இரவி
’முதல் மாணவன், கதிர்’
மேடையில் தமிழாசிரியர் அறிவித்தார். நல்லூர் கடைத்தெருவிலிருந்த இராமலிங்க வள்ளலார் மன்றத்தில் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. பள்ளியில் அதிக மதிப்பெண் வாங்கியவர்களுக்கும், பேச்சு, கட்டுரை, பாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
தரையில் நண்பர்களுடன் உட்கார்ந்திருந்த கதிரின் காதுகளில் இந்த அழைப்பு விழுந்ததாகத் தெரியவில்லை. அவன் வேறு நினைவுகளில் ஆழ்ந்திருந்தான். அப்பாவை அழைத்து வந்திருக்கலாமோ? ஆனால், அவருக்கு விருப்பம் இல்லை. ’இல்லை நான் வரவில்லை நீ மட்டும் போய்விட்டு வா’ என்று சொல்லிவிட்டார்.
அந்த பழைய கசப்பான நிகழ்வுதான் அவர் வர மாட்டேன் என்று சொன்னதற்கு காரணமாக இருக்குமோ? அவருக்குள் அந்த நிகழ்வு இன்னும் அழியாமல் இருக்கவேண்டும். அந்த நிகழ்வு அவரை அதிகம் பாதித்துவிட்டது. எப்படித்தான் மறக்கமுடியும்? கண் முன்னால் தன் மகனை அறைவதை, அது ஆசிரியராகத்தான் இருக்கட்டுமே, யாரால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால், அந்த நிகழ்வு அவனைப் படிப்பில் மேலும் கவனம் செலுத்த வைத்தது.
அவனையறிமாலேயே அவன் கை கன்னத்தைத் தடவியது. ‘கதிர்’ என்ற அழைப்புக்குரல் மீண்டும். உட்கார்ந்திருந்தவர்களை விலக்கியவாறு மேடையை நோக்கி நடந்தான்.
அன்று, பிரேயர் மணி அடிப்பதற்கு முன்னாலேயே அவர்கள் பள்ளிக்கூட வாசலுக்கு வந்துவிட்டனர்.
திங்கள் கிழமை. விடியறதுக்கு முன்னாலே எழுந்துவிட்ட கதிரின் அப்பா. மாடுகளைக் கறந்து அலுமினியத் தூக்கு வாளியில் பாலை ஊற்றிக்கொண்டு டவுனில் உள்ள டீக்கடையில் கொடுத்துவிட்டு வந்துவிட்டார். கதிரின் அம்மா கொடுத்த இட்லியைச் சாப்பிட்டுவிட்டு பொடி நடையாய் நடந்து பேய்ச்சாவடியில் டவுன் பஸ் ஒன்றில் ஏறி நல்லூர் நிறுத்தத்தில் இறங்கி பள்ளிக்கூட வாசலுக்கு வந்தபோது மணி ஒன்பதைத் தாண்டிவிட்டது. பள்ளிக்கூடம் ஒன்பதரைக்குத் தொடங்கும்.
இன்னும் பிரேயர் மணி அடிக்கவில்லை. பள்ளிக்கூடத்திற்குத் தென்புறமாக, சுவரையொட்டி கிழக்கும் மேற்குமாக வாய்க்கால் ஒன்று ஓடியது. எக்கினால் தாண்டிவிடலாம். சின்ன வாய்க்கால் தான். பள்ளிக்கூடத்திற்கு எதிரில், ரோட்டிற்கு எதிர்ப்புற நாலைந்து வேப்ப மரங்கள். அதில் ஒரு நிழலில் கதிரும் அவன் அப்பாவும் நின்றிருந்தனர். அவன் அப்பா, மரத்தில் ஒரு காலைப் பின்பக்கமாக உதைத்து, மற்றொரு காலில் நின்றிருந்தார். அவன் கையில் புத்தகப்பை; அதனுள் இருந்த டிபன் பாக்சில் அம்மா கொடுத்த இட்லி.
