நகல்

கார்த்திக் கிருபாகரன் 

மாலை நேரம் ஆகிவிட்டது.   மலையில் ஏறிக் கொண்டிருந்த கபிலனுக்கு இருட்டுவதற்குள் பாதுகாப்பாக தன் வீட்டை சென்றடைய வேண்டுமே என்ற கவலை. முடிந்த அளவு விரைவாக மலையேறிக் கொண்டிருந்தார்கள்.  கபிலனின் நடை வேகத்தை மலையின் ஏற்றமோ,  பாதையில் கிடந்த சிறு கற்களோ குறைக்க வில்லை. காரணம் அவன் இந்த பகுதியிலே வாழ்ந்து பழகியவன். ஹரிக்கு சற்று சிரம்மாகவே இருந்தது. என்ன தான் நடையில் விரைவைக் காட்டினாலும்,  மனதை மயக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகும், நறுமணமும்,குளிர்ந்த காற்றும் அவ்வப்போது ஹரியை தாமதபடுத்தி கொண்டிருந்தன.

திரும்பிய திசை எல்லாம் இயற்கையின் வளம் கொட்டிக் கிடந்தது.  உயரமான மரங்கள்.  மலர்களிலோ விதவிதமான மலர்கள். எத்தனை வண்ணங்கள். எத்தனை மணங்கள். பட்டியலிட்டு முடியாது. எத்தனை முறை பார்த்தாலும் இந்த அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. இப்படி காணாததை கண்டவன் போல மலையின் அழகை வியந்து கொண்டே முடிந்த வரை விரைவாக கபிலனுடன் ஹரி நடந்து கொண்டிருந்தான்.

குளிர் காலம் என்பதால்,மாலை ஐந்து மணிக்கெல்லாம் பனி சூழ தொடங்கி, இருட்ட ஆரம்பித்தது.சற்று நேரத்தில் மழை பெய்யும் நிலை உருவானது.

ஹரியின் அப்பா அரவிந்தனை நினைத்து கபிலன் பயப்பட ஆரம்பித்தான். ஹரியை வெளியே கூட்டி வந்தது அரவிந்தனுக்கு தெரியாது.

சிறு வயதிலிருந்து பழகிய நண்பன் ஹரிக்கு,மலை,தோட்டம் என சுற்றிய பழைய நினைவுகள் துளியும் ஞாபகம் இல்லாதது கூட சிறிது வருத்தம் இருந்தாலும், செல்லும் வழியில் சுற்றி திரிந்த சில இடங்களை கபிலன் காட்டிய போதும் ஹரிக்கு எதுவும் நினைவில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் நினைவு கொண்டு வர முடியாமல் போனது. அதுவும் மலை பகுதிக்கு ஹரியை அழைத்து கொண்டு வந்ததிலிருந்து, இப்போது செல்லும் வரை அவனது நடவடிக்கைகளை கபிலன் கவனித்து பார்த்ததில்,”இது நம்ம ஹரி இல்ல. முற்றிலும் மாறி போயிட்டான்” என்ற மனநிலையே அழுத்தமாக தோன்றியது. எது எப்படியோ!, இருட்டுவதற்குள் வேறு பகுதிக்கு ஹரியை பாதுகாப்பாக அழைத்து செல்ல நினைத்து வேகமாக கபிலன் கூட்டி சென்றான்.

