ஸிந்துஜா
அங்கிள் நீங்க யங்கா இருந்தப்போ எல்லாரையும் படுத்தி எடுத்திருப்பீங்கல்லே?
சித்ராவின் முகத்தில் படர்ந்திருந்த குறும்பையும் சிரிப்பையும் பார்த்து சுவேதாம்பரத்துக்கும் சிரிப்பு வந்தது. ஜன்னல் வழியாக வெளியிலிருந்து ஓடி வரும் காற்றையும் இளம் வெய்யிலையும் சவாலுக்கு அழைப்பவள் போல அப்படி ஒரு இனிமையைத் தன்னைச் சுற்றி எறிந்து கொண்டிருக்கிறாள் அவள் என்று அவர் நினைத்தார்.
ஏன் அப்படிச் சொல்றே சித்தி?
ஆமா. நான் உங்களுக்குச் சித்தி! நல்ல வேளை பாட்டின்னு கூப்பிடாம இருக்கீங்களே என்று முகத்தை நொடித்துக் காட்டிக் கொண்டாள்.
சித்ரான்னா ஆன்னு வாயைத் திறக்கணும். பார்யா இவ்வளவு வயசுக்கு அப்புறமும் வாயைப் பொளக்கறான்னு பேர் வாங்கணுமா? சித்தின்னா ஸாப்டா இருக்கே. அதை விடு. இன்னிக்கு டாக்டர் வந்ததும் முதல்லே கம்ப்ளெய்ன்ட் பண்ணிடனும்.
என்னன்னு?
உங்க நர்ஸ் வம்புக்கு ரொம்ப அலையறான்னுதான்.
பேச்சை மாத்தாதீங்க. நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க.
முதல்லே நீ ஏன் என்கிட்டே அப்படிக் கேட்டேன்னு சொல்லு.
ஆமா. உங்களைப் பாத்துக்கன்னு பெசலா எனக்கு டூட்டி போட்டிருக்காரு டாக்டர். ஆனா நீங்க எங்கே என்னை வேலை செய்ய விடறீங்க? தண்ணி குடிக்கணும்னா என்னயதானே கூப்பிடணும்? படார்னு கட்டில்லேந்து எறங்கி நடந்து போயி டேபிள் கிட்டே இருக்குற வாட்டர் ஜக்குலேந்து எடுத்துக் குடிக்கிறேன்னு சட்டை
யெல்லாம் நனைச்சிகிட்டு…
கிழவர் அவளை இடைமறித்து அந்த ஜக்கோட வாய் உடஞ்சு போயிருக்கு. முதல்லே ஒரு புது ஜக் வாங்கி வை என்றார்.
அதே மாதிரி பாத்ரூம் போகணும்னா என் கிட்டே சொன்னா ஜோசப் தம்பிய வரச் சொல்வேன்லே. அவன் வந்து கூட்டிட்டு போறதுக்குப் பதிலா நீங்களே தனியாப் போறீங்க. ‘அப்படியெல்லாம் தனியாப் போகக் கூடாது, நீ போக விடக்கூடாது’ன்னு
உங்களையும் வச்சுட்டுதானே டாக்டர் என்கிட்டே சொல்லிட்டுப் போனாரு. நீங்க
எங்கே கேக்கறீங்க? அதுக்குதான் நீங்க யங்கா இருந்தப்போன்னு… கேட்டேன்.
அவள் முகத்தில் இருந்த கனிவுக்கும், வார்த்தைகளில் நடமாடிய பொய்க் கோபத்துக்கும் இருந்த வித்தியாசத்தைக் கிழவர் கவனித்துச் சிரித்தார்.
உனக்கும் என் பொண்ணுக்கும் என்ன வித்தியாசம்? எப்பப் பாத்தாலும் என்னைக் கண்ட்ரோல் பண்ணிண்டு…
“ஐயோ, அக்கா எவ்வளவு பெரியவங்க? லண்டன்லே போயி பெரிய படிப்பு எல்லாம் படிச்சிட்டு வந்தவங்க. டெல்லியிலே பெரிய வக்கீல் கம்பனியிலே இருக்கறாங்க. நான் யாரு? ஒரு சுண்டக்கா. மதுரையிலே முக்கி முனகி பத்தாங் கிளாஸ் வரை படிச்சிட்டு இப்ப இங்க வந்து ஆயா வேலை பண்ணிக்கிட்டு இருக்கறவ.
