போதி மரம் இல்லாத ஊரில்- காஸ்மிக் தூசி- ஒரு குறிப்பு

போதி மரம் இல்லாத ஊரில்- காஸ்மிக் தூசி

1. இது ஒரு காட்சி, அதை விவரிப்பதற்கு அப்பால் உயர்ந்த லட்சியங்கள் இல்லை.

2. கவிதை யாருக்கும் எந்த செய்தியும் சொல்வதில்லை, சமூக அக்கறை என்று எதுவும் இதில் வெளிப்பட்டவில்லை. தனிமனித உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமே.

3. இது யாரைப் பார்த்து சொல்லப்படுகிறது, அவர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்று கேட்டால் சொல்ல முடியாது. உரக்க வாசிக்க உகந்த கவிதை அல்ல, காகிதத்தில் எழுதிக் கொடுத்து அதை வேறொருத்தர் மௌனமாக படித்து தனக்குள் புரிந்து கொள்ள எழுதப்பட்டது. அந்தரங்க அகக்குரல் என்று சொல்லப்படும் விஷயம்.

4. கருத்து எளிமையான ஒன்று, அதே சமயம் சொல்லப்பட்ட எதுவும் மீண்டும் சொல்லப்படுவதில்லை, சொன்ன விஷயத்துக்கும் அலங்காரம் ஏதும் இல்லை: கருத்தில் மட்டுமல்ல, மொழியிலும் எளிமை.

5. ‘போதி மரம் இல்லாத ஊரில்’ என்ற இந்தக் கவிதையில் ஓக், மேபிள் மரங்கள் வருகின்றன – காஸ்மிக் தூசி வெளிநாட்டில் வசிப்பவர், அவரது தனிப்பட்ட வாழ்வனுபவங்கள் அவர் அவ்வப்போது எழுதும் கவிதைகளில் பதிவு செய்யப்படுகின்றன. இது தமிழுக்கு புதிது என்பதால் வேப்ப, புளிய மரங்களால் கிடைக்காத இடம் ஓக் மற்றும் மேபிள் மரங்களால் கிடைக்கிறது.- புதுமை.

இதுபோல், இன்னும் பல சொல்லலாம், ஆனால் உரத்த குரல், உயர்ந்த லட்சியங்கள், சமூக அறைகூவல் மற்றும் அறிவுரை, விழிப்புணர்வு புகட்டல், அலங்காரம் மற்றும் மிகைகள், பழகிய விஷயங்கள் இந்தக் கவிதையில் இல்லை.

எளிய கவிதைதான். ஆனால் இதில் நாம் ஒரு தனிப்பார்வை, தனிக்குரல், தனி அனுபவத்தின் அடையாளங்களை காணலாம்.

காஸ்மிக் தூசி கவிதைகள் பதாகையில் தொடர்ந்து வருகின்றன. அவற்றை வாசிப்பவர்கள், நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருப்பதை கவனிக்கலாம், அது தீவிரத்தன்மை, அசட்டை, முக்கியம், முக்கியமின்மை என்று வெளிப்படுகிறது. உண்மையாகவே போதி மர நாட்டம் உண்டா, அல்லது போதி மர பாவனையின் ஆழமின்மையை உணர்ந்த காரணத்தால் அது குறித்த விளையாட்டுத்தனத்தை கைகொள்கிறாரா என்பவை விமரிசன நோக்கில் பேசப்பட வேண்டியவை.

ஆதர்சங்கள், லட்சியங்கள், புனிதத்தன்மை போன்ற உச்ச மதிப்பீடுகள் தனி மனித குறைகளால் வெறுமையாகிப் போயின, சமூக அமைப்பால் பொய்த்து விட்டன என்ற காரணங்களால் ஒருவர் எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ள மறுப்பது, நகையுணர்வு, irony, frivolousness, கமிட் செய்து கொள்ளத் தயங்குவது, தன்னைத் தானே பகடி செய்து கொள்வது போன்ற நவீன பாவனைகளை மேற்கொள்கிறார் என்றால் அது ஒரு விஷயம். அதில் நாம் நாட்டம் விலகல் என்ற இரு எதிர்நிலைகளையும் காணலாம். ஆனால் அது போன்ற ஒரு பாவனை, அந்த  பாவனைக்கு எதிரான பாவனை, ஆழமில்லாத விளையாட்டுத்தனம், சலிப்பு தட்டக்கூடியது. ஆனால் இதை எல்லாம் பேச இந்த ஒரு கவிதை போதாது, நாம் இவரது இது போன்ற பிற கவிதைகளையும் பார்க்க வேண்டும்.

விசை, திசை இரண்டும் இருந்தால்தான் தொடர்ந்து எழுதும்போது ஒரு அலை என உயர்ந்து எழ முடியும். திசை இல்லாமல் விசை மட்டும் இருக்கிறது என்றால் எத்தனை எழுதினாலும் ஒரு கொந்தளிப்பு மட்டுமே இருக்கும், ஒரு oeuvreக்கு உரிய ஒருமை கூடாது. தனிப்பார்வை, தனிக்குரல், தனி அனுபவத்தின் வெளிப்பாடு வேண்டும் என்று சொல்லும்போது திசை என்று சொல்லக்கூடிய நகர்வை விழைகிறோம்.  இது ஒரு கவிதை, கதையில் கிடைக்கும் விஷயம் அல்ல. தொடந்து எழுத வேண்டும், அதனூடே ஓர்மை கூட வேண்டும்.

கவிதையின் துவக்கம் அழகாக, கற்பனைச் செறிவோடு, கவித்துவ மொழியில் அமைந்திருக்கிறது- “வெயில் வெண்மையை/ நிறங்களாக/ பிரிக்க ஆரம்பித்திருக்கும்/ இலைகள்”. நிறப்பிரிகை தெரியும், அது வெண்மையை வானவில் வண்ணங்களில் பிரிக்கிறது. இதே கோடையின் வெண்மை இலைகளில் பல வண்ணங்களில் பழுக்கின்றது, பருவ மாற்றத்தின் போது. இலைகளில் ஏற்படும் நிற மாற்றத்தைச் சுட்டி நேரடியாக இல்லாமல் பருவ மாற்றத்தை உணர்த்துகிறது கவிதை. அதற்கு அடுத்த வரிகளில் இந்தக் கற்பனை மறைந்து உரையாடல் தமிழ் வந்து விடுகிறது, “குளிர் கால உறக்கத்துக்கு/ தயாராகி விட்ட/ சற்று குண்டான/ அந்த அணிற் குஞ்சு,” என்ற இறுதி வரிகள் துவக்கத்திலிருந்து எங்கோ வந்து விட்டன. போதி மரத்துக்கும் மேபிள் மரத்துக்கும் உள்ள சம்பந்தம்தான் துவக்கத்துக்கும் முடிவுக்கும். கவிதை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பயணித்து விட்டது, மொழியில் மட்டுமே கூட. சொல்ல வந்த விஷயத்துக்கு தகுந்த வடிவத்தை இந்தக் கவிதையில் பார்க்கலாம்.

பதாகையில் இது போன்ற கவிதைகளை பதிப்பிக்க விரும்புவது இவை சிறந்தவை என்பதால் அல்ல, இவை பிடிக்கும் என்பதால். இதற்கும் தர மதிப்பீடுகளுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.