Author: பதாகை

ருஷ்ய இலக்கிய காலகட்டங்கள் – எம்ஸ்வாம் கட்டுரை – கோக்குலஸ் இண்டிகா மொழிபெயர்ப்பு

எம்ஸ்வாம் 

நமக்கு அறிய வ்ந்த அளவில் ருஷ்ய இலக்கியம் 18 ஆம் நூற்றாண்டில் தோற்றம் கொண்டது. அந்த நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்ஜாவின், கரமஜின், என்ற இரு மகத்தான மனிதர்களின் தாக்கம் ருஷ்ய மொழியின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கியது. ஜெர்ஜாவின் ருஷ்யாவின் முதல் தேசீய கவி. கரமஜின் அந்நாட்டின் முதல் வரலாற்றாசிரியர். ருஷ்ய வரலாறு பற்றி இவர் விரிவாக எழுதிய பன்னிரெண்டு தொகுதிகள் இன்றும் அறிவுப்புல பாண்டித்தியம் மிக்க சான்றாவணமாய் பயன்படுகிறது.

இதற்கு முன் எழுதப்பட்டவற்றில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட இரண்டு காவிய கவிதைகள் இன்றும் வாசிக்கப்படுகின்றன: ‘தி கிரானிக்கிள் ஆஃப் கியஃப்’, மற்றும் ‘தி ஸ்டோரி ஆஃப் தி ரெய்ட் ஆஃப் பிரின்ஸ் ஐகோர்’. இதில் இரண்டாவதாய் குறிப்பிடப்பட்டுள்ள கவிதை மிகவும் நேசிக்கப்படுகிறது, வலுவான கலாச்சார தாக்கம் செலுத்தியிருக்கிறது. பண்டைய உலக காவியங்கள் பலவற்றைப் போலவே இதற்கும் தொலைந்து போய் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட வினோத தொன்மக் கதை உண்டு. அதுவும் ஒரு முறையல்ல, இரு முறை1!

ருஷ்ய இலக்கியம் வேரூன்றி முழுமையாய் மலர ஏன் பதினெட்டாம் நூற்றாண்டு வரை தாமதமானது என்ற கேள்வி மிகத் தீவிரமாக கல்விப்புலத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ருஷ்ய நிலப்பரப்பு ஐரோப்பாவை ஒட்டியிருப்பது உண்மைதான் என்றாலும் பதினேழாம் நூற்றாண்டிலும் பதினெட்டாம் நூற்றாண்டிலும் ஐரோப்பாவின் அறிவுச் சூழலிலும் இலக்கிய உலகிலும் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றங்கள் ருஷ்யாவைத் தொடவில்லை. கத்தோலிக்க, பிராட்டஸ்டாண்ட் சர்ச்கள் என ரோமன் சர்ச் பிரிவதற்கு காரணமாக இருந்த ரிஃபார்மேஷன் இயக்கம், பின் மறுமலர்ச்சி காலகட்டம், இவற்றைத் தொடர்ந்து ஐரோப்பிய கலைகளிலும் இலக்கியங்களிலும் நிகழ்ந்த மாற்றங்கள் எதுவும் ருஷ்யாவில் எதிரொலிக்கவில்லை. பதினொன்றாம் நூற்றாண்டு கிறித்தவ சமயத்தில் ஏற்பட்ட பெரும் பிளவு ஐரோப்பாவுக்கும் ருஷ்யாவுக்கும் இடையே ஒரு சுவரென நின்றதே இதற்கு காரணம் என்று வரலாற்றாய்வாளர்கள் சொல்கின்றனர். பின்னொரு பத்து நூற்றாண்டுகளுக்குப் பின், இருபதாம் நூற்றாண்டின் இரும்புத் திரை இந்தப் பிளவை மீண்டும் அரங்கேற்றியது.

ஆனால் இதற்கிடையே ஒரு குறுகிய காலம், சில நூற்றாண்டுகள், ஐரோப்பாவுக்கும் ருஷ்யாவுக்கும் இடையே மாபெரும் கலாச்சார, அறிவுப்புல ஒருங்கிணைப்பு ஏற்பட்டது. அண்மைக்காலமாய், சோவியத் யூனியன் சிதறிய பின் அவ்வப்போது முறிந்தாலும் தொடரும் உறவு போன்ற ஒன்று அது. அக்காலகட்டத்தில் மாமன்னன் பீட்டர் தி கிரேட் ருஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே நடைமுறைப்படுத்திய பரஸ்பர பரிமாற்றங்கள் அவருக்குப் பின் வந்த பேரரசிகள் எலிசபெத், காத்தரீன் (காத்தரீன் தி கிரேட்) இவர்களால் செவ்வனே பின்பற்றப்பட்டன. சுதந்திரக் காற்று வீசிய இந்த காலகட்டத்தில், அதிகாரத்தை அடிமட்டம் வரை பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவையையும் அடிமை முறையை அழிக்கும் அவசியத்தையும் உணர்ந்த அரச பரம்பரை புத்தொளிக்காலச் சிந்தனைகள் பலவற்றையும் ருஷ்ய அரசவையில் ஊக்குவித்தது2.

சூழ்நிலை மாற்றங்களால் திடீரென்று துண்டிக்கப்பட்ட முற்போக்கு முயற்சிகள் பல வரலாறு நெடுக உண்டு. இம்முறை, பிரெஞ்சு புரட்சி வெடித்து, மிகவும் மாறுபட்டு இருந்திருக்கக்கூடிய ருஷ்ய வரலாற்றுப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. வழக்கம் போல், புரட்சிக்குப் பின், ஆழ நிறுவப்பட்ட எதேச்சாதிகார ஆட்சிக்கு திரும்பிய மன்னராட்சி நாட்டு நிலவரங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்தது.

காதரீனின் பேரன், ஜார் அலெக்சாண்டர் I, ஓரளவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்று நம்பினார். அவர் சீர்திருத்தங்களுக்கும் தயாராக இருந்தார். ஆனால், தொடர்ந்து நடந்த போர்கள், கொலை முயற்சிகள், சமூக மோதல்கள், அவர் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக் காரணமாயின. அவரது பேரன், அலெக்சாண்டர் III – “ஜார் லிபரேட்டர்” என்று அழைக்கப்படுபவர்- ஆளும் காலத்தில்தான் கொத்தடிமைகள் விடுதலை பெற்றனர், கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், ருஷ்ய இலக்கியம் அதன் உச்ச சாத்தியங்களை அடையும் வகையில் முழுமையாய் மலர்ந்தது. இலக்கிய வெளிப்பாட்டுக்கு தேவையான சுதந்திரத்தை ஜார் மூன்றாம் அலெக்சாண்டர் பாதுகாத்தார். அவரது ஆட்சியில் எந்த தடையும் இல்லாமல் இலக்கியம் செழித்தது.

ஜெர்ஜாவின், புஷ்கின் என்று கவிதையில் பிரகாசமாய்த் துவங்கிய ருஷ்ய இலக்கியம், 1840 முதல் 1890 வரை, ஐம்பது ஆண்டுகளில், இதற்கு இணையான வேறொன்று உலகில் எங்கும் இல்லை என்னும்படி அசாதாரண ஒளி பாய்ச்சும் பாதையை உருவாக்கிக் கொண்டது. தாஸ்தாவெஸ்கி, துர்ஜனெவ், தால்ஸ்தாய், செகாவ், லேர்மெண்ட்டாஃப், ஆஃபனாசி ஃபெட், ப்ளோக் மற்றும் பல மகத்தான எழுத்தாளர்களின் இலக்கிய ஆக்கங்கள் மடை திறந்த வெள்ளமெனப் பாய்ந்த அக்காலகட்ட ருஷ்ய இலக்கியத்துக்கு இணையான இன்னொன்று உலக இலக்கியத்தில் எங்கும் இருக்கவில்லை. ஆனால் ருஷ்ய கவிதையைப் பொருத்தவரை அமைதி நிலவியது. ஒளி வெள்ளத்தை விட்டு பின்வாங்கி அது உரைநடைக்கு ஒத்து வாசித்தது. நல்ல வேளையாக, இந்த இடைவேளை நீடிக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டில் அது பிரமாதமான வகையில் உயிர்பெற்று, ஆண்களும் பெண்களுமாய், கவிச் சின்னங்கள் என்று சொல்லத்தக்க கவிஞர்கள் புதிய வகையில் தம்மை வெளிப்படுத்தக் கற்றுக்கொண்டதும், சிறந்த ருஷ்ய கவிதைகள் பிரவாகமெனப் பெருகின. இன்று இந்த ஆக்கங்கள் அழிவற்ற செம்படைப்புகளின் நிலையை எட்டிவிட்டன, உலகில் பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வாசிக்கப்படுகின்றன.

கவிதையும் இலக்கியமும் சமூக, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப இரு நூற்றாண்டுகள் அசாதாரண வகையில் ஏககாலத்தில் எதிர்வினையாற்றின. அந்தந்த காலகட்டத்தில் மேலோங்கியிருந்த தத்துவ உணர்வு கவிதை வடிவில் வெளிப்பாடு கண்டதன் அடிப்படையில் இரு நூற்றாண்டு ருஷ்ய வரலாறு, வெவ்வேறு இலக்கிய காலகட்டங்களாய் பகுக்கப்படுகின்றன:

  1. பொற்காலம் (1800-1835): புஷ்கின், மற்றும் அவரது ப்ளெய்யாட்டின் காலம். புத்தொளிக்காலத்தின் தாக்கத்துக்கு உட்பட்ட காலம், நியோகிளாஸிக்கிஸம் மற்றும் ரோமாண்டிக்கிஸம், இவ்விரண்டின் சிந்தனைகளை இணைத்துக் கொண்ட காலம்3.
  2. ரோமாண்டிக்கிஸ காலம் (1835-1845): லேர்மெண்ட்டாஃப்- இவரது கவிதைகள் பைரனிய தன்மை கொண்டவையாய் கருதப்படுகின்றன, ருஷ்யாவின் மிகச் சிறந்த ரொமாண்டிக் கவிஞர். இக்காலகட்டதில் அவரது தாக்கம் வலிமையானதாக இருந்தது.
  3. இயல்புவாதக் காலம் (1840-1890): இக்காலத்தில் ருஷ்ய நாவல் வளர்ச்சி கண்டது. துர்ஜனெவ், தாஸ்தாவெஸ்கி, தால்ஸ்தாய், இவர்களின் காலம்.

கவிதையின் ஆற்றல் குறைந்த இக்காலகட்டத்துக்குரிய கவிஞர் ஆஃபனாசி ஃபெட். கலைக்கு நோக்கம் உண்டு என்ற பெருவாரி மக்களின் நம்பிக்கையை அவர் நிராகரித்தார். மாறாய், கலை கலைக்காக மட்டுமே என்ற உணர்வை வெளிப்படுத்தினார். இயல்புவாதத்தை ஏற்காத எழுத்தாளர்கள் தம் கவிதைகளைக் கொண்டு சமூக, அரசியல் போராட்டங்களை எதிர்கொள்ள மறுத்தனர். இவர்கள் அனைவருமே சக்திவாய்ந்த விமரிசகர்களால் கண்டிக்கப்பட்டனர்4. சமகால பிரச்சினைகளை கவிதை வடிவில் வெளிப்படுத்த முடியாது என்று இந்த விமரிசகர்கள் கவிதை வடிவை நிராகரித்தனர். இதன் விளைவாய், 1860 ஆம் ஆண்டு வாக்கில், சமூக நோக்கத்துடன் கவிதை எழுதும் ‘குடிமைக் கவிஞர்கள்’ என்ற அணி ஒன்று உருவானது. சமூக மனசாட்சியை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இங்கிலாந்துக்கு டென்னிஸன், பிரௌனிங்க் போன்ற மாபெரும் கவிஞர்கள் இருந்தனர், பிரான்சுக்கு, போதலேர், வெர்லேன். ஆனால் இந்தக் கலை நோக்கின் காரணமாய் ருஷ்யாவில் இது போல் ஒருவரும் வளரவில்லை.5.