மாணவர்களும் மாணவிகளும் வேக வேகமாக பள்ளியில் நுழைந்து கொண்டிருந்தார்கள். பிரேயர் மணி அடித்துவிட்டால் உள்ளே நுழையமுடியாது. கேட்டை அடைத்துவிடுவார்கள். ஆரூரிலிருந்து வரும் பாசஞ்சர் அன்று சரியான நேரத்திற்கு வந்துவிட்டது. பள்ளிக்கூடத்திற்கு அருகாமை ஊர்களிலிருந்து அந்த வண்டியில் வருபவர்கள் குறுகிய சாலையில் வேகமாக நடந்து வந்தனர். அவர்களுக்கு முன்னால், சுப்புணி சார், வயர் கூடையில் டிபன் கேரியரும் மடித்துக் கட்டிய வேட்டியுமாக வேர்க்க விறுவிறுக்க வேகமாக வந்து கொண்டிருந்தார். மூக்குக் கண்ணாடிக்குள், அவரது முட்டைக் கண்கள் தெரித்து விழுந்துவிடுவதுபோல் தெரிந்தன. லேட்டா வந்தா, ஆசிரியர் என்றாலும் ஒன்றுதான் ஹெட்மாஸ்டர் சாருக்கு.
கதிருக்கு உள்ளே போய்விடலாமா என்று தோன்றியது. வெளியில் நிற்பதை நினைத்து உள்ளுக்குள் பயம். ஆசிரியர்கள் யாராவது பார்த்துவிட்டால். அதுவும் ஹெட்மாஸ்டர்? ஆனால், பணத்தை வாங்கி அப்பா கையில் கொடுத்துவிட்டால் வேலை முடிந்துவிடும். அவர் பாட்டுக்கு வீட்டிற்குப் போய்விடுவார். அவர்தான் கையெழுத்துப் போட வேண்டுமாம். அலுவலகத்தில் சொல்லிவிட்டார்கள். எப்போதும்போல், சனி ஞாயிறு விடுமுறைக்காக வீட்டிற்குச் சென்றிருந்தவன் இதற்காகவே அப்பாவை அழைத்து வந்திருந்தான். உதவித் தொகை முப்பது ரூபாய் என்றாலும், பணம் பணம்தானே.
பிரேயர் முடிந்து, வகுப்புகள் தொடங்கிவிட்டன. அமைதியான சூழல். ஒன்றிரண்டு வகுப்புகளிலிருந்து வருகைப்பதிவு எடுக்கும் சப்தம். இவர்கள் நின்றிருந்த பக்கம்தான் பள்ளிக்கூட அலுவலகமும் ஹெட்மாஸ்டர் ரூமும். ஜன்னலின் வழியாக, ரமணி சாரும் மற்றொரு எழுத்தரும் குனிந்த தலை நிமிராமல் வேலை செய்துகொண்டிருப்பது தெரிந்தது. ஹெட்மாஸ்டரின் உருவம் கண்ணில் படவில்லை. அவர் ரூம் அந்தப் பக்கம்.
முதல் பீரியட் தொடங்கியதும் அலுவலகத்திற்குள் போகலாம் என்று கதிர் நினைத்தான். ஆனால், அவன் வெளியில் நிற்பதை ஆசிரியர்கள் யாராவது பார்த்துவிட்டால்? அல்லது பசங்க யாராவது பார்த்துவிட்டு வகுப்பாசிரியரிடம் சொல்லி விட்டால்? பணத்தை வாங்கிக் கொடுத்துவிட்டால் மூன்றாம் பீரியடுக்கு வகுப்புக்குச் சென்றுவிடலாம். யோசனையும் அடிவயிற்றில் பயமுமாகக் கதிர் மரத்தடியில் நின்று கொண்டிருந்தான். தோளில் புத்தகப்பை கனத்தது. நடுமுதுகில் வியர்வை வழிந்தோடியது. அவன் அப்பா இப்போது, வேட்டியை மேலிழுத்துக் கொண்டு மரத்தடியில் குத்துக் காலிட்டு அமர்ந்திருந்தார். அவரும் அவனும் அதிகம் பேசிக் கொண்டதில்லை.
அடுத்த மரத்தடியில், கூடை மீதிருந்த மூங்கில் தட்டில் பரப்பிய செய்தித்தாளில், எலந்தைப் பழம், மிட்டாய், வேர்க்கடலைகளுடன் அந்த வயதான கிழவி எங்கோ பார்த்தவாறு வாங்குவோருக்காகக் காத்திருந்தாள்.
