தி இரா மீனா
ஏரியில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்துடன்தான் அவள் இங்கு வந்திருக்கிறாள். காரை நிறுத்த முயன்றபோது அவள் பார்த்த காட்சிகள் : வைக்கோல் மூடிய குடிசை, அதன் முன்னாலி்ருக்கும் தற்காலிகக் கடை, கடையில் உள்ள குண்டு பெண்மணி, அவள் மடியில் ஒரு குழந்தை, இரண்டு குலை வாழைப்பழங்கள், பீடி பற்ற வைத்துக் கொண்டிருக்கும் ஒரு முதியவர். ஏரியில் படர்ந்திருக்கும் பச்சை இலைச் செடி.
அங்கிருக்கும் சிறுகுன்றின் வலது புறத்திலிருந்த சாலை தெளிவாகத் தெரிய, விளக்கு வெளிச்சத்தோடு வந்த ஒரு கார் கணத்தில் கண்ணிலிருந்து மறைந்து விட்டது. பௌர்ணமியின் போது கூவுமே, கீச்சென்று ஒலிக்குமே! அது என்ன பட்சி? ஏரியிலிருந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. இப்படியே நான் உட்கார்ந்திருந்தால், என்னால் பார்க்க முடியும், கேட்க முடியும். விரைவில் விடியல் வர என்னைப் பார்த்து சூரியன் எழுந்து விடுவான். நான் இறந்து விட்டால், இவை எதுவுமில்லை.
இதற்கு பின்னாலுள்ள புதரில் கார நெடியுடைய இலைகள் இருக்கின்றன. அதற்குப் பின்னால் யாரோ உட்கார்ந்திருக்க வேண்டும். அவர் சீக்கிரமாக வர மாட்டார். ஓர் ஆணாக இருக்க வேண்டும். அல்லது என்னைப் போல நவீனமான பெண்ணாக இருக்கலாம். நான் முடித்ததற்குப் பின்னால் அந்த ஆள் வந்திருந்தால், எனக்கு காலடிச் சத்தம் கேட்டிருக்கும். இப்போது அந்தப் பக்கத்திலிருந்து சிகரெட் புகை நெடி.
தலைமுடி முதுகில் விரிந்திருக்கும்படியாக அவள் தளர்வாகக் கட்டியிருந்தாள். தண்ணீரில் மூழ்கி இறக்கும்போது பிணத்தின் முகம் வீங்கி விடும். அவள் சிறுமியாக இருந்தபோது எல்லோரையும் கவர்ந்த இடது கன்ன மச்சம் முகவீக்கத்தில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடும். உடல் மேலிருந்து கீழாக மிதக்கும்; அவளுடைய கருமையான தலைமுடி தண்ணீரின் மேல் படரும். அனாதை கால்நடையின் அசை போடும் தொலை பார்வையைப் போல அவள் கண்கள் ஒன்றுமில்லாததை வெறித்திருக்கும். நிர்வாணம்–ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும் அதைச் சொல்வது எளிதல்ல.
அந்த உறுதியான கணத்தை ஞாபகத்தில் வைத்திருக்க முடியவில்லை; அப்படி ஒன்று இருந்ததாக நினைவு; அது நித்திய நிலையாகவும் தெரிந்தது. மனைவியின் கன்னத்தில் கணவன் அறைவது பெரிய விஷயமில்லை; காதலிக்கும் ஒருவரை அடித்து கூட விடலாம். செத்துப் போ, செத்துப் போ செத்துப் போ—அவன் அந்நியமான தொனியில் சொன்னான். அந்தச் சத்தம் அவளுக்குள்ளிருந்து வெளிப்பட்டு வந்ததைப் போலிருந்தது. அவன் கண்கள் கொலை வெறியோடு உற்றுப் பார்த்தன.அந்தக் கத்தலுக்குப் பிறகு அவன் தளர்ந்து சரிந்தான். அவன் முகம் பிணம் போல வெளிறிக் கிடந்தது. காதுகளைச் சம்மட்டியால் அடித்தது போலானான். அவன் மீசை, வில் புருவங்கள், இன்னமும் பெண்களைக் கவரும் அழகான முடி ஆகியவை உல்லாசமானவனாகக் காட்டின. அவனிடமிருந்து சிரிப்பு எழுந்து மறைந்தது. மகன்? ஊட்டியில் படிக்கிறான். முன்னாள் டென்னிஸ் சாம்பியனான தந்தையை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் எப்படியோ வளர்ந்து விடுவான். மெதுவாக எல்லாவற்றையும் மறந்து விடுவான்.
