Author: பதாகை

கவிதையும் வாசக மனநிலையும்

றியாஸ் குரானா

கவிதைக்கும் வாசகனுக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டதென்று கருதுகிறீர்கள்?

கவிதைக்கும் வாசகருக்குமிடையிலான உறவு என்பது எப்போதும் முரண்பாடானதாகவே இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். வாசகன், கவிதைப் பிரதியோடு போராடி முடிவற்ற ஒரு வினையை செயலுக்கு கொண்டுவர வேண்டுமென்றும் விரும்புபவன்.

இலக்கியப் பிரதிகள் தம்மிடம் ஏதோவொரு அர்த்தத்தை கொண்டிருக்கிறது என நம்பும் ஒவ்வொருவரும் முதலில் வாசகராக மாறிவிடுகிறார். அடுத்ததுதான் இலக்கியப் பிரதியோடு எப்படி வினையாற்றுவதென்ற விசயமாகும். இலக்கியப் பிரதிகள் அதனதன் இயல்பிலேயே பெரும்பாலும் மறைமுகமாக எதையோ பேசுவதாகவே இருக்கும். அதிலும் கவிதைப் பிரதி கொஞ்சம் ஆழமாக இதை செய்துவிடும். அப்படிச் செய்வதினூடாகத்தான் தன்னை அது கவிதைப் பிரதியாக தக்கவைத்துக்கொள்கிறது. இலகுபடுத்தி இதை விபரிப்பதென்றால், சூழலில் சாதாரணமானது என கருதப்படும் ஒரு விசயத்தை நாம் இதுவரை சந்தித்திராத அசாதாரணமான ஒன்றாக மாற்றி உருப்பெறச் செய்வதுதான் கவிதைப் பிரதி. இது மிக அடிப்படையான ஒன்று. இதை விரிவாக பின்னர் சந்தர்ப்பம் கிடைத்தால் பேசுவோம். யதார்த்தத்தை பிரதிபலிக்கின்ற ஒன்றாக கவிதைப் பிரதி நெடுங்காலமாக இங்கு பயிலப்படுகிறது. அதன் மீது பெரும் விமர்சனம் எனக்குண்டு. (more…)

அப்பாவின் புகைப்படம்


பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்துகொண்டு
ஹிந்து நாளிதழை படித்துக் கொண்டிருக்கிறார்
பக்கவாட்டு ஜன்னல் வழியே வெளிச்சம்
ஆபிச்சுவரி பக்கத்தில் உள்ள புகைப்படங்களை
ஒளிரச்செய்கிறதோ என்னவோ, ஆனால்-
அப்பாவின் மனதை அவர் போட்டிருக்கும்
தடிமனான கண்ணாடி மறைக்கிறது
காலை எழுந்ததும் ஏன் மரணத்தை எதிர்கொள்கிறார்?
ஒவ்வொருவராக மறைந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்காகவா?
தான் இன்னும் மறையவில்லை என்பதை மறக்காமல் இருக்கவா?
ஒளி ஒழுகும் இருட்டுச் சமையலறையிலிருந்து
அம்மா காபி டம்ப்ளருடன் அப்பாவை நோக்கி வருகிறாள்.
காபி சுவை நாவினில் இறங்க, மரண பயம் மெல்ல விலக,
நாற்காலியை விட்டு மெதுவாக எழுந்து நிற்கிறார்

க்ளிக் க்ளிக்

 

ஒளிப்பட உதவி – artofday.com

அர்ஜுனன் காதல்கள்- வாசகர் எதிர்வினை

ரத்ன பிரபா

“என் உச்சந்தலை நிஜமாகவே திறந்து கொண்டது போலிருக்கும்போது, அதுதான் கவிதை என்பது புரிந்துவிடுகிறது,” என்றார் எமிலி டிக்கின்சன். கவிதை எழுதுவதற்குத் தகுந்த கருப்பொருள் தேடிச் செல்ல மகாபாரதத்தை விடவும் சிறந்த, நிரம்பி வழியும் கொதிகலன் எது இருக்க முடியும் – எத்தனை வடிவங்கள் இருந்தாலும், எத்தனை கோணங்கள் வெளிப்பட்டிருந்தாலும், மீண்டும் மீண்டும், பல பத்தாயிரம் முறை திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட பின்னும், தன் புத்துயிர்ப்பையும் அழகையும் தக்க வைத்துக் கொண்டுள்ள உலகின் மாபெரும் காவியமல்லவா அது!

