காஸ்மிக் தூசி
வெயில் வெண்மையை
நிறங்களாக
பிரிக்க ஆரம்பித்திருக்கும்
இலைகள்
ஓக் மரத்தடியின்
பழைய மரப்பெஞ்சில்
ஒரு பழைய புத்தகம்
வாசித்திருக்கையில்
மேலிருந்து
இறங்கி
நெருங்கி வந்து,
இது என்னுடைய இடம்
இங்கே என்ன செய்கிறாய்?
எனும் கேள்வி.
போதி மரம்
இல்லாத ஊரில்
போதி மரத்துக்கு
வேறு என்னதான் செய்வதாம்?
என்கிறேன்.
எழுந்து
இரு கைகள் உயர்த்தி
அதோ
அந்த மேப்பிள் மரத்தை
பார்த்தாயா
போதியை
போலத்தானே இருக்கிறது
அங்கே போயேன்,
என்று கூச்சலிடுகிறது
குளிர்கால உறக்கத்துக்கு
தயாராகிவிட்ட
சற்று குண்டான
அந்த
அணிற்குஞ்சு.
கவிதை மிக அருமை!!