இவற்றிற்கெல்லாம் காரணம்? கண்டுபிடிக்க முடியவில்லை.
யாருடைய தவறு? அவன்தானே என்னைக் காதலித்தான்? தன் தந்தையோடு சண்டை போட்டு என்னைத் திருமணம் செய்து கொண்டான். தனது சொத்தில் பாதியை விற்று என்னை அமெரிக்காவிற்கு அழைத்துப் போய் நாடகக் கல்லூரியில் படிக்க வைத்தான். யார் முதலில் தவறு செய்தது? அது குறித்து நாங்கள் நூறு தடவை சண்டை போட்டுக் கொண்டாகிவிட்டது.
அந்தத் தவறுகள் எங்களை பதினைந்து வருடம் பின்னிப் பிணைய வைத்திருந்தது. இப்போதும் கூட நான் இல்லாதபோது அவன் எப்படி மனம் விட்டுச் சிரிக்கிறான். அவனுடைய ஆரோக்கியமான பற்கள் கருப்பு மீசையின் பின்புலத்தில் ஒளிரும். பெண்கள், எங்கள் இருவரையும் அறிந்தவர்கள் என்னை மட்டுமே பொறுப்பாக்கினர்கள். வெறுப்பும் கூட காதலைப் போல களங்கமற்ற உணர்ச்சிதான் என்பது அவளுக்கு ஆச்சர்யம் தருவதாக இருந்தது.
அவள் தன் முடியைத் தொங்கவிட்டாள். அவள் கண்கள் நிலவொளியில் மிளிர்ந்தன; அவைகளைச் சுற்றிக் கோடுகளிருந்தன. அவளுக்கு முப்பத்தி ஐந்து வயது. இன்னும் இளமையாகத்தானிருந்தாள்.
கடந்த இரண்டு வருடங்களாக அவர்களிடையே எதுவுமில்லை. இந்த வெறுப்பின் கொடூரத்தில் அவள் உடல் வேறுவிதமான பொலிவு பெற்றது. அவள் மற்றவர்களால் பார்க்கப்பட்டாள். அதை அவள் அழுத்தமாகவும் சொன்னாள். அது ஒருவிதமான கர்வத்தையும் அவளுக்குத் தந்தது. அதனால் அவனுக்கு அவளைக் கொல்லவேண்டும் போலிருந்தது என்பது கூட ஞாபகத்தில் வந்தது.
புதரின் பின்னாலிருந்த மனிதன் அணைக்காமல் சிகரெட்டைத் தூக்கிப் போட்டான். அத்துண்டு நிலவொளியில் இன்னமும் ஒளிர்ந்தது.
அவள் தன் பையிலிருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்தாள். ஆனால் அவளிடம் நெருப்புப் பெட்டியில்லை.
தூங்கும் பறவைகளைப் போல அவள் கைகள் மடியின் மீது இன்னமும் இருந்தன. அந்த மனிதனிடம் நெருப்புப் பெட்டி கேட்கலாமா? செத்துப் போவது அர்த்தமற்றது என்று திடீரென அவள் நினைத்தாள். இது புதிய உணர்வில்லை, ஆனால் அவள் எப்போதும் உணர்வதுதான் என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். இன்னொரு கார் மேலே போகிறது. பறவை கூவுகிறது. ஏரியின் தண்ணீர் நிலவொளியில் லேசாக நடுங்குகிறது. அந்த முதியவர் பீடி பற்ற வைத்ததை நினைக்கிறாள். சிறுமியாக இருந்த போது படர்ந்திருந்த செடியின் இலையைப் பறித்து முகர்ந்து பார்த்தது படமாக நினைவில் ஓடுகிறது. பிறப்பு, இறப்பு இரண்டும் அர்த்தமற்றது. நான் இருக்கிறேன் என்று நினைத்தால்தான் இருக்கிறேன், இல்லையா? யாரிடமாவது நெருப்புப் பெட்டி வாங்கலாமா என்று நினைத்தாள். ஆனால் அதில் அவ்வளவு வேகம் இல்லை என்பதால் தன் கைகளை மடியில் வைத்தபடி தலை குனிந்து அமைதியாக நிலவொளியில் உட்கார்ந்திருந்தாள். அவளது கருங்கூந்தல் முதுகில் பரவியிருந்தது. இடது கால் பெருவிரல் மண்ணில் அரையாகப் புதைந்திருந்த மெல்லிய கல்லைத் துழாவிக் கொண்டிருந்தது. அதன் வடிவத்தைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தாள். அது தவறும் போது
வலது பெருவிரல் அதன் கசட்டைத் துருவி எடுத்தது.
