கார்த்திக் கிருபாகரன்

நகல்

கார்த்திக் கிருபாகரன் 

மாலை நேரம் ஆகிவிட்டது.   மலையில் ஏறிக் கொண்டிருந்த கபிலனுக்கு இருட்டுவதற்குள் பாதுகாப்பாக தன் வீட்டை சென்றடைய வேண்டுமே என்ற கவலை. முடிந்த அளவு விரைவாக மலையேறிக் கொண்டிருந்தார்கள்.  கபிலனின் நடை வேகத்தை மலையின் ஏற்றமோ,  பாதையில் கிடந்த சிறு கற்களோ குறைக்க வில்லை. காரணம் அவன் இந்த பகுதியிலே வாழ்ந்து பழகியவன். ஹரிக்கு சற்று சிரம்மாகவே இருந்தது. என்ன தான் நடையில் விரைவைக் காட்டினாலும்,  மனதை மயக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகும், நறுமணமும்,குளிர்ந்த காற்றும் அவ்வப்போது ஹரியை தாமதபடுத்தி கொண்டிருந்தன.

திரும்பிய திசை எல்லாம் இயற்கையின் வளம் கொட்டிக் கிடந்தது.  உயரமான மரங்கள்.  மலர்களிலோ விதவிதமான மலர்கள். எத்தனை வண்ணங்கள். எத்தனை மணங்கள். பட்டியலிட்டு முடியாது. எத்தனை முறை பார்த்தாலும் இந்த அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. இப்படி காணாததை கண்டவன் போல மலையின் அழகை வியந்து கொண்டே முடிந்த வரை விரைவாக கபிலனுடன் ஹரி நடந்து கொண்டிருந்தான்.

குளிர் காலம் என்பதால்,மாலை ஐந்து மணிக்கெல்லாம் பனி சூழ தொடங்கி, இருட்ட ஆரம்பித்தது.சற்று நேரத்தில் மழை பெய்யும் நிலை உருவானது.

ஹரியின் அப்பா அரவிந்தனை நினைத்து கபிலன் பயப்பட ஆரம்பித்தான். ஹரியை வெளியே கூட்டி வந்தது அரவிந்தனுக்கு தெரியாது.

சிறு வயதிலிருந்து பழகிய நண்பன் ஹரிக்கு,மலை,தோட்டம் என சுற்றிய பழைய நினைவுகள் துளியும் ஞாபகம் இல்லாதது கூட சிறிது வருத்தம் இருந்தாலும், செல்லும் வழியில் சுற்றி திரிந்த சில இடங்களை கபிலன் காட்டிய போதும் ஹரிக்கு எதுவும் நினைவில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் நினைவு கொண்டு வர முடியாமல் போனது. அதுவும் மலை பகுதிக்கு ஹரியை அழைத்து கொண்டு வந்ததிலிருந்து, இப்போது செல்லும் வரை அவனது நடவடிக்கைகளை கபிலன் கவனித்து பார்த்ததில்,”இது நம்ம ஹரி இல்ல. முற்றிலும் மாறி போயிட்டான்” என்ற மனநிலையே அழுத்தமாக தோன்றியது. எது எப்படியோ!, இருட்டுவதற்குள் வேறு பகுதிக்கு ஹரியை பாதுகாப்பாக அழைத்து செல்ல நினைத்து வேகமாக கபிலன் கூட்டி சென்றான்.

குறிஞ்சிமலர் ஊருக்கு ஒதுக்குபுறமாக இரண்டு ஏக்கரில் உள்ள பூஞ்சோலை பங்களா மற்றும் அதன் சுற்றிய தோட்டம் அதன் பாதுகாப்பிற்கு சுற்றி எழுப்பபட்டிருக்கும் வேலி போன்ற தடுப்புச்சுவர். இதனை சிறு வயதிலிருந்தே கபிலன் தான் பாராமரித்து வருவான். வெளிநாட்டில் இருக்கும் முதலாளி டாக்டர் அரவிந்தன் வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் வந்து தங்கிவிட்டு போவார். அவர் அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு பெரிய ஆராய்ச்சியாளர். அவரது மனைவி மெலினா அவரோடு ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிகிறார். இருவரும் காதல் திருமணம் செய்து அமெரிக்காவிலே வசித்தார்கள். மகன் ஹரியும் பிறந்து அங்கயே வளர்ந்து படித்து கொண்டிருந்தான். வெள்ளை நிறம்,மாநிற தலைமுடி,நடுத்தர உயரம்,20 வயதுள்ள இளைஞன் கார் ஓட்டுவதிலிருந்து,குதிரை சவாரி,நீச்சல் என அனைத்திலும் பயிற்சி பெற்றவன் ஹரி. சிறு வயதிலிருந்து ஆண்டுதோறும் அமெரிக்காவிலிருந்து, ஊருக்கு வந்த போது கபிலனுடன் குதிரை சவாரி செய்வது, காரில் மலைபகுதிகளில் சுற்றிய நாட்களும் உண்டு. ஆனால் அந்த நேரங்களில் அரவிந்தன் பங்களாவில் ஒரு அறையில் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார். இவரின் ஆராய்ச்சி,புதிய மருந்து கண்டுபிடிப்பு அமெரிக்காவில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த கண்டுபிடிப்புகளை தனியார்க்கு விற்றதில் பெரும் பங்கு லாபம் இவருக்கு கிடைத்து கொண்டிருக்கிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பு,நடு இரவில் பூஞ்சோலை பங்களாவிற்கு தனியாக ஒரு பெரிய பெட்டியோடு வந்து தங்கினார். அவர் வந்த போது உடன் மனைவியும்,மகன் ஹரியும் இல்லை. கடந்த மூன்று மாதங்களில் கபிலனை ஆராய்ச்சி அறைக்குள் நுழையவே அரவிந்தன் அனுமதிக்க வில்லை.

ஒரு சமயத்தில் கபிலன் பங்களாவை சுற்றிய தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது,ஆராய்ச்சி கூட அறையில் ஒரு உருவம் இருப்பது போன்றும்,அது உலவுவது போன்றும் ஜன்னல் வழியாக உருவத்தின் நிழல் தென்பட்டது. “திருடன் எவனோ,பங்களாவுக்குள் நுழைஞ்சுட்டான் போல” என்று மெதுவாக ஜன்னல் பக்கம் போய், ஜன்னல் கதவை திறந்து பார்த்தான். சிறு வெளிச்சம் அந்த ஜன்னல் வழியாக வருவதை பாரத்து,அந்த உருவம் ஜன்னல் பக்கம் வந்து நின்றது. எதற்கும் தயாராக கையில் தடி ஒன்றை வைத்து கொண்டே ஜன்னல் வழி கபிலன் பார்த்தான். ஜன்னல் வழியாக கபிலன் முகத்தை பார்த்த அந்த உருவம் பயந்து அலறியது. சட்டென்று நடுங்கியபடி ஜன்னல் வழி அந்த உருவத்தின் முகத்தை பார்த்த கபிலனுக்கு அதிர்ச்சியாகி போனான். நன்றாக பார்த்த போது தான், “அது ஹரி” என்ற முடிவுக்கு வந்தான். அவனை பார்த்த சந்தோஷத்தில், “டேய் ஹரி.எப்புடி இருக்க?,இங்க எப்ப வந்த ?” என்றான்.

அவன் எதுவும் பேசாமல் ஜன்னல் அருகே வந்து, “நீங்க யாரு” என்றான்.

“டேய்,என்ன தெரியலையா ?, நான்தான் கபிலன். உன் நண்பன்டா. உன்ன ஏன் டாக்டர் அடைச்சு வச்சுருக்காரு” என்றான்.

“என்ன சொல்ற ?, நான் அடைபட்டு கிடக்குறேனா ?” என்று குழப்பத்தில் ஹரி கேட்கும் போது,அறை கதவை திறந்து அரவிந்தன் உள்ளே வந்தார். அவர் வருவதை கவனித்தபடியே அமைதியாக நின்றான் ஹரி.

ஜன்னல் கதவு திறந்து,வெளிச்சம் வந்து கொண்டிருப்பதை கவனித்த அரவிந்தன் கோபபட்டு, “உன்ன யாரு,ஜன்னல் கதவ திறக்க சொன்னது. ஆபத்து மூடியே வை” என்று திட்டியபடி கதவை மூடினார். அவர் மூடிய அந்த நொடியில்,”கபிலன் எங்கே” என்று ஹரி தேடி பார்த்தான். அவன் அரவிந்தன் அறைக்குள் நுழைவதை பார்த்த போதே,அங்கிருந்து ஓடி, பங்களா முன் பகுதிக்கு வந்து சேர்ந்து,”ஹரியை ஏன் மறச்சு வச்சுருக்காரு. ஏதோ மர்மாம இருக்கு” என்று யோசித்தபடி எதுவும் தெரியாதவன் போல கபிலன் வேலையை தொடர்ந்தான். பின்பு எப்போதும் ஆராய்ச்சி அறையை அரவிந்தன் பூட்டிய படியே வைத்திருந்தார். அவர் இல்லாத போதும், இருந்தும் கவனிக்காத போதும் ஆராய்ச்சி அறை ஜன்னல் வழியாக ஹரியிடம் பல நாட்கள் பேச தொடங்கினான்.