  1. வெள்ளிக்காலமும் சிம்பலிசமும் (1890-1912)- அரசின்மைவாதிகளின் அடுத்தடுத்த அரசியல் படுகொலைகளும் பிற்போக்கு இயக்கங்களும் அரச வம்சத்தினரும் பொதுவெளியினரும் முற்போக்கு சீர்திருத்தங்களில் கொண்டிருந்த ஆர்வத்தைக் குறைத்தன. தொடர்ந்து நிலவிய கொந்தளிப்புகள் பொது மனதில் இதைவிட அமைதியாய் இருந்த ஒரு பொற்காலத்தைக் குறித்த நினைவேக்கங்களைக் கிளர்த்தின. ‘கலை கலைக்காகவே,’ கவிதை தன் இழந்த இடத்தை மீண்டும் பிடித்துக் கொண்டது. இக்கால கவிஞர்கள் ஃபெட் மற்றும் டூட்செஃப் கவிதை வடிவை உயிர்ப்பித்தனர், தம் கவியிலக்கணத்தில் மீபொருண்மை நோக்கங்களைப் பின்பற்றினர். இக்காலகட்டத்தின் பிற்பகுதி சிம்பலிசக் காலம் என்று சுட்டப்படுகிறது. இதன் முன்னணி குரல்கள் இவான் புனின் மற்றும் அலெக்சாண்டர் ப்ளோக்குக்கு உரியவை.

இவ்விரு குழுக்களும் குடிமைக் கவிதையை நிராகரித்தன, முன்னிருந்த மாதிரிப் படிவங்களிலிருந்து தம் படைப்பூக்கத்தைப் பெற்றுக் கொண்டன. பிரெஞ்சு கவிஞர்களான பூதலேரும் வெர்லேனும் வீரியமிக்க புறத் தாக்கங்களாய் இருப்பினும்கூட, இப்புதிய வரிசை கவிஞர்கள் தம் மண் அனுபவத்தை அதே அளவு சார்ந்திருந்தனர். இந்த நூற்றாண்டின் எஞ்சிய கால ருஷ்ய கவிதையின் வடிவத்தை அண்மை சார்ந்த, உள்முகம் நோக்கிய, தன்விசாரத் தேடல் தீர்மானித்தது. தம் கவிதை அழகியலிலும் தத்துவப் பார்வையிலும் சடங்குத்தன்மை ஒரு கூறாக இருந்ததால் ஃபன்-டி-ஸிக்ள் கவிஞர்களிலிருந்து சிம்பலிஸ்ட் கவிஞர்கள் மாறுபட்டனர். இவர்களது நம்பிக்கை ஃபெட்டால் ஏற்கப்பட்ட ஷெல்லிங்கிய நேச்சுரோஃபிலாசயிலிருந்து நேரடியான கடவுள் நம்பிக்கையாய் மாறியது6.

இருபதாம் நூற்றாண்டு ருஷ்ய கவிதை உலகால் நேசிக்கப்பட்டது, போற்றப்பட்டது- அதன் முன்னோடி சிம்பலிஸ இயக்கம். இருவர் அதன் அடையாளமாக இருந்தனர். ஒருவர் கவிஞர், மற்றவர் தத்துவவியலாளர்: ஆஃபனாசி ஃபெட், விளாதிமிர் சொலொவியஃப். இவ்விருவரின் பாதிப்பும் இணைந்து புதிய வகை கவிதை உருவாகக் காரணமாயிற்று. அதன் அழகியல் ஃபெட்டால் வடிவமைக்கப்பட்டது, மேற்பரப்பின் இறையியல் சொலொவியஃப்பின் தாக்கம் கொண்டது.

கவிதை வடிவம் பழைய காலத்துக்கு திரும்பினாலும், சிம்பலிசம் குடிமைப் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்தது. அக்காலகட்டத்தின் அறிவுலக கொந்தளிப்பில் இந்த இயக்கத்துக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. ஆனால் அதன் வடிவமும் அமைப்பும் உயர் ரசனைக்கு உரியவை, உயர்மட்ட மக்களுக்கு என்றே சொல்லிவிடக்கூடியவை. எனவே, ருஷ்ய புரட்சியின் நிழலில் கவிதை வடிவம் இருளடைந்தது. பல நூறாண்டு காலமாய் தொடர்ந்த மன்னராட்சி வியத்தகு விதத்தில் முறித்து வீசப்பட்டது. ஜார், நிக்கோலஸ் II- ரோமானவ்களில் இறுதியானவர்- அரசு துறக்க கட்டாயப்படுத்தப்பட்டார். அவரும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். அரச வம்சத்தில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. அரச பரம்பரை நிரந்தரமாய் முடிவுக்கு வந்தது. அடுத்தடுத்து தொடர்ந்த இந்தப் பேரழிவு நிகழ்வுகள் இன்னுமொரு பிற்போக்கு இலக்கிய எதிர்வினைக்கு தளம் அமைத்துத் தந்தன.

  1. நவீனத்துவ காலகட்டம் (1912-1925): இப்போது சிம்பலிஸம் நிராகரிக்கப்பட்டது. அந்த நிராகரிப்பு இரு குழுக்களின் கீழ் நடந்தது. இக்கால குழப்பத்துக்கு எதிர்வினையாய் ஒவ்வொருவரும் தனித்தனியாய் இதற்குத் தக்க அறிவுப்பூர்வமான எதிர்வினையாற்றினர். அக்மேயிஸ்ட்டுகள் என்று தம்மை அழைத்துக் கொண்ட மிதவாத குழு சிம்பலிஸ அழகியலை கடைபிடித்தது, ஆனால் இறையுணர்வுகளிலிருந்து விலகிக் கொண்டது. அதே நேரம், அவர்களுடன் இன்னும் புரட்சிகரமான குழுவும் தோன்றியது – ஃபியூச்சரிஸ்டுகள். இவர்களிருவரும் இணைந்து நவீனத்துவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்7.

ருஷ்ய கவிதை உலகின் உச்சத்தில் நான்கு மாபெரும் கவிஞர்கள் இருக்கிறார்கள்- மிக வசதியாக இரு பெண்கள், இரு ஆண்கள் என்று கணக்கிடப்படுகிறார்கள்; இரண்டு அக்மேயிஸ்ட்டுகள்- அன்னா அக்மடோவா, ஓஸிப் மாண்டல்ஸ்டாம்; இரண்டு ஃப்யூச்சரிஸ்ட்டுகள்- மரியா ஸ்வெத்யேவா, போரிஸ் பாஸ்டர்நாக். இவர்கள் போக, மாயகோவ்ஸ்கியும் க்யூமிலொவ்வும் இக்காலத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர்கள்; உண்மையில், புரட்சியின் கவிஞர் என்று மாயகோவ்ஸ்கி பரவலாக மதிக்கப்படுபவர்10.

இந்த கவிஞர்கள் குழுவின் இலக்கிய முயற்சிகள் வெவ்வேறு வகை கோட்பாடு, தத்துவ அணுகுமுறைகளின் போதம் பெற்றிருந்தன. சிம்பலிஸத்தின் மிஸ்டிகல் முகங்களை மட்டுமே அக்மேயிஸ்ட்டுகள் நிராகரித்தனர். ஃப்யூச்சரிஸ்ட்டுகள் அதைவிட புரட்சியாளர்களாக இருந்தனர். அவர்கள் மொத்தமாக அதன் தத்துவ அடித்தளங்களையும் மொழியையும் நிஜ உலகிலிருந்து ‘துண்டுபட்டது’ என அனைத்தையும் நிராகரித்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை, தம்மை வெளிப்படுத்தவும் சமூக அதிருப்திகளுக்கு குரல் கொடுக்கவும் கவிதை ஓர் ஊடகம். இதில் ஒரு சுவாரசியமான துணைக் குறிப்பு உண்டு. க்யூபிஸ்ட்டுகள் என்று அழைக்கப்பட்ட பல ஓவியர்களும் படைப்பூக்கம் குறித்து பொது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். இந்தக் குழுவினரும் இப்படிப்பட்ட நோக்கத்தால் ஃப்யூச்சரிஸ்ட்டுகளுடன் இணைந்து செயல்பட்டனர். இக்காரணத்தால் அவர்கள் க்யூபோ-ஃப்யூச்சரிஸ்ட்டுகள் என்றும் அழைக்கப்பட்டனர். சொற்களையும் சித்திரத்தையும் பயன்படுத்தி இவர்கள் யதார்த்தத்தை அனுபவமாய் வெளிப்படுத்த முயற்சி செய்தார்கள். அதற்காக, அவர்கள் மொழியையும் ஓவியத்தின் இலக்கண வடிவையும் திரிக்கவும் தயங்கவில்லை. தங்கள் கலையைக் கொண்டு கருத்தைத் தூண்ட, சிந்தனையை வளர்க்க இது உதவும் என்று நினைத்தார்கள் அவர்கள். ஓவியர்கள், சகால், கன்டின்ஸ்கி, காமன்ஸ்கி மற்றும் கவிஞர்கள் ஸ்வெத்யேவாவும் பாஸ்டர்நாக்கும் இக்குழுவின் முக்கிய உறுப்பினர்கள்.

நீண்ட காலம் இயங்கிய ‘யூனியன் ஆஃப் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ ஒரு ஜாரிஸ்ட் அமைப்பு என்று குற்றம் சுமத்தப்பட்டு புரட்சிக்குப் பின் ஓரங்கட்டப்பட்டது. அச்சங்கத்தின் உறுப்பினர்களாய் இருந்த கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களில் பெரும்பான்மையானவர்கள் புரட்சியையும் அதன் அத்துமீறல்களையும் கடுமையாய் எதிர்த்தார்கள். போல்ஷவிக்குகளை ஆதரித்த அவான்-காரட் குழு உறுப்பினர்களில் க்யூபோ-ஃப்யூச்சரிஸ்ட்டுக்களும் அடக்கம். அவர்கள் அரசில் பங்கேற்றார்கள். நுண்கலைத் துறை அவர்களுக்கு அளிக்கப்பட்டது. புதிதாய் நியமிக்கப்பட்ட கலை கமிஸார்கள் என்ற அளவில் அவர்களிடம், “நாடு முழுதும் கலைப் பள்ளிகள் துவக்குதல், அவற்றை ஒருங்கிணைத்தல், தேசத்தின் கலைவாழ்வு அனைத்தையும் நிர்வகித்தல்” என்ற பெரிய பொறுப்பு சேர்ந்தது8. குறிப்பிடத்தக்கதல்ல என்று சொல்ல முடியாத அளவு கோட்பாட்டு வேறுபாடுகள் இருந்தாலும்கூட, க்யூபோ-ப்யூச்சரிஸ்ட்டுகளும் அக்மேயிஸ்ட்டுகளும் நவீன ருஷ்ய செய்யுளின் வளர்ச்சியுற்ற ஒலிக்கு ஆஃபனாசி ஃபெட் ஒரு முன்னுதாரண தாக்கம் செலுத்தியிருக்கிறார் என்று ஒப்புக் கொண்டனர். குடிமைக் கவிதைக்கு எதிராகவும், கவிதை கலை நோக்கில் மட்டுமே எழுதப்பட வேண்டும் என்றும், உறுதியான நிலைப்பாடு கொண்டிருந்த ஃபெட்டின் கருத்துக்கள் – அந்த நிலை அவரைத் தனிமைப்படுத்தியது, துயரத்தில் ஆழ்த்தியது-, அவரது மரணத்துக்குப் பின் அவர்களின் போற்றுதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

  1. சோவியத் காலம் (1925-1955): நூறாண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் ஒரு வகை காக்டஸ் மலர் பார்ப்பதற்கு பிரமாதமாக இருக்கும், ஆனால் குறுகிய காலத்தில் வாடிவிடும். அது போன்றதே ருஷ்ய நாவல். புதிய ஆட்சியின் அடக்குமுறையில் அது தேயத் துவங்கியது. ருஷ்யாவில் உள்நாட்டு யுத்தம் முடிந்து 1920களில் போல்ஷவிக்குகள் அதிகாரத்தை ஆக்கிரமித்ததும் கலைஞர்களும் எழுத்தாளர்களும் ஐரோப்பாவுக்கு புலம் பெயர்ந்தனர். அவர்களில் சில தன்னிச்சையாய் வெளியேறினர். வேறு சிலர் நாடு கடத்தப்பட்டனர். எதிர்பார்த்திருக்கக்கூடிய வகையிலேயே இது ருஷ்ய இலக்கியத்தை பாதித்தது. ருஷ்யாவின் ஆட்சி எல்லைகளுக்குள்ளும் அதற்கு வெளியேயும் முரண்பட்ட விளைவுகள் ஏற்பட்டன.

