Author: பதாகை

கோணம், ஈசி சேர், நாலு மூலத் தாய்ச்சி – பானுமதி கவிதைகள்

கோணம்

நிரம்பி வழிந்த நீர்த்தொட்டி
காலடியில் சிறு தண்ணீர்க்குளம்
அக்கம்பக்கம் பார்த்த புறா மெல்லடியில் தத்தி
அலகு வளைத்து வந்து அருந்தும் நேரமிது
காத்திருக்கலாம் நான் அதன் தாகம் தணியும் வரை
காகத்திற்கு அதன் ஒன்றரைக் கண்ணில் பட்டுவிட்டேன்
அதன் குஞ்சிருக்கும் மரத்தை நான் என்ன செய்துவிடுவேன்?
தலையில் கொட்டும் வாதை
புறாவின் தாகம் தீரவில்லை என அறிவேன்
காகமுண்ட குருதி சிறிது உண்டு;உறையும் முன்
வரச் சொல்ல முடியுமா கண்டவர்கள் யாரும் ?

ஈசி சேர்

சிறகென விரியும் கை தாங்கி
கால் தாங்கும் சொகுசு
முதுகமர்த்தும் குழி
பின்னிருந்து விழும் ஒளி
தோதாக சிறு தலையண
பதிந்த தலை வட்டம்
மூலையில் மடங்கிய நாள்
பரணில் ஏற்றுவதா விற்பதா
இடம் அடைக்கும் நாற வேறு செய்யும்
இரு நாளில் விற்பதாக எண்ணம்
அவர்களுக்கு.

நாலு மூலத் தாய்ச்சி

சதுரத்தின் மூலை
அ,ஆ,இ,ஈ நிற்க
ஏன் ‘அ’ தொடங்கும் சடங்கு?
‘ஈ’ பாய்ந்தோடி ‘இ’யைத் தள்ள
நெடுக்கில் நின்றவர்கள் கிடக்கில்
சதுரம் சமம்தான்.

என்னதான் வேண்டும்! – க.நா.சுவின் ‘பொய்த்தேவு’ நாவல் குறித்து கமலதேவி

பணத்தை தேடி சேர்த்தால் வாழ்வில் அனைத்தையும் அடைந்துவிடலாம் என்று மிகசிறுவயதில் மனதில் பதிந்து கொள்ளும் ஏழை சிறுவன் சோமுப்பயலின் முழுவாழ்வும் நாவலின் பேசுபொருள்.

கும்பகோணத்தின் அருகில் காவிரிக்கரையின் சாத்தனூர் கிராமத்தின் கதை.ஊரின் மையத்தில் மேட்டுநிலத்தில் சிவன் கோயில்.காவிரியை ஒட்டிய மேட்டுத்தெருவும்,சர்வமாணிய அக்ரஹாரமும் நாவலின் முக்கியமான கதைக்களம்.குறியீடும் கூட என்று எனக்குத்தோன்றுகிறது.மேட்டுத்தெரு சர்வமாணிய அக்ரஹாரம்.

தன்போக்கில் வளரும் ஒரு காட்டுச்செடியென சோமு வளர்கிறான்.திருடன் அடாவடிக்காரனின் மகன் என்ற அடையாளத்துடன் சிறுவயதிலிருந்து சமூகத்தால் பார்க்கப்படும் சோமு சிறுவயதிலேயே தந்தையை இழந்தாலும் அடையாளம் அப்படியே இருக்கிறது.ஊரின் ஒவ்வொரு இடமாக ஓரமாக தள்ளிநின்று சமூகத்தை வேடிக்கைப் பார்க்கிறான்.அதன் மூலம் அவன் பணம் பிரதானம் அதுவே கடவுள் என்ற முடிவுக்கு வருகிறான்.

நாவலில் சாத்தனூரின் காவிரி வருகிறது.எந்த வயதிலும் பெண்கள் அழகு என்று அக்கா சொல்வாள்.அதுபோலதான் காவிரியும் எங்கிருந்தாலும் ,எந்தக்கதையில், எந்தஊரில் வந்தாலும் அழகு.

பணக்கார ராயர் வீட்டில் வேலைக்கு சேர்கிறான் சோமு. ராயர் பணத்தை கணக்கில்லாமல் தானதர்மங்களுக்கு செலவிடும் மனிதராக இருக்கிறார்.பணம் சுமை என அதை கரைத்துவிட்டு சாம்பமூர்த்திராயர் விட்டலனை நோக்கி செல்கிறார்.ஏன் இப்படி என்று சோமுமுதலிக்கு வியப்பாக இருக்கிறது.

ராயரின் உதவியால் சோமுவின் ஏழ்மை வாழ்வு முடிவுக்கு வருகிறது.மளிகைமெர்சண்ட், இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட்,பஸ்ஓனர் என பலஅவதாரங்கள் எடுத்து பணத்தை குவிக்கிறார்.

சிலவிஷயங்களில் சோமு கடைசி வரை மேட்டுத்தெரு வாசியாகவே இருந்தான் என நாவலின் ஆசிரியர் எழுதுகிறார்.பெண்கள் மற்றும் குடி.ஆனால் தீவிரமாக பணத்தை தேடும் முப்பதுஆண்டுகளில் அவர் மிககண்ணியமானவராக இந்தவிஷயங்களில் இருக்கிறார்.

பணம் சம்பாதிக்கும் வரையில் அதை நோக்கியே தீவிரமாக சென்றுகொண்டிருப்பவர் அதை செலவு செய்ய முடிவெடுத்து கும்பகோணத்தில் வீடுகட்டி ஆடம்பரவாழ்வில் நுழையும் போது மீண்டும் பழைய சகவாசங்கள் அவரை திசைதிருப்புகின்றன.முரணான பழக்கங்கள் என சமூகம் சிலவற்றை கோடிட்டு வைத்திருப்பதன் காரணம் அவை மனிதனை சோர்வுகொள்ள செய்து செயலூக்கத்தை மனத்திண்மையை கலைப்பதால் தான். அவர் சம்பாதித்த பணத்தால் அவரின் மகன் கேளிக்கை வாழ்வை மேற்கொள்வதை அவரால் ஒன்றும் செய்யமுடிவதில்லை.

கருப்பன் முதலிக்கும் வள்ளியம்மைக்கும் பிறந்த சோமு பொருளாதாரத்தில் எட்டும் உயரம் மனிதசாத்தியத்தின் ஒருபுள்ளி.அது நாவலின் நேர்மறையான இழை.கோவில்மணியின் நாதம் சோமசுந்தரத்தை உலகியல் தளைகளில் இருந்து விடுவிக்கும் இடம் நாவலின் முக்கியமான புள்ளி.

நாவலில் ராயர்குடும்பத்தோடு சோமுமுதலியாரின் நட்பும் அன்பும் வெளிப்படும் இடங்கள் முக்கியமானவை.அனைத்திலும் பணசிந்தனை உடைய சோமு, ராயர் குடும்பவிஷயங்களில் மனிதத்தன்மையோடு கடைசி வரை இருக்கிறார்.

இறுதியில் அதிக செல்வம் கொண்டுவிடும் பாதாள இருளை தன்மகனாலேயே சந்திக்கிறார்.அந்த இருளில் அவருக்கு சாத்தனூரின் சிவன் கோயில் மணி வழிக்காட்டும் அழைப்பாக கேட்கிறது.

சாம்பமூர்த்திராயர் பணத்தை சுமைகளை உதறுவது போல உதறுவதை வாழ்நாள் முழுக்க வியப்பாக பார்க்கிறார் சோமுமுதலி.இறுதியில் அவருக்கும் பணம் சுமையாகிறது.பணம் தெய்வம் என்று துவங்கிய வாழ்வு பணம் ஒருமாயை என்ற தரிசனத்தோடு முடிகிறது.விசையோடு செல்லும் அம்பு தைக்க வேண்டிய அல்லது தைக்கும் இடம் இது.