ஊர்வசி, உலூபி, உத்தரை, சுபத்திரை: அர்ஜுனன் வாழ்வில் புகுந்த நான்கு வெவ்வேறு பெண்களுடனான அவனது உறவுகள் குறித்த நான்கு பகுதிகளாக கவிதைத் தொடர் ஒன்று எழுதப்பட்டிருப்பது பற்றி கேள்விப்பட்டதும், இவர்களைக் காட்டிலும் புகழ்பெற்ற திரௌபதியை விடுத்து இந்த நால்வர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று யோசித்தேன். இதில் சிந்தனைக்குரிய இன்னொரு விஷயம், சுபத்திரையின் தேர்வு – மற்ற மூவரோடு ஒப்பிட்டால் இவள் மரபு சார்ந்த துணை உறவானவள். இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கவிதைகளை வாசிக்கத் துவங்கினேன். ஒவ்வொரு காதலும் கவிஞரின் மனதினூடே விவரிக்கப்படும்போது நான்கு பெண்களின் சித்திரமும் கவிதைகளின் மையத்திலுள்ள கிருஷ்ணன் இறுதி அடிகளில் வருவதும் மிகச் சிறப்பான வளர்ச்சியை அடுத்தடுத்த கவிதைகளிள் அடைவதைக் கண்டுணர முடிந்தது. (more…)

பாதை

ஹரன் பிரசன்னா

 

மிக நீண்ட தூரம் அழைத்துச் சென்று
நரகம் விட்டொழிந்தோம் என்றார்கள்
வழியெங்கும்
கூடவே நதியோட
இருபுறமும் மரங்கள்
எங்கள் பயணம்

எல்லாம் இன்றோடொழிந்தது
இனி கவலையில்லை
அன்றாடச் சுகதுக்கங்களில் உழலவேண்டாம்
எல்லாம் இன்பமயம்
எங்கும் எல்லாரும் சமம்

இனி சொர்க்கம்தான்
போகலாம் என்றார்கள்
நான் ஆவலுடன் இருந்தேன்
இப்படி அல்ல என்றார்கள்
என் அடையாளங்களை துறக்கச் சொன்னார்கள்
என் ஆடைகளைக் களையச் சொன்னார்கள்
சொர்க்கத்தில் எதுவுமே தேவையில்லை

என் நினைவுகளை அழித்துவிட்டு
அடுத்த எட்டு நான் வைக்கலாம்
எல்லாவற்றையும் துறப்பதே
ஒரு நரகம்தானே என்றேன்
கேள்விகள் பதில்கள் எல்லாம்
சொர்க்கத்தில் சொல்லப்பட்டாகிவிட்டது
சொர்க்கத்தில் எல்லாமே புதியது
ஒருவகையில் எதுவுமே புதியதல்லவாம்

குழப்பமாக இருந்தது
அங்கு இனி குழப்பமுமில்லை என்றார்கள்

என் நினைவுகளை அழிக்க முற்பட்டேன்
அழிக்க அழிக்க
அவை என்னை
அமிழ்த்த அமிழ்த்த

சுயம் அழித்து
சொர்க்கத்தில்
என்ன இருந்துவிடமுடியும் எனக்கென்றேன்
நீண்ட பதில் சொன்னார்கள்
எல்லாவற்றுக்கும்
பதில் இருந்தது
நினைவுகளை அழித்து
புதியன அடைதல்
சொர்க்கத்தின் பாதை

அமைதியாக
வந்தவழி திரும்பினேன்
ஏனென்றார்கள்
நரகமே சொர்க்கம் என்றேன்
ஆழ்கடலின் மௌனத்தில்
அவர்கள் ஆழ்ந்திருக்க
நதியின் அமைதியில்
நான் திரும்பினேன்

 

image credit : space

ஜென்

எஸ். சுரேஷ்

Buddha Hussainsagar

ஹுசைன் ஸாகர் ஏரிக்கரையில்
கல் பெஞ்சில் உட்கார்ந்து
பிரும்மாண்டமான புத்தன் சிலையைப் பார்த்து
கவிதை எழுத யத்தனிக்கிறான் கவிஞன்-
புத்தனோ மெளனம் பாவிக்கிறான்,
இவனுக்கோ கவிதை வரவில்லை
காகிதத்தைக் கிழித்துக் கிழித்து வீசுகிறான்

கிழித்துப் போட்ட காகிதங்களை
மென்று கொண்டிருக்கும் கிழக்கழுதையொன்று,
“அந்த மூணாம் கவிதை ருசியாக இருந்தது,” என்கிறது

அதை முறைத்துப் பார்த்துவிட்டு
மறுபடியும் புத்தனை பார்க்கிறான் கவிஞன்,
புத்தன் எப்பொழுதும் போல் மெளனமாய் நிற்கிறான்
“சீக்கிரம் கவிதை எழுது. எனக்கு பசிக்கிறது,”
என்று அவசரப்படுத்துகிறது கழுதை

கழுதையை முறைக்கிறான் கவிஞன்,
கவிஞனை முறைக்கிறது கழுதை
இருவரையும் மெளனமாய்க் கூர்ந்து
நோக்கிக் கொண்டிருக்கிறான் புத்தன்

 

கோட்டோவியம் : சேது வேலுமணி