷோத்தமனின் கொலை சம்பவம் விரிவாக எழுதப்பட வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

மைதானம் தொகுப்பின் மிக சிறந்த கதை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். இந்த கதையில் சின்ன சின்ன வடிவ குளறுபடிகள் இருந்தாலும் மிக சிறப்பான கதையிதுஇதில் வரும் சிறுவனுக்கும், வயதான பெரியவருக்குமான உரையாடல் மிக அழகானது. பெரியவர் கண்ட ஏரி தற்காலத்தில் பிள்ளைகள் விளையாடும் மைதானமாக மாறியது பல நீர்நிலைகளை நாம் இழந்ததன் சாட்சிபதிவு. சூழல் சார்ந்த அக்கரையுடைய யாரையுமே கொஞ்சம் அதிர்வடைய செய்யும் கதை. உலக வெப்பமயமாவதும், பிளாஸ்டிக் போன்ற மக்காத பொருட்களால் சூழல் சீரழிவது அதை அறியாத பேதைகளாக நாம் வாழ்வதும், நம் சந்ததி இப்படி சீரழிகிறதே என்ற முந்திய தலைமுறையினரின் ஆதங்கமும், கேவல்களும் ஒருமித்து ஒலிக்கும் குரல் இந்த சிறுகதை.

குப்பைகள் சமூக ஏற்றதாழ்வுகளை ஒரே வாக்கியத்தில் சொல்லி அதிர்வடைய செய்யும் கதை குப்பையில் வீசப்படும் புழு வைத்த அரிசி பொட்டலத்தை வாங்கிக் கொள்ளும் துப்புரவு பணியிலிருக்கும் பெண் கழுவிட்டு வடிச்சா சோறு, அப்படியே பண்ணா பிரியாணிஎன்ற வாக்கியம் ஏற்படுத்தும் அதிர்வு கதை முழுவதும் கூடவே வருகிறது. ஆனாலும் இப்படி எழுதியதற்கு சம்மந்தப்பட்டவர் கண்ணில் பட்டால் மிகப்பெரிய சர்சையில் சிக்குவதற்கான எல்லா வாய்ப்புகளையும் கொண்ட கதை. பதிலடி கதையும் சமூக ஏற்றதாழ்வையும், சாதிய வெறுப்பு மனநிலையையும் பதிவு செய்யும் கதை. தொடுத்தல் மாற்று திறனாளிகள் பற்றிய கதை.

இவரது பாரிஸ் குறுநாவல் இரண்டு மூன்று மணிநேரத்தில் விறுவிறுவென்று வாசிக்கக்கூடிய குழப்பமே இல்லாத நடை. வித்தியாசமான கதைகளம். மூன்று தனித்தனி இழையாக விரியும் கதை அவை ஒன்றுகொன்று மிக அழகாக இணைந்து பின்னலாக மாறியிருப்பது மிகத்தேர்ச்சி பெற்ற கதை சொல்லும் முறை. இதுவரை நாம் அறியாத பாண்டிச்சேரியை காட்டியிருக்கிறார் ஹரிசங்கர்.

கதை சொல்லும் முறையில் முன்னர் நடந்ததை பின் கூறி அல்லது பின்னர் நடக்க இருப்பதை முன்னமே சொல்லி அடுத்தடுத்த அத்தியாயங்களை இணைக்கவோ அல்லது நவீன முறையின் கதைசொல்லும் யுத்தியென நினைத்தோ சில விஷயங்களை செய்திருப்பது இதுவரை பிற புனைவுகளில் நான் காணாத ஒன்று.

 

காட்சி சித்தரிப்புகள், கதாபாத்திர விபரணைகள் எல்லாம் மிக நேர்த்தியாக செய்திருப்பது இந்த நாவலில் மற்றொரு முக்கிய அம்சமாக குறிப்பிடலாம். நாவலை வாசித்து முடித்த பின்னர் அசோக், கதிர், ரஃபி, கிரிஸ்டோ போன்ற கதாபத்திரங்கள் நம் முன் உலவி வர அந்த கதாபாத்திர வர்ணனைகள் உதவுகின்றன.

கதை நிகழும் நிலம் சார்ந்த வர்ணனைகள் இன்னும் கொஞ்சம் சேர்த்திருந்தால் இன்னும் வலுவான நாவலாக இது மாறியிருக்கும். அதே போல சில விஷயங்கள் நாவலுக்கு வலுசேர்க்கவில்லையோ என்றும் தோன்றியது. அதையெல்லாம் நீக்கி, இன்னும் கொஞ்சம் செழுமையாக்கியிருந்தால் இது ஒரு அபாரமான படைப்பாக மாறியிருக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை.

ஒட்டுமொத்தமாக ஹரிசங்கர் படைப்புகளை ஆராயும் போது இவரது படைப்புகளில் கதைமாந்தர்களில் சிறுவர்கள் அதிகமிருக்கின்றர்கள். சிறார் நாவலும் எழுதியிருக்கிறார் ஆகவே இவரது படைப்பு மனம் இன்னும் இளம்பிராயத்து சம்பவங்களை பதிவு செய்து முடிக்கவில்லை அல்லது அந்த பால்ய உலகத்து கனவு, சுவாரஸ்யங்களை இழக்க விரும்பவில்லை என்று சொல்லலாம். அதே சமயம் பாரீஸ் நாவலில் முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள் பதிவாகி படைப்பாளி சமகாலத்தில் இயக்கும் கலகமனம் கொண்ட இளம்படைப்பாளாகவும் தெரிகிறார்.

படைப்புலகின் நிலப்பரப்பு பெரும்பாலும் பாண்டிச்சேரியாக இருக்கிறது. ஆனால் அதன் நிலக்காட்சிகள் குறைவாக இருக்கிறது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் டூபிளக்ஸ் சிலை என்று ஒரு சிலையை பற்றிய பதிவு அவரது கதை மற்றும் நாவல் இரண்டிலும் வருகிறது. பாண்டிச்சேரியை பற்றி அறிந்தவர்களுக்கு அது உடனடியாக புரியக்கூடும் ஆனால் அந்த சிலை எப்படியிருக்கும் என்ற வர்ணனையிருந்தால் வாசகர்களுக்கு கதையுடன் இணக்கமாகும் வாய்ப்புகள் அதிகம். இப்போது அது அழகான பெயருடைய சிலை என்பதாக மட்டும் நின்றுவிடுகிறது. மிக குறுகிய காலத்திலேயே சிறார் நாவல், சிறுகதை, குறுநாவல் என்று பல்வேறு இலக்கிய வடிவங்களின் தீவிரமாக இயங்கும் ஹரி சங்கருக்கு வாழ்த்துகள்.