நாவலின் இடத்தை கவிதை, சிறுகதை, குறுநாவல்கள் மற்றும் நாடகங்கள் கைப்பற்றின. உரைநடை எழுத்தாளர்கள் பலரும் மொழிபெயர்ப்பாளர்கள் ஆயினர். 1932ஆம் ஆண்டு, சோஷலிஸ்ட் ரியலிஸ பாணியில் மட்டுமே கவிதை எழுதப்பட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் அரசு ஆணை பிறப்பித்தது. இப்போது இரண்டாம், அதன் பின், மூன்றாம் அலை புலம்பெயர்வு நடந்தது. உலக யுத்தத்தையொட்டிய காலத்தில் ருஷ்ய கவிஞர்களும் இலக்கியவாதிகளும் ‘சோவியத்’ மற்றும் ‘புலம் பெயர்ந்த’ அணியினராய் பிரிந்தனர். புலம் பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் பாரிசிலும் பெர்லினிலும் வசித்தனர். ஒவ்வொரு முறை புலம் பெயர்தல் நிகழும்போதும் இவர்களது எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்தது. பாரிசிலும் ப்ராஹாவிலும் விமரிசனப் பத்திரிக்கைகள் நிறுவப்பட்டன9.

இரு குழுவினரும் அரசு ஆதரவு நிலைப்பாட்டால் மாறுபட்டனர். அரசை எதிர்த்தவர்கள் என்று புலம் பெயர்ந்தவர்கள் பெருமை கொண்டனர். சோவியத்துக்கள் தம்மை தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொண்டனர், உள்ளிருந்தே எதேச்சாதிகாரத்தை எதிர்க்கும் பெருமை இவர்களுக்கு இருந்தது. அக்கால புலம் பெயர்ந்த முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராய் இருந்த அல்டனோவ் கூறியது இதை மிகச் சிறப்பாய் விவரிக்கிறது: “புலம் பெயர்தல் மிகப்பெரிய பாபம், ஆனால் அடிமைப்படுதல் அதை விடப் பெரியது.”

புலம் பெயர் எழுத்தாளர்களில் புகழ் பெற்றவர்கள் இவான் புனின் (1933ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்), நபகோவ், அல்டனோவ், பெண் கவிஞர் மரீனா ஸ்வெத்யேவா. சோவியத்துகளின் முன்னணியில், புரட்சியின் கவிஞர் மாயகோவ்ஸ்கியும்3. செர்ஜய் யெசனினும் இருந்தார்கள். இருவருமே இதயத்தின் ஆழத்தில் தனி மனித உரிமைகளை நேசித்தவர்கள், ஆனால் புரட்சியில் அதன் துவக்க நாட்களில் நம்பிக்கை கொண்டிருந்தனர். யெசனின் கொண்டிருந்த மயக்கம் வெகு சீக்கிரம் கலைந்தது, அவர் எதிர்க்கத் துவங்கினார். புரட்சியின் நம்பிக்கைகளுடன் தன் நம்பிக்கைகளை சமநிலைப்படுத்த அவர் மேற்கொண்ட போராட்டம் ஒரு பயங்கர முடிவுக்கு அவரைக் கொண்டு சென்றது- முப்பது வயதில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இது போல் விதிக்கு பலியாகக் கூடாது என்று விமரிசித்த மாயகோவ்ஸ்கியும் வெறும் ஐந்தே ஆண்டுகளில் அவரைப் போல் தற்கொலை செய்து கொண்டார்.

வறிய துவக்கங்கள் இருந்தாலும் புலம்பெயர் இலக்கியத்துக்கு அதன் கலை மற்றும் அறிவுச் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் தீவிரமும் இருந்தது. மாறாய், சோவியத் இலக்கியம், சோஷலிஸ்ட் ரியலிஸத்தின் ஆணைக்குப் பணிய போராட வேண்டியிருந்தது. இறுதியில் அது பணிந்து போனதாகவே கருதப்பட்டது. ஆனால் கூட அதன் அடிமைத் தளைகள் பல முகங்கள் கொண்டிருந்தாலும், அவர்களிலும் கணிசமான எண்ணிக்கையில் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் இருந்தார்கள். வெரா பனோவா, ‘ஸ்விடானீ- தி மீட்டிங்’, எழுதியவர், அவர்களில் ஒருவர். அதே போல் அவர்கள் அனைவரிலும் மிகப் பிரபலமானவர், மிஹைல் ஷோலொகொவ், 1965ஆம் ஆண்டு நோபல் பரிசு வென்றவர், ‘அண்ட் கொயட் ஃப்ளோஸ் தி டான்,’ எழுதியவர்,அவர்களில் ஒருவர்.

  1. ஸ்டாலினுக்குப் பிந்தைய காலம், அல்லது குருஷ்சேவ் தளர்வு (1955- ): ஸ்டாலினுக்குப் பின், குருஷ்சேவ் காலத்தில் ஸ்டாலினியத்திலிருந்து மீண்ட புது அரசியலால் இலக்கிய வெளிப்பாடு மீதிருந்த கட்டுப்பாடுகள் ஒப்பீட்டளவில் தளர்த்தப்பட்டன. இளகும் பனியை நினைவூட்டும் ‘thaw’ என்ற பதத்தின் உருவமாய் (அக்மடோவா அளித்தது) புதிய, இளம் கவிஞர்கள், ஃப்யூச்சரிஸ்ட்டுகள், மற்றும் அக்மேயிஸ்ட்டுகள் இருந்தனர். இவர்களில் மிக முக்கியமானவர்கள், யெவ் ஜெனி யெவ்டுஷேன்கோ, வோஜ்னெசென்ஸ்கி, அக்மடூலினா, ஜோசப் ப்ராட்ஸ்கி (1987ஆம் ஆண்டு நோபல் பரிசு வென்றவர்). இக்காலகட்டம் பொதுமக்களிடம் கவிதையைக் கொண்டு சேர்த்தது. கவிதையில் இசைத்தன்மை கூடியது, பொது வாசிப்பு நிகழ்ச்சிகள் நடத்தினார்கள், சொந்தமாய் புத்தகம் வெளியிட்டார்கள், வாசிப்பின் ஒலி நாடாக்களுடன் படைப்புகளையும் (சமீஸ்டாட்) பகிர்ந்து கொண்டார்கள். வழக்கத்தில் இல்லாத, ஆனால் வெற்றிகரமான இந்த முயற்சிகள் இவர்களுக்கு ‘எஸ்ட்ராடா கவிஞர்கள்’ என்ற அடைமொழி பெற்றுத் தந்தன- மேடைக் கவிஞர்கள்.

இக்குழுவின் கவிஞர்கள் அதிகாரப்பூர்வ கவிஞர்கள் என்றும் அதிகாரபூர்வமற்ற கவிஞர்கள் என்றும் பிரித்து பேசப்படுகின்றனர். முன்னவர்களுக்கு அதிகாரத்தில் இருந்தவர்கள், அரசு கலாச்சாரத்துடன் தொடர்பு இருந்தது. பின்னவர்கள், அவர்களைவிட சுதந்திர குணம் கொண்டவர்கள், ருஷ்ய, புலம் பெயர் கவிஞர்கள் இவர்களில் அடக்கம். இக்காலகட்டத்தின் புகழ் பெற்ற பெயர்களை விடுத்தால் பிற கவிஞர்கள் குறித்து மிகக் குறைவாகவே அறியப்பட்டிருக்கிறது (சில சமயம், ருஷ்ய கவிதையின் வெண்கல காலம் என்று அழைக்கப்படும் காலகட்டம் இது). கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்த களங்கம், இரு குழுவினருக்கும் இடையே தெளிவான வேறுபாடு இல்லாதது, இது இரண்டும் இருட்டடிப்புக்கு காரணமாய் சொல்லப்படுகின்றன. அவர்களில் ஒருவர், ஜோசப் ப்ராட்ஸ்கி நோபல் பரிசு உரையில் அவர்கள் அளித்த பங்களிப்பை நினைவுகூர்ந்து வரலாற்றில் மறக்க முடியாத நிலையை உருவாக்கித் தந்தார். அதன் பின், பேரெஸ்த்ரொய்காவுக்குப் பின், இந்த காலகட்டம் மீது கல்விப்புலம் கொண்டுள்ள ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இலக்கிய காலங்கள் என்று நாம் இவ்வளவு கச்சிதமாக பிரித்துப் பேசுவது நடந்து முடிந்த பின் மேற்கொள்ளும் பார்வை, ஐரோப்பாவின் கிழக்கு மற்றும் மேற்கு பாதிகளில் உள்ள இலக்கியச் சிந்தனையில் ஏற்பட்ட திடீர் திருப்பங்களைப் புரிந்து கொள்ளும் முயற்சி. இது போல் கறாரான எந்த வரையறைக்கும் இந்தக் கவிஞர்களோ இயக்கங்களோ உட்படவில்லை. உண்மையில், இலக்கிய இயக்கங்கள் வளர்ந்தன, தேய்ந்தன, ஒருவரிடம் ஒருவர் கொண்டும் பெற்றும் கொண்டனர். கவிஞர்களும் அவ்வாறே. இருந்தாலும் இது போல் பரந்த பார்வையில் குழுக்களாக பிரித்து அறிந்து கொள்ளும்போது வரலாற்றின் கொந்தளிக்கும் பாதையில் கடந்து மறையும் இலக்கிய முயற்சிகளின் அசாதாரண எதிர்வினையை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. கலைக்கும் அதன் நோக்கத்துக்கும், யதார்த்தத்துக்கும் இலட்சியவாதத்துக்கும், புறவயப்பட்ட பார்வைக்கும் படைப்பூக்கத்துக்கும் உள்ள முரண்பட்ட உறவை சமநிலைப்படுத்த உதவுகிறது.

II

நான் கவிதையை நேசிக்கிறேன். என் அப்பாவிடமிருந்து இதை பெற்றுக் கொண்டேன். நாங்கள் குழந்தைகளாய் இருந்தபோது, அவர் தனக்குப் பிடித்த கவிதைகளை உரக்க வாசிப்பார். ஓங்கி ஒலிக்கும் அவரது குரலும் சொற்களையும் பதங்களையும் அவர் நிதானமாக விளக்குவதும் எங்களை வசியப்படுத்தி வைத்திருக்கும். எங்களுக்கு வயது கூடியபோதும் இந்தப் பழக்கம் தொடர்ந்தது. பின்னர், நாங்களும் அவருடன் சேர்ந்து கொண்டோம். ஆனால் செறிவான மென்குரலில் ஏற்ற இறக்கத்துடன் உணர்ச்சிகரமாக அவர் வாசித்தது மிகவும் வசீகரமாக இருப்பதால் மெல்ல மெல்ல எங்கள் குரல்கள் அடங்கி அவர் வாசிப்பதை அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருப்போம். எங்கள் கவனம் அவர் சொல்வதில் இருக்கும், எங்கள் மனம் கவிதையில் லயித்திருக்கும். அவர் இது போல் கவிதை ஒப்பித்ததில் என் முதல் நினைவுகள் அவர் தன் தந்தையிடம் கற்ற கவிதைகளுக்கு கொண்டு செல்கின்றன- கூலரிட்ஜின் ‘ஏன்ஷியண்ட் மரைனர்’, அர்னால்டின் ‘தி ஃபோர்சேக்கன் மெர்மென்’. நாங்களே சுயமாய் வாசிக்கவும் இவற்றை உள்வாங்கிக் கொள்ளவும் மனனம் செய்யவும் பல ஆண்டுகள் ஆகும் என்பது ஒரு பெரிய விஷயமாய் இருக்கவில்லை. தன் தந்தையிடம் அவர் கற்ற முதல் கவிதைகள் இவை, எனவே ஒரு இனிய மரபின் முதல் கண்ணிகளாக இவற்றை அவர் எங்களுக்கு கைமாற்றித் தந்தார். சொற்களையும் மொழியையும் அவர் நேசித்தார். இந்தக் கவிதைகளை வாசித்து அவர் தன் நேசத்தை எங்கள் இதயத்தில் விதைத்தார். பின், அது வளரவும் கவனமாக உதவினார். முதலில் ஆசிரியராக, பின் நண்பராகவும் சகாவாகவும். இலக்கியமும் கவிதையும் ஒரு சரணாலயம் ஆகின. அவரது விரிந்த இதயத்துடனும் பரந்த, சுதந்திரமான மனதுடனும் நாங்கள் எப்போதும் இணைந்திருக்க அடைக்கலம் புகும் எல்லையற்ற வெளியாக கவிதைகள் ஆகின.