“என்னய்ய ஞாபகம் இல்லைய்யா ?,உங்க அம்மாவுக்கு என்னாச்சு ?” என்றான் கபிலன்.

“எதுவும் தெரியலை.இதுக்கு முன்னாடி இங்க வந்த ஞாபகம் இல்ல” என்றான் ஹரி.

“ஒருவேளை இவனுக்கு எதாவது விபத்து நடந்து போய் மறந்து போய்ட்டானா ?” என்று நினைத்தபடி “ஏன் டாக்டர் எதுவும் சொல்ல மாட்டிகிறார் ?” என்றும் நினைத்தான்.

பலநாட்கள் ஜன்னல் வழியாக இருவரும் சந்தித்தனர். ‘எதற்கு அறையில் அடைந்து கிடக்கிறான். அவன் அம்மா பற்றிய ஞாபகம்’ என்று எதுவும் இல்லாமல் ஹரி கிடப்பது கபிலனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இன்று சந்தித்து பேச ஜன்னல் கதவை கபிலன் திறக்க, ஹரியும் வந்து,”என்னய வெளிய கூட்டிட்டு போக முடியுமா?,நீ சொல்லுற வெளி உலகம்,மலை,காடு எல்லாம் பார்க்கனும்” என்றான்.

“கொஞ்ச காத்திரு. நீ எதுக்கு இப்படி அடைஞ்சு கிடக்குற ?, உன் அம்மாவுக்கு என்னாச்சுன்னு நான் முதல்ல தெரிஞ்சுக்குறேன். அப்பறம் உன்ன சுதந்திரமா சுத்த விடுறேன்” என்று கபிலன் சொல்லி கொண்டிருக்க, சட்டென்று டாக்டர் அறைக்குள் வந்தார். ஜன்னலை பூட்டி விட்டு,ஒன்றும் தெரியாதவன் போல தள்ளி சென்று நின்றான் ஹரி. வெளியிலிருந்து ஐன்னலை மெல்ல திறந்து சிறு துவாரம் வழியாக நடப்பதை கபிலன் கவனித்தான். உள்ளே வந்தவர் ஹரிக்கு ஊசி போட்டு,அவனை படுக்க வைத்தபடியே ஸ்கேன் செய்து, அவனது இரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்து கொண்டே,செல்போனில் ஒருவரிடம் பேசினார்.  “சோதனை வெற்றிகரமா முடிய போகுது. இந்த சோதனையை என் மனைவிக்கு பண்ணி தோல்வியில முடிஞ்சது. இப்ப அப்படியில்ல. இன்னும் ஒரு நாள் தான் வெற்றிகரமா முடிய போகுது. எல்லாம் உன்னால தான். ரொம்ப சந்தோஷம்” என்று டாக்டர் பேசியது துவாரத்தின் வழியாக கவனித்த கபிலனுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. “அடப்பாவி புதிய மருந்துகளை கண்டுபிடிக்க பொண்டாட்டி மேல,மகன் மேல செலுத்தி சோதனை பண்ணுறனே!” என்று கடும் கோபமாக அரவிந்தனின் செய்கைக்கு முடிவு கட்ட யோசித்தவாறு முன் பகுதிக்கு வந்தான்.

ஆராய்ச்சி அறையை பூட்டி விட்டு,பெரு மகிழ்ச்சியோடு வெளியே வந்த அரவிந்தனிடம், “டாக்டர் என்னாச்சு,இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க ?” என்று பல்லை கடித்தபடியே கபிலன் கேட்டான்.

“என் வேதனை, துக்கம் எல்லாத்துக்கும் மருந்து கிடைக்க போகுது” என்றார்.

டாக்டரின் செயல் கபிலனுக்கு எரிச்சலை உண்டாக்கியது. எதையும் வெளிகாட்டாமல்,”நானும் உங்க கிட்ட மெலினா அம்மாவும்,ஹரியும் ஏன் வரலன்னு கேட்டேன். ஆனா நீங்க பதிலே சொல்ல மாட்டிறீங்கள!” என்றான்.

“அதுபத்தி அப்பறமா சொல்லுறேன்” என்று அங்கிருந்து தனது அறைக்கு சென்றார்.

கபிலனுக்கு டாக்டர் பேசிய விதம் பல எண்ணங்களை ஏற்படுத்தியது. “ஒருவேளை மருந்துவ சோதனையில் மனைவியை கொன்றிருப்பாரோ?” என்று நினைத்தான். பின் அதே மருந்தை மகன் மேல செலுத்தி சோதனை செய்யுறாரு போல,இந்த மருந்துனால அவன் பழைய நினைவுகளை இழந்திருப்பான் போல” என்ற பலவற்றை சிந்திக்க ஆரம்பித்தான்.

டாக்டர் அறையில் இருப்பதை உறுதி செய்து விட்டு,வேகமாக பின்புற ஆராய்ச்சி அறை பக்கம் போய் அறையின் மாற்று சாவி மூலம் திறந்து பார்த்தான். கதவு திறக்கவே உள்ளே சென்று பார்த்தான். சுருண்டு படுத்திருந்த ஹரியின் உடல் வெளிர் நிறமாக இருந்தது. அவன் வலியால் துடித்து,முனங்கிய படி கிடந்தான். அப்போது அறை கதவை திறந்து டாக்டர் உள்ளே வந்தார். அவரை பார்த்தவுடன்,அவர் கண்ணில் படாமல்  மெதுவாக மேஜை பகுதியில் கீழ் ஒளிந்தான். திரையால் மூடிய அந்த பகுதியில்,சிறிய பகுதியை திறந்தபடி நடப்பதை கபிலன் கவனித்தான். ஹரியை சோதனையிட்ட டாக்டருக்கு பெரும் மகிழ்ச்சி. மீண்டும் செல்போனில் ஒருவருக்கு பேசினார். ” ஹலோ மிஸ்டர் ஜென்” என்று அவர் ஆங்கிலத்தில் வெகு நேரம் பேசியது கபிலனுக்கு ‘என்ன பேசுகிறார்’ என்று புரியாமலே இருந்தது. வெகு நேரம் பேசிய பின்,மீண்டும் வேறு ஒருவருக்கு பேசினார். “நான் ஜெயிச்சுட்டேன்.என் புள்ளய்ய வச்சு உருவாக்குனது. இப்ப எனக்கு பெரிய புகழ் வர போது,ராயல்டி கிடைக்கும். அந்த குறிப்புகளை மெயில் பண்ணுறேன். சீக்கிரமா தயார் படுத்துங்க” என்று குதுகலத்தோடு பேசியதும்,ஹரியின் மோசமான நிலையையும் மறைவாக இருந்து கவனித்த கபிலனுக்கு டாக்டர் மீது கோபத்தை அதிகரித்தது. ‘டாக்டர் மோசமானவர்ன்னு நினைக்கவே இல்ல. ஹரியை காப்பாத்தி,டாக்டர் பணத்தாசைக்கு முடிவு கட்டுறேன்’ என்று நினைத்தபடியே பதுங்கி இருந்தான்.

டாக்டர் கதவை அடைத்து வெளியே செல்ல,மறைவிலிருந்த கபிலன் வெளியே வந்து,ஹரியை எழுப்பினான். அவனின் கை,விரல்,உடம்புகளில் மாட்டியிருந்த ஊசி குழாய்களை அகற்றி,குடிக்க தண்ணீர் கொடுத்து,அவன் நிதானத்தை அடைந்தவுடன், “உன்ன வச்சு உங்கப்பா பணம் சம்பாதிக்க போறாரு. உங்கம்மாவுக்கும் ஏதோ! மருந்து ஊத்தி சாகடிச்சுருப்பாரு. இப்ப உன் மேல மருந்து ஊசி போடவும், உனக்கு பழசு மறந்து நிக்கிற. இங்க இருந்தா! உன்னையும் கொன்னுடுவாரு. வா நான் உன்ன காபாத்துறேன்” என்றான் கபிலன்.
கண்ணீரோடு கபிலனை சில நொடி கட்டி பிடித்து,பின் அவனோடு ஹரி புறப்பட தயாரானான். மெதுவாக அறை கதவை திறந்து, டாக்டர் கவனிப்பதற்குள் வெளியே வந்து மலை பகுதிக்குள் ஓடினார்கள்.