இருந்தா என்ன? அவளுக்கு சாத்துக்குடி ஜூஸ் பிழிஞ்சு தரத் தெரியுமா? வலிக்காம ஊசி போடத் தெரியுமா? நான் தூங்கறச்சே அதோ அந்தச் சேர்லே உக்காந்துண்டு ராத்திரி பூரா தூங்காம இருக்கத் தெரியுமா?
அக்கா வக்கீலா நீங்க வக்கீலான்னு எனக்கு சந்தேகம் வருது என்று சிரித்தாள் சித்ரா. இப்பவும் பேச்சை மாத்திக்கிட்டே போயி நான் மொதல்லே கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம இருக்கீங்க பாத்தீங்களா?
என்னது? நான் மத்தவங்களைப் படுத்தி எடுத்தேனாவா? மத்தவங்க என்னைப்
படுத்தாமா இருந்தா போறாதா?
அம்மாவைப் போட்டு ஆட்டி வச்சிருப்பீங்க.
என்னைக் குரங்காட்டிங்கறே.
ஐயையோ. நான் சொன்னது தப்பு தப்பு. ரொம்பத் தப்பு. நீங்க எவ்வளவு பெரியவரு. சாரி, சாரி.
எதுக்கு இப்படிப் பதர்றே? நானும் உன்னை மாதிரி ஜாலிக்குதானே சொன்னேன். என் ஒய்ப் ரொம்ப சாது. பக்கத்துத் தெருலே இருக்கற காய்கறிக் கடைக்குப் போறதுக்குக் கூட நான் வரணும்பா. நகையோ புடவையோ எது வாங்கினாலும் என் செலக்க்ஷன் வேதத்துக்கு முக்கியம். நான்தான் ஏதோ வேலை அது இதுன்னு முட்டாள் மாதிரி வெளியிலே அலைஞ்சிண்டு கிடந்தேன். ஷீ வாஸ் எ நைஸ் ஸோல். அதான் சீக்கிரம் கூட்டிண்டு போய்ட்டான்.
கிழவர் பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டவர் போலப் பேச்சை நிறுத்தி விட்டார்.
சித்ராவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
நாளக்கி சாவியோட பர்த்டே. ஞாபகம் இருக்கோல்லியோ?
ஓ மை காட். மறந்தே போயிட்டேன்டி வேதம். நல்ல வேளையா ஞாபகப்படுத்தினியே. இதைக் காலம்பறயே சொல்லியிருக்க மாட்டியோ? இப்ப அவனவன் எட்டு மணிக்குக் கடையைப் பூட்டிண்டு போக ஆரமிச்சிடுவான்களே. சரி சரி கிளம்பு.
எங்கே? எந்தக் கடைக்கு?
குழந்தை வாட்ச் வேணும்னு கேட்டுண்டு இருந்தாளே. மந்த்ரி மால் போகலாம் வா. ஷாப்பர்ஸ் ஸ்டாப்லே வாங்கிடலாம்.
இந்த மாதிரியா? என்று அங்கிருந்த மேஜையைத் திறந்து ஒரு சிறிய கறுப்பு நிற வெல்வட் பையை எடுத்து அவரிடம் தந்தாள்.
உள்ளே சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் கறுப்பு டயலுடன் தங்க முலாம் பூசப்பட்ட வாட்ச் படுத்திருந்தது.
அவர் வேதம் நீ பெரிய ஆள்டி என்றார்.
இப்படியே பேசிண்டு எப்பவும் ஆபீசைக் கட்டிண்டு அழுங்கோ. நாளைக்கு ஆறு மணிக்கு அவ பிரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டிருக்கா. நீங்க அஞ்சறை மணிக்காவது வந்துடுங்கோ.
நிச்சயமா என்றார் சுவேதாம்பரம். ஆனால் வழக்கம் போல் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. ஐந்து மணிக்கு வீட்டுக்குப் போன் செய்தார்,
போனை எடுத்த வேதம் நீங்க வரலேன்னு சொல்லப் போறேள் இல்லையா? ஸ்கூல்லேந்து வந்த உடனேயே குழந்தை சொல்லிட்டா நீங்க வரமாட்டேள்னு.