கதிரின் அப்பா சின்னப்பிள்ளைக்கு இந்தச் சூழல் மிகவும் புதிது. அவர் உண்டு, வயல் உண்டு, பால் கறந்து எடுத்துக்கொண்டு டவுன் கடையில் கொடுப்பது. மாடு கன்றுகளைப் பார்த்துக் கொள்வது என்று அதுதான் அவர் உலகம். ஆகவே, கதிரின் அம்மா வழி தாத்தா, தான் அவனைப் படிக்க வைக்கிறேன் என்று கேட்டபோது உடனே சரி என்றார் அவர். இந்த நல்லூரிலிருந்து வடகிழக்கே மூன்று மைலில் கதிரின் பாட்டி வீடு. கதிரின் சித்திகளும் இந்தப் பள்ளியில்தான் படித்தார்கள். ஆகவே அவன் தாத்தா கதிரையும் இந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார். பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு எல்லாம் கதிரின் அப்பா வரவே இல்லை. ஆறாம் வகுப்பில் சேர்ந்தபின், ஒரு வருடத்திற்கு, யாராவது வந்து அழைத்துக் கொண்டு போனால்தான் அம்மா வீட்டிற்குப் போவான். இப்போது ஒன்பதாம் வகுப்பு. பள்ளியும் ஊரும் பழகிவிட்டது. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை, வெள்ளிக்கிழமை மாலை புறப்பட்டு ஊருக்குப் போய் இரண்டு நாள் இருந்துவிட்டு, திங்கள் கிழமை காலை புறப்பட்டு நேரே பள்ளிக்கூடத்திற்கு வந்துவிடுவான்.
வாட்ச்மேன் கதிர்வேலு ஹெட்மாஸ்டரின் சைக்கிளைத் துடைத்துக் கொண்டிருந்தார். புதுசு போன்று பளபளவென அதனை அவர் துடைக்கும் அழகே அந்த சைக்கிளை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தும். அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த பி.எஸ்.ஏ சைக்கிள். பஞ்சு போன்ற மஞ்சள் துணி கட்டிய டைனமோ. கண்ணாடி, அழகான சீட் கவர். அதன் பின்புறம் சைக்கிள் துடைக்கும் துணி வைக்க, பிரஸ் பட்டன் வைத்து மூடும், கண்ணாடிக் கூடு சைசுக்கு பிளாஸ்டிக் பை.
பள்ளிக்கூடம் இருக்கும் தெருவில் மிதமான வேகத்தில் அவர் வருவதைப் பார்க்கும் மாணவர்கள் ஒதுங்கி அச்சத்துடன் வழிவிடுவார்கள். கேட்டுக்குள் நுழைந்து சைக்கிளிலிருந்து அவர் இறங்கியதும், கதிர்வேலு அதனை வாங்கி ஓரமாக ஸ்டாண்ட் போடுவார். மணி அடித்து பள்ளிக்கூடம் தொடங்கியதும், வாசல் கேட்டை இழுத்து மூடி விட்டு ஓரமாக உட்கார்ந்து சைக்கிளைத் துடைக்கத் தொடங்கிவிடுவார். ஒவ்வொரு வகுப்பிற்குமான வருகைப் பதிவேட்டை எடுத்துச் செல்வதும், முதல் பீரியட் முடிந்ததும் திரும்ப எடுத்துவந்து அலுவலகத்தில் வைப்பதும் பியூன் முத்துக்குமார் வேலை.
ஹெட்மாஸ்டர் ஆபிஸை விட்டு வெளியில் வருவது தெரிந்தது. கதிர்வேலு சைக்கிளை எடுத்து வந்து அவர் அருகில் நிறுத்தினார். கதிருக்கு பகீர் என்றது. வெளியில் வந்ததும் முதல் பார்வையில் அவன்தான் தென்படுவான். என்ன செய்வதென்றே தெரியவில்லை அவனுக்கு. வேறெங்காவது சென்று நிற்கலாமா என்று நினைத்து, அதனைச் செயல்படுத்துவதற்குள், ஹெட்மாஸ்டர் கேட்டைத் தாண்டி இடது பக்கம் திரும்பிவிட்டார்.
கதிர், அவன் அப்பாவின் முதுகு பக்கமாகச் சற்றே ஒளிந்து நிற்க முயன்றான். ஏன் இந்த பைத்தியக்காரத்தனமான வேலை? அப்பாவை வாசலில் நிற்கச் சொல்லிவிட்டு, வகுப்பாசிரியரிடம் சொல்லிவிட்டு வந்து பணத்தை வாங்கிக் கொடுத்திருக்கலாம். இரண்டு பீரியட் பாடமும் போயிருக்காது. வேலையும் சீக்கிரம் முடிந்திருக்கும். அப்பாவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு உள்ளே போய்விடலாம் என்று அவன் நினைத்தது இப்படித் தப்பாகிவிட்டது.