அவர் முன்னோக்கிக் கண்டு கவனமாக வளர்த்த இந்த நேசம் கடந்த பத்தாண்டுகளில் தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்த துயர்மிகு அனுபவங்களூடே நான் தொலைந்து போகாமல் என்னைக் காப்பாற்றிய மிதவையாக இருந்தது. கடந்த ஆண்டு, அதிலும் குறிப்பாக மிகவும் மோசமான கணமொன்றில், பழைய ருஷ்ய கவிதை தொகுப்பு ஒன்று கண்ணில் பட்டது11. மீண்டும் நான் ருஷ்யா மீதும் அதன் கவிதைகள் மீதும் காதல் வயப்பட்டேன். புத்தகத்தில் ஒவ்வொரு கவிஞர் பற்றியும் ஒரு சிறிய வாழ்க்கைக் குறிப்பும் அவர்கள் வாழ்க்கைச் சம்பவங்களின் துணுக்குகளும் இருந்தன. காதல், அரசியல் சதிகள்.

சிறிய இந்தக் கதைகளின் மறைவில் மகத்தான பிற கதைகள் ஒளிந்திருக்கின்றன என்ற உணர்வு, ருஷ்ய கவிதை மற்றும் இலக்கிய வளர்ச்சியை இன்னும் ஆழ அறியச் சொல்லி அழைப்பு விடுத்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளின் ருஷ்யாவில் இருப்பது போல் அரசியல் மாற்றத்தையும் அதற்கேற்ற வகையில் இலக்கிய எதிர்வினையையும் கச்சிதமாய் சித்தரிக்கும் கூட்டு நாகரீகக் கதைகளைக் காண்பது அரிது. எனவே இந்த இலக்கிய எதிர்வினைக்கு என்ன காரணம், அது எங்கிருந்து தன் சக்தியைப் பெற்றுக் கொள்கிறது, எனபதை அறிந்து கொள்ள காரணங்கள் இருக்கின்றன.

ஆதிகால தொடர்பு முறையாய் இருந்த கவிதை, பல அவதாரங்கள் எடுத்து, எளிய வடிவிலிருந்து சிக்கலான வடிவுக்கு வளர்ந்திருக்கிறது – உடனிசைதல், ஸ்வரம், சந்தம், தாளம்; சொல், சொற்றொடர், வாக்கியம் என்று எல்லா தளத்திலும் இசையிலும் மொழியிலும் சிக்கலானதாக மாறியிருக்கிறது. அங்கிருந்து உள்ளடுக்குகளில் பல்பொருள் கொள்ளும் தன்மை. ஒரு சொல்லின் உயர் தளங்களில் பொருள் உணர்வதால் எழும் புரிதல்- அதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொள்ளுதல், கட்டுடைத்தல், திரித்துரைத்தல், மீமெய்-விரித்தல்.

இலக்கிய கலைகளில் கவிதை மட்டுமே, எதுகை மோனையையும் சந்தத்தையும் சொல் வரிசை கொண்டு ஒரு பின்னலாடையாய் நெய்து இசையின் அழகை மொழியுடன் பிணைக்கிறது இது கவிதைக்கு ரசவாத ஆற்றல் அளிக்கிறது – சாதாரண, அன்றாட சொற்களை உருமாற்றுகிறது, ஒரு மாயம் நிகழ்த்தி, புதிய, ஆழமான பிரக்ஞையை உருவாக்குகிறது. இவ்வகையில் வடிவமைக்கப்பட்ட சொற்றொடர் ஒன்று தன்னுள் மானுட அனுபவம் முழுமையையும் பொதித்து வைத்திருக்க முடியும். கவிதையாய் வாசித்தாலும் சரி பாடலாய் பாடினாலும் சரி, இசையும் மொழியும் இரண்டறக் கூடும்போது அது மனித இதயத்துக்கு நெருக்கமாகிறது. கலை வடிவாய் கவிதை நிலைத்திருக்க அதுவும் ஒரு காரணம்- கவிதையோ, பாடலோ, மனனம் செய்து வாய் வழி பகிர்ந்து கொள்வது எளிதாக இருக்கிறது.

தனிப்பட்ட அனுபவமாக இருந்தாலும் சரி, சமூகம் மற்றும் தேசீய வரலாற்றில் நிகழும் சமூக-அரசியல் மாற்றங்களின் மறைமுக தாக்கத்தின் வழியே வந்தாலும் சரி, கொந்தளிப்பான வாழ்க்கை-மாற்றங்கள் ஒவ்வொன்றும் கடந்து மானுட ஆன்மா மீண்டு எழுவதை உணர்த்த கவிதையே சிறந்த ஊடகமாய் இருப்பதில் வியப்பில்லை. இவ்வகையிலேயே, சர்வாதிகார அத்துமீறல்களின் எதிர்வினையாய், பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டு ருஷ்யாவின் எழுத்து மற்றும் வாய்மொழி வெளிப்பாட்டின் துருவ நட்சத்திரமாய் கவிதை விளங்குகிறது.

ருஷ்யாவிலும் ஐரோப்பியாவிலும் இந்த இலக்கிய இயக்கங்கள் இணைத்தன்மை வாய்ந்த அனுபவங்களாய் இருந்தபோதும், அவற்றின் எடுத்துரைப்பு கலாச்சார, பௌதீகச் சூழலின் தனித்தன்மை கொண்டு அமைகிறது. இருபதாம் நூற்றாண்டு ருஷ்ய கவிதையின் அசாதாரணத் தன்மை என்பது உலகையே கைப்பற்றிய புதுக்கவிதை இயக்கம் ருஷ்யாவைத் தொட முடியவில்லை என்பதுதான். இதற்கான காரணங்களும் அரசியல் சார்ந்தவை. புரட்சிக்குப் பின் ருஷ்ய கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஒடுக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்ட அளவு வேறெங்கும் நிகழவில்லை. அரசு அதிகாரத்துக்கு உடன்படாத வகையில் தொனிக்கும் ஒரு சொல் கூட அதன் எழுத்தாளருக்கு குலாக் செல்ல அழைப்பு விடுப்பதாக அமையக்கூடும். பல கவிஞர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள், அல்லது குலாக்கின் இருளில் சென்று மறைந்தார்கள். இந்த கதியைத் தவிர்க்கவும், தம் கலை சுதந்திரத்தை காப்பாற்றிக் கொள்ளவும் கவிதைகளை எழுதாமல் வாய்மொழியில் பேசுவதும் மனனம் செய்வதும் பாதுகாப்பு அளித்தது. மனனம் செய்ய வசதியாக வழக்கமான எதுகை மோனையுடன் எழுதினார்கள், அதற்கு புதுக்கவிதை சரியாக இருக்காது. சிறு குறிப்புகளை எழுதி கைமாற்றிக் கொண்டு அதில் உள்ள சொற்களை மனனம் செய்து காகிதத்தை சாம்பலாக்கும் சடங்குக்கு எழுத்தாளர் சுகோவ்ஸ்க்யா ‘கைகள், வத்திக் குச்சிகள், சாம்பல் ஓடுகள்,’ என்று பெயரிட்டார். வரலாற்றின் இந்த பயங்கர காலகட்டம் இன்று அவ்வாறே அறியப்படுகிறது.

யதார்த்த உண்மைக்கும் கைக்கெட்டும் தொலைவில் உள்ள, ஆனால் எட்டாத தூரத்தில் உள்ளது போல் தோன்றும் விழைவுகளுக்கும் உள்ள மிகப் பெரிய இடைவெளியை கவிதைகள் பிரதிபலிக்கின்றன. மானுட அனுபவத்தின் தனித்தன்மைகளை பொதுப் பதங்களில் வெளிப்படுத்தி, கலாச்சாரம், இடம், மற்றும் மொழியின் தடைகளைக் கடக்க ருஷ்ய கவிதை வழி செய்து கொடுத்தது. மொழியாக்கத்திலும்கூட ருஷ்ய கவிதைகள் உலக கவிதைகளின் உச்சத்தை மிக இயல்பாக நம் காலத்திலேயே தொட்டிருப்பது அவற்றின் மேதைமைக்குச் சான்று.

சான்றாவண நூல்கள் மற்றும் அடிக்குறிப்புகள்:

    1. 1காவியங்கள் கலாச்சாரத்தில் தம்மை நிறுவிக் கொள்ள மீட்சிக் கதைகள் உதவுகின்றன. தொலைந்து போன ‘தி ரெய்ட் ஆஃப் பிரின்ஸ் ஐகர்’ முதல் முறை கவுண்ட் ம்யூஸின்-புஷ்கினால் பதினேழாம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டது. புகழ் பெற்ற எழுத்தாளர் புஷ்கின் பெயர் கொண்ட இவர், பேர் பெற்ற நூலகர், வேர்ச்சொல் ஆய்வாளர், தாவரவியலாளர். நலிவடைந்து கொண்டிருந்த அரசக்குடியினர் இல்லம் ஒன்றில் இவர் கையெழுத்துப் பிரதியைக் கண்டெடுத்தார். அதை அவர்களிடமிருந்து வாங்கி, மறுபதிப்பு வெளிவரச் செய்தார். துரதிருஷ்டவசமாக, 1812 ஆம் ஆண்டின் மாஸ்கோ பெருநெருப்பில் அந்த நூலகமும் அதிலிருந்த அத்தனை புத்தகங்களோடு இந்த கைப்பிரதியும் எரிந்து சாம்பலானது. நல்ல வேளையாக, 1864ஆம் ஆண்டு முதலாம் காதரீன் வைத்திருந்த புத்தகங்களில் மற்றொரு பிரதி கிடைத்தது. அதன் அச்சுப் பிரதிகள்தான் இன்று நம் கையில் உள்ளன.
    2. 2வோல்டேர், டீடெரோ இருவரும் காதரீன் தி கிரேட் உடன் மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்தனர். பிரஞ்சு புரட்சியின் நீண்ட நிழலில் இவர்களின் கடிதப் போக்குவரத்துக்கள் வீண் போயின. கொத்தடிமை முறை சீர்திருத்தப்பட வேண்டும் என்ற கருத்தில் தனக்கு உடன்பாடு இருந்தாலும் ருஷ்ய சமூகத்தின் நிதர்சன உண்மைகள் அவை நிதானமாகவும் கட்டுப்படுத்தப்பட்ட வகையிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்துகின்றன என்று காதரீன் இரு தத்துவவாதிகளுக்கும் எழுதிய கடிதங்களில் வலியுறுத்தினார். டீடெரோ ருஷ்யா சென்றதும், அங்கு அவர் காதரீனுடனும் அவரது அரசவையினருடனும் உரையாடியது, ஹார்வர்ட் பல்கலை அச்சகம் பதிப்பித்த ராபர்ட் ஜாரெட்ஸ்கியின் ‘காதரீனும் டீடெரோவும்’ என்ற புத்தகத்தில் விவரிக்கப்படுகின்றது.
    3. 3கலைகளிலும் தத்துவத்திலும் பண்டைய காலச் செவ்வியலக்கியங்களை முன்னோடியாகவும் ஆதர்சமாகவும் கொண்ட இயக்கத்தின் பெயர் நியோ கிளாஸிக்கிஸம். ரோமாண்டிக்கிஸம் இதைத் தொடர்ந்தது. அதுவும் கடந்த கால நோக்கு கொண்டது, ஆனால் அது சற்றே அண்மைய காலம். ரொமாண்டிக்குகள் மத்திய காலங்களை முன்னோடியாயக் கொண்டனர். அண்டம், இயற்கை, மானுட உணர்ச்சிகள் புரிந்து கொள்ள முடியாதவை என்ற கருத்துக்களே அவற்றின் முக்கிய பார்வையாய் இருந்தன. இவையனைத்திலும் அவர்கள் பூரண அசல்த்தன்மையை எதிர்பார்த்தார்கள், அவை பின்பற்றத்தக்க மதிப்பு கொண்டவை என்று நினைத்தார்கள்.
    4. 81840களில் ருஷ்ய இலக்கிய விவகாரங்களில் விமரிசகர் விஸாரியோன் பெலின்ஸ்கி அசாதாரண தாக்கம் கொண்ட ஆளுமையாக இருந்தார். 2016ஆம் ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழக பிரஸ் மறுபதிப்பான ‘தி எக்ஸ்ட்ரா-ஆர்டினரி டிகேட்’ என்ற பாவேல் அனன்கொவ் சுயசரிதையில் ருஷ்ய இலக்கியத்தின் மீது அவரது பாதிப்பும் தாக்கமும் விரிவாக விவரிக்கப்படுகின்றன.
    5. 5‘எ ஹிஸ்டரி ஆஃப் ருஷ்யன் பொயட்ரி’, எவலின் ப்ரிஸ்டல், ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி பிரஸ், 1991.
    6. 6ஷெல்லிங்— காண்ட் காலத்துக்குப் பின் ஜெர்மன் லட்சியவாதத்தை வரையறை செய்த மூன்று தத்துவவாதிகளில் ஒருவர். மற்ற இருவர்- ஹெகலும் ஃபிஷ்ட்டும்.
    7. 7‘தி சில்வர் ஏஜ்,’ சிபலான் ஃபாரஸ்டர் மற்றும் மார்த்தா கெல்லி, அகாடெமிக் ஸ்டடிஸ் பிரஸ், 2015
    8. 8‘ருஷ்யன் க் யூ போ –ஃப்யூச்சரிசம் 1910–1930, எ ஸ்டடி இன் அவான்-கார்டிசம்’, வஹான் டி. பாரூஷியான், டி க்ரூய்ட்டர் மூட்டோன், 1975
    9. 9‘கான்டெம்பரரி ஆனல்ஸ்’ பாரிசில் பதிப்பிக்கப்பட்டது, ‘தி வில் ஆஃப் ருஷ்யா’ பிராஹாவில் பதிப்பிக்கப்பட்டது.
    10. 10“போதும் அற்ப உண்மைகள்,/ கடந்த காலத்தை இதயங்களிலிருந்து அகற்றுங்கள்/ சாலைகள் நம் ஓவியத் தூரிகைகள் / சதுக்கங்கள் நம் வண்ணச் சாந்துகள்”~ விளாதிமிர் மாயக்கோவ்ஸ்கி. மேற்சுட்டிய 8. பக்கம்.119. பின்னொரு காலத்தில், புரட்சியைப் பாட தன் பாடலை தானே தொண்டையில் மிதித்துக் கொல்ல வேண்டியிருந்தது, என்றார் அவர்.
    11. 11‘தி பெங்குவின் புக் ஆஃப் ருஷ்யன் பொயட்ரி,’ தொகுப்பாசிரியர், ராபர்ட் சாண்ட்லர், போரிஸ் ட்ரால்யூக் மற்றும் பிறர், பெங்குவின் 2015