ஹரியை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து கொண்டு போக, கரடுமுரடான ஆபத்தான பாதை வழியாக பயனித்து,வேறு பகுதியில் உள்ள தன் வீட்டிற்கு ஹரியை கபிலன் அழைத்து கொண்டு பயணமானான்.

பங்களாவில் சிறுது நேரம் கழித்து  அரவிந்தன் கவனித்த போது,ஆராய்ச்சி அறை கதவு திறந்திருந்தது, உள்ளே சென்று பார்த்த போது ஹரி இல்லாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “டேய் கபிலா!,கபிலா!” என்று கத்தியபடி பங்களாவை சுற்றி கபிலனையும்,ஹரியையும் தேடினார்.

இருட்டப் போகும் நேரம். எங்கு தேடுவது,”ஹரி எங்கு போனான்” என்ற குழப்பம், தற்காப்புகாக துப்பாக்கியையும் எடுத்து, வெளியே வந்து டார்ச் விளக்கு அடித்தபடியே தேட போனார். சுற்றி முற்றி தேடி இருட்டியது.

அந்த நேரத்தில்  கரடுமுரடான மலை பாதையில் செல்வது சிரமத்தை ஏற்படுத்தியது. ‘எந்த பக்கம் போவது’ என்ற பாதை தெரியாமல் தவித்தார். சட்டென்று அந்த பக்கமாக ஒருவர் வருவது தென்பட,அவரிடம், “சார்,இந்த பக்கமா ஒரு இருபது வயசு பையன் போறத பார்த்தீங்களா?” என்றார்.

அவர் தன் கை விளக்கினை உயர்த்தி பிடித்து அரவிந்தனின் முகத்தை பார்த்து, “பூஞ்சோலை பங்களா டாக்டர்ங்களா ?” என்றார்.

“ஆமாங்க. நீங்க யாரு” என்று பதட்டத்தோடும்,குளிர் நடுக்கதோடும் அரவிந்தன் சொல்ல, “ஏதோ,பிரச்சினை” என்று புரிந்து கொண்டவர், “நான் வீரா.உங்க பங்களாவுல வேல பாக்குற கபிலனுக்கு சொந்தம்” என்று சொல்லி,சிறிது யோசித்து,”கபிலன் கூட ஒரு பையன் போறத பார்த்தேன். எதாவது பிரச்சினையா” என்று சந்தேகமாக கேட்டார்.

“அட கடவுளே! கபிலன் கூடவா” என்று நினைத்து,அவரிடம் “எங்க போனாங்க” என்றார் அரவிந்தன்.

“எங்க போவானுங்க இந்த மலைக்கு பின்னால கபிலன் வீடு இருக்கு. அவன் அங்க தான் அந்த பையன கூட்டிட்டு போயிருப்பான்” என்றார் வீரா.

“சரி,நான் இப்ப உடனே, அங்க போகனும்.எனக்கு வழி காட்டுங்க” என்றார் அரவிந்தன்.

“டாக்டர், அந்த வழி அவ்வளவு ஈஸி இல்ல. அவனுங்க போய் இரண்டு மணி நேரத்துக்கு மேல இருக்கும். எதாவது ஜீப் இருந்தா கொண்டு வாங்க. ரோட்டு வழியா மலைக்கு அந்த பக்கம் போகலாம். அது சீக்கிரம் போகலாம்” என்று வீரா சொல்ல, “சரி வா” என்று அவனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து,பங்களாவுக்கு வந்து தனது காரை எடுத்து கொண்டு,உடன் வீரா வழிகாட்ட, கபிலன் வீடு நோக்கி போனார்கள்.

பல மணி நேரம் குறுக்கு பாதை வழியாக நடந்து வந்து,ஹரியை தன் வீட்டிற்குள் அழைத்து வந்தான் கபிலன்.

ஊரை விட்டு தள்ளி காட்டு பகுதிக்கு முகப்பில் இருந்த ஓட்டு வீடு. வீட்டை சுற்றி வேலி போட்டு வன விலங்குகள் ஆபத்தில்லாத வகையில் பாதுகாப்பாக வைத்திருந்தான்.

பல மாதங்கள் கழித்து வீட்டிற்குள் வருவதால், அட்டை பூச்சிகள், விஷ பூச்சிகள், பாம்புகளும் கிடந்தன.அதை பார்த்த ஹரி பயந்து நின்றான்.

“பயப்புடாத, இப்ப சுத்தம் பண்ணிருவேன்” என்று சொல்லியவாறு, உள்ளே இருந்த நாற்காலியை அவனுக்கு துடைத்து போட்டு, “இதுல கொஞ்ச நேரம் உட்காரு. இப்ப சுத்தம் பண்ணிடுறேன்” என்று உள்ளே சென்று வேகமாக சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

பாம்புகளை அடித்து,பூச்சிகளை நசுக்கி வெளியே போடுவதை பாரத்த ஹரி சற்று பயந்தான். லேசாக மழை தூரல் விழ ஆரம்பிக்க, “உள்ள வா,அவ்வளவு தான்” என்று சந்தோஷமாக கபிலன் அழைக்க,சட்டென்று கார் வந்து நின்றது. கார் விளக்கு வெளிச்சத்தில் கண் குசியபடி, “யாரென்று” ஹரி கவனிக்க,கார் சத்தத்தை கேட்டவுடனே, “இது நம் முதலாளி டாக்டர் அரவிந்தன் கார் சத்தம். அவர் தான் வந்துட்டாரு” என புரிந்து, காரை வேடிக்கை பார்த்த ஹரியை இழுத்து, “வா ஓடி போயிடலாம். உங்க அப்பா உன்ன கொன்னுடுவாரு” என்று கத்தினான்.

“டேய்,ஓடாத நில்லுடா” என்றவாறு வலது பக்க கார் கதவு திறந்து அரவிந்தன் இறங்க, இடது பக்க கதவு திறந்து இறங்கி,வேகமாக ஓடி ஹரி கையை பிடித்தான்.
“வீரா அண்ணே! எங்கள விடுங்க” என்றவாறு கபிலன் அவரை பார்த்தான்.
“ஏன்டா! லூசு,டாக்டர் மகனை இப்புடியா கூட்டிட்டு வருவ ?, அந்த மனுஷன் பதறிட்டாரு” என்றபடி ஹரியின் கை பிடித்து டாக்டரிடம் அழைத்து போனான் வீரா.

“அண்ணே! அவரு ஹரிய கொன்னுடுவாரு” என்றான் கபிலன்.

“பெத்த புள்ளைய அவரா கொல்லுவாரு ?” என்றான் வீரா.

பதட்டத்தில், “ஆமாண்ணே!,அவர் புதுசா மருந்து கண்டுபிடிக்கிறேன்னு பொண்டாட்டிய கொன்னுட்டாரு. இப்ப இவன் மேலயும் ஊசி போட்டு,பழச மறக்கடிச்சுட்டாரு. இப்ப இவன எங்கயோ,விக்க போறாரு.அதான் இவன காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்தேன்” என்று கபிலன் வீராவிடம் சொல்லி கொண்டிருக்க, வேகமாக வந்து கபிலனின் கன்னத்தில் ஓங்கி இரண்டு அறைவிட்டு, “முட்டா பயலே! எதுவும் தெரியாம, இப்படி பண்ணாத.உனக்கு எது சொன்னாலும் புரியாது” என்று கபிலனை திட்டி, ஹரியின் கையை பிடித்து இழுத்து கொண்டு கார் நோக்கி நடந்தார்.

“டாக்டர் ஹரிய விடுங்க” என்று ஓடி பிடிக்க முயல, தூரல் மழையில்,சட்டென்று வழுக்கி அவர்கள் முன்னால் விழுந்தவாறே டாக்டர் காலை பிடித்து நகர முடியாதபடி இறுக்கினான் கபிலன்.

நடப்பதை மழையில் நனைந்தவாறே, புரியாமல் வீரா வேடிக்கை பார்க்க, “அப்பா,என்ன விட்டுருங்க” என ஹரி அழுது, கையை விட சொல்லி உதறினான்.

“ஹரி, இந்த கிறுக்கன் பேச்சை கேட்டு தப்பா முடிவு பண்ணாத.  சொன்னா கேளு” என்று காலால் ஓங்கி கபிலனை உதை உதைத்து தள்ளி, ஹரியின் கை பிடித்து காரில் ஏற்றி, கதவை அடைத்து பூட்டினார் அரவிந்தன்.

அவன் என்ன செய்தென்று தெரியாமல் கண்ணீர் வடித்தபடி, ஹரி உள்ளே இருந்தான்.