அரசின் உதவியுடன் இயங்கும் தனியார்ப் பள்ளி அது. சுற்று வட்டாரத்தில் உயர்நிலைப் பள்ளி கிடையாது. இந்தப் பள்ளிக்கூடத்தில் பாடமும் நன்கு சொல்லித் தருவார்கள். அதனால் தூரத்திலிருந்தும் பல மாணவர்கள் இந்தப் பள்ளியில் சேர்ந்திருந்தார்கள். ஐந்து மைல் ஆறு மைல்கள் தள்ளியிருக்கும் ஊர்களிலிருந்து நடந்தே வருவார்கள். பஸ் வசதி குறைவு என்பதுடன், காசும் பல பேருக்குச் சிரமம். மூன்று நான்கு பேராக, ஊர்க்கதை இல்லை வேறு ஏதாவது கதைபேசிக்கொண்டு குழுக் குழுவாக நடந்து வருவார்கள். அலுப்பும் தூரமும் தெரியாது. மாணவிகள் தனியாகவும் அவர்களைத் தொடர்ந்து சற்றுத் தள்ளி, மாணவர்களும் வந்து கொண்டிருப்பார்கள். காலை வேளையில், வியர்வை அரும்பும் முகத்துடன், சிரித்துப் பேசிக்கொண்டே, சற்றே குனிந்த பார்வையில் பின்பக்கம் பார்த்து ’பசங்கள்’ வருகிறார்களா என்று உறுதி செய்துகொண்டு பெண் பிள்ளைகள் நடப்பது தினமும் நடக்கும் காட்சி.
கதிரும் தாத்தா வீட்டிலிருந்து நடந்துதான் வருவான். கிராமத்தைத் தாண்டியதும் இலுப்பைத் தோப்பு, அதற்குள் புகுந்து ஒற்றையடிப் பாதையில் நடந்து வயல் வரப்பில் நடந்து பத்து வயல் தாண்டியதும் சோழனாறு, கரையேறி நடந்து சாலைக்குள் நுழைந்தால் கடைத் தெரு. மாயவரத்திலிருந்து ஆரூர் செல்லும் சாலை அது. ஆற்றின் தென்கரை. திரும்பி மேற்கு நோக்கி மேலநல்லூர் சாலையில் கொஞ்ச தூரம் நடந்தால் இரயில் பாதை. இருப்புப்பாதையைத் தாண்டாமல், இடது புறம் திரும்பினால் நூறு மீட்டரில் பள்ளிக்கூடம்.
உள்ளே நுழைந்தவுடன் வலது புறம் ஒரு சின்ன பிள்ளையார் கோவில். நிறுவனர் கட்டியது. இரண்டு புறமும் கல் சுவரால் கட்டிய இரயில் ஓடு போட்ட விசாலமான வகுப்பறைகள். வாசலுக்கு நேர் எதிரில், மண் தரையில் பூக்களைக் கொட்டி வைத்திருக்கும் பெரிய மரமல்லி மரம். அதற்கு நேர் பின்புறம், குடை விரித்தாற்போல் ஒரு வாதா மரம். அதைத் தாண்டி இடது புறத்தில் ’ட’ வடிவில் வகுப்பறைகள். பின்புறம் சின்ன விளையாட்டு மைதானம். அதைத் தாண்டி வயல்வெளி, மைதானத்தை வலதுபுறம் அணைத்தவாறு அமைந்திருக்கும்.
மைதானத்திற்கு வடபுறம், ஒரு வாய்க்கால் மைதானத்தைச் சுற்றிச் செல்லும். கோடைக்காலத்தில் தண்ணீர் வற்றிவிடும். குறுக்கே நடந்து ஒரு சின்ன சந்தில் நுழைந்தால், கடைத்தெருவிற்குள் சென்றுவிடலாம். பெரும்பாலும் அந்தப் பக்கமிருந்து வரும் மாணவர்கள் வாய்க்காலில் இறங்கித்தான் வருவார்கள். நேரமும் நடையும் மிச்சம். ஆனால், கண்ணப்பன் அப்படி வருவதில்லை. சாலை வழியாகத்தான். அவனோடு நடப்பது சிரமம். அவ்வளவு வேகமாக நடப்பான். குறுக்கு வழியில் வராமல், மெயின் ரோடில் நடந்து பள்ளிக்கு வரும் நாட்களில் அவனையும், அவன் மிகவும் உயரமும்கூட, குள்ளமாக இருக்கும் சேகரனுடன் நடக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும். சேர்ந்து பேசிக்கொண்டே வருவார்கள். வேக நடைதான். கூடவும் குறையவும் செய்யாத ஒரே சீரான வேகம்.