நாவலில் சோமுமுதலி பொருள் தேடும் முப்பதுஆண்டுகளில் அவரின் செயலூக்கம் வியக்கவைக்கிறது.கருமமே கண்ணாயிருந்து பணம்தேடும் சோமுமுதலி முதலில் விலக்கத்தை ஏற்படுத்தினாலும் அவரின் செயலூக்கம் நம்மை ஆட்கொள்வதை மறுக்கமுடியாது.காவிரி பாயும் நிலத்தில் நிலத்தை விருப்பாத தூயவியாபாரி.

வியாபாரவிஷயங்களில் அவர் காட்டும் நேர்மையான அணுகுமுறைகள் மற்றும் ராயர்குடும்பநட்பு ஆகியவை சோமுமுதலி என்ற நிறபேத ஓவியத்தின் முக்கியவண்ணங்கள்.

நாவல் எளிய கிராமத்தின், எளியமனிதனில் தொடங்கி மனிதவாழ்வின் சாரமான வெறுமையை கண்டடைதல் புள்ளியை தொடுகிறது.அப்பொழுது வாசிக்கும் நமக்கு மனிதர்களாகிய நமக்கு என்னதான் வேண்டும்? என்ற கேள்வியை தவிர்க்க முடியாது.

சோமுமுதலியைப் போன்ற நபர்களை அனேகமாக தினமும் சந்திக்கிறோம்.பணம் சம்பாதிப்பது லட்சியவாதத்தாடு சேர்ந்ததா? வறுமை காலத்தில் அப்படியாக இருந்திருக்கலாம்.அடிப்படை வசதிகள் நிறைவேறியப்பின்னும் அது லட்சியமாக இருந்தால் அது கொண்டு சேர்க்கும் இடம் சோமுமுதலி உணரும் வெறுமையாக இருக்கலாம்.

நாவலை முடிக்கும் போது சோமுமுதலியுடன் முழுவாழ்க்கையை வாழ்ந்து பார்த்த உணர்வு வருவதால் இந்தநாவல் எனக்கு முக்கியமானது.சமூகம் பணத்தை நோக்கி தன் அத்தனை விரல்களையும் நீட்டி என்னை பார்க்க சொல்லும் போது,பணத்தால் பதட்டத்தை ஏற்படுத்தும் போது இந்தநாவல் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வண்டிசக்கரத்திற்கான சேவைகளை செய். நீ செல்ல வேண்டிய இடத்திற்கான வாகனமன்றி நீ செல்ல வேண்டிய இடமே அது அல்ல என்று சொல்வதால் இந்தநாவல் எனக்கு நெருக்கமானது.

நாவலின் முன்னுரையில் மனிதர் மேற்கொள்ளும் அனைத்து லட்சியங்களுமே பொசுக்கென்று உதறப்படுவது தான் என்று திருவாசகம் சொல்கிறது என்று ஆசிரியர் சொல்கிறார்.

மனிதர் எதிலும் போய் அமைவதில்லை.அதற்கும் மேலே மேலே செல்ல மனம் உந்துகிறது.பணத்தால் ஒருஅளவிற்கு மேல் தன்னிறைவை அளிக்கமுடிவதில்லை. பொருள் அடையவேண்டியதன்றி…அது எய்துதல் அல்ல என்று சொல்கிறது பொய்த்தேவு.இந்த கூச்சல்களுக்கு நடுவில் பணத்தின் எல்லையை சொல்லும் ஒருகுரல் எனக்கு தேவையாக இருக்கிறது.இதை எழுதும் பொழுது தன்கனத்த கண்ணாடியின் பின்னிருந்து தீவிரமான பார்வையோடு பார்க்கும் க.நா.சு கண்முன்னே வருகிறார்.காலத்தால் தீர்மானிக்கப்படுவதல்ல படைப்பாளியின் வாழ்வு என்பதால் அந்தக்கண்களை நோக்கி புன்னகைக்கிறேன்.

பாழாய்ப் போன பெண்டுலம் – இரா. கவியரசு கவிதை

​கால்சட்டை​​ அணிந்தபடி
தன்னைத்தானே தூக்குபவளின்
தோள்களில் வளரும் இளமையை
உள்ளிருந்தே உண்ணுகின்றன
அசையும் பிம்பத்தின்  நாக்குகள்.

இருவருக்கும் நடுவில் நின்று
வேடிக்கை பார்ப்பது
சித்ரவதையாய் இருக்கிறது கண்ணாடிக்கு.

பதின்வயதின் நதிக்கரையில்
கால் வைத்ததும்
துள்ளுபவளின் முன்பு
அவளுக்கு சிறிதும் பிடிக்காத
பெண்டுலமொன்று
வந்து நிற்கிறது.

உடைப்பதற்காக
சுவற்றை நோக்கி உதைக்கிறாள்.
கண்ணாடிக்குள் பெருகும்
காட்டு மரங்களில் தொங்கவிடுவதற்காக
அது
அவளை
உள்ளே இழுத்துக் கொண்டு ஓடுகிறது

கிளைகள் தோறும் குதித்தாடுபவள்
களைத்து நதியில் விழும் போது
சூழ்ந்து மிதக்கின்றன செம்பூக்கள்.
விலக்கிக் கொண்டே இருக்கிறாள்
கரையேறவே முடியவில்லை.
மீன்பிடிக்க வருபவர்களின்
வலைகளிலிருந்து தப்பிப்பதற்காக
தவளையாகித் தாவுகிறாள்.

இதற்கு முன்பு சென்றவர்கள்
செதுக்கிய குகையில்
சப்தமிடாது ஒளிந்து கொள்கிறாள்
மூச்சுமுட்ட அழுத்துகிறது நீள் இரவு.

அழுதபடியே
வெளியேறுபவளின்
நெஞ்சு பெருகுகிறது
அமுதுண்ண அமரும் பறவைகள்
விடாமல் கொத்துகின்றன.

தூக்கிச் செல்லும் பறவைகள்
வழியில் அவளை நழுவ விடுகின்றன.
மிகச்சரியாக வந்து
பிடித்துக் கொள்ளும் பெண்டுலம்
வீட்டுக்குள் வந்ததும்
பொத்தென்று போட்டு உடைக்கிறது.

அதற்குப்பிறகு
அவள்
பிம்பங்கள் உருவாகாத கண்ணாடிக்கு
தன் முதுகைக் காட்டியபடியே
சுவற்றில் முகம் பார்த்துக் கொள்கிறாள்.

அடிக்கடி சிரித்தாலோ
சிறிது
தன்னைத்தானே தூக்கினாலோ
தவறாது முன்னே வந்து விடுகிறது
பாழாய்ப் போன பெண்டுலம்.

முடிவு – ராதாகிருஷ்ணன் சிறுகதை

காவல் நிலைய வாசல் பகுதி வழக்கமான பரப்பரப்பின்றி யாருமற்று வெறிச்சோடியிருந்தது , முன்பே இங்கு பலமுறை வந்து போயிருந்தும் இப்படி மரங்கள் ஒன்று கூட இல்லாத மொட்டை வெளியாக வாசல் பகுதி இருப்பதை இப்போதுதான் உணர்கிறேன். காவல் நிலையம் சற்று பழங்கால கட்டிடம், ஆனால் வண்ணம் அடித்து நன்றாக பேணியிருந்தார்கள். வெளியே நிற்பதாக சொன்னவர்களை காணாது தேடினேன், அவர்கள் சற்று தள்ளி வாகன நிறுத்திற்காக போடப்பட்டிருந்த சிமெண்ட் சீட் கூரையில் கீழ் நின்று கொண்டிருந்தனர், நான் பார்ப்பதை கண்ட அதிலொருவர் கைகாட்டி என்னை அழைத்தார், செல்லும் போதே என் பரபரப்பை வெளிக்காட்டாது அனிச்சையாக பார்ப்பதை போல அந்த பெண்ணை துளாவினேன்,அவள் இடது கடைசி ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள், அருகில் இருந்த குண்டு பெண்மணியை ஒட்டியவாறு. அவள் முகம் நான் தேடிய பெண் அவள்தான் என்று சொல்லியது. நான் அருகில் சென்றதும் சேகர் முன்வந்து ஏன்டா லேட்டுஎன்று கேட்டபடி அந்த பெண்ணை காட்டி இவங்கதான்என்றான், அருகில் பார்த்த போது என் முதல் கவனம் அவள் கழுத்தில் தான் போனது, ரத்த திட்டுகள் போல இருந்தன, அவளை பார்த்து கழுத்துல என்ன? ‘ என்றேன், அவள் ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்து கொண்டாள், அருகில் இருந்த குண்டு பெண்மணி சண்டாளன் கழுத்துலயே மிதிச்சுருக்கான் என்றாள்.