சுருண்டு விழுந்த கபிலனை, வீரா வேகமாக வந்து தூக்கினான்.
கபிலன் எழுந்து, வேகமாக ஓடி, டாக்டரை  தாக்கி தள்ளினான்.பின் கார் கதவை திறக்க முயன்று முடியாமல் போக, பக்கத்திலிருந்த ஒரு மரகட்டை எடுத்து வந்து பூட்டியிருந்த கார் ஜன்னல் கதவை கட்டையால் அடித்து நொறுக்கினான்.

தட்டுதடுமாறி எழுந்த டாக்டர், கோர்ட் பாக்கெட்டிலிருந்த துப்பாக்கி எடுத்து கபிலன் கையில் சுட, அவன் கட்டையை கீழே போட்டு வலியால் துடித்தான்.
பின்னிருந்து வீரா கட்டையால் ஓங்கி டாக்டர் தலையில் அடிக்க, கலங்கி டாக்டர் கீழே விழுந்தார்.

வேகமாக ஓடி, கீழே விழுந்து கிடந்த கபிலனை தூக்க ஓடினான் வீரா.

மழை தூரலில் தலையில் அடியால் ஏற்பட்ட இரத்ததமும் கலந்து மண்ணில் விழுந்து ஓட,கீழே விழுந்தபடியே, அரவிந்தன் லேசாக தலையை பிடித்தவாரே மெல்ல, துப்பாக்கியால் சுட முதல் குண்டு காரின் வலது புற சக்கரத்தில் பட்டது. மீண்டும் சுட கபிலனை பிடிக்க போன வீரா காலில் குண்டு பட்டு அருகிலிருந்த மரத்தில் மோதி விழுந்தான்.

காரிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்தபடியே ஹரி கதறினான்.

சில நொடிகளில் மழை விட்டு, உயர்ந்த மரங்களின் இலை வழியாக மழைதுளிகள் கீழே, சிறு சிறு குட்டையாக தேங்கிய நீரில் விழுந்த சப்தம் கேட்டது. இருளில் பூச்சிகள்,வண்டுகள் சத்தமும் கேட்டது. கார் விளக்கு வெளிச்சத்தால் அந்ந இடம் மட்டும் இருள் சூழாமல் இருந்தது.

மெல்ல மெல்ல தலையை பிடித்தவாறு எழுந்து வந்து காரின் கதவு பக்கத்தில் சாய்ந்தவாறு கிடந்த கபிலனிடம், “டேய் கிறுக்கா,என்ன எதுன்னு தெரியாம ஏன் இப்படி மடத்தனமா பண்ணுற” என்று சொல்லியவாறு வலி பொறுக்க முடியாமலும், நிலை தடுமாறி அவன் பக்கத்திலே விழுந்து, தட்டு தடுமாறி காரில் சாய்ந்தார். வீராவும் எழுந்திருக்க முடியாமல் அப்படியே மயங்கி கிடந்தான்.

“டாக்டர், ஹரிய உயிரோட விட்டுருங்க” என்றான் கபிலன்.

“ஹரி செத்துட்டான்டா லூசு” என்றபடி வலி பொறுக்க முடியாமல் அரவிந்தன் தவிக்க, அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக பார்த்தான் கபிலன்.

உடைந்த கண்ணாடி வழியே, அரவிந்தன் பேசுவதை கவனித்தான் ஹரி.

வலியை பொறுத்து மெல்ல, “டேய்,நிம்மோரியா வைரஸ் என் மனைவிக்கு இருந்தது. அந்த வைரஸால நாற்பது வயசுக்கு மேல பாதிக்கபட்டா. அதே வைரஸ் ஹரிக்கும் இருந்திருக்கு. இது ஜெனடிக் மூலமா வரும் வைரஸ். இதுக்கு சீக்கிரம் மருந்து கண்டுபிடிச்சு அவங்கள குணப்படுத்த முயற்சி செய்து தோல்வியில முடிஞ்சது. என் மனைவி,மகன் இரண்டு பேரும் இறந்து போனாங்க.

என் மனைவி,மகன் மரபணுவ எடுத்து முதல்ல  குளோனிங்க் மூலம் அவங்கள உருவாக்கினேன். ஆனா அந்த வைரஸ் குரோமோசோம் மூலம் குளோனிங் உடம்புலையும் வைரஸ் வளர ஆரம்பிச்சது. அதில இருக்குற வைரஸ்களை கட்டுபடுத்தி அழிக்க புது புது மருந்துகளை கண்டுபிடிச்சு  அவங்களுக்கு செலுத்தி சோதனை பண்ணினேன். அது நடக்கும் போதே,” என்று அவர் சொன்ன போது,கண்ணீர் வடிய உடைந்த கார் ஜன்னல் வழியாக அப்பாவை நினைத்து ஹரி அழுதான்.

கண்கள் சொறுகி,தலை முழுவதும் இரத்தம் வடிந்த நிலையில், “என் மனைவியோட சில மரபணுவை வச்சு அவள மாதிரியே இன்னும் மூன்று உருவாக்கினேன். இருக்குற குளோனிங் எல்லாத்துலையும் மருந்து செலுத்தி சோதனை பண்ணினேன். வைரஸ் அழியவே இல்ல. எல்லா குளோனிங்கும் அழிஞ்சது. மீதம் இருந்தது என் மகன் மரபணு தான் அதுலையும் குளோனிங் உருவாக்கி, மருந்து கண்டுபிடிக்க தான் இங்க வந்து முயற்சி பண்ணினேன். அது இன்னக்கி வெற்றி அடைஞ்சது. இந்த வைரஸால பல நாட்டுல மக்கள் பாதிக்கபட்டிருக்காங்க. அவர்களை காப்பாத்தவும், கண்டுபிடிச்ச இந்த மருந்தை இலவசமா எல்லாருக்கும்  கிடைக்க ஏற்பாடுகள் பண்ணனும். ஆனா அதுக்குள்ள நீ! இப்படி பண்ணுவன்னு நான் எதிர்பார்க்கல” என்று கபிலனை பார்த்து சொன்னார் அரவிந்தன்.

“என்ன மன்னிச்சிடுங்க டாக்டர்” என்றவாறு நீட்டியிருந்த அரவிந்தனின் காலை பிடித்தான் கபிலன்.

தலை வழி இரத்தம் வடிந்து முகம் முழுக்க இருந்தது. மெல்ல மெல்ல மூச்சு விட்டபடி, “இருபது வயதுடைய ஹரி மரபணுவை எடுத்து குளோனிங் செய்து ஒரு குழந்தையை உருவாக்கினால் அது அறிவும், சிந்தனையும் அப்படியே ஹரி மாதிரி இருக்கும். நடை,உடையில வித்தியாசம் இருக்கும். ஆனா இவன் என் பிள்ளை தான். கடைசி வரை என் பிள்ளை கூட இருக்க முடியல. ஆனா,அவனால வந்தவன் கூடயாவது இருக்க நினைச்சேன். இப்படி முட்டாள் மாதிரி பண்ணிட்டீயே” என்றபடி கார் சாவியை கபிலனிடம் நீட்டி, கதவை திறக்க சமிஞ்கையில் சொன்னார் அரவிந்தன்.

கபிலன் சாவியை வாங்கி மெதுவாக எழுந்து கதவை திறக்க, ஹரி வெளியே வந்து, அவர் அருகில் அமர்ந்து, “அப்பா…..அப்பா…” என்று அழ ஆரம்பித்தான்.

அரவிந்தன் காதிலிருந்து இரத்தம் வர ஆரம்பித்தது. ஆனாலும் ஹரி தோளில் சாய்ந்தபடி, “அழுகாத” என்றபடி கண்களை மூடியபடியே அரவிந்தன் இறந்து விழுந்தார்.

“அப்பா…..அப்பா….” என்று கட்டி தழுவி கதறி அழுதபடி ஹரி துடிக்க,மலை பகுதியில் முன்பு துப்பாக்கி சுட்ட சத்தம் கேட்டு வனதுறை அதிகாரிகள் சிலர் தேடி, கார் வெளிச்சம் பார்த்து அங்கு வந்து சேர்ந்தனர்.

 

 

 

ஆலமரம்

கார்த்திக் கிருபாகரன்

ஆத்தோரம் ஆலமரம் பல ஆண்டா வளர்ந்த மரம்!
ஓங்கி வளர்ந்து தழைத்து தொங்கும் விழுதுகள் நிறைந்த மரம்!
நீடித்த வெயில் அடிக்கயில் நிழல் தந்து காத்த மரம்!
பல புயல் வந்த போதும் களங்காம நின்ற மரம்!
பதினெட்டு பட்டி பஞ்சாயத்துக்கள் நடந்த மரம்!
பலரோட நினைவுகளை சுமந்து நிற்கிற மரம்!