பத்துவயதுச் சிறுமி. இரட்டைச் சடை. சிவப்பு கவுன்,சிவப்பு ஷு கறுப்பு ரிப்பன்கள் இதுதான் அவள். எல்லோரையும் கவர்ந்தாள். அவளுடைய சதைப்பற்றான மச்சமிருக்கிற கன்னத்தைக் கிள்ளுவார்கள். அது இன்னமும் நினைவிலிருப்பது ஆச்சர்யமாக இருந்தது. அவள் அப்போதும் கூச்சமுடையவளாக இருந்தாள்; பயமும், அவமானங்களும் இருந்தாலும் யாருடனும் அவளால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இவையெல்லாம் நடக்கிறதே நான் உண்மையானவளா, இதுதான் என்னுடைய பெயரா—அப்போதும் நிகழ்வுகள் அவளைக் குழப்பின.
நான் அப்பாவுடன் ராட்சஸ ராட்டினத்திலிருந்தேன். அவர் பட்டுக் குர்தாவும், வேட்டியும்–தன்னுடைய பண்டிகை ஆடையை அணிந்திருந்தார். சந்தனம் வைத்திருந்த பெட்டியில் இருந்ததால் குர்தா நல்ல வாசனை உடையதாக இருந்தது. முதல்முறையாக பயத்தோடும்,ஆர்வத்தோடும் நான் ராட்டினத்தில் உட்கார்ந்திருந்தேன்.அதன் சக்கரம் சுற்றத் தொடங்கியவுடன் என் பயம் மும்மடங்கானது. அது மேலே போகப்போக வேகம் அதிகமாக தான் இறப்பது போன்ற உணர்வில், அவள் அப்பாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் இறக்கி விடுங்கள் .. இறக்கி விடுங்கள்.. என்று கத்தினாள். அப்பா அதை நிறுத்தவில்லை. எதையும் செய்துவிட முடியும் என்று நான் நினைத்திருந்த அப்பாவால் அந்தச் சக்கரத்தை நிறுத்த முடியவில்லை. அப்பா சிரித்திருக்க வேண்டும். அவர் என்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். குளிர்க்காற்று பட, நான் சில்லிப்பாக உணர்ந்தேன்.
கவுனை நான் ஈரப்படுத்தி விட்டால் அம்மா கத்துவாள். அப்பாவையும்தான். வயிறு வெடித்துவிடும் போல உணர்ந்தாள். கவுனை ஈரப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் பயம் அவளை விட்டுப் போயிருந்தது. ஏன் இப்போது அவளுக்கு கடந்த காலம் நினைவில் வரவேண்டும்? அதுவும் இந்த வகையிலான ஒரு மனநிலையில்? அவள் உள்ளங்கைகள் ஈரமாகியிருந்தன. கடந்த சில மாதங்களாகவே அவள் தன்னை விட்டேற்றியான ஒரு மனநிலைக்குத் தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.
அப்பா இப்போது மிக வயதான மனிதர். தளர்ந்து போன அவரிடம் தன்னைப் பிடிக்குமா பிடிக்காதா என்ற கேள்வியைக் கேட்பது கூட அர்த்தமற்றது. வாரா வாரம் அவள் அவருக்கு எழுதும் கடிதம் வராத போது அவள் பிரிவை அவர் உணரலாம் .மும்பையிலிருக்கும் என் தங்கையின் மகளுக்கு பிறந்தநாள் பரிசாக நான் வாங்கிய கொலுசு மேஜையில் இருக்கிறது. பல கடிதங்களுக்கு பதில் அனுப்பவேண்டும் ; திட்டக் கமிஷனிலிருந்து வந்த அழைப்பிதழ், மரம் நடும் அமைப்பு, குதிரைப் பயண அமைப்பு –ஆனால் எல்லாம் அர்த்தமற்றவை.