வெயிலும் சேர்ந்து கொள்ள அவன் மீது கோபம் கோபமாக வந்தது, தேவிடியா மகன் என்று முணுமுணுத்து கொண்டேன், அது அவளின் காதில் விழுந்திருக்கும் போல, சட்டெனெ முகம் தூக்கி என்னை பார்த்தாள் , அவள் பார்வையை தவிர்க்கும் விதமாக திரும்பி கொண்டேன். சேகரை நோக்கி அவன் வரானா? ‘என்றேன், சேகர் இன்ஸ்பெக்டர் கூப்பிட்டு இப்ப மிரட்டனாரு, இப்ப வந்தரனு இருக்கான் என்றான். பிறகு அவனிடம் ஒன்றும் சொல்லாமல் திரும்பி அந்த குண்டு பெண்மணியை நோக்கி உங்க பொண்ணா என்றேன், அவள் இல்ல தம்பி அண்ணன் பொண்ணு, இவளுக்கு அம்மா இல்ல என்றாள், பின் எங்க அண்ணனும் இறந்துட்டாங்க, அவங்க இறந்து இன்னும் ஒரு வருஷம் கூட ஆவல என்றாள், “கூட பிறந்தவங்க என்றேன், “யாரும் இல்லங்க தம்பி !” என்று முடித்து கொண்டாள். இவள் அணிந்திருக்கும் நகைகள் 20 சவரன் இருக்கும், ஆனால் அதற்கு சம்பந்தம் இல்லாததை மலிவான பாலியெஸ்டர் சேலை , குளிக்காத சிக்கு கொண்ட தலை என இருந்தாள், இவளுக்கு நேர் மாறாக வெறும் தாலி சரடுடன் அந்த காயம் பட்ட பெண் இருந்தாள், சில இடங்களில் தேமல்கள் இருந்ததே தவிர அவை அசூயை அளிக்க கூடியதாக இருக்க வில்லை, அவளை நோக்கி கொஞ்சம் முன்னாடி வாங்க என்றேன், அதை கேட்டு திகைத்தவளாக திரும்பி மற்றவர்களை பார்த்தேன், பின் தயங்கி என் பக்கம் வந்தாள்.

வீட்டுக்காரர் குடிப்பாராஎன்றேன், “காலைலயே குடிச்சுருவாருங்க என்றாள், அது இல்லாம அவரால இருக்க முடியாதுங்கஎன்றாள். “குழந்தைக என்றேன், இன்னும் இல்லைங்க என்றாள், அதை தயங்கி சொன்னாள், ” அதுக்கு காரணம் நீங்களா இருக்க மாட்டீங்க என்றேன், பதில் ஏதும் சொல்லாமல் மவுனமாக இருந்தாள்.

ஒன்னும் பிரச்னை இல்லை, அவன் வேணும்னா வேணாமா னு முடிவு பண்ணுங்க “, வேணாம்னு இருந்தா பிறகு உங்க பக்கமே வராத மாதிரி ஸ்டேஷன்ல சொல்லி ரெடி பண்ணிடலாம் என்றேன். அவள் பதில் ஏதும் சொல்ல வில்லை, ” இப்படி தினமும் அடிப்பாரா என்றேன், “ஆமாங்கஎன்றாள், பின் சில கணம் கடந்து அழுதா எச்சா அடிப்பாருங்க என்றாள், சொல்ல சொல்ல அவளை பார்த்து கொண்டிருந்தேன், எழும்பு மேல் வெளிர்மஞ்சள் தோல் போர்த்தியவள் போல இருந்தாள், இருப்பினும் பொதுவாக ஒல்லி பெண்களை போல் அல்லாது அளவான மார்பும் ஒடுங்காத கன்னங்களும் கொண்டிருந்தாள், நீள்வட்ட முகம், நடுநேராக தலை சீவியிருந்தாள், முகத்தில் விபூதி இருந்தது, வரும் வழியில் ஏதும் சாலையை ஆக்கிரமித்த அல்லது சாலை ஆக்கிரமித்த கோவிலுக்கு சென்று வேண்டி கொண்டிருப்பாள், அவளுக்கு சோகம் அழகை கொடுக்கிறது என்று தோன்றியது. மனம் விட்டு வெளியே வந்துஎன்ன முடிவு பண்ணியிருக்க என்றேன், அவள் தயங்கி தயங்கி என்னால தினமும் பயந்து அவரோட வாழ முடியாதுங்க என்றாள்.

என் மனம் ஆசுவாசம் கொண்டது, தப்பித்து கொள்வாள் என்று எண்ணி கொண்டேன், பிறகு வேலைக்கு போறீயாமாஎன்றேன்,” இல்லைங்க என்றாள், சொல்லும் போது அவள் குரலில் கொஞ்சம் உற்சாகம் வெளிப்பட்டதை உணர்ந்தேன், ” பாத்து கொடுத்தா போவியா என்றேன், அவள்ம், போறேங்க என்றாள், அவள் தனக்கு தானே சொல்லி கொள்கிறாள் என்று தோன்றியது. ” சரி இங்கயே வைட் பண்ணுங்க என்று சொல்லி சேகரை அழைத்து ஸ்டேஷன் உள்ளே சென்றேன், பெரும்பாலும் எல்லோரும் தெரிந்தவர்கள்தான், கட்சியில் இருப்பதால் கிடைத்த பலன்களில் ஒன்று இது, “பாத்துக்கலாம் தம்பி என்ற எனக்கு சாதகமான வார்த்தையை பெற்று வெளியே வந்தேன், கூட வந்த சேகர் நா செலவாகும் னு நினைச்சேன், பரவால்ல என்றான்.

பெண் பக்கம் வந்து சரி வாங்க, அவன் மெல்ல வரட்டும் நாம வெளிய டீ சாப்பிட்டு வரலாம் என்றேன், குண்டு பெண்மணி முதல் ஆளாக முன்னே வந்தாள், அந்த பெண்ணையும் வாமா போயிட்டு வந்தடலாம் எவ்வளவு நேரம் இங்கயே நிக்க என்று சொல்லி அவளையும் இணைத்து கொண்டாள் .

மொத்தம் சேர்த்து 9 டீ 1 பிளாக் டீ சொன்னேன், எனக்கு பிளாக் டீ, பால் அருந்துவது பாவம், டீ குடிப்பதும் பாவம்தான், இப்போதைக்கு ஒரு பாவத்திலிருந்து மட்டும் என்னை தற்காத்து கொண்டு வருகிறேன். எதேச்சையாக நிகழ்வதை போல அவள் அருகில் வந்தேன், அதே எதேச்சையை அந்தகுண்டு பெண்மணியும் செய்தாள், “கொஞ்சம் இவங்க கிட்ட பேசணும்என்று கடும் தொனியில் குண்டு பெண்ணிடம் சொன்னேன், நீங்க பேசுங்க என்று சொல்லி வேகமாக தள்ளி நின்று கொண்டாள்.

