ஒலிக்காத உடல் – இரா.கவியரசு கவிதைகள்

விழுகின்ற நீரின் ஒலிகளால்
வரைகின்றான் குளிக்கும் உடலை
பெரிதாக விரியும் பறவை
துளியாக ஒடுங்கும்போது
கண் மட்டுமே துடிக்கிறது
இரவில்
அமைதியாகத் ததும்பும்
கடலின் உள்ளே
தூங்காத நீரோட்டங்கள்
வரைந்து கொண்டே இருக்கின்றன
காணாத உடலை
அப்போதும்
கண் மட்டுமே துடிக்கிறது
குளித்து விட்டு வரும் உடலுக்காக
காத்திருக்கின்றன ஆடைகள்
ஒலியை உறிஞ்சும்
பூட்டிய அறைக்கு வெளியே
உடலும் உடையும் பொருந்துவது
கசிகிறது அரூபமாக
நெஞ்சுச் சூட்டில் கொளுத்துபவன்
கற்பூரமாக்கி வாய்க்குள் அதக்குகிறான்
உள்ளே எரிகின்றன
ஒலிக்காத உடலும்
பிய்த்தெறியப்படும் ஆடைகளும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.