இப்படி சொல்லிகிட்டே போனாலும்,மூன்று நாட்களா பெய்யுற மழை.மிகப் பெரிய சூறாவளி கரை கடந்து போயிருக்கு.அதனால் ‘எப்புடியும் ஆலமரம் சாஞ்சிருக்கும்னு’ ஊருக்குள்ள பேசிக்கிறதை கேட்குறப்ப வேம்பனுக்கு மனசு கவலையாவே இருந்தது.

சூறாவளி வந்து பல வீடு,கூரை,நிலம்,தோப்பு எல்லாம் சேதரமாகிருக்கு.ஆனாலும் அந்த ஊர் மக்களுக்கு ‘ஆலமரத்துக்கு என்னாச்சுகிற’ மனநிலை தான் இருந்தது.

இந்த ஆலமரத்தை வேரோட எடுக்க பல வருஷமா,பல பேர் முயற்சி பண்ணிட்டுதான் இருக்காங்க.அதில் ஐந்து வருஷத்துக்கு முன் ஆளும் கட்சி நான்கு வழி சாலை திட்டத்தை கொண்டு வந்தாங்க.ஊர் சுடலமுத்து எதிர்கட்சி எம்எல்ஏ வா இருந்தார்.
ஊர் மக்களோட சேர்ந்து கடுமையா போராடி ஆலமரத்தை வெட்ட விடாம பண்ணினார்.சாலை திட்டமும் வேறு காரணமா கிடப்பில் போயிடுச்சு. ஆனால் இப்ப ஆளும் கட்சி எம்எல்ஏவாகிட்டார்.
ஆலமரத்தை ஓட்டியே இருக்குற தொடக்கபள்ளிய மேல்நிலை பள்ளிய மாற்ற, 300 வருட பழமையான ஆலமரமத்தை அடியோட வெட்டி பள்ளிகூடம் கட்ட போறத சுடலமுத்து முடிவு பண்ணிருக்கார்.

இந்த செய்தி அந்த ஊர் மக்களுக்கு வருத்தமா இருந்தது. இந்த விஷயத்தால் ஊரில் பஞ்சாயத்து கூடினாங்க.

“ஆனா பள்ளி கொடம் தானே வர போகுது.புள்ளங்க படிப்பு தானே முக்கியம்னு” கிராம மக்கள் நிறைய பேர் மனசை தேத்திக்கிட்டாங்க.ஆனா சில பேரால அது மாதிரி மனசை தேத்திக்க முடியலை. ஏன்னா! இந்த ஆலமரத்தில் தான் எத்தனை எத்தனை பஞ்சாயத்து,தகராறு, சண்டை, கல்யாணம், காதுகுத்துன்னு சகலமும் நடந்து வந்துச்சு.

அந்த பஞ்சாயத்து கூட்டத்தில் வேம்பனும்,அவனோட நண்பர் கூட்டமும் கூட இருந்தாங்க.
பெரியவங்களிலிருந்து சின்னவங்க வரைக்கும் அந்த மரத்துகாக பஞ்சாயத்தில் கூடியிருந்தாங்க.

“அட நீ வேற வம்பு பண்ணாதீங்க.மரந்தானே! ஊருக்கு நல்லதுக்கு இழக்குறோம்ன்னு” சமாதானபடுத்தினார் ஊர் பஞ்சாயத்து தலைவர்.

“அய்யா,இந்த ஆலமரத்துனால தான் நம்ம ஊருக்கு ஆலமரத்துபட்டின்னு பேரு வந்துச்சு. இந்த ஆலமரத்தோட பெருமைய மத்த ஊர்காரர்களுக்கு சொல்லி பெருமைப்பட்டுக்குவோம்.இப்ப நம்ம ஊர் வரலாற்று சின்னத்தையே அழிக்கிற மாதிரி இருக்கு” என்று புரட்சியாளர் செந்தமிழ் வருத்தப்பட்டார்.

அந்த கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவர்களுக்கு செந்தமிழனின் பேச்சு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.மரத்துகாக பேசுறாருன்னு உறுதுணையா இந்த சிறுவர்களும் இருந்தாங்க.
ஏன்னா! பள்ளி முடிந்தவுடன் மாலையில் அந்த ஆல மரத்தின் விழுதுகளை பிடித்து நீண்ட நேரம் விளையாடி விட்டு, அதன்பின் தான் வீட்டிற்கு செல்வார்கள்.விடுமுறை நாட்களும் அந்த ஆலமரத்தடியில் தான் விளையாடுவார்கள்.

பஞ்சாயத்து தலைவருக்கும், செந்தமிழுக்குமான பேச்சு நீண்டு கொண்டே சென்றது முடிவில் “எம்எல்ஏ நம்ம ஊருக்கு நல்லதுதான் பண்ணுறாரு.பெரிய பள்ளிகூடம் நம்ம ஊருக்கு வர கூடாதுன்னு சொல்லாத” என்றார் தலைவர்.

“நான் பெரிய பள்ளி கொடம் வேணாம்னு சொல்லல.அத இப்ப இருக்குற தொடக்கபள்ளிக்கு பின்னால இருக்குற தரிசு இடத்துல கட்ட சொல்லி அரசாங்கத்துகிட்ட பேசுங்க.நல்லது பண்ணாறங்கன்னு நினைச்சு நம்ம வரலாற்றையும்,நினைவா இருக்குற மரத்தை அழிக்கிறத நான் அனுமதிக்கமாட்டேன்.நான் மட்டுமில்ல நம்ம ஊர் மக்களும் பொறுத்துகிட்டு பேசாம இருக்கமாட்டாங்க” என ஆவேசமாக செந்தமிழ் பேசினார்.
ஏதோ நடிகர் சினிமாவில் வசனம் பேசுறத பார்த்து ரசிக்கிற மாதிரி எல்லா சிறுவர்களும்,பெரியவர்களும் செந்தமிழ் பேசுவதை ரசித்தார்கள்.

“ஆமாப்பா,நம்ம தமிழ் சொல்லுறதுல ஒன்னும் தப்பில்லையே! நாம வளந்த மரம் அது” என்றார் ராசு மாமா.

“என் வயசு ஆளுக படிச்சது கூட ஆலமரத்தடியில் தான். அந்த காலத்துல டீச்சர் ஆலமரத்து அடியில் தான் எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தாங்க. அதெல்லாம் மறக்க முடியுமா!” என பல் இல்லாத பொக்கை வாயில் சிரத்தபடி நினைவை பகிர்ந்தார் வேலு தாத்தா.

“நம்ம ஊர் மக்கள் கருத்த தலைவர் அய்யா ஏத்துகனும்.நம்ம ஊர் ஓட்டுதானே அவர் எம்எல்ஏ ஆகிருக்காரு.நாம சொன்னா, செய்யமாட்டாரா!” என கூட்டத்தில் பாதி மக்கள் கூச்சலிட்டனர்.

“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆலமரத்த வெட்டகூடாதுன்னு போராடின எம்எல்ஏ.இப்ப ஏன் வெட்ட நினைக்கனும்.தொடக்கபள்ளி பின்னாடி இருக்குற தரிசு நிலத்த தனக்கு சொந்தமாக்க எதுவும் திட்டம் போடுறாரோ?” என்று விலங்கமான கேள்வியா கூட்டத்தில் செந்தமிழ் கேட்கவும்.எல்லாரும் அமைதியாகி யோசிச்சாங்க.

அதுவரை அமைதியா இருந்த தலைவர் எழுந்து,”எம்எல்ஏ என்ன திட்டம் பண்ணுறாருன்னு தெரியல. நான் தப்பு பண்ணிட்டேன். புள்ளைங்க படிப்புக்காகன்னு இப்படி நெனச்சேன். ஆனா நம்ம நினைவு அது. வெட்டகூடாது. வெட்டவும் உட மாட்டேன். என் புத்தியில படுற மாதிரி சொன்னீங்க. கண்டிப்பா நான் எம்எல்ஏ கிட்ட பேசுறேன் அந்த மரத்தை வெட்டாம பின்னாடி பக்கம் ஸ்கூல் கட்ட ஏற்பாடு பண்றேன்” என்றார் தலைவர்.

“நல்ல முடிவா எடுங்கன்னு” சொல்லி கூட்டம் கலைய ஆரம்பிச்சது.

செந்தமிழை பார்த்து மணி, “அண்ணே,மரத்த வெட்டமாட்டாங்கள்ல” என்றான்.

சிரித்தபடி நின்றார் செந்தமிழ்.

“அண்னே, எதாவது சொல்லுனே!” என்றான் சாமி.

“தம்பி, பஞ்சாயத்து தலைவர் எதிர்கட்சி.எம்எல்ஏ ஆளுங்கட்சி. அவங்க திட்டத்துக்கு இவங்க எதிர்பாங்க.அதனால மரத்த வெட்ட வாய்ப்பு கம்மிதான்”

“அப்போ,தலைவர் ஆளுங்கட்சி ஆகிட்டா?”