குறிஞ்சிமலர் ஊருக்கு ஒதுக்குபுறமாக இரண்டு ஏக்கரில் உள்ள பூஞ்சோலை பங்களா மற்றும் அதன் சுற்றிய தோட்டம் அதன் பாதுகாப்பிற்கு சுற்றி எழுப்பபட்டிருக்கும் வேலி போன்ற தடுப்புச்சுவர். இதனை சிறு வயதிலிருந்தே கபிலன் தான் பாராமரித்து வருவான். வெளிநாட்டில் இருக்கும் முதலாளி டாக்டர் அரவிந்தன் வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் வந்து தங்கிவிட்டு போவார். அவர் அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு பெரிய ஆராய்ச்சியாளர். அவரது மனைவி மெலினா அவரோடு ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிகிறார். இருவரும் காதல் திருமணம் செய்து அமெரிக்காவிலே வசித்தார்கள். மகன் ஹரியும் பிறந்து அங்கயே வளர்ந்து படித்து கொண்டிருந்தான். வெள்ளை நிறம்,மாநிற தலைமுடி,நடுத்தர உயரம்,20 வயதுள்ள இளைஞன் கார் ஓட்டுவதிலிருந்து,குதிரை சவாரி,நீச்சல் என அனைத்திலும் பயிற்சி பெற்றவன் ஹரி. சிறு வயதிலிருந்து ஆண்டுதோறும் அமெரிக்காவிலிருந்து, ஊருக்கு வந்த போது கபிலனுடன் குதிரை சவாரி செய்வது, காரில் மலைபகுதிகளில் சுற்றிய நாட்களும் உண்டு. ஆனால் அந்த நேரங்களில் அரவிந்தன் பங்களாவில் ஒரு அறையில் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார். இவரின் ஆராய்ச்சி,புதிய மருந்து கண்டுபிடிப்பு அமெரிக்காவில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த கண்டுபிடிப்புகளை தனியார்க்கு விற்றதில் பெரும் பங்கு லாபம் இவருக்கு கிடைத்து கொண்டிருக்கிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பு,நடு இரவில் பூஞ்சோலை பங்களாவிற்கு தனியாக ஒரு பெரிய பெட்டியோடு வந்து தங்கினார். அவர் வந்த போது உடன் மனைவியும்,மகன் ஹரியும் இல்லை. கடந்த மூன்று மாதங்களில் கபிலனை ஆராய்ச்சி அறைக்குள் நுழையவே அரவிந்தன் அனுமதிக்க வில்லை.

ஒரு சமயத்தில் கபிலன் பங்களாவை சுற்றிய தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது,ஆராய்ச்சி கூட அறையில் ஒரு உருவம் இருப்பது போன்றும்,அது உலவுவது போன்றும் ஜன்னல் வழியாக உருவத்தின் நிழல் தென்பட்டது. “திருடன் எவனோ,பங்களாவுக்குள் நுழைஞ்சுட்டான் போல” என்று மெதுவாக ஜன்னல் பக்கம் போய், ஜன்னல் கதவை திறந்து பார்த்தான். சிறு வெளிச்சம் அந்த ஜன்னல் வழியாக வருவதை பாரத்து,அந்த உருவம் ஜன்னல் பக்கம் வந்து நின்றது. எதற்கும் தயாராக கையில் தடி ஒன்றை வைத்து கொண்டே ஜன்னல் வழி கபிலன் பார்த்தான். ஜன்னல் வழியாக கபிலன் முகத்தை பார்த்த அந்த உருவம் பயந்து அலறியது. சட்டென்று நடுங்கியபடி ஜன்னல் வழி அந்த உருவத்தின் முகத்தை பார்த்த கபிலனுக்கு அதிர்ச்சியாகி போனான். நன்றாக பார்த்த போது தான், “அது ஹரி” என்ற முடிவுக்கு வந்தான். அவனை பார்த்த சந்தோஷத்தில், “டேய் ஹரி.எப்புடி இருக்க?,இங்க எப்ப வந்த ?” என்றான்.

அவன் எதுவும் பேசாமல் ஜன்னல் அருகே வந்து, “நீங்க யாரு” என்றான்.

“டேய்,என்ன தெரியலையா ?, நான்தான் கபிலன். உன் நண்பன்டா. உன்ன ஏன் டாக்டர் அடைச்சு வச்சுருக்காரு” என்றான்.

“என்ன சொல்ற ?, நான் அடைபட்டு கிடக்குறேனா ?” என்று குழப்பத்தில் ஹரி கேட்கும் போது,அறை கதவை திறந்து அரவிந்தன் உள்ளே வந்தார். அவர் வருவதை கவனித்தபடியே அமைதியாக நின்றான் ஹரி.