அவர் சமாதானம் சொல்ல முயன்ற போது போன் எதிர்முனையில் வைக்கப்பட்டு விட்டது.
அப்போது அறைக்குள் யாரோ வரும் சத்தம் கேட்டு இருவரும் ஏறிட்டுப் பார்த்தனர்.
சித்ரா வந்தவனைப் பார்த்து குட் மார்னிங் சேகர் சார் என்று புன்னகை செய்தாள். கிழவரின் மகன்.
கிழவர் திரும்பிப் படுத்துக் கொண்டார்.
அவன் கட்டிலைச் சுற்றி வந்து “குட்மார்னிங் டாட்” என்றான்.
கிழவர் அவனிடம் எதுக்குடா இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே? என்று கேட்டார். சுவரில் தொங்கிய கடிகாரத்தைப் பார்த்து. எட்டு மணி கூட இன்னும் ஆகலையே.
சாவித்திரி அக்கா மத்யான ப்ளைட்லே வரா. பவானி மாமி லஞ்சுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவா காய்கறில்லாம் வாங்கிக் குடுத்துடுன்னு சொன்னா. அதுதான் சீக்கிரமா வந்து ஃப்ரேக்பாஸ்ட் கொடுத்துட்டு மார்க்கெட் பக்கம் போனேன்னா பத்தரை பதினொன்னுக்கு இங்க திரும்ப வந்துடலாம்னு… என்றான் அவர் பையன்.
அவ எதுக்குடா இப்ப இங்க ஓடி வரா? கால்லே நெருப்பைக் கட்டிண்டு? எவ்வளவு நாள் இருக்கப் போறாளாம்?
அவன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை.
இன்னிக்கி ராத்திரி ஃப்ளைட்டா? சொல்லேன்.
அவன் தயங்கியபடி நாளைக்குக் காத்தாலே திரும்பிப் போறா
ஓ, ரியல் ஃப்ளையிங் விசிட் என்று கிழவர் சிரித்தார். அவர் குரலில் இருந்த ஏளனம் ஆளை அடிப்பது போல இருந்தது.
உன்னையே ஏண்டா நீ பழி மாதிரி இங்க வந்து விழுந்து கிடக்கறேன்னு சொல்லிண்டு இருக்கேன். காலம்பரம் சாயந்திரம்னு வந்து வந்து உக்கார்றே, ஆபீசுக்குப் போய் வேலையைப் பாருங்கிறேன். காதிலேயே வாங்காம இருக்கே.
உங்களைப் பாத்துக்கறதை விட வேறே என்ன பெரிய வேலை எனக்கு?
ஏய் சித்தி, சிவாஜி கணேசன் வசனம் பேசறான். கேட்டுக்கோ.
சித்ரா புன்னகையுடன் அவரருகே வந்து அங்கிள் அவர் சொல்லுறது சரிதானே என்றாள்.
ஓ, சேம் சைட் கோல் போடுறியா. பரவாயில்லே. பாத்துக்கறேன்.
சேகர் சித்ராவைப் பார்த்து எட்டரை எட்டே முக்காலுக்குதானே சாப்பிடுவாரு? நீங்க கொஞ்சம் ஹெல்ப்…
கிழவர் அவனைப் பார்த்து ஓகே. ஓகே. பை பை என்றார். அவர் பார்வையில் தெரிந்த வெறுப்பை சித்ரா கவனித்தாள். இதற்கு முன்னால் நாலைந்து தடவை இந்தப் பார்வையை அவள் கவனித்திருக்கிறாள். முதல் தடவை அதிர்ச்சியாக இருந்தது. இப்போது லேசாகப் பழகி விட்டது.
சேகர் ஒன்றும் பேசாமல் வெளியே சென்றான்.
அங்கிள் அவரு ஒண்ணும் தப்பா சொல்லலியே. எதுக்கு உங்களுக்கு இவ்வளவு கோவம்?