வகுப்புகள் தொடங்கியதும், சற்று நேரங்கழித்து நிர்வாகம் குறித்தோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மரியாதை நிமித்தமாகவோ உடையாரைப் பார்க்க ஹெட்மாஸ்டர் செல்வார். உடையார் அந்தப் பகுதியில் செல்வந்தர். சிவானந்த பக்தர். பார்த்தாலே மரியாதை கொடுக்கத் தோன்றும் முகம். அவர் வசிப்பிடம் உயரமான மதில் சுவர் சுற்றியிருக்கும் வளாகத்திற்குள் அமைந்திருக்கும். அவர் நெல் அரவை ஆலை வைத்து நடத்தி வந்தார். அதனால் மதில் சுவருக்குள் இருக்கும் சிமெண்ட் மைதானத்தில் எப்போதும் நெல் காய்ந்து கொண்டிருக்கும். வயலுக்குப் பூச்சி மருந்து அடிக்க வந்த ஹெலிக்காப்டர் ஒன்றை அந்த மைதானத்தில் இறக்கி, மாணவர்களை அழைத்து அந்த விசித்திரமான எந்திரத் தட்டான் பூச்சியைக் காட்டினார்கள்.
“ஏய்! ஏன் இங்கே நிக்கறே?”.
தலைமையாசிரியரின் கேள்வி நாக்கை கட்டிப்போட்டது. கதிரின் அப்பா மகனைப் பார்த்தார். யார் இவர்?
“சார்..”
“எந்தக் கிளாஸ்டா நீ? ஏன் இங்கே நிக்கறே..”
“சார்.. வந்து..”
வெள்ளை சட்டை, கால் சட்டை அணிந்திருந்தவர் சைக்கிளை விட்டு இறங்காமல் ஒரு காலை ஊன்றியவாறே விசாரித்தார். அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. உள்ளங்கை நனைந்தது. கால் சட்டையில் துடைத்துக் கொண்டான்.
என்ன சொல்வது, என்று விழித்தபோது, அடுத்த கேள்வி.
“ஏண்டா.. நீ எந்தக் கிளாஸ்… இது யாரு?”
“ஒன்பதாம் க்ளாஸ் சார், இது அப்பா.. .
”க்ளாஸுக்குப் போகாம ஏண்டா இங்க நிக்கற படவா…?”
“ஸ்காலர்ஷிப் வாங்கலாம்னு..”
“ஸ்காலர்ஷிப்பா… க்ளாஸுக்குப் போகாம… இங்கு நிக்கற. ம். படவா, இங்கேயே நில்லு.”
“சார்..”
“நான் திரும்பி வர வரைக்கும் இங்கேயே நில்லு.. தொலைச்சுடுறேன் உன்னை…”
சைக்கிளை மிதித்தவாறு தலைமையாசிரியர் தெற்குப்பக்கம் சென்றுவிட்டார்.
கதிரின் அப்பா பயந்து நின்றிருந்தார். வெயிலென்றும் பார்க்காமல் வாய்க்கால் மதகில் அமர்ந்தார். இது என்ன புதிய பிரச்சனை.
பால் இன்ஸ்பெக்டருக்குப் பயந்து வெண்கலச் சொம்பிலிருந்த பாலை வயலில் கொட்டிவிட்டு ஊரைச் சுற்றி பின் பக்கமாக ஓடி வந்து, கொல்லைக்குப் பின்புறம் கற்றாழை வேலியிடுக்கில் தாண்டிக் குதித்து வீட்டுக்கு வந்த நாட்கள் அவருக்கு நினைவுக்கு வந்தன. சிறு விவசாயம்தான். அது சாப்பாட்டிற்குப் போதும். டீக்கடைக்குப் பால் வைக்கும் காசும், இரண்டு மூன்று வீடுகளில் பால் கறக்கிற வேலையும் தான் வீட்டிற்கு வருமானத்தைத் தந்தது. கதிருக்கு அடுத்துப் பிறந்தவனும், அவனுக்கு அடுத்தப்பிறந்த பெண்ணும் சரியாகப் படிக்கவில்லை. நான்காவதாகப் பிறந்தவள் கொஞ்சம் படிக்கிறாள். எப்படியாவது இருவரையும் படிக்க வைத்துவிட வேண்டும் என்று பிரம்மபிரயத்தனம் தான் செய்கிறார். இவனைப் பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திவிட்டால்…
நாமே இவனிடம் உள்ளே போடான்னு சொல்லியிருக்கலாமோ? இவன் பேச்சைக்கேட்டு இங்கே நின்றது தப்பா போச்சே…
கதிருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
தலைமையாசிரியர் திரும்பவந்து என்ன சொல்வாரோ? என்ன நடக்குமோ…ஒழுங்கா வகுப்புக்குப் போயிருக்கலாமோ…. வகுப்பாசிரியர் பால்ராஜ் சாருக்கு அவனைப் பற்றி நல்லாத் தெரியும். நல்லா படிப்பதும் தெரியும். ஏன் இப்படிச் செய்தோம்?