ஜன்னல் கதவு திறந்து,வெளிச்சம் வந்து கொண்டிருப்பதை கவனித்த அரவிந்தன் கோபபட்டு, “உன்ன யாரு,ஜன்னல் கதவ திறக்க சொன்னது. ஆபத்து மூடியே வை” என்று திட்டியபடி கதவை மூடினார். அவர் மூடிய அந்த நொடியில்,”கபிலன் எங்கே” என்று ஹரி தேடி பார்த்தான். அவன் அரவிந்தன் அறைக்குள் நுழைவதை பார்த்த போதே,அங்கிருந்து ஓடி, பங்களா முன் பகுதிக்கு வந்து சேர்ந்து,”ஹரியை ஏன் மறச்சு வச்சுருக்காரு. ஏதோ மர்மாம இருக்கு” என்று யோசித்தபடி எதுவும் தெரியாதவன் போல கபிலன் வேலையை தொடர்ந்தான். பின்பு எப்போதும் ஆராய்ச்சி அறையை அரவிந்தன் பூட்டிய படியே வைத்திருந்தார். அவர் இல்லாத போதும், இருந்தும் கவனிக்காத போதும் ஆராய்ச்சி அறை ஜன்னல் வழியாக ஹரியிடம் பல நாட்கள் பேச தொடங்கினான்.

“என்னய்ய ஞாபகம் இல்லைய்யா ?,உங்க அம்மாவுக்கு என்னாச்சு ?” என்றான் கபிலன்.

“எதுவும் தெரியலை.இதுக்கு முன்னாடி இங்க வந்த ஞாபகம் இல்ல” என்றான் ஹரி.

“ஒருவேளை இவனுக்கு எதாவது விபத்து நடந்து போய் மறந்து போய்ட்டானா ?” என்று நினைத்தபடி “ஏன் டாக்டர் எதுவும் சொல்ல மாட்டிகிறார் ?” என்றும் நினைத்தான்.

பலநாட்கள் ஜன்னல் வழியாக இருவரும் சந்தித்தனர். ‘எதற்கு அறையில் அடைந்து கிடக்கிறான். அவன் அம்மா பற்றிய ஞாபகம்’ என்று எதுவும் இல்லாமல் ஹரி கிடப்பது கபிலனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இன்று சந்தித்து பேச ஜன்னல் கதவை கபிலன் திறக்க, ஹரியும் வந்து,”என்னய வெளிய கூட்டிட்டு போக முடியுமா?,நீ சொல்லுற வெளி உலகம்,மலை,காடு எல்லாம் பார்க்கனும்” என்றான்.

“கொஞ்ச காத்திரு. நீ எதுக்கு இப்படி அடைஞ்சு கிடக்குற ?, உன் அம்மாவுக்கு என்னாச்சுன்னு நான் முதல்ல தெரிஞ்சுக்குறேன். அப்பறம் உன்ன சுதந்திரமா சுத்த விடுறேன்” என்று கபிலன் சொல்லி கொண்டிருக்க, சட்டென்று டாக்டர் அறைக்குள் வந்தார். ஜன்னலை பூட்டி விட்டு,ஒன்றும் தெரியாதவன் போல தள்ளி சென்று நின்றான் ஹரி. வெளியிலிருந்து ஐன்னலை மெல்ல திறந்து சிறு துவாரம் வழியாக நடப்பதை கபிலன் கவனித்தான். உள்ளே வந்தவர் ஹரிக்கு ஊசி போட்டு,அவனை படுக்க வைத்தபடியே ஸ்கேன் செய்து, அவனது இரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்து கொண்டே,செல்போனில் ஒருவரிடம் பேசினார்.  “சோதனை வெற்றிகரமா முடிய போகுது. இந்த சோதனையை என் மனைவிக்கு பண்ணி தோல்வியில முடிஞ்சது. இப்ப அப்படியில்ல. இன்னும் ஒரு நாள் தான் வெற்றிகரமா முடிய போகுது. எல்லாம் உன்னால தான். ரொம்ப சந்தோஷம்” என்று டாக்டர் பேசியது துவாரத்தின் வழியாக கவனித்த கபிலனுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. “அடப்பாவி புதிய மருந்துகளை கண்டுபிடிக்க பொண்டாட்டி மேல,மகன் மேல செலுத்தி சோதனை பண்ணுறனே!” என்று கடும் கோபமாக அரவிந்தனின் செய்கைக்கு முடிவு கட்ட யோசித்தவாறு முன் பகுதிக்கு வந்தான்.

ஆராய்ச்சி அறையை பூட்டி விட்டு,பெரு மகிழ்ச்சியோடு வெளியே வந்த அரவிந்தனிடம், “டாக்டர் என்னாச்சு,இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க ?” என்று பல்லை கடித்தபடியே கபிலன் கேட்டான்.

“என் வேதனை, துக்கம் எல்லாத்துக்கும் மருந்து கிடைக்க போகுது” என்றார்.

