ஆங்கிலம் : சாஜை கே.வி தமிழில் : தி.இரா.மீனா
கேள்வி : “வெகுநேரம் மௌனமாக இருந்தால் உயர்ந்த தெய்வீக நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம் என்று பயந்து காதலர்கள், அலைகளோடு சரசமாட வேகமாக கடற்கரைக்குத் திரும்புகின்றனர்.”
பேரானந்தமான கணங்களை வெளிப்படுத்தும் உங்களுடைய இந்த வார்த்தைப் பிரயோகங்களால் உங்களின் சமகாலத்தவர்களிடையே ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கிறீர்கள். ‘அனகம்’ (பாவமற்றது) போன்ற கவிதைகளில் காமக் கிளர்ச்சியை மிக மெல்லிய ஊடுருவலாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். டி.எச் .லாரன்சின் Chatterley’s Lover என்ற புத்தகத்தில் மேலே சொன்ன அதே மாதிரியான சான்று – புணர்ச்சிக்குப் பின்னேயான காதலியின் அமைதியான முகம், புத்தனின் முகம் போலச் சாந்தமாக இருக்கிறது என்று இருக்கிறது — காதல் மற்றும் காமத்தின் இணவுநிலை பற்றி உங்கள் எண்ணம்?
பதில்: அடிப்படையாக மனிதன் இந்திரியம் சார்ந்தவன். காமம் என்பது வாழ்க்கையின் விழா. என்றாலும் அது கவிதை என்ற ஆத்மவுணர்ச்சிக்கு ஒரு படி கீழானதுதான். ஒன்று நிர்வாணம் அல்லது முக்தியை நோக்கிப் போகும் போது மற்றொன்று சிருஷ்டியின் உச்சத்திற்குப் போகிறது. கலைதேவதையான சரஸ்வதி தன் மடியிலிருக்க, பிரம்மா தன்னை வேதத்திற்கு உட்படுத்திக் கொள்கிறான். எதுவானாலும் வார்த்தை வெளிப்பாடென்பது அனுபவத்திலிருந்து மிகுந்த இடைவெளி உடையதுதான்.
கே :பெரும்பாலான உங்கள் கவிதைகள் அப்ரோடைட் , சாப்போ மற்றும் கடல் ஆகியவற்றை குறிப்பாகக் காட்டுவதாக உள்ளன. அப்ரோடைட் உங்கள் கவிதையிலிருந்து ஒரு போதும் விலகாது என்று சொல்லலாமா?
பதில்: கலை தெய்வத்தின் மனித வடிவம் சாப்போ. அடக்க முடியாத அன்புடையவள். அவளை பழக்க வழக்கங்கள் தடுக்க முடியாது. குந்தியையோ அல்லது சீதையையோ நம்மால் தழுவிக் கொள்ளமுடியாது–பூமி பிளந்து, காட்டுத் தீ பரவி, முழுமையாக எல்லாம் அழிந்து விடும். அவர்கள் வியப்பின் உச்ச கட்டம். சக்தி, முடிவற்ற உள் உருமாற்றம் ஆகியவை என் கவிதைக்கான சுயம்—என்னை அது
மெய்யறிவை நோக்கிச் செலுத்துகிறது.
கே: இயற்கையிடமிருந்து நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சி , பரவசம், தெய்வீக இன்பம் ஆகியவை குறித்த கணங்கள்?
பதில்: ஓ! அது ஒரு கருநாகத்தைப் பார்த்த தருணமாக இருக்கலாம். அல்லது மிக நெருக்கமானவரை இழந்தபோது ஏற்படும் வெறுமையாக இருக்கலாம். அது மழையில் முற்றிலும் நனைந்து, நிர்வாணமாக இருப்பதைப் போன்றது. பரிகாரமென்னும் எண்ணெயை உடலில் பூசிக் கொண்டு செல்லும் புழுவின் யாத்திரை. வல்லூறுகளின் வானம். வெளிறிய நிலவைக் காட்டும் கடல். இமாலயத்தின் ஆழ் அமைதி. பனங்கள்ளின் இனிமை. அசோக மரத்தின் மென்மையான இலைகள். காட்டுத்தீயின் ஒன்றிய ஒலி நயமான கணங்கள். பால்வீதியின் ஆனந்தமான எல்லா ஆறுகளும், அமைதியான தண்ணீரும் மிகச் சிறிய பூவும், மிகப்பெரிய அருவியும். பனி மறைத்த நிலப்பிரதேசம். பாலைவனம். கிழக்கும்,மேற்கும் ஒலியெழுப்பிப் பறக்கும் கிளியாகச் சூரியன். துவைப்பதற்குப் போடப்படும் வெள்ளை ஆடையாக முழுநிலா. புதுநிலவின் மேல் தணியாத தாகம். முன்னோர்களின் மந்திரம் சொல்லும் உதடுகளாக புற்களின் அலகுகள்.
