ஒழுக்கவாதி

ஆனந்த் குமார்

ஒழுக்கவாதி நாளிதழ்களை
அடுக்கி வைக்கிறார்
ஒன்றின் மீது ஒன்றாக
அவர் நாட்களை அடுக்கி வைக்கிறார்.
மூன்று மாதங்கள் சேர்ந்ததும்
கட்டித் தூக்கி மேலே போடுகிறார்.
பரணில் கொஞ்சம்
தூசு சேர
எடைக்குப் போட மேலே ஏறுகிறார்.
ஒவ்வொரு கட்டாய்
கீழே போட்டு
பெருமூச்சுடன் இறங்கியவர் தலையில்
ஆடி ஆடி வீழ்கிறது
போன வருடத்திற்கு இடையிலிருந்து
அவர் திறந்து பார்த்திராத
ஒரு ஞாயிற்றுக்கிழமையின்
வண்ணப்பக்கம்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.