“இதே திட்டத்துக்காக மரத்த வெட்டுவாங்க”

குழப்பமா,” என்னனே,இது” என்றான் மணி.

“அதான் அரசியல்ப்பா”

வாயை பொத்திக்கொட்டு நமட்டு சிரிப்பு சிரித்து,”அண்ணே,நீ அரசியலுக்கு வந்து,தலைவராகி,இத தடுக்கலாம்ல”என்றான் வேம்பன்.

“நம்ம தாத்தா,அப்பா எல்லாம் 60 வருஷமா,மாத்தி,மாத்தி ஓட்டு போட்டு இவகிட்ட நாட்ட குடுத்திட்டாங்க.புதுசா,வந்து என்ன சொன்னாலும்,இவுகளுக்கு புரியாது.பட்டு திருந்தட்டும்” என்று சொல்லிவிட்டு செந்தமிழ் கிளம்பினார்.

பொழுது சாயும் நேரம் சிறுவர் கூட்டம் ஆலமரத்தடியில் கூடியது.

“மரத்த வெட்டாம இருக்க ஏதாவது செய்யணும்” என்று சிறுவர் கூட்டம் யோசிக்க ஆரம்பிச்சது.

“நாம செஞ்ச சின்ன புள்ளைங்க இதுல தலையிடாதீங்கன்னு நம்மள கொட்டி உட்கார வப்பாங்க. அதுக்காக நம்ம மரத்தை வெட்ட முடியுமா ?, நாம விளையாடுற மரம். இந்த மரத்தை எப்படியாவது காப்பாத்தணும் ஏதாவது வழி இருந்தா சொல்லுங்கன்னு” ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு யோசனை சொல்ல ஆரம்பிச்சாங்க. இருட்டவும் ஆரம்பிச்சது. அப்ப அங்கிருந்த வேலு தாத்தாக்கிட்ட யோசனை கேட்டாங்க.

பொக்க வாயில சிரித்தபடியே, “அந்த காலத்துல, நிறைய மரம் நட்டாங்க.அப்பறம், சில பேரு மரத்த வெட்ட ஆரம்பிச்சு,அதையே வியாபாரம் பண்ணாங்க. அப்போ, மரத்த காப்பாத்த,நாங்கெல்லாம் புள்ளையார் சிலை,சூலம்,மஞ்ச துணின்னு மரத்துல கட்டி விடுவோம்.சாமி இருக்குற மரம்னு யாரும் வெட்ட மாட்டாங்க. பயபுடுவாங்க.இப்புடிதான் மரத்த காப்பாத்தினோம்” என்றார்.

அப்போ வேம்புக்கு ஒரு யோசனை தோணுச்சு. “டே,எனக்கு ஒரு யோசனை தோணுது. நாம எல்லாரும் அய்யனார் கோயிலுக்கு போலாம் வாங்க” அப்படின்னு சொல்லி அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து அய்யனார் கோயிலுக்கு வந்தாங்க. சுத்தி முத்தி பாத்தாங்க யாருமே இல்லை. அய்யனார் சாமிகிட்ட வேண்டிக்கிட்டு. அங்க இருக்க ஒரு அரிவாளை பிடுங்குனான் வேம்பு.அந்த அரிவாளை தூக்க முடியாம தூக்கிட்டு நின்னான். எல்லாருக்கும் பயம் வர ஆரம்பிச்சது. “டேய் எதுக்குடா அரிவாள புடுங்குனன்னு” பயந்தான் மணி. “எல்லாம் ஒரு காரணமாத்தான்” அப்படின்னு சொல்லிட்டு, அத தூக்கிட்டு ஆலமரத்துக்கு வந்து, சுத்திமுத்தி பார்த்து ஆலமரத்து கீழ குத்தி வச்சான்.மஞ்ச துணி எடுத்து மரத்துல கட்டி விட்டான்.வேம்பு செய்றது மத்தவங்களுக்கு புரிந்தது.

எல்லாம் முடிச்சு,”டேய் யார் எது கேட்டாலும் எதுவும் தெரியாத மாதிரியே இருங்க” என்றான் வேம்பன்.

“அரிவாள குத்துனா,யாரும் எதுவும் பண்ணமாட்டங்களா ?”

“செய்யமாட்டாங்க.வேலு தாத்தா சொன்ன மாதிரி சாமி மரம்னு வெட்ட மாட்டாங்க.சாமி ஊர காப்பாத்துற மாதிரி,மரத்தையும் காப்பாத்தும்” என்றான் வேம்பன்.

“எப்படியோ,மரத்த காப்பாத்திடலாம்னு” நினைச்சு எல்லா சிறுவர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டு அரிவாளை கும்புட்டு,அங்கிருந்து கிளம்புனாங்க.

இரவு பொழுதிலே தென்மேற்கு பருவமழை சூறாவளியாய் சுழன்று வந்தது. பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்தது. சூறாவளி சுழன்று அடித்தது.மூன்று நாட்கள் தொடர்ந்தது.வீட்டை விட்டு வெளி வரமுடியாத சூழல் நிலவியது.ஆனால் ‘ஆலமரம் சாய போகுதுன்னு” பேச்சு ஊருக்குள்ள உலாவுச்சு.

“அம்மா ஆலமரம் சாஞ்சிருமா ?” என்றான் வேம்பன்.

“25 வருஷத்துக்கு முன்ன இப்புடிதான் சூறாவளி வந்து,மரத்த சாய்க்க பாத்துச்சு. ஆனா சாயல. அதுமாதிரி இப்பவும் சாயாது” என்றாள்.

ஆனால் இன்று உலா வரும் செய்தி பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

சூறாவளி வேகத்தால் தாக்குப் பிடிக்க முடியாத இந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. கிராமங்களில் ஆற்று நீர் உட்புகுந்து, பல வீடுகளும் சேதமானது.

“ஆலமரம் விழுந்துருச்சு” என்ற தகவல் ஊர்முழுக்க பரவியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஊரே ஓடிவந்தது. கீழே விழுந்து கிடந்த மரத்தை கட்டிக் கொண்டு மக்கள் அழுதனர். ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வகையில் ஆலமரம் பல நிகழ்வுகளை தந்ததை நினைத்து நினைத்து கதறினர். வேம்பன்,மணி என சிறுவர்கள் கூட்டம் நிலைக்குலைந்து கண்ணீர் வடித்தார்கள். ஊன்றி வைத்த அய்யனார் அரிவாள் சரிந்து கிடந்த இடத்தில் மண்டி போட்டு “மரத்த ஏன் காப்பாத்தலன்னு” அழுதான் மணி.

விசிட் விசா

கார்த்திக் கிருபாகரன்

துபாய் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் இரண்டாவது தளத்தை சுத்தம் பண்ணிட்டு இருந்த ஜோதிலிங்கத்துக்கு தன் நண்பனும்,எதிரியுமான சூசைய பார்த்தவுடனே இனம்புரியாத மகிழ்ச்சி. ஆனா எதையும் வெளிக்காட்டிக்காமல் வேலையை பார்த்தான். சூசைக்கும் லிங்குவ பார்த்தவுடனே, ரொம்ப சந்தோஷம். அவன்கிட்ட பேசுறதுக்கு பக்கத்துல வந்து, “டேய் லிங்கு, எப்படி இருக்கடா ? நல்லா இருக்கியா? துபாய் வந்தா உன்னைய பார்ப்பேன்னு நெனச்சேன். பார்த்துட்டேன்டா. நீ இங்கதான் வேலை பாக்குறியா?” அப்புடின்னு கேள்வி மேல கேள்வியா கேட்டான். ஆனால் பதிலேதும் சொல்லாமல் லிங்கு வேலைய பார்த்துகிட்டே  பேசாம இருந்தான்.

ஊர்ல தெருக் கூத்து நாடகத்துல நடந்த கைகலப்புனாலதான் லிங்கு இப்ப பாத்தும் பேசாம இருக்குறதா சூசை நினைச்சான்.  ஆனா காரணம் அந்த சூப்பர் மார்க்கெட் சூப்பர்வைசரோட கெடுபுடிதான். வேலை பார்க்கிறப்ப  பேசிக்கொண்டு இருந்தாலும், வேலை எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துட்டு  இருந்தாலும், தண்டனை கடுமையா இருக்கும், ஒருநாள் சம்பளத்தை நிறுத்திடுவாங்க. அதான் லிங்கு பேசாம இருந்தான்.

தலை குனிந்தபடியே சூசைய பார்த்து, “டேய் பேசாம போடா,” அப்படின்னு சொல்லிட்டு வாலியை தூக்கிகிட்டு, துடைப்பத்த எடுத்துக்கிட்டு முதல் தளத்தை சுத்தம் பண்ண போனான்.