ஆங்கில மூலத்தை வாசிக்க

 

மணச்சேறு, ஆண் மாடல் – இரா.மதிபாலா கவிதைகள்

​​மணச்சேறு
மிடறு மிடறாய்
திரித்து பின்னிய
மதுக் கயிற்றில்
தேடல் வாளியை இறுக்கி
நினைவுக் கேணியில்
இறக்கி, ஏற்றி
ஏற்றி, இறக்கி
ஒர் புணர்ச்சிப் பொழுதின்
முன் விளையாடல்கள் போல்….
தொலைத்த காலங்களை
அள்ளி அள்ளி
எடுக்கிறேன்.
நீ
பணத்தை தரப் போகும் எஜமானி
முக பாவத்தோடு நிற்கிறாய்
அள்ளி குவித்த
சேற்றில் மணக்கிறது
நாம்
சேர்ந்திருந்த
பொழுதுகளின் வாசம்.
​​
ஆண் மாடல்
பனைவாழை செந்தூண்கள்
மேல் அகண்ட குன்றுகள்
அமர்த்தி அதிர நடக்கையில்
அவையெங்கும்
மெளன மகுடி ஒசை
இடுக்குகளை பொத்தி
எழாது அடக்குகின்றன
நாற்காலி மறைவுகளில் கரங்கள்.
இருப்பினும்
சிலிர்த்து பாயும்
பார்வை நாக்குகளால்
ருசிக்கேம் தேகத்தின்னிகள்
இசையதிர நடக்கிறேன்
உள்ளாடை மீது குவிகிறது ஒளி
உண்ண வசதியாய் எடுப்பாய்
நிமிர்ந்தப்பட்டு இருக்கிறது
தீனி
எழுச்சிக்கு உதவுகிறது
மின்புள்ளி திரைகளோடு
மூளை செல்களால்
புணர்ந்த நினைவு.
 அளவிலும்  கலையிலும்
மெருகேற்றிய  ஆடைகளை
வாங்க வெறியேற்றும்
பிழைப்பு எனக்கு.
இப்போதெல்லாம்
“வெளிச்சம் சூழ்”
ஒளி வெள்ளத்தில்தான்
எழுச்சியுறுவேன்
என்கிறது  உறுப்பு.
வெட்கம் கொள்ளும்
இளம் மனைவிக்கு
எப்படி புரிய வைப்பேன்
இதை.

சுவர்களின்உலகம் – சங்கர் சிறுகதை

இரவு உணவை முடித்துவிட்டு மொட்டை மாடிக்கு வந்தேன். மணி எட்டரைதான் ஆகியிருந்தது. ஆனால் ஊரே அடங்கிக் கிடந்தது. கேட்ட ஒரே சத்தம் பக்கத்து வீட்டு தென்னமரக் கிளைகளில் காகங்கள் உட்கார்ந்து கரைந்த சத்தம் மட்டுமே. குடித்துவிட்டுச் சாலையோரம் விழுந்துக் கிடக்கும் குடிமகன்களைப் போல் சுய நினைவற்றுக் கிடந்தது வானம். சுற்றிலும் யார் வீட்டு மாடியிலும் யாரும் இல்லை என்பதைக் கவனித்தேன். இந்த ஊர் இதற்கு முன் இப்படி இல்லை. எப்போதும் எல்லார் வீட்டிலும் அடுத்தவீட்டுக் கதைதான் ஓடிக்கொண்டிருக்கும். தங்கள் வீட்டில் சாப்பிட்ட தட்டை எங்கு வைத்தோம் என்று தெரியாதவர்கள்கூட பக்கத்துவீட்டுப் பிரச்சனைகளைப் பற்றி முழுதாய் தெரிந்து வைத்திருப்பார்கள். சில நேரங்களில் அது தொந்திரவாக இருந்தாலும் பல நேரங்களில் பெரிதும் உதவியிருக்கிறது. ‘அது’ வந்த பின் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்து இப்போது முழுவதுமாக மாறிவிட்டிருக்கிறது.

பல நினைவுகள் வந்து அலைக்கழித்தன. பின் எப்போதோ தூக்கிப்போனேன்.

மறுநாள் காலை சீக்கிரமே குளித்து முடித்துவிட்டுக் கிளம்பினேன். ‘அங்கு’தான்.

“என்னம்மா சொல்ற… வெளிய வந்து சொல்லு… சமையக்கட்டுல இருந்து கத்தாதன்னு எத்தனவாட்டி சொல்றது”

அம்மா சரியாக வெளியே கிளம்பும்போதுதான் எதேனும் சொல்லுவாள். பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்க்கவில்லை. அப்படியென்றால் கோபமாக இல்லை. ஆனாலும் ஆளைக் காணோம். நானே சமையக்கட்டிற்குச் சென்றேன்.

“சொல்லுமா.. என்ன சொன்ன”

அடுப்பில் இருந்தப் பாத்திரத்தைக் கீழே எடுத்து வைத்துக்கொண்டே “பக்கத்து வீட்டு ரேவதிய ரெண்டு நாளா காணமாடா… கணேசன் அண்ணன் வந்து காலைலயே விடிஞ்சதும் விடியாததுமா விசாரிச்சிட்டுப் போனாரு.. நீ எந்திரிச்சதும் உன்ன வந்துப் பாக்க சொன்னாரு” என்றாள்.

ரேவதி அக்காவை காணவில்லை என்று அம்மா சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இல்லை. எனக்கு ஏன் அதிர்ச்சியாகவில்லை என்பதை நினைத்துதான் அதிர்ச்சியாக இருந்தது. ஒருவேளை இப்படி ஏதேனும் நடக்கும் என்று முன்னரே எதிர்பாத்தேனா. ச்ச.. நான் ஏன் அப்படி நினைக்கப்போகிறேன். எனக்கும் அவளுக்கும் என்ன பிரச்சனை. தெருவில் அதிகம் அவள் யாரிடமும் பேசிக் கூடப் பார்த்ததில்லை. நான் மட்டும் இல்லை, யாருமே அவளுக்கு தீங்கு நினைக்க மாட்டார்கள். ஆனால் பிறகு ஏன் அந்தச் செய்தியை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொண்டேன். என்னை நினைத்து எனக்கே பயமாக இருந்தது. அவர்கள் வீட்டுக்குப் போவதா வேண்டாமா என்று குழப்பத்தில் சிறிது நேரம் அங்கேயே நின்றேன். பின் ஒரு முடிவெடுத்தவனாய், “போய்ப் பார்க்கிறேன்” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பினேன்.

கணேசன் அண்ணனின் மனைவிதான் ரேவதி. ஓராண்டுக்கு முன் அவர்கள் திருமணம் நடந்தது. கணேசன் அண்ணனின் தூரத்து சொந்தம் என்று அம்மா சொன்னாள். ஊருக்கு வந்த புதிதில் மிகவும் அமைதியான பெண்ணாய் ஒருவருடனும் பேசாமல் எப்போதும் கையில் எதாவது புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருப்பாள். எப்போதும் “ஊர் வம்புக்கு நான் போக மாட்டேன்பா..” என்று பெருமைப் பேசும் அம்மாவே ஒரு நாள் “என்னடா இந்தப் பொண்ணு வீட்ட விட்டு வெளியவே வர மாட்டேங்குது..” எனக் கேட்டாள்.

“புதுசா வந்துருக்காங்கள்லம்மா.. அதுனால அப்படித்தான் இருப்பாங்க..போக போக சரி ஆகிடுவாங்க” இதைச் சொன்னபோது எனக்கே நம்பிக்கை இல்லை.

கணேசன் அண்ணன் திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே துபாய் சென்றுவிட்டார். வீட்டில் ரேவதி அக்கா, கணேசன் அண்ணனின் அண்ணன், அவரின் மனைவி மூன்றுபேர் மட்டுமே இருந்தனர்.

அண்ணன் துபாய் போவதற்கு முன் சில தடவைகள் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அப்போது கூட ஒரு தடவைதான் ரேவதி அக்காவை பார்க்க முடிந்தது. அதுவும் அந்த அண்ணன் காப்பி கொண்டு வரச் சொன்னதால்.

ஒரு வேளை பிடிக்காமல் நடந்த திருமணமோ என்றெல்லாம் சில சமயம் தோன்றும்.

நான் முதன் முதலாக ரேவதி அக்காவிடம் இங்குதான் பேசினேன். நண்பர் ஒருவர் ஒரு சுவரில் பதியப்பட்டிருந்தக் கவிதைகளைக் காண்பித்து இந்தக் கவிதைகள் யார் எழுதியது என்று கேட்டார். ‘நகுலன்’ என்றேன்.

“இல்ல இவங்கள நான் கொஞ்ச நாளா தொடர்ந்து பாலோ பண்ணிட்ருக்கேன்.. பேரு ரேவதி. கவிதைகள் நல்லா எழுதுறாங்க.. ஒரு வேள இவங்களே வேற பேர்ல எழுதுறாங்களோன்னு டவுட்டாகிருச்சு” அவர் பேசியதை நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. என் கவனம் முழுவதும் அந்தக் கவிதைகளின் மேல்தான் இருந்தன.

“எனக்கு

யாருமில்லை

நான்

கூட..”

“இருப்பதற்கென்று

வருகிறோம்

இல்லாமல்

போகிறோம்”

இதற்கு முன் பல தடவைகள் இந்தக் கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போதுபோல் எப்போதும் இவை இவ்வளவு அர்த்தம் பொதிந்தவையாக இருந்ததில்லை.

ரேவதி அக்கா!!

அந்தக் கவிதைகளின் கீழே பெயர் போடவில்லை என்பதால் நான் “நகுலன்!” என்று எழுதினேன்.

உடனேயே “ஆம்” என்று பதில் வந்தது. எங்கள் நட்பு நகுலனிடமிருந்து தொடங்கிற்று.

சில நாட்களிலேயே மிக நன்றாக பேசத்தொடங்கிவிட்டோம். எப்போது இங்கு வந்தாலும் அவரிடம் “ஒரு குட் மார்னிங்” அல்லது “குட் ஆப்டர்நூன்” அல்லது ஒரு “குட் ஈவ்னிங்” சொல்லிவிட்டுத்தான் மற்றவர்களைப் பார்க்கவே போவேன். ரேவதி அக்காவும் அப்படித்தான். எங்கள் பேச்சு முழுக்க முழுக்க தீவிர இலக்கியம் சார்ந்ததாகவே இருக்கும். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என எதைப் பற்றியும் விவாதிக்க கூடியவராக ரேவதி அக்கா இருந்தாள். ஒவ்வொருமுறையும் அவள் மீது எனக்கு மரியாதை கூடிக்கொண்டே போனது. என்னையும் “எழுது. எழுத எழுத தன்னால் எழுத்து பிடிபடும்” என ஊக்கப்படுத்தினாள்.

