‘நான் எப்போ சாவேன்?’ – தேடன்

தேடன்

‘நான் எப்போ சாவேன்?’ என்று அடிக்கடி கேட்பாள் அவள், லீலா. அவளுக்கு வாழ்வின் மீது அவ்வளவு வெறுப்பு என்பதை விட சாவின் மீது ஏதோ பிரியம் என்றே சொல்லலாம். ஏனேனில் அவள் வாழ்க்கை அவ்வளவு மோசமாக ஒன்றுமில்லை.

லீலாவிடம் எதற்காக நீ இப்படி கேட்கிறாய் என்றால் ‘எனக்கு லைஃப் ல ஒரு திருப்தி வரவேயில்ல‌. கடவுள் கிட்ட போயிட்டா நானும் சந்தோஷமா இருப்பேன்ல. அதுல தான் எதோ நிறைவு இருக்க மாதிரி தோணுது. இங்க வாழறது எதுக்குனே தெரியல.’ என்று நீட்டி முழக்கி தத்துவம் பேசுவாள். அதில் உண்மையிருந்தாலும் சாவை பற்றியே யோசிப்பது ஒரு நோய் என்பதை அவள் அறியவில்லை.

லீலாவின் வீட்டின் அருகே ஒரு சிறுமிக்கு திடீரென புற்றுநோய் என்று தெரியவந்தது. அவளுக்கு அந்த சிறுமியோடு சிறிது நாள் பழக்கமே என்றாலும் லீலாவோடு அந்த சிறுமி மிக நெருங்கி விட்டிருந்தாள். சிறுமிக்கு புற்றுநோய் என்று தெரியவந்தது முதல் லீலாவுக்கு தூக்கமே வரவில்லை. கண்களை மூடினாலும் திறந்தாலும் அந்த சிறுமி கீமோதெரபியால் முடி கொட்டி மெலிந்து சோர்ந்து விட்டிருந்தவள், ஆட்டோவில் இருந்து இறங்கி வருகையில் மூச்சை இழுத்து இழுத்து விட்டபடி லீலாவை பார்த்து சிரித்த அந்த தருணமே ஓடிக்கொண்டேயிருந்தது. எப்படியும் அந்த சிறுமி இன்னும் சில மாதத்தில் இறப்பது உறுதி என்று சொல்லிவிட்டனர்.

லீலா அந்த சிறுமியை பார்க்கும் தைரியம் அற்றவளாய் இருந்தாள். அந்த சிறுமியை எல்லோரும் வந்து பார்த்து விட்டு சென்றனர். லீலாவின் வீட்டிலிருந்தும் எல்லோரும் போய் பார்த்து விட்டு வந்தனர். லீலாவிடம் ‘கடைசியா பாத்துடு. உன்னதான் அவ கேட்டா. அப்பறம் பாக்கமுடயலனு வருத்த பட்டு ப்ரயோசனம் இல்ல’ என்று அம்மா சொன்னாள். லீலாவால் அந்த சிறுமியை பார்க்க போகும் ஒரு அடியை கூட எடுத்து வைக்க முடியாது அழத் தொடங்கிவிட்டாள். அழுகை நின்றதும் திரும்ப அந்த சிறுமியின் நினைவு வர அவளுக்குள் செய்வதறியா கோபம் பொங்கியது.

மறுநாள் லீலா கண்விழித்து பார்க்கையில் அவள் முன் அந்த சிறுமி நிற்கிறாள். ஓடியாடி சிரித்து குதித்த அந்த சிறுமி மெலிந்து நொடிந்து மூச்சு விட சிரமப்பட்டு மொட்டை தலையோடு அவள் முன் நிற்கிறாள். லீலா வின் கண்களோடு சிறுமியின் கண்கள் மோதுகின்றன. எல்லாமே சூன்யமானது அந்த சிறுமி கண்களில் தெரிந்த சிரிப்பால்.

லீலாவிடம் ‘நான் எப்போ சாவேன்க்கா,’ என்கிறது அந்த மழலை மாறாத குரல். லீலாவின் உடலெங்கும் ஆயிரமாயிரம் அதிர்வலைகள். அந்த கேள்வி, தான் கேட்கும் அதே கேள்வி. மீண்டும் மீண்டும் கேட்கிறாள் அந்த சிறுமி அதே கேள்வியை.

‘நான் எப்போ க்கா சாவேன் சொல்லுக்கா’ அதே மழலை குரல் துக்கத்தின் சாயலில் உள்ளிறங்கி ஒலிக்கிறது.

லீலாவின் குரல் வரவேயில்லை அவள் உதடுகள் செய்வதறியாது மேலும் கீழும் அசைந்தன. என்ன சொல்வது, என்ன சொல்லி என்னவாகப் போகிறது. சாவு நிம்மதி தான் ஆனால் பிரிவு கொடியது; வாழ்க்கையின் மிக பெரும் வன்முறை. அதற்கு மேல் அவளால் அழுகையை அடக்கவே முடியவில்லை. அந்த சிறுமி சிரித்து கொண்டே நின்றிருந்தாள்.

‘அய்யோ,’ என்று ஒரு பெருங்கூச்சல் அந்த சிறுமியின் வீட்டிலிருந்து. லீலா தூக்கத்திலிருந்து விழிக்க லீலாவின் அம்மா சொன்னாள் ‘குழந்த போயிட்டா’.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.