“அட கடவுளே! பேச கூட மாட்டானா, இவ்வளவு ரோசமா இருக்கான். வெளிநாட்டுல ஊர்க்காரன்தான் ஒத்தாசை ஆனா, இவன் இப்புடி இருக்கானே, எப்புடி வேல செய்ய போறேன்”னு நினைச்சு, லிங்கம் வேலை செய்றதையே வேடிக்கை பாத்துட்டு நின்னான் சூசை.

*

மாலுக்கு பின்னாடி நடை பயணமா 10 நிமிடம் போனவுடனே, கண்டைனரை ரூம் மாதிரி தயார் பண்ணிருந்தாங்க. அதில் ஒரு ரூம்ல ஆறு பேரு. ஏசி ரூம். அதில் ஒரு கட்டில் மூணு தளமா இருந்துச்சு. அதில் இரண்டாவது தளத்தில் சூசைக்கு தங்க இடம் கிடைச்சது. ரூமுக்கு ஒரே ஒரு பாத்ரூம். சாப்பாடு நம்மளே தான் சமைச்சு சாப்பிடனும். அதுக்கு தனியா இந்திய மதிப்பு 1000 ரூபாய் கொடுத்துடுவாங்க. சமைத்து சாப்பிடுவதற்கு ஒரு அடுப்படி இருந்துச்சு. இப்படி நெருக்கமான, இறுக்கமான இடம்தான். ஆனால் எல்லாத்தையும் சகித்துக் கொண்டுதான் வாழணும்னு கட்டாயம்.லிங்கத்துக்கு பக்கத்து ரூம்தான் சூசை இருந்தான்.

வேலை நேரம் கணக்கே கிடையாது. காலையில ஏழு மணிக்கு போய் வேலை ஆரம்பித்தால் நைட் பதினொரு மணி வரைக்கும் வேலை இருக்கும். மதியம் உணவு இடைவேளை. ஓய்வு என்பது கொஞ்ச நேரம்தான். ஆச்சரியம் கலந்த இந்த வெளிநாட்டு வாழ்க்கை. அரபு நாடுகளில் ரம்ஜான், நோம்பு நாள்கள் வந்தால் சந்தோஷம் தான். ஏன்னா! அப்போது வேலை நேரம் ரொம்ப குறைவு. “இரவு 11 மணிக்கு தான் ஜோதிலிங்கம் வேலைய முடிச்சுட்டு வருவான். அவன்கிட்ட பேசனும்”னு சூசை காத்திருந்தான்.

மேடை நாடகங்களில் சூசையும், ஜோதிலிங்கம் சேர்ந்து நடிப்பார்கள். இவர்கள் நடிக்கும் தெருக்கூத்துகள் அந்த பகுதியில் பிரபலமாக இருந்தது. தன் விவசாய நிலங்களையும் கவனித்துக்கொண்டு பல ஊர்களில் கூத்து கட்டிக்கொண்டும் வாழ்ந்து வந்தார்கள் அதில் ஜோதிலிங்கம் ராஜபாட்டை ஆக இருப்பான். சூசைக்கு முதலில் ஒண்டிபுலி என்றுதான் பெயர். எல்லா தெருக்கூத்திலும் லிங்கம் ராஜபாட்டையாக நடிப்பது அவனுக்கு பிடிக்காமலே இருந்தது.

அன்று பக்கத்து கிராமத்தில் ‘பாஸ்கா திருவிழிப்பு’ இயேசு கிறித்து சாவிலிருந்து விடுதலை பெற்று உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி நாடகம். அந்த நாட்களை கத்தோலிக்க திருச்சபையும், பிற கிறித்தவ சபைகளும் எல்லா ஆண்டும் சிறப்பிக்கின்ற கொண்டாட்டம். அதில் இயேசுநாதர் கதாபாத்திரத்தில் சூசை நடிக்க ஆசைப்பட்டான். ஆனா லிங்கம்தானே ராஜபாட்டை. அந்த பாத்திரத்தை அவனே ஏற்று நடிச்சான். ஏன்! ஆண்டுதோறும் கத்தோலிக்க திருச்சபை இந்த உயிர்த்தெழும் நாடகத்தை லிங்கத்தோட குழுவைதான் அந்த ஊர்க்காரர்கள் செய்ய சொல்லுவார்கள். அதுலேயும் “இயேசுநாதர் கதாபாத்திரத்திற்கு ஜோதிலிங்கம் அவ்வளவு பொருத்தமாக இருப்பான்”னு அவனையே நடிக்க சொல்லுவார்கள். அந்த விஷயத்துல லிங்கம் மேல சூசைக்கு பொறமை அதிகமாவே இருந்தது.

அந்த நாடகத்துல ஏசு நாதர் சிலுவையைச் சுமந்து கொண்டு போற போது சாட்டையால் அடிக்கும்  காட்சி. சாட்டையை சுழற்றி, இயேசுவை அடிக்க வேண்டும். அது பார்ப்பவர்களுக்கு இயேசு மேல் படுவதாக தெரிந்தாலும்,சாட்டையடி சிலுவையில் தான் பட வேண்டும். சாட்டை சுழற்றி அடிக்கும் காவலாளி வேடத்தை சூசை ஏற்றிருந்தான். அப்போது சாட்டையால் அடித்தான். சிலுவையில் படவேண்டிய சாட்டையடி லிங்கத்தின் மேல் “பளீர்ர்…” என பட்டது. கனமான சிலுவையை சுமந்து கொண்டும், நிஜ சாட்டையடி வாங்கியும் லிங்கத்துக்கு கண் கலங்கி, தத்ரூபமாக நடித்தான். அந்த காட்சியை பார்த்த மக்களுக்கே கண்ணீர் வந்தது. அந்த காட்சியில் மூன்று முறை ஏசுநாதரை காவலாளி அடிக்கனும். இரண்டாவது முறையும் சாட்டையடி சிலுவையில் படாமல் லிங்கத்தின் மேல் பட்டது. லிங்கத்துக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. “இவன் நம்மல வேணும்னே அடிக்கிறானோ!” என்று நினைத்தாலும் வலியைப் பொறுத்துக்கொண்டு தொடர்ந்து நடித்தான். மூன்றாம் முறையும் சாட்டையடி லிங்கத்தின் மேல் பட்டது. வலி பொறுக்க முடியாமல் கீழே விழுந்தான். அந்த காட்சி மேலும் தத்ரூபமாக இருந்ததால், கிராம மக்கள் அமோக ஆதரவு தெரிவித்தனர்.

நாடகம் முடிந்தது, லிங்கத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தது. பின் லிங்கம் சூசையை தனியாக சந்தித்து பேசியபோது, சூசையின் தவறான எண்ணத்தை  புரிந்து கொண்டான். பேச்சு வார்த்தை ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் கைகலப்பானது. அந்த சண்டைக்கு பின் லிங்கமும், சூசையும் சேரவே இல்லை. நாடகக் குழுவும் இரண்டாகி போனது. அந்த நிகழ்ச்சிக்கு பின் சில கலைஞர்கள் வேற தெருக்கூத்தில் இணைய ஆரம்பித்தார்கள். சிலர் வேற வேலைக்கு போக ஆரம்பித்தார்கள். லிங்கம் பிழைப்புகாக ஏஜெண்ட் மூலம் துபாய் வேலையில் சேர்ந்தான். சூசை அந்த தெருக்கூத்து பார்க்க வந்த ஒரு பொண்ணை காதலிச்சு அவளைக் கூட்டிக்கிட்டு ஓடிப் போயிட்டான். பின் இரண்டு வருடத்துக்கு பின் குடும்பத்தினரோடு சமாதானம் ஏற்பட்டது. அந்த திருச்சபையிலேயே ஒண்டி என்கிற பெயர் மாற்றி ‘சூசைன்னு’ ஞானஸ்தானம் வாங்கினான்.

சூசையோட படிப்பு தகுதிக்கு வேலை ஏதும் இல்லை. திருச்சபை மூலமா இரண்டு லட்ச ரூபா கடனுதவி ஏஜென்ட்கிட்ட கொடுத்து, துபாய்க்கு விசிட் விசா மூலமா போக வச்சாங்க. விசிட் விசா மூலமாக துபாய் வந்து, துபாயில இருக்கிற பல கம்பெனிகளுக்கு, ஏஜென்ட் கூட்டிட்டு போவான்.