ஒன்றை நான் கவனிக்கத் தவறவில்லை. என்னதான் இங்கு நன்றாகப் பேசினாலும் அக்கா வீட்டிற்குப்போனால் முற்றிலுமாக மாறி, சரியாகச் சொன்னால் அதே பழையப் பெண்ணாகத்தான் இருந்தாள். எப்போதும் அவள் அறைக்குள்தான். ஒன்றிரண்டு தடவை வெளியே வந்தாலும் ஒரு ஹாய் ஹல்லோ மட்டும்தான்.

எனக்கு இந்த விசயம் ஆச்சர்யமாய் இருந்தது. ஒரே ஆள் இங்கு ஒரு மாதிரியும் வீட்டில் ஒரு மாதிரியும் ஏன் இருக்கவேண்டும். இத்தனைக்கும் கணேசன் அண்ணனின் குடும்பத்தில் எல்லோருமே நல்லவர்கள். கலகலப்பானவர்கள். கணேசன் அண்ணனின் அண்ணனுக்கும் அவருக்கும் பத்து பதினைந்து வயது வித்யாசம் இருக்கும். தம்பியைத் தன் பிள்ளையைப்போல் பார்த்துக்கொள்பவர் அவர். ரேவதி அக்காவை ஒரு சொல் கடுமையாகப் பேசிப் பார்த்ததில்லை. இருந்தும் அக்கா தன் கூண்டிற்குள்தான் எப்போதும் இருந்தாள்.

இங்கு எதிர்பார்த்த மாதிரியே எல்லா இடங்களிலும் ஒரே அமைதி. இன்றைக்கு முழுவதும் இதைப் பத்திதான் பேசுவார்கள். எல்லா சுவர்களிலும் #சேவ்ரேவதி என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தன. பெரிய பெரிய இலக்கியவாதிகள் எல்லாம் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்திருந்தனர்.

எனக்குப் புரிந்தது… நான் ஏன் அவள் காணாமல் போனது பற்றி அதிகம் கவலைக்கொள்ளவில்லை என.

நாங்கள் பேச ஆரம்பித்த புதிதில் ரேவதி அக்காவிற்கு அதிக நண்பர்கள் இங்கு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எண்ணிக்கைக் கூடத் தொடங்கியது.

ஒரு நாள் யாருமே எதிர்பார்க்காதவண்ணம் தன் படத்தை சுவரில் பகிர்ந்திருந்தாள். அன்று மட்டும் அவளுக்கு முன்னூறுக்கும்மேல் நட்பு அழைப்புகள் வந்தன. அனேகமாக ஊரில் இருந்த எல்லோருமே அந்த லிஸ்ட்டில் இருந்தனர். அதற்கு முன்பெல்லாம் ஒவ்வொரு முறையும் யாராவது புதிதாக நட்பாக வேண்டினால் என்னிடம்தான் முதலில் சொல்வாள். நான் அவரின் சுவர் பக்கம்போய் ஆராய்ச்சி செய்து அவரின் நட்பை ஏற்கலாமா வேண்டாமா என்று சொல்வேன். ஒரு முறை எனக்கும் அவளுக்கும் பெரிய சண்டையே வந்துவிட்டது. அம்முறை நட்பு அழைப்பு கொடுத்தவர் பக்கத்து தெருவில் இருக்கும் கீர்த்தி. பெண் என்பதாலும் அதுவும் பக்கத்து தெருவில் இருப்பவள்தானே என்பதாலும் ரேவதி அக்கா என்னைக் கேட்க்காமலேயே அவளின் நட்பை ஏற்றுக்கொண்டுவிட்டாள். எனக்குத் தெரிந்தபோது நான் அவளை நன்றாகத் திட்டினேன். ஏனென்றால் அந்த கீர்த்தியை பற்றி ஊரில் ஒருவர் கூட நல்லவிதமாக பேசவில்லை. வாராவாரம் அவள் வீட்டிற்கு புதிது புதிதாக பொருட்கள் எப்படி வருகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். அவள் அதை பெறுவதற்கு எந்த தப்பான விசயங்களையும் செய்வதில்லைதான். “எனக்கு இதெல்லாம் வேண்டும்.. ஏழையாய் பிறந்துவிட்டதால் இதற்கெல்லாம் ஆசைப்பட முடியுமா” என்பது மாதிரி ஏதாவதுதான் சொல்லுவாள் யாரேனும் ஒரு தர்மவான் வீட்டில் கொண்டுவந்து இறக்கிவிடுவான். வேடிக்கை என்னவென்றால் அதைப் பார்த்து கீர்த்தியையும், வாங்கிக்கொடுத்தவனையும் திட்டித் தீர்க்கும் புண்ணியவான் அடுத்த முறை முதலில் ஓடிப்போய் சீர்வரிசை செய்வான். கீர்த்திக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்ததால் யார் திட்டுவதைப் பற்றியும் கவலைப்படமாட்டாள். இப்படி வாங்கிக்கொடுப்பதினால் அவர்களுக்கு என்ன லாபம் என்றோ, வாங்கிக்கொள்வதில் கீர்த்திக்கு என்ன ஆசை என்றோ புரியவில்லை.

ரேவதி அக்காவிடம் இதைச் சொன்னபோது என்னை ஆணாதிக்கவாதி எனத் திட்டினாள். நானும் மற்ற ஆண்களைப்போல்தான்.. ஒரு பெண் பொது வெளியில் சகஜமாகப் பழகினாலே சந்தேகப்படும் மோசமான வக்கிர புத்திக்காரன் அது இது என என்னவெல்லாமோ சொல்லித் திட்டினாள். ஒரு கட்டத்திற்கு மேல் எப்படியோ போங்கள் என்று விட்டுவிட்டேன். ஒரே வாரத்தில் நீ சொன்னது சரிதான் என்று என்னிடம் வந்து சொன்னாள்.

புகைப்படத்தை ஏன் பகிரவேண்டும்.. உடனே அதை நீக்குங்கள் என்று அவரிடம் சொன்னேன். அதன் பிறகுதான் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது. நான் பொறாமையால் பேசுகிறேன் என்றும் என் எல்லையை மீறாமல் இருக்கவேண்டும் என்று பேச ஆரம்பித்தாள்.

இது ஒரு வினோத உலகம். வந்த சில நாட்களிலேயே உணர்ந்தாலும் விட்டு வெளியேறும் வழிதான் தெரியவில்லை. இது வந்த பின்னர் எல்லோருக்கும் மூன்று முகங்கள் ஆகி விட்டன. இங்கு காண்பிப்பது ஒரு முகம், வெளி உலகில் ஒரு முகம் மற்றும் மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த மூன்றாவது முகம்.

மேலும் சில சுவர்களில் சில போராட்ட அழைப்புகள் இருந்தன. உலகில் பல நாடுகளின் அரசியலை நிர்ணயிக்கும் சக்திகொண்டதாய் இவ்விடம் இருப்பதால் எல்லோரும் முடிந்தவரை இவ்விடத்தை பயன்படுத்திக்கொள்ள முனைகிறார்கள். வாரத்திற்கு ஒரு போராட்ட அறிவிப்பையேனும் பார்க்கலாம். நம்மில் சிலருக்கும் எல்லாவற்றைப் பற்றியும் கருத்து சொல்லும் பழக்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இவ்விடம் சொர்கபுரி.

இப்போது யோசித்தால் எனக்கு ரேவதி அக்காவைப் புரிந்துகொள்ள முடிகிறது. தன்னை யாரும் கண்காணிக்கவில்லை என்ற சூழ்நிலையில்தான் ஒரு மனிதன் தன்னை உண்மையாக வெளிப்படுத்திக்கொள்வான் என்று சொல்வார்கள். கட்டுப்பாடுகள் அற்ற, அதே சமயம் சிறிதளவு பாதுகாப்பாய் உணரும் இடத்தில் கூட ஒரு பெண் தன்னை முழுமையாய் வெளிப்படுத்திக்கொள்கிறாள். எனக்குப் புரிந்தது ஆனால் என்னைப்போல் பலரும் நட்பாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ரேவதி அக்காவின் சுவரை அடைந்தபோது கணேசன் அண்ணனின் அண்ணன் அங்கிருந்தார். “காணாமல்போனவளைத் தேடாமல் இங்கென்ன செய்துகொண்டிருக்கிறார்” இருந்தும் அவரைப் பார்த்தவுடன் எழுந்த குற்றவுணர்ச்சியை மறைக்க முடியவில்லை.

கடைசியாய் அவளுடன் சண்டைப் போட்டபின் இரண்டு நாட்கள் மனதில் வேறெதுவும் ஓடவில்லை. அவள் கேட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் அநியாயமானவை. அவளின் நல்லதிற்கு சொன்னதை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் அசிங்கப்படுத்திவிட்டாள். பதிலுக்கு திருப்பி திட்டியிருந்தால் ஒருவேளை மனம் சமாதானம் ஆகியிருக்கும். அதற்கு அவள் வாய்ப்பே குடுக்காததால் அவள் வீட்டிற்குப் போனேன். கணேசன் அண்ணனின் அண்ணந்தான் இருந்தார். சட்டென்று மனதில் ஒரு எண்ணம்.

“அண்ணா.. ரேவதி அக்கா இருக்காங்களா” அவள் அங்கு இல்லையென்பது தெரிந்தும் தெரியாத மாதிரி கேட்டேன்.

“இல்ல சிவா.. அவ அங்கதான் போயிருக்கா” என்றார்

ஒன்றும் பதில் சொல்லாமல் தலையை குனிந்து நின்றேன்.

“என்னாச்சுப்பா…? அவகிட்ட எதுனா கேக்கனுமா”

“வந்து..உங்ககிட்டதான் ஒன்னும் சொல்லனும்…” என்று இழுத்தேன்.

“சொல்லு.. என்ன சொல்லனும்” அதுவரை அசிரித்தையாக இருந்தவர் என் முகத்தைக் கவனமாகப் பார்த்தார்.

“நான் சொல்றத எப்படி எடுத்துக்குவீங்கன்னு தெரில.. ஆனா தப்பா எடுத்துக்காதீங்க.. ரேவதி அக்கா பத்தி ஒன்னு சொல்லனும்ன்னுதான் வந்தேன்.. தப்பா எதுவும் இல்ல..அக்கா நல்லவங்கதான்.. அதுனால அவங்க மேல் இருக்குற அக்கறைலதான் சொல்றேன். அக்காவ ‘அங்க’ அனுப்பாதீங்க அண்ணா அது கல் மனசுக்காரங்களுக்கான இடம்.. சரியாத்தான் சுவர்களால அந்த உலகத்த உருவாக்கிருக்காங்க.. அங்க பாதிபேரு மோசமானவங்களா இருக்காங்க.. இது அக்காவுக்கு சொன்னா புரிய மாட்டேங்குது.. அவங்க எல்லாரையும் நம்புறாங்க.. யாரு எப்படின்னு பாத்து பழக மாட்றாங்க.. நான் சொன்னாலும் என்னயத்தான் திட்றாங்க.. இந்த ஊர்ல இதுக்கு முன்னாடி எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும்.. நேத்து பொறந்த கொழந்தல இருந்து நாளைக்கு சாகப்போறவங்க வரைக்கும் எல்லாரையும் தெரிஞ்சு வச்சுருப்போம்.. ‘அது’ வந்ததுக்கு அப்றம் எல்லாரையும் புதுசா பாக்குற மாதிரி இருக்கு.. எது உண்மை எது பொய்ன்னு கண்டுபிடிக்க முடியல..எதுக்கு வம்பு பாருங்க.. அதான் உங்ககிட்ட ஒருவார்த்த சொல்லிரலாம்ன்னு வந்தேன்.. நான் சொன்னேன்னு எதுவும் அவங்கிட்ட சொல்லிடாதீங்க.. அதுக்கும் என்னதான் திட்டுவாங்க..நான் வர்றேன்” சொல்லிவிட்டு விறுவிறுவென்று அவ்விடத்தைவிட்டு வெளியேறினேன். கணேசன் அண்ணனின் அண்ணன் என்னைக் கூப்பிடவில்லை. அதிலிருந்து நான் சொன்னதை அவர் சீரியசாக எடுத்துக்கொண்டார் என்பது புரிந்தது. உள்ளுக்குள் ஒரு குரூர சந்தோசம்.

அடுத்த ஒரு வாரத்திற்குளெல்லாம்….