கிழவர் சில வினாடிகள் பேசாமல் இருந்தார்,
கார்த்தாலேந்து தலைவலி மண்டையைப் பொளக்கறதுன்னயே வேதம். அதை வச்சுண்டே சமையலையும் முடிச்சிட்டே. போய் கண்ணை மூடிண்டு அக்கடான்னு கொஞ்ச நாழி படுத்துக்கோயென்.
இன்னிக்கி சேகர் கிளாஸ்லே பி.டி. மீட்டிங். இந்தத் தடவை கொஞ்சம் போயிட்டு வந்துடறேளா? போன தடவையே வரலேன்னு அவன் டீச்சர் ரொம்பக் கோவிச்சிண்டா. ப்ளீஸ்.
அங்க அவ ரோல் நம்பர் படின்னா வரிசைலே நிக்கச் சொல்லிக் கூப்பிடுவா! இவன் பேர் வரதுக்கு ரெண்டு மணி நேரம் ஆகுமே. எனக்கு இன்னிக்கி ஆடிட்டர்ஸ் வேறே வரான்கள்.
அதுக்காக இவன் பேரை ஆராவமுதுன்னோ அன்பழகன்னோ மாத்திடலாமா? மொத்த மீட்டிங்கே ஒரு மணி நேரத்திலே ஆயிடும். உங்க ஆடிட்டர்ஸ் ஒரு மாசம் இருக்கப் போறா. ஒரு மாசத்துக்கு அவா மூஞ்சியைத்தான் நீங்க பாத்துண்டு அலையணும். இன்னிக்கி மாத்திரம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போங்கோ.
சரி, நீ இந்த மாசமும் பேரென்ட் டீச்சர் மீட்டிங் போக வேண்டாம். சேகரோட டீச்சருக்கு போன் பண்ணி உனக்குத் தலைவலி இல்லாட்டா ஜொரம்ன்னு சொல்லிடு.
அது எங்களுக்குத் தெரியாதாக்கும். அங்க ஸ்கூலுக்கு வரவாளைப் போய்ப் பாருங்கோ. முக்கால்வாசி குழந்தைகளோட அப்பாதான் வந்து நிக்கறா. உங்களுக்கு அப்படி என்னதான் கூச்சமோ? நாலு பேரைப் பாத்து நின்னு பேசிட்டு வரதுக்கு. சரி இந்தத் தலைவலியோடையே நான் போறேன். இன்னிக்கி சாயந்திரம் வேறே டியூஷனுக்குக் கூட்டிண்டு போயிட்டு வரச்சே டென்த் கிராஸ்லே டெயிலர் கிட்டே அவனைக் காமிச்சு தீபாவளி டிரஸ்ஸுக்கு அளவு குடுக்கணும்.
கிழவர் சித்ராவைப் பார்த்து என்ன கேட்டே? நான் ஏன் சேகரைக் கோவிச்சுக்கிறேன்னா? எனக்கு என்னைக் கண்டாலே வெறுப்பாயிருக்கு. இது என்ன லைஃப்? பிறத்தியார் கையை எப்பவும் எதிர்பாத்துண்டு? நான் எப்பவும் யாரையும் எதிர்பாக்காமதானே இத்தனை நாள் காலத்தைத் தள்ளிண்டு வந்திருக்கேன்?
அப்போ ஸ்டிராங்கா இருந்தீங்க. இப்ப அப்பிடியா? என்றாள் சித்ரா கனிவு நிரம்பிய குரலில்.
கிழட்டுப் பயலேன்னு செல்லமா கூப்பிடறே, இல்லே?
அவள் முகத்தில் தென்பட்ட அதிர்ச்சியை அவர் ரசித்தார்.
அவள் ஏதோ சொல்ல வாயைத் திறந்த போது நான் விளையாட்டுக்குதான் சொன்னேன். எனக்கு உன்னைத் தெரியாதா? உங்கிட்டே நான் ஒண்ணு சொல்லட்டுமா? எம்பது வயசு என்னைக் கட்டிப் போட்டிருக்குன்னு எல்லாரும் நினைக்கிறான்கள். நிஜமாவே நான் கட்டுண்டா கிடக்கேன்? இல்லியே. நடந்தாதான் நடமாட்டமா? என் மனசு இன்னும் நூறு மைல் வேகத்திலே வேலை செய்யறது. வேதம் இருந்தாள்னா கையாவும் காலாவும் இருப்ப. அதுக்குதான் எனக்குக் கொடுத்து வைக்கலையே.
