இனியவன் காளிதாஸ்
காற்புள்ளிகள் மேல் வைக்கப்பட்ட
முற்றுப் புள்ளிகள்
இறந்தகாலத்தின்
உதரம் கிழித்து
உறைந்து கிடக்கும்
நினைவுத் துணுக்குகளை
நிழலாடச் செய்கிறது
கனவின் அடியாழங்களில்
கால்வைத்து இறுகிக்கிடக்கும்
சந்தோசத்தின்
பூட்டுகளைத் திறவுகிறது
பிசுபிசுத்துக் கிடக்கும்
பெருங்கதறல்களின்
சாம்பல் குழைத்து
உடலெங்கும் பூசிக் கொண்டு
பல்லிடுக்கில் சிக்கிய
உணவுத் துகளாய் ,
நழுவிப்போன
பால்யத்தை முத்தமிட்டு,
நிகழ்காலத்தின் முகவரிக்குள்
அழைத்துவரும்
நிழற்படங்கள் யாவும்
நினைவுகளின்
பிம்பங்கள் மட்டுமல்ல
ஓய்வின்றி
நகரும் காலத்தின்
காற்புள்ளிகளின்
மேல் வைக்கப்பட்ட
சிலவிநாடி முற்றுப்புள்ளிகள் .