டாக்டரின் செயல் கபிலனுக்கு எரிச்சலை உண்டாக்கியது. எதையும் வெளிகாட்டாமல்,”நானும் உங்க கிட்ட மெலினா அம்மாவும்,ஹரியும் ஏன் வரலன்னு கேட்டேன். ஆனா நீங்க பதிலே சொல்ல மாட்டிறீங்கள!” என்றான்.

“அதுபத்தி அப்பறமா சொல்லுறேன்” என்று அங்கிருந்து தனது அறைக்கு சென்றார்.

கபிலனுக்கு டாக்டர் பேசிய விதம் பல எண்ணங்களை ஏற்படுத்தியது. “ஒருவேளை மருந்துவ சோதனையில் மனைவியை கொன்றிருப்பாரோ?” என்று நினைத்தான். பின் அதே மருந்தை மகன் மேல செலுத்தி சோதனை செய்யுறாரு போல,இந்த மருந்துனால அவன் பழைய நினைவுகளை இழந்திருப்பான் போல” என்ற பலவற்றை சிந்திக்க ஆரம்பித்தான்.

டாக்டர் அறையில் இருப்பதை உறுதி செய்து விட்டு,வேகமாக பின்புற ஆராய்ச்சி அறை பக்கம் போய் அறையின் மாற்று சாவி மூலம் திறந்து பார்த்தான். கதவு திறக்கவே உள்ளே சென்று பார்த்தான். சுருண்டு படுத்திருந்த ஹரியின் உடல் வெளிர் நிறமாக இருந்தது. அவன் வலியால் துடித்து,முனங்கிய படி கிடந்தான். அப்போது அறை கதவை திறந்து டாக்டர் உள்ளே வந்தார். அவரை பார்த்தவுடன்,அவர் கண்ணில் படாமல்  மெதுவாக மேஜை பகுதியில் கீழ் ஒளிந்தான். திரையால் மூடிய அந்த பகுதியில்,சிறிய பகுதியை திறந்தபடி நடப்பதை கபிலன் கவனித்தான். ஹரியை சோதனையிட்ட டாக்டருக்கு பெரும் மகிழ்ச்சி. மீண்டும் செல்போனில் ஒருவருக்கு பேசினார். ” ஹலோ மிஸ்டர் ஜென்” என்று அவர் ஆங்கிலத்தில் வெகு நேரம் பேசியது கபிலனுக்கு ‘என்ன பேசுகிறார்’ என்று புரியாமலே இருந்தது. வெகு நேரம் பேசிய பின்,மீண்டும் வேறு ஒருவருக்கு பேசினார். “நான் ஜெயிச்சுட்டேன்.என் புள்ளய்ய வச்சு உருவாக்குனது. இப்ப எனக்கு பெரிய புகழ் வர போது,ராயல்டி கிடைக்கும். அந்த குறிப்புகளை மெயில் பண்ணுறேன். சீக்கிரமா தயார் படுத்துங்க” என்று குதுகலத்தோடு பேசியதும்,ஹரியின் மோசமான நிலையையும் மறைவாக இருந்து கவனித்த கபிலனுக்கு டாக்டர் மீது கோபத்தை அதிகரித்தது. ‘டாக்டர் மோசமானவர்ன்னு நினைக்கவே இல்ல. ஹரியை காப்பாத்தி,டாக்டர் பணத்தாசைக்கு முடிவு கட்டுறேன்’ என்று நினைத்தபடியே பதுங்கி இருந்தான்.

டாக்டர் கதவை அடைத்து வெளியே செல்ல,மறைவிலிருந்த கபிலன் வெளியே வந்து,ஹரியை எழுப்பினான். அவனின் கை,விரல்,உடம்புகளில் மாட்டியிருந்த ஊசி குழாய்களை அகற்றி,குடிக்க தண்ணீர் கொடுத்து,அவன் நிதானத்தை அடைந்தவுடன், “உன்ன வச்சு உங்கப்பா பணம் சம்பாதிக்க போறாரு. உங்கம்மாவுக்கும் ஏதோ! மருந்து ஊத்தி சாகடிச்சுருப்பாரு. இப்ப உன் மேல மருந்து ஊசி போடவும், உனக்கு பழசு மறந்து நிக்கிற. இங்க இருந்தா! உன்னையும் கொன்னுடுவாரு. வா நான் உன்ன காபாத்துறேன்” என்றான் கபிலன்.
கண்ணீரோடு கபிலனை சில நொடி கட்டி பிடித்து,பின் அவனோடு ஹரி புறப்பட தயாரானான். மெதுவாக அறை கதவை திறந்து, டாக்டர் கவனிப்பதற்குள் வெளியே வந்து மலை பகுதிக்குள் ஓடினார்கள்.