வீட்டு காரரை உங்களுக்கு பிடிக்குமா என்றேன், ஒன்றும் சொல்லாமல் இருந்தாள், நான் மீண்டும் அவராவது மற்ற நேரங்களில் உங்க மேல பிரியமா இருப்பாரா என்றேன், ” இல்லைங்க என்றாள். ” ஏனா எதையும் யோசிக்குங்க, அப்பறம் திரும்ப திரும்ப முடிவை மாத்திட்டுருக்க இதுல முடியாதுஎன்றேன்.” வயசு எவ்வளோ என்றேன், “32 “என்றாள், ” தாராளமா இன்னொரு கல்யாணம் பண்ணலாம், நிறைய இப்ப அப்படி நடக்குது என்றேன், அப்போது குண்டு பெண்மணி பையனை திருத்த முடியாதுங்களா , கொஞ்சம் போலீசு மிரட்டினா பையன் பயந்து சரியா நடந்துக்குவான் ல என்றாள், அதுவரை அவள் நாங்கள் பேசியதை கவனித்து நின்று கொண்டிருந்ததை அப்போதுதான் கவனித்தேன், அவள் மேல் எரிச்சல் வந்தது பையன் உங்க சொந்தமா என்றேன், அதை கேட்டு திணறியவள் சொந்தமெல்லாம் இல்லைங்க, பொதுவா பசங்க குணம் இப்படித்தான் இருக்கும், புள்ளைகதான் கொஞ்சம் பேசி பேசி சரிபண்ண..” இப்படி பேசி கொண்டிருந்தவளை மறித்து உங்களுக்கு வீட்டுக்காரர் இப்படியா என்றேன், அவள் பதறி இல்லைங்க என்று சொல்வதற்குள் இன்னொரு குரல் அவளை நோக்கி சனியனே, கொஞ்சம் மூடிட்டு இருடி என்று சொன்னது, அது அந்த குண்டு பெண்ணின் கணவர் போல, அவர் என்னை நோக்கி இந்த சனியன் இப்படித்தான், நீங்க இவளை பொருட்படுத்தாதீங்க, அந்த பொண்ணு தினம் தினம் நரகத்துல நிக்குது, அவன் ஒழிஞ்சாதான் இந்த பொண்ணுக்கு விமோசனம், ” என்று பொரிந்தார், நான் இனி ஒன்னும் பிரச்னை இல்லைங்க, ஸ்டேஷன் ல எல்லாம் பேசியாச்சு, ஒன்னும் கவலை பட வேண்டாம்என்றேன் .

டீ குடித்து முடித்த பிறகு ஸ்டேஷன் நோக்கி நடக்க ஆரம்பித்தோம், சேகர் சட்டென என் அருகில் வந்து அவன் அங்க வந்து நின்னுட்டு இருக்கான்என்றான், நான் ஸ்டேஷன் நோக்கி பார்க்க, அங்கு பழைய புல்லட் அருகில் வெள்ளை சட்டையும், வேட்டியும் அணிந்து ஒருவன் நின்றுகொண்டிருந்தான், நாங்கள் அவனை கண்டு கொள்ளாது ஸ்டேஷன் நோக்கி நடந்தோம், அவன் வேகமாக வந்து எங்களை மறித்த படி நின்று நில்லுடிஎன்று அந்த பெண்ணை நோக்கி சொன்னான் , அவள் பதில் சொல்லும் முன்பாக நான் இடையில் புகுந்து எதுனாலும் ஸ்டேஷன் ல வச்சு பேசிக்கலாம் என்றான், அவன் என்னை பார்த்து கோபமாக முறைத்து பின் அவளை பார்த்துநில்லுடி, வாடி எங்கூட என்றாள், அப்போது அந்த பெண் சட்டெனெ நின்று விட்டாள், எனக்கு அதிர்ச்சி, அவள் நின்றதை உணர்ந்து மற்றவர்களும் நின்று விட்டனர்,

அவன் கோபத்துடன் இது எனக்கும் எ பொண்டாட்டிக்கும் உள்ள பிரச்னை, நீங்கல்லாம் உங்க வேலையை போய் பாருங்க என்றான், பிறகு அவளிடம் வாடி என்று கத்தினான், நான் ஒருவாறு பொறுமையை வரவைத்து கொண்டு அந்த பெண்ணிடம் உங்களுக்கு விருப்பம்னா இவர் கூட போங்க, இல்லைனா வாங்க ஸ்டேஷன் ல வச்சு பேசிக்கலாம், நீங்க இவருக்கு பயப்பட வேண்டியதில்ல என்றேன், அவன் கோபத்துடன் என்னை நோக்கி யாருடா நீ என்று கத்தினான், “மரியாதையா பேசுங்க, ஸ்டேஷன் ல பிரச்னை போயிடுச்சு, ஸ்டேஷன் வா பேசிக்கலாம் என்றேன், அது அவனுக்கு இன்னும் கோபத்தை அளித்தது, ஆனால் அவன் பதிலுக்கு என்னிடம் பேசாமல் அவளை நோக்கி திரும்பி வெறியுடன் தேவிடியா முண்ட என்று சொல்லியபடி அடிக்க போனான், என் கூட இருந்தவர்கள் அதை பார்த்த உடனே சட்டென்று ஒன்று சேர்ந்து அவனை பிடித்து தள்ளி விட்டார்கள், தள்ளியதில் பின் நேராக பொத்தென விழுந்தான், விழுந்தவன் அதே வேகத்தில் எழுந்து ஆங்காரமாக திரும்ப அதே வார்த்தையில் அவளை நோக்கி கத்தினான், சத்தம் கேட்டு ஸ்டேஷன் உள்ளே இருந்து ஒரு போலீஸ்காரர் எவன்டா கத்துனது என்று சத்தமாக மிரட்டிய படி வெளியே வந்தார், அவரது மீசையும் போத்து உடலும் எனக்கே பயத்தை அளித்தது, ஆனால் அது அவன் கவனத்திற்குள் போகவே இல்லை போல, ” வாடி என்று கத்தி கொண்டிருந்தான், போலீஸ்காரர் அவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தார், அவன் மீண்டும் தேவிடியா என்று சொல்ல தொடங்கும் கணத்தில் சரியாக போலீஸ் காரர் அவனை ஓங்கி ஒரு அறை விட்டார், அது அவனை தடுமாற வைத்து மீண்டும் கீழே விழ வைத்து விட்டது, அவன் தடுமாறி எழும் போது கத்தன, மிதிச்சு கொன்னுடுவேன் நாயே ! ” என்று போலீஸ்காரர் மிரட்டினார், அவன் மீண்டும் அதை பொருட்படுத்தாது அவளை நோக்கி முண்ட வாடி என்று அங்காரமாக கத்தி கொண்டே எழ போலீஸ்காரர் ஓங்கி அவன் நெஞ்சில் மிதித்தார், கீழே மண் அதிர விழுந்தான், இவனுக்கு வேணும் இது என்று எண்ணி கொண்டே அவனை பார்த்து கொண்டிருந்த நான் சட்டென்று ஏதோ தோன்ற திரும்பி அந்த பெண்ணை பார்த்தேன், அவள் அழுது கொண்டிருந்தாள். உடனே நான் போலீஸ்கார் அருகில் சென்று வேணாம் விடுங்க சார் என்றேன், ” இவனுக எல்லாம் சைக்கோ தாயோளிக, கைகால உடைச்சு மூலைல உட்கார வச்சாத்தான் திருந்துவானுக என்றார் , விழுந்ததில் அவன் வேட்டி நழுவியிருந்தது, சட்டை எல்லாம் மண் படிந்திருந்தது, முகம் பார்க்க எந்நேரமும் அழ தொடங்கி விடுவான் போல இருந்ததுபெண் என்னருகில் வந்தாள் அண்ணா நான் இவரோடவே போயிடுறேன்ணா என்றாள், எங்களோடு இருந்த ஒருவர் இவனோட போனா சாவடிச்சுவான் உன்ன என்று கத்தினார், நான் அவரிடம் கொஞ்சம் பொறுமையா இருங்க என்றேன்.