கே: உங்கள் கவிதைகளில் வெளிப்படுகிற சோகமான நகைச்சுவையின் மூலம்?
பதில்: பறைச்சி பெற்ற பன்னிரு குலம் எங்களுடையது (Twelve castes born of Parayi). பாக்கனார், சாட்டனார், நரநது என்ற வகை மக்கள் தேவி—காளிதேவி தன் தோற்றத்தைப் பார்த்துத் தானே நகைப்பாள்– எரிச்சல்- வெறுப்பு -நாத்திகவாதம்– –சிசிபஸ்- நம்மிடம் வியாசர் ,பாஸன், சாலிங்கர், குந்தேரா என்று… இவர்களை ஆதரிக்கும் வகையில் Borges கதைகள் எல்லாம்.
கே: பயணத்தின் போது ஏற்பட்ட மறக்க முடியாத கணங்கள் ?
பதில்: ஒரு முறை ரயில் பயணத்தின்போது அந்தக் கம்பார்ட்மென்டில் என்னையும், ஒரு சிறு குழந்தையையும், நட்சத்திர வானமும் தவிர எல்லோரும் தூங்கி விட்டனர். இன்னொரு சமயம் பனாரசில் ஒரு படகோட்டியைச் சந்தித்தேன். அவர் பெயர் தசரதன்– அயோத்தி மன்னனின் பெயராக இருந்தது. ஒரு சமயம் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் சூழ்ந்திருக்க, மெக்சிகோவின் பிரமீடு உச்சியில் ’காடு’ என்ற கவிதையைப் படித்தேன். சேக்ஷ்ஸ்பியரின் வீட்டிற்கு முன்னால் ஈரேழ் வரிப்பா [Sonnet] படித்தேன். காப்பாளர் மீண்டும் அதை சொல்லச் சொன்னார். ஹெமிங்வேயின் வீட்டிற்கு முன்னால் போனபோது மழை தூறத் தொடங்கியது ; அன்று அவர் பிறந்த நாள் விழா என்பது நான் அறியாதது.
கே : உணர்ச்சி நிறைந்த கவிஞனுக்கும் ,வார்த்தைக்குமான நெருங்கிய உறவு?
பதில் : ஒவ்வொரு புதிய வார்த்தையும் கிசுகிசுப்பூட்டுகிறது. அதன் மணம் காரணமின்றி என்னைப் படபடக்க வைக்கிறது. அதுதான் பூட்டும் சாவியும். வாழ்க்கையின் நான்கு லட்சியமும் (புருஷார்த்தம்) அதுதான். அது நம் பூர்வ வாழ்க்கையையும் தொடுகிறது. மூஞ்சுரு, மயில், அன்னம், கருடன், காளை என்று தெய்வங்களுக்கு வாகனங்கள் போல கவிதை வார்த்தைகள் எனக்கு வாகனம் . சொற்களுக்கு என்று ஒருவன் நிச்சயிக்கப்பட்ட பிறகு அவன் உலகம் அமைதியில் பயணிப்பதாகிறது. வார்த்தை என்பது விதை, இடி, ஒருவருடைய ஆழ் மனதின் அடுக்கடுக்கான தளங்கள். அழிவில் இருந்து தொடங்கி மணவாழ்வின் உச்சம் வரை அது என்னை அழைத்துச் செல்கிறது. நானும் வார்த்தையும் ஒருசேர ஓய்வெடுக்கும் போது, கண்ணுக்குப் புலப்படாத ’பாவத்தின்’ முத்திரை தங்குகிறது. கிறுக்கலாக இருந்த மறந்து போன வார்த்தை மிக உயர்ந்த சொல்லாகிறது.