ஹரியை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து கொண்டு போக, கரடுமுரடான ஆபத்தான பாதை வழியாக பயனித்து,வேறு பகுதியில் உள்ள தன் வீட்டிற்கு ஹரியை கபிலன் அழைத்து கொண்டு பயணமானான்.

பங்களாவில் சிறுது நேரம் கழித்து  அரவிந்தன் கவனித்த போது,ஆராய்ச்சி அறை கதவு திறந்திருந்தது, உள்ளே சென்று பார்த்த போது ஹரி இல்லாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “டேய் கபிலா!,கபிலா!” என்று கத்தியபடி பங்களாவை சுற்றி கபிலனையும்,ஹரியையும் தேடினார்.

இருட்டப் போகும் நேரம். எங்கு தேடுவது,”ஹரி எங்கு போனான்” என்ற குழப்பம், தற்காப்புகாக துப்பாக்கியையும் எடுத்து, வெளியே வந்து டார்ச் விளக்கு அடித்தபடியே தேட போனார். சுற்றி முற்றி தேடி இருட்டியது.

அந்த நேரத்தில்  கரடுமுரடான மலை பாதையில் செல்வது சிரமத்தை ஏற்படுத்தியது. ‘எந்த பக்கம் போவது’ என்ற பாதை தெரியாமல் தவித்தார். சட்டென்று அந்த பக்கமாக ஒருவர் வருவது தென்பட,அவரிடம், “சார்,இந்த பக்கமா ஒரு இருபது வயசு பையன் போறத பார்த்தீங்களா?” என்றார்.

அவர் தன் கை விளக்கினை உயர்த்தி பிடித்து அரவிந்தனின் முகத்தை பார்த்து, “பூஞ்சோலை பங்களா டாக்டர்ங்களா ?” என்றார்.

“ஆமாங்க. நீங்க யாரு” என்று பதட்டத்தோடும்,குளிர் நடுக்கதோடும் அரவிந்தன் சொல்ல, “ஏதோ,பிரச்சினை” என்று புரிந்து கொண்டவர், “நான் வீரா.உங்க பங்களாவுல வேல பாக்குற கபிலனுக்கு சொந்தம்” என்று சொல்லி,சிறிது யோசித்து,”கபிலன் கூட ஒரு பையன் போறத பார்த்தேன். எதாவது பிரச்சினையா” என்று சந்தேகமாக கேட்டார்.

“அட கடவுளே! கபிலன் கூடவா” என்று நினைத்து,அவரிடம் “எங்க போனாங்க” என்றார் அரவிந்தன்.

“எங்க போவானுங்க இந்த மலைக்கு பின்னால கபிலன் வீடு இருக்கு. அவன் அங்க தான் அந்த பையன கூட்டிட்டு போயிருப்பான்” என்றார் வீரா.

“சரி,நான் இப்ப உடனே, அங்க போகனும்.எனக்கு வழி காட்டுங்க” என்றார் அரவிந்தன்.

“டாக்டர், அந்த வழி அவ்வளவு ஈஸி இல்ல. அவனுங்க போய் இரண்டு மணி நேரத்துக்கு மேல இருக்கும். எதாவது ஜீப் இருந்தா கொண்டு வாங்க. ரோட்டு வழியா மலைக்கு அந்த பக்கம் போகலாம். அது சீக்கிரம் போகலாம்” என்று வீரா சொல்ல, “சரி வா” என்று அவனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து,பங்களாவுக்கு வந்து தனது காரை எடுத்து கொண்டு,உடன் வீரா வழிகாட்ட, கபிலன் வீடு நோக்கி போனார்கள்.

பல மணி நேரம் குறுக்கு பாதை வழியாக நடந்து வந்து,ஹரியை தன் வீட்டிற்குள் அழைத்து வந்தான் கபிலன்.