சித்ரா என்ன பதில் சொல்வது என்று குழம்பியவளாய் மௌனத்தைக் கடைப்பிடித்தாள்.
காரில் வரும் போது சாவித்திரி தம்பியிடம் ஹவ்’ஸ் தி ஓல்ட் மான்? என்று கேட்டாள்.
சாலையிலிருந்து பார்வையை எடுத்து சேகர் அவளைக் கூர்மையாகப் பார்த்தான்.
சரி, சரி. கோவிச்சுக்காதே. ஹவ்’ஸ் தி பாஸ்?
சேகர் அவர் உடம்பு பத்து நாளைக்கு முன்பு இருந்ததை விட இப்போது குணமடைந்திருக்கிறது என்றான்.
ஆனா என் தலையைப் பாத்தவுடன் ஒரு கோப மூஞ்சியை எடுத்து மாட்டிக்கறார்
நீ தினமும் அவரைப் போய்ப் பாத்துக்கிறியேடா!
எதுக்கு வரேன்னு திட்டறார்.
வராம இருந்தா நன்னி கெட்டவங்கள்னு திட்டுவாரே
தெரியலே அக்கா. ஆனா வேறே யார் இருக்கா அவரைப் போய்ப் பாத்துக்கறதுக்கு? இப்ப நீ வரப் போறேன்னு சொன்னவுடனே அவ எதுக்கு இப்ப ஓடி வரான்னு கேட்டார்.
வராதேங்கிறாரா?
வந்துட்டு இன்னிக்கி ராத்திரியே ஓடிப் போறதுக்கு எதுக்கு வரணும்னு கேட்டார்.
நான் பத்து நாள் லீவு போட்டுத் தங்கிட்டுப் போலாம்னுதான் வந்திருக்கேன் என்றாள் சாவித்திரி.
ஓ வெரி குட். ஆனா நீ நாளைக்கே திரும்பனும்னு போன்லே சொன்னியே. நானும் அதைத்தான் அவரிடம் சொன்னேன்.
இல்லே. எனக்கு மனசு கேக்கலே. எப்பப் பாரு என்ன சதா வேலையைக் கட்டி அழுதுண்டுன்னு அம்மா சொல்லுவாளே. அது எனக்கும் தோணிடுத்து. அப்பாவோட கொஞ்ச நாள் இருக்கணும்.
சேகர் இப்போதைக்கு அந்த நர்ஸ் சித்ராதான் அவரைக் கட்டி மேய்க்கிறா. அப்படியும் யார் பேச்சையும் கேக்காம எழுந்து எழுந்து ஒடிண்டு எல்லாக் காரியத்தையும் தானே செய்வேன்னு பிடிவாதம் பிடிக்கறார். முந்தா நாள் மத்தியானம் நான் ஆபீசுக்குப் போகணுமா இருந்தது. குவார்ட்டர்லி போர்டு மீட்டிங்னு. நான் இல்லாததைப் பாத்துட்டு வாக்கிங் போறேன்னு ரூம் வாசல்லேந்து இறங்கிட்டாறாம். எல்லாரும் அப்பிடியே பதறிப் போயிருக்கா. அவரோ வெளியிலே போகணும்னு ஒரே அடம். சித்ராவுக்கு அழுகையே வந்துடுத்தாம். அவர் கிட்டே அங்கிள், நீங்க உள்ளே போகலேன்னா நான் பெர்மனெண்டா இந்த ஆஸ்பத்திரியை விட்டு வெளியேதான் போகணும்னா பாரேன். ஒரு மறுபேச்சு இல்லாம உள்ளே போயிட்டாறாம்” என்றான்.
அவருக்குள்ளே எதோ நடந்துண்டு இருக்கு. அது என்னன்னுதான் நமக்குத் தெரியலே. நாம சாயந்திரம் நாலு நாலேகாலுக்குப் போகலாமா?
இல்லேக்கா. சாப்பிட்டுட்டு நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு. நான் அவருக்கு லஞ்ச் எடுத்துண்டு போய்க் கொடுத்துட்டு அங்கே இருக்கேன். நாலு மணிக்கு ஆத்துக்கு வந்து உன்னைக் கூட்டிண்டு போறேன்.
