ம கிருஷ்ணகுமார்
இருளொரு பாதி
ஒளியொரு பாதி என
உயரத்தில் தகதகத்துக் கொண்டிருக்கிறாய்
உன் மூக்கின் நுனி வழி
பெருகும் ஒளியருவி சூரியனாகி
என் இரவுகளைக் கெடுக்கிறது
ஒவ்வொரு நாளும்
கட்டிலுக்கும் மார்கூட்டுக்கும் நடுவில்
தெருநாயைப் போல் இளைக்கும் இதயத்தை
கனவுகள் கொண்டு தேற்றுகிறேன்
சிறிதும் பெரிதுமென
பூத்து உதிரும் பொழுதுகளில்
உன் நினைவின் பிரதிகள்
நாம் தினசரி நடக்கும் பாதையில்
பலமுறை கடந்துவிட்டோம்
கண்கள் கூட சந்திக்காமல்
மீண்டும் நடப்போம்
மீண்டும் கடப்போம்
எப்போதும் போல் அப்போதும்
உடல் முழுதையும் கால் கட்டை விரலில் தாங்கி
கை நகத்து நுனியில் இதயத்தை ஏந்தி
உன்னிடம் மன்றாடுவேன்
இம்முறையேனும் பார்த்துவிடேன்?