ஊரை விட்டு தள்ளி காட்டு பகுதிக்கு முகப்பில் இருந்த ஓட்டு வீடு. வீட்டை சுற்றி வேலி போட்டு வன விலங்குகள் ஆபத்தில்லாத வகையில் பாதுகாப்பாக வைத்திருந்தான்.

பல மாதங்கள் கழித்து வீட்டிற்குள் வருவதால், அட்டை பூச்சிகள், விஷ பூச்சிகள், பாம்புகளும் கிடந்தன.அதை பார்த்த ஹரி பயந்து நின்றான்.

“பயப்புடாத, இப்ப சுத்தம் பண்ணிருவேன்” என்று சொல்லியவாறு, உள்ளே இருந்த நாற்காலியை அவனுக்கு துடைத்து போட்டு, “இதுல கொஞ்ச நேரம் உட்காரு. இப்ப சுத்தம் பண்ணிடுறேன்” என்று உள்ளே சென்று வேகமாக சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

பாம்புகளை அடித்து,பூச்சிகளை நசுக்கி வெளியே போடுவதை பாரத்த ஹரி சற்று பயந்தான். லேசாக மழை தூரல் விழ ஆரம்பிக்க, “உள்ள வா,அவ்வளவு தான்” என்று சந்தோஷமாக கபிலன் அழைக்க,சட்டென்று கார் வந்து நின்றது. கார் விளக்கு வெளிச்சத்தில் கண் குசியபடி, “யாரென்று” ஹரி கவனிக்க,கார் சத்தத்தை கேட்டவுடனே, “இது நம் முதலாளி டாக்டர் அரவிந்தன் கார் சத்தம். அவர் தான் வந்துட்டாரு” என புரிந்து, காரை வேடிக்கை பார்த்த ஹரியை இழுத்து, “வா ஓடி போயிடலாம். உங்க அப்பா உன்ன கொன்னுடுவாரு” என்று கத்தினான்.

“டேய்,ஓடாத நில்லுடா” என்றவாறு வலது பக்க கார் கதவு திறந்து அரவிந்தன் இறங்க, இடது பக்க கதவு திறந்து இறங்கி,வேகமாக ஓடி ஹரி கையை பிடித்தான்.
“வீரா அண்ணே! எங்கள விடுங்க” என்றவாறு கபிலன் அவரை பார்த்தான்.
“ஏன்டா! லூசு,டாக்டர் மகனை இப்புடியா கூட்டிட்டு வருவ ?, அந்த மனுஷன் பதறிட்டாரு” என்றபடி ஹரியின் கை பிடித்து டாக்டரிடம் அழைத்து போனான் வீரா.

“அண்ணே! அவரு ஹரிய கொன்னுடுவாரு” என்றான் கபிலன்.

“பெத்த புள்ளைய அவரா கொல்லுவாரு ?” என்றான் வீரா.

பதட்டத்தில், “ஆமாண்ணே!,அவர் புதுசா மருந்து கண்டுபிடிக்கிறேன்னு பொண்டாட்டிய கொன்னுட்டாரு. இப்ப இவன் மேலயும் ஊசி போட்டு,பழச மறக்கடிச்சுட்டாரு. இப்ப இவன எங்கயோ,விக்க போறாரு.அதான் இவன காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்தேன்” என்று கபிலன் வீராவிடம் சொல்லி கொண்டிருக்க, வேகமாக வந்து கபிலனின் கன்னத்தில் ஓங்கி இரண்டு அறைவிட்டு, “முட்டா பயலே! எதுவும் தெரியாம, இப்படி பண்ணாத.உனக்கு எது சொன்னாலும் புரியாது” என்று கபிலனை திட்டி, ஹரியின் கையை பிடித்து இழுத்து கொண்டு கார் நோக்கி நடந்தார்.

“டாக்டர் ஹரிய விடுங்க” என்று ஓடி பிடிக்க முயல, தூரல் மழையில்,சட்டென்று வழுக்கி அவர்கள் முன்னால் விழுந்தவாறே டாக்டர் காலை பிடித்து நகர முடியாதபடி இறுக்கினான் கபிலன்.

நடப்பதை மழையில் நனைந்தவாறே, புரியாமல் வீரா வேடிக்கை பார்க்க, “அப்பா,என்ன விட்டுருங்க” என ஹரி அழுது, கையை விட சொல்லி உதறினான்.