***
அவன் என் சங்கடமான நிலையை உணர்ந்திருக்க வேண்டும்; என் சிகரெட்டைப் பற்ற வைத்தான். “நீங்கள் தினமும் காலையில் குதிரை சவாரி செய்வதைப் பார்த்திருக்கிறேன் ஆங்கில நாடகங்களில் நடிப்பதையும் பார்த்திருக்கிறேன்..” நகரத்திற்கு வெகு தொலைவில், தனியான மூலைப் பகுதியில் ஏரியருகே ஒரு பெண் இருப்பது மிகச் சாதாரணம் என்பது போல அவன் நடந்து கொண்டான். அவள் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு உட்கார்ந்தாள். அவள் வசதியாக உட்காரும் வகையில் அவன் சிறிது நகர்ந்து உட்கார்ந்தான். அந்த உரையாடலைத் தொடர்வதில் அவன் எந்த வேகமும் காட்டவில்லை. எந்த விவரத்தையும் எதிர்பார்க்காத, நட்பின் அமைதியான தன்மையைக் காட்டுவது போலிருந்தான். அவனுக்குத் தன்னைத் தெரிந்திருப்பது சிறிது அமைதியைத் தந்தது என்றாலும் தனது அடையாளம் தெரியப்படாத நிலை மறைந்து விட்டது வருத்தம் தந்தது.
அவன் தன்னை அறிமுகம் செய்து கொள்ளாதது பெரியதாகப் படவில்லை. அவள் தன்பழைய மனநிலைக்குத் திரும்ப விரும்பி, தோற்று தன்அமைதியைத் தானே உடைத்தாள்.
“ இது மிகச் சின்ன உலகம். ”
அவன் இயல்பான சிரிப்போடு அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவளுக்கு அமைதி தேவை என்பதை புரிந்து கொண்டவன் போல இருந்தான். தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அங்கு வந்திருக்கும் விஷயத்தை அவனிடம் இயல்பாகத் தன்னால் சொல்ல முடியுமென்று அவளுக்குத் தோன்றியது. அதே நேரத்தில் அவனிடம் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் எந்த மாறுதலும் வரப்போவதில்லை என்றும் தோன்றியது . அவள் சிகரெட்டைப் புகைத்தாள். பறவையொன்று கெஞ்சுவது போல அவர்களைப் பார்த்து ஒலித்தது. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“திருமதி…”
அவளைப் பார்த்த அவன் , அவள் பேச விரும்பாததைப் புரிந்து கொண்டவன் போல பாதியில் பேச்சை நிறுத்திவிட்டான். அவன் ஆழமான அமைதியில் ஆழ்ந்து விடுவான் என்றும் அவன் பேசவேண்டும் என்றும் நினைத்து அவள் “ஷைலி என்று கூப்பிடுங்கள்” என்று சொன்னாள்.
அவள் காத்திருந்தாள். தன் அடர்த்தியான கூந்தலை முதுகில் பரவவிட்டு அவனைப் பார்த்துத் திரும்பி இயல்பாகச் சிரித்தாள்.ஓ.. தன் கணவனுடன் சேர்ந்து, இப்படி நிம்மதியாகச் சிரித்து பல ஆண்டுகளாகி விட்டன! அவனுடைய அமைதியான முகம் ,நிலவொளியில் ஒரு மென்மையான உணர்வை வெளிப்படுத்தியது. அவன் கண்கள் மின்னின
“ஷைலி, என் மனைவி இறந்திருக்கலாம்’ அவன் அவளிடமிருந்து பதிலை ,எந்தவித அனுதாபத்தையும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் குரல் வெளிப்படுத்தியது. அவள் அதிர்ந்தாள்.
