சரவணன் அபி

நிறப்பிரிகை: ஐந்து – அரிசனம்

சரவணன் அபி

இலைகள் தோறும்
இழையாடைகள் சரிந்து
மெதுவே மிக மெதுவே
சருமம் போர்த்திய
சருகுகள் ஒதுக்கி
நிலம் மெல்ல நடுங்கிட
காதல் செய்யும் வீர்யன்

இருத்தலின் சுடர்
இயக்கத்தின் தீ
அளையிடை இருக்கவொண்ணா
அக்கினிக்குஞ்சு

மேன்மையொன்றே கருதி
எரிந்தழித்து
முளைத்தெழும்
அரிசனம்

நிறப்பிரிகை: நான்கு – துய்யம்

சரவணன் அபி

இறையின் முன்
கரைந்தொழுகும் கண்ணீர்

இரவும் விடியலும்
இல்லாதோரின்
எதிர்நோக்கல்
எளிமையின் திறப்பு
சாதனையின் உச்சம்

எதுவும் அறியாத
எதுவும் நிறையாத
எதுவாகவும் இல்லாத
எதுவாகவும் உருமாறும்
உன்னதம்
துய்யம்

நிறப்பிரிகை: மூன்று – மரகதம்

சரவணன் அபி

நீர்தேடி
வேர் நீளும்
ஒளி யாசித்து
மரமேறும்
சந்ததி நீள
விழுதிறங்கும்

நீரின்றி கருகினாலும்
ஒரு துளி விழலை
நினைவிற் பொதித்து
பெருகிக் கொள்ளும்

போர்த்திப் புரந்து
புரண்டு கொடுத்து
கலைந்து தாங்கி
கிளைத்து எழுந்து
உழைப்பொன்றே கருதி
உயிரீயும்
மகிழ்வொன்றே கருதும்
மரகதம்

நிறப்பிரிகை: இரண்டு – நீலம்

சரவணன் அபி

விரி வானை
விஞ்சும்
மனிதத்தின்
மனவிரிவு

கைவிரல் பற்றி
படர விடும்
நம்பிக்கை

அமைதியற்ற உயிர்
காத்து நிற்கும்
விடியற் கீற்று

கூரை
தாங்கிப்பிடிக்கும் தரை
சூழவமைந்த குடில்

அகண்டவெளிப் பெருக்கு
அகத்தமைந்த ஞானச்செருக்கு

நிறப்பிரிகை : ஒன்று – ச்யாமளம்

சரவணன் அபி

அடர்
ஆதி வெம்மையினின்று
ஒழுகி வந்த
ஒற்றை முலையமுதம்
ச்யாமளம்

கனவின் ஆழம்
அறியமுடியா உன்னதம்

பேதமறியா
அந்தக உலகின்
அந்தமில்லா வாசி
சியாமளீ

இன்னும் பின்னும்
தேடியடைய
விழையும் கருக்கூடு
ஆடி அடங்கும் புலன்
சாயும் மடி ச்யாமளம்