“ஹரி, இந்த கிறுக்கன் பேச்சை கேட்டு தப்பா முடிவு பண்ணாத.  சொன்னா கேளு” என்று காலால் ஓங்கி கபிலனை உதை உதைத்து தள்ளி, ஹரியின் கை பிடித்து காரில் ஏற்றி, கதவை அடைத்து பூட்டினார் அரவிந்தன்.

அவன் என்ன செய்தென்று தெரியாமல் கண்ணீர் வடித்தபடி, ஹரி உள்ளே இருந்தான்.

சுருண்டு விழுந்த கபிலனை, வீரா வேகமாக வந்து தூக்கினான்.
கபிலன் எழுந்து, வேகமாக ஓடி, டாக்டரை  தாக்கி தள்ளினான்.பின் கார் கதவை திறக்க முயன்று முடியாமல் போக, பக்கத்திலிருந்த ஒரு மரகட்டை எடுத்து வந்து பூட்டியிருந்த கார் ஜன்னல் கதவை கட்டையால் அடித்து நொறுக்கினான்.

தட்டுதடுமாறி எழுந்த டாக்டர், கோர்ட் பாக்கெட்டிலிருந்த துப்பாக்கி எடுத்து கபிலன் கையில் சுட, அவன் கட்டையை கீழே போட்டு வலியால் துடித்தான்.
பின்னிருந்து வீரா கட்டையால் ஓங்கி டாக்டர் தலையில் அடிக்க, கலங்கி டாக்டர் கீழே விழுந்தார்.

வேகமாக ஓடி, கீழே விழுந்து கிடந்த கபிலனை தூக்க ஓடினான் வீரா.

மழை தூரலில் தலையில் அடியால் ஏற்பட்ட இரத்ததமும் கலந்து மண்ணில் விழுந்து ஓட,கீழே விழுந்தபடியே, அரவிந்தன் லேசாக தலையை பிடித்தவாரே மெல்ல, துப்பாக்கியால் சுட முதல் குண்டு காரின் வலது புற சக்கரத்தில் பட்டது. மீண்டும் சுட கபிலனை பிடிக்க போன வீரா காலில் குண்டு பட்டு அருகிலிருந்த மரத்தில் மோதி விழுந்தான்.

காரிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்தபடியே ஹரி கதறினான்.

சில நொடிகளில் மழை விட்டு, உயர்ந்த மரங்களின் இலை வழியாக மழைதுளிகள் கீழே, சிறு சிறு குட்டையாக தேங்கிய நீரில் விழுந்த சப்தம் கேட்டது. இருளில் பூச்சிகள்,வண்டுகள் சத்தமும் கேட்டது. கார் விளக்கு வெளிச்சத்தால் அந்ந இடம் மட்டும் இருள் சூழாமல் இருந்தது.

மெல்ல மெல்ல தலையை பிடித்தவாறு எழுந்து வந்து காரின் கதவு பக்கத்தில் சாய்ந்தவாறு கிடந்த கபிலனிடம், “டேய் கிறுக்கா,என்ன எதுன்னு தெரியாம ஏன் இப்படி மடத்தனமா பண்ணுற” என்று சொல்லியவாறு வலி பொறுக்க முடியாமலும், நிலை தடுமாறி அவன் பக்கத்திலே விழுந்து, தட்டு தடுமாறி காரில் சாய்ந்தார். வீராவும் எழுந்திருக்க முடியாமல் அப்படியே மயங்கி கிடந்தான்.

“டாக்டர், ஹரிய உயிரோட விட்டுருங்க” என்றான் கபிலன்.

“ஹரி செத்துட்டான்டா லூசு” என்றபடி வலி பொறுக்க முடியாமல் அரவிந்தன் தவிக்க, அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக பார்த்தான் கபிலன்.

உடைந்த கண்ணாடி வழியே, அரவிந்தன் பேசுவதை கவனித்தான் ஹரி.

வலியை பொறுத்து மெல்ல, “டேய்,நிம்மோரியா வைரஸ் என் மனைவிக்கு இருந்தது. அந்த வைரஸால நாற்பது வயசுக்கு மேல பாதிக்கபட்டா. அதே வைரஸ் ஹரிக்கும் இருந்திருக்கு. இது ஜெனடிக் மூலமா வரும் வைரஸ். இதுக்கு சீக்கிரம் மருந்து கண்டுபிடிச்சு அவங்கள குணப்படுத்த முயற்சி செய்து தோல்வியில முடிஞ்சது. என் மனைவி,மகன் இரண்டு பேரும் இறந்து போனாங்க.