“விசாரணைக்காக வரும் போலீசிடம் என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆமாம். தொடக்கத்தில் எங்களிடையே இருந்த காதல் மெல்ல, மெல்ல மறைந்து விட்டது. அது யாருடைய தவறு என்று கண்டுபிடித்துச் சொல்வது அசாதாரணமானது. நாம் சொல்லக் கூட முடியாது. காதல் மறைகிறது.—அது பரஸ்பரம் காணமுடிகிற ஒன்றல்ல. அது மந்திரமான மயக்கம், சிறிது நேரத்திற்குப் பிறகு அப்படி உணர்வது நின்று விடும். பிறகு இந்த ஏரி, குன்று, இந்த வானம்.. எல்லாம் மரணித்துவிடும்.
“நீங்கள் இதை வேடிக்கையாக உணரலாம் ஷைலி —ஆனால் இந்தப் பறவை ஒலித்தபோது நான் ஆச்சர்யப் பட்டேன். நீங்களும்தான். அது மிகவும் அற்புதம் .இல்லையா? நீங்கள் உங்கள் கூந்தலைப் பிரித்து முதுகில் பரவ விட்டுச் சிரித்த போது நான் வியப்படைந்தேன்., ஏன் என் மனைவியால் இது போல் இனிமையாகச் சிரிக்க முடியாது என்று நினைத்தேன். இந்த நாட்களில், நான் ஆச்சர்யப்படுவதும் கூட நின்று விட்டது. இல்லாவிட்டால் நான் ஒரு கலைஞனாக வாழும் தைரியம் பெற்றிருப்பேன்.எனக்கு அந்த தைரியம் இருந்திருந்தால் ஒருவேளை அவள் எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டாள். எங்களுக்குத் திருமணமான புதிதில் கல் போன்றிருந்த படுக்கையில்தான் படுப்போம். வறுமை.. எனக்கு ஏராளமான கனவுகளிருந்தன. ஆனால் இப்போது எதுவுமில்லை. அது போய் விட்டது. ஏன் போனது என்று எனக்குத் தெரியவில்லை. அவமானகரமான அந்த நாட்கள் போய்விட்டன. இவை எல்லாவற்றோடும், என்னுடைய , காரணமின்றிச் சந்தோஷப்படும் இயல்பும் கூடப் போய்விட்டது அதிகத் தேவை நமக்கிருக்கிறது என்று எப்போதும் புலம்பிக் கொண்டிருக்கும் எல்லைக்கு அவள் போய்விட்டாள்.. எதுவும் வேண்டாமென்று சொல்பவனில்லை நான்.
“நான் என் மனைவியை இன்று கொன்றிருப்பேன். எதற்குச் சண்டை போடத் தொடங்கினோம் என்பது கூட எனக்கு நினைவில்லை. பயங்கரம்.. இல்லையா? தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் சொன்னாள். செய்து கொள் என்று சொல்லி அவளைத் தள்ளினேன். செத்துப் போ..செத்துப் போ.. நான் கத்தினேன். அவள் தன் அறைக்குள் போய் பூட்டிக்கொண்டாள். அப்போது எனக்கு எந்தவித உணர்வும் ஏற்படாதது குறித்து அதிர்ந்தேன். அவள் ஒரு நாற்காலியின் மீதேறி மேலே கயிற்றைப் போட்டு சுருக்குவதை கதவின் ஓட்டை வழியாக நான் பார்ப்பதை அவள் பார்த்தாள். அல்லது அவள் பார்க்காமலும் இருந்திருக்கலாம்.! ஆனால் அவள் கதவு இருந்த திசையைப் பார்த்தாள். எங்களுக்கு இரு குழந்தைகள் –ஓர் ஆண்,ஒரு பெண்—அவர்கள் விளையாடிவிட்டுத் திரும்பும் போது என்ன விதமான வேதனைக்கு ஆளாவார்கள் என்று நினைத்து வெந்து போனேன்.
“அவளுக்கு அப்படித் தோன்றவில்லை என்பது ஆச்சர்யம் தந்தது. அவள் சாவு பற்றிய சிந்தனையை நான் உணர்ந்த போது என் முழு உலகமே மாறிப் போனது .நான் எழுந்து வீட்டை விட்டு வெளியேறி, நடந்து இங்கு வந்து உட்கார்ந்தேன். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நடந்திருக்கிறேன். நடந்து வரும் போது நான் நானாக இல்லை, வேறு யாரோ என்பதாவும் உணர்ந்தேன்.