குண்டு பெண்மணி என் அருகில் வந்து அவனை பொண்ண அடிக்க கூடாது னு சொல்லி மிரட்டி மட்டும் விட சொல்லுங்க தம்பி, பையன் அடங்கிடுவான் என்று சொல்லி பெண்ணை நோக்கி நீயும் அவனை கோபம் வர மாதிரி நடந்துக்காதே என்றாள், இதற்கு மீறி இங்கு நிற்க வேண்டியதில்லை என்று எண்ணம் வந்த உடனே அந்த கூட்டத்திலிருந்து விலகி வேகமாக நகர்ந்து என் இரு சக்கர வாகனம் இருக்கும் இடம் நோக்கி சென்றேன், பின்னிலிருந்து சேகர்நில்லுடா என்று கத்தியது கேட்டது.

நடக்கும் போது அவன் துளியும் மாற மாட்டான்என்று மனம் எண்ண துவங்கியதுமே திரும்பி அந்த பெண்ணை பார்த்தேன், அவள் அந்த குண்டு பெண்மணியை அருகில் ஒட்டியவாறு நின்று கொண்டிருந்தாள்.

சாத்தியமற்ற குற்றம் – காலத்துகள் சிறுகதை

‘பூட்டின ரூம்ல கொலை ஸார்!’

‘என்னய்யா, பல்ப் நாவல் தலைப்பு மாதிரி சொல்லற?’ என்றார் இன்ஸ்பெக்டர் எக்ஸ்.

‘அப்படித்தான் ஸார் நடந்திருக்கு. இந்த வீட்லதான்,’ என்று ஏட்டையா வய் கூற, ‘வீடா, பங்களான்னு சொல்லுயா, வைட் டவுன்ல மூணு ப்ளோர்ல இவ்ளோ பெருசா கட்டணும்னா… பீச் வ்யு வேற, கொஞ்சம் பழசோ…’ என்று எக்ஸ் கேட்க, ‘எஸ் ஸார், முப்பது முப்பத்தஞ்சு வருஷம் இருக்கும், வாங்க,’ என்றார் வய்.

‘யார் ஓனர்?’

‘கிஷோர், அவர் தான் விக்டிம். துணிக்கடை வெச்சிருக்கார், ப்ளஸ் ரெண்டு ஹை எண்ட் பேஷன் போட்டிக். இந்த ஏரியாலையே மூணு வீடு வாடகைக்கு விட்டிருக்கார்… விட்டிருந்தார்.’

ஹாலில் கட்டப்பட்டிருந்த லாப்ரடாரைப் பார்த்த எக்ஸ், ‘இது நைட் குலைக்கலையா?’ என்று கேட்க, ‘அது ஷெர்லாக் ஹோல்ம்ஸ் காலத்து க்ளூ ஸார், நூறு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. அடுத்து சிகரெட் துண்டு, மண்ணுல ஷூ அச்சுன்னு துப்பறியப் போறாரா எழுத்தாளர்? இது டிஜிட்டல் புட்ப்ரிண்ட் காலம், அரதப் பழசா யோசிக்கறதை விட்டுட்டு புதுசா ட்ரை பண்ண சொல்லுங்க.’ என்றார் வய்.

‘என்னயா ரொம்ப சலிச்சுக்கற?’

‘ஹார்ட் பாயில்ட் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் பண்ணனும்னு ரொம்ப நாளா ஆசை, ஸார்.’

‘அந்த ழானர் மட்டுமென்ன புதுசா, ஆரம்பிச்சு அறுபது எழுபது வருஷமாச்சேயா, தவிர அந்த உலகம் ப்ரைவேட் டிடெக்டிவ்களுடையது, நம்மள மாதிரி போலிஸ்காரங்களுக்கு வாய்ச்சது இது மாதிரி சாதாரண மனிதர்களா இருக்கறது, இல்ல ஸ்காண்டிநேவியன் குற்றப் புனைவுலகில் வரவங்க மாதிரி மிதமிஞ்சிய குடி, டைவர்ஸ்னு அல்லாடறது, ரெண்டுதான், எது பெட்டர்?’

‘நாயர்ன்னு என்னமோ சொல்றாங்களே அதை ட்ரை பண்ணலாம்ல ஸார்?’

‘அது நுவார்யா. நம்பூதிரி, குறுப்புன்னு ஆரம்பிக்காத. நமக்குன்னு ஆசை, சுய சிந்தனை இருக்கக் கூடாதுயா, ரைட்டர் சொல்றதுதான். மொதல்ல இதை கண்டுபிடிப்போம், அப்பறம் பாக்கலாம், எனக்கும் சேஞ்ச் வேண்டியிருக்கு’

ஹாலிலிருந்த படிக்கட்டுக்கள் வழியாக முதல் தளத்தை அடைந்தார்கள். ‘இந்த ரூம்தான் ஸார்.’ கதவுகள் திறந்திருந்த அறைக்குள் நுழைந்தார்கள். படுக்கையிலிருந்த உடலின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ரத்தம் உறைந்திருந்த காயங்கள். ‘மர்டர் வெபன்?’ என்று எக்ஸ் கேட்க, ‘பெட் மேல இந்த கத்தி இருந்தது ஸார்,’ என்று ப்ளாஸ்டிக் உறையில் சீல் செய்யப்பட்டிருந்த கத்தியைக் காட்டினார் வய். ‘ப்ளட் எதுவும் இல்ல?’, ‘ஆமா ஸார், சுத்தமா தொடச்சிருக்கு, அதுக்கு யூஸ் பண்ணின துணி பெட்டுக்கு கீழ இருந்தது. கலெக்ட் பண்ணிருக்கோம்’ என்றபடி வய் நீட்டிய மற்றொரு ப்ளாஸ்டிக் உறையில் ரத்த தீற்றல்களுடன் கர்சீப். அதை வாங்கிப் பார்த்து விட்டு திரும்பித் தந்த எக்ஸ், அறையிலிருந்த ஜன்னலருகே சென்று ‘இதுவும் மூடியிருந்ததா’ என்றார்.

‘ஆமா ஸார், செக் பண்ணிட்டோம், க்ரில்ஸ் எதுவும் உடையல’ என்றபடி அதைத் திறந்தார் வய். கம்பிகளை பிடித்துப் பார்த்தபடி ‘ஹூடுனி மாதிரி யாரவது வேணும்னா இதை வளைச்சு வெளியேறி கம்பிகளை திருப்பி செட் பண்ணிருக்கலாம்’ என்ற எக்ஸ் மீண்டும் படுக்கைக்கு அருகே வந்தார். ‘இந்த ரூம்ல ஏதாவது சீக்ரட் பாசேஜ் இருக்கலாம் ஸார்’ என்று வய் சொல்ல ‘அதெல்லாம் காதிக் பிக்க்ஷன்ல தான்யா, நம்மளது நவீனத்துவ உலகம்யா,.. இல்ல போஸ்ட் மாடர்னிஸமா, எனக்கு ரெண்டும் புரிஞ்சதே இல்லை’ என்றார் எக்ஸ்.

‘அப்ப எப்படி ஸார் கில்லர் வெளியே போனான், அமானுஷ்ய வேலையாயிருக்குமோ’

அந்த கேஸ் முடிஞ்சு போச்சுயா, இது வேற. யார் பாடியை மொதல்ல பார்த்தது?’

‘வீட்ல வேலை செய்யறவங்க ரூம் கதவை தட்டியிருக்காங்க, திறக்கலைனதும் ஓபன் பண்ண ட்ரை பண்ணிருக்காங்க, முடியலை, உள் பக்கம் தாப்பா போட்டிருந்திருக்கு. அப்பறம் வீட்ல இருக்கறவங்களை கூப்பிட, ரெண்டு பேரா கதவை ஒடைச்சிருக்காங்க.’

‘யாரெல்லாம் இந்த வீட்ல இருக்காங்க?’

‘கிஷோருக்கு கல்யாணமாகலை. அவர் எல்டர் ப்ரதர் பசங்க மூணு பேர் இவரோட இங்க ஸ்டே பண்றாங்க.’

‘எல்டர் ப்ரதர் உயிரோட இல்லையா?’