என் மனைவி,மகன் மரபணுவ எடுத்து முதல்ல  குளோனிங்க் மூலம் அவங்கள உருவாக்கினேன். ஆனா அந்த வைரஸ் குரோமோசோம் மூலம் குளோனிங் உடம்புலையும் வைரஸ் வளர ஆரம்பிச்சது. அதில இருக்குற வைரஸ்களை கட்டுபடுத்தி அழிக்க புது புது மருந்துகளை கண்டுபிடிச்சு  அவங்களுக்கு செலுத்தி சோதனை பண்ணினேன். அது நடக்கும் போதே,” என்று அவர் சொன்ன போது,கண்ணீர் வடிய உடைந்த கார் ஜன்னல் வழியாக அப்பாவை நினைத்து ஹரி அழுதான்.

கண்கள் சொறுகி,தலை முழுவதும் இரத்தம் வடிந்த நிலையில், “என் மனைவியோட சில மரபணுவை வச்சு அவள மாதிரியே இன்னும் மூன்று உருவாக்கினேன். இருக்குற குளோனிங் எல்லாத்துலையும் மருந்து செலுத்தி சோதனை பண்ணினேன். வைரஸ் அழியவே இல்ல. எல்லா குளோனிங்கும் அழிஞ்சது. மீதம் இருந்தது என் மகன் மரபணு தான் அதுலையும் குளோனிங் உருவாக்கி, மருந்து கண்டுபிடிக்க தான் இங்க வந்து முயற்சி பண்ணினேன். அது இன்னக்கி வெற்றி அடைஞ்சது. இந்த வைரஸால பல நாட்டுல மக்கள் பாதிக்கபட்டிருக்காங்க. அவர்களை காப்பாத்தவும், கண்டுபிடிச்ச இந்த மருந்தை இலவசமா எல்லாருக்கும்  கிடைக்க ஏற்பாடுகள் பண்ணனும். ஆனா அதுக்குள்ள நீ! இப்படி பண்ணுவன்னு நான் எதிர்பார்க்கல” என்று கபிலனை பார்த்து சொன்னார் அரவிந்தன்.

“என்ன மன்னிச்சிடுங்க டாக்டர்” என்றவாறு நீட்டியிருந்த அரவிந்தனின் காலை பிடித்தான் கபிலன்.

தலை வழி இரத்தம் வடிந்து முகம் முழுக்க இருந்தது. மெல்ல மெல்ல மூச்சு விட்டபடி, “இருபது வயதுடைய ஹரி மரபணுவை எடுத்து குளோனிங் செய்து ஒரு குழந்தையை உருவாக்கினால் அது அறிவும், சிந்தனையும் அப்படியே ஹரி மாதிரி இருக்கும். நடை,உடையில வித்தியாசம் இருக்கும். ஆனா இவன் என் பிள்ளை தான். கடைசி வரை என் பிள்ளை கூட இருக்க முடியல. ஆனா,அவனால வந்தவன் கூடயாவது இருக்க நினைச்சேன். இப்படி முட்டாள் மாதிரி பண்ணிட்டீயே” என்றபடி கார் சாவியை கபிலனிடம் நீட்டி, கதவை திறக்க சமிஞ்கையில் சொன்னார் அரவிந்தன்.

கபிலன் சாவியை வாங்கி மெதுவாக எழுந்து கதவை திறக்க, ஹரி வெளியே வந்து, அவர் அருகில் அமர்ந்து, “அப்பா…..அப்பா…” என்று அழ ஆரம்பித்தான்.

அரவிந்தன் காதிலிருந்து இரத்தம் வர ஆரம்பித்தது. ஆனாலும் ஹரி தோளில் சாய்ந்தபடி, “அழுகாத” என்றபடி கண்களை மூடியபடியே அரவிந்தன் இறந்து விழுந்தார்.

“அப்பா…..அப்பா….” என்று கட்டி தழுவி கதறி அழுதபடி ஹரி துடிக்க,மலை பகுதியில் முன்பு துப்பாக்கி சுட்ட சத்தம் கேட்டு வனதுறை அதிகாரிகள் சிலர் தேடி, கார் வெளிச்சம் பார்த்து அங்கு வந்து சேர்ந்தனர்.

 

 

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.