அப்பாவைப் பார்த்தான் கதிர். ”அப்பா..”
“நீ கிளாசுக்கு போயிருக்கலாம். நான் வெளியில இருந்திருப்பேன்.. இப்ப என்ன செய்யறது…?”
அரை மணி… ஆயிற்று. வாட்ச்மேன் கதிர்வேலு காக்கி அரை ட்ரவுசரோடு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். முத்துக்குமரசாமி தீவிரமான முகத்துடன், ஒவ்வொரு வகுப்பிற்குள்ளும் நுழைந்து வருகைப் பதிவேடுகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு வகுப்பில் யாரோ சப்தம் போட்டுப் படிப்பது காதில் விழுந்தது.
இரண்டாவது மணி அடித்து ஓய்ந்தது. பின் பக்கமிருந்த மைதானத்தின் மரத்தடிக்கு ஏழாம் வகுப்பு டீச்சர் தன் வகுப்பு பிள்ளைகளை அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
கதிருக்கு இருப்புக் கொள்ளவில்லை. உள்ளங்கை வியர்த்தது. தெற்கையே பார்த்துக் கொண்டிருந்தான். தலைமையாசிரியர் சைக்கிள் தெரிகிறதா …
அதோ.. அவர்தான்… வேகமும் இல்லாமல்.. மெதுவாகவும் இல்லாமல் மிதமான வேகத்தில் மிக அமைதியான முகத்துடன் ஹெட்மாஸ்டர்…
சைக்கிள் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தது. சைக்கிளை விட்டு அவர் இறங்கும்வரை காத்திருந்துவிட்டு, அப்பாவுடன் மெதுவாகப் பள்ளிக்குள் கதிர் நுழைந்தான். கதிர்வேலு சைக்கிளை ஓரமாக நிறுத்திக் கொண்டிருந்தார்.
படிக்கட்டில் ஏறி தன் அறைக்குள் நுழைந்தார் தலைமையாசிரியர். அலுவலகத்திலிருந்து ரமணி சார் கையில் நோட்புக்குடன் அவர் அறைக்குள் நுழைந்தார். அவர் ஏதோ விவரம் கேட்கப் பவ்யமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் ரமணி. அவனுக்கோ இருப்புக் கொள்ளவில்லை.
பள்ளியில் சேர்ந்ததிலிருந்து இதுவரையிலும், எப்போதாவது பணம் கட்ட போனதைத் தவிர, அலுவலகத்திற்குச் சென்றது கிடையாது. அலுவலக ஜன்னல் வழியாகத்தான் அனைத்தும்.
எதைப் பார்த்தாலும் இப்போது பயமாகவே இருந்தது. யார், என்ன கேள்வி கேட்பார்களோ?
“என்னப்பா.. எதற்கு வந்திருக்கீங்க?” எதிர்பார்த்த கேள்வி வந்துவிட்டது. ரமணி சார் தான் கேட்டார்
”ஹெட்மாஸ்டரைப் பாக்கணும். வெயிட் பண்ணச் சொல்லியிருந்தார்”
கேட்டவர், உள்ளே சென்று ஏதோ பேசிவிட்டு, திரும்பவும் வெளியில் வந்து “உள்ளே போங்க” என்றார்.
பயந்து கொண்டே அப்பாவுடன் கதிர் உள்ளே நுழைந்தான். முதலில் கண்ணில் பட்டது மேஜையின் மேலிருந்த பிரம்புதான்.