‘இவங்க சின்னப் பசங்களா இருக்கும்போதே பேரெண்ட்ஸ் இறந்துட்டாங்க, கிஷோர்தான் வளர்த்திருக்கார்.’

‘கடை இரண்டு ப்ரதர்ஸுக்கும் சொந்தமா இருந்திருக்கும் இல்லையா?’

‘செக் பண்ணனும் ஸார், பட் நீங்க ஹிண்ட் பண்ற மாதிரி மோடிவ் இருந்திருந்தாலும், பூட்டின ரூம்ல யாரு, எப்படி…’ என்ற வய் தொடர்ந்து ‘இன்னொரு விஷயம் ஸார், போன வாரம் வீட்லேந்து பத்தாயிரம் ரூபாய் காணாம போயிருக்கு, கிஷோர் வீட்ல வேலை செய்யறவங்களை சந்தேகப்பட்டார்னு அந்த பசங்க சொல்றாங்க’ என்றார்.

‘இன்ட்ரஸ்டிங். வேலை செய்யறவங்களை வரச் சொல்லுங்க,’ என்றபடி அறைக்கு வெளியே சென்றார் எக்ஸ்.

‘உங்க பேரென்னம்மா, என்ன நடந்துச்சு?’

‘ஜெயா, ஸார். வழக்கம் போல ஆறரை மணிக்கு வேலைக்கு வந்துட்டேன். ஹாலைப் பெருக்கி முடிச்சுட்டு இந்த ரூமுக்கு வந்தேன். அந்நேரத்துக்கு எப்பவும் தொறந்து தானிருக்கும், இன்னிக்கு மூடியிருந்தது. தட்டினேன், கூப்ட்டேன், யாரும் வரலை, நானே தொறக்க பார்த்தேன் முடியலை.’

‘உள்ள ஏதாவது சத்தம், சின்னதாகக்கூட… கேட்டுதா?’

‘இல்லைங்க.’

‘அப்பறம்?’

‘இவங்களைக் கூப்பிட்டேன்,’ என்று அங்கு நின்றிருந்த மூன்று இளைஞர்களில் இருவரைச் சுட்டினார் ஜெயா.

‘உங்க பேரென்ன?’ என்று எக்ஸ் கேட்க,’நான் மாதவ், இது சோனு. நாங்க செகண்ட் ப்ளோர்ல எங்க ரூம்ல இருந்தோம், இவங்க சத்தம் கேட்டு வந்தோம்.’

‘உள்ள லாக் ஆகியிருந்ததுன்னு நிச்சயமா தெரியுமா?’

‘ஆமா ஸார், ரெண்டு பேரும் புல் போர்ஸ் போட்டப்பறம் தான் தொரந்துச்சு’

‘இன்னொரு ப்ரதரா?’ என்று சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த மற்றொரு இளைஞனை பார்த்து எக்ஸ் கேட்க, ‘ஆமா ஸார், ராகேஷ்,’ என்று மாதவ் சொல்ல, அவன் அருகே வந்தான்.

‘நீ எங்க இருந்த?’

‘நேத்து நைட் செம தலைவலி ஸார், மாத்திரை போட்டு தூங்கிட்டேன்.’

‘எப்ப கீழ வந்த?’

‘ நான் வந்தப்ப இவங்க கதவ ஒடைச்சுக்கிட்டு இருந்தாங்க’

‘இவர் சொல்றது கரெக்டா?’ என்று மாதவ்விடம் எக்ஸ் கேட்க, ‘ஆமா, நான் பெட் கிட்ட போய் பார்த்துட்டு பயந்து திரும்பறேன், இவன் ரூம் வாசல்ல நிக்கறான்,’ என்றான் அவன்.

‘ஓகே. உங்க சித்தப்பாவை கொலை செய்யற அளவுக்கு யாருக்கு வெறுப்பு இருக்க முடியும்னு நினைக்கறீங்க?’ என்று எக்ஸ் கேட்டதற்கு மூவரும் இல்லையென்று தலையசைத்தனர்.

‘சரி, நீங்க மூணு பேரும் ஹால்லயே இருங்க, வீட்டை விட்டு இப்போதைக்கு போகக் கூடாது.’

அவர்கள் சென்ற பின் ஜெயாவிடம், ‘போன வாரம் வீட்ல பணம் காணாம போச்சாமே’ என்று கேட்டார் எக்ஸ்.

‘ஆமா ஸார், பத்தாயிரம் ரூபாய்’

‘கிஷோர் அது பத்தி உங்க கிட்ட ஏதாவது கேட்டாரா’

‘இல்லைங்க, யாரோ திருடிட்டாங்கன்னு சொன்னார் அவ்ளோ தான்’

‘அதை நீங்க எடுத்ததா…’

‘ஐயோ அபாண்டங்க, நான் ஏங்க எடுக்கறேன், நல்ல சம்பளம் குடுத்தாருங்க, மத்தவங்க காசு எனக்கெதுக்கு’

‘கிஷோருக்கு உங்க மேல தான் சந்தேகம்ன்னு இந்த பசங்க ..’ என்ற எக்ஸை இடைமறித்து ‘ராகேஷ் தான் திருடிருப்பான்னு என் கிட்ட அவர் சொன்னார் ஸார்’ என்று உரத்த குரலில் ஜெயா கூறினார்.

‘அப்ப ஏன் மொதல்ல யாரோ திருடிட்டாங்கன்னு சொன்னதா சொன்ன’

‘அது அவங்க குடும்ப விஷயம்ங்க, நான் எதுக்குன்னு..’

‘ஆனா காணாம போன பணம் இன்னும் கிடைக்கலையே, அப்ப அந்த பசங்க சொல்றதை பத்தி யோசிக்க வேண்டியிருக்கே’

‘ஸார், ஐயாக்கும் இந்தப் பசங்களுக்கும் நாலஞ்சு மாசமா அடிக்கடி சண்டை நடக்குது, அதை விசாரிங்க.’

‘என்ன சண்டை?’

‘சொத்து ஸார், பிசினஸ் பண்ண பணம் கேட்டாங்க, அவங்க அப்பா மூலமா வர வேண்டிய பங்குன்னு எதுவுமில்லைனு ஐயா சொன்னார், அதான் பிரச்சனை.’

‘மூணு பேருமே பிசினஸா?’

‘மொதோ ரெண்டு பசங்க ஸார், ராகேஷ் இப்பத்தான் காலேஜ் முடிச்சிருக்கான், அதுலயும் நெறய பெயில் போலிருக்கு, ஐயா திட்டிட்டிருப்பாரு.’

‘சரி, நீங்க கதவை தட்டும் போது ரூம் உள்ள பூட்டியிருந்துதுன்னு ஷ்யுரா சொல்ல முடியுமா உங்களால?’

‘நிச்சயமா ஸார், நானே கதவை தொறக்க பாத்தேன், முடியலை. ரெண்டு பேர் சேர்ந்து தள்ளினப்பறம்தான் தொறந்தது.’

‘சரி நீங்களும் கீழ வெயிட் பண்ணுங்க.’

‘என்ன ஸார், நீங்க கெஸ் பண்ணின மாதிரி மோடிவ் இருக்கு, ஆனா எப்படி செஞ்சிருக்க முடியும், தவிர இவங்க சொல்றதை எந்தளவுக்கு நம்பறது?’

‘எவிடன்ஸ் கலெக்ட் பண்றவங்க இன்னும் கிளம்பலையில்ல?’

‘இங்கதான் ஸார் இருக்காங்க’

‘வரச் சொல்லுங்க’.

வந்தவர்களிடம், ‘ரெண்டு கதவு பக்கத்துலயும் இன்னும் மைன்யுட்டா செக் பண்ணுங்க,’ என்றவர் தொடர்ந்து மெல்லிய குரலில் ஏதோ சொல்ல,

‘ஏதாவது ஐடியா கிடைச்சிருக்கா ஸார்?’ என்று கேட்டார் வய்.

‘சால்வே பண்ணிட்டேன்.’