கே: Larca மற்றும் Paz டன் உங்கள் நெருக்கம்?
பதில்: லார்காவுக்கு என்னைப் போல வாழ்வும் சாவும் Gipsy-Ballad தான். ஹோமரிலிருந்து ரில்கே வரை இணைக்கிற ஒரு நூல். ஒவ்வொரு அங்கம் எழுதுவதும் காளைச் சண்டைதான். Paz நம்முடைய சகபயணி. விரிவான நம் வரலாற்று மார்க்கத்தை பகுப்பாய்வு செய்தவர். ஸ்பெயின் மற்றும் அஸ்டெக் (Aztecs) இரண்டின் பாரம்பரியமும், நவீனத்துவமும் கலந்த கலவை. தென் அமெரிக்காவைச் சேர்ந்த Cezer Vallejo என்னை மிகவும் கவர்ந்த கவிஞர்.
கே: மலையாளத்தில் உங்களைக் கவர்ந்த கவிஞர்கள்?
பதில்: நிரனது ராமதாசன், எழுத்தச்சன், சி.வி. ஆசான், உன்னி வாரியர் இவர்கள் ஒரு வகை. எனது முன்னோடிகளில் எடப்பள்ளி என்னை மிகவும் கவர்ந்தவர். ராம்ராஜபஹதூர் நவீன செவ்வியலில் (Modern Classic) அடங்குபவர். இது சாத்தியமற்ற சாத்தியம். கோடையின் வானம்பாடியாக இருந்தவர் எடப்பள்ளி.
கே: முதுமையின் கொடுமையும், தவிர்க்க முடியாத மரணமும் குறித்து?
பதில்: சிறுவயதில் ’மரணம்’ என்ற கரு பிடித்ததாக இருந்ததால் என் கவிதைகள் அது சார்ந்திருந்தன. தீர்க்கதரிசிகள், தத்துவவாதிகள்,கவிஞர்கள் போல நானும் அதை அடைகாத்துக் கொண்டிருந்தேன். அதுபற்றி சில காலம் ஆராய்ச்சி செய்தேன். மரணம் பற்றி எனக்கு பயமில்லை. நரை முடியும், மங்கும் பார்வையும் என்னைச் சிரிக்க வைக்கும். எனினும் சுற்றியுள்ள புறக்கணிக்கப்பட்ட முதியவர்களைப் பார்க்கும் போது, நடுக்கம் வருகிறது. ஆனால் கவிதை என்று வரும் போது நான் ’மார்க்கண்டேயன்’ போலத்தான். இறந்த கணவன் சத்யவானை மீட்டுக் கொண்டு வந்த சாவித்ரி நான். அது ஒரு வகையில் யுலிஸசின் இரண்டாவது ஒடிசி போலத்தான்.
கே: கவிஞனாக எப்படி உங்களை எப்படி மதிப்பிட்டுக் கொள்கிறீர்கள்? ஒரு நவீனத்துவவாதியாகவா ?
பதில்: ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு என்னைப் படியுங்கள். நான் எதிர்காலத்தின் கவிஞன் என்பதை உணர்வீர்கள். பாஸ்ட் ஃபுட் போன்றதான இன்றைய இலக்கியப் போக்கை யார் விரும்புகிறார்கள்? மலையாள மொழி இருக்கும் வரை, என் வாசகன் அவன் / அவள் மண்ணையும், மரபையும் மீண்டும் என் கவிதைகளிலிருந்து கண்டறிவார்கள்.
நன்றி : Indian Literature –Sahitya Academy Feb 2013
——————————–
“காட்டிற்கு நான் என்ன பெயரிடுவேன்?
காட்டிற்கு நான் என் பெயரிடுவேன்.”
என்று ’காடு”என்ற கவிதையில் இடம்பெறும் வரிகள் தலைமுறைகளைக் கடந்த படைப்பாளராக மதிக்கப்படும் மலையாள மொழிக் கவிஞரான டி.வினய்சந்திரனின் (1946 – 2013) கவிதைகளை , அவற்றின் பரந்த உலகப் பார்வையைச் சுருக்கமாகக் காட்டுகின்றன.