Author: பதாகை

திரும்பி வந்தவன்

எஸ். சுரேஷ்

காலை ஆறு மணி. வழக்கம் போல் வாக்கிங் கிளம்பினேன். எங்கள் அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் உள்ள கட்டிடங்களை ஒரு மணிநேரம் பல முறை சுற்றி வருவது வழக்கம். நடக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் எதிரில் வெங்கடேஸ்வர் ராவ் தோன்றினார். “ஹலோ சார்?” என்று விசாரித்தார். எனக்கு அவரை பார்த்ததில் ஒரே ஆச்சரியமாக இருந்தது. சுமார் இரண்டு வருடங்கள் கழித்து அவரை மறுபடியும் பார்க்கிறேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு வெங்கடேஸ்வர் ராவ் தன் மனைவி ராஜி என்று அழைக்கப்படும் ராஜேஸ்வரியையும் பன்னிரண்டு வயது பெண் குழந்தையும் (அவள் பெயர் மாலினியோ ஷாலினியோ) விட்டுவிட்டு வேறொரு பெண்மணியின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அந்தப் பெண்ணை இவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாகவும், ராவ் ராஜியை கூடிய சீக்கிரமே விவாகரத்து செய்துவிடுவார் என்றும் அரசல்புரசலாகக் கேள்விப்பட்டேன். (more…)

THE GRANTA BOOK OF THE AMERICAN SHORT STORY – RICHARD FORD : ஊடுபாவுகள் 2

அஜய் ஆர்

III- எல்லைகளைச் சிதைக்கும் கணங்கள்

ahaslett100208_250

மென்காற்று வீசும், வெப்பம் சற்று அதிகமாக உள்ள சோம்பலான ஒரு ஞாயிறன்று அக்கா- தம்பியான ஓவன் (Owen)/ ஹிலரியை (Hillary) ஆடம் ஹேஸ்லெட்டின் ‘Devotion’ சிறுகதையின் துவக்கத்தில் முதல்முறையாக காண்கிறோம். காலத்தில் முன்பின்னாகச் செல்லும் கதையில், ஐம்பதுகளில் இருக்கும் இருவரின் வாழ்வு பற்றி கொஞ்சம் தெரிய வருகிறது. தற்பாலின விழைவு கொண்ட ஓவன், தன் இணைகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறப்பதைக் கண்டு, கடந்த பல ஆண்டுகளாக எந்த உறவுமின்றி இருப்பவர். திருமணமாகாத ஹிலரி ஆசிரியையாக இருக்கிறார். பல ஆண்டுகளாக ஒன்றாக இருக்கும் இருவரின் வாழ்க்கை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடை/ நல்ல காலை உணவு, குளிர்காலத்தில் குளிர் போக்கின் கணப்பறை (hearth) முன் உட்கார்ந்து நாளிதழ் படிப்பது, திரைப்படத்திற்கு செல்வது, கோடை/ வசந்த காலங்களில் தோட்டத்தில் நேரத்தை செலவிடுவது என ஒரே தாளகதியில் செல்கிறது.

நிச்சலனமான நீர்நிலை போல் அவர்கள் வாழ்க்கை இருந்தாலும் நீர்நிலையின் ஆழத்தை அறிவது யார்? “They weren’t unhappy people,” என்று குறிப்பிட்டு அவர்கள் வாழ்வு குறித்த தெளிவின்மையை வாசகன் மனதில் உருவாக்குகிறார் ஹேஸ்லெட். மந்தமாகச் செல்லும் ஞாயிறு அன்று யார் வருகைக்காக தடபுடலாக இரவு உணவை ஏற்பாடு செய்கிறார் ஹிலரி, என்று கதையை வாசிக்கையில் பென் என்பவர் பல ஆண்டுகளுக்கு பிறகு இவர்களை சந்திக்க வருகிறார் என்று தெரிய வருகிறது. தன் அறைக்கு செல்லும் ஓவன், தன் சகோதரி ஹிலரிக்கு பென் முன்பு அனுப்பி, தான் மறைத்து வைத்துள்ள பழைய கடிதத்தைப் மீண்டும் படிக்கிறார். (more…)

வேண்டுவது அறவை நெஞ்சத்தாயர்

ரா கிரிதரன்

பெனடெட்டோ மார்செல்லோவின் சுழற்தகடைச் சுற்றிவிட்டு சில கரகரப்புகள் முடிந்து இசை ஆரம்பிக்கக் காத்திருந்தேன். அட்டையில் அவரைப் பற்றி சிறு குறிப்பு வரைந்திருந்தார்கள். 1710இல் அவரது அண்ணன் அலெச்சாண்டோ மார்செல்லோ எழுதிய இசைக்குறிப்புகள் இவை. இந்த ஓபோ வாந்தியக்குறிப்பை 1717 ஆம் ஆண்டு தந்திக்கருவிக்கு ஏற்றவாறு மாற்றம் செய்துள்ளார் பாஹ். இளையராஜா ஏன் மீண்டும் மீண்டும் பாஹ் காலகட்டத்தைச் சுட்டிக்காட்டுகிறார் என விளங்கும். நிற்க. இக்கட்டுரை இந்த இசைக்குறிப்புகளைப் பற்றியதல்ல. சுட்டியைத் தட்டிவிட்டு பின்னணி இசையாகக் கேட்டபடி மேற்கொண்டு படியுங்கள்.