“இப்போது அவள் உடல் உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். குழந்தைகள் அழுது கொண்டிருப்பார்கள். போலீஸ் வந்திருக்கலாம். வீட்டிற்கு முன்னால் அக்கம் பக்கத்தவர்கள் கூடியிருப்பார்கள். எதுவெனினும், வேறு யாருக்கோ இது நடந்திருப்பதாகத்தான் நான் உணர்கிறேன்”.
“என் திருமணத்திற்கு முன்பான கதையைக் கேளுங்கள். அவளுக்கு பதினெட்டு வயது. அவர்கள் கிராமத்தில் நான் நான்கைந்து நாட்கள் தங்கியிருந்தேன். அவர்களது ஒரே வீடுதான் அந்தக் காட்டில். ரப்பர் செடியால் வீடு சூழப்பட்டிருந்தது. இரண்டு புறத்திலும் வரிசையாகக் குன்றுகள். நாங்கள் சுள்ளிபொறுக்கச் சேர்ந்து போவோம். கிணற்றில் தண்ணீர் இறைப்பது, காய்கறிகள் நறுக்குவது, துணிகள் துவைப்பது வரிசையாகக் காய வைப்பது என்று அவள் செய்யும் எல்லா வேலைகளிலும் ஒரு நடனப் பாங்கிருக்கும். காரணமின்றி நாங்கள் சிரித்துக் கொண்டிருப்போம். அவள் தன் தாய்க்கு உதவியாகச் சமையலறையில் இருககும்போது நான் பேச விரும்ப மாட்டேன். அவள் எனக்காக சுடுதண்ணீர் வைத்துத் தருவாள். தாய் அறியாமல் முதுகு தேய்த்து விடுவாள். இரவில் நான் எழுந்திருக்கும் போது தான் விழித்திருப்பதைக் காட்டுவாள். இரவு
நேரத்தில் சாணக் கிடங்கிற்குப் போகும்போது துணைக்கு அழைப்பாள். சிறிது நேரம் தனியாக நெருக்கமாக நின்றிருப்போம்.அவள்தான் இது எல்லாவற்றையும் செய்தாள் என்று சில சமயம் எனக்குத் தோனறும்.
“அவளுக்கு ஒரு தாத்தா இருந்தார். ரப்பர் தோட்டம் போட அவர் காட்டைச் சமப்படுத்தினார். நாங்கள் சந்திப்பதற்கு ஐந்து வருடங்கள் முன்னதாகவே அவர் இறந்து விட்டாலும் எல்லோரும் அவரைப் பற்றி தினமும் பேசிக் கொண்டிருப்பார்கள். உண்மையில் அவர் சிறிது குறும்புக்காரர். காதல் கடிதங்கள் எழுதுவதில் திறமைசாலி. அந்தப் பழக்கம் சிறுவயது தொடங்கி அவர் சாகும்வரை இருந்தது. கடிதங்கள் எழுதுவது மட்டுமின்றி, தனது ஆதாரத்திற்காக அதன் பிரதிகளையும் வைத்திருந்தார். அந்தக் கடிதங்கள் தன் காதலியைச் சந்தித்ததையும், கவனமற்ற வார்த்தைகளால் வர்ணித்ததையும் விவரிக்கும்.. காதலியின் போக்கு வித்தியாசமாக இருந்தால் கடிதத்தின் தொனியும் மாறுபடும். சில கடிதங்கள் எளிமையாக – நெஞ்சு, பூக்கள் , பட்டாம்பூச்சிகள், அழகான வெள்ளை உடையுடனான இளம்பெண் என்ற வர்ணனைகளோடு. அவள் மாடிக்கு வந்து அந்தக் கடிதங்களை படித்துக் காட்டி சிரிப்பாள். அந்தத் தாத்தாவின் மனைவிக்கு எப்போதும் எங்கள் மீது ஒரு கண். ஒரு தடவை கடிதங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது வந்துவிட்டாள் புண்ணாக இருந்த தன் முதுகை பெருமையாகக் காட்டி அது தாத்தாவின் வேலை என்றாள். நாங்களிருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம். தன் கணவனின் சாகசங்கள், பில்லி சூனியத்தில் அவர் காட்டிய ஈடுபாடு, அவருடைய பிடிவாத குணம், அதை அவள் பொறுத்துக் கொண்ட விதம் என்று எல்லாவற்றையும் சொன்னாள். ஷைலி, உங்கள் முகத்தைப் பார்த்ததும், எனக்கு இவை எல்லாம் ஏன் ஞாபகம் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவள் உங்களைப் போன்றில்லை. வீடே அவள்