மாலையில் அவர்கள் ஆஸ்பத்திரியை அடைந்த போது சுவேதாம்பரத்துக்கு சித்ரா சாத்துக்குடி ஜுஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்ததும் அவர் முகம் மலர்ந்தது. சித்ரா வாங்க அக்கா. நல்லா இருக்கீங்களா என்று விசாரித்தாள்.
சாவித்திரி அவரது படுக்கையின் அருகில் சேரைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள்.
எப்படி இருக்கேப்பா என்று கேட்டாள்.
அதான் பாக்கறையே அனந்தசயனத்தை. அது சரி. நீ எதுக்கு குண்டாங் குண்டான்னு அவ்ளோ தூரத்திலேந்து ஓடி வந்திருக்கே. ப்ளேன் சார்ஜ் போட்டுண்டு.
உன்னை இருந்து பாத்துட்டுப் போகலாம்னுதான் என்று சிரித்தாள் சாவித்திரி.
இன்னிக்கு வந்துட்டு நாளைக்குத் திரும்ப ஓடறதுக்கு, இல்லே?
இல்லே. ஒரு பத்து நாள் இருந்துட்டுதான் போவேன்.
அவர் திடுக்கிட்டு அவளைப் பார்த்த மாதிரி இருந்தது.
உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கா?
என்னப்பா, என்ன சொல்றேள்?
அவள் திகைப்புடனும் சந்தேகத்துடனும் அவரைப் பார்த்தாள்.
அவர் உடனடியாகப் பதில் அளிக்கவில்லை. அவள் பார்வை அவரைச் சற்று உலுக்கியது.
இல்லேடி. பொட்டுண்டுவை யார் பாத்துப்பா? மாப்பிள்ளைக்கு குழந்தையைப் பாத்துக்க என்ன தெரியும்?
அவர் குரல் அவருக்கே சமாதானமாக இல்லை.
ஏன் அல்கா தீதிதான் வீட்டோட இருக்காளே? நா ஆபீஸ் வேலையா பாம்பே கல்கத்தான்னு போறச்சே அவதானே குழந்தையைப் பாத்துக்கறா?
அதெல்லாம் ஒண்ணும் சொல்ல வேண்டாம் நீ. இங்க என்ன பாழாப் போறதுன்னு கிளம்பி வந்தேன்னு நினைச்சிண்டு இருக்கேன். பத்து நாள் இருக்காளாம். ஆஸ்பத்திரி டூட்டிக்கா? இதோ இந்த சித்ரா இங்கே இருக்காளே. நீ மொதல்லே நாளைக்கு கிளம்பப் பாரு.
அவர் நிர்தாட்சண்யமாக அவ்வாறு பேசியது சாவித்திரிக்கு மட்டுமல்ல, சேகருக்கும் சித்ராவுக்கும் கூட விசித்திரமாக இருந்தது.
அப்போது அறைக்குள் டாக்டர் வந்தார் என்ன கலாட்டா இங்கே என்றபடி. அவர்கள் பேசியதை அவர் கேட்டுக் கொண்டுதான் வந்திருக்க வேண்டும். சாவித்திரியைப் பார்த்ததும் “எப்போ டெல்லிலேந்து வந்தே? குழந்தை ஹஸ்பென்ட் எல்லாரும் எப்படியிருக்காங்க?” என்று கேட்டார்.
சாவித்திரி அவருக்கு வணக்கம் செலுத்தியபடி எல்லாரும் சௌக்கியம்தான் டாக்டர் என்றாள்.
அவர் கிழவர் அருகே சென்று யூ ஆர் லுக்கிங் சீர்ஃபுல் என்றபடி நாடியைப் பிடித்துப் பார்த்தார். ஸ்டெதஸ்கோப்பை அவரது மார்பிலும் வயிற்றிலும் முதுகிலும் வைத்துப் பார்த்து விட்டு குட் என்றார்.
சித்ராவைப் பார்த்து மத்தியானம் நல்லாத் தூங்கினாரா? என்று கேட்டார்.