தினமும் ஒருமுறை பள்ளிக்கூடத்தை அவர் சுற்றிவருவார். பெரும்பாலும் வகுப்பறைகளை எட்டிப் பார்க்கமாட்டார். ஆனால், திடீரென்று ஏதாவது ஒரு வகுப்பில் நுழைந்து ஜன்னலோரம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை, ”படவா.. வேடிக்கையா பார்க்கறே. பாடத்தைக் கவனிடா…” என்று ஒரு திட்டு போட்டுவிட்டு தொடர்ந்து நடக்க ஆரம்பித்துவிடுவார். அந்தப் பிரம்பு அவர் கையில் எப்போதும் இருக்கும். லேட்டா எவனாவது வந்து அவர் கண்ணில் மாட்டினால், கை பழுத்துவிடும்.
அவர் நாற்காலிக்கு நேர் பின்புறம் சிவானந்தரின் பெரிய படம். பக்கத்தில் காந்தி. இந்தப் பக்கம் ஒரு பீரோ மேல் உலக உருண்டை. மேஜையில் ரூல் தடி. பேனாக்கள்.
”சொல்லுடா…”
”சார்… ஸ்காலர்ஷிப் வாங்கி அப்பாட்ட…”
சுளீர்…
ஒருகணம் தலை சுற்றியது. எப்போது அவர் எழுந்து அருகில் வந்தார், கையை உயர்த்தினார். கன்னத்தில் அறைந்தார் என்பதே அவனுக்குத் தெரியவில்லை.
அவனை அறியாமல் கை கன்னத்தைத் தடவியது. அவமானத்துடன் சற்றே திரும்பி கதிர் அப்பாவைப் பார்த்தான். ஏன் அவரை இன்று அழைத்து வந்தோம்? அவன் கண்களை விட அவர் கண்களில் அதிகம் நீர். அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
”படவா.. பள்ளிக் கூடத்துக்கு படிக்கத்தான வந்த.. அப்புறம் ஏன் வெளில நின்ன”
”சார் .. இல்ல.. சார்.. பணத்த வாங்கிக் கொடுத்துட்டு கிளாசுக்குப் போகலாம்னு..”
”படவா.. ஸ்காலர்ஷிப்பும் கிடையாது.. ஒன்னும் கிடையாது.. படிக்கிறவங்களுக்குத் தான் அது…”
அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கதிரின் அப்பாவிற்கு, வயலில் விளையாடப் போன பையன் கையொடிந்து கதறிய போது தூக்கிக் கொண்டு சுந்தரம் ஆஸ்பத்திரிக்கு ஓடியது நினைவுக்கு வந்தது. ஒருமுறை மாலை நேரத்தில் பக்கத்துக் குட்டிச்சுவரிலிருந்து குதித்து இடது காலில் கருவ முள்ளை ஏற்றிக்கொண்டான். பாதத்தின் இரண்டாவது மூன்றாவது விரலுக்கு நடுவில் ஏறிய முள், காலுக்கு மேற்புறம் நீட்டிக் கொண்டிருந்தது. எதிர் வீட்டுத்திண்ணையில் உட்கார வைத்து முள் வாங்கியால் எடுத்துப்பார்த்து முடியவில்லை. தூக்கு, சுந்தரம் ஆஸ்பத்திரிக்கு. குளோரபார்ம் கொடுத்துக் கிழித்து முள்ளை எடுத்தார்கள். எதிர்வீட்டுச் சித்தப்பாவின் சைக்கிளில் உட்கார வைத்து வீட்டிற்கு பையனை அழைத்து வந்தவர், நாவல் குளக்கரை மணலில், சைக்கிளை பாலன்ஸ் பண்ணத் தெரியாமல், இரண்டுபேரும் கீழே விழுந்தனர்.
கிராமத்து விவசாயியின் அப்பாவி மனது, பையன் அடிவாங்கியதைப் பார்த்து எதற்கு இப்படி என்று கேள்வி கேட்டது? இந்த உதவித் தொகையை அடிவாங்கியா வாங்கணும். நம்மால் சம்பாதிக்க முடியாதா?
இடையில் வேறொரு கிளார்க் ஃபைல் ஒன்றை எடுத்துவந்து கையெழுத்து வாங்கிச் சென்றார். அவன் கன்னத்தில் விழுந்த அந்த அறை எவர் காதிலும் விழுந்ததாகவோ அல்லது எவரையும் எதுவும் செய்ததாகவோ தெரியவில்லை. அல்லது வெளியில் காட்டாமல் இருக்கிறார்களா…? அனைத்தும் இயல்பாக நடந்து கொண்டிருந்தன.
”எந்தக் கிளாஸ்டா நீ…”
”ஒன்பதாம் வகுப்பு, சி செக்ஷன்..சார்..”