அந்த கம்பெனிகள் ஏஜென்ட் கூட்டிட்டு வர ஆட்களை இண்டெர்வியூ மூலமா தேர்வு செய்வாங்க. எப்படியும் 10 க்கு மேல கம்பெனி ஏறி இறங்குற மாதிரி இருக்கும். சிலர் வெளிநாட்டு வாழ்க்கை ஆசையில் வந்தவர்கள், இந்த விஷயம் ஒத்துவராமல் திரும்ப டிக்கெட் போட சொல்லி இந்தியாவுக்கு கிளம்பி போயிடுவாங்க. ஆனால் சிலர் காத்திருந்து பல கம்பெனி ஏறி இறங்க தயாரா இருப்பாங்க. இதுல எத்தனை நாள் ஆனாலும் துபாய்ல தங்குற செலவு, நம்ம செலவு தான் இருக்கும். ஏஜென்ட் பத்து பைசா கூட செலவு செய்ய மாட்டான். இப்ப வந்திருக்க 50 பேரும் அப்படிதான் சேர்ந்து கூட்டிட்டு வந்திருந்தான். எல்லாம் வேற வேற ஊரை சேர்ந்த ஆட்கள். அதுல 20 பேருக்கு மேல பயந்துகிட்டு, ஊருக்கே திரும்பி கிளம்பி போய்ட்டாங்க. அவர்களுக்கு கட்டுன பணம் திருப்பி கிடைக்குறதும் சந்தேகம்தான். மீதி இருக்கிற ஆட்கள் எல்லாம் கடன் பிரச்சனை, குடும்ப பிரச்சினை, குடும்பத்தை காப்பாத்தணும் என்கிற எண்ணத்தில் வந்தவங்க. அதனால வேற வழி இல்லாம, “ஏதோ ஒரு வேலை கிடைச்சா போதும்”ன ஏஜென்ட் சொல்லுற சம்பளத்துக்கும், கம்பெனிக்கும் வேலைக்கு சேர ஆரம்பிச்சாங்க. சிலர் துபாயில் குப்ப அள்ளும் வேலை, ரோடு போடுற வேலை, செக்யூரிட்டி வேலை அப்படின்னு ஏஜெண்ட் மூலமா சேர்ந்தாங்க.அது சம்பளம் குறைவான வேலை. மீதம் இருக்குற ஆளுங்க சூப்பர் மார்க்கெட்ல வேலைக்கு சேர வந்தாங்க.

அப்படி சூசை சேர்ந்ததுதான் இந்த சூப்பர் மார்க்கெட் வேலை. இதிலேயும் ஏஜென்டு சொன்ன சம்பளம் எதுவுமே இல்லை. வேலை நேரமும் அதிகம். “ஊர்ல ஏஜெண்ட் சொன்னது எல்லாமே பொய்”ன்னு இங்க வந்து தான் சூசை தெரிஞ்சுகிட்டான்.

*

ரூம்ல கட்டில்ல அழுது கொண்டிருந்தான் சூசை. அப்போ லிங்கம் வந்தான்.

“டேய் எப்படிடா இருக்க. உன் மனைவி, குழந்தையெல்லாம் சவுக்கியமா?” என அன்பா கேட்டான் லிங்கம்.

“நல்லா இருக்கேன் ஜோதி,” என கண்ணீர் விட்டான்.

“ஏன்டா அழுகுற”

“நான் தான் வந்து உனக்கிட்ட பேசுனேன். நீ ஒன்னுமே பேசல. ஏன்டா, நம்ம ஊர்ல நாடகம் போட்டப்ப உன்னைய அடிச்ச கோபம்தான் இன்னும் என் கூட பேச மாட்டியா?” என்றான் சூசை.

“டேய் கிறுக்கா, பேசினா திட்டுவாங்க. கெடுபிடியான வேலை. அதனாலதான் பேசல. சரி ஊர்ல இருந்து என்ன சாப்பிட கொண்டு வந்த”ன்னு ஜாலியா கேட்டான் லிங்கம்.

“நம்ம ஊரு முறுக்கு இருக்குடா. நெய் முறுக்கு இருக்கு. கார முறுக்கு இருக்கு,” அப்படின்னு முறுக்கை எடுத்து காமிச்சான். ஏதோ காணாததை கண்ட மாதிரி எடுத்து சாப்பிட ஆரம்பிச்சான் லிங்கம்.

அவன் சாப்பிடுவதை பார்த்தவுடனே சூசைக்கு புரிஞ்சது, எவ்வளவு பஞ்சமா இருக்கணும். நல்ல சாப்பாடு கிடைக்காது போலன்னு தோணுச்சு.

சாப்பிட்டுகிட்டே, “இந்த வேலைக்கு எப்புடி வந்த”ன்னு கேட்டான் லிங்கம்.

ஏஜெண்ட் மூலமா தான் வந்த கதைய வருத்தமா சூசை சொன்னான். “நீ எப்படி”ன்னு கேட்டான்.

“அடப்பாவிகளா! சண்ட போட்டதுக்கு அப்பறம், வேற குழுவுலயும் சேர முடியல. சேர்ந்தாலும் பின் பாட்டுதான் பாடுனேன். மழ இல்ல, விவசாயமும் பண்ண முடியல. ஏதோ காசு பொரட்டி, வெளியூர் கரீம் ஏஜெண்ட்க்கு குடுத்து வேலக்கி கேட்டேன். ஏஜென்ட், “துபாய் வேலை, 40,000 ரூபாய் சம்பளம்”ன்னு சொல்லிதான் என்னையும் கூட்டிட்டு வந்தான். இங்க வந்தா, எந்த ஒரு கம்பெனியும் 25,000 ரூபா சம்பளத்துக்கு மேல தர சம்மதிக்கல. பத்து நாளுக்கு மேல ஆகவும், பயம் வர ஆரம்பிச்சது. வீட்டுக்கு பேச முடியல. கையில காசும் இல்லை. அதனால வேற வழி இல்லாம சூப்பர் மார்க்கெட் வேலைக்கு ஒத்துகிட்டேன். இங்கேயும் கௌரவமா பொருள் எடுத்துக் கொடுக்கிற வேலை, அதுவும் 40 ஆயிரம் சம்பளம்ன்னு நினைச்சேன்.ஆனா, வெறும் 20 ஆயிரம் சம்பளத்துக்கு தான் ஏஜெண்ட் வேலைக்கு சேர்ந்து விட்டுருக்கான். சாப்பாட்டுக்கு  ஆயிரம் ரூபாய் தனியா கொடுத்துடுறாங்க. நானும் வேற வழி இல்லாம இருக்கேன்.இரண்டு வருடம் ஆக போகுது,” தன் கஷ்டத்தை சொன்னான் லிங்கம்.

“இப்புடி வரவச்சு வேல தராங்க. இதுல கம்பெனிக்கு என்ன லாபம்”

“நம்ம நாட்டுல வந்து வேலைக்கு எடுத்தா உன்னைய துபாய் கூட்டிட்டு வர்ற செலவு எல்லாம் கம்பெனி தான் பார்க்கணும். விசிட் விசாவுல வர வெச்சு கம்மி சம்பளத்துல வேலைக்கு எடுப்பாங்க. அந்த வகையில, ஒரு லட்சம் வரைக்கும் கம்பெனிக்கு லாபம். நீ சரியா வேலை செய்யல, இல்ல கம்பெனிக்காரனுக்கு புடிக்கலன்னா, ஒரு மாசத்துல உன்னைய  அனுப்புவாங்க. அதனாலதான் இப்படி ஏஜென்ட் மூலமா செய்றாங்க”

“சரி… பாக்குற வேலை ரொம்ப கஷ்டமாடா”

“போகப் போக நீயே புரிஞ்சுக்குவ,”அப்படின்னு சொல்லிட்டு, “சரிடா எனக்கு ரொம்ப தூக்கமா வருது. நீ சாப்பிட்டியா?”

“இல்லடா இன்னும் சாப்பிடல”

“சரி, வா என் ரூம்ல குப்புஸ் ரொட்டி இருக்கு தரேன்”

“அப்புடின்னா?”

“நம்மள மாதிரி காசு இல்லாதவங்களுக்கு காசு கம்மியா கிடைக்கிற ரொட்டி.  அத வாங்கி சாப்புட்டு தான் நிறைய நாள் நான் பசிய தீர்த்துருக்கேன்”

“சரி”ன்னு தலையாட்டிட்டு ரொம்ப நேரம் யோசனை பண்ணிக்கொண்டு இருந்தான் சூசை.

“ஏன்டா, வேலைய நெனச்சு யோசிக்கீறியா?” அப்படின்னு ஜோதிலிங்கம் கேட்டான்.

நிமிர்ந்து பார்த்து, “ஆமா ஊர் நாடக ராஜபாட்டை உனக்கே துடக்கிற வேலன்னா எனக்கு என்ன வேலை கிடைக்கும்ன்னு யோசிச்சேன்,” அப்படின்னு பெருமூச்சு விட்டான் சூசை.