அவள் பதில் சொல்வதற்கு முன் சுவேதாம்பரம் ஓ, ரெண்டு மணிக்குப் படுத்தவன் நாலு மணிக்குத்தான் எழுந்தேன் என்றார்.
கொஞ்சம் கஷ்டப்பட்டாரு டாக்டர் என்றாள் சித்ரா. கிழவர் அவளை முறைத்துப்
பார்த்தார்.
டாக்டர் சித்ராவிடம் அவருக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகளில் இரண்டின் பேரைச் சொல்லி அவற்றை இனிமேல் கொடுக்க வேண்டாம் என்றார். கிழவரைப் பார்த்து ராத்திரி வீட்டுக்குப் போறதுக்கு முன்னாலே உங்களை வந்து பார்க்கிறேன் என்று கிளம்பினார். அவருடன் சித்ராவும் சென்றாள்.
ஒரு மணி நேரம் சேகரும் சாவித்திரியும் கிழவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். பேரன் பண்ணும் அட்டாகாசங்களை எல்லாம் சாவித்திரி சொல்லச் சொல்ல கிழவர் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தார். சாவித்திரியின் ஆபீஸ் வேலைகளை பற்றிக் கேட்டார். அவர்கள் கிளம்பிய போது அவர் சாவித்திரியிடம் “நீ கிளம்பி ஊருக்குப் போ. நான் இவனையே இங்கே ஏண்டா பிரும்மஹத்தி மாதிரி என்னைப் பிடிச்சிண்டு நிக்கறே. ஆபீசுக்குப் போடங்கறேன். நீயாவது நான் சொல்றதைக் கேளு என்றார்.
அவர்கள் கிளம்பிச் செல்கையில் சித்ரா கூட வந்தாள். அவர்களிடம் உங்களை டாக்டர் வந்து பார்க்கச் சொன்னார் என்றாள்.
டாக்டர் அறைக்குள் சென்று அவர்கள் அவரைப் பார்த்தார்கள்.
சேகர் அவர் கூடவே இருக்கறவன், நீதானே ரொம்ப நாள் கழிச்சு அவரைப் பாக்கறே. எப்படி இருக்கார்னு உனக்குத் தோணறது என்று சாவித்திரியிடம் கேட்டார்.
ஹி லுக்ஸ் ஆல்ரைட் டு மீ டாக்டர். பத்து நாளா படுக்கையிலே இருக்கறதினாலே மூஞ்சிலே கொஞ்சம் டயர்ட்னெஸ் தெரியறது. ஆனா…
ஆனா? என்று டாக்டர் கேட்டார்.
அவர் பேச்சென்னவோ வித்தியாசமா இருக்கற மாதிரி இருக்கு. இல்லியா சேகர்?
சேகர் அவள் சொல்வதை ஆமோதிப்பவன் போலத் தலையசைத்தான்.
நீ சொல்றது கரெக்ட்தான். ட்ரீட்மென்டுக்கு உடம்பு நன்னா கேட்டுண்டு வரது. உன்னைக் கிளம்பிப் போன்னு மறுபடியும் சொன்னாரா?
ஆமா. கிளம்பறச்சே ஏதோ விரட்டற மாதிரி கிளம்பிப் போன்னார் .
நான் ஒண்ணு சொல்லட்டுமா? என்றார் டாக்டர். சில வினாடிகளுக்குப் பின், சேகர், நீ தினமும் காலம்பரையோ ராத்திரியோ ஒரு வேளை மட்டும் வந்து அவரைப் பாத்துட்டுப் போ. சாவித்திரி, நீயும் நாளைக்குக் கிளம்ப முடிஞ்சா கிளம்பிடு. அவரை அடுத்த வாரம் டிஸ்சார்ஜ் பண்ணிடுவேன். அதுக்கப்பறம் ரெண்டு மூணு வாரமோ இல்லே ஒரு மாசமோ கழிச்சு வந்து அவரோட தங்கி இருந்துட்டுப் போற மாதிரி பிளான் பண்ணிண்டு வா என்றார்.
பிறகு நான் ரவுண்ட்ஸுக்கு போயிட்டு வரட்டா, குட் நைட் என்றபடி தன் இருக்கையிலிருந்து எழுந்து வெளியே சென்றார்.