எஸ். பாபு
முடிவுகளும் துவக்கங்களும்
புதன்கிழமை எங்கு முடிகிறதோ,
வியாழக்கிழமை அங்கு துவங்குகிறது.
வியாழக்கிழமையின் குழந்தைபோல
வெள்ளிக்கிழமை வந்து சேர்கிறது.
முடிவுகள் முடிந்துவிடும்போது
துவக்கங்கள் வருகின்றன.
முடிவு முதல் துவக்கம் வரை என்பதே போக்கு.
மேலும்,
முடிவில் துவக்கம்தான் வருகிறது.
***
3X3 என்ன?
அது 7 என்று நினைத்தேன்.
அது 6 என்று சொன்னேன்.
அது 9 ஆக இருக்கும் என்பதை அறிந்திருந்தேன்.
***
அநீதி
எனக்குத் தெரியுமா? என்று
என்னிடம் கேட்டாள்.
எனக்குத் தெரியாது என்று
சொன்னேன்.
பதில் சரியானது தான்.
ஆனாலும் எனக்கு
கெட்ட பெயர் கிடைத்தது.
***
பன்றி
பன்றிக்குத் தெரியுமா, தானொரு பன்றி என்று?
அதற்குத் தெரியுமா, மற்ற பன்றிகளைப் போலத்தான்
அது தோற்றமளிக்கிறது என்று?
பன்றி தன்னை வேறு எதுவாகவோ
நினைத்துக் கொண்டிருக்கலாம்.
***
துளை வழியாகப் பார்த்தல்
ஒரு துளை வழியாகப் பார்ப்பது
சிறந்தது.
உங்களுக்கான துளையை உருவாக்கி
அதன் வழியே பாருங்கள்.
நீங்கள் பார்ப்பதை
வேறு யாராலும் பார்க்க முடியாது.
நீங்கள் சோர்வடையும்போது
துளையை மூடிவிடலாம்.
அல்லது
அதனை நிராகரித்து விடலாம்.
***
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
கவிதையோடு வாசிப்பு மனம் முழுவதுமாக ஒன்று கலந்து உறவாடி விடாமல், அதில் ஒரு சிறு இடைவெளி மிஞ்சினால் தான் அந்தக் கவிதையுடனான உறவு நிலைக்கிறது. அவ்விடைவெளியை நிரப்ப முயலும் பிரயத்தனத்தை அக்கவிதை நம் வாழ் நாள் முழுவதும் கோரியபடி இருக்கிறது. அம்மாதிரியான கவிதை வரிகள் தான் வரலாற்றில் நிற்கின்றன போலும். ‘யாருமற்ற இடத்தில் என்ன நடக்கிறது எல்லாம்’ என்னும் நகுலனின் வரிகள் போல. கவிஞன் நின்றுரைக்கும் தளத்திற்கு ஏற்றிவிட இல்லாமல் போகும் அந்தக் கடைசிப் படிக்கட்டு, நம் மனதை அந்தர ஏகாந்தத்தில் நிறுத்துகிறது. அப்படியான வரிகளை உலகின் பல்வேறு மொழிக் கவிதைகளிலும் காண முடிகிறது. செர்பியக் கவிதை வரிகளில் அவ்வாறு சஞ்சரித்த அனுபவத்தின் விளைவுதான் இம்மொழிபெயர்ப்பு. யாருடைய வரிகளோ உள்ளங்கையில் வந்து விழ, தெரிந்தோருக்கெல்லாம் உடனே பகிர்ந்துவிடத் தூண்டும் அந்தக் கண நேர உ ந்துதல் போன்ற ஒரு சிறு பதற்றம் தானே தவிர, இம்மொழிபெயர்ப்புக்கு சீரிய நோக்கம் என்று எதுவுமில்லை.