கணேசன் அண்ணனின் அண்ணனிடம், “சாரி அண்ணா.. என்றேன்” என்னைப் பார்த்தவர் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதார். “பாவி மக.. இந்தப் பாழாப்போன சொவத்துங்கப் பக்கம் வராத வராதன்னு சொன்னேன்.. என் பேச்சக் கேக்கலயே.. இவ்ளோ வீம்பா ஒரு பொம்பளைக்கு இருக்குறது.. எம் தம்பி வந்து கேட்டா நான் என்ன சொல்லுவேன்.. எங்க போனாளோ.. என்னாச்சோ தெரியலயே” அழுது தீர்த்தார்.

ஒரு சில நிமிடங்களுக்கு மேல் அங்கு நிற்க முடியாமல் அவரிடம் ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

“தம்பி பொண்டாட்டின்னு கூட பாக்காம புருசன் இல்லாதப்பா ஊர் மேயிரியான்னு கேட்ருக்கான் பாவி.. சொல்லு பொறுக்க மாட்டாம வீட்ட விட்டுப் போயிட்டா” வரும் வழியில் ஏதோ ஒரு சுவரோரம் இருவர் பேசிக்கொண்டார்கள்.

இங்கு காணாமல் போன எத்தனையோ பேர் திரும்பி வந்திருக்கின்றனர். திரும்பி வரவே மாட்டார்கள் என்று ஊர் உலகமே சொன்னவர்கள் எல்லோரும் மறுபிறவி கிடைத்து மீண்டிருக்கின்றனர். “உலகமே இங்கிருக்கிறது, இவ்வுலகில் கண்டுபிடிக்க முடியாதவர்களே இனி இருக்க மாட்டார்கள்” என்று என்னை இங்கு முதன் முதலில் அழைத்து வந்தபோது ஒருவர் சொன்னார். ரேவதி அக்காவும் திரும்பி வருவாள். அவள் வரவேண்டும். “#சேவ்_ரேவதி_அக்கா” என்று என் சுவரில் எழுதிவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினேன்.

“சுவர்களின் உலகத்திற்கு வந்தமைக்கு நன்றி. மீண்டும் வருக” என்ற செய்தி கண் முன் தோன்றி மறைந்தது.

மழைக்குப் பின் – கமலதேவி சிறுகதை

தொடர்ந்து விடாமல் பெருமழையாகவும் தூரலாகவும் நின்று நிதானித்து பெய்த மழையால் துறையூர் கலைத்துப்போடப்பட்டிருந்தது.ஈர அதிகாலையில் அந்தசிறுநகரில் நடைப்பயிற்சி செல்வதற்காக குடையுடன் தன்வீட்டு வாசலில் நின்ற வெங்கட்ராமன் தலையுயர்த்தி வானத்தைப் பார்த்தார்.அடைமழைநாள் எப்படியோ தன்குளிரோடு நசநசப்போடு அவனை கொண்டுவந்துவிடுகிறது.

துன்பம் இனியில்லை..சோர்வில்லை.துன்பம் இனியில்லை சோர்வில்லை…என்ற வரிகளை மந்திரம் என மனம் அனிச்சையாய் சொன்னது.விஸ்வாவின் இறுதி நாட்களில் இந்தவரிகளை பிடித்துக்கொண்டமனம் உள்ளேயே எந்தநேரமும் நிரப்பமுடியாத ஒன்றை நிரப்பிக்கொண்டிருந்தது.அவன் இறப்பை எதிர்ப்பார்த்து காத்திருந்த பத்துநாட்களில் இந்தவரிகளின்றி எதுவும் துணையிருந்திருக்க முடியாது.தயவுசெஞ்சி செத்துபோடா கண்ணா.. இவ்வளவு வலி வேண்டாம்..என்று நூறுமுறையாவது மனதால் சொல்லிய நாட்கள்.

குடையை மடக்கி கையில் பிடித்துக்கொண்டு நடந்தார்.நாய் ஒன்று அசதியில் தெருவிளக்கின் அடியில் படுத்திருந்தது.நடுவயதுடையது. செவலை நிறம்.மூச்சு ஏறிஇறங்கும் வயிற்றின் தசைகளில் இளமையின் பூரணம். சற்று நேரம் நின்றார். மணிவிழி திறந்து அவரைப்பார்த்து வாலையசைத்து கண்களை மூடிக்கொண்டது.

தெப்பக்குளத்தை சுற்றி நடந்தார்.பெரியஏரியிலிருந்து வரும் புதுநீர் நிரம்பித் தழும்பிக்கொண்டிருந்தது.நீரில் கலங்கல் அவர் கண்களுக்குத் தெரியவில்லை.ஆனால் நாசி கண்டுகொண்டது.ஒருபுலன் இல்லாவிட்டால் ஒருபுலன் உதவுவதை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டார்.இருபுலன் சேர்ந்து ஒருபுலனாய் பரிணாமம் வளர்ந்தால்!… அழகு என்பதும் நாம் அறிந்த உயிரியல் என்பதும் என்னவாகும்? என்று மனதில் தோன்றியது.

எப்பொழுதும் நடக்கும் வழியில் சாக்கடை சிறுபாலத்தில் உடைப்பு ஏற்பட்டு வழியெங்கும் நீர் கணுக்கால் வரை சென்றது.திரும்பிவிடலாம் என்ற எண்ணம் எழும் பொழுதே அதுமுடியாது என்பதை அவர்மனம் அறிந்திருந்தது.

பழையப்பாதையில் நடந்தார்.இந்தப்பாதையில் வந்து ஆண்டுகளாகின்றன.சிறுதயக்கத்துடன் வாயில்கதவைப்பிடித்து நின்று அந்தப்பள்ளிக்கட்டிடத்தைப் பார்த்தார்.இத்தனை ஆண்டுகளில் விரிந்து பரந்து உயர்ந்திருந்தது.அவர் கால்களுக்கடியில் சிறுகூச்சம் போல ஒருஉணர்வு.உயரமான இடத்தில் ஒட்டில் நிற்பதைப்போல.கால்களை மாற்றிமாற்றி தூக்கி பின்புறமாக மடித்து நீட்டினார்.

அலைபேசி ஒலித்துக்கலைத்தது.எடுத்ததும், “குட்மானிங் டாக்டர் .இன்னிக்கு நீங்க லீவான்னு கேட்டு கால் வந்துட்டேயிருக்கு.கெம்பியப்பட்டிக்காரர் நல்லாருக்கார்.வீட்டுக்கு அனுப்பலாமா டாக்டர்.இங்க எக்ஸ்ட்ரா பெட் போட்டும் சிரமமா இருக்கு டாக்டர்,”என்றது.

“நீ சர்ச்க்கு போகலையாம்மா..”

“பக்கத்திலதானே டாக்டர். போயிட்டு திரும்பிருவேன்.மது நைட் இருந்தா..”

“சரிம்மா.இந்தவாரத்துக்கு சன்டே இல்லன்னு எடுத்துக்க வேண்டியதுதான்..ஸார்ப்பா நைன்க்கு இருப்பேன்,”என்றப்பின் அலைபேசியை ட்ராக் பேண்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டு நிமிர்ந்தார்.பள்ளிவளாகம் அமைதியாக இருந்தது.மைதானத்தில் மழைபெய்து ஏற்படுத்திய சிறுசிறு பள்ளங்களில் நிறைந்தகண்கள் என நீர் தேங்கிக்கிடந்தது.

உள்ளுக்குள் ஏற்பட்ட ஒருசொடுக்கலால் அவர் உடல் ஆடியது. “டாடி..”என்று விஸ்வா ஓடிவருகிறான். பள்ளியை அடுத்திருந்த நந்திகேஸ்வரர் ஆலயத்தைப் பார்த்தபடி நடந்தார்.பள்ளிசுற்றுசுவர் ஓரங்களில் ஓங்கிவளர்ந்திருந்த அசோக, பன்னீர் மரங்களிலிருந்து மழைநீர் சொட்டிக்கொண்டிருந்தது.எதிரே இருந்த மணிக்கூண்டு பிள்ளையார் கோவிலின் மணியோசைக் கேட்கிறது.தேர்நிலையில் சற்று நின்றார்.

ஆலயத்தினுள்ளிருந்து சிறுவன் அம்மாவின் கையை உதறி ஓடிவந்து சாலைஓரத்தில் தயங்கி நின்றான். கோயில் குருக்களின் மகன்தான் என கண்டுகொண்டார்.அவர் இருபுறமும் வாகனங்கள் வருகிறதா என்று பார்த்தார்.கோரைமுடி நன்குபடிந்து திருநீற்றுக்கு மேல் நெற்றியில் ஒட்டியிருந்தது.நீளவாக்கு முகம்.வெள்ளை டீசர்ட்.அவன் எதையோ எதிர்பார்த்து வலப்புறம் ஓட அம்மாவின் கைகளில் சிக்கிக்கொண்டான்.

அம்மாவா! நாமளா முடிவுபண்ணிக்கலாமா? அம்மாதான் என்று அவர் உள்மனம் சொல்ல சாலையைப் பார்த்து நடந்தார்.இரும்புக்கடையின் முன் நிற்கும் குட்டிவேம்பை தொட்டுப்பார்த்து எப்படியோ வளரப்பிடாதுன்னு தோணிடுச்சு என்று அதன் கிளையை அசைத்துவிட்டு நடந்தார்

பாலக்கரையில் கடைகள் எதுவும் திறக்கப்படாமல் இருப்பதை பார்ப்பதற்கு சுட்டிநாய்க்குட்டி உறங்குவதைப்போல இருந்தது.விஸ்வா அந்த ஐஸ்பேக்டரி முன் நிற்கிறான்.வளையும் இளம்மூங்கில் என உயரமாக.பள்ளி சீருடையில் சற்று முதுகை குனித்துக்கொண்டு சிரிக்கிறான்.கையில் இளம்சிகப்புநிற குச்சிஐஸ்.கைகால்கள் நிலையில்லாமல் பதின்வயதிற்கே உரிய குதூகளிப்பில் அசைந்து கொண்டிருக்க எண்ணெய் மின்னும் முகத்தை திருப்புகிறான்.இவர் குடையை இறுக்கிப்பிடித்தபடி கனமான கால்களை எடுத்து வைத்து நடக்கத்தொடங்கினார்.பாதையெங்கும் ஈரம்.

பாலக்கரைக்கு இடதுபுறம் நடந்து சின்னஏரியின் பின்புறம் வந்திருந்தார்.நீர் நிரம்பி அலையடிக்க மினுமினுத்துக் கிடந்தது.கழிவுகள் சேர்ந்து நாற்றமடிக்க மூக்கைப்பொத்திக்கொண்டு வேகமாக நடந்தார்.பாதிக்கரையைக் கடந்ததும் நாற்றம் குறைந்தது.அந்த மருத்துவமனையின் பின்புறம் நின்று தலையுயர்த்திப் பார்த்தார்.அது ஐந்துதளமாக உயர்ந்திருந்தது.பல ஆண்டுகளுக்குமுன்பு இதுதான் வாழ்வின் இலக்காக இருந்தது.யாருடைய இலக்கோ யாரோலோ நிறைவேற்றப்படுகையில் அது யாருடையது? என்று நினைத்தபடி நடந்தார்.

“நம்ம ஹாஸ்பிட்டல கிருஷ்ணாக்கு குடுக்கப்போறீங்களா டாடி,”என்ற விஸ்வாவின் கம்மிய குரல் கேட்டது.அப்பொழுது அவன் சிகிச்சையிலிருந்தான்.நீண்டமுகத்தில் மென்தாடியிருந்த இடங்கள் வற்றத்தொடங்கியிருந்தன.

கல்லூரியில் மருத்துவிடுப்பெடுத்து வந்தவன் வேறொருவன்.தீவிரமான கண்கள்,நீண்டமுகத்தில் மினுமினுப்பும்,உயர்ந்த சதையில்லாத உடலும்,புன்னகையை ஔித்து வைத்திருக்கும் இதழ்களுமாக காண்பவர்களின் கண்களுக்குள் நிற்பவன்.

ஏரியைக்கடந்து முசிறி பிரிவுப்பாதையை வந்தடைந்ததும் திரும்பிவிடலாம் என்று நிமிர்ந்து பார்த்தார்.பெருமாள் மலைக்குப்பின்னாலிருந்து சூரியன் எழுந்துகொண்டிருந்தான்.சற்றுநேரம் நின்றுவிட்டு நடந்தார்.

