எஸ். சுரேஷ்

காணவில்லை

எஸ். சுரேஷ்

blank-poetry

 

“ஹ்ம்ம். இந்தக் கவிதையில் மேக்கப் இல்லை
அனாவசியமான வார்த்தைகள் இல்லை
தேவையற்ற அணிகலன்கள் இல்லை
சொல்லாமல் விடப்பட்ட விஷயங்கள் பல இருக்கு
நம் சிந்தனை விரிய இடம் கொடுக்குது
கவிதைக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டிய
மௌனம் இதுக்குள்ள இருக்கு,” என்று கூறிவிட்டு
ஒரு நொடி மெளனமாக இருந்தபின்
“கனத்த மௌனம் இருக்கு
மொழியின் எல்லையைத் தாண்டுது
கவிதை இலக்கணத்தை மீறுது
பின்நவீனத்வ கோட்பாடுகளைக் கேள்வி கேக்குது
மொழியோட இசையை நிராகரிச்சி
வார்த்தைகளோட ஒலியை நிராகரிச்சி
வார்த்தைகளுக்கு இடையே இருக்கும்
மௌனம் வழியா நேரடியாப் பேசுது”-

“கவிதை” என்று தலைப்பு மட்டும் எழுதி
நான் கொடுத்த வெற்றுக் காகிதத்தை
இன்னொரு முறை உற்று நோக்கிவிட்டு
பத்திரிகையாசிரியர் என்னிடம் சொன்னார்,
“நம் எல்லா கோட்பாடுகளுக்கும் உட்பட்டிருக்கும்
இந்த கவிதைய அடுத்த வாரம் போட்டுடலாமா?”

கவியின்கண் 15 – இறுதி கோஷம்

– எஸ். சுரேஷ் –

The last war slogan

“கின்ஸ்பர்க்”
– ஜூலியோ வைனோகிராட்

குற்றம் சொல்வதற்கில்லை. ஹௌலும் கட்டிஷும் எழுதிய எவரும்
மிச்சமிருக்கும் தங்கள் வாழ்நாளெல்லாம்,
எத்தகைய தவறும் செய்யும் உரிமை ஈட்டியவர்கள்.
என் குறை, இந்தத் தவற்றை அவரோடு நான் செய்திருக்க வேண்டாம் என்பதுதான்.
இது நடந்தது வியட்நாம் போரின்போது
அவர் ஒரு மாபெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார், வாசித்தபடி
வாஷிங்டன் ஸ்கொயர் பார்க்கில் இருந்தார்,
அங்கிருந்து செல்ல யாருக்கும் விருப்பமில்லை, (more…)

அறையின் நடுவிலிருக்கும் யானை (ராண்டோ)

Elephant in the room

என்னைப் பார்த்துச் சிரிக்கிறது, கண்களைச் சிமிட்டி
வாலைச் சுழட்டிக் குதிக்கிறது, கொம்புகளை உயர்த்தி
கொடி பிடித்து நடக்கிறது, துதிக்கையை நீட்டி
மலர் சூட்டிக் கொள்கிறது, செவிகளை விசிறி
தரை அதிர நடக்கிறது, கெலித்த நகைப்பில்
வயர்கள் ஸ்பார்க் அடிக்கிறது – சானல்கள் அலற,
ஊரெல்லாம் கொதிக்க, அனைவரும் அறிய,
அறையின் நடுவிலிருக்கும் யானை
மறைந்திருக்கிறது, ஒவ்வொருத்தர் வீட்டிலும்

– அபிநந்தன் (more…)

கவியின் கண் 14 – நீல நெருப்பு கண்கள்…

 எஸ். சுரேஷ் –

முதலில் நம்மை உருவாக்கிய இந்த பேராசையிடமிருந்து
நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்
அதுதான் என்னை இந்த பாரின்
ஒரு மூலையில் உட்கார்ந்து,
பாதிரியின் பேரவாவுடன் காத்திருக்க வைத்திருக்கிறது,
குறிப்பிட்ட அந்த தருணத்திற்காக-
எதிரில் நீல நெருப்பு கொண்ட கண்கள்,
அபாயத்திற்கு பழக்கப்பட்ட அந்த கண்கள்,
முன்கணிக்கப்பட்ட பாதையில்,
என் கன்னங்களின் வெட்கச் சிரிப்பை கோரும்,
அவை கோரிய நாணமும் அவற்றுக்கு கிட்டும்.

– பாட்ரிசியா கவல்லி (more…)

கல்நாகம் – இரு கவிதைகள்

 

ஒரு கல் – ஒரு கதை – இரு கவிதைகள்

 I

தொல் நெடுங்காலத்தில்
டைனோசர்கள் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தபோது
பனிவெளியின் ஆப்பிள் மர நிழலில்
கண்மூடி உறைந்து தவம் செய்த முனிவனை
சூழ்ந்து இறுக்கியது குருதிப் பசியடங்கா மலைப்பாம்பு.

“எதையும் இறுக்கும் திண்மை கொண்ட நீ
என்றும் இறுகிய கல்லாய்க் கிடவாய்,”
அழியா சொல்லுடன் காற்றில் கரைந்தான் முனிவன்,
முறுகி முயங்கிச் சில்லுகளாய் வெடித்தது கல்பாம்பு.

பன்னெடுங்காலம் கடந்த ஒரு வேனிற்கால மாலைப் பொழுதில்
மலைவேடன் கையில் அகப்பட்டது
கூர் முக்கோணத் துண்டு.

கல்பாம்பு உள்ளுக்குள் நகைத்தது,
“மூடன்! என்றென்றைக்கும் குருதியை சுவைக்கும்
வரம் அளித்துவிட்டான்”

– நரோபா

II

சூரியனின் கரங்களைத் தடுக்கும்
வானுயர்ந்த அடர் வனத்தின்
புதர்களைக் கோடரியால் வெட்டி
என் பாதையை நானே உருவாக்கிக்கொண்டு
இரை தேடிச் சென்றேன்

திடீரென்று புதர்களில் மறைவிலிருந்து
தாவிக் குதித்து என் முன் கால தேவன் போல் நின்றது
உக்கிரப் பார்வையும் மாசற்ற தேகமுமாய்
ஒரு வரிப்புலி

“ஆஆஆ” என்ற ஆக்ரோஷ ஒலி
என் தொண்டையைக் கீறிப் புறப்பட,
வலது கை வானுயர, வலது கால் மேலெழ,
இடது கால் உடலின் பாரத்தை தாங்க
வேகமாய் கோடரியை வீசினேன்

கோடரி மலைப்பாம்பாய்
புலியின் கழுத்தைக் கொள்ளும் நேரம்
தொலைவில் காலடி ஓசை கேட்க
இடப் பக்கம் திரும்பினேன்

காடு மாயமாய் மறைய
ஜன்னல் வழி வந்த சூரியக் கதிரில்
கூர்முனை பளபளக்க
பெட்டிப்பாம்பாய் அசையாமல்
கண்ணாடிக்கூண்டில் படுத்திருந்தது
கல்.

–  எஸ். சுரேஷ் 

 

image credit: Metabauxite axe, The Metropolitan Museum of Art