”ரமணி, யார் அந்தக் கிளாஸ்… அவரைக் கூப்பிடு..”
”படிக்கறது இல்ல.., கிளாசுக்கு வரதில்லை… எதுக்கு உனக்கெல்லாம் ஸ்காலர்ஷிப்.. படவா .. ”
வகுப்பு ஆசிரியர், பால்ராஜ் உள்ளே வந்தவர், கதிரின் அப்பாவைப் பார்த்ததும், ”என்ன சின்னப்பிள்ளை இங்க.?” என்றவர், தலைமையாசிரியரைப் பார்த்து வணக்கம் சொன்னார்.
கதிரின் அப்பா அவரைப் பார்த்து கையை உயர்த்தினார். அவர் வீட்டில் அப்பா பால் கறக்கிறாரோ? முன்னமேயே எப்படித் தெரியும்? அவர் டவுனிலிருந்து டூவீலரில் தினமும் பள்ளிக்கூடத்திற்கு வருகிறவர்.
அவனையும் பார்த்த பால்ராஜ் சார், சூழலில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தவராய், சற்றே நிதானித்து, ”சார் கூப்பிட்டிங்களா” என்றார்.
”என்ன பால்ராஜ்.. இவன் உங்க கிளாசா?”
”ஆமாம் சார்…”
”கிளாஸ் அட்டெண்ட் பண்ணாம வெளியில் நிக்கறானே… பாக்க மாட்டீங்களா?”
”என்னடா…”
”சார்.. அப்பா கிட்ட ஸ்காலர்ஷிப் பணம் வாங்கி கொடுத்துட்டு அடுத்தப் பீரியட் வரலாம்னு..”
”படவா..” சொல்லிக் கொண்டே ஓங்கிய கையுடன் அருகில் வந்த தலைமையாசிரியர், “படிக்கறதெல்லாம் இல்ல… எத்தனாவது ரேங்க்டா நீ?” என்று கேட்டார்.
அடிக்குப் பயந்து சற்றுப் பின்னுக்கு நகர்ந்த கதிர், ’ஃப்ர்ஸ்ட் ரேங்க் சார்..” என்றான்.
”படவா… பொய்யா சொல்ற”
”இல்ல சார்..”
இடையில் புகுந்த பால்ராஜ் சார், ”ஆமாம் சார்.. ஃப்ர்ஸ்ட் ரேங்க்தான்.. நல்லா படிக்கிற பையன்தான். ஏன்டா இப்படி செய்த?.”
ஒரு கணம் யோசித்த தலைமையாசிரியர், மேஜையருகில் சென்றார்.
காலிங் பெல்லை தட்டிவிட்டு ’’ ரமணி..!” என்று கூப்பிட்டார்.
வேகமாக வந்த ரமணி, “ சார்..”
“இந்தப் பையனுக்கு பணத்தைக் கொடுத்தனுப்பு… ரிஜிஸ்டர் ரெடியா இருக்கா..’
”ஆமா சார்..”
கையெழுத்துப் போட்டு நிமிர்ந்தவர்.. “போடா வாங்கிக்க,.. இனிமே இப்படியெல்லாம் செஞ்ச… படவா பிரம்பு பழுத்துடும்..”
உள்ளிருந்து கிளார்க் ரமணி கூப்பிட்டார். தலைமையாசிரியருக்கும் பால்ராஜ் சாருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அப்பாவும் மகனும் ஆபிஸ் ரூமிற்குள் நுழைந்தனர்.
ரிஜிஸ்டரின் அருகில், மூன்று பத்து ரூபாய் நோட்டுகள். அதைப் பார்த்த, இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த அந்த விவசாயி இதற்கா இந்த அடி என்று நினைத்துக் கொண்டார். கதிரின் அப்பாவிடம் நோட்டுகளைக் கொடுத்த ரமணி சார், “இதுல கையெழுத்துப் போடுங்க” என்றார்.
அப்பாவைப் பார்த்தான் கதிர். பாவம் இவரை இங்கு அழைத்துவந்து அவமானப்படுத்தி விட்டோமே என்று நொந்துகொண்டான். கைகாட்டிய இடத்தில், மகனின் பெயருக்கு எதிரில், ஒவ்வொரு எழுத்தாக, ‘சி.ன்.ன.ப்.பி.ள்.ளை. என்று தன் பெயரை மெதுவாக எழுதினார். பண்படுத்தினால் தானே விவசாயம் என்று தனக்குள் நினைத்துக் கொண்டிருப்பாரோ?
Like this:
Like Loading...