எம்.ஆர்.ஐ ஸ்கேனிலேயே நம்பிக்கையிழக்கத் தொடங்கியிருந்தாலும் ஆவேசம் விடாமல் அமெரிக்கா வரை போகச்செய்தது.திரும்பி வரும்போது மகனை, மருத்துவமனையை, வீட்டை இழந்திருந்தார்.வீட்டிலேயே இருந்தார்.வீட்டை வாங்கியவர் ஒருநாள் தன் உடல்நலப்பிரச்சனையை சொல்லித்தீர்க்க வந்தார்.

அவர்,“இனிமே தனியா இங்கருக்க முடியாதுங்க டாக்டர்.பையனோடதான்.வீட்ட வாடகைக்கு விடலான்னு இருக்கேன்.கைமாறிப்போனாலும் உங்கவீடு.இருக்கனுன்னு நெனப்பிருந்தா இருந்துக்குங்க,”என்றார்.

விட்டுட்டு வந்தாச்சு இனிமேல் அந்த திண்ணைகளில் சாவகாசமாக அமரமுடியுமா? பரந்துகிடக்கும் உள்முற்றத்தில் தனியாக இரவுபடுத்தால் உறக்கம் வருமா? பின்கிணற்றின் நீர் சுவைக்குமா? என்ற எண்ணங்கள் அவரையும் துணைவியையும் வதைத்தன. வீட்டை வேண்டாம் என்று சொல்ல முடியாமல் அல்லாடிய மனங்களுக்கு வீட்டை மருத்துவமனையாக்கலாம் என்ற எண்ணம் இந்தஅடிவாரத்தில் வைத்துதான் தோன்றியது.

“நம்ம வீட்ட வாடகைக்கு எடுத்து ஹாஸ்பிட்டலா மாத்திண்டா என்ன?”என்றார்.

அந்த அம்மாள்,“நல்ல விஸ்தாரமான இடம்தான்..”என்றாள்.

இரண்டுநாட்கள் யோசனைக்குப்பிறகு கணேசனை, ஜான்சியை அழைத்தார்.அடுத்தப்பத்துநாட்களில் மருத்துவம் பார்த்துக்கொள்ள ஆட்கள் வரத்தொடங்கினார்கள்.அந்தவீட்டின் மகிமையோ என்னவோ சுற்றுவட்டார கிராமத்து ஆட்கள் வந்து கொண்டேயிருந்தார்கள்.நின்று நிதானித்து மருத்துவம் பார்த்தார்.தொடர்ந்து வந்தவர்களின் உடலை மனதை புரிந்துகொள்ள முயலும் சாகசம் அவருக்குப் பிடித்திருந்தது.

காலையுணவை முடித்து மருத்துவமனையின்முன் காரை நிறுத்தி இறங்கியவர் பெயர்ப்பலகையை பார்த்தார்.விஸ்வநாதன் மருத்துவமனை.அந்தப்பயலை இன்னும் சிலநாட்களுக்கு மனதிலிருந்து பிடுங்கி எறியமுடியாது என்று நினைத்துக் கொண்டு படிகளில் ஏறினார்.

திண்ணையை அடைத்து போடப்பட்ட கேட்டினுள் கிடந்த பெஞ்சுகளில் ஆட்கள் எழுந்து நின்றார்கள்.அவர் புன்னகைத்துக் கடந்தார்.அந்தத்திண்ணைகளில் விஸ்வா பெம்மைகளின் பின்னால் மண்டியிட்டுத் தவழ்ந்தான்.

முன்கட்டிலிருந்த மருந்தகத்திற்கு வந்தார்.கணேசனிடம் பேசியபடி நின்றார்.அங்கு விஸ்வா புத்தகத்துடன் அமர்ந்திருந்தான். உள்ளே விஸ்தாரமான பகுதியில் கிடந்த மேசைமுன் அமர்ந்தார்.பக்கவாட்டில் திரைகளால் பிரிக்கப்பட்டு படுக்கைகள்.அவருக்கு இடப்புறம் உள்முற்றத்தில் ஜான்சி மேசையில் அமர்ந்திருந்தாள்.பக்கத்திலிருந்த சீலாவை அழைத்தார்.

கழுத்தைப்பிடித்துக்கொண்டு தன்முன் அமர்ந்திருந்த பெண்ணிடம், “அவ சொல்லிக்கொடுக்கற பயிற்சிய தினமும் காலையிலயும் சாயறச்சையும் செய்யனும்.செல்போனை கொஞ்சமாச்சும் கையிலருந்து எறக்கனும்,”என்றார்.அடுத்ததாக பெஞ்சில் காத்திருந்த சிறுமி சிரித்தாள்.

“இங்கவா அம்மணி..உனக்கென்ன? ஸ்கூலுக்கு மட்டம் போடறதுக்காக இங்க வந்திருக்கியா?”என்று அவளை அழைத்தார்.அவள் அவர் பக்கத்தில் வந்து நின்றாள்.

“என்ன?”என்று ரகசியமாகக் கேட்டார்.

“அம்மாட்ட சொல்லக்கூடாது,”என்றாள்.

“ம்,”

அவர் நெற்றியிலிட்டிருந்த நாமத்தைக்காட்டி, “பீம் இந்தமாதிரி வரஞ்சிருந்தான்,”என்று வாய்மூடி சிரித்தாள்.

கும்பல் குறையாமல் வந்துகொண்டிருந்தது.பெரும்பாலும் வைரஸ் காய்ச்சல்.அவர்களிடம், “பாராசிட்டமால் போட்டு பாத்துட்டு வாங்கன்னு சொன்னா கேக்கறதில்ல,”என்று உரிமையோடு வேகமாக சொல்லிக்கொண்டிருந்தார்.வீடு மருந்துவமனையான இந்த பதினைந்து ஆண்டுகளில் இவர்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.

வலிப்பிரச்சனைகளுடன் வந்தவரிடன், “மருந்து சாப்பிடு.சீலா சொல்லிக்கொடுக்கற பயிற்சிகள செஞ்சா என்ன?அதுக்கு முன்னாடி உன்னோட மகளுக்கு வரன் பாரு.எல்லா வலியும் காணாப்போயிடும்,”என்று தோளில் தட்டினார்.

வெளியிலிருந்து, “டோக்கன் முடிஞ்சுது சார்,”என்ற குரல் கேட்டது. சாய்ந்தமர்ந்தார்.ஜான்ஸி சிற்றுண்டியுடன் வந்தாள்.படுக்கையிலிருப்பவர்களின் விவரங்களை சொன்னாள்.

“என்னாச்சு சார்..நீங்க இன்னிக்கி எங்கக்கூட சரியா பேசல,”

“அசதிம்மா..”

“டாக்டர் ஃபீஸ் இல்லன்னுதான் டக்குன்னு எதுன்னாலும் ஓடி வந்திடறாங்க.நீங்க கொஞ்சமாச்சும் சார்ஜ் பண்ணினா ரீசனபிலான கூட்டம் வரும் சார்,”

அவர் புன்னகைத்தபடி எதிரேயிருந்த விஸ்வாவின் படத்தைப் பார்த்தார்.ஜான்ஸி படுக்கையிலிருந்தவர்களிடம் சென்றாள். உண்ணாமல் எழுந்து பின்பக்கம் வந்தார்.கழிவறையிலிருந்து வெளியே வந்தவர் இவரைக்கண்டு முகம் மலர்ந்தார்.

“வீட்டம்மாவ நாளக்கி கூட்டிப்போலாம்.ரொம்ப வயக்காட்டுல போட்டு வறுக்காதய்யா,”என்றபடிநடந்து வந்து துளசி, திருநீற்றுப்பச்சை செடிகள் செழித்த மதிலருகே நின்றார்.இலைகளெல்லாம் மழைநீர் கழுவிய பசுமையிலிருந்தன.

விஸ்வா குளிக்க அடம் செய்து உள்ளாடையுடன் கிணற்றை சுற்றி ஓடிவந்து கொண்டிருந்தான்.அவன் பாட்டி பின்னால், “ஓடி விழுந்திறாத..” கெஞ்சிக்கொண்டிருந்தாள்.

தலையை மெதுவாக உலுக்கிக்கொண்டார்.அவருக்குத் தெரியும் இது எங்கு செல்லும் என.எத்தனையோ நாட்கள் இப்படியாகக்கிடந்து மீள்பவர்தான்.அந்த நேரங்களில் மருத்துவஅறிவு சுமையா என்ற கேள்வி தலைமேல் கனக்கும்.அந்த எண்ணம் தரும் சோர்வு மேலும் உறக்கத்தக்கெடுக்கும்.உறக்கம் கெட்ட வேளைகளில் அவன் அவரைச் சுற்றி வியாபிப்பான்.

மதிலின் சிறுவாயிலைத் திறந்தார்.சுமையேற்றிய மாட்டுவண்டி மெதுவாக நகராட்சி சந்தைக்கு நகர்ந்து கொண்டிருந்தது.வண்டியோட்டி துண்டால் மிகமெல்ல மாடுகளை தட்டிக்கொடுத்து நடத்தினான்.

“ந்தா..ந்தா..வந்திருச்சு.எடம் வந்திருச்சு,”என்று மாடுகளுடன் பேசிக்கொண்டிருந்தான்.

திரும்பிநின்றார்.ஈரத்தரையில் பாசிபடர்ந்திருந்தது.

“டாடி..தயிர்லேந்து வெண்ண வராப்ல..மழத்தண்ணியிலந்து இந்தபாசி வந்து ஒட்டிக்குமா..

“ம்..இருக்குமாயிருக்கும்..”

“அப்ப யாருப்பா மழத்தண்ணியக்கடையறா..”

“ஜகன்மாதா…சுத்தறாலான்னோ..”

“அவளாட சேந்து நாமாளுந்தானே..”

“ஆமா..”

“எதுக்குப்பா…”

“ஜனிச்சுட்டோமோல்லிய்யோ கண்ணா..” விஸ்வா தொடர்ந்து, “அப்ப ஜனிக்காதவாள்ளாம் காத்தில இருக்களா மழபேஞ்சா வருவளா..”கேட்டுக்கொண்டேயிருந்தான்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவர் மனம் கேள்விகள் கேட்பதை நிறுத்தியது. கண்களை மூடித்திறந்தார்.முன்னால் கொய்யா அங்கங்கே இலைமறைவில் கனிந்திருந்தது.காய்களும் பிஞ்சுகளுமாய் இலைகளுக்குப்பின்னே காத்திருந்தது.

ஜான்சி அவரை அழைத்துக்கொண்டே வருவது கேட்டது.அவர் உள்நோக்கி நடந்தார்.தயங்கியப்பின் தென்கிழக்குப்பக்கம் சென்றார்.அறை வாயிலருகே நின்றார்.

விஸ்வாவிடம் அம்மா, “நன்னா சாப்பிடு கோந்தே,”என்று தலையைத்தடவினாள்.

அதே இடத்தில் கிடந்த விஸ்வாவின் பழைய டேபிளில் தோட்டத்தை வேடிக்கைப்பார்த்தபடி சீலா சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.இவரைக்கண்டதும் கண்களை விரித்தாள்.“நல்லா சாப்பிடும்மா..”என்று திரும்பினார்.

அலைபேசியின் அழைப்பு நடையை துரிதப்படுத்தியது.டாக்டர் ரவிதான்.மருத்துவமனைக்கு வர முடியுமா என்று கேட்டார்.ரவி மனசுக்கு அகப்படாத கேஸா இருக்கும் என்று காரில் ஏறினார். குழந்தைகள் மருத்துவர் டாக்டர் இளங்கோவின் அழைப்பு வந்துக்கொண்டிருந்தது.வெளியே மழைமுடிந்த வெள்ளை வெயில்.மழையை அர்த்தப்படுத்தும் வெயில்.

செவல்குளம் செல்வராசு கவிதைகள்

1.வெகு மக்களால்
வாசிக்கப்படாத
இலக்கிய இதழில்
26ம் பக்கம்
என் கவிதை பிரசுரமாகியுள்ளது​​
யாராவது பார்த்தீர்களா

2.தொல்லை செய்கிறது
என்ன செய்வது
அச்சேறாத புத்தகத்தை
அவசர அவசரமாய்
எல்லாவற்றையும்
ஒளித்து வைக்கிறேன்
யாரோ கதவு தட்டுகிறார்கள்

3.அவசர அவசரமாய்
எல்லாவற்றையும்
ஒளித்து வைக்கிறேன்
யாரோ கதவு தட்டுகிறார்கள்

4.ஐந்து நாட்களுக்குப் பின்
கூரையை தாண்டி
வெம்மை இறங்கிய
நற்பகலில் சூழல் அமைந்தது
அமைதிப்படுத்த மறந்த கைபேசி
ஒலித்துக் கெடுத்தது