உலகம். நன்றாகப் பாடுவாள். இப்போது அதையும் நிறுத்தி விட்டாள். அவர்கள் வீட்டில் ஓர் ஆடு இருந்தது. கண்ணில் பட்டவை எல்லாவற்றையும்மேய்ந்துவிடும். கட்டியிருக்கும் கயிறையும் சேர்த்துச் சாப்பிட்டுவிடும். ஒரு தடவை அது என் நிக்கரையும் கூடச் சாப்பிட்டு விட்டது. கட்டுப்படுத்த முடியாமல் அவள் சிரித்தாள். என் இறுகிய முகத்தைப் பார்த்து விட்டு இன்னும் அதிகமாகச் சிரித்தாள். நானும்தான். அவள் ஏன் சிரிக்கிறாள் என்று தெரியாமல் சிரித்தேன். அது அல்ப விஷயம்தான். ஆனால் அதுபற்றி நினைத்து நாங்கள் இரண்டு மூன்று வருடங்கள் சிரித்திருக்கிறோம். நான் உங்களிடம் இப்படிப் பேசிக் கொண்டிருப்பது— நான் இப்படிப் பேசுவேன், நினைப்பேன் என்று எல்லாம் அவளுக்குத் தெரியாது. என் வெறி அதிகமாகி இருந்திருக்கிறது, உங்களைப் பார்க்கும் வரை அது எனக்குத் தெரியவில்லை.” அவன் இடைவெளியில்லாமல் பேசிவிட்டு அமைதியானான்
அவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவன் தன் கைகளை அவள் கை மேல் வைத்தான்.மீண்டும் அவள் ஆச்சர்யமடைந்தாள். ஈரப்பதமான மேகங்கள் நிலாவின் மேல் மிதப்பதைப் பார்த்தாள். காற்று வீசியது.
“வாருங்கள், நாம் போகலாம்…” சொல்லிவிட்டு எழுந்தாள். காரில் ஏறி உட்கார்ந்த பிறகு அவன் வீடு இருக்குமிடத்தைக் கேட்டாள். காரின் பின் இருக்கையிலிருந்த விஸ்கி பாட்டிலை எடுத்து “உங்களுக்கு வேண்டுமா?” என்று கேட்டாள். அவன் சிறிது உறிஞ்சி விட்டு, “நன்றி” என்றான். அவள் பாட்டிலை மூடினாள். “ வேண்டுமென்றால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுக் காரை கிளப்பினாள்.
“உங்கள் மனைவி இறந்திருக்க மாட்டாள் என்று நம்புகிறேன்” என்று கார் ஓட்டும் போது சொன்னாள்.
“ஆனால் எதுவும் மாறியிருக்கப் போவதில்லை” என்று சொன்னான் அமைதியாக.
”ஆமாம். மாறப் போவதில்லை” என்று அவள் தனக்காகவும் சேர்த்துச் சொன்னாள். அவனுடைய அமைதியான, மென்மையான முகம், மெலிந்த உதடுகளைப் பார்த்தாள். எதுவும் பேசவில்லை. அவன் வீட்டின் முன்பு காரை நிறுத்தினாள். தன் மகன் அமைதியாக பாடம் எழுதுவதை அவனால் பார்க்க முடிந்தது. அவள் கைகளை அவன் அழுத்தினான். அவள் அவன் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு “குட்பை “என்றாள்.’
*****
நன்றி:
Apoorva [ Uncanny ] first appeared in the collection Akasha Mattu Bekku Akshara Prakashana, Sagar, 1981
One comment