‘எப்டி ஸார்?’

‘ஒரு க்ளூ தரேன், ஜான் டிக்ஸன் கார்.’

வய் தன் அலைபேசியில் தேட ஆரம்பிக்க, அறையை ஒரு முறை சுற்றியபின் அறைவாசலுக்குச் சென்றார் எக்ஸ்.

‘என்னய்யா கண்டுபிடிச்சியா?’

‘கொஞ்சம் டைம் குடுங்க ஸார்.’

‘நேரமில்லை, வேற வேலையிருக்கு.’

‘இன்னொரு கேஸா ஸார்?’

‘நமக்கு என்ன நேரப் பிரச்சனை, அடுத்த கதை, கேஸ் வர நாலஞ்சு மாசம்கூட ஆகும், வாசகர்களை பத்தி யோசி. இது ட்விட்டர் பிக்க்ஷன் காலம், நொடிக் கதைகளை படிக்கவே நேரமில்லைன்னு சொல்றாங்க, ஸோ ஏன் கேஸை நீட்டி முழக்கணும். இப்பவே முடிச்சுட்டா வாசகர்கள் இன்னொரு புனைவுலகிற்குள் நுழையலாம்ல. ஹாலுக்கு போலாம்.’

‘நேத்து ஈவ்னிங்லேந்து மார்னிங் வரைக்கும் நீங்க எங்க இருந்தீங்கன்னு சொல்லுங்க.’

‘மதியம் நாலரை மணிக்கு வந்து, எப்பவும் போல ஆறு மணிக்கு கிளம்பிட்டேன் ஸார், அதுக்கப்பறம் வீட்ல தான் இருந்தேன்,’ என்றார் ஜெயா.

‘நானும் சோனுவும் பத்தரை மணி வரை நாங்க ப்ளான் பண்ணிருக்கற பிசினஸ் பத்தி பேசிட்டு எங்க ரூமுக்கு தூங்கப் போயிட்டோம்.’

‘எனக்கு தலைவலின்னு சொன்னேனே ஸார், நான் ஒன்பது மணிக்கெல்லாம் படுத்துட்டேன்.’

‘நாங்க தூங்கப் போனப்போ இவன ஈவ்னிங் முழுக்க பார்க்கலையேன்னு இவன் ரூமுக்கு போனேன், லைட் எரியலை, போன் ட்ரை பண்ணினேன் லைன் கிடைக்கலை.’

‘சார்ஜ் இல்லை ஸார், டயர்டா இருந்ததால அப்படியே தூங்கிட்டேன்.’

‘உங்க சித்தப்பாவை கடைசியா எப்ப பார்த்தீங்க?’

‘டின்னர்போது ஸார், ஒன்பது, ஒன்பதேகால் இருக்கும்.’

‘நீ அதுக்கு முன்னடியே வீட்டுக்கு வந்து படுத்துட்ட?’

‘ஆமா ஸார்.’

‘உங்க பிஸ்னஸுக்கு பணம் கேட்டு சித்தப்பாவோட சண்டை போடுவீங்களாமே?’

‘…’

‘நான் சொல்றது பொய்யா?’

‘இல்ல ஸார்…’

‘அப்பறம்?’

‘எங்கப்பா பங்கைதான் நாங்க கேட்டோம், அதை தர மாட்டேன்னார், அதான் சண்டை ஸார், ஆனா கொலைலாம்… ‘

‘…’

‘வீட்ல போன வாரம் பத்தாயிரம் ரூபாவை காணும் ஸார், சித்தப்பாக்கு ஜெயா மேல…’ என்று சோனு ஆரம்பிக்க ‘ஐயோ பொய் ஸார், அவருக்கு ..’ என்ற ஜெயாவை ‘நீங்க பேசாம இருங்க’ என்ற எக்ஸ்

‘ம்ம். எல்லாரும் போன் நம்பர்ஸ் குடுங்க, தேவைப்படலாம். ராகேஷ் மொபைலை சார்ஜ் பண்ணிட்டீங்களா?’ என்று அவனிடம் கேட்டார்.

‘காத்தாலேந்து டென்ஷன் ஸார், மறந்துட்டேன்.’

‘உங்ககிட்டதான் இருக்கு போலிருக்கு?’ என்று எக்ஸ் கேட்டவுடன் சட்டை பாக்கெட்டிலிருந்து அதை ராகேஷ் எடுக்க, அவனிடமிருந்து வாங்கி அதை இயக்கினார்.

‘சார்ஜ் இல்லைனீங்க, எய்ட்டி போர் பர்சென்ட் இருக்கு, அப்பறம் ஏன் ஆப் ஆகியிருக்கு, நீங்களே ஆப் பண்ணிட்டீங்களா?’

‘இல்ல ஸார்… சரியா கவனிக்கலை போலிருக்கு.’

‘இப்பலாம் போன் எந்த நேரத்துல எந்த லொகேஷன்ல இருந்துதுன்னு கண்டு பிடிச்சிடலாம், பார் எக்ஸாம்பிள் நீங்க ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்துட்டீங்கன்னா உங்க மொபைல் லொகேஷன் இந்த வீட்டை தான் அந்த நேரத்துக்கு காட்டும்.’

‘இதுதான் ஸ்விட்ச் ஆகியிருந்ததே ஸார்?’

‘ஸோ லொகேஷன் ட்ராக்கிங் பண்ண முடியாதுன்னு சொல்றீங்க, ஓகே,’ என்ற எக்ஸ் மாதவ்விடம், ‘நீங்க பாடியை பார்த்தவுடனேயே ராகேஷும் ரூமுக்கு வந்துட்டார் இல்லையா?’ என்று கேட்க, ‘ஆமா ஸார்.’

‘என்ன ட்ரெஸ்ல இருந்தார்?’

‘இதே பேன்ட் ஷர்ட்தான் ஸார்.’

‘ராகேஷ், உங்க தலைவலில ட்ரெஸ்கூட மாத்தாம தூங்கிட்டீங்களோ?’

‘…’

‘ஒருவேளை ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு கீழ வந்தீங்களா?’

‘இல்ல ஸார், அப்படியே தூங்கிட்டேன்.’

‘சத்தம் கேட்டு வேகமா ஓடி வந்திருப்பீங்கல்ல?’

‘எஸ் ஸார்.’

‘அவர் ஓடி வந்த சத்தம் உங்க யாருக்காவது கேட்டுதா?’

‘இல்லை ஸார், ஆனா நாங்க பதட்டத்துல இருந்தோம் ஸார், எதையும் கவனிக்கற நிலைமைல இல்ல.’

‘நீங்க ஏன் உள்ள வராம வாசல்ல நின்னீங்க?’

‘…’

‘என்ன நடந்துன்னு தெரியாம பயத்துல நின்னுருப்பீங்களோ?’

‘…’

‘உள்ளேந்து வாசல் வரைக்கும் போனாப் போதும் இல்லையா உங்களுக்கு?’

‘என்ன ஸார் சொல்றீங்க?’ என மாதவ் கேட்க, முதல் தளத்திலிருந்து இறங்கி ஹாலுக்கு வந்த போலீஸ்காரர் இன்ஸ்பெக்டரிடம் மெலிதாக ஏதோ கூறிச் சென்றார்.

‘உங்க சித்தப்பா ரூமுக்குள்ள டோர்கிட்ட ரெண்டு மூணு தலை முடி கிடைச்சிருக்கு, டி.என்.ஏ டெஸ்ட் அது யாருதுன்னு சொல்லும்,’ என்று இன்ஸ்பெக்டர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே எழுந்து ஓட ஆரம்பித்த ராகேஷைப் பிடித்தார் ஏட்டையா.

‘எப்படி ஸார் கண்டுபிடிச்சீங்க!’

‘அதான் சொன்னேனே, ஜான் டிக்ஸன் கார்.’

‘எனக்கு இன்னும் பிடிபடலை ஸார்.’