நாஜிக்களின் திட்டமிட்ட அழித்தொழிப்பைப் பற்றி பல புத்தகங்களும், எண்ணிலடங்கா திரைப்படங்களும் வெளியாகியுள்ளன என்றாலும் ஒவ்வொரு புது வரவும் நமது மனதை ஏதோ ஒருவிதத்தில் கவர்ந்துவிடுகிறது. 1933இல் நார்மன் ஆங்கெல் War pays என தீர்க்கதரிசி மாதிரி சொன்னது நினைத்துப்பார்க்க முடியாதபடி இன்றுவரை பலனளித்துவருகிறது. The Book Thief வரை இது புத்தக சந்தைக்கும் திரைப்படங்களுக்கும் பொருந்தும். (more…)

எப்படியோ

அதிகாரநந்தி

 

நான் கத்துகிறேன்
அங்கேயும் குரல் உயர்கிறது
நான் இன்னும் உயர்த்துகிறேன்
அங்கே என்னைவிட உயர்கிறது
உச்சஸ்தாயில் குரல் வடிவம் சிதைகிறது
குரல்கள் கலந்து இரைகின்றன
அக்கம்பக்க கதவுகள் திறந்து மூடுகின்றன
அறை முழுதும் சிதறிய வார்த்தைகள்
நடுவே நானும் அவரும்
ஒவ்வொரு வார்த்தையாக எடுத்துப் பார்க்கிறோம்
எதுவும் எங்களுடையதாக இல்லை.

 

ஒளிப்பட உதவி – Tatiana Iliina

 

The Granta Book of the American Short Story – Richard Ford : ஊடுபாவுகள் 1

அஜய் ஆர்

I – தந்தைகளும் மகன்களும்

அறநெறிகளை போதிக்கும் நூல்களும் கதைகளும் பெற்றோர்களை தெய்வமாக எண்ண வேண்டும் என்று சொல்கின்றன. இந்நூல்களில் வரும் பிள்ளைகளும் அப்படித்தான் இருக்கிறார்கள் அல்லது இறுதியில் திருந்தி பெற்றோரை வழிபடுகிறார்கள். ஆனால் யதார்த்தம் வேறாக இருப்பதால், அதை பிரதிபலிக்கும் இலக்கியமும் வேறு வகையான பெற்றோர்- பிள்ளை உறவையே காட்டுகிறது. நம் பெற்றோரிடம் நமக்கும், நம்மிடம் பெற்றோருக்கும் பல மனக்கசப்புக்கள் அவரவருக்குரிய காரணங்களோடு இருக்கின்றன. அதனால் நேரில் சந்திப்பதோ, கடிதமெழுதுவதொ, தொலைபேசியில் பேசுவதோகூட அதிகம் நிகழாமல் இருக்கலாம்.

இப்படிப்பட்ட ‘செயலிழந்த குடும்பங்கள்’ (Dysfunctional families) பற்றிய நாவல்களில்கூட குடும்ப உறவுகள் நிகழ்காலத்தில் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நாவலின் பாத்திரங்களால் உறவின் பிணைப்பிலிருந்து முற்றிலும் விடுபட முடிவதில்லை. புனைவுகள் என்றில்லை, ஏன், மக்கோர்ட்டின் நினைவுக் குறிப்புக்களிலும், குடும்பத்தைத் தவிக்கவிட்ட தந்தைமீது அன்பு இல்லாமலிருந்தாலும், பல்லாண்டுகள் கழித்து அவரைப் பார்க்க ப்ரான்க் செல்கிறார். உணர்ச்சிகரமான சந்திப்பாக அது இல்லையென்றாலும், அந்தச் சந்திப்புக்கான தூண்டுதல் என்ன? ஒரேயடியாக விலகிச் செல்வது அதிக வலி ஏற்படுத்தும் என்றாலும், இப்படி முழு ஒட்டும் இல்லாமல் பிரிவும் இல்லாமல் தொடர்ந்து அவதிப்படுவதற்கு அதுவே மேல் என்று எண்ணுமளவிற்கு இருக்கும் இந்த உறவுகளை, ஈரமே இல்லாத பாழ்வெளி ஆக்காமல் பிணைத்திருப்பது எது? (more…)