‘லாக்ட் ரூம் மர்டர்ஸ்னு குற்றப் புனைவுல ஒரு வகைமை இருக்குயா, இம்பாசிபிள் க்ரைம்ஸ்னும் சொல்வாங்க, அதுல அவர்தான் பெஸ்ட், நிறைய நாவல் எழுதியிருக்கார். அதுல ஒண்ணுல துப்பறிகிறவர் பூட்டின அறைல கொலை எப்படியெல்லாம் நடக்கக்கூடும்னு பத்து பண்ணண்டு வழிகளை சொல்வார். அதை பேஸா வெச்சுகிட்டு மூணு பாய்ண்டஸை கொஞ்சம் சேஞ்ச் பண்ணினா நம்ம கேஸுக்கு  செட் ஆகக்கூடும்னு முதல்லையே தெரிஞ்சுது.’

‘எதெல்லாம் ஸார்?’

‘பர்ஸ்ட், கதவு உட்பக்கம் தாழ்ப்பாள் போடப்படாமல் இருந்திருக்கலாம். தட் இஸ், மாதவ், சோனு ரெண்டு பேரும் நைட்டே கிஷோரை கொலை செஞ்சிருக்கலாம். அப்பறம் மார்னிங், ரூம் உள்பக்கமா பூட்டியிருந்த மாதிரி நடிச்சிருக்கலாம், ஆனா வீட்டு வேலை செய்யறவங்க லாக் ஆகியிருந்ததுன்னு கன்பர்ம் பண்ணிட்டாங்க. ஸோ அதை விட்டுடலாம்.

‘ரெண்டாவது, இதுலயும் ரூம் பூட்டப்படாம இருந்திருக்கலாம், ஆனா உள்ள இருக்கறவர் செத்திருக்கணும்னு கட்டாயமில்லை. இவங்க ரெண்டு பேரும், கிஷோருக்கு நேத்து நைட் ஏதாவது செடேடிவ் குடுத்திருக்கலாம். அப்பறம் ஜெயா சத்தம் போட்டவுடன், கதவை உடைக்கற மாதிரி நடிச்சு, உள்ள நுழைஞ்சு அவரை குத்தியிருக்கலாம். ஆனா முதல் பாயின்ட் தப்புன்னு தெரிஞ்சவுடனேயே, அதாவது ரூம் லாக் ஆகியிருந்தது உண்மைன்னா, இதுவும் பொருந்தாம போயிடுது  இல்லையா. தவிர ஜெயா கூடவே இருந்ததால் கொலை செய்வதற்கு டைமோ, சான்ஸோ அவங்க கிட்ட இல்லை.’

‘ஜெயாவும் இதுல இன்வால்வ் ஆகியிருக்கலாமே ஸார்?’

‘பாசிபிள், ஆனா அவங்ககூட பேசினத வெச்சு ஷி இஸ் இன்னொசன்ட்ன்னு எனக்குப் பட்டது.’

‘பணம் காணாம போன விஷயம்?’

‘சோனு சொன்ன மாதிரி ஜெயா பணத்தை எடுத்திருந்தா, கிஷோர் ஏன் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலை, பெரிய அமவுண்ட்டாச்சே. ஜெயாவை அட்லீஸ்ட் வேலையை விட்டாவது எடுத்திருக்கலாமே. ஸோ வீட்ல இருக்கற ஒருத்தர் தான் திருடியிருக்கணும்னு கிஷோர் நினைச்சிருக்கணும். தவிர மூணாவது பாயின்ட் இந்த கேஸுக்கு பிட் ஆகற மாதிரி இருந்தது.’

‘அது என்னது ஸார்?’

‘கொலைகாரன் ரூமை பூட்டிட்டு உள்ளேயே, கதவு பக்கத்துல, இல்லை, வேற மறைவான இடத்துல இருப்பான். கதவை ஒடச்சுகிட்டு வரவங்களோட போகஸ் டெட் பாடி மேலத்தான் இருக்கும், பர்ஸ்ட் ப்யு செகண்ட்ஸ் ரூமை யாரும் கவனிக்க மாட்டாங்க, அந்த டைம்ல மர்டரர் வெளில போய்டுவான், இல்ல அப்பத்தான் ரூமுக்குள்ள நுழையற மாதிரி நடிப்பான். இங்க இன்னொரு விஷயத்தை நீங்க கவனிக்கணும். பூட்டிய ரூமுக்குள்ள கொலை செஞ்சுட்டு வெளில போக முடிஞ்சவனுக்கு, கத்தியை எடுத்துட்டு போக முடியாதா என்ன? ஸோ, மர்டரர் ரூம்லதான் இருந்திருக்கணும்னு கெஸ் பண்ணினேன். ராகேஷ்தான் கடைசியா வந்திருக்கான். அப்பறம் அவன் போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்ததுன்னு தெரிய வந்தது, நைட் கால் வரும்னு அணைச்சு வெச்சிருக்கான். அவன் ட்ரஸ் பத்தி கேட்டப்ப அதை மாத்தலைன்னு சொன்னான், கத்தியை பேண்ட், சட்டைல ஒளிச்சு வைக்க அவனுக்கு பயம், அதான் ரூம்லயே விட்டுட்டான்.’

‘எல்லாம் சரி ஸார், ஆனா பிஸிகல் எவிடன்ஸ் எதுவும் கிடைக்கலையே, அவனோட தலைமுடி கிடைச்சாக்கூட அது எப்ப வேணா அங்க வந்திருக்கலாம்னு ஆர்க்யு பண்ணலாமே?’

‘தலைமுடி கூட கிடைக்கலைய்யா, அது அவன ட்ரிக்கர் பண்ண நான் பண்ணின ஏற்பாடு.’

‘…’

‘அரதப் பழசை விடுங்கன்னு சொன்ன, கடைசில பாரு, கோல்டன் ஏஜ் க்ரைம்தான் இதுவும், ஈஸியா கண்டுபிடிச்சுட்டோம்.’

‘என்னதான் வாசகர் மன நலம் கருதி கேஸை இவ்ளோ சீக்கிரம் சால்வ் பண்ணினாலும், இதெல்லாம் நம்பற மாதிரியே இல்லை ஸார்.’

‘கோல்டன் ஏஜ் க்ரைம் பிக்க்ஷன் இப்படித்தானேய்யா, கடைசில எல்லாரையும் கூப்பிட்டு வெச்சு, குற்றம் எப்படி நடந்ததுன்னு சொன்னா, குற்றவாளி ஒத்துப்பான், அவ்ளோதான். தவிர இவன் ஒன்னும் பெரிய ப்ளான் பண்ணிலாம் கிஷோரை கொலை பண்ணலை. நேத்து நைட், இவன் படிப்பு சம்பந்தமா ஆர்க்யு பண்ணிருக்காங்க. நீதான் பணத்தை எடுத்திருக்க, இனிமே உன் செலவுக்கு எதுவும் தரமாட்டேன்னு கிஷோர் சொல்லிருக்கார். அந்த கோவத்துல இவன் அவரை குத்திருக்கான். அப்பறம் இப்படி இம்பரவைஸ் செஞ்சிருக்கான். பட் அவன் என்ன மொரியார்ட்டியா, கொஞ்சமா ப்ரஷர் அப்பளை பண்ணினவுடனே ஒத்துக்கிட்டான்’

‘…’

‘என்னய்யா, நீ இன்னும் கன்வின்ஸ் ஆகலையா?’

‘அவன் மொரியார்ட்டி மாதிரி அதிபுத்திசாலி கிரிமினல் கிடையாதுன்னா பூட்டின ரூம்ல கொலை நடந்தா மாதிரி எப்படி செட்டப் பண்ண முடிஞ்சுது, இதுலயும் லாஜிக் இல்லையே ஸார்?’

‘ட்ரூத் இஸ் ஸ்ட்ரேஞ்சர் தான் பிக்க்ஷன்யா, அத ஒத்துக்கறல?’

‘எனக்கு அந்த டவுட் இல்லை ஸார்.’

‘பின்ன?’

‘இது பிக்க்ஷனாங்கறதே…’